இரும்புக் குதிரை – திரை விமர்சனம்

Irumbu_Kuthirai_Official_Poster

ரெண்டு விரலில் ஒரு விரலைத் தொடச் சொல்லி ட்விட்டரில் கேட்டேன், ஒரே ஒருவர் தான் விரலைத் தொட்டார். அதுவும் அவர் தொட்ட விரல் விமர்சனம் எழுதாதே என்று நான் நினைத்திருந்த விரலை. ஆனாலும் படத்தைப் பார்க்கச் செலவழித்தப் பணத்துக்கு விமர்சனம் எழுதியாவது ஒரு பலனைப் பெற வேண்டும் என்று எழுதுகிறேன்.

R.B.குருதேவ், கோபிநாத் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். Simply superb! பாண்டிச்சேரியில் நடக்கிறது கதை, ஊரை அணு அணுவாக ரசிக்க முடிகிறது, நன்றி அவர்களுக்கு. மேலும் கடைசியில் நடக்கும் பைக் ரேசில் அவர்களின் பங்களிப்பு அமர்க்களம்!

அதர்வா சிறந்த நடிகர். நல்ல உயரமும், உடற்கட்டும் அவருக்குக் கூடுதல் பலம். இந்தப் படத்தின் பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். முரளியின் மகன் என்பதால் அவரைப் பார்க்கும் போது கொஞ்சம் he tugs at my heart strings, அதுவும் தந்தையை இழந்த பாத்திரத்தில் நடிப்பதால்.

தேவதர்ஷினிக்கு அண்ணி, அக்கா ரோலில் இருந்து ப்ரமோஷன், அதர்வாவுக்கு அம்மா. நன்றாகச் செய்திருக்கிறார். சச்சு பாட்டியாக வருகிறார், எந்த விதத்திலும் கதைக்கு வலு சேர்க்காதப் பாத்திரம், கலப்பு மணத்தை narsim அழகாக வசனத்திலேயே சொல்லிவிடுகிறார், அதற்கு சச்சுவை வீணடித்திருக்க வேண்டாம். இந்தப் படத்தின் அடுத்த பலம் நர்சிம்மின் வசனம். ஒரு இடத்தில் கூட அதிகப்படியானப் பேச்சு இல்லை. ரெட்டைப் பொருளில் வசனங்கள் இல்லை.

ஹீரோயின் ப்ரியா ஆனந்த். இப்போ அஞ்சான் படம் வரை அச்சு பிச்சு பாத்திரங்கள் தான் ஹீரோயின்களுக்கு. நல்ல வேளை இதில் ப்ரியா ஆனந்துக்கு ஜெனிலியா பாத்திரம் இல்லை. அறிவுடன் பேசுகிறார். ராய் லட்சுமி, ஜெகன் நண்பர்களாக வருகிறார்கள்.

G.V. பிரகாஷ் இசை, பெண்ணே பெண்ணே பாடல் நன்றாக உள்ளது. மற்றப்படி திரைக் கதையே சரியாக அமையாத இந்தப் படத்துக்குப் பாடல்களும் பின்னணி இசையும் தலை வலியைத் தான் தருகின்றன. Editing by T.S.சுரேஷ். ரேஸ் சீனில் சிறப்பாக உள்ளது அவரின் கைவண்ணம்.

சம்பந்தமே இல்லாமல் திடீரென்று ஒரு flashback. ஏழாம் அறிவு வில்லன் நிகுயின் தான் இதிலும் வில்லன். பறந்து பறந்து அடிக்கிறார். செமத்தியாக வாங்குகிறார் அதர்வா. படத்தின் நடுவில் டெம்போவே இல்லாமல் தொய்கிறது கதை. (சூமோ இருக்கிறதா என்று கேட்காதீர்கள் ப்ளீஸ்) இஷ்டத்துக்கு நடு நடுவே நடனம், யார் யாரோ ஆடுகிறார்கள். சோகமான சிசுவேஷனிலும் டூயட் வருகிறது.

எழுதி இயக்கியிருக்கும் யுவராஜ் போஸ் அவர்களே, படம் எடுக்க முதலில் கதை வேண்டும் ஐயா! சூப்பரான ரேஸ் காட்சிகளுக்காகப் படம் ஓடாது. தயாரிப்பாளரும் எந்த நம்பிக்கையில் பணம் போடுகிறார் என்று தெரியவில்லை. சரி விடுவோம், அவர்களுக்கே இல்லாத கவலை நமக்கெதுக்கு? ஆனால் தமிழகத்தில் நல்ல படங்கள் மட்டுமே ஓடும் என்பது பல முறை நிரூபணம் ஆன ஒன்று!

irumbu kuthirai

அஞ்சான் – திரை விமர்சனம்

 

anjan

Rock paper scissors என்று ஒரு குழந்தைகள் ஆட்டம் உண்டு. (ஷாட் பூட் த்ரீ மாதிரி ஒரு விளையாட்டு) அதன்படி சிசர்ஸ், பேப்பரை பீட் பண்ணும். பேப்பர், ராக்கை பீட் பண்ணும். ராக், சிசர்சை பீட் பண்ணும். சில குழந்தைகள் புதுசாக fire ஐயும் சேர்த்து ஆடும். அதாவது இவை யாவற்றையும் நெருப்பு பீட் பண்ணி விடும்.

அஞ்சான் படத்தில் இருந்து தெரிந்து கொள்வது யாதெனில் கைச் சண்டையை கத்தி பீட் பண்ணும், கத்தியை துப்பாக்கி பீட் பண்ணும், துப்பாக்கியை துரோகம் பீட் பண்ணும், இவை எல்லாவற்றையும் சூர்யா பீட் பண்ணுவார்.

எல்லா படங்களும் ஒரு மெஸ்சேஜ் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள், மாரல் சைன்ஸ் வகுப்பு எடுக்க வரவில்லை என்று தெரியும். ஆனால் நம் நேரத்தை விரயமாக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்பதை நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து சூர்யா தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தால், லிங்குசாமி நல்ல படத்தை இயக்கினால் அவர்கள் திரும்ப என் நற்புத்தகத்தில் இடம் பெறுவார்கள். அது வரை இனி மறந்தும் இவர்கள் படம் பார்க்க மாட்டேன்.

படத்தில் ஸ்டன்ட மாஸ்டர் செய்திருக்கும் சாகசம் அதி அற்புதம். ஸ்டன்ட் சில்வா சும்மா பூந்து விளையாடியிருக்கார். என்ன பிளானிங் இருந்திருக்கணும், ஒவ்வொரு அடி உதையையும் கோரியோக்ராப் பண்ண! சூர்யாவும் ரொம்ப நன்றாக சண்டை போடுகிறார்.

படம் முழுக்க ஒரு சண்டை அதன் பிறகு நடனம் என்று மாற்றி மாற்றி வருவதால் இந்தப் படத்தில் நடன இயக்குனருக்கும் ஸ்டன்ட மாஸ்டருக்கும் தான் வேலை. நடன அசைவுகளும் ரொம்ப நன்றாக இருந்தன. சூர்யா ஒரு தேர்ந்த நடனமாடுபவராக மாறியிருக்கிறார். விஜய்க்கே tough கொடுப்பார் போல!

அடுத்த பலம் சந்தோஷ் சிவனின் பிரமாதமான ஒளிப்பதிவு. இந்தப் படத்துக்கு இப்படி உயிரைக் கொடுத்து செய்திருக்கும் அவர் விசுவாசத்திற்கு ஒரு பூங்கொத்து. தளபதியை ஒளிப்பதிவு செய்த அதே கரங்கள்/கண்கள் இப்படத்தின் ஒளிப்பதிவின் போது என்ன பாடுபட்டன என்று அவரை யாராவது சந்தித்தால் தவறாமல் கேட்கவும். Editing by Anthony, நல்ல fast paceக்கு சிறப்பான editing.

நான் என்னடா செஞ்சேன் உன்ன மாதிரி ஒரு நண்பன் கிடைக்கறதுக்கு, நட்புன்னா என்னன்னு தெரியுமாடா, என் தளபதியை பாருங்கடா போன்ற வசனங்கள் நம் மனத்தில் பசுமரத்தாணி போல பதிந்து விட்ட வசனங்கள். தாதா உலகம் என்றாலும் அதில் உள்ள வலி, வேதனை, உயிர் தியாகம், ஏழைகளுக்கு நீதி கேட்டுப் போகுமிடம் இன்றி துன்பப்படுவதைப் பார்த்து அவர்களுக்கு உதவுவதற்காக உருவாகும் தாதாக்கள் என்று தளபதி, நாயகன் போன்ற படங்களில் கதை அம்சத்தோடு பார்த்துவிட்டு, ஒரு பின் கதையும் இல்லாமல் நன்பேண்டா என்று சூர்யா வெறும் வாய் வார்த்தையினால் சொன்னால் அதன் தாக்கம் பூஜ்யம்.

காதலுக்கும் ஒரு கதையில்லை. அது இப்போ எல்லா படங்களிலும் அப்படித் தான் என்று விட்டு விட வேண்டியது தான். ஏனென்றால் காதலி கதைக்காகப் படத்தில் இல்லையே சதைக்காகத் தானே! அதிலும் சமந்தா இந்தப் படத்தில் சமத்தா எல்லாத்தையும் துறந்து மோன நிலையில் இருப்பது ஆண் ரசிகர்களுக்கு விருந்து. சமந்தா ஒரே ஒரு சீனில் பிகினியில் வருகிறார், very pretty! ஏக் தோ தீன் பாடலில் ஒரே ஒரு பட்டன் போட்ட உடையில் வருகிறார். அந்த ஒரு பட்டன் அதே பொசிஷனில் இருப்பதற்கு அந்த காஸ்டியும் டிசைனருக்கு ஒரு விருது தர வேண்டும்.

எம்ஜிஆர் காலத்துப் படங்களில் இரு வேடத்தில் வரும்போது மரு தான் வித்தியாசத்தைக் காட்டும். இப்போ டெக்னாலஜி ரொம்ப முன்னேறிவிட்டதால் ஊன்றுகோல் வித்தியாசத்தைக் காட்டுகிறது. பேஷ் பேஷ் லிங்குசாமி! எல்லா பாம்பே தாதாக்களும் சரளமாக தமிழ் பேசுகிறார்கள். தாதா வாழ்க்கை பற்றி என்ன சொல்ல வருகிறார் லிங்குசாமி என்றே தெரியவில்லை. இதில் சூர்யாவிற்கு பன்ச் டயலாக் வேற! “எதிரிக்கும் துரோகி இருக்கக் கூடாதுடா” கொடுமைடா சாமி!

பாட்டுக்கள் ரொம்ப ரொம்ப சுமார் ரகம் தான். கொடுத்த ஹைப்புக்கு பின்னணி இசையும் flat. யுவன் ஷங்கர் ராஜா எழுந்திருங்கள்!

இன்று படத்துக்கு கமலா திரை அரங்கில் ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்ததால் ட்விட்டரில் அறிவித்தேன். அதற்கு ஒருவர் நீங்கள் பாதி கமலா தியேட்டரை என் பேரில் எழுதி வைத்தாலும் டிக்கெட் வேண்டாம் என்றார். அறிவாளி! ரசிகர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை சூர்யாவும் லிங்குசாமியும் உணரவேண்டும்.

anjan1

ஜிகிர்தண்டா – திரை விமர்சனம்

jigirthanda

இந்த மாதிரி திரைக் கதையை சமீபத்தில் வந்தத் தமிழ் சினிமாவில் நான் பார்க்கவில்லை. மகாபாரதத்தில் வரும் திடுக் திருப்பங்களுக்கும் சாதுர்ய சதுரங்க நகர்த்தல்களுக்கும் ஈடாக இன்றைய மதுரை தாதாக் கதையை முற்றிலும் மாறுபட்டக் கோணத்தில் சுவாரசியமாகத் திரைக் கதையை அமைத்து இயக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அவருக்குப் பாராட்டுக்கள். (ரொம்பப் புகழறேனோ?)

பாதையை  மாற்றி பயணிக்க வைக்கும் திரைக்கதை/இயக்குநர்கள் தமிழ் திரை உலகுக்கு ஒரொரு இடைவெளியில் வருவார்கள். பாரதி ராஜா, பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன், வசந்த், மணி ரத்னம், ஷங்கர், பாலா, வெற்றி மாறன் வரிசையில் சுப்பு கார்த்திக் பெயரை தைரியமாகப் பரிந்துரைக்கலாம். பீட்சாவிலேயே தன் முத்திரையைப் பதித்த இவர் இந்தப் படத்தில் அடுத்த லெவலுக்குச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ப நம் ரசனையும் மாறுகிறது. இன்றைய ரசனைக்கேற்பப் படத்தைத் தந்திருக்கிறார்

சித்தார்த் சூப்பராகப் பண்ணியிருக்கார். எப்பொழுதும் அழுத வண்ணம் இருக்கும் அவர் முகம் இந்தப் படத்தில் இந்தப் பாத்திரத்துக்கு ரொம்ப செட் ஆகியிருக்கிறது. படம் முழுக்க, முக்கியமாக முடிவில் அவர் நடிப்பு A1. அவருக்குப் பக்கத் துணையாக கருணாகரன் ரொம்ப நன்றாக நடித்துள்ளார்.

தனி காமெடி track இல்லை. ஆனால் பல கதாப் பாத்திரங்கள் பல சிச்சுவேஷன்களில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள். படமே ரொம்ப லைட்! வெட்டுக் குத்து எரிப்பு இவற்றை எல்லாமே நம் மனம் வெகு எளிதாக ஜீரணித்துக் கொள்ளும் அளவு தமிழ் சினிமாவில் வன்முறைக் காட்சிகள் பல்கிப் பெருகி விட்டதால் எந்த சீனுமே gory ஆக தெரிவது இல்லை. நம் மாறிய மன நிலைமையைக் கண்டு அஞ்சுவதா, வெதும்புவதா அல்லது இயல்பு இது தான் என்று பட்டுக் கொள்ளாமல் போவதா என்று தெரியவில்லை.

லச்சுக்குக் குட்டி ரோல் தான். உடல் ஸ்லிம்மாக இருக்கிறார். இதையே மெயின்டெய்ன் பண்ணால் நன்றாக இருக்கும். அம்பிகாவின் பாத்திரம் அவன் இவனில் வந்தப் பாத்திரத்தை நினைவூட்டுகிறது.

படத்தின் வில்லன் ப்ளஸ் பலமான கதாப்பாத்திரம் பாபி சிம்ஹா. வில்லன் பாத்திரம் செம வில்லத்தனமாக இருந்தால் தான் ஹீரோ பாத்திரம் எடுபடும்! ஆரம்பம் முதலே மிரட்டலாக நடித்துள்ளார் சிம்ஹா. சித்தார்த்தை விட அவருக்கே challenging role. நடிப்புச் சொல்லித் தரும் ஆசிரியராக வரும் சோமசுந்தரம் – கலக்கல் நடிப்பு 🙂

விவேக் ஹர்ஷனின் editing நன்றாக இருந்தாலும் சில இடங்களில் கத்திரிப் போட்டிருக்கலாம். அதை தடுத்தது இயக்குநரா என்று தெரியவில்லை. 170 நிமிடம் கொஞ்சம் அதிகமே. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ரொம்ப நன்றாக உள்ளது. பாடல்களில் சில நன்று ரகம், சில ஒகே ரகம்.

சினிமேடோக்ராபி செய்தவர் பெயர் வித்தியாசமாக இருக்கிறது Gavemic Ary. தொழில் சுத்தம்! Excellent! ரொம்ப நெருக்கமானத் தெருக்களைக் கொண்ட மதுரையில் கூட்டத்தின் நடுவேயும் இரண்டு வீடுகளில் சின்ன அறைகளிலே நடக்கும் காட்சிகளை ரொம்ப அழகாகவும் தெளிவாகவும் படம் பிடித்துக் காட்டயிருக்கார்.  அவருக்குப் படத்தின் வெற்றியில் பெரும் பங்கு உள்ளது.

ஜிகிர்தண்டா பெயருக்கேற்ப மதுரை சுவையோடு உள்ளது. என்ன, கொஞ்சம் rawவாக இருக்கு. Refine பண்ணியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும்.