போலிஸ், அரசியல் அமைப்பு இவர்களின் கையில் உள்ள அதிகாரத்தினால் ஏற்படுத்தப் படும் மனித உரிமை மீறலை முகத்தில் அறையும்படி பதிய வைத்திருக்கிறார் வெற்றிமாறன். இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, ஒரு டாகுமெண்டரி மாதிரி இல்லாமல் சுவாரசியமாக திரைக்கதையை அமைத்து, திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கும் தயாரித்த தனுஷுக்கும் வாழ்த்துகள். எப்போதோ ஒரு முறை அத்திப் பூத்தார் போலத் தான் இம்மாதிரி திரைப்படங்கள் வெளிவருகின்றன. .
திரு சந்திர குமார் எழுதிய LockUp என்ற தன் சொந்தக் கதையினை தழுவி எடுக்கப்பட்டப் படம் விசாரணை. படத்தின் தலைப்பான விசாரணையே படம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்திவிடுகிறது. செய்யாத குற்றத்துக்காக விசாரணைக் கைதிகளாக துன்புறுத்தப்படும் நான்கு இளைஞர்களின் கதை தான் விசாரணை. போலிசிற்கு மேலதிகாரிகளிடம் வரும் ப்ரெஷர், அரசியல்வாதிகளிடம் இருந்து வரும் இவர்களால் மறுக்க முடியாத உத்தரவுகள், அதனால் அவர்கள் செய்ய முற்படும் தவறான காரியங்கள், அவை ஏற்படுத்தும் விளைவுகள், அதனை சரிக்கட்ட அவர்கள் பலி கடாவாகக் கொடுப்பது என்ன/யாரை என்பது தான் “விசாரணை” படத்தின் கதைக் கரு.
இதில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நூற்றுக்கு நூறு சரியான தேர்வு. ஆந்திரா போலிஸ் ஸ்டேஷனில் ஆரம்பிக்கும் படம் பின் பாதியில் தமிழ்நாடு போலிஸ் ஸ்டேஷனுக்குக் மாறுகிறது. ஆனால் போலிஸ்காரர்கள் நடந்து கொள்ளும் முறை ஆந்திராவானாலும் தமிழ்நாடு ஆனாலும் ஒண்ணே தான் என்பதை படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அட்டைக்கத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர், தெலுங்கு இன்ஸ்பெக்டராக அஜய் கோஷ், ஆனந்தி, மிஷா கோஷல் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் வாழ்ந்து இருக்கின்றனர். மற்ற பாத்திரங்களில் வரும் அனைவரும் மனத்தில் நிற்கின்றனர். அது வெற்றிமாறன் உருவாக்கியுள்ள கதாப்பாத்திரங்களின் அமைப்பிற்கும், நடிப்பை வெளிக் கொண்டுவந்திருக்கும் அவரின் திறனுக்கும் ஒரு சான்று.
கனமான கதைக்கு பின்னணி இசையின் பங்களிப்பு மிக மிகவும்! ஜி.வி.பிரகாஷ் பல இடங்களில் இசையமைக்காமல் அமைதியைக் கொடுத்துப் படக் காட்சிகளின் தீவிரத்தை உணர்த்தியிருக்கிறார். அவரின் இந்த maturityக்கு பாராட்டுகள்.
விசாரணைக் கைதிகளின் பெயர்களின் மூலமும் அவர்களின் சொந்த ஊர்களின் பெயர்களின் மூலமும் பல குறியீடுகளை வைத்துள்ளார் வெற்றிமாறன். இன்னும் சொல்லப் போனால் பல நுட்பமான நுண்ணரசியல் frameக்கு frame உள்ளது என்பது படத்தை ஊன்றிப் பார்த்தால் தெரியும். அதனால் தான் இந்தப் படம் 72 Venice Film festivalல் Amnesty International Italia Award வாங்கியுள்ளது.
எதையும் sugar coat பண்ணாமல் உள்ளதை உள்ளபடி காட்டியுள்ளார் வெற்றிமாறன். அதனால் ஒவ்வொரு சீனும் நம் மனத்தில் பரிதவிப்பை ஏற்படுத்துகிறது. ஏழை பணக்காரன் என்றில்லாமல் போலிஸ் பிடியில் சிக்கிக்கொண்டால் நம் தனிப்பட்ட உரிமையை நினைத்துக் கூட பார்க்கமுடியாது என்பதை உணர்த்துகிறார் இயக்குநர். இது நம் நாட்டுக்கு மட்டும் பொது அல்ல பல்வேறு நாடுகளிலும் நடக்கும் அவலம் தான். அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொருவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அளவுக்கும் போக முற்படுவான் என்பதை நாம் பார்க்கிறோம்.படத்தின் க்ளைமேக்சும் போலிசின் சூதையே காட்டுகிறது.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் வரும் படங்களுக்கு நடுவில் இந்த மாதிரி திரைப் படங்களையும் வரவேற்று வெற்றி பெற வைக்க வேண்டியது தமிழ் ரசிகர்களாகிய நம் கடமை என்றே சொல்லுவேன்.
வாழ்த்துகள் team விசாரணை!
Feb 05, 2016 @ 18:40:22
நன்றி. சுட சுட எங்களுக்கு விமர்சனத்தை தந்ததற்கு. பாலாவின் படம் போல முகம் சுளிக்க வைக்குமோ என்ற ஐயம் என்னுள்ளே இருந்தது. அது போயிருச்சு உங்கள் வார்த்தைகளால். அருமையாக வழக்கம்போல எந்த விதமான காம்ப்ரமைஸ் இல்லாமல் உள்ளது உள்ளபடி கூறியிருக்கிறீர்கள். நன்றி. படம் பார்த்திட்டு மறுபடியும் வந்து சொல்றேன். வாழ்த்துக்கள் :))
Feb 06, 2016 @ 02:04:27
Need to wait for its DVD/TV Telecast. Its not released here in Delhi.
Feb 06, 2016 @ 05:20:12
படம் பிரமாதம்னு எல்லாரும் சொல்லீட்டாங்க. நீங்களும் சொல்லீட்ட. யாரும் ரொம்பக் கஷ்டப்படுறமாதிரி காட்சிகள் வந்தா மனசு சங்கடப்படும். படம் முழுக்கவே அப்படி வரும் போது இன்னும் வருத்தத்தை உண்டு செய்யும். ஆனாலும் பாக்கனும்னு ஆசையா இருக்கு. பாப்போம்.
Feb 06, 2016 @ 11:00:36
படம் பார்த்து விட்டு உங்க விமர்சனத்தைப் படிக்கிறேன் அம்மா. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
Feb 08, 2016 @ 09:52:59
படம் இன்னும் பார்க்கவில்லை .உங்கள் விமரிசனம் நடு நிலையாக இருப்பதாகவே நினைக்கிறென்.
Feb 14, 2016 @ 04:31:21
நான் தோஹாவில் ஏசியாடவுன் திரையரங்கில் கண்டுகளித்தேன். துணிந்து இப்படியொரு படம் எடுத்ததற்கு இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் முதலில் நன்றி. தமிழ்த்திரையுலகம் சரியான திசையில் பயணிக்கின்றதென்பதற்கு இந்தப் படம் ஒரு சான்று. வழக்கம்போல உங்கள் விமர்சனம் கனகச்சிதம்.