அம்மா கணக்கு – திரை விமர்சனம்

ammakanakku

அப்துல் கலாம் இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டியிருப்பார். கனவு காணுங்கள் என்று அவர் சொன்னக் கருத்தை அழகாகப் படம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் அஷ்வினி ஐயர் திவாரி. தனுஷ் நல்ல நல்ல படங்களாகத் தயாரிக்கிறார், வாழ்த்துகள் :-} இப்படம் இந்திப் படத்தின் மறு ஆக்கம்.

ரேவதி சமூகத்தில் மேல் அந்தஸ்தில் உள்ள பெண்ணாக, மருத்துவராக வெகு இயல்பாகப் பொருந்தி நடித்துள்ளார். அவர் வீட்டில் வேலை செய்யும் அமலா பாலுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாகவும் விளங்குகிறார். அமலா பால் கணவனை இழந்த single mother ஆக, வீட்டு வேலை மட்டும் அல்லாமல் மீன் அங்காடியில், கசாப்புக் கடையில் எனப் பல்வேறு இடங்களில் உழைத்துத் தன் ஒரே மகளை வளர்ப்பவராகப் பிரமாதமாக நடித்துள்ளார். மகளாக யுவஸ்ரீ நல்ல தேர்வு. கணக்கு வாத்தியார்/ஹெட்மாஸ்டராக சமுத்திரக்கனி, அவர் தரத்துக்கு ஃபூ என்று ஊதித் தள்ளக் கூடிய எளிதான பாத்திரம் அவருக்கு.

பொதுவாக பள்ளிப் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் தான் என்னவாகப் போகிறோம் அல்லது என்னவாக வேண்டும் என்கிற கனவு இருக்கும். ஆனால் ஏழ்மை சூழ்நிலையில் வளர்வோருக்கு, சரியான வழிகாட்டுதல் இல்லாதவருக்கு பெரிய கனவுகள் இருக்க வாய்ப்புக் குறைவு. அப்படிப்பட்ட சூழலில் வளரும் ஒரு பெண்ணின் தாயாக, மகள் நாளை தன்னைப் போலக் கஷ்டப்படாமல் முன்னுக்கு வரவேண்டும், அதற்குப் படிப்பே வழி என்று புரிந்து கொண்டு வித்தியாசமான முறையில் மகளை ஊக்குவிக்கும் தாயாக வருகிறார் அமலா பால்.

எஞ்சினியர் மகன் எஞ்சினியராக, டாக்டர் மகள் டாக்டராக, வேலைக்காரி மகள் வேலைக்காரியாக, டிரைவர் மகன் டிரைவராகத் தான் ஆக வேண்டும் என்கிற சமூகக் கட்டமைப்பை மாற்றச் சொல்கிறது இந்தப் படம். ஆனால் ஒரு பெரிய பிரச்சினைக்கு வெகு எளிதாகத் தீர்வு கண்டு விடுவது சினிமேடிக் ஆக உள்ளது. நிஜ வாழ்க்கையில் இது சாத்தியமா என்றால் சந்தேகமே! வசனங்களிலும் திரைக் கதையிலும் அழுத்தம் இல்லை. ரேவதி மருத்துவராக ஒரு காட்சியிலும் நடிக்கவில்லை. அவர் எழுத்தாளர் என்று கூட சொல்லியிருக்கலாம்.

இளைய ராஜாவின் பின்னணி இசை அருமையாக உள்ளது. ஆனால் பாடல்கள் ஈர்க்கவில்லை. படம் இரண்டு மணி நேரம் தான். சின்ன பட்ஜெட், தேர்ந்த நடிகர்கள் கொண்டு நல்ல கருத்தை ரொம்ப மெலோடிராமா இல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். வில்லனோ காதலோ இல்லாமல் நெருடல் இல்லாமல் பயணிக்கிறது கதை. ஒரு பீல் குட் மூவி.

ammakanakku1

 

சைராட் – மராத்திப் படம் – திரை விமர்சனம்

sairat

இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் பொதுவானது ஒன்றே ஒன்று தான். ஜாதி வெறி பிடித்து அலைபவர்கள் + கீழ் ஜாதிப் பையனை மேல் ஜாதிப் பெண் காதலிப்பது. சைராட் {கவலையற்ற, சுதந்திரமான என்று பொருள்} சொல்வதும் இதே மாதிரி ஒரு சூழ்நிலையில் இதே மாதிரி ஒரு காதல் ஜோடியை பற்றியக் கதை தான். ஆனால் எடுத்திருக்கும் விதம் நம்மை மூணு மணி நேரம் அவர்களோடவே வாழ வைக்கிறது. அந்த இளம் ஜோடியின் காதல் திரையில் கவிதையாக மலர்கிறது. பதின் பருவக் காதலில் வரும் அத்தனைப் பரிணாமங்களையும் இயக்குநர் நாகராஜ் மன்ஜூலே இந்தப் படத்தில் காண்பித்துள்ளார்.

மகாராஷ்டராவில் சோலாப்பூர் மாவட்டத்தில் கதை நடக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த துடிப்பான இளைஞன் பர்ஷ்யா. புது முகம் என்று தெரியாத அளவு பாத்திரத்தை நன்கு உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார் ஆகாஷ் தொசர். அவர் காதலிப்பது மேல் வகுப்பைச் சேர்ந்த துணிச்சலான அர்ச்சனாவை. குதிரை முதல் புல்லட், டிராக்டர் என்று அனைத்தையும் அனாயாசமாகக் கையாள்கிறார் ரிங்கு ராஜ்குரு. பார்த்ததுமே மனசைக் கொள்ளைக் கொள்கிறார் அவர் :-}

கதையின் தன்மையினால் மராத்திப் படம் பார்ப்பது போலவே தோன்றவில்லை. நமக்குத் தெரிந்த நட்புகளிடையே நடக்கும் காதலும் போராட்டமும் எனப் படத்தோடு ஒன்றவைத்திருப்பது தான் இயக்குநரின் வெற்றி. வெறும் கதையாகப் பார்த்தால் இதில் ஒன்றும் புதுமை இல்லை. ஆனால்  ஒவ்வொரு பாத்திரத்தையும் தனிப்பட்டக் குணாதிசயங்களுடன் வார்த்திருப்பதால் கதையில் சுவாரசியம் கூடுகிறது.

இரண்டாம் பகுதி செகந்திராபாத்தில் நடக்கிறது. அங்கு அந்தக் காதல் ஜோடி கால் ஊன்ற உதவி செய்பவரின் பாத்திரத்தில் இருந்து இருவருக்குள் ஈகோவினாலும் சந்தேகத்தினாலும், ஏழ்மையின் தாக்கத்தினாலும் வரும் சச்சரவுகளும் அதற்குப் பின் ஏற்படும் ஆழ்ந்த புரிதலும் நிஜ வாழ்வில் நடப்பவைகளின் அப்பட்ட யதார்த்தம். அதே யதார்த்தம் முடிவின் போதும் இருப்பது முகத்தில் வேகமாக அறைகிறது. படத்தின் கடைசி சில நிமிடங்கள் சப்தமின்றி முடிகிறது, ஆனால் நம் காதுகளில் அதுவே பேரிரைச்சலாக ஒலிக்கிறது.

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் உங்களைத் திருத்தமுடியாது என்னும் நடிகர் விவேக் டயலாக் போல, இம்மாதிரி ஆயிரம் படங்கள் வந்தாலும் ஜாதி வெறி ஒழியப்போவதில்லை. ஆனால் ஒரு சிலரையாவது இந்தப் படம் ஜாதி வித்தியாசத்தினால் வரும் துன்பங்களை யோசிக்க வைக்கும் என்று நினைக்கிறேன்.

படம் மூன்று மணி நேரம். ஆனால் கொஞ்சம் கூடத் தொய்வு இல்லாமல் செல்கிறது கதை. இசை அருமை. இளையராஜாவின் இசையை நினைவுபடுத்துகிறது. அதுல்-அஜெய் பாடல்களிலும் பின்னணி இசையிலும் அருமையாக ஸ்கோர் செய்கிறார்கள். அதுவும் முதல் பாதியில் வரும் டூயட் பாடல்கள் கேட்கவே ஆனந்தமாக உள்ளன!

பல விஷயங்கள் இதில் பாராட்டுக்குரியவை. ஆனால் அவற்றைப் பட்டியலிட்டால் கதையைச் சொல்ல வேண்டியிருக்கும். நீங்களே பார்த்து மகிழுங்கள்.  சப் டைட்டிலுடன் படம் உள்ளது. அம்பிகாபதி அமராவதியில் இருந்து இன்று வரை காதல் ஜோடிகளுக்கு நடப்பது தான் ஆனாலும் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய படம்.

sairat1

எனக்கு இன்னொரு வீடு இருக்கு! – சிறுகதை

“ஆண்டி, அங்கிள் காபி ரெடி” காப்பாளர் சுதா சிரித்த முகத்துடன் ஜன்னல் வழியா சொல்லிவிட்டு சென்றாள். அறைக்கதவை மூடிவிட்டு காமன் கிட்செனுக்குப் போனார்கள் சுவாமிநாதனும் சகுந்தலாவும். பலர் அப்போ தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர். அங்கே வைத்திருந்த டப்பாவில் இருந்து ரெண்டு பிஸ்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு காபி கோப்பையுடன் தோட்டத்தில் உட்கார்ந்தனர். பல பறவைகளின் காலை கீச்சுக்கள் மரக்கிளைகளின் இடையே இருந்து ஒலித்தன. பக்கத்தில் வந்து உட்கார்ந்த பாலுவிடம் சுவாமிநாதன், “சாந்தா மேடம்க்கு எப்படி இருக்கு? நீங்க நேத்து போய் பார்த்தீங்களே” என்று கேட்டார். “இப்போ நல்ல improvement சார். நல்லா தெளிவா பேசறாங்க. Electrolyte imbalanceஆம். உப்பு சத்து குறைந்து விட்டதாம். ட்ரிப் ஏத்தறாங்க, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்ன்னு சொன்னாங்க.”

oldage2

அந்த இல்லத்தில் இருந்த சக வசிப்பாளர் சாந்தா. திடீரென்று முன்னுக்குப் பின் முரணாகப் பேச ஆரம்பித்தார். அங்கே இருந்த பராமரிப்பாளர் உடனே ஏம்புலன்சை கூப்பிட்டு மருத்துவமனையில் சரியான நேரத்தில் சேர்த்து மருத்துவ உதவி கொடுத்ததில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம். சுவாமிநாதனுக்கும் சகுந்தலாவுக்கும் இந்த இல்லத்தில் பிடித்தது இரண்டு விஷயங்கள், ஒன்று இன்முகத்துடனான சேவை, இரண்டாவது சிறந்த மருத்துவ வசதி. உணவு ருசி முன்ன பின்ன இருந்தாலும் மற்ற வசதிகள் நன்றாக இருந்தன.

இதை ஒரு உயர்தரமான ஹோட்டல் என்று கூட சொல்லலாம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அறநூறு சதுரடி இருக்கும். ஒரு வரவேற்பறை, படுக்கை அறை, குளியல் அறை. அலங்கார விளக்குகளும், ஒரு மூலையில் இருக்கும் குட்டி ப்ரிட்ஜும், மின்சார அடுப்பும், மைக்ரோவேவும், சன்னமாக ஒலிக்கும் ஸ்ப்ளிட் ஏசியும், சுவரில் பதிந்திருக்கும் டிவியும், மெத்தென அமுங்கும் சோபா செட்டும் அவர்கள் இருந்த பழைய வீட்டின் நிலையை எண்ணிப் பார்க்கையில் சொர்க்கம் தான்.

oldagehome

அவர்கள் முன்பு இருந்து வளசரவாக்கத்தில், ஒரு கிரவுண்டில் சிறிய வீடு, சுற்றி மரம் செடி கொடிகள். ஆனால் வீடு ரொம்ப பழையது. அவர்கள் வீட்டை வாங்கும் போதே அது பத்து வருட பழைய வீடு. ஓர் அறை கொண்ட வீட்டை இரண்டு அறைகள் கொண்ட வீடாக மாற்றினார் சுவாமிநாதன். வீட்டுக் கடன் அடையவே பத்து வருடங்களுக்கு மேல் ஆகியது. அதுவும் அப்போ விலை ரொம்ப கம்மி. அவர்கள் சக்திக்கு இயன்றதை வாங்கினார்கள். வாங்கியபோது சுற்றி வயல் வெளி தான். பின்னாளில் இப்படி ஒரு பெரிய குடியிருப்பாகும் என்று அன்று அவர்கள் கொஞ்சமும் நினைக்கவில்லை. சுவாமிநாதன் போஸ்ட் ஆபிசில் கிளார்க். சாந்தா அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர். ரொம்ப சிரமப்பட்டு தான் இரு பிள்ளைகளையும் வளர்த்தனர். மகன் மேல் படிப்புக்கு அமேரிக்கா போன போது சுவாமிநாதனுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. படிப்புக்குக் கடன் வாங்க அந்த வீட்டை தான் இணையாகக் கொடுத்தார். அதன் பின் மகளுக்கு அமேரிக்கா மாப்பிள்ளை வரன் வந்தது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண்ணுக்கு ஒன்றும் சீர் செய்ய வேண்டாம் அனால் கல்யாணத்தை சிறப்பாக செய்து விடுங்கள் என்றனர். அந்த “சிறப்பாக” பல லட்சங்களை தொட்டது. அதற்கும் அந்த வீடு தான் கை கொடுத்தது.

oldhouse

இருவரும் ஒய்வு பெற்ற பிறகு கடனெல்லாம் அடைத்து பென்ஷன் பணத்தில் வாழும்போது தான் தனிமையின் துயரத்தையும் பணப் பற்றாக்குறையையும் உணர்ந்தனர். பழைய வீடானதால் நிறைய மராமத்து வேலைகள் வந்து கொண்டே இருந்தன. மின்சாரக் கசிவை சீர் செய்யக் கை வைத்தால் சீலிங்கில் உள்ள ஒழுகல் தெரிய வந்தது. டாய்லெட் அடைப்பை சரி செய்ய வந்த பிளம்பர் மெயின் டிரெயினேஜ் கனேக்ஷனே கட் ஆகியிருக்கு. தெரு வரை புது பைப் போடனும் என்று பெரிய லிஸ்டை நீட்டினார். பிளம்பரோ எலேக்டிரிஷியனோ சொன்ன நேரத்துக்கு வராமலும், வேலை முடித்த பிறகு சொன்ன எஸ்டிமேட்டை விட இரண்டு மடங்கு அதிகம் வாங்கிச் செல்வதுமே வழக்கமாக இருந்தது. எதோ சின்ன சின்ன ரிபேர்களை செய்து ஒப்பேத்தி வந்தவர்களை டிசம்பர் மழை புரட்டிப் போட்டுவிட்டது. உச்சக்கட்ட மழையின் போது அவர்கள் வீட்டில் எட்டடி தண்ணீர் நின்றது.

பிள்ளைகளிடம் தான் உதவி கேட்டாகவேண்டும் என்ற நிலை. ஆனால் மகளும் மகனும் உள்ளத்தாலும் அமெரிக்கர்களாகிவிட்டனர் என்பது தான் இவர்களின் மிகப் பெரிய இழப்பு. மகளும் மகனும் கடைசியாக இந்தியா வந்து ஐந்து வருடங்கள் ஆயிற்று. மருமகள் அவள் வீட்டு விசேஷம் எதற்காவது ஒரு வார லீவில் வந்து அட்டென்ட் பண்ணிவிட்டு போய்விடுவாள். அந்த பங்க்ஷனுக்கு இவர்களையும் அழைத்து இருப்பார்கள். அங்கேயே மாமியார் மாமனாரை பார்த்தாயிற்றே என்று வீட்டுக்குக் கூட வராமல் “அத்தை நிறைய பர்சேஸ் இருக்கு. ஸௌமியாவை டேன்ஸ் கிளாசில் சேர்த்திருப்பதால் மைலாப்பூரில் அவ டேன்சுக்குத் தேவையான நிறைய சாமான்கள் வாங்க வேண்டியிருக்கு. நீங்க இருக்கிறது வளசரவாக்கத்தில். இங்கே அம்மா வீடு ராயப்பேட்டை. அதனால் அம்மா வீட்டில் இருந்து கொண்டு சாமான் எல்லாம் வாங்கி சேகரித்துக் கொண்டு போக எனக்கு வசதியாக இருக்கும்” என்று இவர்கள் எதுவும் கேட்பதற்கு முன் அவளே தன் திட்டத்தைச் சொல்லிவிடுவாள். சகுந்தலாவும் மனசு கேட்காமல் செய்து கொண்டு போயிருந்த பலகாரங்களையும், பேத்திக்கு வாங்கி வைத்திருந்த காதணி, கழுத்தணிகளைக் கொடுத்து விட்டு வீட்டிற்குக் கணவனுடன் திரும்பி வருவாள்.

சுவாமிநாதனும் சகுந்தலாவும் இது வரை ஒரே ஒரு முறை தான் அமேரிக்கா போயிருக்கிறார்கள், அதுவும் மகளின் முதல் பிரசவத்துக்கு. அவள் இருந்தது பிலடெல்பியாவில், குழந்தை பிறந்தது டிசம்பர் மாதத்தில். ஸ்வெட்டரையும் கம்பளியையும் சுற்றிக் கொண்டு நாலு மாசம் சேவை செய்து விட்டு வந்து விட்டார்கள். அங்கிருந்த மளிகைக் கடையையும், பக்கத்தில் இருந்த சிவா விஷ்ணு கோவிலையும் தவிர வேறு ஒன்றையும் பார்க்கவில்லை. நடுவில் எண்ணி ஏழே நாட்கள் பீனிக்சில் இருந்த மகனையும் மருமகளையும் போய் பார்த்துவிட்டு வந்தார்கள். மகனும் மருமகளும் அப்பா அம்மா வந்திருக்கிறார்களே என்று ஓவரா கொண்டாடவும் இல்லை அதே சமயம் வெறுப்பாகவும் நடந்து கொள்ளவில்லை. வெளிநாடு போனாலே இந்த விட்டேத்திக் குணம் வந்துவிடுமோ என்று பல முறை நினைத்திருக்கிறாள் சகுந்தலா. அவர்கள் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்தால் அவளும் சுவாமிநாதனும் விழுந்து விழுந்து கவனிப்பார்கள். ஆனால் பெண்ணும் பிள்ளையும் யாருக்கு வந்த விருந்தோ என்று நடந்து கொள்வது அவளுக்கு வியப்பைத் தந்தது. “நம்ம இரத்தம் தானேங்க ஓடுது, ஏன் இப்படி இருக்காங்க” என்று பல முறை கணவனிடம் அங்கலாய்த்திருக்கிறாள் சகுந்தலா. அவரோ மௌன சாமியாக பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருப்பார்.

மகள் இரண்டாவது பிரசவத்துக்குக் கூப்பிடுவாள் என்று நினைத்திருந்தாள் சகுந்தலா. ஆனால் அவளோ “உன்னைக் கூப்பிட்டால் என் மாமியாரையும் ஒரு தடவை கூப்பிட வேண்டும், எல்லாம் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று வேறு யார் தயவும் இல்லாமல் இரண்டாவது பிரசவத்தைக் கணவன் துணையுடன் முடித்துக் கொண்டாள். அவ்வளவு சாமர்த்தியம்! “ஒரு தடவை வந்துட்டுப் போடி, உன் குழந்தைகளோடு இருக்கணும்னு அப்பாக்கும் எனக்கும் ஆசையா இருக்கு” என்று ஒரு முறை சகுந்தலா சொன்னாள். “அதான் ஸ்கைப்பிலேயே அடிக்கடி பேசறோமே மா எதுக்கு அங்க பணம் செலவழிச்சிக்கிட்டு வரணும்? கார்த்திக் பாட்டிக்கு இங்க வந்து நீ புதுசா கத்துக்கிட்ட பாட்ட பாடிக் காட்டு” என்று அவள் மகனைக் கூப்பிட்டு அதோடு அந்தப் பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டாள். அவள் மாமனார் இறந்த போது கூட அவள் கணவன் மட்டும் வந்து காரியம் செய்து விட்டுப் போனான்.

“அப்பா வேலைக்குப் போன உடனே கடனை உடனை வாங்கிக் கட்டின வீடு டா, அம்பது வருஷத்துக்கு மேல் ஆச்சு. போன டிசம்பர் மழைல ரொம்ப மோசமாயிடிச்சு. உனக்குத் தெரியாததா? அமபத்தூர்ல மாமா வீட்டில தானே ஒரு மாசம் இருந்து இந்த வீட்டை சரி பண்ணினோம். டாய்லெட் எல்லாம் பழசா பள்ளத்துல இருக்கு. அதனால அடிக்கடி வெளிய சாக்கடை தண்ணி வழியுது. வாசக் கதவெல்லாம் ரொம்ப பாழாயிருக்கு. ஒரு உதை விட்டா கதவு உடஞ்சிடும், அவ்வளவு இத்துப் போயிருக்கு.”

“அதுக்கு என்ன செய்ய சொல்ற மா?” என்றான் வேணு. “எங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பே இல்லடா. வயசானவங்க தனியா இருக்கோம்னு இங்க எல்லாருக்கும் தெரியும். இடிச்சு பிளாட்டா கட்டிடலாம். எங்களுக்கும் துணைக்கு பில்டிங்கில் மத்த குடித்தனங்கள் இருப்பாங்க. உனக்கு ஒரு பிளாட், காவ்யாக்கு ஒரு பிளாட் கொடுக்கணும்னு அப்பாக்கு ஆசை. ஒரு தடவை வந்துட்டுப் போடா. நல்ல பில்டரா பார்த்துப் பேசி, இந்த வீட்டு சாமானை ஒழுங்கு படுத்தி எங்களை வேற வீடு பார்த்து வெச்சிட்டு போனினா ரொம்ப சௌகரியமா இருக்கும். அப்பாக்கு எழுபத்தஞ்சு வயசு ஆகுது. எனக்கும் முடியலை, அப்பாக்கும் முடியலை” என்றாள் சகுந்தலா மகனிடம். ஸ்கைப்பில் அந்தப் பக்கம் அவள் மகன் வேணு எதையும் காதில் போட்டுக் கொண்டா மாதிரியே தெரியவில்லை. சகுந்தலாவிற்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இவனெல்லாம் என்ன பிள்ளை! பாரின் போறான்னு நினச்சு எவ்வளவு சந்தோஷப் பட்டோம் ரெண்டு பேரும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஒரு நாள் மகளிடம் இதே வீட்டு மேட்டரை பேச ஆரம்பித்தாள் சகுந்தலா. “ எல்லாம் அண்ணா சொன்னான் மா. இப்படியே அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருங்கம்மா. இப்போ எதுக்கு வீட்டை இடிக்கணும்? நானோ அண்ணனோ இந்தியா திரும்பி வரப் போறதில்லை. கட்டடத்துக்கு ஒன்னும் விலை கிடையாது எப்பவும் நிலத்துக்கு தான் மதிப்பு. இப்போ எதுக்கு அனாவசியமா இடிச்சு கட்டறீங்க. பின்னாடி நிலத்தை வித்து நானும் அவனும் பணத்தை அமெரிக்காவுக்குக் கொண்டு போயிக்கிறோம்” என்றாள் சர்வ சாதரணமாக.

மனம் நொந்துவிட்டது சகுந்தலாவிற்கு. வயதான பெற்றோரை கவனிக்க வேண்டும் என்கிற எண்ணமும் இல்லாமல், அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை வாய் விட்டுச் சொல்லியும் கவலைப்படாமல் சொத்தை மட்டும் கனகச்சிதமாகப் பங்கு போட்டுக் கொள்ள அவர்கள் தயாராக இருப்பது உண்மையிலேயே அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்பொழுதுமே தலைமுறை இடைவெளி இருப்பது சகஜம் தான். ஆனால் இவ்வளவு பெரிய இடைவெளியா என்று மனம் வேதனை பட்டது. அவள் மாமியாருக்குப் புற்று நோய் வந்து, கடைசி காலத்தில் இரண்டு வருடம் குளிப்பாட்டி, சோறூட்டி மற்ற உதவிகள் செய்து மாமியார் மனம் கோணாமல் பார்த்துக் கொண்டவள் சகுந்தலா. தனக்கும் தன் கணவருக்கும் உடல் நலமில்லாமல் போனால் ஸ்கைப்பில் விசாரிப்பதுடன் நின்று விடும் என்று புரிந்து கொண்டாள்.

இவர்களே தெரிந்தவர்கள் மூலம் ஜாயின்ட் வென்சருக்காக சில பில்டர்களை பார்க்க ஆரம்பித்தனர். சுவாமிநாதனின் மாமா பையன் சமீபத்தில் அவன் வீட்டை இடித்துக் கட்டியிருந்தான். அவனை சென்று சந்தித்ததில் அவன் தன் பில்டரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் சொல்லி அவர்களை அவனே பில்டர் ஆபிசுக்கும் கூட்டிச் சென்றான். பேசிக் கொண்டிருக்கையில் சகுந்தலா அங்கிருந்த சில மாடல்களை வியந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை கவனித்த இஞ்சினியர் கோபால்சாமி வாருங்கள் நாங்கள் கட்டிய சில கட்டங்களின் மாடல்களை உங்களுக்குக் காட்டுகிறேன் என்று ஒரு பெரிய ஹாலுக்கு அழைத்துச் சென்றார். ஆசிரியர் ஆனதால் சகுந்தலாவுக்குக் குழந்தைகளுக்கு மாடல்கள் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கிறாள். பார்த்துக் கொண்டே வந்தவள் ஒரு மாடலைப் பார்த்து இது என்ன ஹாஸ்பிடலா இல்லை ஹோட்டலா என்று கேட்டாள். அதற்கு அவர், “இல்லைமா இது ஒரு முதியோர் இல்லம். ரொம்பப் பிரமாதமா கட்டியிருக்கோம். ஒரு பெரும் பணக்காரர் அவர் மனைவி ருக்மணி பெயரில் இதை காட்டியுள்ளார். மாச வாடகை அதிகம் தான். ஆனால் உயர்தர சேவை என்றார்.

பொறி தட்டியது சகுந்தலாவுக்கு. ஏன் இந்த வீட்டை இடித்துக் கட்டி கஷ்டப்படனும்? பேசாம இந்த மாதிரி ஒரு முதியோர் இல்லத்தில் போய் இருந்தால் இருவரில் ஒருவர் போன பின்பும் பழகிய இடத்தில் மற்றவர் தொடர்ந்து இருக்கலாமே! வீட்டிற்குத் திரும்பி வந்தவுடன் கணவரிடம் பேசினாள். அவருக்கும் அந்த யோசனை மிகவும் நல்ல யோசனையாகப் பட்டது. நாலு பில்டர்களை போய் காத்திருந்து பார்த்து, அவர்கள் சொல்லும் கணக்கு வழக்குகளை மனத்தில் ஏற்றிக் கொள்வதே அவருக்கு பெரும் சிரமாமாக இருந்தது. இதற்கு மேல் ஒரு பில்டரை முடிவு செய்து அக்ரீமென்ட் போட்டு ஏமாறாமல் பிளாட்களை கட்டி முடிக்க வேண்டுமே என்னும் கவலை அவர் மனத்தில் அரித்துக் கொண்டிருந்தது.

அடுத்த நாளே எஞ்சினியர் கோபால்சாமியிடம் தங்கள் முடிவை சொன்னார்கள். அவரும் உங்க வீடு நல்ல லொகேஷனில் உள்ளது அதனால் நானே நிலமாகவே வாங்கிக் கொள்கிறேன் என்று டோக்கன் அட்வான்சும் அன்றே கொடுத்து விட்டார். டாகுமென்ட்சை வக்கீலிடம் காட்ட அவர்களிடம் இருந்து எடுத்து சென்றார். அவரிடமே அந்த புதிய முதியோர் இல்லத்தில் தங்களுக்கு இடம் கிடைக்குமா என்று பார்க்க சொன்னார்கள். அவரும் விசாரிப்பதாக சொன்னார். அந்த வாரத்தில் மகளுடனும் மகனுடனும் பேசும் போது ஒரு முதியோர் இல்லத்தில் போய் தங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். இருவருமே பேசி வைத்துக் கொண்டு சொன்னா மாதிரி, ஓ நல்ல முடிவும்மா, வீடு ரிப்பேர் பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றனர். மகனும் மகளும் மறக்காமல் வீட்டை என்ன பண்ணப் போகிறீர்கள் என்று கேட்டனர். எளிதா வாடகைக்கு விட்டுடலாம். அந்த வாடகையும் எங்கள் செலவுக்கு சரியாகும் என்று சகுந்தலா கூறியதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டனர் இருவரும். ஒரு ஆறுதலுக்குக் கூட ஏம்மா அங்க போறீங்க, இல்லை மாதச் செலவுக்குப் பணம் அனுப்பறோம் என்று இருவரும் சொல்லவில்லை.

oldagehome1

 

 

விரைவில் வீட்டை விற்று ஒரு நல்ல நாளில் ருக்மணி முதியோர் இல்லத்துக்குக் குடி வந்தனர். மகிழ்ச்சியாக செல்கிறது வாழ்க்கை. அவர்கள் வயதுக்கு ஏற்ற ஏக்டிவிடீஸ் அவர்களை சுறுசுறுப்புடன் வைத்திருக்கிறது. தங்கள் காலத்துக்குப் பிறகு அவர்கள் வீட்டை விற்ற பணத்தை அந்த முதியோர் இல்லத்துக்குப் போய் சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்தனர். அந்தப் பணத்தில் எத்தனை குடியிருப்புகள் கட்ட முடியுமோ அந்த எண்ணிக்கையில் கட்டி மாத வாடகை கொடுக்க முடியாதவர்கள் பயன் பெறும்படி இலவச விடுதியாகப் பயன் படுத்தப் பட வேண்டும் என்று தெளிவாக எழுதி வைத்தனர். எப்பவும் போல ஸ்கைப் கால்கள் தொடர்ந்தன, விசாரிப்புகள் தொடர்ந்தன. எப்போதாவது அவர்கள் சென்னை வந்து வீட்டைப் பார்க்க சென்றார்களானால் அது ஒரு 3 மாடி குடியிருப்பாக மாறி இருப்பதைப் பார்ப்பார்கள்.

houseandmoney

இன்பச் சுற்றுலா – பகுதி 2

முதல் பகுதி படிக்க இங்கே கிளிக்கவும்.

கோவில்பட்டியில் நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கும் திருநெல்வேலியில் நெல்லை பரணி ஹோட்டலுக்கும் ஆறு வித்தியாசங்களுக்கும் மேல்! நெல்லை பரணி ஹோட்டல் சூப்பராக இருந்தது. வைபை கனெக்ஷன் என்ன, குளியல் அறையில் குளிக்கத் தனி கேபின் என்ன, அறையில் ஒலிக்கும் பாடல்கள் குளியல் அறையில் ஸ்பீக்கரில் ஒலிக்கும் வசதி என்ன, சுவையான பலவிதமான உணவு வகைகள் என்ன என்று ஹோட்டல் ஸ்டே ரொம்ப மஜாவாக இருந்தது.

மாலை நெல்லையப்பர் காந்திமதி கோவில் செல்லும் திட்டம் இருந்ததால்  நவதிருப்பதியில் இருந்து வந்து உணவருந்திய பின் இரண்டு மணி நேரத்துக்கு அனைவரும் கட்டையை சாய்த்தோம். பின் எழுந்து குழிப்பணியாரம், பஜ்ஜி, காபி, டீ என்று சுடச்சுட சாப்பிட்டுக் கிளம்பினோம். நேராக இருட்டுக் கடைக்குச் சென்று அல்வா தீருவதற்குள் வாங்க திட்டம். கோவிலுக்குப் போவதில் எங்கள் குழு எவ்வளவு ஆர்வம் காட்டியதோ அதே அளவு சாப்பாட்டு விஷயத்திலும் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். எங்கள் குழுவில் ஒருவர் வாங்கிய சேவு, கடலை மிட்டாய், பால்கோவா, இருட்டுக்கடை அல்வா இவைகள் நிறைந்த பையை சென்னை எக்மோரில் இறக்க இரண்டு பேர் உதவி தேவைப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! கீழே உள்ள படம் இருட்டுக் கடை முன் எடுத்தது.

iruttukadai

நெல்லையப்பர் கோவில் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. நுழைவாயிலில் நிறைய கடைகள், கோவில் சொத்தில் ஆக்கிரமிப்புகள் என்று நன்றாகத் தெரிகிறது. உள்ளே நுழைந்ததும் பெரிய நந்தி. வெள்ளை நிறம் என்று நினைக்கிறேன். அதன் மேல் போகஸ் லைட் போடப்பட்டு இருந்ததால் அந்த வண்ணம் தான் தெரிந்தது. தூண் சிற்பங்கள் எல்லாம் out of the world! இங்கே தான் சப்தஸ்வர தூண்களும் உள்ளன. ஏழெட்டுப் படிகள் ஏறித்தான் நெல்லையப்பரை தரிசிக்கும் இடத்திற்கு செல்ல முடியும். நிறைய கூட்டம். ஒரு அர்ச்சகர் நம்மிடம் இருந்து பூவை பெற்றுக் கொண்டு அனைவரின் பெயர் நட்சத்திரம் வாங்கி அர்ச்சனை செய்ய கர்ப்பக் கிரகத்தினுள் சென்றார். நாங்களும் முண்டியடித்து முன்னேறி சுவாமியை தரிசனம் செய்தோம். சுயம்பு லிங்கம் போலத் தோன்றினார். அது பற்றி விசாரிக்க முடியவில்லை.

nellaiyappar

nandhi

விக்கியில் தேடியதில் இந்தத் தகவல் கிடைத்தது. முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

musicpillars

பிரசாதம் வாங்கிய பின் சற்றே அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் கிடந்த கோலத்தில் ஆறடிக்கு மேல் ஸ்ரீமன் நாராயணன். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அங்கே அர்ச்சகர் யாரும் இல்லை. நன்றாக அருகில் நின்று சேவித்தோம். பின் அந்தக் கூட்டத்தில் ஒரு பிரிவினர் தொலைந்து போனர். போன் அடித்தாலும் எடுக்கவில்லை. சரி நாம் மற்ற தெய்வங்களை வணங்குவோம் என்று பிராகார வலம் வந்தோம். எத்தனை மூர்த்திகள்! எத்தனை பெரிய பிராகாரங்கள்! இன்னும் ஒரு நிலை ஏறினால் சோமாஸ்கந்தன் சந்நிதி வருகிறது. ஒரு நிலை கீழே இறங்கினால் ஆதி சிவன் உள்ளார். ஒரு பக்கம் குபேர லிங்கம், ஒரு பக்கம் தட்சிணாமூர்த்தி என்று திரும்பிய இடம் எங்கும் இறைவன்.

pirakaram

ஷோலே படத்தில் சைட் கார் பிரிந்து பிறகு இணைந்தது போல சிறிது நேரத்தில் பிரிந்த குழு திரும்ப எங்களுடன் தானே வந்து இணைந்தது. காந்திமதிக்குத் தனிக்கோவில்.  பிராகாரங்களை சுற்றி வந்ததில் கால் வலிக்க ஆரம்பித்து விடுகிறது. இந்தக் கோவிலிலும் நிறைய மூர்த்திகள். ஏகப்பட்ட சிற்பங்கள். நின்று ரசிக்க ஆரம்பித்தால் மற்றவர்கள் நம்மை விட்டு சென்றுவிடுவதால் குழுவோடு இணைந்து செல்ல வேண்டியிருந்தது. காந்திமதி அம்மன் கருணையே உருவாக இருந்தார். அவதிருச்செந்தூர் ரை தரிசித்து, பின் வந்த வழியே திரும்பி எங்கள் வாகனம் நின்ற இடத்தை அடைந்தோம். அதுவே ஒரு கிலோமீட்டர் நடை இருக்கும்.

அன்று இரவும் அரட்டைக்குப் பின் உணவு, உறக்கம். அடுத்த நாள் திருச்செந்தூர் பயணம். இதுவரை பயணம் செய்தபோது திரை இசைப் பாடல்கள் எப்பொழுதோ ஒரு முறை தான் வண்டியில் கேட்டோம். ஏனென்றால் ஏறிய ஐந்து நிமிடங்களில் இறங்க வேண்டிய அடுத்தக் கோவில் வந்துவிடும். திருச்செந்தூர் பயணத்தின் போது விநாயகர் பாடலில் ஆரம்பித்து மண்ணானாலும்  திருசெந்தூரில் மண்ணாவேன் என்ற TMSன் புகழ் பெற்ற பாடலைத் தொடர்ந்து பல பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து பயணித்தோம். வழியும் பசுஞ்சோலைகள் நிறைந்தனவாக இருந்தன.

greenfields1

திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்துக்காக ஒருவரிடம் தொலைபேசியில் பேசி வைத்திருந்தோம். அவர் நன்றாக தரிசனம் செய்து வைப்பதாக வாக்குக் கொடுத்திருந்தார். அவரும் எங்களுக்காக சரியான நேரத்தில் காத்துக் கொண்டிருந்தார். உண்மையிலேயே கடலலை கோவில் படிகளை உரசிக் கொண்டு இருப்பது கண்கொள்ளாக் காட்சி.

tiruchendur

கால்களை கடல் அலைகளில் நனைத்து, தலையில் சிறிது நீரை தெளித்துக் கொண்டு அவருடன் கோவில் உள்ளே செல்ல ஆரம்பித்தோம். கேரளக் கோவில்களில் இருப்பது போல் ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் செல்வது இங்கும் கடைபிடிக்கப் படுகிறது. நல்ல கூட்டம். அவர் முன்னே செல்ல ஸ்பெஷல் டிக்கெட் தரிசன வழியில் அவரை பின் தொடர்ந்தோம். பேட்ச் பேட்சாக பத்து பத்துப் பேராக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர். எங்கள் முறை வந்ததும் அவருடன் உள்ளே சென்றோம். திவ்ய தரிசனம், பாலபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. உண்மையில் சிலிர்த்துப் போனோம். அதுவும் என் போன்ற முதன் முறை தரிசிப்பவர்களின் பரவச நிலையை எழுத்தால் வர்ணிக்க முடியாது.

ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு சொம்புப் பாலை முருகன் சிரசில் ஒரு அழகான சல்லடையின் மேல் ஊற்றுகின்றனர், பின் தீபாராதனை. உட்கார வைத்திருக்கும் பேட்சை எழுப்பி அடுத்த பத்து பேரை உட்கார வைக்கின்றனர். பாலபிஷேகம் நடக்கும் பொது முருகனை நன்றாக பார்க்க முடிகிறது. அபிஷேக வேளையில் நாங்கள் சென்றது எங்கள் கொடுப்பினை தான். அதற்குள் எங்களுக்கு உதவி செய்ய வந்தவர் அர்ச்சனை செய்து பிரசாதத்தைக் கொண்டு வந்தார். பின் நாங்கள் முருகன்சி சன்னதிக்குப்ன்ன பின்னிருக்கும் குகைப் போன்ற பாதையில் சென்று ஐந்து லிங்கங்களை தரிசித்துத் திரும்பி வந்தோம். அவர் திரும்பவும் ஒரு முறை எங்களை முருகன் முன் உட்கார வைத்து முருகனின் பாலபிஷேகத்தையும் தீபாராதனையையும் மீண்டும் ஒரு முறை தரிசிக்க வைத்தார். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

நான் இது நாள் வரை மூலவரே வள்ளி தெய்வயானையுடன் இருப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் உத்சவர் தான் அவ்வாறு உள்ளார், மூலவர் தண்டாயுதபாணி ஆக இருக்கிறார். உத்சவரையும் சேவித்தோம். பின் அங்குள்ள இதர சன்னதிகளை உள்ள மூர்த்திகளையும் வழிபட்டோம். இங்கும் ஒரு பெருமாள் சன்னதி உள்ளது. பின் வெளியில் வந்து பிரசாதம் பெற்றுக் கொண்டோம். ரொம்ப அருமையான, நிம்மதியான மன நிலையில் அனைவரும் இருந்தோம்.

tiruchendur1

எங்கள் குழுவில் சிலர் வள்ளி குகைக்கும் சென்று வந்தனர். பின் திருநெல்வேலி திரும்பும் வழியில் சரவண பவன் அண்ணாச்சி கட்டியிருக்கும் வனத்திருப்பதி கோவிலுக்கும் சென்றோம். கோவில் நன்கு கட்டப்பட்டு அழகாக பராமரிக்கப்பட்டுள்ளது. பக்கத்திலேயே சரவணபவன் ஹோட்டல் உள்ளது.

vanathiru

அறைக்குத் திரும்பி உணவு உண்டபின் மதிய நித்திரை. அதற்கு பின் வாங்கிய தின்பண்டங்களின் பங்கு பிரிப்பு. குடும்ப சொத்து பாகப் பிரிவினையை விட பெரியதாக இருந்தது. இதில் நாங்கள் திருநெல்வேலியில் இருக்கோம் என்று தெரிந்து, சேவு வேணும், அல்வா வேணும்ன்னு வாட்சப்பில் ஒரே தொந்தரவு! {பேக்கரி ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன் பன்னு வேணும் ரொட்டி வேணும்ன்னு ஒரே தொல்லை டோனில் படிக்கவும்}. அவர்களுக்காக ரொம்ப கனிவு மனம் கொண்ட எங்கள் குழு உறுப்பினர் ஒருவர் மறுபடியும் சென்று வாங்கி வந்தார்.

டிரெயினுக்குக் கிளம்புவதற்குள் எங்களில் மூவர் அங்கு இருக்கும் சாலைக் குமரன் கோவிலுக்கும் போய் விட்டு வந்துவிட்டனர்.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே எங்களுக்கு டிரெயினுக்கு இரவு உணவு கட்டிக் கொடுத்தனர். சப்பாத்தியும் தயிர் சாதமும் மிகவும் அருமை. எங்கள் வாகன ஓட்டுனரும் மிகவும் நல்லவராக இருந்தார். பொறுமையாக எங்களை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். அவருக்கு நாங்கள் அனைவரும் தனித் தனியாக நன்றி சொன்னோம். டிரெயினில் இந்த முறை அரட்டை டாபிக் புகழ்பெற்ற பல fake சாமியார்கள் பற்றி. மிகவும் சுவாரசியமாக இருந்தது உரையாடல் என்று சொல்லவும் தேவையில்லை. காலையில் எழும்பூர் நிலையத்தை டிரெயின் ரொம்ப தாமதம் இன்றி தொட்டது. அடுத்த சுற்றுலாவுக்கு எங்கு செல்லலாம் என்று யோசித்தபடி அனைவரும் கலைந்தோம்.

இந்தமாதிரி சுற்றுலாக்கள் உறுவுகளை பலப்படுத்துகிறது, மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியுடன் இருக்க பழக்குகிறது. அதனால் அடுத்த சுற்றுலாவுக்காக தற்போது waiting :-}

tiruchendur2

 

இன்பச் சுற்றுலா – திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டக் கோவில்கள்! – பகுதி 1

ட்விட்டர் நண்பர் ஜகன் @Azhvarkadiyann  க்குத் திருமணம் நிச்சயம் ஆன உடனேயே எங்கள் நண்பர் குழாம் கோவில்பட்டிக்கு டிக்கெட் போட்டாச்சு. அந்த வட்டாரத்தில் இருக்கும் சில பல கோவில்களை தரிசிக்கவும் மூன்று நாட்கள் இன்ப சுற்றுலா திட்டமும் வகுக்கப்பட்டது. ஜெகனின் திருமணம் கோவில்பட்டியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசுவந்தனை சிவன் கோவிலில் நடைபெற இருந்ததால் நாங்கள் எட்டு பேர் கோவில்பட்டிக்குப் போய் அங்கே குளித்து முடித்துத் திருமணத்துக்குச் செல்வதாக முடிவு செய்தோம்.

முத்து நகர் எக்ஸ்பிரெஸ்சிலியே கொண்டாட்டம் ரம்பம்பம் ஆரம்பம். சுவை மிகுந்த உணவிற்குப் பிறகு ட்விட்டர், சினிமா, அரசியல் என்று பல்வேறு துறைகளைப் பற்றிய எங்கள் மேலான கருத்துக்களைப் {!!} பகிர்ந்த பிறகு தூக்கம் கண்களை சுழற்ற நல்ல உறக்கம். இப்பொழுது எந்த ஸ்டேஷனில் இறங்க வேண்டுமோ அந்த ஸ்டேஷன் வரும் முன் எழுப்ப போனில் 139 டயல் செய்து அலாரம் வைக்கும் வசதியை ரெயில்வே துறை அமைத்துக் கொடுத்துள்ளது. எங்களுக்கு அது மிகவும் வசதியாக இருந்தது. காலை ஐந்தே காலுக்குக் கோவில்பட்டியை தொட்டது டிரெயின். சூப்பர் டிலக்ஸ் டெம்போ டிராவலரை எங்கள் குழு நண்பர் ஏற்பாடு செய்திருந்தார். சிறு நகர வீதியில் காலை புலரும் நேரத்தில் ஹோட்டல் சென்று அடைந்தோம். மிகவும் ரம்மியமான காலைப் பொழுது.

சின்ன விடுதி தான். ஆனால் சுத்தமாக இருந்தது. குளித்து முடித்து அலங்கரித்துக் கொண்டு கிளம்பி லட்சுமி சங்கர் சைவ ஹோட்டலில் காலை உணவை உண்டோம். காபி சுவை நாவை விட்டு நீங்கவில்லை. சாப்பிட்ட இலையை நாமே எடுத்துப் போடவேண்டும். என்ன அருமையான பழக்கம்! காலை மணி எட்டு எட்டரை ஆனதால் நிறைய பள்ளி பேருந்துகள் செல்லும் சாலையில் ரொம்ப டிராபிக் ஜேம். பசுவந்தனை செல்லும் சாலையில் ஓவர் டேக் எல்லாம் செய்ய முடியவில்லை. கோவிலை அடைந்தபோது மணி ஒன்பதே கால். முகூர்த்தம் ஒன்பதில் இருந்து பத்தரை. மணமக்களும் குடும்பத்தினருமே அப்பொழுது தான் அரக்கப் பறக்க வந்திருந்தனர்.

சாமி சன்னதியில் மணமக்களுக்கு புது உடை கொடுக்கப்பட்டது. மாப்பிள்ளை சீக்கிரம் ரெடியாகி விட்டார். வழக்கம் போல பெண் லேட்டாக்கினார். கோவில் குருக்கள் மணி பத்தாகிவிட்டதே என்று அவசரப் படுத்தினார். ஆனால் மணமக்கள் வீட்டார் ரொம்ப ஜாலியாக இருந்தனர். அதெல்லாம் பத்தரைக்குள் மாப்பிள்ளை தாலியை கட்டிவிடுவார் கவலை வேண்டாம் என்று குருக்களை சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தனர். புது உடையில் வந்த மணமக்களை சாமி சன்னதியில் இருந்து கோவிலில் ஒரு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். எக்கச்சக்கக் கூட்டம். ஊரே வந்துவிடும் போலிருக்குக் கல்யாணத்துக்கு!

jagan

மணமக்களை புகைப்படக்காரர், விடியோக்காரர் நன்றாக மறைத்துக் கொண்டனர். தாலி கட்டும் சமயத்தில் தோராயமாக மணமக்கள் இருக்கும் திசையில் அட்சதையை தூவினோம். வாழ்க மணமக்கள். இருவரும் மனம் கொள்ளா மகிழ்ச்சியில் இருந்தது முகத்தில் தெரிந்தது. இரு வீட்டாரும் சொன்னது போல பத்து இருபத்தைந்துக்கு ஜகன் மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டார்.

மணமக்கள் ரிசெப்ஷன் மண்டபத்துக்கு வந்த பிறகு புகைப்படம் எடுத்துக் கொண்டு திருமணத்தின் முக்கிய நிகழ்வான விருந்துண்ணல்லுக்கு முதல் பந்திக்கே சென்றோம். அறுசுவை உணவு! ஜவ்வரிசி/சேமியா பால் பாயசத்தின் சுவை இன்னும் நாக்கில் உள்ளது!

பிறகு கோவில்பட்டிக்குப் பயணம். வழியெல்லாம் சில ஈச்ச மரங்களும், பனை மரங்களும் வேலிக்காத்தான் முட்செடிகளும் தான் சாலையின் இரு புறமும் இருந்தன. நிழல் தரும் மரங்களோ பசுமையான வயல்களோ இல்லை.

நாலு மணிக்கு கோவில்பட்டியில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் பயணப்பட்டோம். முப்பது கிலோமீட்டர் தான். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தை நிச்சயம் உலக அதிசயங்களுக்கு ஈடாகச் சொல்லலாம். வானளாவ நிற்கும் அந்தக் கோபுரம் தமிழர் பண்பாட்டிற்கும் கலை நயத்துக்கும் ஒரு சான்று. நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

srividay

கோவில் வெளிப்பிராகாரத்தில் இருந்தே பெரிய பெரிய சிற்பங்கள் தூண்களை அலங்கரிக்கின்றன. கையெட்டும் தூரம் வரை எண்ணெய் பிசுக்கை நம்மவர்கள் தூண்களில் துடைத்து வைத்திருக்கின்றனர். அதற்கு மேல் பகுதி கெடாமல் அழகாக உள்ளன. எத்தனையோ வருடப் பழைமையானக் கோவிலாக இருந்தாலும் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றியுள்ள சுவரில் உள்ள சிற்பங்கள் மெருகு குலையாமல் உள்ளன. அவ்விடங்களில் கம்பி வேலி போட்டு பாதுகாப்பதும் ஒரு காரணமாக இருக்கும். உட் பிராகாரத்தில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் ஆண்டாள், பெரியாழ்வாரின் கதைகளை சொல்கின்றன.

yazhi

tanjorepainting

கர்ப்பக்கிரகத்தில் ஆண்டாள் ரங்கமன்னார் மற்றும் கருடன் சேவை சாதிக்கின்றனர். எங்கும் கருடாழ்வார் பெருமாளுக்கு நேரெதிர் சன்னதியில் தான் இருப்பார். ரங்கமன்னாரை ஆண்டாளுடன் இணைக்க விரைந்து கருடன் கொண்டு சேரப்பித்ததால் அவருக்குப் பெருமாளுடன் நிற்கும் ஏற்றம் இங்கே கிடைத்திருக்கிறது.

rangamannar

கோவிலைச் சுற்றியும் கோவிலுக்குப் போகும் அந்த வெளிப் பிராகாரத்திலும் பால்கோவா, வாசனைப் பொடி, தாழம்பூ குங்குமம், மர பொம்மைகள், ஓலைக் கூடைகள் எனக் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இரு புறமும் கடைகள் நிறைந்திருக்கின்றன. வெளியே வந்தவுடன் இடது புறத்தில் ஆண்டாள் அவதரித்த துளசி வனம் உள்ளது. மிகவும் அழகான நந்தவனம். அங்கேயே ஒரு சின்ன சன்னதியில் சிறுமியாக ஆண்டாள் சேவை சாதிக்கிறாள். சின்னக் கோவிலானாலும் மிகவும் சுத்தமாகவும் சுவர்களில் அழகிய சித்திரங்களும் நிறைந்துள்ளன.

thulasi

அதை அடுத்து வடபத்ரசாயி கோவில் உள்ளது. பெரிய கோவில், இரண்டு நிலைகள். கீழ் நிலையில் லட்சுமி நரசிம்மர் சுதையால ஆன பெரிய சிலை. வண்ணப் பூச்சுக்களுடன் கன கம்பீரமாகக் காட்சித் தருகிறார். அழகோ அழகு. மாடியில் வடபத்ர சாயி. அவரும் சுதை வடிவில், நீண்ட சயனத் திருக்கோலம். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை இவ்வளவு அருகிலும் விரட்டப்படாமலும் சேவிக்க முடியாது. இங்கே அருமையான சேவை. தீர்த்தம், துளசிப் பிரசாதம். அந்தக் காலத்தில் எப்படித்தான் இவ்வளவு பிரம்மாண்டமானக் கோவில்களை அரசர்கள் கட்டினார்களோ தெரியவில்லை. கோவில்கள் முழுவதுமே சிற்பங்கள் கண்ணைக் கவர்ந்தன. இந்த மூன்று கோவில்களும், அடுத்து நாங்கள் தரிசித்த நவ திருப்பதியும் வெகு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது ஒரு பெரிய ஆறுதல்.

yazhi1

அடுத்த நாள் திருநெல்வேலிவேலியில் இருந்து பயணத்தைத் தொடங்கினோம். ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ளன. நவ திருப்பதிகள் என அழைக்கப்படும் அந்த தலங்கள். 1.ஸ்ரீவைகுண்டம் 2.நத்தம் 3. திருப்புளியங்குடி, 4.தொலைவில்லி மங்கலம், 5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது) 6.பெருங்குளம், 7. தென்திருப்பேரை, 8. திருக்கோளூர், 9. ஆழ்வார் திருநகரி.

டிபனை முடித்துக் கொண்டு கிளம்பவே ஒன்பது மணி ஆகிவிட்டது. நவ திருப்பதியின் முதல் கோவிலாக திருவைகுண்டத்தை அடைந்தோம். அழகிய பெரிய கோபுரம். வாசல் பகுதியில் இருந்து சன்னதிக்கு செல்வதே நீண்ட நடையாக இருந்தது. ஒரு தனி மண்டபத்தில் நிறைய ஆளுயர சிற்பங்கள் இருந்தன.

Srivaikundam_Temple

வைகுண்டநாதன் நின்ற திருக்கோலம். ரொம்ப உயரம் இல்லை. எந்த நவ திருப்பதி கோவில்களிலும் கர்ப்பகிரகத்தில் மின்சார விளக்கு இல்லை, எண்ணெய் விளக்குகள் தாம். அதனால் வெளி வெளிச்சத்தில் இருந்து நாம் உள்ளே வந்து தரிசிக்கும்போது சிறிது நேரம் ஆகிறது கண்கள் அட்ஜஸ்ட் ஆகி பெருமாளை சரியாக பார்க்க. தீபாராதனை காட்டும்போது தான் நன்றாக தரிசிக்க முடிகிறது. பட்டர் சுருக்கமாக பெருமாளின் பெயர், தாயாரின் பெயர் திவ்ய தேசத்தின் பெயர், எந்த கிரகத்துக்கான ப்ரீத்தி ஆகியவைகளை கூடியிருப்பவர்களுக்குச் சொல்கிறார். இந்தக் கோவில் சூரியன் பரிகார ஸ்தலம்.

ramastatue

ஒரு காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் இருந்து படைப்புத் தொழில் குறித்த ரகசியம் அடங்கிய ஏடுகனை ஒளித்து வைத்துக்கொண்டானாம். அந்த ஏடுகளை மீட்க தாமிரபரணி ஆற்றங்கரையில் விஷ்ணுவை நோக்கி பிரம்மா கடும் தவம் செய்ய, பிரம்மாவுக்கு திருமால் நேரில் காட்சியளித்து படைப்புத் தொழில் குறித்த ரகசியத்தை சோமுகாசுரனிடமிருந்து மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க வேண்டும் என்று பிரம்மா வேண்ட திருமாலும் அப்படியே ஆகட்டும் என வைகுண்டநாதனாக நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிகிறார்.

அடுத்து நாங்கள் சென்றது ஒன்பதாவது திருப்பதி. முதல் ஸ்தலத்துக்குப் பிறகு ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு என்று வந்தால் சுற்று இல்லாமல் விரைவில் தரிசிக்க முடிகிறது. ஆழ்வார் திருநகரி பயணப்பட்டோம். இது நம்மாழ்வார் அவதாரத் தலம். கோவில் வெளியில் இருந்து பார்க்க சிறியதாக இருந்தாலும் உள்ளே பெரியதாக இருந்தது. பெருமாளும் கிடந்த கோலத்தில் வெள்ளிக் கவசத்தில் பிரமாதமாக இருந்தார். நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா, திருவடிகளில் ஸ்ரீதேவி பூதேவி. இங்கும் தீப ஆராதனையின் போது தான் பெருமாளை நன்றாக தரிசிக்க முடிகிறது. எல்லா கோவில்களிலுமே ரொம்ப கூட்டம் இல்லை. நாங்கள் போவதற்கு முன் ஒரு பத்து பேர் இருப்பர், அவர்கள் நகர்ந்ததும் நாம் சற்று அருகில் போய் சேவிக்க முடிகிறது. இந்தக் கோவில் குரு பகவானுக்கான பரிகார ஸ்தலம்.

பெருமாள் ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால் ஆதிநாதன் என்ற திருநாமம் இவருக்கு. திருமாலே பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடமாகியதால் குருகூர் என்றும் அழைக்கப்படுகிறது.

urangapuli1

பிராகாரத்தை வலம் வந்தால் அங்கே ஒரு பகுதியில் நான்கு படிகள் ஏறினால் நம்மாழ்வார் பல வருடங்கள் பிண்டமாக வாழ்ந்த புளியமர பொந்தை தரிசிக்கலாம். நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது. இந்தப் புளியமரம் இரவில் இலைகளை மூடாது. அதனால் இதற்கு உறங்காப் புளி என்று பெயர். பக்கத்திலேயே நம்மாழ்வார் சன்னதி. நம்மாழ்வார் திரு உருவம் மிகவும் அழகாக உள்ளது. அலங்காரமும் அற்புதம்.

அடுத்து நாங்கள் எட்டாவது தலமாகிய திருக்கோளூர் சென்றோம். இது மதுரகவி ஆழ்வார் அவதாரத் தலம்.

nt6

இங்கு மூலவர் வைத்தமாநிதி பெருமாள், உற்சவர் நிக்சோவித்தன், தாயார் குமுத வல்லி, கோளூர் வல்லி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். குபேரன் திருக்கோளூர் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்து, தான் ஒரு சாபத்தால் இழந்த நிதியில் பாதியை பெற்றான். எனவே இழந்த செல்வத்தை பெற திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம். இது செவ்வாய் கிரஹதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

அடுத்து தென் திருப்பேரை சென்றோம். இந்த தலம் திருவைகுண்டத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தான். இங்கு மூலவர் மகர நெடுங்குழைக்காதர் வீற்றிருந்த திருக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். உயரமான பெருமாளாக தரிசிக்க அத்தனை அழகாக உள்ளார். உற்சவர் நிகரில் முகில் வண்ணன், தாயார் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். பெயர்களே உச்சரிக்க அவ்வளவு ரம்மியமாக உள்ளன.

nt5

துர்வாசமுனிவரின் சாப விமோசனம் பெறுவதற்காக பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நராயணாய என்ற மந்திரத்தை ஜெபம் செய்தாராம். பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும்போது இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்க திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்திருக்கிறார். அப்போது தேவர்கள் பூமாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது. இலக்குமியின் உடலுடன் பூமாதேவி தவமிருந்ததால் இவ்வூர் திருப்பேரை என்றழைக்கப்பட்டது. இத்தலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் இன்று வரை பொய்ப்பதில்லை என்கிறார்கள். இது சுக்கிர கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

அடுத்தத் திருத்தலம் பெருங்குளம். மூலவர் வேங்கட வாணனாகவும், உற்சவர் மாயக்கூத்தன் தாயார் அலமேலுமங்கை, குளந்தைவல்லி தாயாருடன் அருள் பாலிக்கிறார்.

nt4

பெருங்குளத்தில் வசித்து வந்த வேதசாரண் குமுதவல்லி தம்பதியினரின் மகள் கமலாவதி, தான் திருமணம் செய்தால் பெருமாளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி, பெருமாளை நோக்கி கடும் தவம்புரிந்தார். பெருமாளும் நேரில் தோன்றி தன்னுடைய மார்பில் கமலாவதியை ஏற்றுக்கொண்டார்.

ஒரு சமயம் வேதாசாரண் மனைவி குமுதவல்லியை அச்மசாரன் என்னும் அரக்கன் கவர்ந்து சென்றான். குமுதவல்லியை அரக்கனிடமிருந்து பெருமாள் மீட்டுவந்தார். பெருமாளுடன் அரக்கன் போரிட்டான். அரக்கனை நர்த்தனம் செய்து அவனை வதம் செய்ததால், மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெருமாளுக்கு ஏற்பட்டது. இது சனி கிரஹ தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

mapofnt

பெருங்குளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இரட்டை திருப்பதி ஸ்தலங்கள். தெற்கு கோவிலில் மூலவர் தேவபிரான் உற்சவர் ஸ்ரீனிவாசன் தாயார் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார். மிகப் பெரிய மூர்த்தி. வீற்றிருந்த திருக்கோலம். வெள்ளிக் கவசத்துடன் மிகவும் அழகாகக் காட்சி அளிக்கிறார்.

nt3

ஆத்ரேயசுப்ரபர் என்ற ரிஷி யாகம் செய்வதற்காக இத்தலத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, பூமியில் புதையுண்டு கிடந்த மிக ஒளிமயமான ஒரு வில்லையும் தராசையும் எடுத்தார். அவர் கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறியது. இருவரும் குபேர சாபத்தால் வில்லாகவும் தராசாகவும் மாறி இத்தல மண்ணில் புதையுண்டு கிடந்ததாக கூறி பரமபத முக்தி அடைந்ததால் இத்தலம் தொலைவில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது. இத்தலம் ராகு தோஷநிவர்த்தி ஸ்தலம்.இரட்டை திருப்பதி என்னும் ராகு கேது பரிகார ஸ்தலம்.

தெற்கு கோவிலில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வடக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அரவிந்த லோசனார் {செந்தாமரைக் கண்ணன்} வீற்றிருந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். உற்சவர் செந்தாமரைக் கண்ணன் தாயார் கருத்தடங்கண்ணியுடன் எழுந்தருளியுள்ளார். பெருமாளையும் தாயாரையும் நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

nt7

தினமும் தேவபிரானுக்கு வடக்கு தடாகத்தில் இருந்து சுப்ரபர் தாமரை மலர்களை எடுத்து வந்து பூஜித்து வந்தார். ஒருமுறை சுப்ரபர் எங்கிருந்து தாமரை மலர்களை கொய்து கொண்டு வருகிறார் என்பதை பார்ப்பதற்காக, பின் தொடர்ந்து சென்றார். இதை அறிந்த சுப்ரபர் தன்னை பின் தொடர்வதற்கான காரணம் கேட்க தேவ பிரானோடு சேர்த்து தனக்கும் அபிஷேகம் செய்ய பெருமாள் கூறியதால், அங்கேயும் ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து சுப்ரபர் பூஜைகள் செய்து வந்தார். அந்த பெருமாளே செந்தாமரைக்கண்ணனாக காட்சி அளிக்கிறார். இது கேது கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

இந்தக் கோவில்கள் இரண்டும் ஒரு மணிக்கு மேலும் திறந்திருப்பது சேவார்த்திகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது.  செந்தாமரைக் கண்ணன் கோவிலில் ரொம்ப அழகான ஒரு யானை லட்சுமி என்ற பெயருடன் எல்லார் மனத்தையும் கொள்ளைக் கொண்டது. அதனுடன் புகைப்படம் எடுக்க நின்றால் தும்பிக்கையை மேலே தூக்கி அழகாக போஸ் கொடுத்தது. நாம் தாங்க் யு என்றால் தலையை ஆட்டி, போயிட்டு வரோம் என்றாலும் புரிந்தா மாதிரி தலையை ஆட்டியது. எங்கள் குழுவினர் சிலருக்கு அதை விட்டு வரவே விருப்பம் இல்லை.

elephant

அடுத்து நாங்கள் சென்றது புதன் பரிகாரத் தலமாகிய திருப்புளியங்குடி. இங்கே மூலவர் காய்சினவேந்தன் தாயார் மலர்மகள், திரு மகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருமால் இலக்குமி தேவியுடன் நதிக் கரையில் தனித்திருந்த போது, தன்னை திருமால் கண்டுகொள்ளாதிருக்கிறாரோ என பூமாதேவி சினங்கொண்டு பாதாள லோகம் செல்ல திருமால் அங்கு சென்று பூமாதேவியை சமாதானம் செய்து அழைத்து வந்து இரு வரும் சமமே என இரு தேவியருடனும் திருமால் இங்கு எழுந்து காட்சியளிக்கிறார். பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால், பூமிபாகர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உள்ளது.

nt2

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவரகுணமங்கை எனப்படும் நத்தத்தில், மூலவர் விஜயாசன பெருமாள் ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலத்தில் தாயார்கள் வரகுண வல்லித் தாயர், வரகுண மங்கைத் தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இது சந்திரகிரஹ தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

nt1

திருவரகுணமங்கையில் வேதவி என்பவர் தன் மாதா, பிதா, குரு ஆகியோருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆஸனம் என்னும் மந்திரத்தை ஜெபித்து கடும் தவம் புரிந்தார். அப்போது திருமால் அங்கு தோன்றி வேதவிக்கு காட்சியளிதார். திருமாலின் அருள் பெற்று வேதவி பரம பதம் அடைந்தார்.

ஆஸன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் விஜயாசனர் என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானது. இத்திருப்பதியில் உயிர் நீத்தால் மோட்சம் கிட்டும் என ரோமேச முனிவர் கூறியுள்ளார். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்கே இறைவனை பிரார்த்திக்கலாம். இங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

வெற்றிகரமாக மதியம் ஒன்னரை மணிக்குள் நாங்கள் நவ திருப்பதியையும் சேவித்து முடித்ததில் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. எங்கள் குழுவில் பலருக்கு இது நெடு நாள் ஆசை. நிறைவேற்றி வைத்த அந்தப் பெருமாளுக்கு மானசீகமாக நன்றி சொல்லிவிட்டு எங்கள் ஹோட்டலுக்குத் திரும்பினோம்.

தொடரும்..இன்னுமொரு பாகம்.

 

 

ஒரு நாள் கூத்து – திரை விமர்சனம்

 

orunaal

லேட்டா படத்தைப் பார்த்தாலும் லேட்டஸ்ட் விமர்சனம் என்ற பெயர் பெறட்டுமே என்று எழுதுகிறேன் :-} இறைவிக்குப் பின் பார்க்கும் படம் இது. இப்படமும் பெண்களின் நிலை எப்படி ஆண்களின் முடிவுகளால் ஆக்கம் பெறுகின்றன என்ற கதைக் கருவைக் கொண்டுள்ளது. ஆனால் கதையைச் சொன்ன விதம் வேறு. இறைவியை விட இன்னும் சிம்பிளா அனைவருக்கும் எட்டும் வகையில் கதைச் சொல்லி இயக்கி இருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

இந்தப் படத்திலும் மூன்று பெண்கள். ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் நிவேதா அவரின் காதலன் தினேஷின் நிலையின்மையால் அவர் எதிர்கொள்ளும் நிலை மாற்றங்கள், மூன்றாவது மகளாகப் பிறந்து தந்தையால் ஒவ்வொரு வரனும் நிராகரிக்கப்படும் அழகு தேவதையாக மியா ஜார்ஜ், மீடியாவில் வேலை செய்வதால் மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமாக தவிக்கும் ரித்விகா  என்று மூன்று பெண்களின் வாழ்க்கையை நாம் நம் கண் முன்னால் பார்க்கிறோம்.

பெண்கள் நாட்டின் கண்கள் என்பதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய். உண்மை வாழ்வில் பெண்கள் இரண்டாம் தர மூன்றாம் தர பிரஜைகள் தாம் என்பதை முகத்தில் அடித்தா மாதிரி காட்டியது இறைவி ஆனால் இந்தப் படம் அதையே இயல்பாக, இது தான் நிதர்சனம் என்று எளிமையாகக் காட்டியிருப்பதற்கு இயக்குநருக்குப் பாராட்டுகள். துணைப் பாத்திரங்களில் வரும் கருணாகரன், சார்லி steal the show. பால சரவணனும் நண்பன் பாத்திரத்துக்கு நல்ல fit. தினேஷ் கண்கள் இந்தப் படத்தில் கொஞ்சம் பரவாயில்லை.

இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் அருமை {அடியே அழகே, எப்போ வருவாரோ}. ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும் நன்று. இவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.

திருமணம் என்பது பெண்கள் வாழ்வில் இன்றும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது, பெண்ணுக்குக் குறித்த நேரத்தில் திருமணம் நடக்காவிட்டால், நிச்சயித்த மணம் நின்றுவிட்டால், திருமணமே நடக்காமல் இருந்தால் என்று பல சூழ்நிலைகளை எடுத்து ஆண்டிருப்பது, அதுவும் யாரையும் குற்றம் சொல்லாமல் தாக்கத்தைப் பற்றி நாமே புரிந்து கொள்ளும் படி விட்டிருப்பது நன்றாக உள்ளது. கிளைமேக்ஸ் சற்றே சொதப்பல். அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ரொம்ப விறுவிறுப்பான படமோ, நகைச்சுவை படமோ கிடையாது. ஆனால் யதார்த்தமான படம். வரவேற்கப்பட வேண்டிய படம்.

Oru-Naal-Koothu-Movie-First-Look-Posters-02

இறைவி – திரை விமர்சனம்

iraivi2

பலர் புகழ்ந்து தள்ளியது போல படம் ரொம்ப ஓஹோ என்றும் இல்லை எழுத்தாளர் சாருவும் வேறு சிலரும் இகழ்ந்தது போல படம் படு குப்பையும் இல்லை. இக்கால சூழலுக்கு ஏற்ற மிக நல்ல படம். பெண்கள் என்றும் சூழ்நிலை கைதிகளாகவே உள்ளனர், சுதந்திரம் என்பது வெகு அரிதான ஒரு பரிசாக அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது படம். பெண்கள் ஆண்களிடம்/கணவன்களிடம் படும் அவஸ்தைகளை மெலோடிராமா இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

கார்த்திக் சுப்புராஜின் மூன்றாவது படம். பீட்சா, ஜிகிர்தண்டா, அதன் பின் இறைவி. ஜிகிர்தண்டா ரொம்ப ஜனரஞ்சகமான படம். இறைவி கொஞ்சம் சீரியஸ். படத்தில் வரும் சம்பவங்கள் நிஜ வாழ்வை ஒத்து உள்ளது.  எஸ்.ஜே.சூர்யா தான் கஷ்டப்பட்டு எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவிக்கும் ஒரு இயக்குநராக அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்குள் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. அவரது மனைவியாக கமாலினி முகர்ஜி, விரக்தியால் குடி நோயில் தள்ளாடும் சூர்யாவிடம் மாட்டிக் கொண்டு திருமணத்தை முறித்துக் கொள்ளவும் முடியாமல் அவருடன்  குடித்தனமும் செய்ய முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பு நிலையில் வாழும் அவரும் சிறப்பாக செய்துள்ளார்.

விஜய் சேதுபதி திரும்பவும் அடியாள் மாதிரி பாத்திரம். அவரது மனைவியாக பல சின்ன சின்னக் கனவுகளுடன் அஞ்சலி. அஞ்சலி, கமாலினி, பூஜா தேவரியா ஆகிய மூன்று முக்கிய பெண் பாத்திரங்களில் அஞ்சலி எளிதாக முதல் இடத்தைப் பிடிக்கிறார். வடிவுக்கரசியும் படத்தில் உள்ளார், அவர் கோமாவில் இருப்பதால் நடிப்பு என்று பேச எதுவும் இல்லை. ராதாரவி, சீனு மோகன் தங்கள் தேர்ந்த நடிப்பால் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள்.

பெண்களின் நிலை பற்றி பொதுவில் எவரும் கவலைப்படுவதில்லை ஏனென்றால் பெண் எந்த நிலைக்கும் தன்னை பொருத்திக் கொள்வாள் என்ற காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையே. அதுவே இப்படத்தின் அடித்தளம். அதன் மேல் கட்டப்பட்டிருக்கு மற்ற சம்பவங்கள். ஆண் என்பவன் கோபக்காரன், முரடன், ஆதிக்கம் செலுத்துபவன். ஆண்கள் பெண்களுக்கு உதவும் எண்ணம் இருக்கும் சமயத்திலும் கூட அதன் முடிவு ஆண்களுக்கு சாதகமாக இருந்தாலே அதை செயல் படுத்துகிறார்கள். அதை மாற்றவும் முடியாது என்பதையும் இப்படம் சொல்கிறது.

Men are from mars and women are from Venus என்பது ஒரு புகழ் பெற்ற புத்தகத்தின் தலைப்பு. அப்புத்தகத்தில் ஆசிரியர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசத்தை விவரமாக காட்டியிருப்பார். ஆணும் பெண்ணும் வெவ்வேறு கிரகத்தைச் சார்ந்தவர்கள், அவர்களின் எண்ணங்களும் செயல்களும் எதிர்ப்பார்ப்புகளும் வெவ்வேறானவை. அது இப்படத்தின் கருவாக இல்லாவிட்டாலும் ஆண், பெண் உணர்வுகளின் வித்தியாசத்தை இப்படம் அழகாக கோடிட்டுக் காட்டுகிறது.

இப்படத்துக்குப் பாடல்களே தேவையில்லை. பாடல்களும் நன்றாக இல்லை. நான்கு பாடல்களையும் கட் பண்ணிவிடலாம். அவை கதையோட்டத்திற்கு தடையாகவும் உள்ளன. இந்தத் தவறை இயக்குநர் ஏன் செய்தார் என்று புரியவில்லை. படத்தின் நீளம் இரண்டு மணி நாற்பது நிமிடங்கள். பாடல்களை எடுத்துவிட்டால் நேரமும் குறையும். மேலும் பாபி சிம்ஹாவின் பாத்திரப் படைப்பில் பழுதுள்ளது. அது கதையை பலவீனப் படுத்துகிறது.

பாபி சிம்ஹா கோமாவில் இருக்கும் வடிவுக்கரசியிடம் தன எண்ணங்களையும் செயல்களையும் பற்றி பேசுவது ஆடியன்சுக்கு அவரின் செயல்களைப் புரிய வைக்கவே என்று தெளிவாகத் தெரிகிறது. அது நாடகத்தனமாக உள்ளது. {ஆடியன்ஸ் அறிவாளிகளே!} அதே மாதிரி தான் கடைசியில் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் வசனமும். அவர் ஆண் பெண் பற்றி விளக்கம் சொல்லாமலே நமக்கு விளங்கும். படமே அது தானே!

ஒரே சமயத்தில் பல பாத்திரங்களை கதையில் களமாட விட்டு ஒருவரின் செயல் இன்னொருவரை பாதிக்கும் விதத்தில், அதே சமயம் சிக்கலில்லாமலும் திரைக் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பெண்களுக்கு மதிப்புக் கொடுங்கள் என்று ஓபனாக சொல்லாமல் பெண்மையை உயர்த்திக் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராசுக்கு ஒரு மலர் கொத்துப் பரிசு :-}

Actress Anjali in Iraivi Tamil Movie Stills

Actress Anjali in Iraivi Tamil Movie Stills