நானும் ரவுடி தான் – திரை விமர்சனம்

 

 

nrd2

கஜனி படத்தில் அசின் மூணு அம்பாசடர் கார் வாங்கிய பின் தான் திருமணம் என்று சூர்யாவிடம் தன் சபதத்தைச் சொல்வது போல இங்கு நயனும் விஜய் சேதுபதியிடம் அவர்களின் காதல் நிறைவேற ஒரு வித்தியாச விண்ணப்பம் வைக்கிறார். படம் காமெடி என்பதால் மிகவும் ரசித்துப் பார்க்க முடிகிறது. பல இடங்களில் சிரித்து சிரித்து சற்றே வயிறு வலியும் வருகிறது 🙂

இயக்குநர் கையில் தான் நடிகர்கள் பங்களிப்பு பிரகாசிப்பது உள்ளது என்பது இப்படத்தின் மூலம் இன்னொரு முறை நிருபணம் ஆகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரிடம் இருந்தும் நல்ல நடிப்பை வாங்கியிருக்கிறார். கூட நடிக்கும் ஆர்ஜே பாலாஜியும் அவரின் பாத்திரத்திற்கு வெகு பொருத்தம். ஒவ்வொரு படத்துக்கும் விஜய் சேதுபதிக்கு வித்தியாசமான வேடம் கிடைப்பது/தேர்ந்தெடுப்பது அவர் கெரியரை சிறப்பாக்குகிறது. இதில் தாடி இல்லாமல் இளமையாகக் காட்சி அளிக்கிறார். தாடியை எடுக்க வைத்த இயக்குநருக்குப் பாராட்டுகள் 🙂

நயனுக்கு நல்ல பெர்பார்ம் பண்ணக் கூடிய ரோல். சோகம், இயலாமை, கெத்து, காதல், வெகுளித்தனம், வைராக்கியம் என்று பலதும் காட்டக் கூடிய ஒரு பாத்திரம். இப்போ தமிழ் சினிமாக்களில் ஹீரோயினுக்கு எங்கே நடிக்க வாய்ப்பு உள்ளது! நாலு நடனம், நாலு வசனம் அவ்வளவே! ஆனால் இந்தப் படத்தில் ரெகுலரா வரும் டூயட் கூட இல்லை.

இப்படத்தில் பின் பாதியில் வரும் ஹீரோவுக்கு உதவும் கதாபாத்திரங்கள் செம ரகளை ரகம். அதில் ஒரு தாத்தா பெயர் ராகுல்! அவர் செய்யும் காமெடியும் நேர்த்தி! 🙂 வில்லன் பார்த்திபன். நல்ல சாய்ஸ்! அவரும் ரொம்பக் கோணங்கி பண்ணாமல் வில்லனாக நடித்திருக்கிறார். ராதிகா விஜய் சேதுபதியின் அம்மாவாக வருகிறார். பெரிய ரோல் இல்லை. படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை எந்தப் பாத்திரத்தின் தன்மையையும் மாற்றாமல் கதையைக் கொண்டு செல்வது இப்படத்தின் வெற்றிக்குக் காரணம். அது தான் நம்மை படத்தை அங்கு ரசிக்க வைக்கிறது. எப்படியாப்பட்ட சொங்கி ஹீரோவும் கடைசியில் வில்லனை ஒரு கை பார்ப்பான். அதெல்லாம் இப்படத்தில் இல்லை. விஜய் சேதுபதி முதலில் இருந்து கடைசி வரையில் ஒரே மாதிரி வருகிறார்.

பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே ரொம்ப நன்றாக உள்ளன. அனிருத் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். படம் முடிந்த பிறகும் கிரெடிட்சுடன் தொடரும் பகுதியைக் கத்திரித்து விடலாம். படத்துக்குத் தேவையே இல்லை. சற்று எரிச்சலைத் தருகிறது. படத்தின் நடுவிலும் சில இடங்களில் தொய்வு உள்ளது.

பாண்டிச்சேரியில் தான் பெரும்பாலுமானக் கதை நடப்பதால் படம் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. ரொம்ப சிம்பிள் படம், லோ பட்ஜெட். நயன்தாரா தவிர பெரிய தொகை வாங்கும் கலைஞர்கள் படத்தில் இல்லை. அதனால் தனுஷுக்கு படத் தயாரிப்பு நன்றாக கை வந்திருக்கிறது என்று சொல்லலாம். வாழ்த்துகள் “நானும் ரவுடி தான்” டீமுக்கு 🙂

Naanum-Rowdy-Thaan-Movie-Posters-2

காசு பணம் துட்டு மணி மணி – சிறுகதை

wheelchair

வெறித்தப் பார்வையுடன் வீல் சேரில் உட்கார்ந்து இருக்கும் கணவனைப் பார்த்தாள் விமலா. சுற்றிலும் மனித நடமாட்டம் நின்று போய் ஒரு சுழல் காற்றில் அவளும் சுரேந்தரும் மட்டும் சிக்கிக் கொண்டது போல் செயலற்று நின்றாள். சுரேந்தரைக் கொண்டு வந்து விட்டவன் இவளிடம் அவசர அவசரமாக சில காகிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டான். எதற்குப் போடுகிறோம் ஏன் போடுகிறோம் என்று தெரியாமல் கையெழுத்துப் போட்ட அவளிடம் அவன், “நான் ரிடர்ன் பிளைட்டிலேயே மலேசியா போறேன் மேடம், பார்த்துக்கங்க” என்று சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினான்.

“சார் என்னாச்சு இவருக்கு? ஏன் இப்படி இருக்கிறார், சொல்லிட்டுப் போங்க” என்று அவன் சட்டையைப் பிடித்தாள் விமலா.

சட்டையிலிருந்து அவள் கைகளை விலக்கி, “தெரியாது மேடம், காலையில வேலைக்கு வரலையேன்னு என்னை அவர் ரூமுக்குப் போய் பார்க்க சொன்னாங்க, இப்ப இருக்கிறா மாதிரியே இருந்தாரு. அதுக்கப்புறம் அங்கப் பக்கத்துல இருக்கிற டாக்டர் வந்து பார்த்துட்டு, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணனும்னு சொன்னாரு. ஹைதிராபாத் ஆபீசுக்குத் தகவல் சொன்னோம். அவங்க அங்கெல்லாம் அட்மிட் பண்ண வேண்டாம், அவர் பழைய கேஸ் ஹிச்டரி எல்லாம் நமக்குத் தெரியாது. அதனால உடனே சென்னைக்குக் கூட்டிப் போய் உங்க கிட்ட ஒப்படைக்கச் சொல்லிட்டாங்க. உங்களையும் ஏர்போர்ட்டுக்கு வரச் சொல்லிடறோம்னு சொன்னாங்க. எனக்கு வேற எதுவும் தெரியாதுங்க” என்றான்.

“ஏங்க, எந்த மருத்துவ உதவியும் கொடுக்காமையா கூட்டிக்கிட்டு வந்தீங்க?” கசங்கிய சட்டையும் சாய்ந்தத் தலையுமாக உட்கார்ந்திருந்த கணவனைப் பார்த்து அடக்க முடியாமல் கோபமும் அழுகையும் ஒருசேர வந்தது விமலாவுக்கு. அவனோ பதில் சொல்லக் கூட நிற்காமல் அந்த இடத்தைவிட்டுக் காணாமல் போயிருந்தான். சுற்றி இருந்த மனிதர்களும் விமான நிலைய இரைச்சலும் திடீரென்று இவள் முகத்தில் ஓங்கி அறைவது போலத் தோன்றியது. முதலுதவிக்கு விமான நிலையத்தில் இருந்தவர்களை அணுகினாள். அவர்கள் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்தார்கள். உடனே பாரதி ராஜா மருத்துவமனைக்கு விரைந்தாள். ஆம்புலன்ஸ் பயணத்தின் போது அவன் கண்களை மூடி உறங்கிக் கொண்டு வருவது போலத் தோன்றியது. ஒரு பேச்சுமில்லை அவனிடம் இருந்து. மருத்துவமனையில் நேராக அவனை ICUவுக்குக் கொண்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த ஒரு மருத்துவர், “அவருக்கு எதோ பெரிய ஷாக் ஏற்பட்டிருக்கணும். அல்லது நினைவுகளை பாதிக்கிற அளவு ஏதாவது சாப்பிட்டிருக்க வேண்டும். மெண்டல் பிரேக் டவுன் ஆகியிருக்கு. என்ன காரணம்னு செக் பண்ணா தான் தெரியும். உயிருக்கு ஆபத்தில்லைம்மா கவலைப் படாதீங்க. இப்போ நான் கேக்கிற கேள்விக்கெல்லாம் விளக்கமா பதில் சொல்லுங்க” என்று விரைவாக பல கேள்விகள் கேட்டு அவருக்குத் தேவையானவற்றைத் தெரிந்து கொண்டார்.

நடு இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஹாஸ்பிடல் நெடியும் பயமும் சேர்ந்து குமட்டிக் கொண்டு வந்தது விமலாவுக்கு. மலேசியாவுக்குப் போகவே விருப்பம் இல்லாத சுரேந்தரைப் பிடித்துத் தள்ளியது இவள் தானே? எத்தனை முறை அவனை நச்சரித்திருப்பாள்! அவனை வாட்டும் சொற்களைக் கொட்டிய வாய் இன்று கேவலை அடக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது..

“எவ்வளவு நாளு தான் எடுத்துக்கப் போறீங்க முடிவு பண்ண? இங்க வாங்கினதை விட மூணு மடங்கு அதிக சம்பளம் கொடுக்கறாங்க. உங்களுக்கு வேலை போய் நாலு மாசம் ஆகுது, இன்னிக்கு வரைக்கும் இன்டர்வியு போறீங்களே தவிர வேலை ஒண்ணும் கிடைக்கலை. மலேசியா போய் வேலை செய்ய என்ன கஷ்டம் உங்களுக்கு?”

“இல்லை விமலா, உன்னையும் குழந்தைகளையும் விட்டுட்டுப் போகணுமா? நீயோ பேங்க்ல வேலை செய்யற, அதையும் விட மாட்ட. நீ இங்கேயும் நான் அங்கேயும்னு எவ்வளவு நாள் இருக்க முடியும்? நான் போற இடம் மலேசியாவில் பெரிய நகரத்துல கூட இல்ல. சின்ன ஊர். ஹெட் ஆபிஸ் ஹைதிராபாத்தில் இருக்கு. இந்தக் கம்பெனியை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. எனக்குத் தெரிஞ்சவங்க யாரும் அங்க வேலை பார்க்கலை.”

“நீங்க என்ன கல்யாணம் கட்ட பொண்ணு பாக்கறீங்களா இல்லை வேலைக்குப் போக கம்பெனி தேடறீங்களா? எதுக்கு யாரையும் தெரிஞ்சிருக்கணும். ஒரொரு வேலைக்கும் உங்களை புடிச்சுத் தள்ள வேண்டியிருக்கு. சிவில் இஞ்ஜிநீயரிங் படிச்சிருக்கீங்கன்னு எங்கப்பா கட்டிக் கொடுத்தாரே, அவரை சொல்லணும்.” தேளாகக் கொட்டினாள்.

அடிபட்டவனாக அவன் அவளைப் பார்த்து, “கொஞ்சம் பொறுமையா இரு விமலா, நிச்சயமா சென்னையிலேயே வேலை கிடச்சிடும்.”

“இப்படியே தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இதோ அதோன்னு நாலு மாசம் ஆச்சு. பழைய கம்பெனியிலேயே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்துருந்தீங்கன்னா வேலையே போயிருக்காது. அவங்க பண்ற கலப்படத்துக்கு நான் எப்படி உடந்தையா இருக்க முடியும், நேர்மை நியாயம்னு GM கிட்ட சண்டை போட்டீங்க, அவங்க போயிட்டு வான்னு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.” வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சினாள்.

அவள் தொணதொணப்புக்குப் பலன் கிடைத்திருந்தது. ரெண்டு நாள் கழித்து மாலை அவள் ஆபிசில் இருந்து வந்தவுடன், “அவங்கள்ட்ட பேசிட்டேன் விமலா. ஒரு வாரத்துல வீசாக்கு ஏற்பாடு பண்ணிடறதா சொன்னாங்க. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை சென்னை வந்து போக அவங்களே டிக்கெட் தருவாங்களாம். ரெண்டு வார லீவில் வந்து போகலாமாம்” என்றான்.

மகிழ்ச்சியுடன் அவனை ஆணைத்துக் கொண்டாள். எல்லாம் விரைவில் நடந்தது. கிளம்பும் போது இவனுக்கு தான் கண்களில் நீர் தளும்பியது. விமலாவோ அவன் ஆறு மாதத்தில் வரும்போது என்னல்லாம் வாங்கி வரச் சொல்லவேண்டும் என்று மனத்தில் ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொண்டிருந்தாள். விமான நிலையத்தில் குழந்தைகளை கட்டியணைத்து ரெண்டு கன்னத்திலேயும் மாறி மாறி முத்தமிட்டுக் கிளம்பினான்.

fatherchild

கோலாலம்பூர் போய் அங்கிருந்து பஸ்ஸில் கோலா கங்சர் போகவேண்டும். நாலு மணி நேர பேருந்து பயணத்தின் பின் அவன் சென்றடைய வேண்டிய ஊர் போய் சேர்ந்தான்.

அங்கு வரவேற்க கம்பெனியை சேர்ந்த அகௌன்ட்ஸ் மேனேஜர்  ஜெயகிருஷ்ணா வந்திருந்தார். அவர் முன்பே தொலைபேசியில் பேசியிருந்ததால் அவரை சந்தித்து அவருடன் காரில் அவர்களுக்கான இருப்பிடத்திற்குப் போனார்கள். அவர் தெலங்கானாவை சேர்ந்தவர், அந்த ப்ராஜெக்டில் ஆரம்பித்த நாள் முதல் இருப்பவர், என்று பேசியதில் தெரிந்து கொண்டான். அவர் அவனுக்காகவும் சமைத்து வைத்திருந்தார். அவர் ரூமிலேயே அவன் உணவருந்திய பின் அவனுக்கான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் ரூமில் இருந்து இரண்டு அறைகள் தள்ளி சுரேந்தருக்கான ரூம்.

house2

ஒரு பெரிய ஹாலிடே ரிசார்ட் கட்டும் பணி இவர்கள் கம்பெனிக்குக் கிடைத்திருந்தது. அழகிய கங்ஸர் நதிக்கு எதிரில் மிக நவீனமான அடுக்கு மாடி கட்டடம், ஒரு படுக்கை அறை அல்லது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சிறு பயண விடுதிகள் கட்டும் பணி. அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பழைய ப்ராஜெக்ட் இஞ்சினீயர் வேலையை விட்டதால் சுரேந்தர் அந்த இடத்திற்கு நியமிக்கப் பட்டிருந்தான். ஊரில் இருந்து சிறிது தொலைவில் தான் இந்த கட்டடம் எழும்புவதால் அவர்கள் தங்கும் இடமும் சைட்டுக்கு அருகிலேயே அமைக்கப் பட்டிருந்தது.

house1

இரவு விமலாவிடம் மகிழ்ச்சியாகப் பேசினான். அவளுக்கோ இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கே இவன் போய் இடம் பிடிக்கவில்லை என்று சொல்வானோ என்று பயந்து கொண்டிருந்தாள்.

ரெண்டு வாரம் போயிருக்கும் நடு இரவில் போன் வந்தது. படபடப்புடன் போனை எடுத்தாள். “விமலா நான் திரும்பி வந்துடறேன். இங்கே நிலைமை ரொம்ப மோசமா இருக்கு” சுரேந்தர் நடுங்கியக் குரலில் சொன்னான்.

“ஐயோ என்ன விஷயம்? இப்படி நடு ராத்திரியில் போன் பண்றீங்க?”

“இப்போ தான் பண்ண முடிஞ்சிது. இங்கே கன்ஸ்டிரக்ஷனில் பயங்கர தில்லு முல்லு நடக்குது. அக்கவுண்ட்ஸ் மேனேஜர் கட்டுமான வேலைக்கு வாங்காத சாமானுக்கெல்லாம் வாங்கியதாக என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கிறான். நான் ஹைதிராபாத்தில் மேலதிகாரிக்குத் தகவல் சொல்வேன் என்றால், எல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சு தான் நடக்குது. ஒழுங்கா கையெழுத்துப் போடு இல்லேனா முந்தின ப்ராஜெக்ட் மேனேஜருக்கு ஆன கதி தான் உனக்குன்னு மிரட்டுறான். முந்தின ப்ராஜெக்ட் மேனேஜருக்கு என்ன நடந்ததுன்னு யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க. நாலஞ்சு பேர் தான் இந்தியாவில் இருந்து வந்து வேலை பார்க்கிறாங்க. அவங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்காங்க. மத்தவங்க எல்லாம் மலாய்காரங்க, சைனீஸ். அவங்கள்ட்ட என்னால எதுவும் கேக்க முடியலை.”

“என்னங்க, போய் ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ளே இப்படி குண்டை தூக்கிப் போடறீங்களே.”

“இங்க இருக்கிற நிலைமை புரிஞ்சிக்காம இப்படி பேசறியே விமலா, நான் இப்போ அங்கே திரும்பி வரணும்னா கூட வரமுடியாதபடி அவங்க என் பாஸ்போர்ட்டை எல்லாம் வாங்கி வெச்சிருக்காங்க. நானே என்ன பண்றதுன்னு தெரியாம உன்கிட்ட யோசனை கேக்க போன் பண்ணா நீயும் இப்படி சொல்றியே” எரிச்சலுடன் போனை வைத்து விட்டான்.

விமலாக்குப் பிறகுத் தூக்கமே வரவில்லை. கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது. ஏதாவது பிரச்சினை என்றால் அவனுக்கு உதவியாக இருக்க அங்கு தெரிந்தவர்கள் கூட யாருமே இல்லையே என்று அப்பொழுது அவளுக்குத் தோன்றியது. அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு அவனுக்குப் போன் போட்டு பேசினாள்.

“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருங்க. ஒரு ஆறு மாசம் கழிச்சு வருவீங்க இல்ல அப்போ திரும்பி போகாம இருந்திடுங்க. எல்லா இடத்திலேயும் தான் கணக்கு வழக்குல மோசடி பண்றாங்க.”

“விமலா உனக்குப் புரியலை. இவங்க பெரிய மோசடியா பண்றாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு நான் கட்டுமானத்துக்கு எடுத்துக் கொள்ளும் இரும்பு ராடுகள், செங்கல், சிமெண்டு மூட்டைகள் கணக்கை என் கம்பியுட்டரில் தனியா நோட் பண்ணிக்கிட்டு வரேன். ஆனா அவங்களுக்கு நான் இது மாதிரி பண்றது தெரிஞ்சாக் கூட எனக்கு ஆபத்து தான்.”

இதை கேட்டதில் இருந்து விமலாவுக்கு உண்மையிலேயே குலை நடுங்க ஆரம்பித்து விட்டது. அடுத்து வந்த நாட்களில் அவன் பக்கத்தில் வேறு யாரோ இருந்தால் அவளுடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்தான். அதனால் அவன் கூப்பிடும் போது மட்டுமே அவளால் பேச முடிந்தது.

கடைசியா அவனுடன் பேசி ரெண்டு நாள் ஆகியிருக்கும். அன்று மத்தியானம் ஹைதிராபாதிலிருந்து “சுரேந்தருக்கு உடல் நிலை சரியில்லை, அதனால் சென்னைக்கு ஒருவர் துணையுடன் அனுப்பி வைக்கிறோம்” என்று போன் வந்தபோது கூட இந்த நிலைமையில் கணவனைப் பார்ப்போம் என்று அவள் நினைக்கவில்லை.

விடிகாலையில் அவளிடம் வந்து டாக்டர், “நாங்க செடடிவ் கொடுத்துத் தூங்க வச்சிருக்கோம் மா. அது தான் இப்போதைய நிலைமைக்கு சிறந்த நிவாரணி. நீங்க வீட்டுக்குப் போயிட்டு குளிச்சு சாப்பிட்டுட்டு வாங்க, காலையில் ஒரு EEG எடுப்போம். வேற டெஸ்டுகள் பண்ணுவோம். இன்னிக்கு முழுக்க அவரை செடெஷனில் தான் வைத்திருப்போம். கவலைப் படாம வீட்டுக்குப் போயிட்டு வாங்க” என்றார்.

வீட்டுக்குப் போய் திரும்பி வந்த பின் டாக்டரைப் சந்தித்தாள். “அவரை அட்மிட் பண்ணவுடனே பிளட் சாம்பிள் எடுத்து டெஸ்டுக்குக் கொடுத்து ரிசல்டும் வந்திட்டுது மா. அவர் இரத்தத்தில் ஒரு வித விஷத் தன்மை கலந்திருக்கு. அவர் இப்போ உயிருடன் இருப்பதே நீங்க செய்த அதிர்ஷ்டம் தான். அவர் மூளைக்கும் பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு. விஷத்தன்மையைப் போக்க மருந்து ட்ரிப்சில் கொடுக்க ஆரம்பித்து விட்டோம். கொஞ்ச கொஞ்சமாகத் தான் ரிகவரி இருக்கும். மெதுவாக அவர் நிலை சீரடைந்து நினைவும் திரும்பும். நீங்க பொறுமையா இருக்கணும். அவர் நல்ல முறையில் பேச ஆரம்பித்த பிறகு தான் என்ன நடந்ததுன்னு கேட்டுத் தெரிஞ்சிக்க முடியும்.” என்றார்.

ஒரு வாரம் ஒரு யுகமாகக் கழிந்தது. கண் விழிப்பதும் உறங்குவதுமாக இருந்தான். அவளைப் பார்த்தும் ஏதும் பேசவில்லை, சிரிக்கவில்லை. டாக்டர் குழந்தைகளை அழைத்து வரச் சொன்னார். குழந்தைகளைப் பார்த்ததும் முதல் முறையாக லேசாக மலர்ந்தது முகம். கைகளை நகர்த்தி குழந்தைகள் கைகளைப் பிடித்துக் கொண்டான். கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது விமலாவுக்கு.

fatherdaughter

போஸ்டில் ஒரு செக்கும் வேலையை விட்டு சுரேந்தரை நீக்கியதற்கானக் கடிதமும் வந்து சேர்ந்தது. அவன் உடல் நலமின்மையையைக் காரணம் காட்டி வேலை நீக்கம் செய்திருந்தார்கள். இதை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை விமலா. அவர்களின் ஆபிசுக்குப் போன் பண்ணி பேசினாள். HRல் ஒருவர் “நீங்க இது மாதிரி உடல் நலக் கோளாறு முன்னமே இருந்ததுன்னு எழுதி கொடுத்திருக்கீங்களே மேடம். எப்படி அவரை கன்ஸ்டிரக்ஷன் சைட்டில் வேலைக்கு வெச்சுக்க முடியும்? அவர் திடீர்னு மயங்கி விழுந்தா நாங்க பொறுப்பேத்துக்க முடியுமா சொல்லுங்க?” நறுக்குத் தெரித்தாற் போலக் கேட்டார்.

“சார், இதுக்கு முன்னாடி அவருக்கு இந்த மாதிரி வந்ததே இல்லை. நானே பயங்கர ஷாக்கில் இருக்கேன். மலேசியாவில் தான் ஏதோ நடந்திருக்கணும். நீங்க தான் மருத்துவ செலவை எல்லாம் ஏத்துப்பீங்கன்னு நினச்சேன், இப்படி வேலையை விட்டே அனுப்பிட்டீங்களே சார். காண்டிரேக்ட் எல்லாம் போட்டு தானே வேலைக்கு எடுத்தீங்க?”

“மேடம், நீங்களே ஏர்போர்டில் எங்க ஆபிசரிடம் இவருக்கு இது மாதிரி உடல் கோளாறு முன்பே இருந்ததுன்னு எழுதி கொடுத்திருக்கீங்க, இப்ப இப்படி சொல்றீங்களே?” தெளிவாகப் பேசினார் எதிர் முனையில் இருப்பவர்!

சகலமும் புரிந்தது விமலாவுக்கு. சூழ்ச்சியுடன் நடந்து கொள்வது அந்த கம்பெனிக்குப் புதுசு இல்லை என்று தெரிந்து கொண்டாள். இனிப் பேசி பிரயோஜனமில்லை.

மெல்ல மெல்ல சகஜ நிலைமைக்குத் திரும்பி வந்தான் சுரேந்தர். பழைய நினைவுகள் கூடிய விரைவில் திரும்பி விடும் என்று டாக்டர் நம்பிக்கை அளித்ததில் இரண்டு வாரத்தில் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டாள்.

திடீரென்று ஒரு நாள் “விமலா நான் கூல்ட்ரிங்க் குடிச்சப் பிறகு எனக்கு என்ன நடந்துதுன்னே தெரியலை” என்றான். மலேசியாவில் நடந்தது அவனுக்கு நினைவுக்கு வருவது கண்டு மனம் நெகிழ்ந்து, “எதை பத்திச் சொல்றீங்க?” என்று அருகில் அமர்ந்து கேட்டாள்.

“அந்த ஜெய கிருஷ்ணா அவன் ரூமுக்கு வான்னு என்னைக் கூப்பிட்டான். எனக்குப் போகவே பயமா இருந்தது. முந்தின நாள் தான் என் லேப் டாப்பை என் அறைக்கு வந்து யாரோ பயன்படுத்தின மாதிரி எனக்கு ஒரு சந்தேகம், ஏன்னா டேபிள் மேல பேப்பர்ஸ் கலஞ்சு இருந்தது. அதனால் நான் கம்பியுட்டரில் கணக்கு வச்சிருப்பதைக் கண்டுபிடிச்சிருப்பானோன்னு நினச்சு, உடம்பு சரியாயில்லை அப்புறம் வரேன்னு சொன்னேன். ஆனா அவனோ ஒரு அஞ்சு நிமிஷம் தான் வந்துட்டுப் போன்னுச் சொன்னான். போனவுடன் ஒரு கிளாஸ்ல ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தான், நானும் தாகமா இருந்துதுன்னு உடனே குடிச்சிட்டேன். அதுக்கு அப்புறம் எனக்கு இங்கே ஆசுபத்திரியில் தான் கொஞ்சம் கொஞ்சமா நினைவு வந்தது. எப்படி சென்னை வந்தேன்னு ஒண்ணுமே ஞாபகமில்லை.”

அவனை ஏர்போர்டில் பார்த்தபோதே அவன் பெட்டியோ லேப்டாப்போ ஒண்ணுமே கொண்டு வரவில்லையே என்று விமலா நினைத்தாள். ஆனால் அவன் உடல் நிலை சரியாகித் திரும்பிப் போவான் என்று நினைத்ததால் அதைப் பற்றி வந்தவனிடம் கேட்கவும் இல்லை, அதை கேட்கும் நிலையிலும் அவள் இல்லை.

சுரேந்தர் மெல்ல மீண்டு பெரிய வேலை இல்லையெனினும் ஒரு சின்ன கம்பெனியில் பிடித்த வேலையில் சேர்ந்தான். ஏமாற்றப் பட்டதால் மனத்தில் ஏற்பட்ட வடு மட்டும் காயம் ஆறாமலே தான் இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தமிழ் தினசரியில் நாலாவது பக்கத்தில் “மலேசியாவில் ஹாலிடே ரிசார்ட் கட்ட காண்டிரேக்ட் கிடைத்த ஹைதிராபாத் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். மலேசிய போலீஸ் கம்பெனி தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை” என்று வந்த செய்தியை சுரேந்தர் பார்த்திருந்தால் அவன் மனம் சிறிது ஆறுதல் அடைந்திருக்கலாம்.

Images taken from these sites with thanks.

http://www.cliparthut.com/wheelchair-sports-clipart.html

http://seattle.urbansketchers.org/2014/07/portland-for-2nd-annual-west-coast.html

http://pencil-bender.deviantart.com/art/Father-Daughter-Time-422404333

http://www.dreamstime.com/stock-illustration-father-child-pencil-sketch-hand-drawn-man-gently-holding-toddler-image49286492

இராமானுஜர் பகுதி -6 நிறைவு பகுதி!

ramanujar13

முந்தைய இராமானுஜர் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5

சைவ மன்னனது சூழ்ச்சி

சைவ மன்னனின் ஆட்சி அப்பொழுது சோழ நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இராமானுஜர் இருக்கும் வரை சைவ சமயம் ஏற்றம் பெறாது என்பதை மன்னன் உணர்ந்தான். எனவே வஞ்சகமாக அவரை வரவழைத்துக் கொன்றுவிட திட்டமிட்டான். அதன்படி இராமானுஜரை அழைத்துவர ஏவலாட்களை அனுப்பி வைத்தான். நுண்ணிய அறிவுடை கூரேசனுக்கு மன்னன் எதற்காக ஆள் அனுப்பியிருக்கிறான் என்று புரிந்து விட்டது. அவர் இராமானுஜரிடத்துப் போய் ”உடனே இங்கிருந்துத் தப்பி சென்று விடுங்கள்” என்று கூறினார். “வைணவம் தழைக்கவும், அடியவர்களைக் காக்கவும் தேவரீர் உயிருடன் இருக்க வேண்டும்” என்று யாசித்தார். அதனால் அவரே உடையவரின் காவியுடையை அணிந்து கொண்டு திரி தண்டத்தையும் எடுத்துக் கொண்டு பெரிய நம்பியுடன் அரசனைக் காணக் கிளம்பினார். இந்த உக்தியை கூரேசர் சொன்னதும், மனம் பதைபதைத்து இராமானுஜர் முதலில் உடன்படவில்லை. ஆனால் வேறு வழியின்றி அவர் கூரத்தாழ்வாரின் வெள்ளை வேட்டியை அணிந்து கோவிந்தன் முதலான சில சீடர்களுடன் திருவரங்கத்தை விட்டுப் புறப்பட்டார்.

தன் முன் நின்ற கூரத்தாழ்வாரை இராமானுஜர் என்று எண்ணி அவரருக்கும் அவர் உடன் வந்திருந்த பெரிய நம்பிகளுக்கும் முதலில் தக்க ஆசனம் கொடுத்து அமர வைத்தான் சோழ அரசன். பின் சபையோருடன் விவாதம் செய்ய வைத்தான். கூரேசரும் நிறைய மேற்கோள்கள் காட்டி எப்படி நாராயணனே அனைத்து உயிர்களுக்கும் தெய்வம் என்று சொன்னார். ஆனால் நாலூரான் என்கிற அவனின் மந்திரி வந்திருப்பது இராமானுஜர் அல்ல கூரத்தாழ்வான் என்று அரசனிடம் கூறிவிட்டான். ஏனென்றால் அவன் கூரத்தாழ்வாரின் சீடர். அதனால் அவரை நன்கு தெரியும். இதனால் கோபம் அடைந்த அரசன் கூரத்தாழ்வார், பெரிய நம்பிகள் இருவரின்  கண்களையும் பிடுங்கி விடுமாறு ஆணையிட்டான். இதைக் கேட்டவுடன் கூரத்தாழ்வார் அவர்களுக்கு அந்த வேலையை வைக்காமல் தானே தன் கண்களைப் பிடுங்கிக் கொண்டார். அவர்கள் இருவரையும் காட்டுக்குள் அழைத்துச் சென்று காவலர்கள் பெரிய நம்பி கண்களை பிடுங்கி எறிந்தனர். அப்போதும் கூரேசர் மனத்திலும் பெரிய நம்பி மனத்திலும் இராமானுஜரை காப்பாற்றிய மகிழ்ச்சி தான் இருந்தது. அவர்கள் இருவரும் ஒரு பிச்சைக்காரன் உதவியுடன் திருவரங்கம் திரும்பும் வழியிலேயே பெரிய நம்பி பரமபதம் அடைந்து விட்டார். கொடுமைகள் பல செய்த சோழ மன்னனுக்குக் கண்ட மாலைத் தோன்றி கிருமிகள் அவன் கழுத்தை அழித்துக் கொல்ல, பெரும் துன்பத்துக்கு ஆளானான். அவனுக்குக் கிருமி கண்டன் என்ற பெயரும் நிலைத்து விட்டது.

பௌத்தர் வைணவராதல்

திருவரங்கத்தை விட்டுக் கிளம்பிய இராமானுஜர் இரண்டு நாட்கள் தொடர்ந்து இரவும் பகலும் நடந்து, சோழ நாட்டு எல்லையை அவரும் அவருடன் வந்த சீடர்களும் தாண்டினர். களைத்துப் போய் பசி, தாகம், குளிரும் வாட்ட சில பாறைகளின் மேல் படுத்து உறங்கினர். அவ்விடம் வேடுவர்களின் இருப்பிடம். அவர்கள் இவர்களுக்காகத் தீமூட்டி, தின்னக் கனிகளும் எடுத்து வைத்திருந்தனர். எழுந்தவுடன் இவர்களின் உதவியைக் கண்டு இராமானுஜர் நெகிழ்ந்து போனார். பின்னர் அங்கிருந்த ஒரு பிராமணர்கள் குடியிருப்புக்குச் சென்று அங்கு ஒருவர் வீட்டில் வயிறார உண்டு அனைவரும் களைப்பாறினர். அவர்கள் வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்து பின் அங்கிருந்து வடமேற்கு திசை நோக்கிக் கிளம்பினர். அதற்கு முன்பு தங்களுக்கு உதவிய அவ்வீட்டுக்குரிய ரங்கதாசருக்கு மந்திர தீக்ஷையும் அளித்துத் தன் சீடராக்கிக் கொண்டார். பின்னர் சாலக்கிராமம் என்னும் ஊரில் சில நாட்கள் தங்கி அடுத்து ஒரு நரசிம்ம ஷேத்திரத்துக்குப் புறப்பட்டார். அவ்வூர் அரசர் பெயர் விட்டலதேவர். பௌத்த மதத்தைச் சார்ந்தவர். ஆயிரக் கணக்கான பௌத்தர்களுக்கு அன்னதானம் செய்வதை தினப்படி வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மகள் ஒருத்தி இருந்தாள். அவளுக்குப் பிடித்திருந்த பேயை பலர் முயன்றும் ஓட்டமுடியவில்லை. அரசர் இராமானுஜரை தன் அரண்மனைக்கு அழைத்தார். இவர் உள்ளே வந்ததுமே அந்தப் பேய் அடுத்தக் கணம் ஓடிவிட்டது. இதனால் பெரிதும் மகிழ்ந்தார் அரசர்.

இராமானுஜரின் தெய்வீக ஆற்றலை உணர்ந்த விட்டலதேவர் வைணவ சித்தாந்தத்தைத் தனக்கு போதிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டார். அரசவையில் இருந்த பௌத்தப் பண்டிதர்களுடனும் வாதம் புரிந்தார் இராமானுஜர். இராமானுஜரை அவர்களால் வாதத்தில் வெல்ல முடியவில்லை. அதனால் அவரை நிந்திக்கத் தொடங்கினர். இதைக் கண்ட அரசர் கோபமுற்றார். சான்றுகளுடன் வாதம் புரிய முடியாவிட்டால் உடனே நிந்திக்கத் தொடங்குவது தவறு என்று சொல்லி அவர்களை அவையை விட்டு அகற்றினார். அவர்களும் அரசர் வைணவத்தைத் தழுவி விட்டார் என்று அறிந்து அகன்றனர். அச்சபையில் இருந்த பல பௌத்தர்களும் இராமானுஜரின் பேச்சால் ஈர்க்கப் பட்டு வைணவத்துக்கு மாறினார். அந்நாட்டு மக்களும் மாறினார். இவ்வாறு தான் செல்லும் இடம் எல்லாம் தன் சமயத்தை நிலைநாட்டி வந்தார் இராமானுஜர். தன்னை ஆதரித்து பௌத்த மதத்தில் இருந்து வைணவத்துக்கு மாறிய விட்டலதேவருக்கு “விஷ்ணுவர்த்தனர்” என்ற விருதினை வழங்கிப் பெருமை படுத்தினார் உடையவர்.

திருநாராயணபுரப் பெருமாள்

இராமானுஜர் பல ஊர்களுக்குச் சென்று திருநாராயணபுரத்தை அடைந்தார். அங்கு ஒரு நாள் காலை துளசி வனத்தை வலம் வரும்போது மண்ணில் புதைந்து கிடந்த திருமாலின் திருவிக்கிரகம் ஒன்று கிடைத்தது. அவ்வூர் மக்களிடம் காட்டியபோது அவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இஸ்லாமிய படை எடுப்பின் போது பல விக்கிரங்கள் சேதப்படுத்தப் பட்டதால் அதனில் இருந்து காப்பற்ற இப்படி ஒளித்து வைத்து விட்டனர் அவ்வூர் மக்கள். பின்னர் அன்றே ஒரு கூரையால் வேயப்பட்ட ஆலயம் எழுப்பப்பட்டு அவ்விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார் உடையவர். யாதவாத்ரிபதி என்ற திருநாமத்துடன் அப்பெருமாள், கோவிலில் குடி கொண்டார். வெகு விரைவில் கோவில் பெரிதாக மாறியது. பக்கத்திலேயே ஒரு குளமும் எழுப்பினார் இராமானுஜர். அதன் அருகில் வெள்ளை நிறத்தில் மணல் இருப்பதைப் பார்த்தார். அவ்வெண்மையான மண்ணே வைணவர்கள் திருமண் தரித்துக் கொள்வதற்குப் பெரிதும் பயன் பட்டது. திருவரங்கத்தில் இருந்து அவர் கொண்டு வந்திருந்த திருமண் குறைந்து கொண்டே இருந்த சமயம் இறை அருளலால் இது கிடைக்கப் பெற்றது.

பீ பீ நாச்சியார் (அல்லது) துலுக்க நாச்சியார்

ஒரு நாள் இரவு அவர் கனவில் யாதவாத்ரிபதி தோன்றி “எனக்குக் கோவில் எழுப்பி, குளம் அமைத்து, வைணவர்கள் இட்டுக் கொள்ளத் திருமண் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து சேவை செய்துள்ளாய். இன்னுமொரு வேலை உள்ளது. உத்சவ மூர்த்தி இல்லாததால் கோவிலுக்கு வர முடியாதவர்களுக்காக நான் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் இருக்கிறேன். தில்லி அரசனின் பாதுகாப்பில் இருக்கும் “இராமப்ரியரை” இங்கே கொண்டு வந்து சேர்த்துவிடு” என்று ஆணையிட்டார்.

தில்லி சென்று அரசனை சந்தித்தார் இராமானுஜர். இஸ்லாமிய மன்னன் ஆயினும் அவரை நல்ல முறையில் வரவேற்று தன் கஜானாவைத் திறந்து காட்டினான் பாதுஷா. அங்கு விக்கிரகம் எதுவும் இல்லை. மனமொடிந்த இராமானுஜருக்கு அன்று இரவு பெருமாள் கனவில் தோன்றி தான் அரசன் மகளிடம் இருப்பதாகச் சொன்னார். அடுத்த நாள் அரசனிடம் இவ்விஷயத்தைச் சொல்ல அவன் அதை நம்பவில்லை. இருந்தால் எடுத்துச் செல் என்று அந்தப்புரத்துக்கு எதிராஜரை அழைத்துப் போனான். போனதும் இராமப்ரியர் ஜல் ஜல் என்று நடந்து வந்து உடையவர் மடியில் அமர்ந்தார். “வாராய் என் செல்லப் பிள்ளாய்” என்று கட்டித் தழுவி கண்ணீர் உகுத்தார் உடையவர். அரசகுமாரி அங்கு இல்லாததால் நல்லதாகிப் போக உடனே உடையவரும் பெருமாளுடன் திருநாராயணபுரம் கிளம்பினார்.

ஆனால் அரசகுமாரிக்கு இராமப்ரியரைப் பிரிந்து ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை. பாதுஷாவின் புத்திரி பித்தம் பிடித்தவள் போல் ஆனாள். இராமானுஜரை பின் தொடர்ந்து ஓடி வந்தாள். இராமானுஜரும் இராமபிரியரும் இருந்த பல்லக்கை நெருங்கி தடுத்து நிறுத்தினாள். அவளின் கள்ளம் கபடமற்றக் காதலைக் கண்டு உருகினார் உடையவர். நந்தகுமாரனை நேசித்த நப்பின்னையின் சாயலை அவளிடம் கண்டார். அவளை இராமப்ரியருடன் பல்லக்கில் அமர வைத்துவிட்டு அவர் இறங்கிக் கொண்டார். கொஞ்ச தூரம் சென்றதும் பல்லக்குத் தூக்கிச் செல்பவர்கள் எடை குறைகிறது என்று கூற, பட்டுச்சீலையை விலக்கி இராமானுஜர் பல்லக்கின் உள்ளே பார்க்க அங்கே இராமப்ரியர் மட்டுமே இருந்தார், அரசகுமாரியைக் காணவில்லை. இராமப்ரியருடன் ஒன்றிவிட்டாள் என்பதை உணர்ந்த உடையவர் “ தேவி, உன் திருவுருவத்தை விக்கிரகமாக வடித்து பெருமாள் திருவடி நிழலிலேயே பீ பீ நாச்சியாராகப் பிரதிஷ்டை செய்வேன்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் உரக்கக் கூறினார் எதிராஜர். அவ்வாறே பின்பு செய்தும் முடித்தார்.

அவர் திருநாராயணபுரம் நெருங்கும் போது திருடர் கூட்டம் ஒன்று அவர்களைத் தாக்க, உடனே அந்தப் பகுதி சேரியில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை விரட்டி இராமப்ரியரைக் காப்பாற்றிக் கொடுத்தனர். அதற்குப் பிரதிபலனாக எதிராஜர் அவர்களுக்குத் “திருக்குலத்தார்” என்று திருநாமம் சூட்டி வருடந்தோறும் நடக்கும் பிரம்மோத்சவத்தில் மூன்று நாட்கள் அவர்களின் திருவிழாவாக இருக்கும் என்றும் அருளினார். அது இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமர் உகந்த திருமேனி

இந்நிலையில் பன்னிரெண்டு ஆண்டு காலம் திருநாரயணபுரத்தில் எழுந்தருளியிருந்த இராமானுஜர், பெரிய நம்பி பரமபதம் எய்ததையும் கூரேசர் திருமாலிருஞ்சோலையில் தனித்து வாழ்வதையும், மேய்ப்பனில்லாத ஆடுகள் போல் அடியார்கள் திருவரங்கத்தில் தனித்து விடப்பட்டதையும் அங்கிருந்து வந்த வைணவர் மூலம் கேள்விப்பட்டு கண்ணீர் உகுத்தார். அதற்கு மேல் இராமானுஜருக்கு திருநாராயணபுரத்தில் இருக்க முடியவில்லை. திருவரங்கம் செல்லத் தீர்மானித்தார். அங்கிருந்த அடியவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க உடையவர் தன் உருவத்தை விக்கிரகமாக வடிக்கச் செய்தார். அதில் தனது அருளை முற்றும் வைத்தார்.

“தமர் உகந்த திருமேனி” என்னும் திருநாமத்தோடு இன்றளவும் திருநாராயணபுரத்தில் திகழ்கிறது. அங்கு தினப்படி பூஜைகள் தவறாமல் நடக்கின்றான்.

திருவரங்கம் திரும்பினார்

திருவரங்கம் திரும்பிய போது அவருக்கு வயது நூறு இருக்கும். உடலும் தளர்ந்து விட்டது. அங்கு வந்து சேர்ந்த சில நாட்களில் பெரிய நம்பியின் இல்லத்துக்குச் சென்று அவரின் மகள் அத்துழாய்க்கும், அவரின் மகனும் இராமானுஜரின் சீடருமான புண்டரீகருக்கும் ஆறுதல் கூறினார். பின் கூரேசரைக் கூட்டிவர திருமாலிருஞ்சோலைக்கு ஒரு திருத் தொண்டரை அவசர அவசரமாக அனுப்பி வைத்தார்.

தன்னை வந்து தொழுது எழுந்த கூரேசரின் நிலையைக் கண்டு மனம் வெதும்பிக் கலங்கினார். ஆழ்வாரை அள்ளி எடுத்து ஆணைத்துக் கொண்டார் எதிராஜர். தன் கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினார். அவரை விட பெரிய அடியவர் எவரும் உண்டோ என்று சொல்லி கூரேசர் வைணவத்துக்காகவும் தனக்காகவும் செய்தத் தியாகங்களை நினைத்து உருகி அவர் திரும்பப் பார்வை பெற இறைவன் அருள வேண்டும் என்று விரும்பினார்.

காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் வேண்டி மீண்டும் கூரேசர் கண் பார்வை பெற வேண்டும் என்று அவரிடம் அறிவுருத்தினார். அனால் கூரத்தாழ்வார் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அகக் கண்கள் இனி தனக்குத் தேவை இல்லை என்று கூறினார். வைகுந்தனைக் காண ஞானக் கண்களே போதும் என்றார்.

ஆனாலும் இரண்டு நாட்களில் திரும்ப எதிராஜர் கூரத்தாழ்வாரை வரதராஜன் மேல் வாழ்த்துக் கவி பாட நிர்பந்தித்தார். குருவின் பேச்சை மீற முடியாமல் கூரத்தாழ்வார் “வரதராஜஸ்த்வம்” இயற்றி அதை அவர் சன்னதியில் பாடி முடித்தார். அத்திகிரியார் மனமகிழ்ந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்க கூரேசரோ தனக்குப் பார்வை வேண்டும் என்று கேட்காமல் தன் பார்வைப் போவதற்குக் காரணமாக இருந்த தன் சீடன் நாலூரானும் நற்கதி அடைய வேண்டும் என்று வரம் வாங்கினார். கெட்டவரோ நல்லவரோ குருவைச் சார்ந்த சீடன் நற்கதி அடைகிறான் என்னும் உயரிய வைணவ சித்தாந்தத்தை நடைமுறையில் செய்து காட்டினார் கூரேசர். விரைவில் அரங்கனின் அடி மலர்களில் யாசித்து பரமபதத்தைப் பெற்றார். அவருக்குப் பின் அவர் மகன் பராசரரை ஆச்சாரியன் ஆக்கினார் உடையவர்.

இவருக்குப் பின் உறங்காவில்லியும் எம்பெருமானார் எதிராஜர் திருவடியில் தலை வைத்து பரமபதம் போனார். அப்பொழுது இராமானுஜருக்கு ஏறத்தாழ நூற்றி இருபது வயது ஆகிவிட்டது.

அவரும் பரமபதம் புகும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்தார். தம் பிரிவைத் தாளாது தொண்டர்கள் தவிப்பார்கள் என்று உணர்ந்து சில காரியங்களை உடனே செய்தார். தன்னைப் போலவே தத்ரூபமாக ஒரு விக்கிரகத்தை வடிக்கச் சொல்லி அதை ஆரத் தழுவி அதனுள் தன் அருட்சக்தியை வைத்தார். “தான் உகந்த திருமேனி” என ஏற்றம் பெற்ற அந்த விக்கிரகத்தை தன் அவதாரத் தலமான ஸ்ரீ பெரும்பூதூரில் பிரதிஷ்டை செய்யுமாறு முதலியாண்டான் மகன் கந்தாடையாண்டனிடம் கூறினார்.

அவர் நாட்பட நாட்படத் தளர்வுற்று ஒரு நாள் தன் திருமுடியை எம்பார் மடியிலும் திருவடியை வடுக நம்பி மடியிலும் வைத்து வைகுந்தம் ஏகினார். திருமாலின் படுக்கையாகத் திரும்ப ஆனார். அரங்கன் அவரைத் திருப்பள்ளிப் படுத்த தன் வசந்த மண்டபத்தையே கொடுத்தார். அந்த இடத்திலேயே அவருக்கு ஒரு சன்னதி எழுப்பினர் அவருடைய சீடர்கள். “தானான திருமேனியாய்” திகழ்கிறது இன்று வரை.

குரு பரம்பரை தொடர் அறாத ஒரு பரம்பரை. அவர் நியமனம் செய்த எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள் மூலம் இன்றும் வைணவ மரபு செழித்தோங்கி வாழ்கிறது.

சீராரும் எதிராசன் திருவடிகள் வாழி

திருவரையில் சார்த்திய செந்துவராடை வாழி

ஏராரும் செய்யவடி எப்பொழுதும் வாழி

இலங்கிய முன்னூல் வாழி இணைதோள்கள் வாழி

செராததுய்ய செய்யமுகச் சோதிவாழி

தூமுறுவல் வாழி துணைமலர் கண்வாழி

ஈராறு திருநாம(ம்) அணிந்த எழில்வாழி

இனி திருப்போ(டு) எழில் ஞான முத்திரைவாழி!

ஸ்ரீ இராமானுஜர் திருவடிகளே சரணம்

இன்னும் ஒரு முக்கியக் குறிப்பு:  

இராமானுஜர் வலியுறுத்துவது என்ன? பரமனின் 1000 நாமங்களையும் சொல்லக்கூடத் தேவையில்லை, “நாராயணா” என்ற ஒரு திருநாமத்தையாவது (ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம் (அ) அட்சாட்சர மந்திரம், ரகசிய மந்திரங்கள் என்று சொல்லப்படும் மூன்றில் முதன்மையானது, மற்றவை துவய மந்திரம், சரம சுலோகம்) தினம் ஓதி உய்யும் (வீடு பேறு அடையும்) வழியை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் என்று நமக்கு அருளியிருக்கிறார்.

திருமந்திரத்தை வதரியாசிரமத்தில் (பத்ரிநாத்) நாராயணன் நரனுக்கு அருளினான். அவனே நரன் (சீடன்), அவனே நாராயணன் (ஆச்சார்யன்)!

மந்திர ரத்தினம் என்று போற்றப்படும் துவயத்தை வைகுந்தத்தில் தான் மார்பில் தரித்த பிராட்டிக்கு (இலக்குமி தேவிக்கு) பரமன் உபதேசித்தார்.

ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நமஹ!

சரம சுலோகத்தை பார்த்தசாரதியாக குருச்சேத்திரப் போர்க்களத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்தார். பகவத் கீதையில் இது உள்ளது.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

இந்த 3 மந்திரங்களையுமே நாராயணனே அருளியதால், அவன் குருபரம்பரையின் முதல் ஆச்சார்யன் ஆகிறான்! பரம்பொருளின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மை, முக்திக்கான வழிவகைகள், முக்தி என்ற இலக்கின் தன்மைகள், முக்திக்குத் தடையாக இருப்பவை ஆகிய 3 விஷயங்களை விளக்கும் சாரமாகவே இம்மூன்று ரகசிய மந்திரங்களும் (ரகஸ்யத்ரயம்) விளங்குவதாக மணவாள மாமுனிகள் அருளியிருக்கிறார்

விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் தான் அருளிய திருப்பல்லாண்டில்

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம் பொழி
வந்தொல்லைக் கூடுமினோ

நாடும் நகரமும் நன்கறிய நமோ
நாராயணாய வென்று
பாடு மனமுடைப் பத்தருள்ளீர், வந்து
பல்லாண்டு கூறுமினே!

திருமந்திரத்தின் மேன்மையை உணர்த்துகிறார்.

இதனாலேயே, பன்னிரு ஆழ்வார்களுக்கும், அவ்வாழ்வர்களை திருமாலுக்கும் மேலாகக் கொண்டாடிய, குருபரம்பரையின் நடு நாயகமாகத் திகழும், பகவத் ராமானுசருக்கும் வைணவத்தில் மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது!

அவ்வகையில், திருமால் மேல் பற்றும், பக்தியும் உள்ள எவரும் வைணவரே என்பதும் பல பிரபந்தப் பாசுரங்களில் காணக்கிடைக்கும் செய்தியே. இத்தகைய வர்ண பேதத்திற்கு எதிரான செய்தியையே எந்தை இராமனுச முனி திருக்கோட்டியூர் கோபுரத்தின் மேலேறி நின்று, தனது குருவின் ஆணைக்கும் எதிராக, உலகுக்கே உரக்க அறிவித்தார்!

ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம்!

ramanujar12

விடியலைத் தேடி – சிறு கதை

birds

அக்காக் குருவி கத்தலும் கிளிகளின் கூட்டுக் கிக்கிக்களும் மஞ்சுவை எழுப்பின. ஒரு நிமிடம் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு. கார், பஸ்களின் வேக ஓட்டத்தின் ஒலிகளின் நடுவில் வாழ்ந்த அவளுக்கு இந்தக் கிராம சூழ்நிலை நினைத்தே பாராமல் கிடைத்த ஒரு வரம்.

சுற்றிப் பார்த்தாள். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் போடாமல் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி வருவதற்குள் சில குழந்தைகள் சிணுங்க ஆரம்பித்து இருந்தன. சிலவை அழகாகக் குப்புறப் படுத்துத் தலையைத் தூக்கித் தொட்டிலில் இருந்து கருவண்டு கண்களுடன் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தன.

வேகமாக ஒவ்வொன்றிற்கும் டயப்பர் மாற்ற ஆரம்பித்தாள். அதற்குள் அவள் சக காப்பாளர் மாலா புட்டிகளில் பாலை நிரப்பி வந்து குழந்தைகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தாள். சில குழந்தைகள் தானே பாட்டிலைப் பிடித்துக் கொண்டு சப்ப ஆரம்பித்தன. சில இன்னும் சிறுசு, அதனால் அவைகளில் ஒன்றை தொட்டிலில் இருந்து எடுத்து மடியில் போட்டுக் கொண்டு பால் கொடுத்தாள் மஞ்சு. வயிறு முட்டக் குடித்தப பின் வாயில் இருந்து பால் வழிய அவளை பார்த்து ஒரு பூஞ்சிரிப்பை உதிர்த்தது.

motherandchild

கண்களில் பொங்கி வந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அடுத்தக் குழந்தையிடம் சென்றாள். ஒரு குழந்தைக்காக ஏங்கிய அவளுக்கு பத்துக் குழந்தைகளைக் கொடுத்துவிட்டார் இறைவன். இங்கு வந்து சேர்ந்தது நேற்று தான். அதுவும் கனவு போல இருந்தது. இன்னும் உறக்கம் கலையாமல் கனவில் இருக்கிறோமோ என்று கூட அவளுக்குத் தோன்றியது.

ஜேகப்பை விட்டுத் தொடர்ந்து இந்த ஹோமில் வாழமுடியுமா என்று ஒரு சிறு பயமும் வந்தது. இருபது வருட வாழ்க்கை எளிதாக மறக்கக் கூடியதா? இந்த முடிவை எடுக்க அவள் எவ்வளவு மன உளைச்சல் பட்டாள்! இன்னும் உள் மனம் பயத்தில் இருந்து மீளவில்லை.

உண்மையில் திருமணம் அவளுக்கு மிகவும் இனிமையான ஒரு வாழ்வின் ஆரம்பம். அவளுடையது காதல் திருமணம். அதற்கு முன் கசந்த அவள் கன்னி வாழ்க்கையை இனிய காதல் திருமணம் தித்திக்க வைத்தது. அவள் அலுவலகத் தோழி வேதா பிரசவ விடுப்பு முடிந்து வேலைக்குச் சேரும் முன் தன் மூணு மாதக் குழந்தையை ஆபிசுக்கு எடுத்து வந்தபோது தான் சக ஆபிஸ் கொலீக் ஜேகப்பை முதலில் கவனித்தாள். வேதா மெடிகல் இன்சியுரன்ஸ் கிளைமுக்காக சில பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டியிருந்த சமயத்தில் அழும் குழந்தையை அவ்வளவு லாகவமாக அவன் கையாண்டான். இவளும் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு “பப்புக்குட்டி சின்னிக் குட்டி” என்று கொஞ்ச இருவருக்கும் இடையே சிநேகமான நட்பு தோன்றியது. “எனக்குக் குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும்” என்று அவன் சொன்னபோது அவன் மேல் சின்ன ஈர்ப்பு ஏற்பட்டது.

வாழ்வில் பிடிப்பின்றி இருந்த மஞ்சுவிற்கு ஜேகப்பின் கண்ணியமான பேச்சு மெதுவாகக் கவரத் தொடங்கியது. பெற்றோர் இல்லாமல் அண்ணன் அண்ணியுடன் வாழ்ந்த அவளுக்கு முப்பது வயதாகியும் அவர்கள் திருமண ஏற்பாடு எதுவும் செய்வதாக இல்லை. அதற்குக் காரணம் அவள் சம்பளம் தான் என்றும் அவளுக்குத் தெரியும். ஜேகப்புக்கும் அவளுக்கும் இடையே ஆரம்பித்த சிநேகமான நட்பு சில மாதங்களில் இயல்பாகக் காதலாக மாறியது. ஒரு நாள் அவனே, “எனக்கும் வயசாகிட்டு வருது. நான் உன்னை நல்லா வெச்சுப்பேன். என்னைக் கல்யாணம் செஞ்சுப்பியா” என்று நேரடியாக கேட்டதும் அவள் மனம் துள்ளி குதித்தது. அவனின் அன்பும் பரிவும் அவள் அது வரை எவர் மூலமும் அனுபவித்ததில்லை. முதலில் ரொம்ப யோசித்தாள். வேற்று மதம் பயமுறுத்தியது. ஜாதி விட்டு மணமுடித்தாலே கஷ்டம், இதில் மதம் மாறி ……

ஆனால் உறவுகள் யாரும் எந்த விதத்திலும் உதவாத போது இக்கலப்புத் திருமணத்தால் புதிதாக என்ன நஷ்டம் வரப் போகிறது என்று எண்ணித் துணிந்தாள். இவள் மதம் மாறி மஞ்சு கேதரின் ஆகத் திருமணம் புரிந்ததால் ஜேகப் வீட்டில் பெரிதாக எதிர்ப்பு ஏதும் இல்லை.

வீட்டில் மாமியார் மட்டும் தான். ஜேகப் தந்தை இறந்து சில வருடங்கள் ஆகிஇருந்தது. மாமியாருடன் நல்ல உறவு, தினமும் ஜெகபும் அவளும் ஒன்றாக வேலைக்குப் போய் வந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவள் கேட்கும் முன் புடைவையும் அவன் சக்திக்கு ஏற்ப நகையும் வாங்கிக் கொடுத்தான். அவள் சமையல் கைப் பக்குவம் மாமியாருக்கும் கணவனுக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டதால் ஆசையாக விதம் விதமாக தினம் சமைத்துப் பரிமாறினாள். முதல் முறை நாள் தள்ளிப் போன போது இருவரும் வானத்தில் மிதந்தார்கள். ஆனால் சில வாரங்களிலே அது பொய் என்றாகிவிட்டது. அது தான் அவர்களின் மண வாழ்க்கையின் முதல் பெரிய ஏமாற்றம்!

கொஞ்ச நாளிலே வேலையை விட்டுவிட்டு பிசினெஸ் ஆரம்பித்தான் ஜேகப். மஞ்சு ரொம்ப கெஞ்சினாள் வேலையை விட வேண்டாம் என்று. அவனோ பிடிவாதமாக “இப்படியே எத்தனை நாள் வாழறது, காரு வீடெல்லாம் நம்ம சம்பளத்தில் வெறும் கனவு தான். துணிஞ்சு இறங்கனும்”. என்றான்.

கார்மென்ட் பிசினெஸ். ஆர்டர் பிடிக்க அடிக்கடி வெளியூர் செல்ல  வேண்டியிருந்ததால் மஞ்சுவையும் வேலையை விடச் சொன்னான். “நீ தான் கணக்கு வழக்கெல்லாம் பார்த்துக்கணும். எவனுக்கோ போய் உழைப்பதுக்கு பதிலா நம்ம கம்பெனியில் உழைச்சா இலாபம் நமக்கு தானே” என்றான். அவன் இல்லாத போது கம்பெனியில் சின்ன சின்ன திருட்டுகள் நடக்க ஆரம்பித்தன. அதனால் அவள் அங்கு இருப்பது அவசியமாயிற்று. பிசினசும் சூடு பிடித்ததால் வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் கம்பெனியில் அமர்ந்தாள்.

பிசினஸ் நன்றாக வளர்ந்தது. ஆசைப்பட்ட மாதிரி ஜேகப் கார் வாங்கினான். ஆனால் யார் வைத்தக் கண்ணோ திடீரென்று ஒரு பெரிய ஆர்டர் கேன்சல் ஆனது. ஆர்டரை எதிர்பார்த்து தைத்து வைத்திருந்த சரக்கெல்லாம் விற்க முடியாமல் தேங்கிப் போனது. அதே சமயம் இருந்த ஒரே உறவான மாமியாரும் இறந்து போனார். முடிந்த அளவு ஜேகப்புக்கு ஆறுதலாக இருந்தாள் மஞ்சு. முதல் குறை பிரசவத்துக்குப் பிறகு மேலும் இரண்டு குறைப் பிரசவங்கள் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு இடைவெளியை கொஞ்ச நாளாகவே ஏற்படுத்தியிருந்தது. குழந்தைக்காக ஏங்கிய இருவருக்கும் இறைவன் அந்த பாக்கியத்தை கொடுக்கவில்லை. இந்த சமயத்தில் இது வரை இல்லாத புதுப் பழக்கத்தை மதுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான் ஜேகப். தினமும் அளவுக்கு அதிகமாக குடிக்க ஆரம்பித்தான். எப்படி இந்தப் பழக்கம் ஆரம்பித்தது என்று அவள் யோசிப்பதற்குள் அவன் ஆபிசுக்கு வராமல் அதிகமாக பார் பக்கம் ஒதுங்க ஆரம்பித்திருந்ததை கவனித்துப் பெரும் குழப்பத்துக்கு ஆளானால் மஞ்சு.

பிசினஸ் என்று ஒன்று ஆரம்பித்தப் பின் நஷ்டம் வந்தால் சோம்பி உட்கார முடியுமா? மஞ்சுவே தன் சாமர்த்தியத்தால் பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடங்களுக்குச் சென்று சீருடை ஆர்டர் வாங்கி பொறுப்புடன் கம்பெனியை நடத்த ஆரம்பித்தாள். தொய்வு ஏற்பட்ட பிசினஸ் நன்றாகப் பிக் அப் ஆனது.அது ஜெகபை எரிச்சல் படுத்தியது. “பொட்டச்சி நீ, என் உதவி இல்லாம ஆர்டர் வாங்கி கம்பெனியை நடத்துறியா? எவ்வளவு நாளைக்கு ஓடுது பாக்கலாம்” என்று எல்லார் முன்னிலையிலும் கம்பெனியில் கத்தி அவமானப் படுத்தித் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். அவளால் நம்ப முடியவில்லை. இந்த மாதிரி கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தி அவள் கேட்டதே இல்லை. குடியின் பாதிப்பால் மாறிவிட்டானா அல்லது உண்மையிலேயே பொறாமைப் படுகிறானா என்றும் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் குடிக்காத போது அன்பாகத் தான் இருந்தான்.

ஜேகபை சர்ச் பாதிரியாரிடம் கவுன்சலிங்கிற்கு அழைத்துச் சென்றாள். அவர் பேசும்போது நல்ல பிள்ளையாக எல்லாவற்றிற்கும் தலை ஆட்டிவிட்டு வீட்டுக்கு வந்ததும் இவளை முதல் முறை கை நீட்டி அடித்தான். அவன் விட்ட அறையில் நிலைகுலைந்து போனாள். “நீ யாருடி என்னைப் பத்தி பாதரிடம் போய் கம்ப்ளெயின் பண்ண? முதல்ல நீ கிருஸ்துவச்சியே இல்லை. உன்னைக் கல்யாணம் கட்னதே தப்பு” வாய்க்கு வந்தபடி பேசினான். அதன் பின் அடிப்பதும் உதைப்பதும் தினப்படி வாடிக்கை ஆனது.

அவள் நொந்து போனால். எவ்வளவு மென்மையானவன், குழந்தைகளிடம் எவ்வளவு அன்புடன் பழகுபவன், எப்படி இப்படி மாறினான் என்றே அவளுக்குப் புரியவில்லை. அவன் அடித்தாலும் அவளுக்கு அவன் மேல் உள்ள அன்புக் குறையவில்லை. இரவு ஒரு மணிக்கு தள்ளாடி வீடு திரும்பும் அவனுக்கு சூடாக உணவு பரிமாறி அவனை நல்ல முறையில் படுக்க வைத்தப் பின் தான் அவளுக்கு உறக்கமே வரும்.

waitingwife

கம்பெனிக்கு வந்து, அங்கு இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு குடிக்கப் போவதால் பணம் அதிகம் petty cash பாக்ஸில் வைக்காமல் இருந்தாள். அதனால் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துச் சென்று விற்றோ அடமானம் வைத்தோ குடிக்க ஆரம்பித்தான். இதற்காகவே அவன் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்க ஆரம்பித்தாள் மஞ்சு.

அவன் குடிக்காத நேரத்தில் அவனிடம் நல்லவிதமாகப் பேசி அவனை மருத்துவமனையில் சேர்த்து அடிக்ஷனில் இருந்து விடுபட வைக்க எவ்வளவு முயன்றும் அவளின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஜேகப், தான் குடிப்பதால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே சாதித்தான். “எங்கப்பாவும் தான் குடிப்பார். எங்கம்மா அவருடன் சந்தோஷமா வாழலையா? உனக்கு என்ன கொழுப்பு என்னை குடிக்காதே என்று சொல்ல?” பேச்சில் ஆரம்பித்து அடி உதையில் முடிவது சகஜமாயிற்று. அவன் அப்பா இறந்ததே அதிகம் குடித்து அதனால் வந்த லிவர் பிரச்சினையால் என்று ஒரு நாள் வேறு ஒரு உறவினர் மூலம் தெரிந்து கொண்டாள் மஞ்சு. இந்தக் குடி நோய் அடுத்த சந்ததிக்கும் தொடரும் என்பதை அவள் உதவித் தேடிச் சென்ற மருத்துவர் மூலம் அறிந்து கொண்டாள். என்ன செய்வது? அவனின் சொந்தங்கள் அவன் அம்மா இறந்த பிறகு இவர்களுடன் தொடர்பில் இல்லை. அவர்கள் யாரிடமும் இவளால் உதவி கேட்கப் போக முடியவில்லை.

இந்த நேரத்தில் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்த பாண்டியன், தான் ஜேகபிடம் பேசிப் புரிய வைப்பதாக அவளிடம் வந்து சொன்ன போது ஒரு பாரம் இறங்கியது போல இருந்தது அவளுக்கு. பாண்டியனை வேலைக்குச் சேர்த்ததே ஜேகப் தான். பிசினஸ் ஆரம்பித்த நாள் முதலாக அவன் கம்பெனியில் இருந்தான்.

“தினம் சாயங்காலம் நான் அவர் கூடவே இருக்கேன் மேடம். ரொம்ப குடிக்காம பார்த்துக்கறேன். அப்படியே நல்லவிதமா பேசி சரி பண்ணிடலாம், கவலைப் படாதீங்க” என்று தைரியம் சொன்னான்.

இரவு பாண்டியனே அவனை வீட்டில் வந்து விட்டுவிட்டுப் போக ஆரம்பித்தான். குடித்துவிட்டு வண்டி ஒட்டாமல் வருகிறானே என்று ஒரு சிறு நிம்மதி மஞ்சுவுக்கு. அதுவும் சொற்ப காலமே. அவர்கள் கம்பெனி வங்கிக் கணக்கு ஜாயின்ட் அக்கௌன்ட். அதனால் அவள் மிகவும் ஜாக்கிரதையாக செக் புக்கை ஜேகப் கண்ணில் படாமல் வைத்திருந்தாள். வங்கி மேலாளர் ஒரு நாள் கணக்கில் overdraft இருப்பதால் ஒரு செக்கைத் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கு என்று போன் பண்ணியபோது அவள் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது.

“சார், சான்சே இல்லை. கரென்ட் அக்கௌண்டில் மட்டுமே 5லட்சம் இருக்கணமே” என்றாள். “இல்லையே மா, ரெண்டு வாரமா நிறைய வித்ட்ராயல்ஸ் இருந்ததே. எல்லாமே cash வித்ட்ராயல்ஸ். நீங்க சரியா செக் பண்ணிப் பாருங்க” என்று சொல்லி போனை கட் பண்ணினார்.

செக் புக்கை எடுத்துப் பார்த்தாள். வரிசையாக எண்களைப் பார்த்துக் கொண்டே வந்தவள் கடைசி 5 செக்குகள் கிழிக்கப் பட்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

ரேஸ்கல் பாண்டியன் பண்ணின வேலை இது என்று புரிந்து கொள்ள நிமிஷ நேரம் போதுமானதாக இருந்தது அவளுக்கு. அவளின் ஆபிஸ் ரூமுக்குள் வந்தபோது எப்போதோ ஒரு சமயம் அவள் கவனிக்காத சமயத்தில் அவன் செக்குகளைக் கிழித்து வைத்திருக்க வேண்டும். பின் ஜேகபிடம் கையெழுத்து வாங்கி வங்கியில் இருந்து பணத்தை எடுத்திருக்க வேண்டும். ஜேகப்புக்கு ஏதாவது பணம் கொடுத்தானோ அல்லது எதுவுமே கொடுக்கவில்லையோ தெரியவில்லை, மனம் கொதித்தது மஞ்சுவுக்கு.

“பாண்டியனை கூப்பிடுங்க” என்று இவள் ஆள் அனுப்பிய போது அவன் அதற்குள் தலைமறைவாகி இருந்தான். ஜேகபிடம் வங்கியில் இருந்து பணம் எடுத்ததைப் பற்றி கேட்க, அவன் உடனே “நீ பணத்தை எடுத்து எவனுக்கோ கொடுத்துட்டு என்னை கேக்கறியா” என்று இவளை ஏச, அதன் பின் பேச்சு முற்றிலும் வேறு திசைக்கு மாறியது. “யாரோட டீ நீ தொடர்பு வெச்சிருக்க, என் கம்பெனி பணத்தை எல்லாம் எடுத்து தானம் பண்ற?” என்று ஆரம்பித்து காது கூசும்படி அர்ச்சனை செய்ய ஆரம்பித்தான். குடி போதையில் செக்கில் கையெழுத்துப் போட்டதே தெரியவில்லை அவனுக்கு. நான் உன்னைக் கண் கலங்காம பார்த்துக்கறேன் என்று சொன்ன ஜேகப் எங்கே போனான் என்று நினைத்துக் கலங்கி நின்றாள் மஞ்சு.

ஒரு நாள் ஆபிசில் மும்முரமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது டெய்லரிங் செக்ஷன் வாசுகி தயங்கி தயங்கி எதோ சொல்ல வந்து எச்சில் கூட்டி முழுங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்து சற்றே எரிச்சலுடன், “என்ன வாசுகி, என்ன விஷயம் ஏதாவது அட்வான்ஸ் வேணுமா? ஏன் தயங்கி தயங்கி நிக்கற?” என்றாள் மஞ்சு.

“எப்படி சொல்றதுன்னு தெரியலை மேடம், சாரை ரெண்டு மூணு தடவை ஒரு பொண்ணோட பார்த்தேன். நல்ல பொம்பளை மாதிரி தெரியலை.” மென்று முழுங்கினாள் வாசுகி. “சில பேர் கொஞ்ச நாளாவே சேர்ந்து வாழறாங்கன்னு ஆபிசுல பேசிக்கறாங்க” விதிர்விதிர்த்துப் போய்விட்டாள் மஞ்சு.

அன்று இரவு குடித்து விட்டு வந்தபோது அமைதியாக இருந்தாள் மஞ்சு. காலையில் எழுந்தவுடன் அவனிடம், “உங்களை யாரோ ஒரு பொண்ணோட பார்த்ததா சிலர் வந்து எங்கிட்ட சொன்னாங்க. யாருங்க அந்தப் பொண்ணு?” என்றாள். “யாரோட வேணா நான் போவேன், அதை கேக்க நீ யாரு?” கோபத்தில் அவளைப் பிடித்து வெறியுடன் தள்ளியவன் அவள் தலை ஜன்னல் கம்பியில் மோதி இரத்தம் வழிவதைக் கூடக் கண்டுகொள்ளாமல் வாசக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்.

மனோ தத்துவ மருத்துவரை அணுகினாள். அவனாக வந்து அடிக்ஷன் சென்டரில் அனுமதித்துக் கொண்டால் அன்றி அவன் நோய் குணமாக வாய்ப்பில்லை என்றார் டாக்டர். தினம் அடி உதை வாங்குவதால் இரவில் அவன் வரும் நேரத்தில் பயம் வயிற்றைக் கவ்வி இம்சை பண்ணுவதை மருத்துவரிடம் தெரிவித்தாள். அவளை சாந்தமான மன நிலையில் இருக்க உதவும் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். அதைத் தவிர அவரிடம் இருந்து அவளுடைய பிரச்சினைக்கு வேறு பதில் கிடைக்கவில்லை.

ஆபிசில் ஒரு நாள் வந்து இறங்கிய சரக்கைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த போது, துணியைச் சுற்றி வந்த பேப்பரில் உள்ள வரி விளம்பரம் ஒன்று அவள் கண்ணில் பட்டது. முதியோர் இல்லமும் அநாதை ஆசிரமமும் சேர்ந்தே இருந்த ஒரு இடத்துக்குக் குழந்தைகளை பராமரிக்கத் தாயுள்ளம் கொண்ட பெண் தேவை என்று விளம்பரத்தைப் பார்த்தாள். உணவும் இருப்பிடமும் கொடுத்து மாதச் சம்பளம் ரூ10,00௦ என்று போட்டு முகவரியும் தொலைபேசி எண்ணும் இருந்தது. தினசரியின் தேதியைப் பார்த்தாள். ஒரு வாரப் பழைய பேப்பர்.

திருமணம் செய்ய முடிவெடுக்கும் முன் யோசித்ததை விட இப்பொழுது எடுக்கப் போகும் முடிவுக்காக இரவும் பகலும் மன வேதனையில் உழன்றாள் மஞ்சு. அன்று அவள் வீட்டை விட்டுக் கிளம்பி ஜேகப்புடன் வாழ முடிவு செய்தபோது அர்த்தமற்ற வாழ்க்கை பொருள் பொதிந்ததாயிற்று. ஆனால் இன்று எடுக்கப் போகும் முடிவோ ஒரு உறவின் நிரந்தரப் பிரிவை ஏற்படுத்தப் போகும் முடிவு, உண்மையில் ஓரு மரணத்துக்கு நேர்.

மிகுந்த யோசனைக்குப் பின் தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டு நேர்காணலுக்குச் சென்றாள். “நான் ஒரு அநாதை, பயமில்லாமல் வாழ ஓர் இடம் தேடி வருகிறேன் மேடம். இப்போ ஒரு கார்மென்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். ஆனால் தங்குமிடம் சரியா இல்லை” என்று நிர்வாக இயக்குநரிடம் உண்மையும் பொய்யும் கலந்து உருக்கத்துடன் சொன்னாள்.

அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்தவுடன் அவள் மனம் பல வருடங்களுக்குப் பின் லேசானது போலத் தோன்றியது. சில குழந்தைகள் தொட்டிலில் இருந்தன. சில தவழ்ந்து கொண்டிருந்தன. குழந்தைகளை பராமரிக்க இவளை விட சிறந்தவர் அவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை இவளுடன் பேசி, இவள் செய்கைகளை கவனித்த சிறிது நேரத்திலேயே நிர்வாக இயக்குநர் புரிந்து கொண்டார். அவர்களுக்கும் குழந்தைகளைப் பராமரிக்க ஒருவர் உடனடித் தேவையாக இருந்ததால் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அடித்து அப்பொழுதே அவள் கையில் கொடுத்து விட்டார்.

முதல் முறை சூழ்நிலைக் கைதியாக இருந்து விடுதலை வேண்டி வீட்டை விட்டுக் கிளம்பினாள். இம்முறையும் வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் அதே சூழ்நிலைக் கைதி தான். ஆனால் முதல் முறை வீட்டை விட்டுக் கிளம்பும்போது இருந்தத் துணிச்சலை விட இம்முறை அதிகம் தேவையாக இருந்தது. இருட்டின் அடர்த்தியைப் பொறுத்தே உள்ளது அதில் இருந்து விடுபட தேவையான துணிச்சல்!

sunrise

images taken with thanks from the following websites:

https://www.etsy.com/listing/78235918/birds-in-a-garden-graphite-pencil

http://vaishnavinair.blogspot.in/

http://wallkeeper.com/

http://scribbles-n-sketches.deviantart.com/art/sunrise-283194928

புலி – திரை விமர்சனம்

puli

இது முழுக்க முழுக்க பேண்டசி படம். விஜய் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அம்புலிமாமா இதழ்களில் வரும் கதைகள் போல் ஒரு கதை புலி. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி மந்திரவாதியின் உயிர் ஒரு கிளியினுள் இருக்கும். அதைக் கொன்று அசகாய சூரனான கதையின் நாயகன் நாயகியை மந்திரவாதியின் பிடியில் இருந்து விடுவித்து மணந்து கொள்வான். படிக்க ஜாலியா இருக்கும் அந்தக் காலத்தில். கதாநாயகனுக்கு உதவ பேசும் விலங்குகள், வழிகாட்டும் பறவைகள் என்று கதையில் வரும். அதே பார்முலா தான் இப்படத்திலும் சிம்பு தேவன் கையாண்டிருக்கிறார்.

ஸ்ரீதேவி இடைவேளைக்குப் பிறகு தான் வருகிறார். சிறப்பாகவே செய்திருக்கிறார். டிரெயிலரில் பார்த்ததை விட படத்தில் நன்றாக உள்ளார். உடைகளும், அவரின் அனுபவப்பட்ட நடிப்பும் வெகு நேர்த்தி. ஸ்ருதி ஹாசன் குரல் காதை ரொம்பப் பதம் பார்க்கிறது. அவருக்கு வேறு யாராவது டப்பிங் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதி இருவருமே வெறும் டூயட் பாடவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். இருவர் பெர்பார்மன்சும் சாதா. சுதீப் வில்லன். நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் அவரின் வில்லத்தனம் முதல் பாதியில் கொஞ்சமே தெரிகிறது. கிளைமேக்சில் கொஞ்சம் வெளிப்படுகிறது. அதனால் அவரின் பங்களிப்பு பெரிதாக சோபிக்கவில்லை.

கதையில் விஜய்க்கு நண்பர்கள்/உதவியாளர்களாக தம்பி ராமையாவும், சத்யனும் வருகிறார்கள். இவர்களுக்குப் பதிலாக வேறு இருவரை போட்டிருக்க வேண்டும். படம் முழுக்க இவர்கள் தொடர்ந்து வருவது மேலும் எரிச்சலைக் கூட்டுகிறது.

நடனம் – ராஜூ சுந்தரம், கலை – டி.முத்துராஜ், ஒளிப்பதிவு – நடராஜன் சுப்பிரமணியன், எடிடிங் – ஸ்ரீகர் பிரசாத், நான்குமே நன்றாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் பாடல்களும் மோசம். டிஎஸ்பி நல்ல வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறார். கம்பியுடர் கிராபிக்ஸ் நன்றாக உள்ளது.

விஜயின் நடிப்பில் மாற்றம் ஏதும் இல்லை. ஒரே மாதிரி செய்வதால் சமயங்களில் அலுப்பு தட்டுகிறது. அரசியல் நெடி வசனங்கள் குறிப்பிட்டு சொல்லும் அளவு உள்ளன, முக்கியமாக படம் முடிவில். இவரும் அரசியலில் குதிப்பதாக இருந்து சினிமாவை ஒரு பிளேட்பார்மாக பயன்படுத்துகிறாரா என்று தெரியவில்லை.

ரொம்ப எதிர்பார்ப்போடு போனால் மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும். படம் வேஸ்ட் என்று நினைத்துப் போனால், பரவாயில்லையே நன்றாகத் தானே இருக்கிறது என்று எண்ண வைக்கும் இப்படம்.

puli1