ஜில் ஜங் ஜக் – திரை விமர்சனம்

jiljungjak

படத்தில் என்ன புதுமை? ஹீரோயின் கிடையாது. அது நல்ல விஷயம் தான். கதையை சொல்லும் விதத்திலும் பல புதுமைகளை முயற்சி செய்திருக்கிறார்கள் அனால் அவை எடுபடவில்லை. முழு நீள நகைச் சுவை படம் தான் ஆனால் வசனங்களில் நகைச்சுவை கம்மியாக இருப்பதால் சர்க்கரை குறைவான டீ போல சுவை குன்றி உள்ளது படம்.

ஆர்.ஜே.பாலாஜி, நாசருடன் படம் ஆரம்பிக்கும்போது சுவாரசியமாகத் தொடங்கும் படம் வெகு விரைவில் உப்பச் சப்பு இல்லாமல் நகரத் தொடங்குகிறது. Funky ஹேர்ஸ்டைலில் சித்தார்த் வருவதும், பொட்டல் காட்டில் கதையின் பெரும் பகுதி நடப்பதும், லெதர் ஜெக்கெட்டில் பல பாத்திரங்கள் சுற்றுவதும், துப்பாக்கி வைத்து டுமீல் டுமீல் என்று கண்டமேனிக்கும் சுடுவதும் ஒரு கௌபாய் பட பீலை இப்படம் தருகிறது. நடுவில் அவர்களுக்கே ரஷ் பார்க்கும்போது அப்படி தோன்றியிருக்கும் போலிருக்கு, ஜெய் சங்கர் பெயரை திடீரென்று ஒரு கதாப் பாத்திரம் தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று குறிப்பிடுகிறது.

போதை மருந்து கடத்தலை ஒரு காரின் மூலம் எப்படி புதுமையாகக் கடத்துகிறார்கள் என்று ஆரம்பிக்கும் படம் இடைவேளைக்குப் பிறகு தடம் மாறி தாறுமாறாக ஓடுகிறது. நடித்தவர்களுக்கே கதை எப்படி போகிறது என்று புரிந்திருக்காது.

இசையிலும் புதுமை செய்ய எண்ணி சண்டைக் காட்சியின் பின்னணியில் கர்நாடக சங்கீத இசையும், ஓரிடத்தில் ஒரு தொடர் ஆலாபனையும் வருகிறது. கொஞ்சம் வித்தியாசமான முயற்சி தான், மோசம் என்று சொல்வதற்கில்லை. இசை விஷால் சந்திரசேகர். பாடல்கள் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை ஷூட் த குருவி உட்பட.

எடிடிங்கிலும் புதுமை என்று ஒரே சமயத்தில் துண்டு துண்டாக வெவ்வேறு இடங்களில் நடக்கும் காட்சிகளை ஒன்றுக்குப் பின் ஒன்றாகக் காட்டுகின்றனர். கதையில் புரிவதற்கு ஒன்றும் இல்லை {ஏனென்றால் கதையே இல்லை}என்பதால் இப்படி காட்டுவதாலும் ஒன்றும் நஷ்டம் இல்லை. சித்தார்த்தின் தாத்தாவின் துப்பாக்கி கிளைமேக்சில் எப்படி திடீரென்று சுடுகிறது என்பது சுத்தமாகப் புரியவில்லை.

சித்தார்த் நன்றாக நடித்திருக்கிறார். மொத்த வசனத்தில் தொண்ணூறு சதவிகிதம் அவர் தான் பேசுகிறார். வெள்ளத்தின் போது சென்னை/கடலூர் மக்களுக்கு நல்ல உதவிகள் செய்தார். அதனால் அவர் மேல் கூடுதல் பாசம் வந்துவிட்டது. நல்ல கதை & இயக்குநரை அடுத்த முறை கவனத்துடன் தேர்ந்தெடுக்கவும்! Better luck next time Sidharth.

jjj

காதல் வாழ்க!

love

காதல் – நான் வளரும் பொழுது என்னுடைய பதின் பருவத்தில் அது ஒரு கெட்ட வார்த்தை. யாராவது தெருவில் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களின் நடவடிக்கைகள் அத்தெரு சிறுவர் சிறுமிகளால் மறைந்திருந்து கூர்ந்து கவனிக்கப் படும். ஏனென்றால் அந்த வயதில் காதல் என்றால் என்ன என்று சரியாகப் புரிந்து கொள்ள முடியாத, ஒரு புது உணர்வாக அது இருந்ததே காரணம்.

இப்பொழுது எல்கேஜி பசங்களே என் கிளாசில் கேஷவ் ராம்னு ஒரு பையன் இருக்கான், அல்லது யாழிநின்னு ஒரு பொண்ணு இருக்கா, நான் லவ் பண்றேன், பெரியவள்/ன் ஆனதும் அவனை/அவளை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லி அம்மா மனத்தில் எளிதாக பீதியை கிளப்பி விடுகின்றார்கள்.

babylove1

திருமணத்திற்கு முன் ஆணோ பெண்ணோ எதிர்பாலார் யாரிடமாவது சற்றே ஈர்ப்பு இல்லாமல் தங்கள் இளமையைக் கடந்திருக்க முடியாது. ஆனால் அந்த ஈர்ப்பு வெறும் இனக் கவர்ச்சி என்கிற தகுதியில் பலருக்கும் நீர்த்து விடும். காதலாக மாறும் தன்மையும் சக்தியும் சில ஈர்ப்புகளுக்கே உண்டு.

பல்லாயிரக் கணக்கான வெற்றி பெற்ற காதல் திருமணங்கள் உலகம் முழுவதும் காதலின் உன்னதத்தை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன! திருமணத்தில் முடியாத காதலும் அமர காவியமாக நம் மனத்தில் நிலை பெறுகின்றன.

புகழ் பெற்றவர்கள் என்றால் அவர்கள் காதலும் புகழைப் பெறுகின்றன. ஆனால் வீட்டு வேலை செய்பவருக்கும், பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்பவருக்கும் தான் காதல் அரும்புகின்றது. அவற்றில் சில திருமணத்தில் முடிந்து, மகிழ்ச்சியான வாழ்வாக, இன்பத்திலும் துன்பத்திலும் விட்டுக் கொடுக்காமல் ஈருடல் ஒருயிராகச் தொடர்கிறது. ஆனால் அதிலும் பல நிறைவேறாக் காதலாக மாறி அத் துயரம் மனத்தில் ரணமாக அவர்கள் வாழ்நாள் முழுதும் வலிக்க வைக்கிறது. காலம் வலியை குறைக்கும் என்பது உண்மை தான், ஆனால் வலியை முற்றிலுமாகப் போக்காது.

வெளி நாடுகளில் காதல் திருமணங்கள் தான் இயல்பு. நம் நாட்டில் தான் பெற்றோர்களால் இன்றும் பெரும்பாலும் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. அதனால் தான் காதலிக்கிறேன் என்று ஒரு பெண்ணோ பையனோ பெற்றோரிடம் துணிந்து சொல்லி திருமணத்திற்கு அவர்கள் சம்மதத்தை வாங்க பயப்படுகிறார்கள்/யோசிக்கிறார்கள். இதற்கு முக்கிய இரு காரணங்கள் ஜாதி, அந்தஸ்து. எத்தனையோ பெற்றோர்கள் ஒரே ஜாதியாக இருப்பினும் ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசத்திற்காக மறுப்புத் தெரிவித்துள்ளனர். காதல் ஜோடியைப் பிரித்து தாங்கள் விருப்பப் பட்டவர்களுக்கே மணம் முடித்துள்ளனர். வாழப்போவது மகனோ மகளோ என்று யோசிக்காமல் தங்கள் கௌரவமே முக்கியம் என்கிற வறட்டுப் பிடிவாதத்தால் வரும் செயல் இது.

இதுவே காதல் ஜோடிகள் வெவ்வேறு ஜாதியாக, மொழியாக, இனமாக, மதமாக இருப்பின் குடும்பத்தில் அடி தடி வெட்டுக் குத்து தான். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு பெற்றோர்களே பிள்ளைகள் இம்மாதிரி தங்கள் சாதியைச் சேராத காதலி/காதலனை அறிமுகம் செய்யும் போது இன்முகத்துடன் உடனே சம்மதம் கூறி ஆசி வழங்குகிறார்கள்.

நமக்குப் பிறக்கும் குழந்தைகள் நமக்குச் சொந்தம் கிடையாது. அப்படிச் சொந்தம் கொண்டாடுவதில் தான் பிரச்சினை தொடங்குகிறது. பிறந்த பின் அவர்கள் தனி மனிதர்கள். அவர்களின் விருப்பு வெறுப்புகளும் அவர்களுக்கே உரித்தானவை. பதினெட்டு வயது வரை நல்ல முறையில் அவர்களை வளர்த்து விட்ட பிறகு அவர்கள் சுயமாக சிந்தித்து செயல்படக் கூடியவர்கள் என்று நம்பிகை பெற்றோருக்கு வரவேண்டும். உதவி கேட்டாலன்றி அவர்களைத் தனித்து முடிவெடுக்க விடுவது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சிறந்தது. தவறாக முடிவெடுக்கும் போது அறிவுரை கூறுவது பெற்றோரின் கடமை, அதையும் மீறி அவர்கள் செயல்பட்டால் அது அவர்களின் பொறுப்பு என்று தள்ளி நின்று பார்ப்பதே அறிவுடைமை.

பயத்துடன் வளர்க்காமல் எதையும் பெற்றோரிடம் சொல்லி அவர்களின் ஆதரவை பெறலாம் என்கிற நம்பிக்கையோடு வளர்த்தாலே பல தற்கொலைகளும் தவறான முடிவுகளும் தடுக்கப் படும். தோளுக்குப் பின் வளர்ந்த பிறகு உண்மையிலேயே அவர்கள் தோழர்கள் தாம்.

காதல் வாழ்க!

lovesmiley

விசாரணை – திரை விமர்சனம்

visaranai

போலிஸ், அரசியல் அமைப்பு இவர்களின்  கையில் உள்ள அதிகாரத்தினால் ஏற்படுத்தப் படும் மனித உரிமை மீறலை முகத்தில் அறையும்படி பதிய வைத்திருக்கிறார் வெற்றிமாறன். இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, ஒரு டாகுமெண்டரி மாதிரி இல்லாமல் சுவாரசியமாக திரைக்கதையை அமைத்து, திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கும் தயாரித்த தனுஷுக்கும் வாழ்த்துகள். எப்போதோ ஒரு முறை அத்திப் பூத்தார் போலத் தான் இம்மாதிரி திரைப்படங்கள் வெளிவருகின்றன. .

திரு சந்திர குமார் எழுதிய LockUp என்ற தன் சொந்தக் கதையினை தழுவி எடுக்கப்பட்டப் படம் விசாரணை. படத்தின் தலைப்பான விசாரணையே படம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்திவிடுகிறது. செய்யாத குற்றத்துக்காக விசாரணைக் கைதிகளாக துன்புறுத்தப்படும் நான்கு இளைஞர்களின் கதை தான் விசாரணை. போலிசிற்கு மேலதிகாரிகளிடம் வரும் ப்ரெஷர், அரசியல்வாதிகளிடம் இருந்து வரும் இவர்களால் மறுக்க முடியாத உத்தரவுகள், அதனால் அவர்கள் செய்ய முற்படும் தவறான காரியங்கள், அவை ஏற்படுத்தும் விளைவுகள், அதனை சரிக்கட்ட அவர்கள் பலி கடாவாகக் கொடுப்பது என்ன/யாரை என்பது தான் “விசாரணை” படத்தின் கதைக் கரு.

இதில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நூற்றுக்கு நூறு சரியான தேர்வு. ஆந்திரா போலிஸ் ஸ்டேஷனில் ஆரம்பிக்கும் படம் பின் பாதியில் தமிழ்நாடு போலிஸ் ஸ்டேஷனுக்குக் மாறுகிறது. ஆனால் போலிஸ்காரர்கள் நடந்து கொள்ளும் முறை ஆந்திராவானாலும் தமிழ்நாடு ஆனாலும் ஒண்ணே தான் என்பதை படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அட்டைக்கத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர், தெலுங்கு இன்ஸ்பெக்டராக அஜய் கோஷ், ஆனந்தி, மிஷா கோஷல் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் வாழ்ந்து இருக்கின்றனர். மற்ற பாத்திரங்களில் வரும் அனைவரும் மனத்தில் நிற்கின்றனர். அது வெற்றிமாறன் உருவாக்கியுள்ள கதாப்பாத்திரங்களின் அமைப்பிற்கும், நடிப்பை வெளிக் கொண்டுவந்திருக்கும் அவரின் திறனுக்கும் ஒரு சான்று.

கனமான கதைக்கு பின்னணி இசையின் பங்களிப்பு மிக மிகவும்! ஜி.வி.பிரகாஷ் பல இடங்களில் இசையமைக்காமல் அமைதியைக் கொடுத்துப் படக் காட்சிகளின் தீவிரத்தை உணர்த்தியிருக்கிறார். அவரின் இந்த maturityக்கு பாராட்டுகள்.

விசாரணைக் கைதிகளின் பெயர்களின் மூலமும் அவர்களின் சொந்த ஊர்களின் பெயர்களின் மூலமும் பல குறியீடுகளை வைத்துள்ளார் வெற்றிமாறன். இன்னும் சொல்லப் போனால் பல நுட்பமான நுண்ணரசியல் frameக்கு frame உள்ளது என்பது படத்தை ஊன்றிப் பார்த்தால் தெரியும். அதனால் தான் இந்தப் படம் 72 Venice Film festivalல் Amnesty International Italia Award வாங்கியுள்ளது.

எதையும் sugar coat பண்ணாமல் உள்ளதை உள்ளபடி காட்டியுள்ளார் வெற்றிமாறன். அதனால் ஒவ்வொரு சீனும் நம் மனத்தில் பரிதவிப்பை ஏற்படுத்துகிறது. ஏழை பணக்காரன் என்றில்லாமல் போலிஸ் பிடியில் சிக்கிக்கொண்டால் நம் தனிப்பட்ட உரிமையை நினைத்துக் கூட பார்க்கமுடியாது என்பதை உணர்த்துகிறார் இயக்குநர். இது நம் நாட்டுக்கு மட்டும் பொது அல்ல பல்வேறு நாடுகளிலும் நடக்கும் அவலம் தான். அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொருவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அளவுக்கும் போக முற்படுவான் என்பதை நாம் பார்க்கிறோம்.படத்தின் க்ளைமேக்சும் போலிசின் சூதையே காட்டுகிறது.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் வரும் படங்களுக்கு நடுவில் இந்த மாதிரி திரைப் படங்களையும் வரவேற்று வெற்றி பெற வைக்க வேண்டியது தமிழ் ரசிகர்களாகிய நம் கடமை என்றே சொல்லுவேன்.

வாழ்த்துகள் team விசாரணை!

visaranai1

இறுதிச் சுற்று – திரை விமர்சனம்

irudhi-suttru-20150609120008-13790

திரைக் கதை – அது ஒரு படத்தை எவரஸ்ட் உயரத்துக்கும் கொண்டு செல்லும், அதள பாதாளத்தில் தள்ளவும் செய்யும். இந்தப் படத்தின் திரைக்கதை முதல் பிரிவைச் சேர்ந்தது. படம் திரையில் ஓடும் நேரம் வெறும் 114 நிமிடங்கள் தான். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு துளி அதிகப்படியான சதை இல்லை. சுதா கோங்கரா என்று பெண் இயக்குநர் எழுதி இயக்கியயுள்ள உலகத் தரம் வாய்ந்தப் படம் இறுதிச் சுற்று. துணை எழுத்தாளர்கள் சுனந்தா ரகுநாதன் & ராஜ்குமார் ஹிரானி. இவர்களுக்கு மிகப் பெரிய பாராட்டுப் பூங்கொத்து உரித்தாகுக!

மாதவன் ஒரு பாக்சிங் கோச். விளையாட்டுத் தலைமை கமிட்டித் தலைவர் நடத்தும் அரசியலால் இந்தியாவின் நம்பர் ஒன் கோச் ஆன மாதவன் அவருக்கு உரிய மரியாதை பறிக்கப்பட்டு ஹிஸ்ஸார் நகரில் இருந்து தண்டனையாக பாக்ஸிங்கில் வாய்ப்புகள் அதிகம் இல்லாத சென்னைக்கு மாற்றப்படுகிறார். அங்கு ஒரு மீனவக் குப்பத்தைச் சேர்ந்த பெண்ணிடம் உள்ள திறமையைக் கண்டுபிடித்து அவளை உலக அரங்கில் மிளிர வைக்கப் பாடுபடுகிறார் மாதவன்.

ரித்திகா சிங் {நிஜ வாழ்விலும் பாக்சர்} மாதவனிடம் பாக்சிங் கற்கும் மாணவியாக துள்ளித் திரிந்தும், பம்பரமாகச் சுழன்றும், உணர்ச்சிகளை கச்சிதமாகக் காட்டியும் வெளுத்து வாங்கியிருக்கார். புது முகம் என்று எவரும் நம்ப மாட்டார்கள். மாதவனும் ரித்திகாவும் இந்தப் படத்தில் அவர்கள் பாத்திரங்களின் தன்மையை நன்குணர்ந்து நூத்துக்கு இருநூறு சதவிகித ஈடுபாட்டோடு நடித்திருக்கிறார்கள். ஒரு கோச்சும் வெற்றிக் கனியை பறிக்கத் துடிக்கும் விளையாட்டு வீராங்கனையும் காட்டும் அர்ப்பணிப்பும் அதீத ஈடுபாடும் ஒவ்வொரு நொடியிலும் திரையில் தெறிக்கிறது.

ரித்திகா சிங் முதலில் மனமுவந்து கோச்சிங்கிற்கு வருவது இல்லை. அந்த ஆரம்பத்தில் இருந்து மாதவனை புரிந்து கொண்டு அவருக்காக இறுதிச் சுற்று வரை போராடும் அவரின் கதாபாத்திரம் கைத்தட்ட வைக்கிறது. கிளைமேக்சில் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வராதவர் இருக்க முடியாது.

பாத்திரத்துக்காக உடலை மாற்றியமைத்த மாதவனின் அபார உழைப்புப் பயனுள்ளதாக மாறியதில் மிகப் பெரிய மகிழ்ச்சி. எத்தனையோ நடிகர்கள் சமீபத்தில் சிக்ஸ் பேக் மோகத்தில் உடலை வருத்தி மாற்றியும் படங்களில் அவை எடுபடாமல் போயிருக்கின்றன. இதில் அவர் கோச்சிற்கான உடலை அற்புதமாக அமைத்துக் கொண்டு இருக்கிறார். அதனுடன் அவரின் நடிப்பும் A கிளாஸ். கமல் இவரின் இந்தப் பாத்திரத்தையும் நடிப்பையும் பார்த்து நிச்சயமாகப் பொறாமை படுவார் 😀

நாசர், ராதா ரவி, வில்லன் சாகீர் ஹுசெயின் மற்றும் ரித்திகாவின் பெற்றோராகவும், சகோதரியாகவும் வரும் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ராதாரவி சின்னப் பாத்திரத்தில் வந்தாலும் இறுதி பன்ச் well wort it :-}

சந்தோஷ் நாராயணனின் இசை படத்தின் சுவாரசியத்தை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. பாடல்கள் அருமை. பின்னணி இசை வேற லெவல்! அதுவும் கிளைமேக்சில் நின்று விளையாடுகிறார் சந்தோஷ் நாராயணன்.

பல பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். ஆனால் எந்தப் பகுதியும் நீர்த்துப் போகாமல் எந்த ஒரு நொடியும் தொய்வில்லாமல் படம் இருப்பதே படத்தின் வெற்றி. இவ்வளவு விறுவிறுப்பான அதே சமயம் நல்ல சத்தான கதையுள்ளப் படத்தை சமீபத்தில் பார்க்கவில்லை.

இதுவும் ஒரு காதல் கதை தான். ஆனால் அது முகத்தில் அடிக்காமல் ஸ்போர்ட்சில் பேஷ்ஷன் கொண்டவர்களின் இயல்பைக் காட்டும் படமாக அமைந்திருப்பது தான் இந்தப் படத்தின் வித்தியாசம். இப்படத்தில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் சிறிய பாத்திரமோ பெரிய பாத்திரமோ ஒவ்வொரு பாத்திரமும் தனித் தனியாகக் கதை சொல்லும் தன்மைக் கொண்டு வார்க்கப்படிருக்கின்றன. அந்த மெனக்கெடலில் தெரிகிறது இயக்குனர் கதாசிரியர் இவர்களின் புத்திசாலித்தனம்! படம் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க :-}

வாழ்த்துகள் team இறுதிச் சுற்று!

 

irudhisutru