தர்மதுரை – திரை விமர்சனம்

Dharma-Durai

யுவனின் இசையில் சீனு இராமசாமியின் இயக்கம், ஹீரோ விஜய் சேதுபதி, ஹீரோயின்கள் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே. விஜய் சேதுபதியின் தாயாக ராதிகா. அதனால் எதிர்ப்பார்ப்போடு போவது நம் தவறல்ல.

நீர் பறவையைப் போல இதுவும் ஒரு கிராமத்துக் கதை. இக் கதையின் கரு என்று பார்த்தால் முதல் தலைமுறை மருத்துவர் ஒரு ஏழை குடும்பத்தில் உருவாகுகிறார் என்பதே. ஆனால் அது புரிவதற்குள் பாதி படம் முடிந்துவிடுகிறது. நல்ல விஷயங்களை சொல்ல முற்பட்டிருக்கார் சீனு இராமசாமி. ஆனால் கதையில் சுவாரசியம் பிடிக்க இடைவேளை வரை சுற்றிச் சுழலும் கதையைப் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சினிமா என்பது visual media என்பதை பல இயக்குநர்கள் மறந்து விடுகிறார்கள். வசனத்தை வைத்தே படத்தை ஓட்ட முடியாது.

தமன்னா முதல் பாதியில் வந்ததைப் பார்த்தபோது சப்பென்றாகிவிட்டது. இதற்கு எதுக்கு தமன்னா என்று நினைக்கும் பொழுது பின் பாதியிலும் வந்து கதைக்கு வலு சேர்க்கிறார். பாண்டிச்சேரியில் குறைந்த பீசுக்கு சேவை செய்யும் மருத்துவரை முன்னிறுத்தி விஜய் சேதுபதியின் பாத்திரம் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஆழமாகப் பதியவில்லை, காரணம் முன் பாதி முழுக்கு குடிகாரனாக அவரைக் காட்டி அதன் காரணத்தைப் பின் பாதியில் சுருக்கமாக சொல்வதால்!

ஐஸ்வர்யா, விஜய் சேதுபதி வரும் பகுதி கவிதை. படம் முழுதும் அதே சிரத்தையுடன் கதையை எடுத்து சென்றிருந்தால் படம் பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குடி நோய், அதனை தீர்ப்பது, வரதட்சணை கொடுமை, மருத்துவர்கள் நம் நாட்டில் கிராமப் புறங்களில் சேவை செய்வதன் முக்கியத்துவம், விவாகரத்து செய்து மறு விவாகம், பகை, மத வேற்றுமையை புறம் தள்ளி உயிரைக் காப்பதே முக்கியம் என பல நல்ல விஷயங்களை படத்தில் காண்பித்துள்ளார் சீனு ராமசாமி. அதற்கு பாராட்டுகள். ஆனால் எல்லா நல்லதையும் ஒரே படத்தில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை, அல்லது அப்படி காட்ட விருப்பப்பட்டால் கதையில் சரியான கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

படத்தின் முற்பகுதியை அப்படியே வெட்டி எறிந்துவிட்டு பின் பாதியை மட்டுமே பார்த்தால் கூட ஒரு அழகிய குறும்படத்தைப் பார்த்த நிறைவைத் தந்திருக்கும்! எப்படி இந்த பெரிய விஷயத்தை கவனிக்காமல் இயக்குநர் தவறு செய்தார்? கல்லூரி Flash back சீன்கள் படு மட்டமாக உள்ளன. அந்தக் காலத்து அப்பாஸ் வினீத் நடித்த காதல் தேசம் படமே தேவலாம். பேர்வெல் பாட்டு படு சுமார். பேராசிரியராக வரும் ராஜேஷ் நன்றாக நடித்துள்ளார். ஆனால் பல இடங்களில் போதனை தொனியில் வசனங்கள் இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

இத்தனை ஓட்டைகள் இருந்தும் படத்தை இரண்டு மணி முப்பது நிமிடங்கள் நம்மால் உட்கார்ந்து பார்க்க முடிவது விஜய் சேதுபதியினால் மட்டுமே. மிகவும் நன்றாக செய்துள்ளார். அழுத்தமாக நடிக்க வேண்டிய இடத்தில் அழுத்தமாகவும், இலகுவாக நடிக்க வேண்டிய இடத்தில் அவ்வாறாகவும் செய்து நம் கைத்தட்டலைப் பெறுகிறார். தொடர்ந்து நல்ல பாத்திரங்களில் நடித்துப் பெயர் வாங்க அவர் உடல் எடையைக் குறைப்பதில் அவசியம் கவனம் செலுத்த வேண்டும்.

அரங்கை விட்டு வெளியே வரும்போது என்னமோ போடா மாதவா என்ற மன நிலையில் தான் வருகிறோம். ஆனால் விஜய் சேதுபதிக்கு நல்ல fan base உருவாகியுள்ளது தெரிகிறது. படம் பார்க்க வந்தவர்கள் ஆரவாரத்துடன் பார்த்தார்கள். டைட்டிலில் அவர் பெயர் “மக்கள் செல்வன்” என்று வந்துள்ளது கூடுதல் தகவல் :-}

Dharma-Durai-Movie-Review

ஜோக்கர் – திரை விமர்சனம்

joker-tamil-movie-photos

சமூக அநீதிகளுக்குக் குரல் கொடுக்கும் ஒரு பாத்திரத்தை வெகு வித்தியாசமாக செல்லுலாயிடில் படைத்திருக்கும் ராஜு முருகனுக்கு மனமார்ந்த பாராட்டுகள். படத்தில் கதை என்று ஏதுமில்லை. ஆனால் திரைக்கதை, இயக்கம் {ராஜு முருகன்}, இசை {சான் ரோல்டன்}, ஒளிப்பதிவு {செழியன்}, இவையனைத்தும் படத்தை முன்னிருத்துகின்றன. தருமபுரியில் நிகழும் கதைக்களம், அதில் அம்மக்களும் துணைப் பாத்திரங்களில் நடித்திருப்பதால் மண் மணம் கூடுதல் யதார்த்தத்தைத் தருகிறது.

இப்படத்தின் பலம் ராஜு  முருகன் & முருகேஷ் பாபுவின் வாசனங்கள் தான். சும்மா எல்லா அரசியல் கட்சிகளையும், அரசியல் ஊழல்களையும் பளார் பளார் என்று வசனங்களின் மூலம் வெளுத்து வாங்கியுள்ளார். திரை அரங்கில் அவ்வசனங்களுக்கு நல்லதொரு வரவேற்பும், கைத்தட்டலும் கிடைக்கின்றன! சசிபெருமாள், ‘டிராஃபிக்’ ராமசாமி, ‘மதுரை’ நந்தினி போன்றவர்களின் போராட்டங்களே இயக்குநர் ராஜு முருகனுக்கு இப்படத்தை எடுக்க உந்துதலாக இருந்திருக்கும்.

இன்றைய இந்தியாவை காட்டுவதால் சமூக வலைத்தளங்களின் தாக்கமும் இப்படத்தில் பங்கு வகிக்கிறது. ஆனாலும் இவைகளின் தாக்கம் ஓரளவே, பதவியும் பவரும் உள்ளவர்களே இறுதியில் வெற்றி பெறுகிறார்கள் என்கிற யதார்த்தத்தை முகத்தில் அறைந்தார் போல சொல்கிறது படம். லட்சோப லட்சம் மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லா சூழ்நிலையில் விண்வெளிக்கு ராக்கெட் விடுவதும் ஓர் அவசியமற்ற ஆடம்பரமே என்பதை குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குநர்! அரசாங்கத்தில் எல்லா நிலைகளிலும் புரையோடிபோயிருக்கும் ஊழலினாலும், அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையினாலும் மக்கள் படும் அவதிகளை படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

நடிகர்களின் தேர்வும் நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. குரு சோமசுந்தரம் மன்னர் மன்னனாக வாழ்ந்திருக்கிறார். அதுவும் அவரின் பாத்திரத்தில் நடுவில் ஏற்படும் மாற்றத்தை அருமையாக, மிக நேர்த்தியாக காட்டியுள்ளார். பொன்னூஞ்சல் என்னும் பாத்திரத்தில் நாடக நடிகர் M. இராமசாமி சமூக அவலங்களை எதிர்க்கும் ஜெயகாந்தனை ஒத்த ஒரு பாத்திரத்தைக் கண் முன் காட்டுகிறார். எழுத்தாளர் பவா செல்லத்துரை ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரும் பின்னி எடுக்கிறார். மனித உரிமை ஆர்வலர் ச.பாலமுருகனும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். ரம்யா பாண்டியன் {நாயகி}, காயத்திரி இருவருமே அவரவர் பாத்திரத்தில் பொருந்தி நடித்துள்ளனர்.

நல்ல விஷயங்கள் பல இருந்தும், சினிமாத்தனம் சிறிதும் இல்லாமல் படம் வந்திருந்தும், நிதர்சனத்தின் வலி நம் நெஞ்சத்தைத் தொடும்படி இருந்தும் கூட கதை என்று ஒன்று இல்லாதது எந்த இலக்கை நோக்கிப் படம் பயணிக்கிறது என்று பார்க்கும் ரசிகனுக்குப் புரியாமல் போகிறது. படத்தில் சஸ்பென்ஸ் இல்லை. ஆனால் கதை சொல்லும் விதத்தில் ஒரு நகைச்சுவை தன்மை கிளைமேக்ஸ் வரையில் இழையோடுகிறது.

சமூகத்தில் யார் ஜோக்கர் என்று சுட்டிக்காட்டியபடி முடிகிறது படம். சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் சமூகமே அதற்குக் குரல் கொடுப்போருக்கு உதவிக்கரம் நீட்டுவதில்லை என்று சாடுகிறார் இயக்குநர்.  இம்மாதிரி படங்களில் சில தொய்வுகள் இருந்தாலும் படைப்பாளியை பாராட்டும் விதத்தில் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தர வைக்க வேண்டியது நம் கையில் தான் உள்ளது. கமலா திரை அரங்கில் காலை காட்சி மட்டுமே நடைபெறுகிறது. இன்னும் பல காட்சிகள் திரையும்படியான சூழல் சில நாட்களில் ஏற்பட்டால் நன்றாக இருக்கும்.

joker

என் சுவாசக் காற்றே… – சிறுகதை

 

mask

“ஜானு, நல்ல வேளை நீ வந்தம்மா. காத்தாலேந்து மூச்சு விடறேதே கஷ்டமாயிருக்கு.” பிராணவாயு மாஸ்கை சற்றே தூக்கிவிட்டு மெதுவாக சிரமத்துடன் பேசினார் அப்பா. அப்பாக்கு 85 வயசு. கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா சிலிண்டரில் உள்ள பிராண வாயுவின் துணையோடு தான் வளைய வருகிறார். நுரையீரல் வலுவிழந்து விட்டது. மகனை அகாலமாக ஒரு விபத்தில் பறிகொடுத்தது அவரை சம்மட்டியால் அடித்து போட்டு உடல் பலத்தை வாங்கிக் கொண்டு விட்டது. அதன் பின்னும் மருமகளுக்கும், பேரனுக்கும், பேத்திக்கும் துணையாக, தைரியமாக இருந்து வருகிறார். அந்த மனோ திடம் அம்மாக்கு இல்லாமல் போய்விட்டது. அண்ணன் இறந்த இரண்டாம் மாதம் அம்மா போய் சேர்ந்து விட்டாள்.

“ஏம்பா. நேத்து ஹாஸ்பிடல் போயி ஹார்ட் ரிதிமை சரி செஞ்சப்போ கூட சரியா இருந்தீங்களே. டாக்டர்சே உங்க வயசுக்கு அந்த ப்ரோசீஜரை நல்லா ஹேண்டில் பண்ணீங்கன்னு சொன்னாங்களே”

“தெரில மா. இன்னிக்கு கார்த்தால பாத் ரூம் போயிட்டு வந்தேன். அப்போ ஆக்சிஜன் மாஸ்கை எடுத்துட்டுப் போனேன். அதுலேந்து ரொம்ப சிரமமா இருக்கு”

அவரின் பிரத்தியேக மருத்துவர் சமீபத்தில் அவரை பரிசோதித்தப் போது அவரை தொடர்ந்து ஆக்சிஜன் வைத்துக் கொள்ள அறிவுருத்தி இருந்தார்.    முன்பு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பிராண வாயு வைத்துக் கொண்டால் போதுமானதாக இருந்தது. இப்போ உடல் நிலையில் சீர்கேடு அதிகரித்து உள்ளது. அதுவும் இரண்டு நாட்களுக்கு மின் இதயத் துடிப்பு அதிகரித்து மருத்துவமனைக்குப் போய் ஒரு சின்ன இதய சிகிச்சை பெற்று வர வேண்டியிருந்தது.

அப்பாவால் பிறருக்கு எந்த தொந்தரவும் கிடையாது. அவரே ஆக்சிஜன் சிலிண்டருக்கு போன் பண்ணி ஆர்டர் செய்து சரியாக ஒரு சிலிண்டர் முடியும் தருவாயில் மற்றொன்று வரும்படி வாங்கி விடுவார். மத்திய ஆரசில் ஒய்வு பெரும் போது மேல் நிலையில் இருந்ததால் இருபதினாயிரம் பென்ஷன் வருகிறது. அண்ணி வேலைக்குப் போனாலும் அவர் பென்ஷன் பணம் குடும்பத்துக்கு பெரும் உதவியே.

அண்ணி ரூம் உள்ளே வந்து “நானே உனக்கு போன் பண்ணி உன்னை வரச் சொல்லனும்னு நினச்சேன் ஜானு, நீயே வந்துட்ட. அப்பாவை திரும்ப ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்னு நினைக்கிறேன்.” என்றாள்.

சமீபத்தில் எடுத்த மருத்துவ பரிசோதனை ரிபோர்ட்கள் அனைத்தையும் அவர் தயாராக மேஜையில் எடுத்து வைத்திருந்தார். பிளாஸ்கில் காபி, பிஸ்கட் பேக்கட், டவல், மாற்று உடை அனைத்தையும் ஒரு பையில் வைத்து, ரிபோர்ட்களையும் அதே பையில் வைத்துக் கிளம்பத் தயாரானேன்.

எப்பவும் போல் அப்பா ரூமில் இருந்த சாமி படத்தின் முன் நின்று திருநீறு அணிந்து கொண்டு மகன் புகைப்படத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துப் பின் வாசல் வராந்தாவுக்கு வந்தார். அதற்குள் நான் கூப்பிட்டிருந்த ஆம்புலன்ஸ் வந்திருந்தது. மாலை மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. அண்ணன் மகன் தினேஷ் கல்லூரியில் இருந்து அப்போது தான் உள்ளே நுழைந்தான். “அத்தை இருங்க நானும் வரேன். நீங்க தனியா எப்படி எல்லாம் பார்த்துப்பீங்க” என்று காபி கூடக் குடிக்காமல் எங்களுடன் ஆம்புலன்சில் ஏறினான். அவர்களும் உடனே ஆக்சிஜன் மாஸ்கை அப்பாவுக்கு மாட்டி விட்டு பத்தே நிமிஷத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டனர்.

Big build hospital (done in 3d)

கேசுவாலிடியில் அவரை பரிசோதித்த மருத்துவர், “நுரையீரலில் கொஞ்சம் நீர் சேர்ந்திருக்கு. பங்க்சர் பண்ணி எடுத்தால் சரியாகிவிடும் ஆனால் அதை ஆபரேஷன் தியேட்டரில் தான் செய்ய வேண்டும். நீங்க ஒரு ரூம் எடுத்துத் தங்கிடுங்க, எப்போ தியேட்டர் ப்ரீ ஆகுதோ அப்போ கூட்டிட்டுப் போய் செஞ்சிடுவாங்க. இன்னிக்கு ராத்திரி பத்து பதினோரு மணிக்குள்ள பண்ணுவாங்க இல்லைனா காலைல பண்ணுவாங்க” என்றார்.

“நாளை காலை வரை வெயிட் பண்ணலாமா டாக்டர்? ஒண்ணும் பயமில்லையே?” என்றேன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைமா. அவர் வைடல்ஸ் எல்லாம் சரியாத் தான் இருக்கு. ஆக்சிஜன் மாஸ்கில் தொடர்ந்து இருக்கட்டும். லங்க்சில் கோத்திருக்கும் நீரை எடுத்து விட்டால் சிரமம் இல்லாமல் மூச்சு விட ஆரம்பித்து விடுவார்” என்றார்.

அறைக்கு ஏற்பாடு செய்த பின் கேசுவாலிடியில் இருந்து ஸ்டிரெச்சரில் ஆக்சிஜன் மாஸ்குடனே வந்தார் அப்பா. தொடர்ந்து ஆக்சிஜன் மாஸ்கிலேயே இருந்தார். அப்பப்ப சரியாக பிராணவாயு குழாயில் போகிறதா என்று சிலிண்டரை செக் பண்ணிக் கொண்டே இருந்தேன். வீட்டில் இப்படி செய்வது எங்கள் எல்லாருடைய பழக்கமும் ஆகிவிட்டது. சில சமயம் சிலிண்டரில் வாயு தீர்ந்த பிறகு அப்பாக்குச் சொல்லத் தெரியாது. திடீரென்று மூச்சு வாங்கும், பின் தான் ஆக்சிஜன் தீர்ந்திருப்பதைக் கண்டுபிடிப்போம்.

தினேஷை வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு எனக்கும் அப்பாவிற்கும் ரசம் சாதம் எடுத்து வர அனுப்பினேன். சின்ன வயதிலேயே பொறுப்பு வந்து விட்டதால் எல்லாம் சரியாக செய்வான் அவன். அவன் கூட இருப்பதும் எனக்கு தைரியமாக இருந்தது. என் கணவர் வெளிநாடு போயிருந்தார். அது என்னமோ மருத்துவமனை என்றாலே ஒரு பயம் வந்துவிடுகிறது. ஆனால் அப்பா எப்பவும் போல தைரியமாக இருந்தார்.

நர்ஸ் வந்து பிபி பார்த்து வாயில் தெர்மாமீடரை நுழைத்துத் தன் கடமையை செய்து விட்டுப் போனாள். அவளிடம், “எப்போ மா பங்க்சர் பண்ணி நீர் எடுக்க தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போவாங்க” என்றேன். “தெரிலமா, அவங்க போன் பண்ணி சொன்னா வந்து சொல்றேன்” என்றபடி அடுத்த அறைக்குச் சென்றாள்.

நமக்கு தான் அப்பா என்கிற கவலை. அவர்களுக்கு அவர் இன்னொரு பேஷன்ட் அவ்வளவு தான். ஒன்பது மணிக்கு தினேஷ் வந்தவுடன் அப்பாவுக்குக் கொஞ்சம் ரசம் சாதம் கொடுத்தேன். விரும்பி சாப்பிட்டார். தினேஷை வீட்டுக்குப் போகச் சொன்னேன் ஆனால் அவன் “இல்ல அத்தை நாளைக்கு நான் காலேஜுக்குப் போகலைன்னாலும் பரவாயில்லை. இங்கே உங்களுடனேயே இருக்கேன்” என்றான். பத்தரை மணி இருக்கும். “அம்மா, தூக்கம் வருதே, தூங்கட்டுமா” என்றார் அப்பா.

நான் நர்சிடம் போய் “இனிமே வருவாங்களாமா? கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க” என்றேன். “நாங்க கேக்க முடியாதும்மா, அவங்க தான் எங்களுக்குச் சொல்லுவாங்க. அவர் தூங்கறதுன்னா தூங்கட்டும். இனிமே காலையில தான் பண்ணுவாங்க” என்றாள்.

தினேஷும் அட்டெண்டர் படுக்கையில் தூங்கிவிட்டான், பாவம் அசதி. நான் சேரில் உட்கார்ந்து கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தேன். அப்பா எங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் உறவினர் அனைவருக்குமே ஒரு நல்ல பாதுகாவலர். எந்த ஒரு பிரச்சினையையும் சரியான கோணத்தில் அணுகுவார். யார் மனத்தையும் புண்படுத்தாமல் அறிவுரை சொல்வார். மகன் உடலைப் பார்த்துக் கூட குடும்பத்தினருக்காக அழாமல் நின்றவர் அவர்.

தடதடவென ரோலர் உருளும் சத்தம் கேட்டு முழித்தேன். கடிகாரத்தைப் பார்த்தேன், மணி ஒன்று. ஸ்டிரெச்சரை தள்ளிக் கொண்டே ஒரு மருத்துவப் பணியாளர் அறையின் உள் நுழைந்து அப்பாவை அவர் படுக்கையில் இருந்து ஸ்டிரெச்சருக்கு மாற்ற துவங்கினான்.

“என்னப்பா, என்ன பண்றே” என்றேன் பதைபதைப்புடன்.

“தியேட்டர் ரெடியா இருக்குமா. பேஷண்டை கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க” என்றான். அதற்குள் வார்ட் நர்சும் வந்து உதவி செய்ய ஆரம்பித்தாள்.

“என்னப்பா இது இந்த நேரத்துல பண்ணுவாங்களா?”

“தெரிலமா. கொஞ்ச நேரம் CCUல ஆப்சர்வேஷன்ல வெச்சிட்டு அப்புறம் பண்ணுவாங்களா இருக்கும்” என்றான்.

அப்பாவும் தூக்கம் கலைந்து அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். ரூமில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து தொடர்பை துண்டித்து அவன் ஸ்டிரெச்சருடன் கொண்டு வந்த சிலிண்டருக்குக் கனெக்ஷன் கொடுத்தான். அறையில் இருந்து தள்ளிக் கொண்டே லிப்ட் இருக்கும் இடத்துக்குக் கொண்டு போனான். ஆக்சிஜன் சரியா குழாயில் வருகிறதா என்று ஒரு சந்தேகம் வந்தது. சிலிண்டர் திருகாணியை வார்ட் பாய் சரியாக திருப்பவில்லை என்று எனக்குத் தோன்றியது. ஸ்டிரெச்சர் பின்னாடியே ஓடிய நான் “ஆக்சிஜன் கனெக்ஷன் சரியா இருக்கா பாருப்பா, அவருக்கு மூச்சு வாங்குது பாரு” என்றேன். “எல்லாம் சரியாத் தான் இருக்கு. நீங்க படிக்கட்டுல இறங்கி கீழ போயிடுங்க நான் லிப்ட்ல கூட்டிக்கிட்டு வரேன்” என்றான்.

வேகமாகக் கீழே இறங்கி லிப்ட் வாயிலில் நின்றேன். லிப்ட் பத்தாவது மாடிக்குப் போயிருந்தது. முதல் மாடிக்கு வந்து கீழே வர ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். கதவு திறந்ததும் அப்பா முகம் வெளிறி இருப்பதைப் பார்த்தேன். அவர் தன் கையை நீட்டி என் கையைப் பிடித்துக் கொண்டார். “கோபால் குழந்தைகளை நல்லா கவனிச்சிக்கமா. உன்னால முடிஞ்ச உதவியை நீ அவங்களுக்கு எப்பவும் செய்யணும்” என்றார் மூச்சுத் திணறலுக்கு இடையே.

“அப்பா உங்களுக்கு ஒண்ணும் இல்லை. இப்போ அந்த ப்ளுயிட் எடுத்தவுடன் சரியாகிடுவீங்க” என்றேன்.

அதற்குள் CCU வந்து விட்டது. உள்ளே இருந்து வந்த நர்ஸ் நேராக ஆக்சிஜன் சிலிண்டரைப் பார்த்து அந்தத் திருகாணியைத் திருப்பி விட்டாள்.

“ஏம்மா ஆக்சிஜன் போய்கிட்டு தானே இருந்தது?’ என்றேன்.

“இப்போ போக ஆரம்பிச்சிருக்கு” என்றாள். “அப்போ இத்தனை நேரமா போகலையா?’ என்ற என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அப்பாவின் ஸ்டரெச்சரை உள்ளே தள்ளிக் கொண்டு போய்விட்டனர்.

“நீங்க போய் ரூம்ல இருங்க. நாங்க ப்ரோசீஜர் முடிஞ்சதும் சொல்லி அனுப்பறோம்” என்று இன்னொரு பெண் வெளியே நின்ற என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள்.

ரொம்ப கவலையுடன் மாடி எறிப் போனேன். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அவர் பிராணவாயுவின் உதவி இல்லாமல் மூச்சுவிட்டு இருக்கிறார். அந்த சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. அதனால் இத்தனை நாள் தைரியமாக இருந்த அவர் இப்பொழுது என்னை அண்ணன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கார். இராம இராமா என்று மனம் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. பத்து நிமிஷம் கூட ஆகியிருக்காது நர்ஸ் வேகமாக வந்து உங்களை கீழே கூப்பிடறாங்க என்றாள். அதற்குள் முடிச்சிட்டாங்களா என்று எண்ணியபடி “தினேஷ் எழுந்து வா என்னோட” என்றபடி அவசரமாகக் கீழே இறங்கிப் போனேன்.

CCU வாசலில் ஒரு டாக்டர் நின்று கொண்டிருந்தார். “மேடம் நீங்க பேஷண்டுக்கு என்ன உறவு” என்றார்.

“நான் அவர் மக” என்றேன்.

“அவர் இந்த ப்ரோசீஜருக்கு பிட் இல்லைங்க. அதனால் இந்த ப்ரோசீஜர் வேண்டாம்னு நீங்க இந்த பார்ம்ல ஒப்புதல் கையெழுத்துப் போட்டுடுங்க” என்றார்.

“என்ன சார் நல்லா தானே இருந்தார்? கேசுவாலிடில சாயங்காலம் டாக்டர் செக் பண்ண போது கூட ஒண்ணும் பயம் இல்ல, காலைல கூட பண்ணலாம்னு சொன்னாரே?”

“இப்போ பிட்டா இல்லைமா. அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? வயசானவர் தானே? நீங்க கையெழுத்துப் போடுங்க.”

“நீங்க நார்மலா ஏதாவது செய்யறத்துக்கு முன்னாடி தானே கையெழுத்து வாங்குவீங்க? இப்போ வேண்டாம்னு எழுதி கையெழுத்துப் போட சொல்றீங்களே? எனக்கு புரியலை”

எனக்கு உண்மையிலேயே ஒண்ணும் புரியலை. நடு ராத்திரி. தினேஷ் தான் துணை. எப்பவும் அப்பா தான் அவர் உடல் நிலை சம்பந்தமாகக் கூட முடிவெடுப்பார்.

“சார், நான் அப்பாவை பார்க்கலாமா? அவரிடமே கேட்டுவிடுகிறேன்.”

“நீங்க கையெழுத்துப் போட்டுட்டுப் போய் பாருங்க மேடம்”

சட்டென்று பொறி தட்டியது. “டாக்டர் அவர் உயிரோடு இருக்காரா இல்லையா?”

“சாரி மேடம், ஹி இஸ் நோ மோர்” என்றார்.

தினேஷ் டாக்டரை நெட்டித் தள்ளிக் கொண்டு CCUவினுள் நுழைந்தான். நானும் அவன் பின்னே நுழைந்தேன். அப்பாவின் கண்கள் மலங்க மலங்க மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. லேசாக நெஞ்சு ஏறி இறங்கிக் கொண்டு இருந்தது. “சார், அவர் உயிரோடு தானே இருக்கார்? பாருங்க” என்றேன்.

“இல்லைமா கொஞ்ச நேரத்தில் அடங்கிடும். நீங்க சாமி பேரு சொல்றதுன்னா அவர் பக்கத்தில் நின்னு சொல்லுங்க” என்றார்.

வந்தது கோபமா, துக்கமா, ஆத்திரமா, இயலாமையா என்று தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு அவர் காதில் ராம நாமத்தைச் சொன்னேன். தாத்தாவின் நிலை பார்த்து முதலில் விக்கித்து நின்ற தினேஷின் கண்களில் இருந்து அருவியாக நீர் கொட்ட ஆரம்பித்தது. பார்த்துக் கொண்டே இருந்தபோது மெல்ல அடங்கியது அவர் ஆவி. அவரின் இரு கண்களையும் மூடினேன்.

“இந்த பார்மில் கையெழுத்துப் போடுங்க” என் அருகில் வந்து அந்த மருத்துவர் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

“நான் வந்தவுடனே அவர் இறந்த விஷயத்தை சொல்லாம பார்மில் கையெழுத்துப் போட சொல்லிக்கிட்டே இருந்தீங்களே, ஏன்? எங்கப்பா எப்படி இறந்தார்னு சொல்லுங்க டாக்டர்”

“இங்கே வரும்போதே அவர் ஆக்சிஜன் சேசுரேஷன் ரொம்பக் கம்மியா இருந்தது மேடம்.”

“ரூமை விட்டுக் கிளம்பும்போது அவர் கையில் இருந்த பல்ஸ் மீட்டரில் 93%ஆக்சிஜன் செசுரேஷன் இருந்ததை நான் பார்த்தேன் டாக்டர்”

“இங்க நான் அவரை பார்க்கும்போது அவ்வளவு இல்லை மேடம்”

“அது ஏனுன்னு விசாரிச்சீங்களா டாக்டர்?”

“அவர் வயசுக்கு இதெல்லாம் நடப்பது சகஜம் தான்மா.”

“அப்போ ஏன் சார் எங்கப்பா செத்ததை கூட சொல்லாம கையெழுத்து வாங்கறதுலேயே குறியா இருந்தீங்க? ஸ்டிரெச்சரில் மாத்தும் போது அந்த வார்ட் பாய் ஆக்சிஜன் கனெக்ஷன் சரியா கொடுக்கலை. நான் அவனிடம் கேட்டபோதும் சரியா திரும்ப அவன் செக் பண்ணலை. இங்கே கீழே CCU வந்ததும் தான் நர்ஸ் ஆன் பண்ணாங்க. நான் என் கண்ணாலேயே பார்த்தேன். பத்து நிமிஷத்துக்கு மேல அவருக்கு ஆக்சிஜன் போகலை. அஜாக்கிரதையினால எங்கப்பாவை கொன்னுட்டீங்க”

என் குரல் பெரிதாவதைக் கண்ட டாக்டர் என்னை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். “இப்போ என்ன பண்ணலாம்னு சொல்றீங்க? அவருக்கு 85 வயசாகுது. போஸ்ட்மார்டம் பண்ண சொல்றதுன்னா சொல்லுங்க, ஆர்டர் பண்றேன்.”

“எதுக்குங்க போஸ்ட்மார்டம்? கண்ணு முன்னால தவறு நடந்திருக்கு, நான் பார்த்தேன்னு சொல்றேன்.”

“எதனால் இறந்தாருன்னு போஸ்ட் மார்டம் ரிபோர்ட் சொல்லும். நீங்க பார்த்து உண்மைனே வெச்சுக்கிட்டாலும் அதனால் தான் அவர் உயிர் போச்சுன்னு சொல்ல முடியுமா?”

“ஏங்க எங்கப்பாக்கு எந்த முதலுதவியும் கொடுக்காம சுவாசம் அடங்கற வரைக்கும் எங்களை பார்த்துக்கிட்டு நிக்க சொன்னீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?”

“அதெல்லாம் தேவையில்லை. அவர் இறந்துட்டாரு. நாங்க டாக்டரா நீங்க டாக்டரா? போஸ்ட்மார்டம் வேணும்னா சொல்லுங்க, ரெண்டு நாள் ஆகும் பாடிய கொடுக்கறதுக்கு. நிறைய போஸ்ட்மார்டம் வெயிட்டிங்க்ல இருக்கு”

இதய சிகிச்சைக்காக சென்னையிலேயே இந்த மிகப் பெரிய மருத்துவமனைக்கு ரெண்டு நாள் முன்பு தான் முதல் முறையாக தந்தையை அழைத்து வந்திருந்தேன், அதுவும் அந்த சிகிச்சைக்கான வசதி இந்த மருத்துவமனையில் தான் நன்றாக இருக்கும் என்று டாக்டர் சொன்னதால். அதனால் தொடர்ந்து இங்கேயே சிகிச்சை எடுக்கலாம் என்று நான் முடிவு செய்தது அப்பாவின் உயிரையே காவு வாங்கிவிட்டது. முதல் சிகிச்சையின் போதே நேர்ந்த அஜாக்கிரதையால் தான் நுரையீரலில் நீர் கோத்துக் கொண்டதோ என்று இப்பொழுது தோன்றியது.

“போஸ்ட்மார்டம் வேண்டாம் டாக்டர், எங்களிடம் அவரை ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் நடத்துவது உயிரைக் காக்கும் மருத்துவமனை அல்ல. பணம் ஈட்டும் கார்பொரேட் நிறுவனம். உங்களை மாதிரி பெரிய நிறுவனங்களுடன் எங்களால் சண்டையிட்டு ஞாய தர்மத்தை நிலை நாட்ட முடியாது. எங்கப்பா எந்த சிகிச்சையும் இன்றி வீட்டில் இறந்திருந்தால் கூட எனக்கு அது இத்தனை கஷ்டமாக இருந்திருக்காது, ஆனால் இங்கே உங்க அஜாக்கிரதையினால் அவர் உயிர் இழந்ததை நினைத்து என் வாழ்நாள் முழுக்க அந்தக் குற்ற உணர்வு என்னை அரித்துக் கொண்டே இருக்கும்”

“தினேஷ் வா நாம வெளியே காத்திருப்போம்.” பணம் செலுத்த பில் கட்டும் கவுண்டரை நோக்கி நடந்தேன். பின்னாடியே ஓடிவந்து ஒரு நர்ஸ் அந்த பார்மை எடுத்து வந்து மறக்காமல் கையெழுத்துக்காக நீட்டினாள். கையெழுத்திட்டேன், ஆனால் என் கண்களில் தேங்கி நின்ற கண்ணீரால் பார்மில் எழுதப்பட்டிருந்தது மறைந்து போயிற்று.

woman

திருநாள் – திரை விமர்சனம்

Thirunaal-Trailer

காணவில்லை : திரைக்கதாசிரியர், இயக்குநர், எடிடர். கண்டுபிடித்துக் கொடுப்போருக்கு பெரிய சைஸ் பாப்கார்னும் பப்சும் ப்ரீயா அனைத்துத் திரையரங்குகளிலும் இந்தப் படம் ஓடும் இரண்டு நாட்கள் வரை கொடுக்கப்படும்!

ஜீவா, நயன் என்ற பெயர்களை நம்பி படத்துக்குப் போனோம். வெச்சு செஞ்சிட்டாங்க! கெட்டவனின் அடியாள்/அநாதை ஜீவா. ஒரு சிறு தொழில் முதலாளியின் மகள் நயன். அப்போ கண்டிப்பா இவர்கள் இருவரும் காதலிப்பார்கள் என்று மழலைப் பேச்சு பேச ஆரம்பிக்கும் தமிழ்க் குழந்தை சொல்லிவிடும். அடிதடி வெட்டுக் குத்துன்னு ரவுடியிசம் பாத்திரத்தில் எவ்வளவு முறை நடித்திருக்கிறார் ஜீவா! கொஞ்சம் மாறுதலா படத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூட அவருக்குத் தோணாதா? நயனுக்கு மேக்கப் கூட பல காட்சிகளில் போடவில்லை. எல்லாம் போதும் என்று விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது இந்த மாதிரி படத்திலும் சின்சியராக நடித்திருக்கிறார் நயன். அதற்குப் பாராட்டுகள்! தாவணியில் ரொம்ப அழகாக இருக்கிறார்.

இந்தப் படத்துக்கு எப்படி கதையைச் சொல்லி தயாரிப்பாளரை உஷார் பண்ணினார் இயக்குநர்/கதாசிரியர் பி.எஸ்.இராம்நாத் என்று தெரியவில்லை.  பத்து நிமிஷத்துக்கு ஒரு பாட்டு. அது தேவையா தேவை இல்லையா என்கிற கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. இதைவிட கொடுமை படம் முடியும் சமயத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு நடனம். கொஞ்சமும் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் திணிக்கப் பட்டுள்ளது. சில பாத்திரங்கள் மீது கேமரா நிறைய போகஸ் செய்கிறது. ஏதோ அவர் பின்னால் செய்யப் போகிறார் என்று பார்த்தால் அந்தப் பாத்திரங்களே காணாமல் போய் விடுகின்றன.

கும்பகோணத்தில் கதையை வைத்தால் செண்டிமெண்டா படம் ஹிட் ஆகிவிடும் என்று நினைத்துக் கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஆனால் கதையைப் பார்த்து மனம் வருந்தி கும்பகோணமே ஹோ என்று அழுகிறது. படம் முழுதும் மழை சீன்கள் எக்கச்சக்கம். அதான் குறியீடு! திருநாள் டைட்டில் போடும்போதே குறியீடு ஆரம்பமாகி விடுகிறது. ப்ளேட் துண்டுகள் தான் திருநாள் என்று கிராபிக்சில் பாரம் ஆகிறது! அப்பவே சுதாரிச்சிருக்கணும்.

இந்தப் படத்தில் கருணாஸ் எதற்கு திக்கணும் என்று தெரியவில்லை. கேரக்டரைசேஷன் போல! கோட் கோபி நிறைய சீன்களில் நடித்து பின் கட் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். வரும் சொற்ப சீன்களில் கெத்தான போலீசா வருகிறார். நம்பி இவருக்குப் பெரிய பாத்திரம் கொடுக்கலாம்.

திரைக்கதையை ஸ்பாட்டில் எழுதி படம் எடுத்திருக்கிறார்கள். பெரிய நடிகர்களின் கால்ஷீட்டை இப்படி வீணடித்து இருக்கவேண்டாம்!

Thirunaal-aka-Thirunaal-Tamil-Movie-Stills-5

திருவல்லிக்கேணிக் கண்டேனே

partha

நான் பல முறை திருவல்லிக்கேணி சென்று பார்த்தசாரதி பெருமாளை தரிசித்து இருக்கிறேன். ஆனால் இன்று தான் அவரின் திருமஞ்சனத்தை தரிசிக்கும் பேறினைப் பெற்றேன். எப்பொழுதும் பட்டுப் பீதாம்பரதுடனும், தங்க, வைர நகைகளுடன் தரிசனம் தரும் தேரோட்டி இன்று இடுப்பில் ஒரு வெள்ளை வேட்டியும், முகத்தில் மீசை கூட இல்லாமல் புன்னகையை மட்டுமே அணிந்து காட்சித் தந்தார். மனம் நெகிழ்ந்து மயங்கிப் போனேன்.

“இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்* நல் புவி தனக்கு இறைவன்*
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை* மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை* பஞ்ச பாண்டவர்க்காகி* வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை* எந்தை தந்தை தம்மானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*”

அவன் திருமேனிகண்டு புளகாங்கிதம் அடைந்த திருமங்கை மன்னன் திருவல்லிக்கேணிக் கண்டேனே என்று வியப்புறுகிறார். அந்த பாக்கியமான மன நிலையை நானும் இன்று பெற்றது எம்பெருமான் அருளிய வரம்.
மேலே உள்ள பாடலின் பொருள், இனிய துணையான தாமரை மலரில் பிறந்த மகள் மகாலட்சுமிக்கும் இனிமையானவன், நல்ல பூமிக்கும் இறைவன், தன்னையே துணையாக உடைய ஆயர் குல பெண்ணும் கண்ணனின் மாமன் மகளும் ஆன நப்பின்னைக்கும் இறைவன், மற்றுமுள்ள எல்லாருக்கும் என்றுமே நீங்காத துணையாய், பஞ்சபாண்டவர்களுக்காக தூது சென்று செயல்பட்டவனும், எனக்கு துணையானவனும், என் அப்பாவுக்கு அப்பா (எங்கள் குலமே வழிபட்ட) இறைவனைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. மகிழ்ச்சி மகிழ்ச்சி என்கிறார் திருமங்கை மன்னன்!

வேங்கடகிருஷ்ணன் மிகவும் நெடிந்துயர்ந்த பெருமாள். திருமஞ்சனம் செய்ய அர்ச்சகர்கள் பெரிய ஸ்டூல் மேல் ஏறி நின்று அபிஷேகப் பொருட்களை சமர்ப்பித்து நீராட்டுகிறார்கள். பார்க்கவே கண் கொள்ளா காட்சியாக உள்ளது. முதலில் பாலால் திருமஞ்சனம். வெள்ளிச் சொம்பில் எடுக்க எடுக்க குறையாத அளவு பாலை மொண்டு மொண்டு திருமுடியில் இருந்து திருமஞ்சனம் செய்கிறார்கள். அப்பொழுது திருமுகத்தில் வழியும் பாலின் இடையில் காட்சித் தரும் அவர் செந்தாமரைக் கண்களின் கருணை என்னை ஆட்கொண்டுவிட்டது. கோதையும், எண்ணிலடங்கா கோபியரும் எப்படி மெய் மறந்து அவன் கண்களால் கட்டுண்டார்கள் என்பதை ஒரு துளியினும் துளியாக இன்று அறிந்தேன். என்னால் அவர் திருவடியை கூட சேவிக்கத் தோன்றவில்லை. குனித்து திருவடியைத் தேடினாலும் மீண்டும் கண்களுக்கே வந்து தரிசித்து நின்றேன். தயிரும், தேனும், சந்தனமும், இளநீரும் சேர்த்து திருநீராட்டினார்கள். ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் அவரின் திருக் கண்களின் அழகுக் கூடிக் கொண்டே போயிற்று. மிகவும் அழகான சிலா வடிவம். இக்கோயில் முதலில் 6ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. கிபி எட்டாம் நூற்றாண்டில் கட்டியக் கோவில் என்றால் சிலை எவ்வளவு புராதானமாகியிருக்கணும். ஆனால் அவரோ இன்று வடித்தது போல அவ்வளவு அழகாக உள்ளார்.

திருமஞ்சனத்துக்குப் பிறகு அவருக்குத் தளிகை சமர்ப்பிக்கப் படுகிறது. பின்பு அது நமக்குப் பிரசாதமாக வழங்கப் படுகிறது. இந்த சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது அனைவரும் சுவைக்க வேண்டும். அத்தனை ருசி! பெருமாளின் பிரசாதம் என்பதாலும், அதில் கணக்கில்லா முந்திரி, திராட்சை, படி கணக்கில் நெய், பாகு வெல்லம், பச்சைக் கற்பூரம், ஏலக்காய்,  சேர்க்கையாலும், அவர்கள் செய்யும் பக்குவத்தாலும் பொங்கல் பிரசாதம் கிடைதுண்பதும் நம் கொடுப்பினை தான் எனலாம்.

parthatemple

அலங்காரம் முடிய ஒரு மணி நேரம் ஆகிறது. அது வரை நாம் வெளிப் பிராகார மண்டபத்தில் இருக்கலாம். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இ‌ந்த கோ‌விலை பிருந்தாரண்ய ஸ்தலம் பஞ்ச வீரத்தலம் என்றும் அழைக்கிறார்கள். வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகு‌ம். சென்னை மெரீனா கடற்கரை வெகு அருகில்! இத்திருத்தலத்தில் யோக  நர‌சி‌ம்மர் சந்நிதி பெருமாள் சந்நிதிக்குப் பின்புறம் உள்ளது. வடக்கு நோக்கி நரசிம்மர் சந்நிதிக்கும் கிழக்கு நோக்கி பார்த்தசாரதி சந்நிதிக்கும் த‌னி‌த்‌த‌னி கொடிமர‌ங்க‌ள் அமை‌க்க‌ப்ப‌‌ட்டிருக்கின்றன. பா‌ர்‌த்தசார‌தி சந்நிதி‌க்கு வலது புற‌த்‌தி‌ல் வேதவ‌ல்‌லி‌த் தாயா‌‌ரி‌ன் ச‌ந்ந‌தி அமை‌ந்து‌ள்ளது. வேதவ‌ல்‌லி‌த் தாயா‌ர் ச‌ந்‌நி‌தி‌க்கு ‌பி‌ன்புற‌த்‌தி‌ல் ‌கிழ‌க்கு நோ‌க்‌கியபடி கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிக‌ளி‌ன் ச‌ந்‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. கஜே‌ந்‌திரா எ‌ன்ற யானை ‌நீ‌ர்‌நிலை ஒ‌ன்‌றி‌ல் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க‌ச் செ‌ன்றபோது அ‌ங்‌கிரு‌ந்த முதலை‌யி‌ன் வா‌யி‌ல் ச‌ி‌க்‌கி‌க் கொ‌ண்டது, அப்போது அந்த யானை தனது உ‌யிரை‌க் கா‌ப்பா‌ற்றுமாறு பெருமாளை நினைத்து வே‌ண்டியது. அ‌ப்போது உடனடியாக கருட‌னி‌ல் வ‌ந்த பெருமா‌ள் முத‌லை‌யிட‌ம் சிக்கியிருந்த கஜே‌ந்‌திரனை ‌‌மீ‌ட்டா‌ர், யானை‌க்கு அரு‌ள் பா‌லி‌த்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்த ச‌ந்‌‌நி‌தி‌யி‌ல் கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிகளாக வீற்றிருக்கிறார். பா‌‌ர்‌த்தசார‌தி ச‌ந்‌‌‌நி‌தி‌யி‌ன் இடது புறத்‌தி‌ல் ஆ‌ண்டா‌‌ள் ச‌ந்‌‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. இவர் பூதே‌வி எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர். இந்த கோவில் தீர்த்தத்தின் பெயர் கைரவினி, இ‌தி‌ல் இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆ‌‌கிய தீர்த்தங்கள் அடங்கியுள்ளன. இத்திருக்குளத்தில் அல்லி பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் அல்லிக்கேணி என்ற பெயரும் ஏற்பட்டது.

parthatank

அலங்காரம் முடிந்த பிறகு திருமஞ்சனத்துக்குப் பணம் கட்டியவர்களின் குடும்பத்தைத் தனித்தனியாக அழைத்து பெருமாளுக்கு அர்ச்சனையும் நமக்கு அவரின் சேவையும் செய்து வைக்கிறார்கள். தரிசிக்க உள்ளே நுழையும்போதே கம்பீரமாக நிற்கிறார் பெருமாள். பச்சையும் சிவப்புமான, நிறைய ஜரிகையுடைய பட்டு வஸ்திரத்தில், முறுக்கு மீசையுடன், இராஜாதி இராஜனான அவர் அழகைக் கண்ட எனக்கு பெரியாழ்வார் வந்து இவருக்கும் பல்லாண்டு பாடி கண் திருஷ்டியைக் களைய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவருடைய ஆபரணங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு. அருகில் சென்று தரிசிக்க முடிந்ததால் அங்கு இருந்த அனைவரையும் நிறைவாக சேவிக்க முடிந்தது. மூலவர் பெயர் வேங்கடகிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் வீற்றிருக்கிறார்.

partha1

.உத்சவராக வீற்றிருக்கும் பார்த்தசாரதி பெருமாள் பெயரிலேயே கோவில் அழைக்கப் படுகிறது. அவர் ‌திரு‌முக‌த்‌தி‌ல் தழு‌ம்புக‌ள் உள்ளன, மகாபாரத‌ப் போ‌ரி‌ல் அ‌ர்ஜூனனு‌க்கு தேரோ‌ட்டியாக வ‌ந்து, போ‌ரி‌ல் ஏற்ப‌ட்ட ‌விழு‌ப்பு‌ண்க‌‌ளி‌ன் தழு‌ம்புக‌ள்தான் அவை எ‌ன்று ஐதீகம். மேலு‌ம் ‌மீசையுட‌ன் உள்ள ‌கிருஷ‌்ண அவதாரமாகவும் இங்கு இருக்கிறார். மகாபாரத‌த்‌தி‌ல் தேரோ‌ட்டியாக (சார‌தி) வ‌ந்து அ‌ர்‌ஜூனனு‌க்கு (பா‌ர்‌த்தா) அ‌றிவுரை சொ‌ன்ன ‌கிரு‌ஷ‌்ண‌னே (அவதாரம்) பா‌ர்‌த்தசார‌தி என்று அழைக்கப்பட்டார்.

இ‌‌த்‌திரு‌த்தல‌த்‌தி‌ல் பிருகு முனிவர், மார்க்கண்டேயர், மதுமான் மகரிஷி, சப்தரோம அத்ரி மகரிஷி, ஜாபாலி மகரிஷி, தொண்டைமான் சுமதி மன்னன் என பலருக்கு இறைவன் காட்சியளித்திருக்கிறார். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், ஸ்ரீ இராமானுஜர் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகு‌ம்

திருவல்லிக்கேணியில் வாழும் மக்கள் ரொம்பக் கொடுத்து வைத்தவர்கள். நினைத்தபோது போய் பெருமாளை தரிசிக்கலாம். ஸ்ரீ ரங்கம் போலக் கூட்டம் அவ்வளவு அதிகம் இல்லை. மேலும் பெருமாள் உயரமாக இருப்பதால் தூரத்தில் இருந்தும் தரிசிக்க முடிகிறது. வருடம் முழுக்க எந்நாளும் உத்சவம்! அல்லிக்கேணி மக்களும் பெருமாளைக் கொண்டாடுகிறார்கள்! பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளையே குறித்துப் பாடப்பட்டவை என்று கூறுவர். அவர் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த போது அனுதினமும் கோவிலுக்கு சென்று வழிபடுவார். சென்னையில் இருப்போர் தவறாமல் சென்று வழிபட வேண்டிய தலம். என் அருகில் இருந்த ஒரு பக்தர் என்னிடம் நிறைய பேசிக் கொண்டே இருந்தார். அவர் சொன்னார் கேட்டதை கொடுக்கும் பெருமாள் அம்மா இவர், நான் இவரை சிறுவனாக இருந்தபோதிலிருந்து சேவித்து வருகிறேன். பரம ஏழையாக இருந்த என்னை இன்று நாலு வீட்டுக்கு சொந்தக்காரர் ஆக்கியுள்ளார் என்றார். நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு!

partha2