சொ.மணியன், நா.மோகன கிருஷ்ணன் எழுதியிருக்கும் ‘திருவண்ணாமலை கிரிவலம்’ என்னும் ஆன்மிக புத்தகம் கிரி வலம் செய்ய விரும்போவோர்க்கு ஒரு நல்ல எளிமையான கையேடு. திருவண்ணாமலையின் பெருமையும் அங்கு சுற்றி இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய தொகுப்பும் படிக்கும்போதே அங்கே போய்விட்டு வந்த திருப்தியைத் தருகிறது.
திருவாரூரில் பிறந்தாலும், காசியில் இறந்தாலும் முக்தி. சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அப்படி பட்ட ஒரு தலத்தைப் பற்றியும் கிரி வலத்தின் முக்கியத்துவம் பற்றியும் அழகாக எழுதியுள்ளார்கள் நூல் ஆசிரியர்கள்.
கிரிவலம் என்றாலே ஒரு மலைப்பு வந்துவிடும், அதைப் போக்கி, எப்படி வலம் வரவேண்டும், வழியில் தரிசிக்க வேண்டிய கோவில்கள், அஷ்ட லிங்கங்கள் பற்றிய தகவல்களும் அளித்து நம்மை இந்தப் புத்தகம் கிரி வலத்துக்குத் தயார் செய்கிறது.
திருவண்ணாமலையின் இன்னும் ஒரு சிறப்பு அங்கு பல ஆசிரமங்கள் இருப்பது தான். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம் சூரத் குமார் ஆகியோரின் வரலாறுகளை ஆசிரியர்கள் மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார்கள். ஆசிரமங்கள் அமைந்திருக்கும் பகுதி, திறந்திருக்கும் நேரம், மற்ற தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
கிரிவலத்தை மையமாக எழுதிய புத்தகம் ஆனதால் கார்த்திகை தீபம் பற்றி இதில் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன். அது பற்றிய தகவலும் சிறிது சேர்த்திருக்கலாமோ என்பது என் எண்ணம்.
ஜெ.பியின் அருமையான கோட்டோவியங்கள் திருவண்ணாமலையை நம் கண் முன் கொண்டு நிறுத்துகிறது. பலப் பல ஓவியங்கள் – அண்ணாமலையார், விசிறி சாமியார், ரமண மகரிஷி, ஆசிரம சூழல், மலையின் பல வடிவங்கள், இவை புத்தகத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றது.
தங்கத் தாமரை பதிப்பகம்
சென்னை60002௦
விலை ரூ.25