திருமண ஆல்பம்

wedding3

“மூணு லட்ச ரூபாய் போட்டோக்கும் விடியோக்கும் மட்டும்” என்று பெருமைப் பட்டுக் கொண்டாள் மேகலா. “அமெரிக்காவில் MS முடிச்சிட்டு அமேசான்ல செஞ்சுக்கிட்டிருந்த வேலையை விட்டுட்டு, இங்க வந்து இந்த மாதிரி போட்டோ எடுக்கிறான் இந்தப் பையன். இதுக்குப் பேரு கேண்டிட் போட்டோகிரபியாம், எப்படி சூப்பரா இருக்குப் பாரு”

தன் மருமகனைத் தான் இப்படி புகழ்கிறாள் என்று ஒரு நிமிஷம் ஏமாந்த ரமா பின் சுதாரித்து, போட்டோகிராபரைத் தான் மேகலா புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொண்டாள். ஒரொரு பக்கமாகப் புரட்டிய ரமா புகைப்படங்களின் அழகைப் பார்த்து மயங்கினாள். மேகலாவையே இவ்வளவு அழகாக எடுத்திருக்கிறானே என்று மனத்திற்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டு,  நிச்சயம் இவனைத் தான் தன் மகள் கல்யாணத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள் ரமா.

மேயர் கிருஷ்ணசாமி முதலியார் மண்டபம் அல்லது AMM  சர்வேச்வரி டிரஸ்ட் மண்டபம், இவை இரண்டில் ஒன்று தான் என்று திருமணத்துக்கு ஏற்கனவே அவள் முடிவு செய்து வைத்திருந்தாள். சமையலுக்கு இருக்கவே இருக்கிறார் அறுசுவை வேந்தர் சொக்கநாதர்.

ரிசெப்ஷன் கச்சேரிக்கு புல்லாங்குழல் ராஜேஷ். அவள் அத்தைப் பேரன் கல்யாணத்தில் அவனின் வாசிப்பைக் கேட்டாள், சினிமா பாடல்களும் கர்நாடக சங்கீதமும் இரண்டும் கலந்து அருமையாக வாசித்தான். அதனால் அவனும் fixed.

இன்னும் என்ன பாக்கி? மாப்பிள்ளை மட்டும் தான்! அவன் தான் இன்னும் சிக்கவில்லை. மகளுக்குப் பிடித்தா மாதிரி மாப்பிள்ளை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. பார்க்கும் வரன் எல்லாம் ஏதாவது காரணத்துக்குத் தட்டிப் போய் கொண்டே இருந்தது.

ஆனால் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதைத் தீவிரமாக நம்பினாள் ரமா. அதனால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல லேப்டாப்பை ஆன் செய்து தமிழ் மேட்ரிமோனியலில் இது வரை பார்க்காத வரன்களைத் தேடி சரியா இருக்கும் என்று தோன்றியதை ஷார்ட் லிஸ்ட் செய்து வைத்தாள்.

மாலை சஹானா ஆபிசில் இருந்து வந்தவுடன் ரமா, “சஹானா, டீ குடிச்சிட்டு வா. நான் ஷார்ட் லிஸ்ட் பண்ணி வெச்சிருக்கிற profiles எல்லாம் வந்து பாரு, ஏதாவது பிடிச்சிருக்கான்னு சொல்லு.” என்றாள்.

முகம் கழுவிக் கொண்டு வந்து அவள் அருகில் உட்கார்ந்த மகள், “அம்மா, நானே உங்கிட்ட சொல்லனும்னு இருந்தேன், இந்த மேட்ரிமோனியல்ல தேடறது எல்லாம் வேண்டாம் மா. எனக்கு ஒருத்தனை ரொம்பப் பிடிச்சிருக்கு மா. அவனுக்கும் என்னை” என்றாள் மெதுவாக.

அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, “யாரு அவன்? உன்னோட வேலை பார்க்கிறானா?” என்றாள் ரமா.

“இல்லம்மா, அப்பாக்கிட்டயும் உன் கிட்டயும் அதனால் தான் இத்தனை நாள் சொல்ல தயக்கமா இருந்துது. நீங்க IT கம்பெனில வேலை பார்க்கிற பையனா தேடிக்கிட்டு இருக்கீங்க. இவன் freelance photographer மா. என்ன சொல்லுவீங்களோன்னு பயந்து தான் இத்தனை நாள் சொல்லலை. ஆனா USல படிச்சு மாஸ்டர்ஸ் டிக்ரீலாம் வாங்கியிருக்கான் மா.”

“யாரு? மேகலா பொண்ணு கல்யாணத்துக்கு போட்டோ எடுத்தானே, அவனா?”

“அம்மா எப்படி மா உனக்குத் தெரியும்? யாருக்குமே எங்க லவ் மேட்டர் தெரியாதுன்னு நினச்சிக்கிட்டு இருந்தோம்!” மகிழ்ச்சியில் கட்டிக் கொண்டாள்.

சஹானா கல்யாணத்துக்கு போட்டோகிராபரா யாரை வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள் ரமா.

photographer

photo credits, with thanks : http://www.maharaniweddings.com/top-indian-wedding-vendor-platinum-blog/2014-12-31/5016-mahwah-nj-indian-wedding-by-house-of-talent-studio

http://www.toehold.in/photography-workshop-pune.php

காக்கா முட்டை – திரை விமர்சனம்

kaakkamuttai1

ரொம்ப நாள் கழித்து ஒரு சத்தான திரைப்படம். தயாரித்த தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். மேலும் இது போல நல்ல படங்களை அளிக்க வாய்ப்பும் கதையும் கிட்ட இப்படத்தை எழுதி இயக்கிய எம். மணிகண்டனுக்கும் வாழ்த்துகள்!

சேரியில் ஏழ்மையால் பள்ளிக்குச் செல்லாமல் கரி பொறுக்கி விற்கும் அண்ணன் தம்பி இருவரின் தாயார் சொல்லும் ஒரு வசனத்தின் மூலம் ஆச்சரியமாக அனைத்துப் பெற்றோர்களும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு கருத்தை அழகாக முன் வைக்கிறார் கதாசிரியர். “நான் உங்களை அடிக்கக் கூடாது என்று ஒரு பாலிசி வெச்சிருக்கேன், அடிக்க வெச்சிடாதீங்க” என்று சொல்வார். கதை முடியும் வரை அவர் அதை மீற சந்தர்ப்பம் வந்த போதிலும் அச் செயலை அவர் செய்யவில்லை. பலவிதப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒரு ஏழைப் பெண்ணால் அதை கடைபிக்க முடியும் போது மற்ற பெற்றோர்களால் கொஞ்சம் முயன்றால் முடியும் என்பதை கோடிட்டு காட்டிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கருவுக்கும் மேற் சொன்ன கருத்துக்கும் தொடர்பில்லை. எனினும், என் மனத்தில் தங்கிய  இச் செய்தி பலர் மனத்திலும் தங்கும் என்றே எண்ணுகிறேன்.

சிறுவர்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். இருவருமே மனத்தை கொள்ளை கொள்கிறார்கள். அதே மாதிரி ஆயாவாக வருபவரும், மற்ற பாத்திரங்களில் வருபவர்களும் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள். அதில் உச்சத்தில் நிற்பவர் சிறுவர்களுக்குத் தாயாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். எப்படி தான் இப்படி பொருந்தி நடித்தாரோ, நேரில் பார்த்தால் என் மகிழ்ச்சியை கட்டி அணைத்துப் பகிர்ந்து கொள்வேன் 🙂

படம் ஓடும் நேரம் 1௦9 நிமிடங்கள் தான். இப்படத்திற்கு இடைவேளை இல்லை. ஆனால் பாப்கார்ன், சோடா விற்பனைக்காக டக்கென்று ஓரிடத்தில் படத்தை நிறுத்துகிறார்கள். ஆங்கிலப் படம் போல் இடைவேளை இல்லாமல் தொடர்ந்து பார்த்திருந்தால் இன்னும் நன்றாக ரசித்திருக்க முடியும்.

நான்கு பாடல்கள் உள்ளன என்கிறது விக்கி. நான் இரண்டு பாடல்களை தான் கவனித்தேன். சுமார் ரகம் தான். ஆனால் பின்னணி இசையை நன்றாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவும் மணிகண்டனே. பிரமாதமாக செய்துள்ளார். முழுக்க முழுக்க குப்பத்தில் நடக்கும் கதை. எட்டுக்கு எட்டடி கூட இல்லாத வீட்டில் நடப்பதைக் காண்பிப்பதில் இருந்து சந்து பொந்துகளில் புகுந்து புறப்படுகிறது அவர் கேமரா. அற்புதமாக எடிட் செய்த கிஷோருக்கு இப்படத்தை சமர்ப்பித்து உள்ளார்கள். அவரின் அகால மரணம் தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பு.

‘கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்பதை நம்மை அழ வைத்தோ விசனப் படுத்தியோ காட்டாமல், யதார்த்தமாக – இன்னும் சொல்லப் போனால் நகைச்சுவையுடன் காட்டியிருப்பது தான் இப்படத்தின் வெற்றி. ஓரிடத்தில் கூட அதிகப்படியான வசனமோ காட்சி அமைப்போ இல்லை. படத்தில் வரும் அத்தனை குழந்தைகளும் குழந்தைகளாக இருப்பது படத்தின் இன்னொரு பலம்.

சிம்பு guest ரோலில் வருகிறார். ஸ்மார்டாக இருக்கிறார். நீங்க ஹீரோவா நடிச்சு ஏதாவது ஒரு படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க சார்!

பல வெளிநாட்டு, உள்நாட்டு விருதுகளை அள்ளியிருக்கிறது இப்படம். பெரும்பாலும் விருது பெறும் படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் படமாக இருக்காது. இப்படம் அந்த mythஐ தகர்க்கும் என்று நம்புவோமாக. நான் கண்டிப்பாக இன்னொரு முறை பார்ப்பேன் 🙂

kaakkamuttai