இஞ்சி இடுப்பழகி – திரை விமர்சனம்

inji

தெலுங்கு தமிழ் இரண்டிலும் ஒரே சமயத்தில் எடுத்தப் படம் இது. தெலுங்கில் சைஸ் ஜீரோ, தமிழில் இஞ்சி இடுப்பழகி. க்ளோஸ் அப் சீன்களில் தமிழ் உச்சரிப்பு சரியாக உள்ளது. லாங் ஷாட்களில் தெலுங்கு வாயசைப்புக்குத் தமிழ் வசனம் சரியாக ஒட்டவில்லை. லாங் ஷாட்ஸ் எல்லாம் ரீ ஷூட் பண்ணாமல் ஒப்பேத்தி விட்டார்கள். மேலும் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடித்தமான ஸ்டேப்சுடன் குத்து டேன்ஸ், நிறைய தெலுங்கு நடிகர்கள் படத்தில் இருப்பது, ஆந்திர மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்தியிருப்பது, இவையால் படத்தில் தெலுங்கு வாடை அதிகம் வீசுகிறது.

ஒரு குண்டு பெண்ணின் இன்னல்களையும்,  அதனால் அவளின் திருமணத்திற்கு ஏற்படும் தடைகளையும் காட்டுகிறது இப்படம். படத்தில் நல்ல மெஸ்சேஜ் உள்ளது. அனுஷ்காவும் ரொம்ப நன்றாக நடித்துள்ளார். அனுஷ்காவின் தொண தொண அம்மாவாக ஊர்வசி. அனுஷ்காவும் ஊர்வசியும் தான் படத்தின் இரு தூண்கள் {figuritively also, pardon my pun 🙂 }ஆனால் திரைக்கதை தான் பயங்கரமாக சொதப்பி விடுகிறது. காமெடி என்று அவர்கள் நினைத்து சேர்த்திருக்கும் வசனங்கள் எல்லாம் மருந்துக்குக் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை.

வெகு விரைவில் உடல் எடையை குறைக்க உதவும் சைஸ் ஜீரோ நிறுவனத்தின் முதலாளியாக வரும் பிரகாஷ் ராஜ் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான நடிப்பைத் தருவது சலிப்பூட்டுகிறது. மாஸ்டர் பரத்துக்கு (போக்கிரியில் உப்புமா பையன்) அனுஷ்கா தம்பியாக, நல்ல ரோல். வேறு நல்ல இயக்குநரிடம் இன்னும் நன்றாக சோபிப்பார் என்று நம்புகிறேன்.

முதல் பாதி பெட்டரா இரண்டாம் பாதி பெட்டரா என்று யோசிக்கும்போது அது அவரவர் ரசனையைப் பொறுத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் மொத்தத்தில் படம் பல இடங்களில் விறுவிறுப்பு இல்லாமல், சுவாரசியம் இல்லாமலும் தொய்கிறது. ஒரு நல்ல திரைக் கதையும் நல்ல எடிட்டரும் இருந்திருந்தால் இப்படம் ஹிட் படமாகியிருக்கும்.

அனுஷ்கா இப்படத்திற்காக எடை கூடினார் என்று செம பில்ட் அப் கொடுத்தார்கள். அதெல்லாம் ஒன்றும் எடை கூடவில்லை. எல்லாம் பாடி சூட் தான். அது நன்றாகத் தெரிகிறது. ஆ மறந்துவிட்டேனே, படத்தின் ஹீரோ ஆர்யா! நல்ல பிட் பாடி. மத்தபடி நடிக்க ரொம்ப வாய்ப்பில்லை, அவரும் பெருசா மெனக்கெடவும் இல்லை.

இசை மரகத மணி. இனிமையான இசை. நிறைய நல்ல விஷயங்களைச் சொல்ல வருகிறார்கள், அனால் தடுமாறி விட்டார் இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடி. ஒரு சண்டை காட்சியோ, டாஸ்மாக் காட்சியோ இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக அமைந்தும் நம்மை சீட்டில் கட்டிப் போடத் தோற்று விடுகிறார் இயக்குநர். தெலுங்கில் ஓடுமோ என்னமோ.

inji1

வேதாளம் – திரை விமர்சனம்

vedhalam1

அவுட் அண்ட் அவுட் அஜித் ரசிகர்களுக்கான படம். ஆலுமா டோலுமா பாடலும் வீர விநாயகா பாடலும் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது. அனிருத்தின் பின்னணி இசை சத்தமாக இருந்தாலும் இந்தப் படத்திற்கு செட் ஆகிறது.

லட்சுமி மேனனுக்கு நல்ல ரோல். அஜித்தின் தங்கையாக படம் முழுவதும் வருகிறார். இருவருக்கும் அண்ணன் தங்கை கெமிஸ்டிரி நன்றாக வொர்க் அவுட் ஆகிறது. ஸ்ருதி ஹாசனுக்கும் அவருக்கு ஏற்ற ரோல், ஒரு கேஸ் கூட வின் பண்ணத் தெரியாத வக்கீல் கேரக்டர். படத்தில் கொஞ்சமே தான் வருகிறார். அதற்கு இயக்குநருக்கு நன்றி. இதில் அவர் வாய்ஸ் அவர் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. அஜித்துடன் டூயட் இருந்தாலும் டூயட்டாக அது தோன்றவில்லை. அவரின் உடைகள் ரொம்ப அழகாக உள்ளன. இதே ட்ரெஸ் டிசைனரை அவர் மற்ற படங்களுக்கும் பயன்படுத்தலாம்.

ஆல்ரெடி இணையத்தில் சொன்னா மாதிரி ஏய் படம் போலத் தான் கதை. ஆனால் இதில் அண்ணன் தங்கை அஜித், லட்சுமி மேனன். அது தான் ஸ்பெஷல். மற்றபடி ஹீரோ என்றால் நூறு பேரையும் பந்தாடுவார், குண்டு அவர் மேல் பாயாது, வில்லன்களை வெற்றிகரமாக சாகடிப்பார் போன்ற அனைத்தும் இப்படத்திலும் உண்டு. முதலில் நல்ல கணேசாக வந்து பின் வில்லன்களை பரலோகத்துக்கு அனுப்புவபராக மாறுகிறார் அஜித்.

பின் பாதியில் எக்கச்சக்க பைட்டிங். அதுவும் பலத்த பின்னணி இசையில் தலையை வலிக்கிறது. கொல்கத்தாவில் பாதி கதை நகருகிறது. கொஞ்சம் கொல்கத்தா, மீதி செட். லாஜிக்கை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் பார்த்தால் படம் பிடிக்கும். வீரம் படத்தை விட பெட்டர். சூரி, கோவை சரளா வரும் இடங்கள் தாங்க முடியவில்லை.

இப்படத்தில் எனக்கு முக்கியமாக பிடித்த ஒன்று பெண்களை மதிக்க வேண்டும், பெண்களுக்கு அவர்களுக்கான சுதந்திரத்தை யாரும், எந்த சூழலும் பறிக்கக் கூடாது என்ற நல்ல கருத்தைச் சொல்கிறார் அஜித். விஜய், அஜித், போன்ற இன்றைய பிரபல ஹீரோக்கள் எது சொன்னாலும் அதன் ரீச் அதிகம்.

எடிட்டிங்க் ரூபனும், ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவும் இப்படத்தில் பாராட்டப் பட வேண்டியவர்கள். அஜித் கொஞ்சம் உடம்பை குறைத்தால் நன்றாக இருக்கும். டேன்ஸ் ஆடும்போது உடல் எடை தெறிக்கிறது! இது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக இருக்கும் என்பது என் கணிப்பு.

vedhalam

தூங்காவனம் – திரை விமர்சனம்

Thoongavanam-poster2

படத்தின் டிரெயிலரிலேயே கமல் ஒரு போலீஸ், அவர் மகனை ஒரு போதை பொருள் கடத்தும் கும்பல் கடத்திவிடுகிறது, மகனை மீட்க கமல் போராடுகிறார் என்பது நமக்குத் தெரிந்து விடுகிறது. இப்படி இருக்கும்போது கமல் தன் மகனை காப்பாற்றாமல் இருப்பாரா என்பதும் பார்க்கும் ரசிகனுக்குத் தெரிந்திருக்கும். இவ்வளவு தெரிந்த பின், படத்தைப் பார்ப்பவரை கட்டிப் போடும் வகையில் திரைக்கதையை சுவாரசியமாக்க காதாசிரியர்/இயக்குநர் சிந்தித்து இருக்க வேண்டுமா வேண்டாமா? மொக்கப் படம் என்று சொல்ல வேண்டாம் என்று தான் நினைக்கிறேன் ஆனால் சொல்ல வைத்து விட்டார்களே என்று வேதனைப் படுகிறேன்.

என்னா ஸ்டார் காஸ்ட்! த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷா சரத், உமா ரியாஸ், கிஷோர், யூகி சேது, சம்பத், மது ஷாலினி, சந்தான பாரதி, ஜகன் மற்றும் பலர்! பிரகாஷ் ராஜ், கிஷோர், த்ரிஷா யூகி சேது தவிர மற்றவர்கள் எல்லாரும் ஓரிரு சீன்களில் தான் தலையைக் காட்டுகிறார்கள். இவர்களுக்குப் பதிலாக அந்தப் பாத்திரங்களில் எந்த துணை நடிகர் நடித்திருந்தாலும் சரியாகவே இருந்திருக்கும். அதுவும் யூகி சேது அவர் பாத்திரத்துக்கு சரியான தேர்வே இல்லை. நடிகர் கிஷோர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வருகிறார். அதுவே ஒரு வித நடிப்பு என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதில் குறிப்பிட்டு சொல்லும்படி மனத்தில் நிற்பது கமலின் மகனாக வரும் அமன் அப்துல்லா தான். மிகையில்லாத நடிப்பு. பாத்திரத்தை சரியாக உணர்ந்து நன்றாக நடித்துள்ளார். மொத்தப் படத்தில் ஒரே ஒரு சீன் மனத்தை தொடுகிறது. அது மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் ஒரு தொலைபேசி உரையாடல். மது ஷாலினியுடன் சில முத்தக் காட்சிகள் உள்ளன. அவையும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கமலுக்கு வயதாகிவிட்டதா இல்லை இயக்குநருக்கு அந்தக் காட்சியை சரியாகக் கையாளத் தெரியவில்லையா என்று தெரியவில்லை.

இது ஒரு பிரெஞ்ச் படத்தின் தமிழாக்கம். பிரெஞ்ச் படமே இவ்வளவு மொக்கையான திரைக்கதை உள்ளதாக இருந்திருந்தால் அதை தேர்வு செய்ததே தவறு. இல்லை இவர்கள் எடுத்த விதத்தில் தான் தவறு இருந்தது என்று எடுத்துக் கொண்டாலும் இயக்குநர்-தயாரிப்பாளர் குழு மொத்தப் பழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரே இரவில் நடக்கும் காட்சிகள், ஒரே பப்பில் நடக்கும் காட்சிகள். அதனால் வித்தியாசமாக எதுவும் செய்ய இயலாதது புரிகிறது. ஆனாலும் ஒரே இடத்தை ஹீரோவும் வில்லன்களும் சுத்தி சுத்தி வருவதும், பப்பின் strobe விளக்குகளினால் நமக்கு உண்டாகும் தலைவலியும் சொல்லி மாளாது. முதல் பாதியாவது சகித்துக் கொள்ள முடிகிறது. இரண்டாவது பாதி, படம் எப்போ முடியும் எப்போ எழுந்து போகலாம் என்று தவிக்க வைக்கிறது.

அவ்வளவு பெரிய ஹோட்டல்/pub, ஆனால் கரெண்டின் மெயின் சுவிட்சை அணைத்தால் ஜெனரேட்டர் மூலம் கரண்ட் வராமல் உள்ளது. கொஞ்சமாவது ரசிகனுக்கு மூளை உண்டு என்று யோசியுங்கப்பா!

கடைசி சீனில் அமன் அப்துல்லா தன் அம்மாவிடம் போனில் பேசும் காட்சியில் உள்ள வசனம் தசாவதாரம் கடைசி வசனத்தை நினைவு படுத்துகிறது. அங்கு மட்டும் சுகா தெரிகிறார். வேறு எங்கும் இல்லை. ஜிப்ரான் இசையும் இல்லை என்றால் இது த்ரில்லர் படம் என்று மாமியார் நாகம்மா மேல சத்தியம் பண்ணா கூட யாரும் நம்பமாட்டாங்க.

கமல் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அவர் நடிப்பின் இலக்கணம். இந்த ரோல் எல்லாம் அவருக்கு ஜுஜுபி. படத்தைப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட தாக்கம் ஒன்றே ஒன்று. தாய் தந்தையர் பிரிந்து அதன் நடுவில் வளரும் பிள்ளைகள் பாவம்.

thoongavanam

புறம் – சிறுகதை

“என் பெண்ணை நான் ஸ்ட்ரிக்டா வளர்த்திருக்கேன். காதல் கீதல்னு சொல்லிக்கிட்டு வந்தானா வெட்டிப் போட்டிருவேன்னு அவளுக்குத் தெரியும். வேற ஜாதி பையனை கல்யாணம் செஞ்சுக்கரதுல்ல ஒண்ணும் தப்பில்ல. ஆனா அவங்களுக்குப் பிறக்கிற குழந்தைங்க எந்த ஜாதியை சேரும்? நீங்களே சொல்லுங்க மாலதி, ஒரே குழப்படியா ஆயிடாது?”

என் மகள் வேறு ஜாதிப் பையனை மணக்கப் போகிறாள் என்று கேள்விப்பட்டு என் தெரு நட்பு ராதிகா கோவிலில் என்னைப் பார்த்ததும் என்னிடம் சொன்னதது தான் மேற்கூறிய கருத்து! நான் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்து கொண்டேன். இந்த மாதிரி பேச்சுக்கள் எல்லாம் எங்கள் தெரு பிள்ளையார் கோவிலில் தான் சுவாரசியமாக நடக்கும். சாமி கும்பிட வராங்களா இல்லை வம்புப் பேச வராங்களான்னே சந்தேகம் எனக்கு எப்பவும்.

அடுத்த வாரம் ஒரு மணி விழாவில் ராதிகாவை மறுபடியும் சந்திக்கும்படி நேர்ந்தது. அவள் கண்ணில் படாமல் தள்ளி போய் ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். மோப்பம் பிடித்து அருகில் வந்து என் பக்கத்து சேரில் உட்கார்ந்து விட்டாள். “நானும் என் பெண்ணுக்கு அலையன்ஸ் பார்க்க ஆரம்பிச்சிட்டேன் மாலதி. எங்க ஜாதில உங்களுக்கு நல்ல வரன் எதுனா தெரிஞ்சா சொல்லுங்க. அது சரி, நீங்க பொண்ணுக்கு கல்யாணம் உங்க வழக்கப்படி பண்ணப் போறீங்களா இல்லை பிள்ளை வீட்டு வழக்கப் படியா?”

thamboolam

நல்லவேளை அந்த சமயம் வேறு ஒருவர் ராதிகாவிடம் பேச வந்ததால் நான் வாய்ப்பை நழுவ விடாமல் அங்கிருந்து ஓட்டம் எடுத்தேன். மண மேடையில் மணி விழா காணும் தம்பதியினர் காலில் விழுந்து ஆசி வாங்கி, சாப்பிடக் கூட காத்திருக்காமல் கிளம்பிவிட்டேன்.

“நீங்களும் நில்கிரிஸ்ல தான் மளிகை சாமான் வாங்குவீங்களா? உங்களை நான் இங்கே பார்த்ததேயில்லையே” தோளைத் தொட்டுப் பேசியது யார் என்று திரும்பிப் பார்த்தேன். வேறு யார்? ராதிகா தான்.

grocery

“நம்ம தெருக் கடைல வெண்ணெய் ஸ்டாக் இல்லைன்னு சொல்லிட்டான். அதான் இங்க வாங்க வந்தேன்” என்று சொல்லிக் கொண்டே பில் போடும் இடத்துக்கு விரைந்தேன். என் கெட்ட நேரம் பில் போடும் கவுண்டரில் எனக்கு முன்னாடி நாலு பேர். வசதியாப் போச்சு ராதிகாவுக்கு. “அன்னிக்கு நீங்க உடனே கிளம்பிட்டீங்க போலிருக்கு. உங்க கூட பேசவே முடியலை. கல்யாணத்துக்குப் புடைவை எல்லாம் வாங்கிட்டீங்களா?”

“வாங்கியாச்சுங்க”

“போன தடவை பார்த்தபோதே கேக்க நினச்சேன், நீங்க சைவமாச்சே. பிள்ளை வீட்டுல அசைவம். உங்க பொண்ணுக்கு அசைவம் சமைக்கத் தெரியுமா?”

“அதெல்லாம் அவங்க பிரச்சினைங்க. நமக்கென்ன அதைப் பத்தி. கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தப் போறவங்க அவங்க ரெண்டு பேரும். சமைக்கறாங்க, சமைக்காமப் போறாங்க. நீங்க ஏங்க அதைப் பத்திக் கவலைப்படறீங்க?” சற்றே எரிச்சலுடன் பதில் சொன்னேன்.

“அதெப்படிங்க, அவ்வளவு லைட்டா சொல்றீங்க? வெஜிடேரியனா இருந்துட்டு நான் வெஜிடேரியன் சமைக்கணும்னா கஷ்டம் இல்லையா? என் பொண்ணு நான் வெஜ் பக்கத்துல வெஜ் சாப்பாடு இருந்தா கூட சாப்பிட மாட்டா. நாங்கல்லாம் ஹோட்டல் போனா கூட சைவ ஹோட்டல் தான் போவோம்.”

பதில் பேசாம பணத்தைக் கொடுத்து சாமானை வாங்கிக் கொண்டு வீடு வந்தேன். மாலை என் கணவர் வந்ததும், “இதப் பாருங்க நம்ம தெருல இருக்கிற ராதிகா வீட்டுக்குப் பத்திரிகை வைக்க வேண்டாம். எரிச்சலா வருதுங்க. எப்போப் பார்த்தாலும் நம்ம பொண்ணு கல்யாணத்தைப் பத்திக் குத்தலா சொல்லிக்கிட்டு இருக்கா.”

“அது எப்படி அவங்களை மட்டும் விட்டுட்டு மத்தப் பேருக்கு பத்திரிகை வைக்கிறது? அது சரி இல்லை மாலதி. கலப்புத் திருமணம்னா நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க தான். இதுக்கெல்லாம் கோபப்படக் கூடாது”

வேண்டா வெறுப்பாக அவர்கள் வீட்டுக்குச் சென்று பத்திரிகை வைத்தேன். அங்கேயும் விடவில்லை ராதிகா. “என்னங்க, உங்க தம்பி பெண்டாட்டியோட அத்தைப் பொண்ணு கூட இன்டர் கேஸ்ட் மேரேஜ் தானே செஞ்சா, ஒரே வருஷத்துல பிரிஞ்சிட்டாங்க இல்ல” என்று தன் கணவரைப் பார்த்துக் கேட்டாள். அவர் பாவம் நல்லவர். “என்ன ராதிகா, கல்யாணத்துக்கு அழைக்க வந்தவங்க முன்னாடி இப்படி பேசறே. அவங்களுக்கு என்ன பிரச்சினையோ பிரிஞ்சாங்க. எல்லாரும் அப்படியேவா இருப்பாங்க. சாரி சார். என் வைப் கொஞ்சம் இப்படி தான் சட்டுன்னு பேசிடுவா, நீங்க எதுவும் மனசுல வெச்சுக்காதீங்க. நாங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தறோம்” அப்படீன்னு எங்களை அவசர அவசரமா வெளியேற்றினார்.

சில மாதங்கள் கழித்து ஒரு நாள் என் கணவரின் அலுவலகத்தின் ஆபிஸ் டே விழா ஈசிஆர் ரோடில் ஒரு ரிசார்ட்டில் நடைபெற்றது. அங்கு சென்றிருந்த போது அவரின் சில உடன் வேலை செய்பவர்களிடம் பேசும்போது என் மகளின் திருமணப் பேச்சு வந்தது. என் மகள் எப்படி இருக்கிறாள், மண வாழ்க்கை எப்படி இருக்கு என்று ஒருவர் கேட்டதற்கு அவள் மகிழ்ச்சியாக இருப்பதை சொல்லிக் கொண்டிருந்த போதே, ஒரு கலீகின் மனைவி என்னைப் பார்த்து, “உங்க மகள் கலப்புத் திருமணம் எல்லாம் ஒரு சின்ன விஷயங்க. நான் வொர்க் பண்றது ஒரு MNCல. அங்கே நட்பு/காதல் எல்லாம் மொழி, கலாச்சாரம் எல்லாம் பார்த்து வரது இல்லைன்னு நான் நேரடியாவே பார்க்கிறேன். மதம், மொழி, இனம் எல்லாம் வேற வேற. ஆனா எப்படியோ லவ் வந்துருதுங்க” என்றார் சிரித்துக் கொண்டே!

ladieschatting1

காரில் திரும்பி வரும்போது “மாலதி, நம்ம தெரு ராதிகா அவங்களோட மக ஒரு கொரியன் பையனை லவ் பண்றா. இன்னிக்கு மத்தியானம் லஞ்சுக்கு அன்னலட்சுமி போயிருந்தேன். அங்கே ராதிகா கணவரைப் பார்த்தேன். அவர் தான் என்னிடம் சொன்னார். அந்தப் பையன் அந்த பொண்ணு ஆபிசிலேயே ஒரு பிராஜக்டுக்காக வந்திருக்கானாம். ரெண்டு பெரும் ஒரே ப்ராஜெக்ட்ல வேலை செஞ்சிருக்காங்க. கல்யாணம் செஞ்சுப்போம்னு ரொம்ப உறுதியா இருக்காங்களாம். சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார்.”

அப்படியே ஷாக் ஆயிட்டேன். “நீ போய் அவங்களை ஒன்னும் கேக்காத பாவம்” என்றார் என் கணவர். ஆனால் நான் அதற்குள் மனத்தில் பிளான் பண்ண ஆரம்பித்து விட்டேன். எனக்கு சில டப்பர்வேர் டப்பாக்கள் தேவையாக இருந்ததால் அடுத்த நாள் ராதிகா வீட்டுக்கு அதை சாக்கிட்டுப் போக முடிவு செய்தேன். அவள் டப்பர்வேர் சேல்ஸ் ரெப்.

கதவை தட்டியதும் திறந்த ராதிகா, என்னைப் பார்த்ததும் முகம் சுருங்கி வீட்டுக்கு வராம என்னை அப்படியே போக வைப்பது எப்படின்னு யோசிப்பது தெரிந்தது. வாங்க வாங்க என்று உள்ளே அழைகாமல் “ஒரே தலைவலி, என்ன விஷயம்?” என்று வாசலில் நிற்க வைத்தே கேட்டாள் ராதிகா.

“கோவிலுக்கு வந்தேன். அப்படியே கொஞ்சம் டப்பர்வேர் டப்பாக்கள் வேண்டியிருந்தது. அதான்  வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றேன்.

“இருங்க கேட்லாக் எடுத்து வரேன்” என்று உள்ளே சென்று எடுத்து வந்தாள்.

முகம் வாடி வதங்கி இருந்தது. அவளிடம் நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று முடிவுடன் வந்த நான் அவளின் சோகம் கப்பிய முகத்தைப் பார்த்ததும் ஏனோ வேறு எதுவும் கேட்கத் தோன்றவில்லை. வாங்க வேண்டிய ஐட்டம்களை டிக் செய்து கேடலாகை திருப்பிக் கொடுத்து விட்டுக் கிளம்பினேன்.

“மாலதி, என்னங்க ஒண்ணும் கேக்காம கிளம்பறீங்க?”

“இல்லையே வேணுங்கற ஐட்டம் மார்க் பண்ணிடேங்க”

“ப்ச் அது பத்தி இல்லைங்க. உங்களுக்கு விஷயம் தெரியும்னு எனக்குத் தெரியும். என் வீட்டுக்காரர் உங்க வீட்டுக்காரரைப் பார்த்த விஷயம் சொல்லிட்டாரு. ஆனாலும் அதைப் பத்தி ஒண்ணுமே கேக்காம கிளம்பறீங்களே?

“ஆறுதல் சொல்லலாம்னு தான் வந்தேன். ஆனா நீங்க சாதாரணமா தான் இருக்கீங்க. எதுக்குக் கேட்டு உங்களை வருத்தப்பட வைக்கனும்னு கேட்கலை.”

“எப்படி இருந்தாலும் சீக்கிரம் எல்லாருக்கும் தெரியப் போகுது. நானே சொல்லிடறேன். என் பொண்ணு ஆபிஸ்ல ஒருத்தனை லவ் பண்றா. அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு கண்டிப்பா சொல்லிட்டா. யாருன்னு கேட்டீங்கன்னா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க மாலதி. அவங்க ஆபிஸ்ல வேலை பார்க்கிற கொரியா நாட்டு ஆளு.” சொல்லும்போதே அழ ஆரம்பித்து விட்டாள் ராதிகா.

என் மகள் திருமணத்தின் போது என்ன தான் என்னை சீண்டி எரிச்சல் படுத்தியவளாக இருந்தாலும் ராதிகா புடைவை தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுவதைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது.

“ஐயோ ராதிகா, எதுக்கு நல்ல செய்திக்குப் போய் அழறீங்க. இந்தக் காலத்துப் பசங்க நல்ல விவரம் தெரிஞ்சவங்க. அவங்க எடுக்கிற முடிவு எல்லாம் ரொம்ப சரியா இருக்கும். நாம தான் பத்தாம் பசலியா பழைய பஞ்சாங்கமா இருக்கக் கூடாது.”

“எப்படிங்க இப்படி சொல்றீங்க? நானே உங்களை எவ்வளவு கொடச்சல் கொடுத்திருப்பேன். அதை எல்லாம் மனசுல வெச்சிக்காம எனக்குத் தைரியம் சொல்றீங்க. ரொம்ப சாரிங்க. உங்க பொண்ணு அசைவ உணவை எப்படி ஏத்துப்பான்னு கேட்டேன். இப்போ என் பொண்ணு….” முடிக்காம திரும்ப அழ ஆரம்பித்தாள் ராதிகா.

“உண்மையிலேயே நீங்க அழறதை நிறுத்திட்டு அந்தப் பையனை பத்தி நல்லா விசாரியுங்க. நல்ல குணமான பிள்ளைன்னா வேற என்ன வேணுங்க? அவங்க ரெண்டு பேரும் மகிழ்ச்சியா இருக்கணும் அதான் முக்கியம். பன்னாட்டு கம்பெனிகளின் வேலையும், அவர்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களையும் வரவேற்கும் நமக்கு வெளி நாட்டு மாப்பிள்ளைகளையும் வரவேற்கும் பக்குவம் வேணும் ராதிகா. நீங்க இன்னிக்கு உங்க பொண்ணு வந்த பிறகு நல்லா உட்கார்ந்து பேசுங்க. அந்தப் பையனையும் வீட்டுக்குக் கூப்பிட்டுப் பேசுங்க. கிழக்காசிய நாடுகளின் கலாச்சாரமும் நம் கலாச்சாரத்தை ஒத்தது தான். பெரியவங்களுக்கு மரியாதை கொடுப்பதில் இருந்து அம்மா அப்பா என்று கூப்பிடுவது கூட கொரிய நாட்டவர்கள் நாம தமிழ்ல அம்மா அப்பான்னு கூப்பிடற மாதிரி தான் கூப்பிடுவாங்க.”

“உங்கள்ட்ட பேசினது ரொம்ப தைரியமா இருக்கு மாலதி. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. கடவுளா பார்த்து தான் உங்களை இங்கு அனுப்பி என்னுடன் பேச வெச்சிருக்கார்” ராதிகா வாசல் வரை வந்து சிரித்த முகத்துடன் வழி அனுப்பினாள்.

அவள் வீட்டுக்கு என்னை அனுப்பி வைத்தது இந்துக் கடவுளா இருக்குமா கொரியக் கடவுளா இருக்குமா என்று யோசித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

cake

Photo courtesy from the sites below.

https://pixabay.com/en/indian-women-laughing-happy-323324/

http://katemcelweephotography.com/2012/01/best-of-2011-wedding-photography-reception-photos/

https://blog.itriagehealth.com/combat-high-grocery-bills-food-allergy/grocery-shopping-food-allergy/

http://trvramalingam.com/History.htm