புராண பெண் பாத்திரங்களில் சுவாரசியம் மிகுந்தவள் அகல்யா. அவளை பத்தினிப் பெண்ணாகப் பலரும், கற்பை இழந்ததால் சபிக்கப்பட்டு இராமனால் சாப விமோசனம் அடைந்தவளாக இன்னும் பலரும் பேசுவதே அவள் புகழுக்குக் காரணம். சர்ச்சைக்குரிய பெண் பாத்திரம், அதனால் கவனிக்கப் படுகிறாள்.
அகலிகை யார் என்று யாரிடம் கேட்டாலும் உடனே வரும் பதில் இராமனின் கால் பட்டதால் கல்லான அகலிகை பெண்ணாகிறாள் என்பது தான். அதனால் பெண்ணான அகலிகையின் கதை இராமனின் பெருமையை பறைசாற்ற பயன்பட்டதே தவிர அவளின் நிலையை எடுத்துச் சொல்ல அல்ல. ஆனாலும் அவள் பத்தினிப் பெண்கள் ஐவரில் ஒருத்தியாகப் போற்றப் படுகிறாள்.
பிரம்மனால் படைக்கப்பட்ட பேரழகி அகல்யா. அகல்யா என்றால் அழகின்மை இல்லாதவள் என்று பொருள். அதாவது அவள் அழகில் சிறு குறை என்று ஒன்றுமே இல்லாதவள்! அப்படிப்பட்டப் பேரழகியை அனைத்து தேவர்களும் அடைய நினைத்தனர், அதில் முக்கியமாக இந்திரன் அவள் மேல் தீரா மையல் கொண்டிருந்தான்.
குழந்தையான அகல்யாவை பிரம்மன் கௌதம முனிவரிடம் வளர்க்கக் கொடுத்திருந்ததாகவும், அவள் வளர்ந்த பின் அவர் பிரம்மனிடமே அவளை திருப்பிக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின் அவளுக்குக் கணவனைத் தேட சுயம்வரம் வைத்து அதில் யார் உலகை முதலில் மும்முறை வலம் வருகிறார்களோ அவருக்கே அகல்யா என்று அறிவிக்கப்பட்டது.
அவளை அடைவதற்காக இந்திரன் உலகை சுற்றி வரக் கிளம்புகிறான், ஆனால் கௌதம முனிவரோ அதற்கு முன்பே உலகை மும்முறை வலம் வந்து விட்டதால் அவருக்கே அகல்யா மனைவியாகிறாள்!
கன்றை ஈனும் பசுவைப் பார்ப்பதும் உலகை பார்ப்பதற்கு ஒப்பாகும் என்று ஒரு கருத்து. ஆதலால் காமதேனு கன்றை ஈனும் போது இரு தலை பசுவை ஒரு சேரக் கண்ட கௌதமர் மும்முறை காமதேனுவை வலம் வருகிறார். அதனால் உலகை மும்முறை வலம் வந்ததாக ஆகிவிடுகிறது. இந்திரனோ உலகை மும்முறை சுற்றி வந்து தாமதமாக வந்து சேருகிறான்.
இன்னொரு கதைப்படி பிரம்மச்சரிய விரதத்தை அவர் நல்ல முறையில் கடைப்பிடித்து அகல்யாவை வளர்த்ததால் அதற்குப் பரிசாக பிரம்மன் அகல்யாவை அவருக்கே மணமுடித்து வைத்ததாகத் தெரிகிறது. இதனால் இந்திரன் ஏமாந்துப் போகிறான்.
ஆசைப்பட்ட அகல்யா கிடைக்காத சோகம் ஒரு புறம், போட்டியில் தோற்ற அவமானம் ஒரு புறம் என்று இரு துக்கங்களை சுமந்து இந்திரலோகம் திரும்புகிறான் இந்திரன். இந்தக் கதையில் ஒரு முக்கிய விஷயம் கௌதம முனிவர் அகலிகையைவிட அதிக வயது மூத்தவர் என்பது.
இதற்கு பின் அகல்யாவை அடைய தக்கத் தருணத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறான் இந்திரன். சேவல் விடிகாலை கூவும் போது கௌதமர் நதியில் நீராடக் கிளம்புவார். அந்த சேவலாக ஒரு முறை வந்து விடிவதற்கு ஒரு சாமம் முன்பே கூவி விடிந்தத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறான் இந்திரன். அவர் நீராட சென்ற பின் கௌதமர் உருவத்தில் குடிலுக்குள் நுழைந்து அகல்யாவைப் புணர்கிறான். அந்த சமயத்தில் அகல்யாவுக்கு அது தன் கணவன் இல்லை என்று தெரிகிறது அனாலும் தடுக்கவில்லை. (சிலர் அவள் தன் கணவன் என்றே நம்பி உடல் உறவு கொள்கிறாள் என்றும் சொல்கின்றனர்). அதற்குள் சந்தேகப்பட்டுத் திரும்பி வந்த கௌதமர் இருவரையும் ஒன்றாகக் கண்டு வெகுண்டெழுந்து அகல்யாவைக் கல்லாகப் போகும்படி சபிக்கிறார். இந்திரனுக்கு எதை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாயோ அது உடல் முழுவதும் வரட்டும் என்று ஆயிரம் அல்குல்கள் உடலில் வருமாரு சபிக்கிறார்.
இருவரும் சாப விமோசனம் கேட்டு மன்றாடுகிறார்கள். பின் ஒரு நாளில் இராமனின் பாதங்கள் பட்டு அவள் திரும்பப் பெண்ணாக மாறுவாள் என்று அகல்யாவிற்குத் தண்டனையைக் குறைக்கிறார். இந்திரனின் ஆயிரம் அல்குல்களை ஆயிரம் கண்களாக மாற்றிவிடுகிறார். இவர் கோபத்தில் சபித்ததால் அவர் புண்ணிய பலனும் கணிசமான அளவு குறைந்துவிடுகிறது.
இந்திரன் மாறு வேடத்தில் வந்து அகலிகையை அடைவதற்கு காமத்தைத் தவிர இன்னுமொரு காரணம் உள்ளது. கௌதமர் தவ வலிமையில் மிகுந்து இருந்ததால் இவன் பதவிக்கு ஆபத்து வரும் போல் இருந்தது. மேலும் பல தேவர்களுக்கும் இவர் தவ வலிமையில் உயர்ந்து இருப்பது அச்சத்தைத் தந்தது. அதனால் இந்திரன் மற்ற தேவர்களின் ஆசியோடு செய்த சூழ்ச்சி இது. தான் அகலிகையுடன் கூடி இருக்கும் பொழுது எப்படியும் கௌதமரால் பிடிபடுவர், அப்பொழுது அவருக்குக் கோபம் வந்து இவர்களை சபிப்பார். அதனால் அவரின் தவ வலிமை அழிந்து போகும் என்றும் இந்திரன் கணக்குப் போட்டன். அவன் கணக்குப்படியே நடந்தது. அதற்குப் பகடைக் காயாக அகலிகை பயன்படுத்தப் படுகின்றாள். இது இன்னுமொரு கொடுமை!
முற்றிலும் உணர்ந்த முனிவர் ஏன் அழகு மனைவியை விட்டு நடு இரவில் குளிக்க செல்ல வேண்டும்? அகலிகையும் இந்திரனின் தந்திரத்தால் தன்னை இழக்கிறாள். அது அவள் தவறா? ஆனால் அகலிகை கௌதமரிடம் அவன் உங்களைப் போலவே இருந்ததால் நான் ஏமாந்துவிட்டேன் என்று கெஞ்சியபோதும் நீ உடலைப் பார்த்தாய் உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கவில்லை அதனால் அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று நீ உணரவில்லை. அதனால் உன்னால் யார் கூப்பிட்டாலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு உன் நிலைமை இருக்கவேண்டும் என்று சபித்தார். அவள் கல்லாய் சமைந்தாள்.
இராமன் விஸ்வாமித்திரருடன் மிதிலைக்குப் போகும் வழியில் ஒரு வெட்ட வெளியில் ஒரு கல்லில் துளசி செடி முளைத்திருப்பதைப் பார்க்கிறான். இது என்ன இப்படி ஓர் அதிசயம் என்ற வினவியபோது விஸ்வாமித்திரர், ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு இன்னொரு ஆணால் சபிக்கப்பட்ட பெண் இங்கு உறைகிறாள். உன் கால் பட்டு அவள் மறுபடியும் பெண்ணாக மாறுவாள் என்கிறார். அவ்வாறே நடக்கிறது.
யாருக்கும் குற்றம் சாட்டவும் தண்டிக்கவுமே அதிக விருப்பம். ஆனால் கதைப்படி இங்கே இராமன் என்னும் அவதாரப் புருஷன் அவளுக்கு விமோசனம் அளிக்கிறான். அவனை வணங்கி கௌதமருடன் வாழ கிளம்புகிறாள் அகலிகை. தனக்குக் கிடைத்த சாபத்தினால் இராம தரிசனமும் ஸ்பரிசமும் கிடைக்கும் வாய்ப்புக் கிட்டியதே என்று அந்த நிலையிலும் அகலிகை எண்ணுவதாகக் கதை முடிகிறது.
அன்பும் காதலும் காமமும் நிறைந்தது தான் வாழ்வு. ஒரு அழகான இளம் பெண் இங்கு ஒரு சுதந்திரப் பறவையாக சில நிமிடங்களாவது இருக்க ஆசைப்பட்டிருக்கிறாள். கௌதமரின் பார்வையால் ஒரு முறை கர்ப்பம் தரித்து அவள் ஒரு மகளைப் பெற்றேடுத்திருக்கிறாள். அவள் கணவனுடன் இன்பமாக இருந்தாளா என்பது கேள்விக்குறி. அவள் முன்பே இந்திரனை விரும்பினாள் என்றும் நம்பப் படுகிறது. அப்படியானால் கௌதமருடனான அவளுடைய திருமணம் ஒரு கட்டாயத் திருமணம் தானே?
அகலிகையின் கதை எழுப்பும் கேள்விகள் ஏராளம். கற்பு என்பது என்ன? புனிதத் தன்மையையும் தூய்மை கேட்டையும் பிரிக்கும் அந்த மெல்லிய கோடு எது? ஆசை – விருப்பம் இவற்றின் மதிப்பீடு என்ன? அவற்றை துறப்பதினால் வரும் மதிப்பு தான் என்ன? சிலவற்றை மாயை என்று அந்த சமயத்தில் உணரமுடிவதில்லையே. உண்மைத் தன்மையை உணர்வது தான் எப்படி?
யாரும் குறை இன்றி இருப்பதில்லை. அவர்களை அந்தக் குறையோடு ஏற்றுக் கொள்வதே விவேகம். மேலும் நாம் குறை என்று நினைப்பது அவர்க்கு அது நிறையாகவும் தெரியலாம். அதை நாம் எப்படி எடை போடுவது? நமக்கு அந்த உரிமையும் இல்லை அந்த நிலையில் நாம் இருந்தால் ஒழிய அதை எடை போடும் சக்தியும் நமக்குக் கிடையாது.
கம்ப இராமயணத்தில் கம்பர்
புக்கு அவளோடும் காமப் புதுமண மதுவின் தேறல்
ஒக்க உண்டு, இருத்தலோடும் , உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஒராள், தாழ்ந்தனள் இருப்பத், தாழா
முக்கணன் அனைய ஆற்றல் முனிவனும் முடுக்கி வந்தான்
என்கிறார். எப்பொழுது அகலிகை தன்னை இழந்தாளோ அப்பொழுதே அவளை “தாழ்ந்தனள்” என்று கூறிவிட்டார். அனால் முக்காலமும் உணர்ந்த அவளை காப்பாற்ற வேண்டிய கணவன் “தாழா முக்கண்ணன்” ஆகிறார். எல்லாவற்றிற்கும் காரணமான வில்லன் இந்திரனுக்குத் தீயவனே என்று எந்த அடைமொழியும் இல்லை. இது தான் இன்றைய சமுகம்.
பதிவிரதையாக ஒரு பக்கம் அகல்யா புஜிக்கப்படுகிறாள், ஆனால் அந்த இடத்தை அந்தப் பெண் பெற ஆணாதிக்கம் மிக்க சமுதாயத்தில் அவள் கொடுக்க வேண்டிய விலை என்ன? ஏமாற்றப்பட்ட பெண் தான் ஏமாற்றப் பட்டோம் என்று நிரூபிக்க வேண்டியது அவள் கடமை ஆகிறது. உண்மையிலேயே நீ எமாற்றப்பட்டாயா அல்லது விருப்பத்துடன் சென்றாயா என்று தான் சமூகம் முதலில் கேள்வி எழுப்புகிறது. அதுவே ஏமாற்றும் ஆண் எதையும் நிரூபிக்கவோ ஆதாரம் தரவேண்டிய அவசியமோ அன்றும் இன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.
இதே மாதிரி கிரேக்க புராணக் கதையில் Zeus என்னும் கடவுள் Amphitryon என்பவற்றின் மனைவி Alcmneஐ நயவஞ்சகமாக அடைகிறான். அவர்களின் சங்கமத்தில் பிறந்தவன் தான் Hercules. அகலிகை மாதிரியே Alcmeneம் தன் கணவனைப் போல வேடமிட்டு வந்த Zeus இடம் ஏமாறுகிறாள். ஆனால் அங்கே அவளின் அந்த செயலை பழி பாவமாகவும் தான் சுகத்துக்காக செய்த செயலாகவும் பார்க்கப் படவில்லை.
United Nations Report படி உலகத்தில் 38 பெண்களில் ஒரு பெண் ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தப் பட்டிருகிறாள். இந்தியாவில் 22 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பெண் சீண்டலுக்கு ஆளாகிறாள். 58 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு பெண் வரதட்சணை கொடுமையினால் கொல்லப்படுகிறாள். ஒவ்வொரு 3 நிமிடத்துக்கும் ஒரு பெண் அடிக்கப் படுகிறாள். பெண்களுக்கு எதிரான வன் கொடுமையில் உலகில் நான்காம் இடத்தில் நிற்கிறது இந்தியா.
“A team from ASMITA Resource Centre for Women, Hyderabad, performed the ballet to launch the One Billion Rising campaign to end violence against women. The speakers at the function also expressed their concern over the declining sex ratio, which is now 1000:914 in the country.”
Reference: Kamba Ramayanam
http://www.pantheon.org/articles/a/ahalya.html
https://www.princeton.edu/~achaney/tmve/wiki100k/docs/Ahalya.html
https://sites.google.com/site/epiclovestories/gautama-and-ahalya
dia.org/wiki/Ahalya