ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – திரை விமர்சனம்.

Onayum-Aatukuttiyum-Theatre-List

மிஷ்கினின் புதிய படைப்பு ஓநாயும் ஆட்டுக்குட்டியும். நிச்சயமாக புதிய முயற்சி. வழக்கு எண் 18/9 படத்தின் நாயகன் ஸ்ரீ தான் இந்தப் படத்திலும் நாயகன். ஆனால் இணை நாயகன் என்றே சொல்லவேண்டும். மிஷ்கின்னுடன் சேர்ந்து கலக்கியிருக்கிறார். மருத்துவ மாணவன் பாத்திரம் ஸ்ரீக்குப் பாந்தமாகப் பொருந்துகிறது. innocence, naivety, ஒரு நல்ல மனமுடைய இளைஞனின் துடிப்பு, கடைசியில் உண்மை தெரியும் போது வரும் பக்குவம், அனைத்தையும் சிறப்பாக வெளிக்காட்டுகிறார். மிஷ்கின்னுக்கும் அவர் செய்யும் பாத்திரம் மிகச் சரியான tailor made role for him. கடைசியில் ஓநாய் நரி கதை சொல்லும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

மிஷ்கின்னின் ட்ரேட் மார்க் – இரவில் பயணிக்கிறது கதை. நடப்பவைகளுக்கு என்ன சம்பந்தம் என்று படத்தின் இறுதியில் தான் தெரிந்தாலும் கதையுடன் ஒன்றிப் பார்க்க முடிகிறது. விறுவிறுப்பாக இருக்கிறது. போலிஸ் கதை. நிறைய கொலைகள். ஒரே இரவில் நடப்பதால் விறுவிறுப்புக் கூடுகிறது. பாடல்கள் இன்றியும், அசட்டுப் பிசட்டு நகைச்சுவை காட்சிகளும் இல்லாமலும், ஆங்கில படத்தின் தரத்தில் எடுத்திருக்கிறார்.

சின்னஞ்சிறு பாத்திரத்தில் விலைமகளாக நடிப்பவர், ஏமாற்றமும் கோபமும் கலந்து கடைசியில் ஸ்ரீயைப் பார்க்கும் ஒரு பார்வையில் மனத்தை அள்ளுகிறார். எல்லாரிடமும் நல்ல நடிப்பை கறந்திருக்கிறார் மிஷ்கின்.

இந்தப் படத்தை உயர்ந்த தரத்துக்கு இட்டுச் செல்வது பின்னியெடுக்கும் இசை ஞானி இளையராஜாவின் பின்னணி இசை தான். பாடல்களே இல்லாத ஒரு படம். படத்தில் வசனங்கள் வெகுக் குறைவு. Visuals and music make the movie! எங்கு நிசப்தம் தேவையோ அங்கே silence எங்கே symphony தேவையோ அங்கே இசை மழை! வசனம் சொல்லாததை இசையின் மூலம் சொல்லிவிடுகிறார் ராஜா.

ஒளிப்பதிவு – பாலாஜி ரங்கா. இருட்டிலேயே நடந்தாலும் மணி ரத்னம் படம் மாதிரி இருளோ என்று இல்லை.

ஆனால் கதையில் இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்திருக்க வேண்டும். இயக்குனர்கள் மக்களின் ரசனையை/அறிவைக் குறைத்து எடைபோடக் கூடாது. ஒரே ஒரு குடும்பத்திற்காக இத்தனை பேர்கள் சாக வேண்டுமா? How does he justify the death of so many people for undoing the mistake he committed? And to begin with his action is the cause for the gang boss targeting him. ஆரம்பத்தில் மருத்துவ மாணவன் 108 ஆம்புலன்சை ஏன் கூப்பிடவில்லை என்பது சின்ன ஓட்டை என்றால், மேற்கூறிய இந்த பாயிண்ட் பெரிய ஓட்டை.

படத்தில் பல இடங்களிலும் முடிந்த பிறகும் நிறைய கைத்தட்டல்கள் அரங்கத்தில் ஒலித்தது. That is quite heartening!

p.s. இங்கே பின்னூட்டத்தில் @vijayathithan) get2karthik கூறியிருக்கும் விளக்கம் ஏற்கும்படி உள்ளது. மிஷ்கின் கொலை செய்வது கெட்டவர்களை மட்டும்.

ராஜா ராணி – திரை விமர்சனம்

rajarani1

இன்றைய இளைஞர்களை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. மௌன ராகமும் அந்த ஏழு நாட்களும் பார்க்காத இளைஞர்களை வசப்படுத்த இயக்குனர் அட்லீ குமார் எடுத்திருக்கும் படம் ராஜா ராணி. பெயர் காரணம் இறுதி வரை தெரியவில்லை.

நல்ல நடிகர் கூட்டம். ஆர்யா, நயன்தாரா, சத்யராஜ், ஜெய், சந்தானம், நஸ்ரியா. அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். சென்னை எக்ச்ப்ரெஸ், வருத்தப் படாத வாலிபர் சங்கம் படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் சத்யராஜ் பாத்திரம் அப்பாடா என்று சொல்லவைக்கிறது. அவருக்கேற்ற ரோல், நன்றாக செய்திருக்கிறார். ஜெய் டைப் காஸ்ட். அதே பயந்த சுபாவம், வெகுளி, பெண் அவரை காதலித்து வழி நடத்தும் காரெக்டர். அவருக்கு அது அல்வா சாப்பிடுகிற மாதிரி! இந்தப் படத்தில் நடிப்பில் அசத்தியிருப்பது நயன்தாரா. ரொம்ப நன்றாக செய்துள்ளார். கொஞ்சம் மேக்கப்பைக் கம்மி பண்ணியிருக்கலாம், அடுத்த சரோஜாதேவியாகிவிடுவாரோ என்று அஞ்சுகிறேன். நஸ்ரியாவை திரையில் இப்பொழுது தான் முதன் முறையாகப் பார்க்கிறேன். சரவெடிப் பட்டாசாக இருக்கிறார். இளமைத் துள்ளுகிறது. அழகு தான் 🙂 ஆர்யாவும் சந்தானமும் நல்லக் கூட்டணி. நல்ல வேளை இருவரும் சேர்ந்து இருந்தாலும், சேர்ந்தே சரக்கடித்தாலும் படத்தில் மொட்டை ராஜேந்திரனும் இருந்தாலும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை நினைவூட்டாமல் இருப்பதற்கு இயக்குனருக்கு நன்றி. இவர்களைத் தவிர மனோபாலாவும் சத்யனும் இருக்கிறார்கள்.

ஜி வி ப்ராகாஷின் பாடல்கள் நன்றாக உள்ளது. பளிச் சினிமடொக்ராபி பை ஜார்ஜ் வில்லியம்ஸ். நிரவ் ஷாவின் சிஷ்யர். குருவின் பெயரைக் காப்பாற்றியுள்ளார். எடிட்டிங்கும் கச்சிதமாக உள்ளது – ஆந்தனி ரூபன். உடையலங்காரம் யார் என்று தெரியவில்லை, வெகு நேர்த்தி! பழைய காலத்து வாணிஸ்ரீ ஸ்டைலில் மேல் தலையில் பன் வைத்த முடியலங்காரம் மட்டும் நயனுக்குப் பொருந்தவில்லை என்பதே என் எண்ணம்.

பழைய கதையே ஆனாலும் ட்ரீட்மென்ட் நன்றாக உள்ளது. நடிகர்கள் படத்துக்கு உயிர் சேர்க்கிறார்கள். முடிந்த காதலுக்குப் பின்னும் நல்ல வாழ்க்கை அமையும் என்று சொல்லும் அளவில் படம் பாசிடிவ் ஆக உள்ளது. படத்தைப் பார்த்து தானே மக்கள் பாடம் கற்றுக் கொள்கிறார்கள்!

முருகதாஸ் தயாரிப்பு. படம் வசூலைத் தரும். அதனால் தான் இந்த மாதிரிப் படங்களே வருகின்றன. எதற்கு வரவேற்பு இருக்கிறதோ அதில் தானே தயாரிப்பாளர்களும் பணத்தைப் போடுவார்கள்!

படத்திற்கு ஏண்டா போனோம் என்று தோன்றவில்லை. சில இடங்களில் என்னை படம் நெகிழ்த்தியது. முன் பாதியில் இருந்த சுவாரசியம் பின் பாதியில் இல்லாதது ஒரு குறை. சந்தானம் எரிச்சல் ஊட்டாதது இன்னொரு ப்ளஸ்!

வாசகர்கள் வேண்டுகோளுக்கிணங்க இன்னுமொரு போஸ்டர் :-))

rajarani2

ஷ்ரேயா கோஷல் லைவ் இன் கான்செர்ட்! சென்னை

sexy-singer-shreya-ghoshal-photos-stills (10)

ஸ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சிக்குப் பதினைந்து நாட்கள் முன்னதாகவே டிக்கெட்டை முன் பதிவு செய்து ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கி விட்டோம். நானும் என் கணவரும் திரைப்படங்களுக்குச் செல்லும் அளவு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்வது வழக்கமில்லை. A.R ரஹ்மான் கான்செர்ட்டிற்கு டிசெம்பர் 2012ல் குடும்பத்துடன் சென்று மழையில் நனைந்து ரசித்து மகிழ்ந்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. அதில் முக்கிய ஆனந்தம் எங்கள் மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்ததால் கொட்டும் மழையிலும் நிகழ்ச்சியை வெகுவாக ரசிக்க முடிந்தது. ராக் கான்செர்ட் போன பீல் 🙂

ஆனால் ஷ்ரேயா இசை நிகழ்ச்சி சர் முத்தா வேங்கடசுப்பா ராவ் உள்ளரங்கில். அதனால் மழை வந்தாலும் கவலை இல்லை 🙂 மிகவும் நவீன அரங்கம். 5000 ரூபாயில் இருந்து டிக்கெட்டுக்கள் விற்பனை! அடுத்து 3000, 2000, கடைசி வகுப்பு பால்கனி 750 ருபாய். அதுவே போதும் என்று தீர்மானித்து பால்கனியில் நல்ல இருக்கைகளைத் தேர்ந்தெடுத்து விளம்பரம் வந்த முதல் நாளே  இருக்கைகளை பதிவு செய்துவிட்டோம்.

இந்த நிகழ்ச்சிக்கு செல்ல முக்கியத் தூண்டுதல் ட்விட்டரில் உள்ள @vrsaran , @kanapraba and @ikaruppu எப்பொழுதும் ஷ்ரேயாவைப் பற்றிப் பேசும் பொழுது அவர்கள் அடையும் எல்லையில்லா ஆனந்தத்தின் காரணத்தை அறிய இந்த அரிய வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டோம்!

டிராபிக்கிற்குப் பயந்து நிகழ்ச்சிக்கு ஒண்ணரை மணி நேரம் முன்னதாகவே வீட்டை விட்டுக் கிளம்பியும் போய் சேர ஒரு மணி நேரம் ஆனது. டிக்கெட்டை வாங்கிக் கொண்டு கொஞ்சம் சிற்றுண்டியும் அருந்தி இருக்கைக்குப் போய் அமர்ந்தோம். பால்கனியாக இருந்தாலும் மிகவும் நாள் வியு! ஒரு முறை அரங்கத்தை மேலேயிருந்துப் புகைப்படம் எடுத்துக்  கொண்டேன். ஒரு சிறுமியைப் போல எனக்குள் குதுகலம். ரொம்ப நேரம் காக்கவைக்கவில்லை. குறித்த நேரத்தில் 7.30pm நிகழ்ச்சித் தொடங்கியது. அதற்கு முன் நான் அரங்கத்தில் இருந்து ட்வீட்டியத்தை வைத்து கருப்பும் எங்களைக் கண்டுப்பிடித்து வந்து பேசினார். ரொம்ப தேட வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் முன் ரோவில் இருந்தார் :-))

முதலில் இரு பாடல்களைப் பாடியது ரிஷி என்ற வடநாட்டு சூப்பர் சிங்கர் வின்னர். அவர் தான் நிகழ்ச்சி முழுவதும் ஆண் குரலுக்குப் பாடியவர். மக்கள் பொறுமை இழக்க ஆரம்பிக்கும் முன் ஷ்ரேயா பாடிக் கொண்டே அரங்கத்தில் என்ட்ரிக் கொடுத்தார். தேவதை மாதிரி இருந்தார். கருப்பு நிற கால் டைட்ஸ். மேலே கருப்பில் வெள்ளி ஜரிகையால் ப்ரோகேட் செய்யப்பட முழுக் கை டாப்ஸ். முதுகு வரை கட்டபடாத நீள கருங்கூந்தல். காலில் வெள்ளி நிறத்தில் பின்னலுடனான ஸ்டிலெடோஸ் வைத்த செருப்பு.

செம எனர்ஜி! துளிக் கூட மூச்சு வாங்காமல் நளினமாக மேடையில் சில அசைவுகளுடன் நடனமாடிக் கொண்டே தான் பாடினர். வரிசையாகப் பல ஹிந்திப் பாடல்கள் ஒன்றின் பின் ஒன்றாக, கொஞ்சம் கூட இடைவெளி விடவில்லை. பலப் பாடல்கள் சோலோ நம்பர்கள் தான். அவர் முதல் முதலில் தேவதாஸ் படத்திற்குப் பாடிய பாடலையும் பாடினர். அவர் போட்டுக் கொண்டிருந்த வெள்ளி ஜரிகை உடைக்கு ஈடாக அவர் குரல் வெள்ளிக் கம்பியாக சிலிர்த்து ஒலித்தது. அனாயாசமாக உயர்ந்த பிட்சைப் பிசிறில்லாமல் எட்டிப் பிடித்தார். ஒவ்வொரு பாட்டு முடிந்த பிறகும் ஆடியன்சுடன் பேசினார். பதில்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.

திராவிட இயக்கத்தின் தீவிர ஹிந்தி எதிர்ப்பு சமயத்தில் பள்ளியில் படித்தமைக்கு மிகவும் நொந்து கொண்டேன். ஹிந்தி ஒரு வார்த்தைப் புரியவில்லை. பள்ளிப் பருவத்திலாவது அமிதாப்பின் விசிறியாக இருந்து நிறைய ஹிந்திப் படங்கள் பார்த்துக் கொஞ்சம் மொழிப் பரிச்சியமாவது இருந்தது. இப்போ சுத்தமாக டச் விட்டுப் போச்சு. சென்னை எக்ச்பரசில் இருந்து ஒரு பாடலும், நான் பார்த்து ரசித்த சாவரியா படப் பாடலும் அனுபவிக்க முடிந்தது. இசைக்கு மொழி அவசியம் இல்லை தான். ஆனாலும் ஒரு மணி நேரம் ஹிந்திப் பாடல்களையேக் கேட்டுக் கொண்டு தமிழ் பாடலைக் கேட்க ரொம்ப ஏங்கினேன். என் கணவர் தடுத்தும் தமிழ் பாடல் ப்ளிஸ் என்று பால்கனியில் இருந்து இரு முறை கத்திக் கேட்டேன். என் குரல் அவர் காதுகளுக்கு எட்டாவிட்டாலும் டெலிபதியாக அவரை சென்று அடைந்து முதல் தமிழ் பாட்டாக முன்பே வா என் அன்பே பாட்டைப் பாடினர்.  பாடுவதற்கு முன்பு நான் பாடிய எல்லா மொழி பாடல்களிலும் இந்தப் பாடலே எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் என்று சொன்னார். ஆனால் என்ன ஒன்று, இது தமிழில் உள்ளது என்றார். அங்கே அவரின் தாய் மொழிப் பற்று தெரிந்தது!!

வந்திருந்த ஆடியன்ஸில் 15% தான் தமிழர்கள் என்று நினைக்கிறேன். முழுக்க முழுக்க ஹிந்தி கும்பல். ஒவ்வொரு சீட்டும் டேக்கன், அரங்கம் நிரம்பி வழிந்தது. அவர் நடுவில் ரசிகர்களுடன் உரையாடியதும் ஹிந்தியிலேயே தான் இருந்தது. சில ஆங்கில வார்த்தைகள் நடு நடுவில் பயன்படுத்தியதால் என்ன கேட்கிறார் என்று புரிந்துக் கொள்ள முடிந்தது. கூட்டம் அப்படி ரசித்துப் பாராட்டியது. அவரும் சென்னை ரசிகர்கள் ரொம்ப விவரமானவர்கள், அதனால் இங்கு பாட வரும் போது எப்பொழுதுமே நன்றாகத் தயார் செய்து கொண்டு வருவேன் என்று நிகழ்ச்சி ஆரம்பித்திலேயே கூறினார்.

அடுத்தப் பாடலாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இருந்து பாடினர் – மன்னிப்பாயா . இந்தப் பாட்டைப் பற்றியும் மிகவும் சிலாகித்துப் பேசினார். கேட்க எளிமையானப் பாடலாகத் தோன்றினாலும் பாடுவதற்கு மிகவும் கடினமானப் பாடல், அதுவும் மேடையில் பாடுவதற்கு என்று குறிப்பிட்டுச் சொன்னார். A.R ரஹ்மானை மிகவும் புகழ்ந்து பேசினார். அவரின் இசையமைப்பில் முதலில் பாடிய ஹிந்திப் பாடலைப் பாடுவதற்கு முன் எப்படி அவர் இசையமைப்பில் பாடமாட்டோமா என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த போது எனக்கு இந்த நல்ல வாய்ப்புக் கிடைத்தது என்று கூறி பின் பாடலைப் பாடினர். ரஹ்மான் அவருக்கு நிறைய அருமையானப் பாடல்களை அளித்தது அவரின் பெரும் பாக்கியம் என்றும் கூறினார்.

ஆணுடன் பாடும் எந்த குரலுக்கும் அந்த ரிஷி தான் கூடப் பாடினர். ஆனால் மன்னிப்பாயா பாடலுக்கு ஷ்ரேயா தனியாகவே பாடினர். ஒருவேளை ரிஷிக்கு தமிழ் பாடல் வராதோ என்னவோ. அதி அற்புதமாக அந்தப் பாடலை பாடினர். ஆண் குரலை பாடும் பொது சூப்பர் ஹை பிட்ச் எடுத்துப் பாடினர். இந்த இரு தமிழ் பாடல்களுக்கு மட்டும் தான் iPad  பார்த்துப் பாடினர். அனைத்து ஹிந்திப் பாடல்களும் மனப்பாடம். அவர் இசைக் குழு ப்ராக்டிஸ் பண்ணாமல் வந்த ஒரு பாடலை இசையின்றி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பாடினர். தேவ கானம் தான். இசையின்றி அவர் குரல் மட்டும் தேனாகக் காதில் பாய்ந்தது. அவர் முற்பிறவியில் என்ன நல்லது செய்தாரோ இந்த குரல் வளத்தைப் பெற! ஆனால் நாமும் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கிறோம் இவர் குரலில் பாடல்களைக் கேட்டு ரசிக்க!

இடைவேளை என்று தனியாக விடவில்லை. அனால் அவர் பத்து நிமிட ப்ரேக் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி உள்ளேப் போனார். அந்த சமயத்தில் ரிஷி பாடினர். பாவம் அவருக்கு ரொம்ப ரசிகர்கள் இல்லை. நிறைய பேர் அந்த சமயத்தில் வெளியே சென்று வந்தனர். அவர் வேறு உடை மாற்றிக் கொண்டு வருவாரோ என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன், அனால் மேகப் டச்சப் செய்து கொண்டு fresh ஆக அதே உடையில் திரும்ப உள்ளே நுழைந்தார். அவர் சின்ன அசைவுகளுடன் குதித்து குதித்து பாட்டுக்கேற்ப ஆடும் போது கள்ளம் கபடமில்லாத ஒரு சிறு பெண்ணைப் போல எனக்குத் தோன்றினார். ஆரம்பம் முதலே ஆடியன்ஸையும் தன்னோடு பாட வைத்தார். உண்மையாகவே இந்த ஹிந்திக்காரர்கள் நன்றாகப் பாடுகிறார்கள். எவ்வளவு உரக்க அவருடன் பாடி பங்கேற்கிறார்கள் தெரியுமா? மேடை லைட்ஸ் மிகவும் நன்றாக இருந்தது. அப்பப்போ அரங்கிலும் விளக்கேற்றி ரசிகர்களையும் அவர்களின் ஆர்வத்தையும் ஷ்ரேயாவுக்குக் காட்டினார்கள். பால்கனி பக்கம் விளக்கு ஏற்றாமல் கடைசியில் போட்ட போது மகிழ்ச்சியுடன் எங்கள் திசையிலும் பார்த்து ஏன் இத்தனை நேரம் அந்தப் பகுதியில் விளக்குப் போடவில்லை என்று செல்லக் கோபமுற்றார்! அதற்கு அவருக்கு எங்கள் ஆரவாரம் பரிசாகக் கிடைத்தது.

நாங்கள் நிகழ்ச்சி முடிய சிறிது நேரம் இருக்கும் போதே கிளம்பிவிட்டோம். அதற்கு முக்கியக் காரணம். அவர் தொடர்ந்து பாடிய ஹிந்தி பாடலால் தான். சென்னையில் நடப்பதால் பல தமிழ் பாடல்கள் நிகழ்ச்சியில் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எனக்கிருந்தது. வந்திருந்த கூட்டத்துக்கு அந்தத் தேவை இருக்கவில்லை. மேலும் ஷ்ரேயாவுக்கும் தமிழ் பாடல்கள் தேவை என்ற எண்ணம் இல்லை என்றே தோன்றியது. Looked like she was oblivious to that fact. ஆனால் மிகவும் இனிமையான ஒரு மாலைப் பொழுது. கோடான கோடி நன்றி ஷ்ரேயாவிற்கு, அவர் அளித்த இன்னிசை மழைக்கு 🙂 இன்னொரு முக்கிய விஷயம், அவர் புகைப்படத்தில் இருப்பதை விட நேரில் இன்னும் அழகாக உள்ளார் 🙂

மூடர் கூடம் – திரை விமர்சனம்

Moodar-Koodam-Movie-Poster-01

அறிமுக இயக்குனர்/ படத்தின் கதாநாயகன் நவீனுக்கு ஒரு பாராட்டுப் பூங்கொத்து! எல்லாப் பட விளம்பரங்களிலும் இது ஒரு வித்தியாசமான கதை என்று நடிகரும் இயக்குனரும் வந்து  சொல்வார்கள். ஆனால் 90% சதவிகிதப் படங்கள் அரைத்த மாவையே தான் அரைத்து மே பீ வேறு வடிவில் பணியாரத்தைச் சுடுகிறார்கள். எதோ ஒன்றிரெண்டு படங்கள் தான் உண்மையாகவே புதுமையான திரைக்கதையுடன் வருகிறது. அதில் ஒன்று மூடர் கூடம் 🙂 நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், பீட்சா, தங்க மீன்கள் இவை என்னைப் பொறுத்த வரையில் சமீபத்தில் வந்த புது முயற்சிகள்.

இந்தப் படமும் இன்றைய காலத்து வேலை வெட்டி இல்லாத நான்கு பேரின் அனுபவம் தான். ஆனால் காதல் இல்லை, குத்துப் பாட்டு இல்லை, வெளிநாட்டில் போய் டூயட்டோ சண்டைக் காட்சிகளோ இல்லை. ஆனால் நுட்பமான காமெடி படம் முழுவதும். தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொஞ்சம் ரசித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆக்கினால் ஜெமோ மலையாளிகள் தான் நுட்ப காமெடியை ரசிக்கும் தன்மையுடையவர்கள் என்று சொல்லியக் கூற்றை தவறென்று நிருபித்து விடலாம். ஆனால் இன்று காலை ஆட்டத்தில் பாதி அரங்கம் தான் நிரம்பி இருந்தது.

ரொம்ப செலவில்லாதத் தயாரிப்பு. அதனால் படத் தயாரிப்பாளர் பாண்டி ராஜ் பணம் பார்த்து விடுவார் என்று நம்புகிறேன். ஜெயப்ரகாஷுக்கு அம்சமாகப் பொருந்துகிறது ரோல். அதையும் கச்சிதமாக செய்திருக்கிறார். மற்ற அனைத்துக் கதாப் பாத்திரங்களும் சரியான காஸ்டிங், சரியான நடிப்பு. இந்தப் படத்தில் வரும் அடியாட்கள்/தாதாக்கள் இவர்களைப் பார்த்தால் நார்த் மெட்ராஸ் செல்லவே பயம் வந்துவிடும் என்று நினைக்கிறேன். நிறையப் பாத்திரங்கள் ஆனால் இயக்குனர் பார்ப்பவர்களைக் கன்பியுஸ் ஆக விடாமல் கதையை நகர்த்தியிருப்பது அவரின் திறமைக்கு ஒரு சான்று.

அதில் வரும் ஒரு குழந்தையின் கதாப்பாத்திரம் பேசும் வசனமும் அதன் நடிப்பும், சிரித்து சிரித்து மனம் லேசாகிவிட்டது 🙂 தனியா அந்த களிப்பிங்  youtubeல் சக்கைப் போடு போடும் என்று நினைக்கிறேன். ஆனால் கதையோடு அந்தப் பகுதி ரொம்ப நகைச்சுவைத் தன்மைக் கொண்டதாக உள்ளது.

இயக்குனர் புதிய யுக்திகளைக் கதைச் சொல்லும் விதத்தில் கையாள்வது மிக நேர்த்தியாக உள்ளது. கதையிலிருந்து விலகாமல் அதே சமயம் பல பாத்திரங்கள் கதைக்குள் வந்து சேருவது நல்ல சுவாரசியத்தைக் கொடுக்கிறது.

இசை நடராசன் சங்கரன் – பிரமாதம். ரொம்ப நாள் கழித்து படத்தின் தரத்தை பின்னணி இசை உயர்த்திக் காட்டுகிறது. ஒரு ஹாலிவுட் படத்தின் தரத்தில் உள்ளது படத்தின் இசை. பாரதியின் பாடலும் உள்ளது, நிலா நிலாவும் உள்ளது, ரஷிய (நினைக்கிறேன்) பாடலிசையும் உள்ளது, பொருத்தமான இடத்தில் 🙂

இந்தப் படத்திலும் கதாப் பாத்திரங்கள் புகைப் பிடித்தல் படம் முழுக்க வருகிறது! என்ன பண்ணுவது வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருப்பவர்களைச் சித்தரிக்கும் பொழுது புகைப் பிடிப்பவர்களாகக் காண்பிப்பது தான் அவர்கள் இயல்பை பிரதிபலிக்க உதவுகிறது என்று கதாசிரியர்/இயக்குனர் சொல்லுவாரரோ? குடியும் புகைப்பிடித்தலும் இல்லாத படங்கள் இன்றைக்கு இல்லை என்பது சமூகத்தின் அவல நிலையைக் காட்டுகிறதா, அல்லது கதாசிரியர்கள் இயக்குனர்களின் கற்பனை வறுமையைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை.

ஒளிப்பதிவு, எடிடிங் இரண்டும் தரமாக உள்ளன.

நகைச்சுவைப் படம். நிச்சயம் பார்க்கலாம் 🙂

4varinote.wordpress.com – என் விருந்தினர் பதிவு.

vetaikaran poster

படம்: வேட்டைக்காரன்

இசை: விஜய் ஆண்டனி

பாடல்: கபிலன்

பாடகர்கள்: சுசித் சுரேசன், சங்கீதா ராஜேஸ்வரன்

சுட்டி: http://www.youtube.com/watch?v=-jgfVDYPoNM

கரிகாலன் காலப் போல கருத்திருக்குது குழலு

குழலில்ல குழலில்ல தாஜு மஹால் நிழலு

சேவலோட கொண்ட போல சிவந்திருக்குது உதடு

உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு

பருத்திப் பூவப் போல பதியுது உன் பாதம்

பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

வலம்புரி சங்கப் போல வழுக்குது உன் கழுத்து

கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து

கார் குழலை கரிகாலன் காலுக்கு இதற்கு முன்னால் யாரவது ஒப்பிட்டு இருக்கிறார்களா தெரியாது, ஆனால் நல்ல கற்பனை! காதலன் சொல்லும் அந்த வரிக்கு காதலி, இல்லையில்லை அந்த கருமை தாஜ் மஹாலின் நிழைலை ஒத்து இருக்கிறது என்கிறாள். காதல் சின்னமான தாஜ் மஹால் மிகப் பெரியக் கட்டிடமும் கூட. அதன் நிழல் அடர்த்தியாகத் தான் இருக்கும்.

சேவலோட கொண்டை நல்ல சிவப்பு நிறம். உதடும் அதே நிறம் என்று சொல்வது மிகவும் பொருத்தம். ஆனால் காதலி தன உதடுகளை மந்திரித்தத் தகடு என்கிறாள். உண்மை தானே? காதலனைக் கிறங்க வைக்கும் செவ்வாய் அவளுடையது, மேலும் அவள் உதடுகள் சொல்வதைக் கேட்டு பூம் பூம் மாடு போல தலையை ஆட்டத் தானேப் போகிறான். அதனால் அவள் உதடு மந்திரித்தத் தகடு தான் 🙂

பருத்திப்பூ வெடித்து அதில் வரும் பஞ்சு மெத்து மெத்தென்று இருக்கும். காதலியின் பட்டுப் பாதங்களுக்கு பஞ்சை உவமையாக்குகிறான் காதலன், ஆனால் காதலியோ வெந்த பச்சரிசி சோற்றைப் போல மெதுவாக தன் கால்கள் இருப்பதாகச் சொல்கிறாள். வடித்தப் பச்சரிசி சாதம் எப்பொழுதும் ரொம்ப மென்மையாக இருக்கும்.

இந்தப் பாடலின் பல்லவியில் வரும் கடைசி இரண்டு வரிகள் தான் என்னை இந்தப் பாடலுக்கே ஈர்த்தது. வலம்புரி சங்கு வளைந்து வெண்மையாகவும் மழ மழவேன்றும் இருக்கும். காதலியின் கழுத்தை வலம்புரி சங்கைப் போல வழுக்குகிறது உன் கழுத்து என்கிறான் காதலன்.  அவளோ வழுக்கும் அவள் கழுத்தை கண்ணதாசன் எழுத்து என்கிறாள். எனக்கு இந்த வரி ஏனோ ரொம்பப் பிடித்தது. கவிஞன் கற்பனைக்கு சுதந்திரம் உண்டு. தீவிர கண்ணதாச ரசிகர்கள் என்ன சொல்வார்களோ தெரியாது. ஆனால் இந்த உவமை கச்சிதமாக இந்த இடத்தில் பொருந்துவதாக எனக்குத் தோன்றுகிறது.  கண்ணதாசனின் கவிதைகள் மிகவும் மென்மையாகவும் படிக்க நெருடல் இல்லாமல் எளிமையாகவும் இருக்கும்.

இந்தப் பதிவின் சுட்டி: http://4varinote.wordpress.com/2013/08/27/guest34/

தங்க மீன்கள் – திரை விமர்சனம்

thangameenkal

தெய்வத் திருமகளின் உல்டா தங்க மீன்கள். அங்கே விக்ரமும் பேபி சாராவும் (நிலா) கதையைத் தாங்கிய இரு தூண்கள். இதில் அப்ளாஸ் வாங்குவது இயக்குனர்/நடிகர் ராமும் சாதனாவும் (செல்லம்மா).

ட்ரைலர் மட்டுமே பார்த்துக் கதை தெரியாமலும் வேறு எந்த விமர்சனமும் படிக்காமல் சென்றேன். I was truly mesmerized by the riveting performance of Ram and Sadhana! எட்டு வயதுப் பெண்ணை காதாப்பத்திரத்தின் தன்மையை உணர வைத்து நடிக்க வைத்திருப்பது இயக்குனரின் திறமையை மட்டுமே காட்டுகிறது. உணர்ச்சிக் குவியல்களை அவ்வளவு அழகாக வித்தியாசப் படுத்திக் காட்டுகிறார் அந்த இளம் பெண். எத்தனை வசனங்கள்! எவ்வளவு உழைப்பு! அவளுடன் நடிக்கும் அந்தத் தோழிப் பெண் பேபி சஞ்சனா பேசும் பேச்சுக்களும் A 1. நம்மை அறியாமல் புன்னகையை முகத்தில் வரவழைக்கும் ரகம் 🙂 மேலும் ஒண்ணாந்தரமான நடிப்பு! அப்பாவித்தனமாக அவர்கள் பரிமாறிக் கொள்ளும் உரையாடல்களின் மூலமாகவே இயக்குனர் சோகம், மகிழ்ச்சி, அடி வயிற்றில் தொடங்கும் ஒரு பயம் அனைத்தையும் பார்ப்பவர்களிடம் கொண்டு சேர்த்து விடுகிறார். அவள் வகுப்புத் தோழியை அவளை விட இள வயதாகக் காட்டுவது இயக்குனரின் attention to detailsக்கு ஒரு எடுத்துக் காட்டு.

ஒவ்வொரு பாத்திரமும் அசல். யாருமே கெட்டவர்கள் இல்லை. ஆனாலும் உணர்ச்சிப் போராட்டமும், எதிரும் புதிருமாக சண்டையிடுதலும், கோபமும், மனஸ்தாபமும், மிகவும் இயல்பாக உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் நியாயப் படி சரி என்பதைச் செய்கின்றனர். அது எதிராளிக்குச் சரியாக இல்லாமல் போவது தானே வாழ்க்கை, அதை நிதர்சனமாகக் காட்டுகிறது இந்தப் படம். ஹீரோவின் தாய் தந்தையராக வரும் பூ ராமுவும் ரோஹினியும் கச்சிதமாக அவர்கள் பாத்திரத்தைச் செய்கின்றனர். மனைவியாகப் புது முகம் ஷெல்லி கிஷோர். மிகவும் நன்றாக நடித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள், தங்கை கதாப்பாத்திரம், கேரளாவில் வரும் காரக்டர்கள், வகுப்புப் பிள்ளைகள் அனைவருமே நன்றாகச் செய்துள்ளனர். அதிகப்படியான பாத்திரங்களும் இல்லை, மிகைப் படுத்தப் பட்ட சீன்களும் இல்லை. பத்மப்ரியாவின் ஆசிரியைப் பாத்திரம் ரொம்ப சின்னது ஆனால் நல்ல தேர்வு.

இந்த மாதிரிக் கதையைக் கையாள நிறைய திறமையும் சொல்கின்ற விஷயத்தில் ஞானமும், நம்பிக்கையும், நேர்மையும் வேண்டும். அப்பொழுது தான் படம் வெற்றிப் பெறும். அப்படிப் பார்க்கும் பொழுது ராம் ஜெயித்து விட்டார். தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பாசத்தை விட தந்தையைப் புரிந்த கொண்ட மகளும், மகளைப் புரிந்தக் கொண்ட தந்தையும் தான் இந்தப் படத்தின் கதை/கரு. ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம். முக்கியமாக special child உள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம்.

நாளொன்றுக்கு நகைச்சுவை படம் என்ற பெயரில் வரும் குப்பைப் படங்கள் பல்கிப் பெருகியுள்ள இந்தக் காலத்தில் இந்த மாதிரி ஒரு உருப்படியானத் திரைப்படம் வரும் போது வரவேற்க வேண்டியது நம் கடமை. நான் ரொம்ப எளிதில் அழுது விடுவேன். பிழியப் பிழிய அழ வேண்டுமோ என்று நினைத்துப் பயந்து கொண்டே போனேன். நெகிழ்ச்சியாக சில இடங்கள் இருந்ததேத் தவிர there was no melodrama.

ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரிய பலம். ஆனந்த யாழை பாட்டின் ஒளிப்பதிவும் மற்றும் படம் முழுக்க வரும் கிராமத்து வயல் வெளியும், கேரளாவின் இயற்கை எழிலும் கண்ணுக்கு விருந்தாக அள்ளித் தருகிறார் அரபிந்து சாரார்.

யுவன் இசையில் என்னைக் கவர்ந்தது ஆனந்த யாழ் பாடல் மட்டுமே. மற்றப் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை காதை இம்சிக்கவில்லை. அது வரை மகிழ்ச்சியே!

சொல்ல வந்ததைக் கச்சிதமாக சொல்லியிருக்கிறார் ராம். தங்க மீன்கள் – தங்கம்!