இஷ்கிடே ஷக் சத்தே கட கட். துரே சிக் மிக்கு பகு பக்கி. ஷிகர் சபர் டிஸ்க் டிஸ்க். இஸ்கு இஸ்கு!
பயப்படவேண்டாம். இப்படத்தில் கள்வர்கள் நாட்டு மக்கள் பேசுவதற்காகப் புதிதாக கார்க்கி இயற்றியதாகச் சொன்ன மொழியில் நானும் விமர்சனத்தை எழுத ஆரம்பித்தேன். என் மன நலமும் உங்கள் மன நலமும் கருதி தமிழுக்கு மாறிவிடுடேன்.
பிரபாஸ் நல்ல உயரம் உயரத்துக்கு ஏற்ற உடல் வாகு. இவர் முகத்துக்கும் உடல் வாகுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது அவரின் சிக்ஸ் பேக். சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். அவர் அடிக்கும் ஒவ்வொரு அடியும், விடும் ஒவ்வொரு அம்பும், சுழற்றும் ஒவ்வொரு கதையும் நின்னு விளையாடுகிறது. மற்றபடி நடிக்கத் தெரியவில்லை. மக்கு மாதிரி இருக்கிறார். ரானா டக்குபாட்டி சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்துக்கு ஏற்றத் தேர்வு! அவருடன் பிரபாசுக்கு நிறைய சீன்கள் இருப்பதால் நடிப்பில் வித்தியாசம் இன்னும் தூக்கலாகத் தெரிகிறது.
குழந்தைகளுக்கும் பாண்டஸி பிரியர்களுக்கும் இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும். முதலில் வரும் அருவிக் காட்சிகள் பிரம்மாண்டம். பிரபாஸின் பலத்தைக் காட்டும் அறிமுகக் காட்சிகள் அத்தனையும் அருமை! படம் முழுக்க இயற்கை காட்சிகள் அசத்தலாக இருக்கின்றன. எது உண்மை எது CGI என்று கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ள அளவு இரண்டும் அழகாக நெய்யப்பட்டுள்ளன. இக்கதை நடக்கும் நகரம் ராவணனின் அரண்மனையும் இலங்கையும் அந்த நாளில் எப்படி இருந்திருக்கும் என்று என் மனக் கற்பனையில் இருந்ததோ அந்த மாதிரி உள்ளது. அவ்வளவு பிரம்மாண்டம்!
ஒளிப்பதிவு செந்தில் குமார். அசுர உழைப்பு! CGயும் நடிகர்களையும் இணைத்துப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் பொழுது பெரும் பொறுப்பு ஒளிப்பதிவாளர் தோள்களில் தான் விழுகிறது. அதை சிறப்புடன் செய்துள்ளார். Editing கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ். அவரின் பங்களிப்பும் நன்று.
ரம்யா கிருஷ்ணனும் சத்யராஜும் படத்தைத் தாங்கும் இரு தூண்கள். உத்தமவில்லன்னுக்குப் பிறகு இன்னொரு ஐயோ பாவம் பாத்திரம் நாசருக்கு. ரோகிணியும் மற்ற நடிகர்களும் நன்றாக செய்துள்ளனர். அனுஷ்காவும் உள்ளார். இரண்டாம் பாகத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு இருக்கும் என்று நம்புவோமாக! தமன்னா வீராவேசமாக நடித்துள்ளார். இதுவரை ஏற்றிராதப் பாத்திரம். அழகில் துளியும் குறையில்லை 🙂 பிரபாஸுடன் ஒரு டூயட். அது தேவையில்லை என்றாலும் அவரின் ரசிகர்களுக்கு விருந்து.
இசை – மரகதமணி. மூன்று பாடல்களுக்குமே கதைக்குத் தேவை இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாகவும் இல்லை. உண்மையில் படத்தின் வேக ஓட்டத்துக்குத் தடையாக உள்ளன. அதிலும் ஒரு குத்துப்பாட்டு. ஷ்அப்பாடா என்றிருந்தது. நடனக் காட்சிகளில் தெலுகு வாசனை தூக்கல்! பின்னணி இசை சில இடங்களில் அற்புதம், சில இடங்களில் ஹைதிராபதி ஹோட்டல்களில் பேக்கிரவுண்டில் இழையோடும் instrumental இசை போல் இருந்தது.
சண்டை காட்சிகளின் பிரம்மாண்டம் நேரில் பார்த்தால் தான் தெரியும். அவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார்கள். அதிலும் கதை (mace) ஷாட்புட் இரும்பு குண்டு மாதிரி சங்கிலியோடு இணைந்து எதிரியைத் தாக்கி பின் ஹீரோ கைக்கே வரும் அழகு சூப்பர்.
ஆனால் கதையுடன் என்னால் ஒட்டமுடியவில்லை. சேர, சோழ, பாண்டியர், முகலாய, ராஜபுத், அல்லது ஆங்கிலேய அரசு சார்ந்த உண்மையான கதைகளை ஒட்டி இப்படம் எடுக்கப்பட்டிருந்தால் மிகவும் சுவாரசியமாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். இதில் சொல்லப்படும் ஊரும், எதிரிகளும், சண்டைகளும் Lord Of The Rings வகை fantasy ரகம். அவைகளை விரும்புவபர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.
இதுவரை இந்திய சினிமாக்களில் மிகவும் பணச் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படம் இது என்று wiki சொல்கிறது (250 கோடி ரூபாய்). ராஜமௌலியின் இயக்கம், திரைக்கதையில் வந்துள்ள மிகப் பெரிய பட்ஜெட் படம். சிரத்தையுடன் எடுத்துள்ளார். அதற்கு அவரை மனப்பூர்வமாகப் பாராட்ட வேண்டும். இதன் இரண்டாம் பாகம் 2016ல் வெளியாகும் என்று சொல்லப் படுகிறது. அதனால் இப்படம் முடியும் போது க்ளைமேக்ஸ் இருக்கிறது ஆனால் இல்லை.
Jul 13, 2015 @ 14:06:23
அருமை நன்றி சகோதரி
Jul 13, 2015 @ 14:32:57
என் பசங்க மிகவும் அனுபவித்து பார்த்தார்கள். அவர்களுடன் நானும் ரசித்து பார்த்தேன். நீங்க சொன்ன மாதிரி Fantasy படம் ரசிப்பவர்களுக்கு, மிகவும் பிடிக்கும். எனக்கு Lord of the rings போன்ற fantasy படங்கள் பிடிக்காது ஆனால் ராஜா பின்னணியில் வரும் fantasy படங்கள் பிடிக்கும். மொத்த படத்திலும் ஒரு நேர்த்தி இருந்தது அதான் இந்த படத்தின் பலம் மற்றபடி நம்ம இயக்குநர்கள் ராஜா காலத்து படத்திற்கு எடுக்கும் கதையில் இன்றும் வித்தியாசமாக யோசிக்க மாட்டேங்கிறாங்க.
Jul 13, 2015 @ 14:43:52
நீங்க சொன்னது மிகச் சரி. நானும் பிரபாஸின் நடிப்பைப் (?) பார்க்கும் போது அதைதான் நினைத்தேன்.//பிரபாஸ்க்கு பதில் விக்ரம் நடித்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்..
Jul 14, 2015 @ 07:16:10
வழக்கம்போல பாராட்ட வேண்டிய இடத்தில பாராட்டி, குட்ட வேண்டிய இடத்தில குட்டி இருக்கீங்க :))
அதுதான் ஒத்த வரியில சொல்லிட்டீங்களே
“குழந்தைகளுக்கும் பாண்டஸி பிரியர்களுக்கும் இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்”
நன்றி சிரத்தை எடுத்து எங்களுக்கா விமர்சனம் செய்ததற்கு 🙂
Jul 14, 2015 @ 07:24:33
கதைக்காகப் படங்கள் வரும். இசைக்காக படங்கள் வரும். நடிப்புக்காக படங்கள் வரும். நடிகர்களுக்காகப் படம் வரும். நடிகைகளுக்காகப் படம் வரும். ஆனா இது மேக்கிங்க்காக வந்த படம்.
கதைன்னு ஒன்னும் இல்லை. ஆனா படத்தைத் தியேட்டர்லதான் பாக்கனும். நான் தப்பு செஞ்சிட்டேன்.
சத்தியராஜுக்கும் ரம்யாகிருஷ்ணனுக்கும் நல்ல வாய்ப்பு. அடிச்சு தூள் பறத்திருக்காங்க.
கள்வர்களுக்கான பாஷையெல்லாம் தேவையே இல்லாதது.
Jul 18, 2015 @ 15:23:00
நன்றி தமிழச்சி, தேவா, ஆசிப், சின்னப்பையன், ஜிரா 🙂
Jul 26, 2015 @ 14:29:23
செட்டிங்க்ஸ் ஓரளவுக்குத் தெரிந்தது..பிரபாஸ் ,ரானா கருத்துகளுக்கு உடன்படுகிறேன்..வில்லனுக்குள் தீ கனன்று கொண்டே இருக்கும்..இவரிடம் விளையாட்டுப் பிள்ளைத் தனமே இருக்கும்..எனக்கு நாகார்ஜுனாவை நினைவூட்டுகிறார் பிரபாஸ்.. ரம்யா தான் கதைக்கு முதுகெலும்பு போல..அவரின் கம்பீரமும் உடல் மொழியும் வசன உச்சரிப்புகளும் வெகுவாகக் கவர்ந்தன..நாசரும் சத்யராஜும் தங்கள் பணியைச் செவ்வனே செய்துள்ளனர்..வேற்று மொழிக் காரர்கள் நம் ஆட்களின் திறமையை மதித்து நடிக்க வைப்பது மிகவும் மகிழ்ச்சியே..அடுத்த பாகத்தில் அனுஷ்காவின் நடிப்பைப் பார்க்க ஆவலாய் உள்ளேன்.. சேரன் சோழன் என்று தொடாமல் இப்படி தொட்டதே அவங்களுக்கு safety ஏன்னா வரலாறு தெரியாம உளறக் கூடாது இல்லையா ?:) இந்தப் படம் போல அஞ்சு நிமிஷம் கூடப் பார்க்க முடியாம போகும் வழக்கமான தெலுங்குப் படம் போல இல்லாததாலேயே பார்க்கலாம் ன்னு தோனுச்சு
Jul 30, 2015 @ 14:25:02
லாஜிக் பார்க்காமல் , சிற்சில சொதப்பல்களை பொறுத்துக்கொண்டால் போதும் . படம் சூப்பர் ! first class ! போர்க்காட்சிகள் மிகமிக அற்புதம் . பாகுபலியாக பிரபாஸ் மிக அற்புதமான தேர்வு . அழகும் கம்பீரமும் இணைந்த வசீகரமான நாயகன் .