திருவடி சேவை – பகுதி – 2

திருவடி சேவை பகுதி – 1 இங்கே.

காரைக்கால் அம்மையார் ஈசனிடம் கேட்பதும் இதுவே!

karaikalaammaiyar

இறவாத இன்ப அன்பு

வேண்டிப்பின் வேண்டு கின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும்

பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும்

வேண்டும்நான் மகிழ்ந்து பாடி

அறவாநீ ஆடும் போதுன்

அடியின்கீழ் இருக்க என்றார்.

இறவாத அன்பு வேண்டும் என்று முதலில் கேட்கிறார். பிறகு பிறவாமை. அப்படியும் மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை. கடைசியில், இறைவா உன் திருவடிக்கீழ் இருக்கும் முக்தி நிலை வேண்டும் என்று ஈசனிடம் கேட்கிறார்.

kamakshiamman

ஆதி சங்கரர் அம்பாளின் திருவடிகளை செளந்தர்யலகரியில் போற்றிப் பாடுகிறார்.

அம்மா!  உன் திருவடிகள் எம் போன்ற பக்தர்களைக் காக்கின்றன. பயத்தை அகற்றுகின்றன. உன்னைத் தவிர வேறு யார் எங்களைக் காக்க முடியும்?  கேட்பதற்கு அதிகமாகவே வரம் அருளும் தாய் அல்லவா நீ!  உன் திருவடியை வணங்குகின்றோம். எம்மைக் காத்து ஆரோக்கியமாக வாழ ஆசிர்வதிப்பாயாக! என்று வேண்டுகிறார்.

 

அபிராமி பட்டரின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆழ் நிலை தியானத்தில் இருந்த பட்டரிடம் அரசன் அன்று என்ன நாள் என்று கேட்க, அமாவாசையான அன்றைய நாளை பௌர்ணமி என்று கூறிவிடுகிறார் பட்டர். தியானத்தில் இருந்து வெளிவந்த அவர் தவறை உணர்ந்து, நெருப்புக் குழியின் மேல் நூறு கயிறுகளால் கட்டப்பட்ட ஒரு பலகையின் மேல் நின்று, ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறை அறுத்தபடி அபிராமியின் மேல பாடல்களை பாடி வந்தார். இவை தான் அபிராமி அந்தாதி என்னும் பாடல் தொகுப்பு. எழுபத்தியொன்பதாவது கயிற்றை அறுத்தபோது திரிலோக சுந்தரி, அவளின் ஒரு காது தோட்டைக் கழற்றி வானத்தில் எறிந்து பூரண நிலவாய் மாற்றிவிடுகிறாள். அமாவாசை பௌர்ணமி ஆனது! அவர் சொன்ன தவறான பதிலை உண்மையாக்கி விடுகிறாள். எல்லாம் அம்பாளின் திருவடியை சரணடைந்ததின் மகிமை.

மேலும் இருபத்தியிரண்டு பாடல்கள் அவளை போற்றி பாடி நூறு பாடல்களாக அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார் பட்டர். அம்பிகையின் திருவடியைச் சரணமென்று பற்றிக்கொண்டு அவளின் பொற்பாதங்கள்  தன் தலையில் எப்போதும் இருந்து அருள் செய்யட்டும் என நெக்குருகப் பாடினார். முதல் பாட்டில் அபிராமியின் அழகை, “குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே” என்று சொல்லிப் புகழ்ந்தார். பிறகு திருக்கரங்களை, “பனிமலர்ப்பூங் கணையும் கருப்பஞ்சிலையும் மென் பாசாங்குசமும் கையில் அணையும்” என்று பாடி பிறகு சேவடியைப் பற்றினார். திருவடியைத் தொட்ட பிறகு அதனை விட்டு அகல அவருக்கு மனம் வரவில்லை.

abirami-andhaadhi

3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.

5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள், 
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
 
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
 
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.

32: ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் 
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
 
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
 
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.

அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!

73: தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு, 
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
 
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
 
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.

ஏ, அபிராமி! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.

ஒவ்வொரு பாடலும் தேனில் ஊறிய பலாச் சுளை போல் இனிப்பானவை, பொருள் செறிந்தவை.

தொடரும் ..

மனைவி அமைவதெல்லாம்……. சிறுகதை

 

horoscope

“சுசீலா மைலாப்பூர்ல ஒரு ஜோசியர் இருக்காராம். ரொம்ப நல்லா ஜாதகம் பார்த்து சொல்றாராம். என் ப்ரெண்டு ஜானு சொன்னா. கார்த்திக்குக்கு இப்போ செய்யிற வேலை பிடிக்கலையாம். தினம் வீட்டுக்கு வந்ததும் வேலையை விட்டுடறேன்னு பயமுறுத்தறான். அவன் ஜாதகத்தைக் காட்டலாம்னு இருக்கேன். உன் பையன் ஜகன் ஜாதகத்தையும் எடுத்துக்கிட்டு வாயேன். என்ன சொல்றாருன்னு பார்ப்போம். பீஸ் கூட ஒரு ஜாதகத்துக்கு நூறு ரூபாய் தானாம்.”

“ப்ச் எனக்கு ஜாதகம் ஜோசியத்துல எல்லாம் நம்பிக்கையே போச்சு சவிதா. ஒவ்வொருத்தனும் இப்ப ஆயிடும் அப்ப ஆயிடும்னு சொல்றான். எங்க ஆச்சு?” சலித்துக் கொண்டாள் சுசிலா.

“இல்ல, இவரு சொன்ன மாதிரியே ஜானு புருஷனுக்கு ஒரே மாசத்துல வெளிநாட்டுல வேலை கிடைச்சுதாம். அவ நாத்தனார் புருஷனுக்கு வேலை போகாதுன்னு அடிச்சு சொன்னாராம். அவரு கம்பெனில நிறைய பேரை வேலையை விட்டு எடுத்துட்டாங்களாம், ஆனா இவரை வேலையை விட்டு அனுப்பலையாம். சும்மா தான் வாயேன்” கையைப் பிடிச்சு இழுக்காத குறையாகக் கூப்பிட்டாள் சவிதா.

சரி ஒரு நூறு ரூபாய் தானே. போய் பார்ப்போம் என்று சவிதாவுடன் டூ வீலரில் கிளம்பினாள் சுசிலா. ஜோசியர் இருந்த அறை ரொம்ப சின்ன அறை. வாசல் கதவில் ஜோசியர் குஞ்சிதபாதம் என்ற பலகை கோணலாகத் தொங்கிக் கொண்டிருந்தது. வெராண்டாவில் டாக்டர் கிளினிக்கில் இருப்பது போல கூட்டம் வழிந்தது. ஒரு பெரிய வெங்கடாஜலபதி படம் சீரியல் விளக்குகளுடன் மின்னியது. யாருக்குப் பின் யாரென்று அவர்களே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு முடிவு செய்து கொண்டிருந்தனர். வியாதியை விட பிரச்சினைகள் தான் அதிகம் போலிருக்கு என்று எண்ணினாள் சுசிலா. ஜோசியர், ஒருவருக்கு சொல்லும் ஜாதகப் பலன்கள், பரிகாரங்கள் எல்லாம் அங்கு இருந்த எல்லார் காதிலும் விழுந்தது. ப்ரைவசி என்பதெல்லாம் கிடையாது. ஆனால் ஒன்று, நேரம் கடத்தாமல் விறு விறுவென்று எல்லாரையும் பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தார். அரை மணி நேர காத்திருப்பில் இவர்கள் முறை வந்தது. முதலில் சவிதா கேட்க வேண்டியவற்றைக் கேட்டுக் கொண்டாள். பின் சுசிலா ஜகன் ஜாதகத்தைக் காட்டினாள். “ஆயிடும் மா இன்னும் மூணு மாசத்துல ஆயிடும்” என்றார் ஜோசியர். “இந்த மாதிரி தாங்க ஒவ்வொரு ஜோசியரும் சொல்றாங்க. மூணு மாசம் மூணு மாசம்னு நிறைய ஜோசியக்காரங்க சொல்லியே இப்போ அவனுக்கு முப்பத்தஞ்சு வயசாச்சு” என்றால் சுசீலா. “சோழி உருட்டிப் பார்த்து கரெக்டா பொண்ணு பேரு என்ன, எங்க இருக்கான்னு கூட சொல்ல முடியும். செய்யவா? ஆனா அதுக்கு ஆயிரம் ரூபாய் ஆகும்” என்றார்.

சரி நூறு ரூபாய் தண்டம். இதோடு கிளம்பலாம் என்று சவிதாவைப் பார்த்தாள் சுசிலா. அதற்குள் சவிதா “நீங்க போட்டுப் பார்த்து சொல்லுங்க சார்” என்றாள். அவர் உடனே கண்ணை மூடிக் கொண்டு எதோ மந்திரங்களைச் சொல்லி சோழியை உருட்டிப் போட்டார். பின் கூட்டல் கழித்தல் எல்லாம் செய்து, “உங்கம்மா பேர் என்ன சொல்லுங்க?” என்றார்.

“அம்மா பேர் ரமணியம்மா”

“உங்க பிள்ளையை கட்டிக்கப் போறவ பேரும் அது தான். ஊரு பெங்களூரு மைசூரு பக்கம். அவங்க வீட்டுக்கு கிழக்கால ஒரு அம்மன் கோவில் இருக்கும். நல்ல சக்தி வாய்ந்த அம்மன். மேற்கு பக்கத்துல ஒரு அரசாங்க அலுவலகம் இருக்கும். உங்க பிள்ளைக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கும்” என்றார்.

“பொண்ணு எங்க ஜாதி பொண்ணா இருக்குமா?”

“கண்டிப்பா உங்க ஜாதிப் பொண்ணு தாம்மா. வேற ஜாதிப் பொண்ணு வரா மாதிரி ஜாதகத்துல இல்லவே இல்லை. அதான் பொண்ணு பேரு கூட உங்கம்மா பேரு தானுன்னு சொல்றேனே” என்றார்.

சுசீலா பர்சில் ஐநூறு ரூபாய் தான் இருந்தது. சவிதா மீதி அறநூறு ரூபாயைக் கொடுத்தாள். “ஏய் ஒன்னும் கவலைப்படாதே. இவரு சொல்றது அப்படியே பலிக்குதாம். வெயிட் பண்ணிப் பார்ப்போமே” என்றாள் சவிதா.

அடுத்த மாதத்திலேயே ரெண்டு ஜாதகங்கள் வந்தன, ஒன்று ஹோசூர் இன்னொன்று பெங்களூர். சுசீலா ரொம்ப ஆர்வம் ஆனாள். “ஜகன் ரெண்டு ஜாதகம் வந்திருக்கு. நல்ல குடும்பம். ரெண்டு பேருக்குமே சென்னைல தான் வேலை. என்ன சொல்ற?”

“நானே பார்த்துக்கறேன், நீ தேடாதேன்னு எவ்வளவு தடவை சொல்றதுமா? சீக்கிரமே உனக்கு ஒரு நல்ல சேதியை சொல்லப் போறேன். பொறுமையா இரு.” என்று சொல்லிவிட்டு அகன்றான்.

சுசீலாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இது வரை அவன் பிடி கொடுத்தே பேசியது இல்லை. கணவரிடம் சென்று, “அவன் யாரையோ லவ் பண்றான் போலிருக்குங்க. யாரா இருந்தாலும் நாம சரின்னு சொல்லிடலாம். அவன் சந்தோஷம் தான் நம்ம சந்தோஷமும்.” என்றாள்.

wedding4

ஒரு வாரம் கழித்து ஒரு நாள் அவர்கள் டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது, டிவியை மியுட் பண்ணிவிட்டுப் பேச ஆரம்பித்தான், “அம்மா அப்பா நான் சொல்றதைக் கேட்டு நீங்க அதிர்ச்சி அடையக் கூடாது. என் ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒருத்தரை நான் விரும்பறேன். பெங்களூரில் இருந்து மாத்தலாகி சென்னை வந்து ஒரு வருஷம் இருக்கும். பழகினதில் ரொம்பப் பிடிச்சிருக்கும்மா.”

“அடேய் பேரு என்னடா?” என்றாள் சுசீலா.

“பேரு கொஞ்ச பழங்காலப் பேரு தான்மா. ரமணி.”

ஜிவ்வென்று மகிழ்ச்சி தலைக்கு ஏறியது சுசிலாவுக்கு. “பெங்களூர்ல அவங்க வீட்டுப் பக்கத்துல ஏதாவது அம்மன் கோவில் இருக்காடா? தெரியுமா?”

“நான் போன வாரம் அபிஷியலா பெங்களூர் போயிருந்த போது அவங்க வீட்டுக்குப் போய் அவங்க அம்மா அப்பாவை சந்திச்சிட்டு வந்தேன் மா. வாராஹி அம்மன் கோவில் இருக்கு. அவங்க தெரு பேரே வாராஹி அம்மன் டெம்பிள் ஸ்ட்ரீட் தான். BSNL ஆபிஸ் பக்கத்து கட்டடத்தில் தான் இவங்க பிளாட் இருக்கு.”

திக்கு முக்காடிப் போனாள் சுசீலா. ஒரு மூச்சு விட மறந்து அடுத்த மூச்சை இழுத்தாள். “கோச்சுக்காதடா, நம்ம ஜாதி தானே?”

“ஆமாம்மா”

“அப்புறம் ஏண்டா அதிர்ச்சி அடையக் கூடாதுன்னு சொன்ன. எவ்வளவு சந்தோஷமான விஷயம். உனக்குப் பிடிச்சா மாதிரி பொண்ணு கிடச்சுதேன்னு சந்தோஷம் தானேடா படப் போறோம்.”

“பொண்ணு இல்லம்மா பையன்.”

LGBTflag

 

 

ரஜினி முருகன் – திரை விமர்சனம்

Rajini-Murugan-Movie-New-Stills

முழு நீள நகைச்சுவைப் படம் என்று முன்பெல்லாம் சில படங்களுக்கு விளம்பரப் படுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு படம் தான் ரஜினி முருகன். என்ன கொஞ்சம் நீஈஈளப் படம்! அது தான் கஷ்டம். இருபது நிமிஷத்துக்கு வெட்டி எடுத்து விட்டால் படம் இன்னும் நன்றாக இருக்கும்.

மதுரையில் நடக்கும் கதை. அதனால் அடி தடி கன்பிர்ம்ட். சமுத்திரக்கனி நல்ல வில்லனாக பார்ம் ஆகி வருகிறார். கடைசியில் தான் கொஞ்சம் காமெடி பீசா அவரை ஆக்கிடறாங்க. சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சூரி.  அதனால் சமயத்தில் நாம பார்க்கிற படம் வருத்தப் படாத வாலிபர் சங்கமா இல்லை ரஜினி முருகனா என்று சந்தேகம் வருகிறது. முன்னதில் சத்யராஜ் கெத்து காட்டியிருப்பார். இந்தப் படத்தில் ராஜ்கிரண். நல்ல பாத்திரத் தேர்வு! கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். முன்னாள் நடிகை மேனகாவின் மகள். அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

சிவகார்த்திகேயன் நடனம் ஆடுவதிலும், நடிப்பதிலும் நல்ல முன்னேற்றம் காட்டுகிறார். அவருக்குத் தகுந்த பாத்திரமாகத் தேர்வு செய்து நடிப்பதால் அவர் செயல் திறனும் நன்றாக உள்ளது. இயக்குநர் பொன்ராம் ஒரு சாதா கதையையும் சிவகார்த்திகேயனையும் ஒரு சேர நன்றாகக் கையாண்டிருக்கிறார். திரை அரங்குக்குப் போய் ஒரு இரண்டரை மணி நேரம் டைம் பாசுக்கு உகந்த லைட்டான படம் இது. எந்த இடத்திலும் மெலோடிராமா இல்லாமல் கதை கொஞ்சம் சீரியஸ் ஆகும்போது நகைச்சுவையை இயக்குநர் உள்ளே நுழைத்துப் படத்தை சுவாரசியமாக்குகிறார்.

நிறைய பாடல்கள். {இசை டி.இமான்} சிவகார்த்திகேயனும் கீர்த்தி சுரேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே நமக்கு பக்கென்றாகிவிடுகிறது. ஏனென்றால் உடனே ஒரு டூயட்! இதைத் தவிர மதுரை மண் மணக்க பல ஆடல் பாடல்கள்.

இந்தப் படம் ஒரு பொழுதுபோக்குச் சித்திரம் அதனால் தயாரிப்பாளர்கள் திருப்பதி பிரதர்ஸ் பணம் பண்ணிவிடுவார்கள். பொங்கல் ரிலீசில் இது தேறிவிடும் என்பது என் கணிப்பு. எல்லாமே ஒப்பீடு தானே. ஆனால் இதே மாதிரி இன்னொரு படம் சிவகார்த்திகேயன் பண்ணினால் அலுத்துவிடும்.

 

கெத்து – திரை விமர்சனம்

gethu1

பொங்கல் திரைப்பட புக்கிங் ஆரம்பித்து விட்டது என்ன படம் முதலில் போகலாம் என்றார் கணவர். ரஜினி முருகன் என்றேன் நான். ஆன் லைன் புக்கிங் பார்த்தபோது ரஜினி முருகன் படத்திற்கு இன்றைய காட்சிகள் புக் ஆகிவிட்டன. அடுத்து தாரை தப்பட்டை – அதுவும் அரங்கம் மழுக்க நிரம்பி விட்டது. கெத்து அல்லது கதகளியா என்று டாஸ் போட்டபோது கெத்துக்குத் தலை விழுந்தது. அது ஒரு குறியீடு என்று அப்பொழுது புரியவில்லை. இன்று பார்க்கும்போது தலை அறுபட்டு விழுந்தது!

படம் இரண்டு மணி நேரம் தான். இரண்டு யுகமாகக் கழிந்தது. திரைக் கதை எழுதும் நல்ல எழுத்தாளர் எவரேனும் இப்படத்தைப் பார்த்தால் திரை அரங்கிலேயே உயிரை மாய்த்துக் கொள்வர். அங்கேயும் இங்கேயுமாக அலைபாய்கிறது கதை. ஹீரோ சமத்துப் பையனாக, லைப்ரேரியனாக இடைவேளை வரை வருகிறார். ஆனால் திடீரென்று தந்தையைக் காக்கும் பொருட்டு அவர் எடுக்கும் வீர தீர அவதாரத்துக்கு என்ன முன் பயிற்சி எடுத்தார் என்பது புரியவில்லை. இயல்பிலேயே கெத்து இரத்தத்தில் ஊறியிருந்து அப்பொழுது வெளிப்பட்டது என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் போல!

கண்ணைக் கவரும் இயற்கை எழில் கொஞ்சும் குமிளி/கொடைக்கானல் பகுதியைப் பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி. நன்றி ஒளிப்பதிவாளர் சுகுமார். சத்தியராஜ் ஈகோ பார்க்காமல் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக வருகிறார். அவர் பங்கிற்கு மிக நன்றாக செய்துள்ளார். எமி ஜேக்சன் ஹீரோயின். ஐ படத்தில் வந்த பெண்ணா என்று சந்தேகம் வரும் அளவு இப்படத்தில் ரொம்ப சுமாராக இருக்கிறார்.

படத்தில் இரண்டு வில்லன்கள். ஒன்று, கதாசிரியரே வில்லன் என்று கதையில் கொண்டு வரும் விக்ராந்த். இன்னொருவர் மறைமுக வில்லன். அவர் பெயர் ஹேரிஸ் ஜெயராஜ். அவர் படத்துக்கே வில்லன். அதுவும் பின்னணி இசையின் மூலம் திரை அரங்கில் ஒவ்வொருவரையும் தனித் தனியாகக் கொன்று விடுகிறார்.

ரியல் வாழ்க்கையில் பணக்கார வீட்டுப் பிள்ளை ஸ்டாலின். ஆனாலும் பணத்தை வேஸ்ட் பண்ணாமல் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக கதை, திரைக் கதையைத் தேர்ந்தெடுத்து தயாரித்து நடிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

கெத்து – வெத்து! {படத்துக்குப் பெயர் வைக்கும்போது இப்படி ரைமிங்கா கிண்டல் செய்ய ஏதுவா பெயர் வைக்காதீங்கப்பா }

gethu

 

 

பாஜிராவ் மஸ்தானி – திரை விமர்சனம்

bajirao

ஒவ்வொரு சீனும் செதுக்கி செய்யப்பட்டிருக்கிறது. படத்தில் உள்ள பிரம்மாண்டத்தை சொற்களால் வடிக்க இயலாது. சஞ்சய் லீலா பன்சாலி திரையில் கவிதையை வார்ப்பதில் சமர்த்தர், இந்த மாதிரி ஒரு காதல் கதை அவர் கையில் கிடைத்துவிட்டால் அதை வார்ப்பதில் அவர் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார் என்பதை ஊகிக்க முடியும்! அதைத் திரையிலும் காணலாம்.

எப்பவுமே முக்கோணக் காதல் கதை மிகவும் சுவாரசியம் மிக்கது. அதில் இக்கதை உண்மை கதையின் பிரதிபலிப்பும் கூட! மதம், கடமை, காதல், மனைவிக்குப் பின் வரும் இன்னொரு துணைவி என்று பல கோணங்களில் கதை கவர்கிறது.

பாஜிராவ் சரித்திர புகழ் வாய்ந்த மராத்தா பேஷ்வா. தன் புத்தி சாதுர்யத்தால் எப்படி இள வயதில் பதவியை அடைகிறார்  என்பதில் படம் ஆரம்பிக்கிறது. ரன்வீர் சிங் பேஷ்வாவாக வாழ்ந்திருக்கார். வீரம், காதல், நேர்மை, கோபம், கனிவு, விரக்தி, அவமானம் என்று பலப் பல உணர்வுகளை இயல்பாகக் காட்டி நடித்துள்ளார். அவர் உடல் மொழி அற்புதம். இப்படம் அவரைச் சுற்றியே அமைகிறது.

அழகும் அறிவும் பண்பும் நிறைந்த அவர் மனைவியாக பிரியங்கா சோப்ரா {காஷி பாய்}. காதல் மனைவியாக, வீராங்கனையாக, இஸ்லாமிய பெண்ணாக தீபிகா படுகோனே {மஸ்தானி}. இருவருமே பிரமாதமாக செய்திருந்தாலும் பிரியங்கா சோப்ரா பாத்திரத்தை நன்குணர்ந்து சற்றே கூடுதல் உழைப்பைக் கொடுத்து அதிகமாக ஸ்கோர் செய்து விடுகிறார். பாரம்பரியத்திலும் கட்டுக் கோப்பாக வாழ்க்கையை நடத்த வேண்டும் என்கிற பிடிவாதத்திலும் எதற்கும் துணியும் ராஜ மாதாவாக தன்வி ஆஸ்மி {ராதா பாய்}. அவர் வில்லித் தனத்தை அதிகமாகக் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மற்ற பாத்திரங்களில் வரும் அனைவருமே சிறந்த தேர்வு.

இசை – உலகத் தரம். பின்னணி இசையும் சரி {சஞ்சித் பல்ஹாரா}, பாடல்களும் சரி அருமை. இயக்குநரே இசை அமைப்பாளரும், அதனால் அவருக்குத் தேவையானதை அவரால் கொண்டு வர முடிந்திருக்கிறது. அதே போல ஒளிப்பதிவும் மிக நன்று. எடிடிங் தான் கொஞ்சம் சொதப்பல். கத்திரி போட்டு இன்னும் படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கலாம்.

பதினைந்து வருட உழைப்பு இந்தப் படம் என்று தெரிகிறது. ஆடை அலங்காரத்தில் இருந்து செட் வடிவமைப்பு, {அதுவும் அந்தக் கண்ணாடி மாளிகை} சண்டை காட்சிகளின் நேர்த்தி, CG அனைத்திலும் அந்த பதினைந்து வருட உழைப்புப் பிரதிபலிக்கிறது. நடனங்கள் அனைத்தும் மிகவும் அழகு! பண்டிட் பிர்ஜு மகராஜ் இயக்கியுள்ள தீபிகா படுகோனே ஆடும் ஒரு நடனம் மிகவும் அருமை. அதே போல ரன்வீர் வெற்றிக் களிப்பில் ஆடும் ஒரு நடனமும்!

பேஷ்வா பாஜி ராவுக்கு இஸ்லாமிய துணைவி உண்டு என்பது சரித்திரம். ஆனால் அந்தக் கருவை மட்டும் வைத்துத் திரைக் கதையை எழுதியிருக்கும் பிரகாஷ் கபாடியாவின் கற்பனைத் திறம் படத்தை உயிரோட்டம் உள்ளதாக ஆக்கியுள்ளது. வசனங்கள் நறுக்குத் தெறித்தாற்போல் கச்சிதம்! பொருள் செறிந்தவையாகவும் இருப்பது படத்துக்குப் பலம் சேர்க்கின்றது. காதல், பாசம், வன்மம், சூழ்ச்சி இவை எல்லாம் ஒரு அரசாங்கத்தில்/குடும்பத்தில் எப்படி விளையாடுகிறது என்பதை குழப்பமில்லாத திரைக்கதையின் மூலம் வைத்து படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறார்.

சரித்திரக் கதைகளையும், காதல் கதைகளையும் பார்ப்பதில் விருப்பம் உள்ளவர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்து, தவற விடாதீர்கள் :-} நான் படத்தை சப்டைட்டிலுடன் பார்த்தேன்.

bajirao1