ரஜினிகாந்திற்கு இருக்கும் ஒரு மாஸ்/கரிஸ்மா இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் கிடையாது என்று சொல்லலாம். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார். அப்படிப்பட்டவரை வைத்து இயக்குவது என்பது லேசான விஷயம் இல்லை. திரையுலகத்தில் பல வெற்றிக் கொடிகளை நாட்டியவர்களுக்கே அவரை இயக்குவது சவாலாக அமையும்போது இளம் இயக்குநர் பா.ரஞ்சித் அதில் துணிச்சலுடன் களம் இறங்கியதே பாராட்டப் பட வேண்டிய விஷயம்.
இந்தக் கதை நமக்கு அந்நியமானது. மலேசியா வாழ் தமிழின மக்களின் சரித்திரப் பின்னணியில் கதை அமைந்துள்ளது. ரஞ்சித்திற்கு இந்தக் கதைக் கரு பிடிக்க காரணம் அங்கும் அவ்வின மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றனர், படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல், போதை மருந்து கடத்தல், பாலியல் தொழில் போன்ற எளிதாக பணம் ஈட்டக் கூடிய தொழில்களில் இளைய சமுதாயம் ஈடுபட்டு சீரழிந்து கொண்டு வருகிறது. அதனால் கேங்குகள் உருவாகக் காரணம் ஆகிறது. அடிமட்டத்தில் இருக்கும் அம்மக்களுக்கு வழிகாட்ட ஒரு தலைவனாக ரஜினியை சித்தரிக்க இந்தக் கதையைத் தேர்வு செய்திருக்கிறார் ரஞ்சித். ஆனால் திரைக்கதை விரிவாகவும், அழகாகவும் கதையை விளக்கினால் மட்டுமே பார்வையாளர்களுக்கு அந்தக் கதை போய் சேரும். அங்கே தான் சோடை போகிறார் இயக்குநர்.
முழுக்க முழுக்க மலேசியக் கதையாக இருந்தால் சரிபட்டு வராது என்று பாதியில் ராதிகா ஆப்தேவைத் தேடி ரஜினி சென்னை வரும் பகுதி சேர்க்கப்படிருப்பது போலத் தோன்றுகிறது. மலேசியக் கதையையும் முழுமையாகச் சொல்லாமல் கேங்க்ஸ்டர் கதை என்று கொள்ளும்படியும் இல்லாமல் ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் படத்தின் திரைக்கதையை அமைத்தது தான் ரஞ்சித்தின் பெரும் சறுக்கல். படம் ஓபனிங் நன்றாகவே உள்ளது. ஆனால் கிளைமேக்சிற்கான காரணம் சரியாக இல்லாததால் படத்தைப் பார்த்து முடித்து எழும் ரசிகன் அந்த ஏமாற்றத்துடன் எழுந்து போகிறான். அத்தனை உழைப்பும் வீணானது போலத் தோன்றிவிடுகிறது.
ராதிகா ஆப்தே ரஜினியின் அன்பு மனைவியாக பிரமாதமாக செய்துள்ளார். அவர்கள் மகளாக வரும் தன்ஷிகா பாத்திரத்துக்குப் பொருந்தியுள்ளார். அவரின் வளர்ப்பு, அதனால் அவர் மேற்கொள்ளும் தொழில், அதுவே பின்னால் தந்தைக்குப் பலவிதத்தில் உதவியாக இருப்பது அனைத்தும் சரியாகவே கதையின் ஓட்டத்துடன் உள்ளது. வில்லனாக வின்ஸ்டன் சாவ் மட்டும் மனத்தில் நிற்கிறார். நாசர், கலையரசன், ஜான் விஜய், கிஷோர், ரித்விகா அனைவரும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் எந்த பாத்திரமும் தனியான குணாதிசயத்துடன் செதுக்கப் படவில்லை. அதனால் எந்தப் பாத்திரமோ, நடிகரோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாத்திரங்களைக் குறைத்து ஒவ்வொரு கேரக்டருக்கும் தனி கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இத்தனைப் பாத்திரங்களுடன் படத்தைப் பார்க்கையில் பாத்திரக் கடையில் நுழைந்த யானையைப் போல களேபரமாக உள்ளது.
அமிதாப் பச்சன் தன் வயதுக்கு ஏற்ற பாத்திரங்களில் நடிக்கிறார், ரஜினி ஏன் இன்னும் சின்ன வயது ஹீரோயினுடன் டூயட் பாடி ஆடுகிறார் என்று கேள்வி சமீப காலத்தில் எழுந்துள்ளது. இந்தப் படத்தில் அவர் தன் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். கனவு சீனோ டூயட்டோ இல்லை. இரட்டைப் பொருள் கொண்ட வசனங்களும் இல்லை. ஆனால் எக்கச்சக்க வன்முறை காட்சிகள். இறுதியில் கண்டமேனிக்கு ஸ்டன்ட் காட்சிகள், கேங்க்ஸ்டர் படம் என்று நம்ப வைக்கவோ என்னவோ.
ரஜினி படத்தில் ரொம்ப லாஜிக் பார்க்க முடியாது. அவர் எது செய்தாலும் அதில் ஸ்டைலும் நம்பகத் தன்மையும் வந்து ஒட்டிக் கொண்டு விடுகிறது. அது தான் இந்தப் படத்தைக் காப்பாற்றுகிறது. முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை பிரமாதமாக நடித்துள்ளார் ரஜினி. அவர் நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், சிரித்தால் என்று எந்த அசைவும் ஒரு தன்னம்பிக்கையையும் ஸ்டைலையும் வெளிப்படுத்துகிறது. ரஜினி ஒவ்வொரு பிரேமிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். சில க்ளோஸ் அப் காட்சிகளில் அவரின் முகத்தில் தெரியும் உணர்வுகள் அருமை. மனைவியை மீண்டும் சந்திக்கும் இடத்தில் ராதிகா, ரஜினி இருவருமே பிரமாதமாக செய்துள்ளனர், அதில் ராதிகா ஆப்தே ஒரு புள்ளி அதிக மதிப்பெண்ணைப் பெறுகிறார்.
படத்தின் பெரும் பலம் சந்தோஷ் நாராயணனின் இசை! பாடல்களும் அருமை, பின்னணி இசை அதை விட அருமை. ஆனால் பாடல்களின் தாக்கம் படமாக்கத்தில் குறைந்து விட்டது சோகமே. முரளியின் கேமரா அழகு, அதிலும் ஒரு காட்சியில் மலேசியாவில் ரஜினியின் வீட்டை டாப் ஏங்கிளில் காட்ட ஆரம்பித்து அப்படியே அந்த வீட்டை சுற்றியுள்ள பெரும் தோட்டத்தைக் காட்டும்போது கண்ணுக்குள் பசுமை நிறைகிறது.
மெட்ராஸ் படத்தின் முழுக் குழுவும் இதில் பணியாற்றியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றியது ஒரு பெரிய வரமாக இருந்திருக்கும்.
Jul 23, 2016 @ 16:03:05
நன்றி. உங்கள் விமர்சனத்திற்கு முன்பே பலருடையதை படிக்கும் வாய்ப்பு இம்முறை எனக்கு கிடைத்தபடியால், உங்கள் விமர்சனம் எப்படியிருக்கும் என்று ஆவலா இருந்தேன். சொல்லப்போனால், நீங்கள் இதுக்கு எழுதவே தேவையில்லை என்ற மனப்பான்மையில் ஒருந்தேன். ஆனால் நீங்கள் மற்றவர்களைவிட ரொம்ப வித்தியாசமாக விமர்சித்துள்ளீர்கள். நன்றி வாழ்த்துகள். இணையத்தில்தான் தூற்றுகிறார்களே தவிரவெளியிலிருந்து எனக்கு வரும் செய்தி நல்லதாகவே இருக்கிறது :))
Jul 23, 2016 @ 16:03:49
நன்றி. உங்கள் விமர்சனத்திற்கு முன்பே பலருடையதை படிக்கும் வாய்ப்பு இம்முறை எனக்கு கிடைத்தபடியால், உங்கள் விமர்சனம் எப்படியிருக்கும் என்று ஆவலா இருந்தேன். சொல்லப்போனால், நீங்கள் இதுக்கு எழுதவே தேவையில்லை என்ற மனப்பான்மையில் ஒருந்தேன். ஆனால் நீங்கள் மற்றவர்களைவிட ரொம்ப வித்தியாசமாக விமர்சித்துள்ளீர்கள். நன்றி வாழ்த்துகள். இணையத்தில்தான் தூற்றுகிறார்களே தவிரவெளியிலிருந்து எனக்கு வரும் செய்தி நல்லதாகவே இருக்கிறது :))
Jul 23, 2016 @ 17:38:44
ரசித்தேன் 😄 நேர்மையான பார்வை
Jul 24, 2016 @ 02:45:33
mothatla padam nalla irukka illaya
Jul 24, 2016 @ 03:36:32
This is Kabali. Not mothala padam. Check please.
Jul 24, 2016 @ 05:58:51
Its not mothala bt mothathla which means மொத்தத்துல, totally.
Jul 24, 2016 @ 10:39:28
It is not Rajini film but it is a film directed by Ranjith and acted by Rajini. After a long time v r seeing the actor Rajini. We need films like this. Rajini can also slowly transform his traditional style from this movie onwards.
Jul 25, 2016 @ 15:17:03
Thank you Chinnapaiyan, Kanapraba, Siva :-}
Jul 26, 2016 @ 14:20:24
ஒரு கதாநாயகன் நல்லா மிளிரனும்னா அதுக்கேத்த மாதிரி வில்லனும் அந்த அளவுக்கு எறங்கி அடிக்கனும். இந்தப் படத்துல வில்லன்கள் அந்த அளவுக்கு இல்ல. இரகுவரன், பிரகாஷ்ராஜ் மாதிரியான கனமான வில்லன்கள் வேணும்.
திரைக்கதை கொஞ்சம் சொதப்பல்தான். நடுவுல டக்குன்னு மெதுவாயிட்ட மாதிரி இருந்தது.
குறியீடுகளோட சிறப்பம்சமே அதைக் கண்டுபிடிச்சு இரசிக்கிறது. கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு எக்கச்சக்கக் குறியீடுகள் இருந்தா அதையெல்லாம் கண்டுக்காமப் போயிருவோம்.
அளவுக்கதிகமான வன்முறை. டப் டப். டுப் டுப். டமால் டுமீல் எக்கச்சக்கம்.
ஆனாலும் படத்துல என்னென்ன இருக்குன்னு உக்காந்து பாக்க வெச்சிருச்சு.
இரஜினியின் நடிப்பு எனக்கு இந்தப் படத்துல பிடிச்சிருந்தது. குறிப்பா இராதிகா ஆப்தேயுடனான காட்சிகள். தன்ஷிகாவுடனான காட்சிகள்.
Jul 31, 2016 @ 07:53:05
its nothing but a scrap movie