பூ வாசம் புறப்படும் தென்றல் – சிறுகதை

neemtree

காலையில் எழுந்திருக்கும் போதே ஜன்னல் வழியா வேப்பிலை/வேப்பம் பழம் கலந்த கசப்பு வாசனை வீசியது. எப்பவும் வீசாது. விடி காலையில் கரண்ட் போனதால் ஜன்னலை திறந்து வைத்ததில் கோடை கால வெப்பமும் சேர்ந்து வாசம் வந்ததோ என்று அவளுக்குத் தோன்றியது. பிறகு காலை வேளை வேலையில் அது மறந்தும் விட்டது. மகளை ரிக்ஷாவில் பள்ளிக்கு அனுப்பும் போது வாசலுக்கு வந்த அவளுக்குத் திரும்ப லேசாகக் கசப்பு வாசனை நாசியைத் தொட்டது. வேப்ப மரத்தை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டு மத்த ஜோலியை கவனிக்கப் போய் விட்டாள். இன்னும் கரென்ட் வரவில்லை. புழுங்கித் தொலைத்தது. வாச வெராண்டாவில் வந்து அமர்ந்த அவளுக்குத் திரும்பக் கசப்பு வாசனை. காய்ந்த வேப்பம் பூக்களும் சருகுகளும் மரத்தடியை குப்பைக் கூளமாக்கி இருந்தன. ஒரு துடைப்பத்தை எடுத்து பெருக்க ஆரம்பித்தாள். உஸ்ஸ் என்று எதோ சத்தம். சட்டென்று திரும்பியவள் படம் எடுத்து நின்ற நாகப் பாம்பைப் பார்த்தாள். மூச்சே நின்று விடும் போலிருந்தது. அசையாமல் நின்றாள். இஷ்ட தெய்வம் முருகன். மனசுக்குள் “காக்கக் காக்கக் கனகவேல் காக்க” என்று ஒரே வரியைத் திரும்பத் திரும்ப சொல்ல ஆரம்பித்தாள். காலையில் இருந்து வந்தக் கசப்பு வாசனை ஏதோ ஒரு கெட்டது நடப்பதற்கான அறிகுறியோ?

அவள் கணவன் அவளை பெண் பார்க்க வந்தபோது காபி கொடுத்து விட்டு உள்ளே சமையல் அறையில் நின்று கொண்டு ஹாலில் எல்லாரும் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருந்த போது அவள் நாசிக்கு விபூதியும் குளிர்ந்த செண்பக மலரும் கலந்த வாசனை எங்கிருதோ வந்தது. சமையல் அறையில் கேசரியும் பஜ்ஜியும் தான் இருந்தன. எப்படி இந்த மணம் வந்தது என்று அவளுக்குப் புரியவே இல்லை. ஆனால் சர்வ நிச்சயமாக அந்த வாசத்தை அவள் உணர்ந்தாள். அவளுக்கு சிலிர்த்து விட்டது, முருகனே அவளுக்கு இத் திருமணத்துக்கு ஒப்புதல் தருவதாக அவள் அதை அப்போது எடுத்துக் கொண்டாள். திருமணமும் எந்த வித இடையூறும் இல்லாமல் அவள் அப்பாவிற்குப் பணத்திற்கு எந்த சிரமும் வைக்காமல் எளிதாக நடந்தது.

அப்போ காலையில் இருந்து வந்தக் கசப்பு வாசம் ஒரு கெட்ட விஷயத்துக்கான அறிகுறி, அதை அவள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ? நிமிடம் யுகமாகக் கழிந்தது. வெயிலுக்கும் பயத்துக்குமாகச் சேர்ந்து வியர்வை அவள் மேனியில் ஆறாக ஓடியது. மூச்சுக் கூட சன்னமாக விட்டாள். சட்டென்று காற்று வேகமாக வீசியது. பக்கத்து வீட்டு நித்திய மல்லிச் செடியில் இருந்து வந்த மல்லியின் வாசனை அவளை உடனே ஆசுவாசப் படுத்தியது. வேப்பிலை வாசம் போய் மல்லி மணம் வருகிறதே. இனி உயிருக்குப் பயம் இல்லை என்று தோன்றியது. படபடவென்று அடித்துக் கொண்டிருந்த அவள் மார்பு இப்போ சாதாரணமாக அடிக்கத் தொடங்கியது. பாம்பு அசையாமல் அப்படியே படம் எடுத்த நிலையில் இருந்தது. ரோடில் திடீரென்று பெரிய தண்ணி லாரி வரும் சத்தம் கேட்டது. அசையாது இருந்த பாம்பு விருட்டென்று கண் மூடி திறக்கும் நேரத்தில் காணாமல் போயிருந்தது.

துடைப்பத்தைப் அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினாள். கதவை தாழ்போட்டு சேரில் அமர்ந்தாள். கரென்ட் வந்ததற்கு அறிகுறியாக fan லைட் எல்லாம் ஒரு சேர சுத்தவும் ஒளிவிடவும் ஆரம்பித்திருந்தன. இப்போ அவளுக்கு அவள் காலையில் வைத்த வத்தக் குழம்பு வாசம் தான் வந்தது.

sangamam_house

photo thanks to:

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/a-sweet-tale-of-how-neem-trees-yield-money/article3975177.ece

http://archive.auroville.org/journals&media/avtoday/archive/2000-2003/may_2002/sangamam.htm

நவ வித பக்தி – அனுமன்

hanuman

எளிமைக்கும் பக்திக்கும் ஓர் எடுத்துக்காட்டு என்றால் அவர் அனுமன் தான்! வீரமும் விவேகமும் நிறைந்த ஒருவர் பணிவுக்கும் உதாரணப் புருஷராய் இருப்பது அரிது. பலம் பொருந்தியவர் யாருக்கும் பணியத் தேவையில்லை. ஆனால் பெரும் வல்லவரான அனுமான் இராமதாசனாய் வாழ்ந்து பக்தியின் மேன்மையையும் உன்னதத்தையும் உலகுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார்.

பிரிந்த இராமனும் சீதையும் அவரின்றி இணைந்திருக்க முடியாது. ஆனால் அதை சாதித்த அகம்பாவம் அவரிடம் துளியும் கிடையாது. அவர் தன்னை இராமனின் கருவியாக மட்டுமே பார்த்தார். இலங்கை சென்றார், சீதையைக் கண்டார், இராவணனை வெல்ல வழி வகுத்தார், இழந்த மகிழ்ச்சியை மீட்டுக் கொடுத்தார் இராமனுக்கு!

பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு. பக்திக்கு முதல் தேவை மமதை இன்மை. ஆங்கிலத்தில் தூய பக்தியை unconditional love என்பார்கள். எதையும் எதிர்ப்பார்க்காத அன்பே பக்தி. பக்தன் என்பவன் தனக்கு மேல் ஒருவர் இருப்பதை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொண்டு நடக்கிறான். பக்தியில் ஒன்பது வகைகள் உள்ளன. அவற்றை விளக்கும் வடமொழிப் பாடல் கீழே.

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணுஹு

ஸ்மரணம் பாத சேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்

சாக்கியம் ஆத்ம நிவேதனம்.”

ஸ்ரவணம் – கேட்பது; கீர்த்தனம் – பாடுவது; ஸ்மரணம் – நினைப்பது, அசை போடுவது; பாத சேவனம் – திருவடிகளில் அடைக்கலம்; அர்ச்சனம் – துதிப்பது; வந்தனம் – வணங்குவது; தாஸ்யம் – சொல்வதை சிரமேற் கொண்டு செய்வது; சாக்கியம் – நட்புடன் இருப்பது; ஆத்ம நிவேதனம் – பரிபூரண சரணாகதி.

இப்பாடல் எப்படி படிப்படியாக இறைவனுடன் ஒன்றுவது என்பதற்கான எளிய வழிமுறைகளைச் சொல்கிறது. முதலில் ஸ்ரவணம் – காதால் நல்லவற்றைக் கேட்பது.

“செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை” திருக்குறள்-411

பெரியோர்களின் நல்ல வாக்குகளைக் கேட்டுணர்ந்தாலே வாழ்வில் நற்பயனை அடைவோம் என்கிறார் வள்ளுவர். நல்லவற்றைக் கேட்பதில் தலையாயது இறை நாமத்தையும் அவரின் புகழை சொல்லும் கதைகளையும் கீர்த்தனங்களையும் கேட்பது தான்.

hanuman listening

அனுமன் எங்கெல்லாம் இராமகதை சொல்லப் படுகிறதோ அங்கெல்லாம் இருப்பார் என்பது ஒரு நம்பிக்கை. பத்மா சேஷாத்ரி பள்ளியில் என் குழந்தைகள் படித்துக் கொண்டிருந்த போது ஒரு இராமாயண சொற்பொழிவு அந்த பள்ளி அரங்கில் நடை பெற்றது. அப்பொழுது எங்கிருந்தோ ஒரு குட்டிக் குரங்கு அந்த அரங்கினுள் நுழைந்து சொற்பொழிவு முடியும் வரை இருந்துவிட்டு ஓடிவிட்டதாம். அங்கிருந்த குழந்தைகளுக்கு அத்தனை ஆச்சரியம். கே.கே.நகரில் குரங்கைக் கண்டவர் உண்டோ?

hanumanchaplakattai

எப்பொழுதுமே எந்த மதத்திலுமே இறை வழிபாட்டுக்கு இசைக்கு தான் முதலிடம். நாம் உருகி இறை நாமத்தைப் பாடும்போது இறைவன் நம் கண்ணுக்குத் தெரிகிறானோ இல்லையோ நம் மனப்பாரம் இறக்கப்பட்டு லேசாகிவிடும். கீர்த்தனத்துக்கு அத்தனை மகிமை. அனுமன் சப்ளாக் கட்டையுடன் இருக்கும் படங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர் எப்பொழுதும் இராம நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டே இருப்பார். இசைக்கு மயங்காத பேர்களுண்டோ? இறைவன் மட்டும் இதற்கு விதிவிலக்கா? பாட்லகள் மூலம் நம் உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்துவது எளிது.

hanuman showing his heart

அடுத்து இறைவனை நினைப்பது (ஸ்மரணம்). ஏதோ உப்புப் பெறாத விஷயத்துக்குக் கவலைப் படுவதை விட அந்த நேரத்தில் இறைவன் லீலைகளையும் அவனைப் பற்றிய பெருமைகளையும் சிந்தித்தால் கவலைக்கு இடமே இருக்காது. கவலைப் படும் அந்நேரத்தை இறை சிந்தனை எடுத்துக் கொள்ளும். அனுமன் எப்போதும் இராமனை நினைத்த வண்ணம் தான் இருப்பார். அப்படிப்பட்ட இதயத்தில் நினைப்பில் இருப்பவர் தானே குடிகொண்டிருக்க முடியும்? அனுமனின் இதயத்தைப் பிளந்தால் இராம சீதா தான் இருப்பார்கள், அப்படி அவர் இதயத்தைத் திறந்து காட்டும் சந்தர்ப்பமும் இராம பட்டாபிஷேகத்துக்குப் பிறகு ஏற்பட்டது. அனுமனுக்கு அன்புப் பரிசாக சீதை மிக விலை உயர்ந்த முத்து மாலையை அளித்தாள். அவரோ அதை ஒவ்வொன்றாகக் கடித்துத் துப்பினார். அதைப் பார்த்துக் கோபம் கொண்ட சீதை அவரைக் கேள்விக் கேட்க அவரோ இந்த முத்துக்களில் இராமன் இருக்கிறாரா என்று தேடுகிறேன் என்றாராம். நாங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறோம், நீ அதில் தேடுகிறாயே என்ற சீதை கேட்க, உடனே இராமன் சொல்படி அனுமன் தன் இதயத்தைத் திறந்து காட்ட அங்கு அவ்விருவரே இருந்தனர். எப்பொழுதும் இறை சிந்தனையில் இருக்கும் ஒருவரின் இதயத்தில் அக்கடவுள் உறைவது ஆச்சரியமில்லையே!

hanumanflowers

அடுத்துப் பாத சேவனம் – நின்னை சரண் அடைந்தேன் மனோ பாவம் தான் இது. இறைவனின் தாமரை பாதங்களை பூசிப்பது, திருவடிகளில் அடைக்கலம் ஆவது. அனுமனின் இராம பக்தி சீதையை அசோகவனத்தில் முதன் முதலில் கண்டதும் தொழுவதில் தெரிகிறது.

கம்ப ராமாயணத்தில் அனுமன் சீதையைத் தொழுது,

வணங்கி, அந்தம் இல் மாருதி, மா மலர் அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்; உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என, கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான்: 2

‘ஏழை, சோபனம்! ஏந்திழை, சோபனம்! வாழி, சோபனம்! மங்கல சோபனம்! ஆழி ஆன அரக்கனை ஆரியச் சூழி யானை துகைத்தது, சோபனம்!’ 3

பாடினான் திரு நாமங்கள்; பல் முறை கூடு சாரியில் குப்புற்றுக் கூத்து நின்று ஆடி, அங்கை இரண்டும் அலங்குறச் சூடி நின்றனன், குன்று அன்ன தோளினான். 4

‘தலை கிடந்தன, தாரணி தாங்கிய மலை கிடந்தனபோல்; மணித் தோள் நிரை அலை கிடந்தென ஆழி கிடந்தன; நிலை கிடந்தது, உடல் நிலத்தே’ என்றான். 5

பாதசேவனத்தின் முழு அழகை இப்பாடல் வரிகளில் காணலாம்.

hanumanseetha

 

 

hanumanravana

அர்ச்சனம்- இறைவனைத் துதிப்பது. அனுமன் அருகில் சென்றாலே இராம ஜெபத்தின் ஓசை கேட்குமாம். துதித்தல் என்பது ஒருவரின் புகழ் பாடுதல். நாம் ஒருவரை உண்மையில் நேசிக்கும்போது தான் அவரின் அருமை பெருமைகளைப் போற்றுவோம். அனுமன் இராமனை நேசித்தார், அதனால் அவரை போற்றுவது தன்னிச்சையான செயலாக அவருக்கு அமைந்தது. இராவணனை அவன் சபையில் சந்திக்கும்போதும் அவர் இராமனின் பெருமையை எடுத்துக் கூறுதல் இவ்வகையையேச் சேரும்.

hanumannamasthe

வந்தனம் – வணங்குவது! கை கூப்பிய அனுமனை தான் நாம் எந்தக் கோவிலிலும் காண்கிறோம். வினயத்தின் மறு உருவம் அனுமன். இராமனை எக்காலமும் தொழுத வண்ணம் உள்ளார். உள்ளத்தாலும் செய்கையினாலும் நம் பெற்றோர்களையும் இறைவனையும் தொழத் தூண்டுவது இவரின் இந்தக் குணமே.

hanumansanjeevi

தாஸ்யம் – காலால் இட்ட வேலையை தலையால் செய்வது! இதற்கு எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். மூலிகையைப் பறித்து வா என்றால் சஞ்சீவி மலையையே பெயர்த்துக் கொண்டு வந்தவராயிற்றே! சீதை இருக்கிமிடத்தைக் கண்டுபிடித்து, இலங்கைக்குப் பாலம் அமைத்து எத்தனை எத்தனை சேவைகளைச் செய்திருக்கிறார் அவர். நாம் நம் வாழ்வில் ஒருவருக்கு ஒரு சிறு உதவி செய்துவிட்டு, வாழ்நாள் முழுக்கச் சொல்லிக் காட்டிக் கொண்டிருப்போம் அல்லது தன்னால் தான் அக்காரியமே வெற்றிப் பெற்றது என்று உரிமைக் கொண்டாடுவோம். அனுமனோ அடக்கத்தின் மறு உருவம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்றிருந்தார்.

நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன் என்பது அனுமனுக்கும் இராமனுக்கும் உள்ள நட்பிற்கு ஒரு சான்று. இராமன் தனக்கும் சீதைக்குமே தெரிந்த ஒரு அந்தரங்க நிகழ்ச்சியை அனுமனிடம் சீதையைக் காணும்போது சொல்லச் சொல்லி அனுப்புகிறார். அதுவும் தவிர தன் கணையாழியையும் கொடுத்தனுப்புகிறார்! இது அனுமன் மேல் இராமன் வைத்த நம்பிக்கைக்குச் சான்று.

hanuman friendship

அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்.

ஒருவரை நேசிக்கவும் பக்தி கொள்ளவும் ஆரம்பித்தப் பின் தோழமை உணர்வு தழைத்தோங்கும். அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் இதே பாவம் தான் இருந்தது. இதில் இறைவனும் நம்மை நண்பனாகப் பாவிப்பது தான் நாம் செய்த பெரும் பேறு! நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் நம்மை நோக்கிப் பத்து அடி எடுத்து வைப்பார். சாக்கியம் நாம் இறைவனுடன் நட்பு பாராட்டுவது, அன்னியோனத்தை மேம்படுத்திக் கொள்வது ஆகும்.

கடைசியில் ஆத்ம நிவேதனம். இராமன் தன் அவதாரக் காலம் முடிந்த பின் சரயு நதியில் தன்னுடன் வைகுண்டத்தில் இருந்து வந்த அனைவருடன் இறங்கி மேல் லோகம் போகிறார். ஆனால் இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு இங்கே இருப்பதே தனக்கு வைகுண்டம் என்று பூலோகத்திலேயே இருந்து விடுகிறார் அனுமன். எவருக்குமே இறைவனுடன் சமீபித்து இருப்பது தான் பிடிக்கும் அது தான் ஆன்மிகத்தின் வெற்றி என்று நினைப்பவர் மத்தியில் இராமனின் புகழை பரப்பிக் கொண்டு இராம நாமத்தின் இன்பத்தில் திளைத்து இருப்பதே ஆத்ம நிவேதனமாகக் கருதுகிறார் அனுமன்.

hanumanatma

Photos taken from these websites with thanks.

http://godsingold.blogspot.in/2014/09/bhakt-hanuman.html

http://www.exoticindiaart.com/article/

http://megaupl0ad.ws/files/hanuman%20in%20meditation&id=mix

https://vibhormahajan.wordpress.com/2012/05/28/

http://pillai.koyil.org/?p=380

மார்ச் மாதம் ‘நமது திண்ணை’ மின்னிதழில் வெளிவந்த என் கட்டுரை இது.

  முழு இதழுக்கான லிங்க்

எனக்குள் ஒருவன் – திரை விமர்சனம்

enakuloruvan1

கன்னடத்தில் லூசியா என்ற பெயரில் சக்கை போடு போட்ட படம் தமிழில் எனக்குள் ஒருவனாக வந்துள்ளது. நான் கன்னடப் படம் பார்க்கவில்லை அதனால் ஒப்பீடு பண்ண முடியாது. ஹீரோ சித்தார்த். எந்த நடிகரும் செய்ய விரும்பும் பாத்திரமாக அமைந்த இந்தக் கதையின் நாயகன் ரோல் இவருக்குக் கிடைத்திருக்கிறது. வாய்ப்பை முழுவதுமாகப் பயன் படுத்திக் கொண்டுள்ளார். காவியத் தலைவனில் பாத்திரம் சரியாக அமையாததால் நன்றாக நடித்தும் அதில் அவர் சோபிக்கவில்லை.

இந்தப் படத்தில் அவர் கேரக்டரின் complex தன்மையை புரிந்து கொண்டு ரொம்ப நன்றாக நடித்துள்ளார். இந்தப் பாத்திரத்திற்கும் இதை விட தமிழில் உள்ள இளம் நடிகர்கள் வேறு யாரும் இவ்வளவு சரியாகப் பொருந்தியிருப்பார்களா என்பது சந்தேகமே. சித்தார்த்தின் நடிப்பு உண்மையிலேயே அற்புதம். ஒரு கேரக்டரில் மிகவும் அழகாகவும் வருகிறார். A real heart throb! அவரை கூடுதல் அழகாகக் காட்டிய ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு “ஓ”!

படம் ஒரு ஆர்ட் பில்ம் மாதிரி உள்ளது. சினிமாவை ரொம்ப விரும்பும் மக்கள் தான் இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முயற்சியை பாராட்டுவார்கள். கன்னட ஆடியன்ஸ் சிலாகித்தப் படம், ஆயினும் நம்மூரில் இது எப்படி ஓடும் என்று எனக்குத் தெரியவில்லை. ஓரிடத்தில் எது கனவு எது நிஜம்னே எனக்கு இப்போப் புரியலை என்று சித்தார்த் ஒரு வசனம் பேசுவார். அதற்கு தியேட்டரில் அப்படி ஒரு அப்ளாஸ். (அதாவது ஆடியன்ஸ் படத்தைப் பார்த்து வந்த பீலிங்கை அந்த வசனம் பிரதிபலிக்கிறது என்று கொள்க)

இயக்குநர் பிரசாத் இராமர் மூன்று கதைகளை ஒரே சமயத்தில் parallel ஆக சொல்லி அதில் நம்மை லயிக்கவும் வைத்துத் திறமையாகக் கையாண்டுள்ளார். ஆயினும் ஒரிஜினல் படம் நிச்சயம் இதை விட நன்றாக இருந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. இதில் நிறைய இடங்களில் தொய்வு. இன்னும் வலுவானத் திரைக் கதை படத்திற்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கும். எனக்கென்னவோ கதைக் கருவான “லூசியா”வுக்கு தமிழ் versionல் போதிய முக்கியத்துவம் தரப் படவில்லை என்று தோன்றுகிறது.

யோக் ஜப்பி சிரிப்புப் போலீஸ் மாதிரி ஆகிவிட்டார். அவர் வரும் சீன்கள் எப்படி பட்டவையாக இருந்தாலும் தியேட்டரில் சிரிப்பலை தான். தனி டிராக்காகவோ அல்லது படத்துடன் இழைந்தோ எந்த நகைச்சுவையும் இல்லாதது கொஞ்சம் குறையாகப் படுகிறது.

நாயகி தீபா சந்நிதி, கன்னட நடிகை. நன்றாகச் செய்துள்ளார். அழகு நடிப்பு இரண்டுமே பாஸ் மார்க்கிற்கு மேல்.

இசை சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை super! பாடல்களும் நன்றாக உள்ளன. இரண்டு பாடல்களில் பாடகர் சாய்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை, (ஏண்டி இப்படி – சந்தோஷ் நாராயணன் & குட்டிப்பூச்சி by மாணிக்க விநாயகம்) சுத்தமாக சித்தார்த்துக்குக் கொஞ்சமும் பொருந்தவில்லை. பிரபலமாகவே by சித்தார்த்த் அருமை!

கடைசியில் வரும் ட்விஸ்ட் ஏன் கடைசியில் வருகிறது என்பது ஒரு பெரிய கேள்வி. அதை கதையின் எந்தப் பகுதியிலும் சொல்லியிருக்கலாம், ஆனால் கடைசியில் சொல்வதால் தான் படத்தை இரண்டு மணி இருபத்தைந்து நிமிடங்கள் வரை நீட்டிக்க முடிகிறது.

புதிய முயற்சியை மேற்கொண்ட தயாரிப்பாளர்கள் CV குமார், வருண் மணியன், YNot சஷி, அபினேஷ் இளங்கோவன் ஆகிய நால்வருக்கும் பாராட்டுக்கள். சித்தார்த்தின் உழைப்புக்குக் கூலி கிடைக்குமா என்று தெரியவில்லை.

enakuloruvan

ட்விட்டரைக் கைக் கொள்வது எப்படி?

twitter-logo

நான் ட்விட்டருக்கு வந்ததே எதேச்சையாகத் தான். என் மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்தார்கள். ட்விட்டரில் அவர்கள் போடும் ட்வீட்டுக்களை நோட்டம் பார்க்க ட்விட்டரில் ஐடி இல்லாமல் அவர்களின் ட்வீட்டுக்களை மட்டும் படித்துக் கொண்டு இருப்பேன். அப்பொழுது நான் அதிகம் ப்ளாக் படிப்பதில் தான் ஆர்வம் காட்டி வந்தேன். இவர்களின் ட்விட்டர் அக்கௌன்ட் தவிர இவர்கள் பாலோ செய்யும் ட்வீட்டர்கள் டைம்லைனும் பார்த்து அவர்களின் ப்ளாக் பதிவுகளையும் படித்து வருவேன். இதை அறிந்த என் மகன் எனக்குத் தனியாக அக்கௌன்ட் திறந்து தந்தான் 🙂

ட்விட்டர் வந்த புதிதில் பல விஷயங்கள் கேட்க கூச்சம், அதனால் பலதும் கவனித்தேத் தெரிந்து கொண்டேன். DP என்றால் Display Picture, DM என்றால் Direct Message என்றெல்லாம் புரிய பல மாதங்கள் ஆயிற்று. முதலில் முட்ட DP தான் வைத்திருந்தேன். பிறகு தான் என் படம் வைத்த DP! Twitter handle @amas32 என் மகன் எனக்கு வைத்தப் பெயர் 🙂 என் முதல் பாலோவர்கள் என் மகன், மகள், என் கணவர். இவர்கள் ட்விட்டரில் முன் காலத்தில் இருந்தே இருந்தார்கள். சில பாலோவர்களுடன் ஆரம்பித்த என் ட்விட்டர் பயணம் 4 வருடங்களில் இவ்வளவு வளர்ந்திருக்கிறது.

என் அனுபவத்தை நான் பகிர்ந்து கொண்டால் புதிதாக ட்விட்டருக்கு வருபவர்களுக்கு உதவியா இருக்குமே என்று தோன்றியது. அதனால் இந்தப் பதிவு 🙂

ட்விட்டர் bio சுவாரசியமாகவும் உங்களைப் பற்றி மற்றவர் என்ன நினைக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறீர்களோ அதை சுருக்கமாக எழுதி வைக்கவும். ட்விட்டர் ஹென்டிலும் சின்னதாக இருத்தல் நலம். ஹென்டிலே 15 எழுத்துகள் இருந்தால் 140ல் 15 ஹென்டிலுக்கேப் போய்விடும்.

முதல் ரூல், ட்விட்டர் அக்கௌன்ட் திறந்த பிறகு கொஞ்ச காலம் மற்றவர் டைம் லைன் போய் ட்வீட்டுக்களைப் படித்து யார் யார் எப்படி ட்வீட்டுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். நமக்குப் பிடித்த மாதிரி ட்வீட்டுபவர்களை பாலோ செய்ய வேண்டும். பாலோ அன்பாலோ பட்டன் நம் கையில். யாரை பாலோ செய்யவும் அன்பாலோ செய்யவும் நமக்கு உரிமை இருக்கு.

முதலிலேயே நூறு இருநூறு பேர்களை பாலோ செய்யக் கூடாது. கொஞ்சம் பேரை பாலோ செய்து அவர்களுடன் உரையாட ஆரம்பிக்க வேண்டும். சும்மா ஹெலோ ஹாய் என்றெல்லாம் ட்வீட் போட்டால் யாரும் கண்டுக்க மாட்டார்கள். அவர்கள் போடும் ட்வீட்டுக்குத் தகுந்த பதில் சொல்ல முடிந்தால் அது அவர்களை உங்களுக்குத் திரும்ப பதில் அளிக்க வைக்கும். அதன் மூலம் ஒரு அறிமுகமும் நேசமும் உருவாகும்.

சிலர் ட்வீப்ஸ் ரொம்ப நல்லவர்கள், அவர்களை பாலோ செய்தவுடன் திரும்ப அவர்கள் பாலோ பேக் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களை பாலோ செய்வது ஆரம்ப காலத்தில் நமக்கு நல்லது. அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.

twitter1

அதே சமயம் நம் டைம்லைனில் (நேரக்கொடு) நாமும் புது ட்வீட்டுகள் போடுவது மிக அவசியம். யாரவது நம்மை பாலோ பண்ண விரும்பினால் நம் டைம்லைன் வந்து பார்த்து நம் ட்வீட்டுகளைப் படித்து, அவை பிடித்திருந்தால் தான் பாலோ செய்வார்கள். அதனால் சினிமா, நடிகர்கள், அரசியல், உள்நாட்டு, வெளிநாட்டுக் கலவரங்கள், பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு நிலவரங்கள், மதம், மொழி, இனம், அம்மா, அப்பா, தோசை, தோழி, காதல், தோல்வி, தத்துவம், கவிதை என்று உங்களுக்குப் பிடித்த தலைப்பில் 140 எழுத்துக்களுக்குள் உருப்படியாக ஏதாவது சொல்ல முயற்சி செய்யுங்கள். யாரையும் புண்படுத்தி ட்வீட் போட வேண்டாம். ஆனால் அப்படி போட்டும் மிகக் குறுகிய காலத்தில் பிரபலம் அடைவதும் இங்கே நடக்கிறது. அந்த சாய்சும் உங்களதே.

முதலிலேயே அதிக பாலோவர்களும் (தொடர்பவர்களும்) மிகக் குறைந்த பேரை பாலோ (தொடர்வோரும்) செய்பவர்களை (இவர்களுக்குப் பேர் ட்விட்டர் பிரபலங்கள்) பாலோ செய்ய வேண்டாம். ஏனென்றால் அவர்கள் நிச்சயம் உங்களை திரும்ப பாலோ செய்யப் போவதில்லை. அதனால் உங்கள் பாலோவிங் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பாலோவர் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும். இதனால் புதிதாக உங்களைத் தொடர நினைப்பவர் யாரேனும் உங்கள் டைம்லைன் வந்து பார்த்தால் என்ன இவர் நிறைய பேரை தொடர்கிறார் ஆனால் குறைந்த அளவில் தான் பாலோவர்ஸ் இருக்கிறார்கள் என்று உங்களை பாலோ செய்யாமல் போய்விடுவார்கள். அதனால் ஆரம்பித்திலேயே அந்த ratioவை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.

ட்விட்டரில் நிறைய சண்டைகள் நடக்கும். ராஜா ரஹ்மான் சண்டை, அஜித் விஜய் சண்டை, இது போல பல. இதை முதலில் தூர நின்றே வேடிக்கைப் பார்க்க வேண்டும். அருகில் சென்று கருத்துச் சொன்னால் எதிர் அணி உங்களை பீஸ் பீசாக்கி விடும். உங்களுக்கு நல்ல நின்று ஆடும் திறன் இருந்தால் நீங்கள் இந்த ஆட்டத்தில் கலந்து கொண்டு வெகு விரைவில் பாலோவர் எண்ணிக்கையைக் கூட்டலாம். பலரும் சண்டை போடுபவர்களை பாலோ செய்வதில் தான் அதிகப் பிரியம் வைக்கின்றனர்.

பாலோ செய்யும்போது யார் யாருடன் அதிகம் பேசுகிறார்கள் என்பதை கவனித்தும் அவர்களை மொத்தமாக பாலோ செய்யலாம். அதன் மூலம் அந்தக் குழுவில் இருக்கும் ஒருவர் நம்மை பாலோ பண்ண ஆரம்பித்தாலும் மற்றவர்களும் விரைவில் நம்மை பாலோ பண்ண வாய்ப்புள்ளது.

ட்வீட்டப் என்பது ட்விட்டரில் இருப்பவர்கள் ஒரு குழுவாக எங்காவது கடற்கரை, பூங்கா என்று நேரம் குறித்து வைத்து சந்தித்துக் கொள்வது. அதில் நேரடியாகப் பங்கேற்று நட்பு வட்டத்தை விரிவாக்கிக் கொள்ளலாம். அதன் மூலமும் பாலோவிங் எண்ணிக்கை உயரும். சிலர் சின்ன வட்டத்தை தான் விரும்புவார்கள். பெரிய பாலோவிங் எல்லாம் தேவை இல்லாமல் பிடித்த நட்புக்களை மட்டும் பாலோ செய்து தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

twitter3

நல்ல ட்வீப்புக்களை பாலோ செய்தால் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது. எவ்வளவு மன அழுத்தத்துடன் ட்விட்டருக்கு வந்தாலும் சிறிது நேரத்தில் ரிலேக்ஸ் ஆகிவிடலாம். ஆனால் அதே சமயத்தில் நமக்குப் பிடிக்காத ட்வீட்டுக்களை போடுபவர்களை பாலோ செய்தால் இரத்த அழுத்தம் எகிறவும் வாய்ப்புள்ளது.

பல சமயம் பல ட்வீட்டுக்கள் நம்மை வம்புக்கு இழுக்கும். பதில் சொல்ல கை பரபரக்கும். கண்டும் காணாமல் போவது சாலச் சிறந்தது. எதையும் லைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். சொல்வது எளிது, செயல் படுத்துவது கடினம். ஜாதி, மதம், பிடித்த நடிகர் பற்றிய நமக்குப் பிடிக்காத ட்வீட்டுகளைப் பார்க்கும்போது பதில் சொல்லாமல் போவது கோழைத் தனமாகத் தெரியும். அப்படியே பதில் அளித்தாலும் ஓரிரு உரையாடல்களுடன் முடித்துக் கொள்ளத் தெரிய வேண்டும். இல்லை என்றால் ட்விட்டரின் சுழலில் மாட்டிக் கொண்டு மீள்வது கடினம்.

வெளியில் வாழ்பவர்கள் தான் ட்விட்டரிலும் இருக்கிறார்கள். அதனால் அதே குண நலத்துடன் தான் இருப்பார்கள், கோபம், வெறுப்பு, பொறாமை, கிண்டல் நிறைந்தவர்களை தான் இங்கும் பார்ப்பீர்கள். என்ன எல்லாம் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கும் ஏனென்றால் anonymity. அதாவது முகமூடி – யாரென்று தன்னைக் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் வசதி இந்த ஊடகத்துக்கு உள்ளதால் சிலரால் அதிக வெறுப்பை உமிழ முடிகிறது. அந்த சமயத்தில் வேதனைப் படாமல் அப்படி நம்மை பாதிக்கும் எவரையும் ப்ளாக் (block) செய்து விட்டுப் போய் கொண்டே இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சு தான்.

ட்விட்டரின் சுவாரசியமே 140க்குள் நம் கருத்தைச் சொல்வது தான், வள வள என்று பேசாமல் நறுக் சுருக்காக எண்ணங்களை பகிர்தல்! உடனுக்குடன் பதில் அளிப்பதும், உலக அளவில் எங்கு என்ன நடந்தாலும் உடனே ட்விட்டரில் தெரிந்து சுடச் சுடத் தகவல் பரிமாற்றம் ஏற்படுவதும் தான் ட்விட்டர் இவ்வளவு பிரபலம் அடையக் காரணம்.

நாம் நினைத்தேப் பார்க்க முடியாத பல நல்லோரின் நட்பு இந்த சோஷியல் மீடியாவின் மூலம் கிடைப்பது நிச்சயம். நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். இலக்கியம், அரசியல் சார்ந்தவை, உலக நடப்புகள் பற்றிய அகலப் பார்வையும் அறிவும் இவ்வூடகத்தின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. அதனால் நல்லவைகளை எடுத்துக் கொண்டு அல்லாதவைகளைத் தவிர்த்து ட்விட்டரில் ஆனந்தமாய் இருப்போம் 🙂

twitter2