வெள்ளி நட்சத்திரங்களும் தங்கக் காசுகளுமாக சல்லென்று கண்ணருகில் வந்துக் கொட்டி ஜொலிக்க SuperStar Rajni என்று டைட்டிலில் ரஜினி பெயர் 3Dயில் வர சத்யம் தியேட்டரில் விசில்களும் ஆரவாரங்களும் பொம்மை படமாக வந்தாலும் ரஜினியின் ரீச்சும் மாஸும் எப்படிப்பட்டது என்று காட்டிவிடுகிறது 🙂
முதலில் எந்த நடிகர் எந்தப் பாத்திரத்தில் வருகிறார் என்று புரிந்துகொள்ள கொஞ்ச நேரம் எடுக்கிறது, அதற்குப் பின் அது புரிந்தால் என்ன புரியாவிட்டால் என்ன படத்தில் கவனம் செலுத்துவோம் என்று அதைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு விடுகிறோம். ரஜினியை முதலில் animated characterஆகப் பார்க்கும் பொழுது அதை அவ்வளவாக ஜீரணிக்க முடியவில்லை, ஆனால் சிறிது நேரத்தில் அதுவும் பழகிவிடுகிறது. பார்த்தவுடன் இவர்கள் தாம் என்று நன்றாகப் புரிவது நாசர், தீபிகா, ஷோபனா & நாகேஷ். சரத்குமார் சரத்பாபு போல உள்ளார். ஜாக்கி ஷராபும் ஓரளவு அவர் தான் என்று தெரிகிறது. ஆதி உருவம் தான் அவரின் உண்மை உருவத்துக்கு perfect match!
இசை இந்தப் படத்துக்குப் பெரிய பலம். அ.ர.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்துகிறது. பாடல்கள் படத்தின் கதையோடு நன்றாக இணைந்துள்ளது. உடை அலங்காரமும் நகைகளும் மிகவும் அழகாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் உள்ளன, முக்கியமாக பாடல் காட்சிகளில் பெண் நடிகர்களின் காஸ்டியும் அருமை. அனிமேஷன் என்பதால் வித விதமான நிறங்களில் உடைகள் கண்ணைக் கவருகின்றன. இயற்கை காட்சிகளும் நன்கு வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. எழில் கொஞ்சும் அருவிகளும் மலைகளும் மலர்களும் கண்ணுக்கு மிகவும் ரம்மியமாக உள்ளன.
சிவ தாண்டவ நடனம் அருமை. ரஜினிக்காக ஆடிய நடனக் கலைஞர் யுவராஜூக்குப் பாராட்டுக்கள். சண்டைக் காட்சிகளும் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் பிரமாண்டமாக உள்ளன. Animation படம் ஆனதால் சாகசங்களை ஹீரோவால் எளிதாகப் பண்ண முடிகிறது. நாமும் குதிரையின் மேல் ராணா அமர்ந்து ஐயாயிரம் அடிகள் தண்டுவதையும் நன்றாக ஜீரணித்துக் கொள்ள முடிகிறது 🙂
தீபிகாவுக்கும் முகமூடி வீரனுக்கும் நடக்கும் சண்டைக் காட்சியின் முடிவு very romantic 😉 கதைக்குள் கதைக்குள் கதை! ஆனால் தலை சுத்தாமல் சொல்லியிருப்பது K.S.ரவிகுமாரின் அனுபவத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு. திரைக்கதை மட்டும் சொதப்பியிருந்தால் ஒரு குழந்தை கூட திரை அரங்கிற்குச் சென்றிருக்காது. ராணா என்று பெயர் வைத்திருந்தால் படம் ஓடியிருக்காது என்று கோச்சடையான் என்று படத்துக்குப் பெயர் சூட்டியவர் வாழ்க! படம் முழுக்க வருவது ராணா தான். ஆனால் கோச்சைடையான் என்று ஒரு பாத்திரத்தை உருவாக்கி கதையில் சுவாரசியத்தை ஏற்படுத்திய புண்ணியவானுக்கு சௌந்தர்யா நன்றி சொல்ல வேண்டும்.
ஆங்காங்கே இயக்குநரின் திறமை கீற்றாக ஒளிவிடுகிறது. ஆனால் சௌந்தர்யாவின் உழைப்பைக் குறை சொல்லவே முடியாது. தன்னால் இயன்ற வரை ஒரு நல்ல படைப்பை கொடுக்க முயன்றிருக்கிறார். புதிய முயற்சிக்கு மனமார்ந்தப் பாராட்டுகள். ஆனால் இந்தப் படம் ரஜினி நடிக்காமல் வேறு யார் நடிந்திருந்தாலும் வெள்ளித்திரையைப் பார்த்திருக்காது. ரஜினியின் குரல் பாத்திரத்துக்கு முழு உயிர் கொடுத்துவிடுகிறது.குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ஒரு படமாக உள்ளது. ஆனால் ராஜாவின் சூழ்ச்சிகளை, கிளைக் கதைகளைக் குழந்தைகள் புரிந்து கொள்ளுமா என்று தெரியவில்லை. அதனால் இதைப் பெரியவர்களுக்கான ஒரு சிறுவர் கதை என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்!
எல்லாம் பார்த்து முடித்து கடைசிக் காட்சியில் சேனா என்று ராணாவின் சகோதரன் என்ட்ரி கொடுத்துத் தொடரும் என்று டைட்டில் கார்ட் போடும்போது தான் திக்கென்றாகிவிடுகிறது! மறுபடியும் முதல்லேந்தா??? 😉