ஆண்டவன் கட்டளை – திரை விமர்சனம்

andavankattalai

முதல் படத்தில் சிக்சர் அடித்துவிட்டுப் பின் வரும் படங்களில் டக் அவுட் ஆவது பல இயக்குநர்களின் சாபம். ஆனால் தொடர் ஹேட்ரிக் அடித்துள்ளார் இயக்குநர் மணிகண்டன். அருள் செழியன், அனுசரணுடன் திரைக்கதை அமைத்து முன் எடுத்த இரு படங்களுக்கும் இப்படத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாமல் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படத்தின் பெயருக்கும் படத்துக்கும் என்ன தொடர்பு என்று தான் படம் முடிந்த பிறகும் புரியவில்லை.

வெற்றிக்கொடி கட்டு படத்தின் எப்படியாவது வெளிநாட்டுக்குப் போய் பணம் சம்பாதிப்பது, ஆனால் முடியாமல் இங்கேயே இருந்து சாதிப்பது தான் இந்தப்படத்தின் ஆரம்பமும். பின்னர் வேறு பாதையில் பயணிக்கிறது கதை. ஆனால் சொல்ல வரும் கசப்பு உண்மையை சர்க்கரைப் பாகில் நனைத்துத் தருகிறார் மணிகண்டன்.  சோகமாக சொல்லியிருக்கக் கூடிய ஒரு கதையை காக்கா முட்டைப் போலவே சுவாரசியமாக, நகைச்சுவைக் கலந்து அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி அமைதியாக தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல இடத்துக்கு முன்னேறி வருகிறார். அலட்டல் இல்லாத, அதே சமயம் பாத்திரத்துக்கேற்ற சிறந்த நடிப்பு அவரின் பிளஸ் பாயின்ட். இந்தப் படத்தில் பிரமாதமாக நடித்துள்ளார். இறுதிச் சுற்று ரித்திகா சிங் கச்சிதமான பங்களிப்பைத் தந்துள்ளார். கார்மேகக் குழலியாக தொலைக் காட்சி ஏங்கராக, விஜய் சேதுபதிக்கு உதவுவதற்காக அவர் முதலில் யோசிப்பதும், பின் உதவப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டு வெளிவர முனையும்போதும் முகத்தில் நல்ல உணர்ச்சி பாவங்கள்.

துணைப் பாத்திரங்களில் வரும் அனைவரும் மனத்தில் நிற்கின்றனர். அது மணிகண்டனின் தனிப் பட்ட வெற்றி. நாடகக் கலைஞர்/ஆசான் நாசர், லண்டனுக்குப் போய் அவதியுற்றுத் திரும்பி வரும் யோகி பாபு, இலங்கை அகதியாக வரும் அரவிந்தன் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர், அதிலும் அரவிந்தனின் நிலை நம் மனத்தில் கழிவிரக்கத்தை உண்டு பண்ணுகிறது. பூஜா தேவார்யாவும் உள்ளார். வக்கீல், வக்கீலின் உதவியாளர், நீதிபதி, பாஸ்போர்ட் அதிகாரி, என ஒவ்வொரு பாத்திரத்தையும் நுணுக்கத்துடன் செதுக்கியுள்ளார் மணிகண்டன்.

இசை K. பாடல்கள் படத்துடன் இணைந்து உறுத்தாமல் இருந்தன. பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது, வசனம் இல்லா இடங்களில் இசை பேசுகிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் நன்று.

வாழ்க்கையின் யதார்த்தத்தை, ஒரு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு சொந்த நாட்டிலேயே புலம் பெயர்வதில் வரும் இன்னல்களை, உண்மையாக இருக்க முயற்சி செய்கையில் பொய் வாழ்வில் வந்தால் அதை அகற்றி வாழ முற்படும் போது வரும் சவால்களையும் நகைச்சுவையுடன் காட்டுகிறார் மணிகண்டன். இன்னும் சிறப்பான படங்களை மென்மேலும் தர வாழ்த்துகள்.

aandavan-kattalai-new-1

தொடரி – திரை விமர்சனம்

thodari1

பிரபு சாலமன்- ஹாலிவுட் படக் கதை மாதிரி ஒன்னு வெச்சிருக்கேன் தனுஷ். சூப்பரா இருக்கு. நீங்க பண்ணா வேற லெவலுக்கு எடுத்துட்டுப் போயிடலாம். நூத்தி இருபது கிலோமீட்டர் வேகத்துல தறி கேட்டு ஓடற டிரெயினை என்ஜினில் இருந்து நீக்கி எழுநூத்தி சொச்சம் பயணிகளைக் காப்பாத்தறீங்க. அதான் ஒன் லைன்!

தனுஷ்- சூப்பர் பிரபு! எப்போ ஷூட்டிங் வெச்சிக்கலாம்?

இதான் இவர்களுக்குள் படம் ஆரம்பிப்பதற்கு முன் நடந்த உரையாடலா இருக்கும் என்று ஊகிக்கிறேன்.

முதல் பாதி டெல்லி சென்னை வரும் ரயிலின் பேன்ட்ரி காரில் தனுஷ், கருணாகரன், தம்பி ராமையா இவர்களுக்குள் நடக்கும் உரையாடலாகவே கழிகிறது. வசனத்தின் துணையால் சில இடங்களில் நகைச்சுவையாகவும் உள்ளது. அதே டிரெயினில் சினிமா நடிகை ஸ்ரிஷாவும் பயணிக்கிறார். அவரின் டச் அப் பெண் கீர்த்தி சுரேஷுக்கும் {நடிகையை விட டச்சப் பெண் அழகாக உள்ளார்} தனுஷுக்கும் காதல். டிரெயினின் மேல் ஏறி டூயட் பாடுகிறார்கள். அது கனவு சீனாகத் தான் இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டோமானால், பின்னால் வரும் ஸ்டன்ட் சீன்களில் தனுஷ் பறந்து பறந்து சண்டையிடுவது கனவு சீன் இல்லை, நிஜம் தான் எனப் புரிந்து கதாப் பாத்திரங்களின் புவி ஈர்ப்பு சக்தியை எதிர்க்கும் திறனைக் கண்டு வியந்து நிற்கிறோம்!

எப்பத் தான் கதை ஆரம்பிக்கும் என்று கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும்போது பின் பாதியில் ஒரு மத்திய அமைச்சர், ஒரு சைக்கோ பாதுகாவலர், சில பல காரணங்களால் தறி கேட்டு ஓடும் டிரெயின், அதை நிறுத்த நம் ஹீரோ செய்யும் சாகசம் என ஒரு கதைச் சொல்ல முற்படுகிறார். பிரபு சாலமன்.

கொள்ளைக் கூட்டத்தினருடன் வரும் சண்டைக் காட்சியில் டிரெயின் கூரையின் மேல் நிற்கும் ஒருவனின் காலைப் பிடித்துத் தொங்கும் தனுஷ், மறு பக்கம் அவனின் கூட்டாளிகள் அவனை கீழே விழுந்து விடாமல் மேலே இழுக்கும் போது மகாபாரதத்தில் ஜராசந்தன் இரண்டாகக் கிழிக்கப் படுவது நினைவுக்கு வந்தது. ஆனால் இது இங்கு அப்படி ஆகவில்லை. அந்தக் கொள்ளைக்காரன் கிழிபடாமல் தனுஷையும் மேலே கொண்டு வந்து விடுகிறான்.

தறி கேட்டு ஓடும் டிரெயினை நிறுத்த ஸ்பெஷல் போர்ஸ் ஒன்று பல உக்திகளை யோசித்து செயல் படுத்தப் பார்க்கிறது. இதன் நடுவில் தொலைக்காட்சி ஊடகங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு கதையை உருவாக்கி டிரெயினைத் துரத்தி நேரடி ஒளிபரப்பு செய்து தங்கள் டிஆர்பி ரேடிங்கை உயர்த்திக் கொள்ளப் பார்க்கின்றன. முகேஷ் அம்பானிக்கு இந்தப் படம் பற்றி முன்பே சொல்லியிருந்தால் அவர் தன் ஜியோ சிம்மிற்கு நல்ல விளம்பரமாக இப்படத்தைப் பயன் படுத்திக் கொண்டிருப்பார். ஏனென்றால் டிரெயினில் இருக்கும் அனைவரும் லேப் டாப்பிலோ, போனிலோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படுவதை நேரடியாகக் கண்டு களிக்கின்றனர்! என்னா மாதிரி நெட்வர்க் கனெக்ஷனா இருக்கணும்!

ஆனால் பின் பாதி உண்மையிலேயே நகைச்சுவையாக் உள்ளது. ஊடகங்களை, அரசியல் கட்சிகளை செமையாக ஓட்டுகிறது படம். அதில் உச்சக் கட்ட நகைச்சுவை படு வேகமாக ஓடும் ரயிலின் என்ஜினையும் போகிகளையும் தனுஷ் தனி ஒருவராகப் பிரிப்பது தான்.

விலங்குகள், பறவைகள் இப்படப்பிடிப்பின் போது துன்புறுத்தப் படவில்லை என்று டைட்டில் கார்டில் வருகிறது. அதுக்குப் பதிலா மொத்தமா ரசிகர்களை…    168நிமிடங்கள்!

Dhanush & Keerthi Suresh Movie Working Stills

Dhanush & Keerthi Suresh Movie Working Stills

குமாராகிய நான்…… சிறுகதை

“நாளைக்கு அமாவாசை. நாளைக்குத் தாண்டாது.”

“ரெண்டு நாளா தண்ணி கூட இறங்கலை, வயிறும் உப்பி இருக்கே.”

“ஒண்ணுக்கு வெளிக்கு எதுவுமே போகலை.”

“கர் கர்னு இப்படித் தொண்டக் குழியில கடையுதேடீ”

சுத்தி இருக்கறவங்க பேசறதெல்லாம் என் காதில் விழுது. பாழும் வாய் தான் பேசவும், கண்ணு திறக்கவும் மாட்டேங்கிது. கண்ணுல நிக்கிற அம்முவைக் கட்டி முத்தம் கொடுக்க ரொம்ப ஆசையா இருக்கு ஆனா அதை சொல்லக் கூட முடியலையே.

indianchild

“உசிரு போவேனான்னு இழுத்துக்கிட்டு இருக்கே, அடியே, அம்முக்கு மொட்டை அடிச்சு காது குத்தணும்னு குமாரு சொல்லிக்கிட்டே இருந்தானே, அதை வேணா நாளைக்கு நாகாத்தம்மன் கோவில்ல போய் பண்ணிட்டு வந்திடு. அப்பவாவது நிம்மதியா போறானான்னுப் பார்க்கலாம்” பக்கத்து வீட்டு பாட்டி குரல் தான் இது. இன்னும் ஒரு மாசம் முடிஞ்சா தான் முப்பது வயசை தொடுவேன். முப்பது வயசு இளைஞனை அந்தக் கிழவி வழியனுப்ப அவசரப்படுது.

“அதையும் செஞ்சிடலாமே, ஏண்டா சுரேஷு நீ போய் அவன் பெண்டாட்டிட்ட கேட்டுட்டு வரியா?” பெத்த தாயே என்னை மேலே சீக்கிரம் அனுப்பத் துடிக்குது.

“என்னம்மா, என்னை போய் அந்த நாய் வீட்டு வாசல்ல நிக்க சொல்றியா?” இது அண்ணன்.

“என்னடா பண்றது, புள்ள அவ கிட்ட தானே இருக்கு. ஒரு எட்டு போய் கேட்டுடுடா. நாளைக்கு அம்முவை ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்னு சொல்லிடு. காலையில போய் மொட்டை அடிச்சு, காது குத்திடலாம். நம்ம தெருல இருக்கிறவங்களுக்கு மட்டும் கறி சோறு ஆக்கி போட்டுடலாம்.”

என் வீட்டுலேந்து நாலாவது வீடு தான் ஜென்னி வீடு. அப்படி தெருல பார்த்து பார்த்து தான் லவ் ஸ்டார்ட் ஆச்சு. ஞாயிறு ஆனா அவங்க வீட்டுல எல்லாரும் நல்லா டிரெஸ் பண்ணி மாதா கோவிலுக்குப் போவாங்க. அதுல ஜென்னி பளிச்சுன்னுத் தனியா தெரிவா. டேன்சர் ஆச்சே. எல்லா க்ரூப் டேன்சிலும் அவளைத் தான் முதல் வரிசைல நிக்க வெப்பாங்க. தெலுங்கு படத்திலும் தமிழ்ப் படத்திலும் அவளுக்கு நிறைய சான்ஸ் வரும். என் மெக்கானிக் கடைல இருக்கிற டிவில அவ டேன்ஸ் ஆடுன பாட்டு வந்தா ஸ்பேனர கீழ போட்டுட்டு பாட்டு முடியுற வரைக்கும் டிவி பொட்டியை விட்டு நகர மாட்டேன்.

groupdance

நானும் நல்லாத் தான் இருப்பேன் பார்க்க. அதான் அவளுக்கும் என்னை பிடிச்சிடுச்சு. நான் சொந்தமா கடை வெச்சிருக்கேன்னு மயக்கிடிச்சுன்னு அம்மா தான் பேசிக்கிட்டே திரிஞ்சிது. நான் நாலாம் கிளாஸ் தான் படிச்சிருக்கேன். ஜென்னி ப்ளஸ் டூ. ஒரு நாள் கால் ஷீட்டுக்கு அது மூவாயிரம் ரூபாய் வாங்கும். அது ஏன் என் கடையைப் பார்த்து மயங்கனும்? சினிமால டேன்ஸ் ஆடுற பொண்ணுன்னு அம்மாக்குப் பிடிக்கலை. அதுக்கும் மேல அது கிறிஸ்டியன் வேற!

நான் பத்து வயசிலேயே படிப்பும் வராம, வழிகாட்ட அப்பாவும் இல்லாம ஒரு மெக்கானிக் கடைல போய் வேலைக்குச் சேர்ந்தேன். அது என்னவோ நான் கை வெச்சா எந்த டூ வீலருக்கும் உடனே உசிர் வந்திடும். முதலாளி எல்லா பைக்கையும் என்னைத் தான் முதல்ல பார்க்க சொல்லுவாரு. அவர் ஒரு நாள் பஸ் ஏக்சிடன்ட்ல திடீர்னு செத்துப் போனதும் அவரு கஸ்டமருங்க எல்லாம் என்கிட்டே வர ஆரம்பிச்சிட்டாங்க. மரத்தடில வேலை பார்க்க ஆரம்பிச்ச நான் சீக்கிரமே பக்கத்துல ஒரு கடையை தொறந்துட்டேன்.

இருபது வயசுல கடை ஓனர் நான். நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சேன். குடி, சிகரெட்டு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது.ஜென்னி என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னப்ப எதுனால என்னைப் பிடிச்சிருக்குன்னு கேட்டேன். இதத் தான் சொல்லிச்சு. சினிமால நடிக்கிறவங்க, ஏன் நம்ம ஏரியால இருக்கிறவங்க எல்லாருமே சிகரெட்டு, தண்ணின்னு இருக்காங்க. நீ நல்லா சம்பாதிச்சாக் கூட அப்படி இல்லைன்னிச்சு.

கொஞ்ச நாள்லயே ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் ரொம்பப் பிடிச்சுப் போயி ரெண்டு குடும்ப எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். ஜென்னி தான் வேற வீடு பார்க்க வேணாம் இங்கேயே இருக்கலாம்னு சொல்லிச்சு. அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஜென்னி சினிமால டேன்சர்னு எப்பப் பார்த்தாலும் கேலி பேச்சு. என்னோட ஆத்தா அது கிரிஸ்டியனுன்னு நின்னா குத்தம் உக்காந்தா குத்தம்னு திட்டிக்கிட்டே இருந்தாங்க.

மூணே மாசத்துல தனிக் குடித்தனம் போயிட்டோம். அப்போ அம்மு அவ வயத்துல ரெண்டு மாசம். ஆறு மாசம் வரைக்கும் டேன்சுக்குப் போனா, அப்புறம் முடியலை. எனக்கு அவ்வளவு சந்தோசம். கடையிலேயே என்னோடயே உக்காந்திருக்கும். கடைக்கு வர கஸ்டமர்ட்ட நல்லா பேசும். அம்மு பிறந்த அன்னிக்கு தெரு முழுக்க எல்லாருக்கும் ஜிலேபி வாங்கிக் கொடுத்தேன். எங்க ஆத்தாவும் அண்ணனும் அண்ணியும் கூட சந்தோஷமா இருந்தாங்க.

மூணு மாசத்துலேயே திரும்ப டான்ஸ் ஆட சான்ஸ் வர ஆரம்பிச்சுது. நான் போக வேணாம்னு சொன்னேன். அதுல ஆரம்பிச்சுது சின்ன சின்னத் தகராறு. சரி வா அம்மா வீட்டோட போயிடலாம், அம்மா குழந்தையைப் பார்த்துக்கும், நீ ஷூட்டிங் போலாம்னு சொன்னேன். அதெல்லாம் வேணாம், எங்கம்மாட்ட விட்டுட்டுப் போறேன். என் தங்கச்சி ஸ்கூலேர்ந்து வந்த பார்த்துப்பான்னா. பாலு கொடுக்கறதையும் நிப்பாட்டிட்டு புட்டி பால் கொடுக்க ஆரம்பிச்சா. பாப்பாக்கு வயிறே ஆங்கலை. எப்பப் பார்த்தாலும் அழுக. அதுவும் நடு ராத்திரில வீல்னு கத்தும். ஜென்னி டேன்ஸ் ஆடிட்டு வந்த அசதில எந்திரிக்கக் கூட மாட்டா. நான் தான் பாலைக் கரைச்சுக் கொடுப்பேன். வேக வேகமா குடிக்கும். கொஞ்ச நாள் பார்த்தேன் பொறுக்கலை. ஒரு வருஷம் கழிச்சு தான் வேலைக்குப் போயேன். கொழந்த தவிக்குது பாரேன்னேன். எங்கேர்ந்து தான் இத்தனை கோபமோ, சான்ஸ் கிடைக்கறப்பப் போகணும். ஒரு வருஷம் போகாம இருந்துட்டா அப்புறம் யாரு சான்ஸ் தருவாங்கன்னு சத்தமா கத்த ஆரம்பிச்சிட்டா. இவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்ல.

சோறு ஆக்கறதும் நினைச்சப்பத் தான். நான் ஓட்டல்ல வாங்கி துன்னறது பார்த்துட்டு அம்மா தினம் வீட்டாண்ட வந்து சாப்பிட சொல்லிச்சு. மத்தியானம் தினம் சாப்பிடப் போனேன். அண்ணனுக்கு ஈபில லைன் மேன் வேலை. அது இருக்காது. ஆனா அண்ணி இருக்கும். ஜாடை மாடையா பேசிச்சு. அதனால அம்மாவை எங்க வீட்டுக்கு வரச் சொல்லி சாப்பாடு செய்யச் சொன்னேன். அப்படியே ஜென்னி அம்மா வீட்டிலேந்து பாப்பாவை இங்கக் கொண்டாந்து கொஞ்ச நேரம் பார்த்துக்க சொன்னேன்.

ஜென்னி வீட்டுல புள்ளை அழுதுகிட்டு இருக்கும். ஆனா ஜென்னியோட அம்மா அதும் பாட்டுக்கு டிவி பார்த்துக் கிட்டு இருக்கும். காது தான் கேக்காதோன்னு தோணும். அடிக்கடி ஜலுப்பு ஜுரம்ன்னு பாப்பாக்கு வர ஆரம்பிச்சுது. ஆசுபத்திரிக்கும் பாப்பாவை தூக்கிக்கிட்டு அம்மா தான் ஓடும்.

ஷூட்டிங்ல ஓவர் டைம்னு சில நாளைக்கு லேட்டா வர ஆரம்பிச்சா ஜென்னி. ஒரு நா எவனோ ஒருத்தன் பைக்ல கொண்டாந்து விட்டான். கேட்டா அவனும் டேன்சர் தான், ஆட்டோவே கிடைக்கலை அதான் கொண்டாந்து விட்டான்னு சொல்லிச்சு. எனக்கு தான் இப்போ நல்லா பணம் வருதே பாப்பாவை எதிர் வீட்டு ஆயாக்கிட்ட காசு கொடுத்துப் பார்த்துக்கச் சொல்லலாம். உங்கம்மா என்னை எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க. அவங்க ஒன்னும் இனிமே பார்த்துக்க வேணாம்னு சொல்ல ஆரம்பிச்சா.

இதக் கேட்டு ஆத்தாக்கு ரொம்பக் கோபம். அடிச் சிறுக்கி, உன் கொழந்தைய உன்னால பார்த்துக்க முடியாதுன்னு ஆயாவ காசுக் கொடுத்து வேலைக்கு வெப்பியான்னு அடிக்கவே போயிடிச்சி. அப்புறம் தினத்துக்கும் சண்டை தான். திடீர்னு ஒரு நாள் வந்து ஒரு வாரம் அவுட் டோர் ஷூட்டிங் போகணும்னு சொல்லுச்சு. பெரிய ஹீரோ படம். கண்டிப்பாப் போகணும்னு ஒரே அழிச்சாட்டியம். கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய அவுட் டோர் போகும். கல்யாணத்துக்கு அப்புறம் அதான் மொத தடவ. போகாதன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேக்கலை. சூட்கேஸ்ல துணிய எடுத்து வெச்சுட்டு கிளம்பிடுச்சு.

அம்மா தான் ஒரு வாரம் முழுக்க பாப்பாவை பார்த்துக்கிச்சு. அண்ணியும் தான். ஜென்னி அம்மா வீட்டுக்கே குழந்தைய அனுப்பலை. ரெண்டு நாளுக்கு ஒருக்கா போன் பண்ணி விசாரிச்சிக்கிடிச்சி ஜென்னி. எவனோ ஒருத்தனோட பைக்ல வந்து இறங்கினதுலேந்தே என் மனசே சரியாயில்லை. ஓரு வாரம் ஜென்னி ஊர்ல இல்லாத போது ஏதேதோ எண்ணம் மனசுல. அவனும் கூட அவுட்டோர் வரானான்னு கேட்டதுக்கு என்னை முறைச்சிட்டு ஆமாம் அதுக்கென்னன்னு கேட்டுட்டுப் போனா. அதுவரைக்கும் டாஸ்மாக் பக்கமே போகாத நான் அந்த வாரத்துல ரெண்டு மூணு நாள் போயிட்டு வந்தேன். அங்கே போய் ரெண்டு கட்டிங் போட்டா மனசு லேசான மாதிரி இருந்துது.

ஒரு வாரத்துல ஷூட்டிங் முடியாம இன்னும் ரெண்டு நாள் கூட இருந்துட்டு வந்தா. அவ திரும்பி வந்தன்னிக்கு நான் டாஸ்மாக் போயிட்டு லேட்டா தான் வீட்டுக்கு வந்தேன். கிட்ட வந்து குடிச்சிருக்கியான்னு கேட்டா. அமா, அதைப் பத்தி உனக்கென்னன்னு நானும் திமிரா பதில் சொன்னேன். அப்புறம் என் கூட சரியாவே பேசலை. ரெண்டு நாள் வீட்டிலேயே இருந்தா. ரெண்டு நாளும் வேணும்னுட்டு குடிச்சிட்டே வந்தேன். திரும்ப ஷூட்டிங்கிற்கு போயிட்டு சாயந்திரமா அதே ஆளோட பைக்ல வந்தா. ஆனா நாலு மணிக்கே வந்துட்டா. நான் எப்பவும் அந்த சமயத்துல கடைல தான் இருப்பேன். ஆனா அன்னிக்கு வீட்டுல இருந்தேன். வண்டியை விட்டு இறங்கும்போது அவனை உரசிகிட்டே வண்டிய விட்டு இறங்கினா. என் நெஞ்சில் யாரோ எசிட் பாட்டிலை கவுத்தா மாதிரி இருந்தது.

நான் ஜன்னல் வழியா பார்த்தது அவளுக்குத் தெரியலை. என்ன சீக்கிரம் வந்துட்டன்னு கேட்டேன். உடம்பு சரியாயில்லைன்னு சொன்னா. நேரா படுக்கப் போயிட்டா. அவ செல் போன் எடுத்துப் பார்த்தேன். ஆனந்துன்னு ஒரு நம்பருக்கு நிறைய கால் போயிருந்தது. அதை நான் தனியா என் போனில் சேவ் பண்ணிகிட்டேன். அவ உரசிக்கிட்டு இறங்கினது என்னை ரொம்ப உறுத்த ஆரம்பிச்சுது. நேரா டாஸ்மாக் போயிட்டு என்னிக்கும் இல்லாத அளவு குடிச்சிட்டு வந்தேன். என்னை பார்த்துட்டு உனக்கு இந்த கருமாந்திர பழக்கம் இல்லேன்னு தானே உன்ன கட்டிக்கிட்டேன், இப்படி குடிக்க ஆரம்பிச்சிட்டியேன்னு திட்டினா.

ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்கு வரும்போது ஆத்தாவும் ஜென்னியும் பயங்கரமா சண்டை போட்டுக் கிட்டு இருந்தாங்க. ஆத்தா ஜென்னி வீட்டை விட்டு வெளிய துரத்திக் கிட்டு இருந்துச்சு. சண்டையை விலக்கி என்னன்னு கேட்டா அம்மா வாயிலையும் வயித்திலேயும் அடிச்சிக்கிட்டு நான் தலை தலையா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா? இந்தச் சிறுக்கி வேணாம்னு சொன்னேனே கேட்டியான்னு அழுவுது. அவ ஒண்ணும் சொல்லாம முறைச்சுக்கிட்டு நின்னா. திடீர்னு புள்ளையை தூக்கிக்கிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினா ஜென்னி. என்னடின்னு கேட்டா, இப்படி சந்தேகப் படற உன்னோட இனிமே வாழ விருப்பம் இல்லை, உன்ன பிடிக்கலை. நான் போறேன்னு போயிட்டா.

எனக்கு அவ பின்னாடி போறதான்னு தெரியலை. அம்மா பக்கத்துல வந்து போகட்டும்டா அவ எவனோடயோ ஊர் மேயறா. அன்னிக்கே பக்கத்துத் தெருல இருக்கிற போட்டோ கடைக்காரன் என்கிட்டே சொன்னான். அவன் ஏதோ ஷூடிங்கல போட்டோ எடுக்கப் போயிருந்தானாம். ஜென்னியும் இன்னொருத்தனும் கொஞ்சிக் குலாவிக்கிட்டு இருந்தாங்க, பாவம் குமாருன்னு சொன்னான். இன்னிக்கு எவன் கூடவோ ஒட்டிக் கிட்டு பைக்ல வந்து இறங்கினா. யாருடி அவன்னு கேட்டா நீ யாரு அதை கேக்கன்னு கத்தரான்னுச்சு.

எனக்கு ஜென்னி மேல உசுரு. அது தப்புப் பண்ணும்னு நெனைக்க முடியல. அவங்க வீட்டுக்குப் போயி அவ ஜடையை புடிச்சு ஏண்டி வீட்டை விட்டுக் கிளம்பி வந்தேன்னு கத்தினேன். குடிச்சிட்டுப் போயிருக்கக் கூடாது. நான் போட்ட சத்தத்துல அம்மு அழ ஆரம்பிச்சிடுச்சு. இதப் பாரு, நீயும் உங்கம்மாவும் என் மேல சந்தேகப் படறீங்க. நான் உன்னை நம்பி இல்லை. என் சொந்தக் கால்ல நிக்க முடியும். முதல்ல நீ குடிக்கறதை நிறுத்திட்டு வந்து பேசுன்னிச்சு. இப்படியே ஒரு மாசம் போச்சு. நானும் அவ அம்மா வீட்டு வாசப் படிய அதுக்கப்புறம் மிதிக்கலை. வைன் ஷாப் போறதையும் நிறுத்தலை. குடிச்சிட்டு அந்த ஆனந்த் நம்பருக்கு அப்பப்ப போன் பண்ணுவேன். அவன் எடுத்ததும் கட் பண்ணிடுவேன்.

என்னால குடிக்கறதை நிறுத்த முடியலை. ஜென்னி என்னை விட்டுட்டுப் பாப்பாவையும் தூக்கிட்டுப் போனதைத் தாங்கவும் முடியலை. ஒரு நாள் ஜென்னி கடைக்கு வந்திச்சு. நீ குடிக்கறதை நிறுத்தப் போறியா இல்லையான்னு என் கடை பசங்க முன்னாடி கோபமா கேட்டுது. நீ முதல்ல வீட்டுக்கு வா அப்புறம் நிறுத்தறேன்னு நானும் கோபமா சொன்னேன். பதில் கூடப் பேசலை அப்படியே போயிடுச்சு. அடுத்த மாசம் அந்தப் பொறுக்கி அவங்க வீட்டுக்கே குடி வந்துட்டான். ஜென்னி மேல நான் வெச்சிருந்த நம்பிக்கை தவிடு பொடியாகிடிச்சி. அவன் அவங்க வீட்டுக்குக் குடி வந்ததும் புத்தி பேதலிச்சா மாதிரி ஆயிடிச்சி எனக்கு. கடையை ஒரு வாரம் தொறக்கலை. கஸ்டமருங்க போன் பண்ணா எடுக்கலை. கடை ஹெல்பர் பசங்க வீட்டுக்கு தினம் வந்து வாங்கண்ணே கடையை தொறங்கன்னு கெஞ்சினாங்க. நான் போகலை.

அம்மா போய் அம்முவை தூக்கிக்கிட்டு வரப் பார்த்தாங்க. அவ கொடுக்க மாட்டேன்னு பஜாரி மாதிரி கத்தியிருக்கா. எங்கண்ணன் ஏரியா கவுன்சிலர் கிட்ட போய் சொல்லி பஞ்சாயத்துக்கு ஏற்பாடு பண்ணினாரு. அவ குழந்தையை கொடுக்க முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டா. எங்கம்மா அவ குழந்தையப் பார்த்துக்காம தானே ஷூட்டிங் போனா, நான் தானே பார்த்துக்கிட்டேன், இப்ப மட்டும் ஏன் குழந்தை வேணும்னு அவங்கம்மாட்ட கேட்டாங்க. எதுவும் வேலைக்கு ஆவலை. நாளைக்கு அதையும் நடிக்க விட்டு சம்பாதிப்பா அதான் கொடுக்க மாட்டேங்கறான்னு ஏரியால எல்லாரும் பேசினாங்க. நாறிப் போச்சு. கவுரதையா இருந்தா எங்க வீட்டு மானம் கப்பலேறிடிச்சு. ஆளாளுக்கு தோணுனத எல்லாம் பேசினாங்க.

எனக்கு தான் அன்னிலேர்ந்து உயிர் போகிற வலி. ஆனா எங்க வலின்னு தெரியலை. எழுந்து நிக்கவே முடியல. அண்ணன் டாக்டருகிட்ட கூட்டிப் போச்சு. எதோ மருந்து கொடுத்தாங்க தூக்கம் தூக்கமா வந்துது. தூங்கி முழிப்பேன் வலிக்கும். வலுக்கட்டாயமா என் ஷாப் ஆளுங்க கடையை தொறந்து என்னை அங்கே ஒக்கார வெச்சாங்க. சில சமயம் மூச்சு விட முடியாத மாதிரி அடைக்கும்.

திரும்பவும் வலிக்கு மருந்து பாட்டில் தானுன்னு ஆச்சு. குடிச்ச உடனே வலி காணாம போயிடும். தினமும் டாஸ்மாக் தொறக்கும் போதே போய் குடிச்சிட்டு வந்து தான் என் மெக்கானிக் ஷாப்பை தொறக்க ஆரம்பிச்சேன். எப்பவும் போல நல்லா வேலை செஞ்சேன். நான் இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டு அம்மா வீட்டோட வந்துட்டேன்.

தினம் என் கடையத் தாண்டி தான் அவனோட பைக்ல போகும் ஜென்னி. உடனே எனக்கு உடம்பு முழுக்க வலிக்கும். கையோட இருக்கிற பாட்டிலை எடுத்து ஒரு மடக்கு ராவா குடிப்பேன். நெஞ்சு எரிச்சல்ல உடனே வலி மரத்துப் போகும். ஜென்னி வீட்டுல இல்லாத சமயமா அம்மா அவங்க வீட்டுல போயி அவ தங்கச்சிட்ட கேட்டு அம்முவை தூக்கியாரும். அதுஞ் சிரிப்புல தான் உசிரோட இருந்தேன்னு நினைக்கிறேன்.

முதல்ல நான் தினம் குடிக்கறதை பத்தி அண்ணன் ஒன்னும் சொல்லலை. ஒரு நாள் சோறு துன்றச்சே என் கை நடுக்கத்தைப் பார்த்து ஏண்டா குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்கறேன்னுச்சு. ஏன் நான் உசிரோடு இருந்து என்ன ஆகணும்னு கேட்டேன். உடனே அம்மாவும் அண்ணனும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. என்னால அவளை நினைக்காம இருக்க முடியலை. அவ ஏன் என்னை விட்டுட்டுப் போனான்னு புரியலை. அந்த வலி மறக்க எனக்கு குடி தேவையா இருந்தது.

ஒரு நாளைக்கு ரெண்டு தடவை டாஸ்மாக் போக ஆரம்பிச்சேன். லீவ் விடுவாங்கன்னு தெரிஞ்சா முதல்லியே ரெண்டு பாட்டில் வாங்கி வெச்சிப்பேன். ஆத்திர அவசரத்துக்கு எப்பவும் கடைல ஸ்டாக் இருக்கும். கொஞ்ச நாளா காச்சல் வந்து முடங்கி படுக்க ஆரம்பிச்சேன். குடியை நிப்பாட்டுற டாக்டர் கிட்ட என்னை கூடிப் போச்சு அண்ணன். அவரு எல்லா டெஸ்டும் எடுத்தபோது தான் எனக்குக் காச நோய் இருப்பது தெரிய வந்துச்சு.

drunk

தாம்பரம் சேனடோரியம் ஆசுபத்திரில போய் சேர்த்து வுட்டாங்க. ரெண்டே நாள்ல ஒடி வந்துட்டேன். தாம்பரத்துலேயே ஒரு டாஸ்மாக்குல கட்டிங் போட்டப்புறம் தான் ஒரு நிதானத்துக்கே வந்தேன். அது வரைக்கும் உடம்பு ஒரே உதறல். வீட்டுக்கு வந்தப்புறம் அம்மா கெஞ்சிச்சு, நான் முடியவே முடியாதுன்னுட்டேன். தினம் அம்முவை பார்த்துக் கிட்டு இங்கேயே இருக்கேன். ஆசுபத்திரிக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டேன்.

அம்மு ஸ்கூல் போக ஆரம்பிச்சதுலேந்து ஸ்கூல் விட்டதும் நேரா என் கடைக்கு தான் ஒடி வரும். நான் வாங்கி வெச்சிருக்கிற பிஸ்கட்டை துன்னுட்டு என்னக் கட்டி முத்தம் கொடுத்துட்டு அவங்க வீட்டுக்கு ஓடிடும்.

எனக்கு டிபின்னு யாரோ ஜென்னி கிட்ட போய் சொல்லிட்டாங்க. சின்னக் குழந்தைக்கும் டிபி வந்துடும்னு அது உடனே அம்மு என்னைப் பார்க்க போகக் கூடாதுன்னு சொல்லிடிச்சு. அதுலேந்து இன்னும் அதிகமா குடிக்க ஆரம்பிச்சேன். கடைய பசங்க தான் பார்த்துக் கிட்டாங்க. எழுந்து நிக்கக் கூட முடியலை. பசி எடுக்கறதும் நின்னுப் போச்சு. எங்கண்ணன்ட டாக்டர் லிவர் அழுகிப் போச்சுன்னு சொன்னாராம். ஒரு நாள் மயக்கமாயிட்டேன். ஜிஹெச்சுக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க. அங்க என்னல்லாமோ செஞ்சிப் பார்த்திருக்காங்க. முத்திப் போச்சு, இன்னும் நாள் கணக்கோ நேரக் கணக்கோ தான், வீட்டுக்குக் கொண்டு போயிடுங்கன்னு சொல்லிட்டாங்களாம். பாதி நினைவும் பாதி மயக்கமுமா இருந்தேன். ஒண்ணுமே புரியல. ஆனா மனசு சந்தோஷமா இருந்திச்சி. இன்னும் கொஞ்ச நாள்ல வலி போயிடும். நிம்மதியா ஜென்னிய நினைக்காத வேற உலகத்துக்குப் போயிடலாம்னு தோணுச்சு.

இதோ அம்மு பக்கத்துல வந்து நிக்குது, ஆனா பார்க்க முடியலை.  அதை எனக்கு வாயில பால் ஊத்தச் சொல்றாங்க. அம்முக் கொடுத்தப் பாலை கஷ்டப்பட்டு முழுங்கறேன். “அடே சுரேஷு, குமாரு பால முழுங்கறாண்டான்னு” அம்மா அண்ணனைக் கூப்பிட்டுது. அண்ணன், அண்ணி, அம்மா எல்லாரும் பாலை வாயில ஊத்தறாங்க. பாதி உள்ளப் போகுது பாதி வெளியே வழியுது.

அம்மு இன்னும் அங்கேயே நிக்குது போல. அண்ணன் அதுங்கிட்ட “அழாதடா கண்ணு”ன்னு சொல்றது காதுல விழுது. பாவம் அம்மு. என்னமோ சத்தம். ஜென்னி போடும் சென்ட் மணம் வருது. “அம்முவை கூட்டிப் போக வந்தேன்” அப்படின்னு சொல்லுது ஜென்னி. இவங்கல்லாம் பால் கொடுக்கறதை பார்த்துட்டு அதுக்கும் கொடுக்கணும்னு மனசுல தோண வெச்சிருக்கான் அந்த நல்ல ஆண்டவன். கிட்ட வந்து வாயில பாலை விடுது. அது பாலை விட்டதும் அப்படியே கண்ணை தொறக்கறேன், கண்ணிலேந்து தண்ணி வழியுது, ஜென்னியப் பார்க்கிறேன், பக்கத்துல மொட்டை அடிச்சு காது குத்தியிருக்கற அம்முவை பார்க்கறேன், கீழே இருக்கற என் உடம்பையும் பார்க்கறேன். குமாராகிய நான் இனி இங்கில்லை.

innerpeace

 

இரு முகன் – திரை விமர்சனம்

irumugan

ஆரம்பம் அட்டகாசம்! பான்ட் பட ஆரம்பம் மாதிரி ஒரு பைட் sequence நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. தொடர்ந்து வரும் காட்சிகளும் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. அரிமா நம்பி படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் இரு முகன் வெளியாகியுள்ளது.

விக்ரம் நடிப்பைப் பற்றி புதிதாக என்ன இருக்குச் சொல்ல? தேர்ந்த நடிகர். ஒரு முகனாக இந்திய இன்டலிஜென்ஸ் RAW ஏஜண்டாக கச்சிதமான ஒரு பாத்திரம் அவருக்கு. புஜ பல பராக்கிரமத்தையும், கட்டுமஸ்தான உடலமைப்பையும் காட்ட நல்லதொரு வாய்ப்பு. அடுத்த முகன் வில்லனாக பெண் தன்மையுடன் ஒரு பாத்திரம். மிகவும் ஸ்டைலிஷாக அதே சமயம் வில்லத்தனத்துடன் புகுந்து விளையாடுகிறார். இரு பாத்திரங்களுக்கும் பெருத்த வித்தியாசத்தை காட்டுகிறார்.

நித்யா மேனன் இன்னொரு RAW ஏஜண்டாக நல்ல தேர்வு. நயன்தாராவுக்குக் கவர்ச்சி அவர் நடிப்பிலேயே வெளிப்படுகிறது. உண்மையில் இப்பொழுது அவர் தமிழ் திரையுலகில் டாப் ஸ்டார்! வரும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார், இந்தப் படத்திலும் பாராட்டைப் பெறுகிறார். நாசருக்கு எப்பவும் போல் ஒரு பாத்திரம். தம்பி ராமையா மலேசிய போலிசாகக் கடுமையாகக் கடுப்பேத்துகிறார்.

ஒரு தீவிரவாத தாக்குதலை விசாரிக்கும் குறிக்கோளோடு மலேசியாவிற்குப் பயணப்படும் கதை அங்கு போலி மருந்து/இரசாயன தில்லுமுல்லுகளைக் கண்டறிய முற்படுகையில் திக்குத் தெரியாமல் தள்ளாடுகிறது. ஒரு கெட்டவன் வேதியல் பொருளால் எளிதாகப் பல்லாயிரக் கணக்கான் மக்களைக் கொல்ல முடியும் என்கிற அனுமானமே பகீர் என்றுள்ளது. அது தான் கதைக் களம். இரசாயனத்தைக் கொண்டு அதிக சக்திப் பெறுவதற்காக ஹிட்லர் பயன்படுத்திய உக்தியினைக் கூட நன்கு ஆய்வு செய்து தெரிவிக்கும் இயக்குநர் அதே கவனத்தைத் திரைக்கதை அமைப்பதிலும் செலுத்தியிருக்கலாம்.

மிக சக்திவாய்ந்த வில்லனை பிடித்தப் பின் லாக்கப்பில் அவரை அவ்வளவு அஜாக்கிரதையாகத் தான் கையாள்வார்களா? ரொம்ப எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கும் நித்யா மேனன் பாத்திரமும் பொசுக்கென்றாகிவிடுவது சோகமே. அதன் பின் எல்லாம் லாஜிக் மீறல்களே. படத்திற்கு இசை பலம் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்களும் சுகமில்லை, பின்னணி இசையும் சரியில்லை. R.D.ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை. மலேசியா/காஷ்மீர் பகுதிகள் மிக நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன. கண்ணுக்கு விருந்தாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் சும்மா எல்லாரும் சூப்பர் பவருடன் சண்டை போடுவது அலுப்பைத் தருகிறது. நீளத்தையாவது குறைத்திருக்கலாம். நடிக்க இவ்வளவு மெனக்கெடும் விக்ரம் கதைத் தேர்ந்தெடுக்க கொஞ்சம் மெனக்கெடக் கூடாதா?

irumugan1

குற்றமே தண்டனை – திரை விமர்சனம்

kt

ரொம்ப நாள் கழித்து திரையில் விதார்த்! நல்ல பாத்திரம். படம் முழுக்க வருகிறார், {படம் 90 நிமிடங்கள் தான்}. பார்வை குறைபாடு உடையவராக, பணத் தேவையைத் தீர்த்துக் கொள்ள சூழ்நிலையை வெகு யதார்த்தமாக {matter of fact} பயன்படுத்தும் இளைஞராக  நடிப்பில் சபாஷ் வாங்குகிறார்.

டைட்டிலில் விதார்த்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் வருகிறது. ஆனால் அவர் இரண்டு மூன்று நாட்களில் அவர் பகுதியை முடித்துக் கொடுத்திருப்பார், அவ்வளவு சிறிய ரோல்! எனினும் கதையில் முக்கியமானதொரு பாத்திரம் என்று சொல்லலாம். அனாயாசமாக நடித்திருக்கிறார். ரகுமானுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, நன்கு பயன் படுத்திக் கொண்டிருக்கிறார். பாத்திரத்துக்கு ஏற்ற நடிகரை தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றியைப் பெற்று விட்டார் இயக்குநர். நாசர் அவருக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். இதில் கொஞ்ச நேரமே வந்தாலும் {விதார்த்தைத் தவிர எல்லாருமே கொஞ்ச நேரம் தான்} ஜோக்கர் பட ஹீரோ குரு சோமசுந்தரம் செமையாகச் செய்திருக்கிறார். அவருக்குக் காமெடியும் இலகுவாக வருகிறது என்று இந்தப் படத்தில் இருந்து தெரிகிறது. விதார்த்தின் ஜோடியாக பூஜா தேவரியா அருமை!

காக்கா முட்டைக்குப் பிறகு இயக்குநர் மணிகண்டனின் இரண்டாவது படம் இது. அந்தப் படத்துடன் இதை ஒப்பிடக் கூடாது தான், ஆனால் ஒப்பிட்டால் இது மிகவும் லைட் டாபிக். ஒரு க்ரைம் த்ரில்லர். பெயரே படம் எப்படிப்பட்டது என்று சொல்லிவிடுகிறது. அதனால் படத்தில் பெரிய சஸ்பென்ஸ் தெரியவில்லை. கதை உள்ளது ஆனால் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் திரைக் கதையில் ஸ்கோர் செய்து விடுகிறார் இயக்குநர். ஒரு இடத்திலும் தொய்வு இல்லை, அலுப்பு இல்லை.

பாடல்கள் கிடையாது. பின்னணி இசை இளைய ராஜா. இந்த மாதிரி ஒரு படத்துக்கு அவர் தான் வஞ்சனை இல்லாமல் இசையை வழங்க முடியும். ஆனால் கதை சிம்பிளாக நகரும்போது இசை சில இடங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. எடிடிங்கும், ஒளிப்பதிவும் அற்புதம். அதுவும் விதார்த் விழிகள் மூலம் நாம் பார்க்கும் காட்சிகள் முதலில் புரியாமல் பின் அதன் காரணம் தெரிய வரும் போது அசத்தலாக உள்ளன.

முடிவு இன்னும் நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கலாம். என்னைப் பொறுத்த வரை மற்ற பாத்திரங்களுக்கு குற்றமே தண்டனை சரி விகிதத்தில் உள்ளது. ஆனால் ஹீரோவுக்குக் குறைவான தண்டனையே. அது தான் யதார்த்தமாகவும் இருக்கலாம்.

kt1

ஆனந்த விகடன் – என் பார்வையில்

 

vikatan

என் பெற்றோர், அவர்களின் பெற்றோர் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம் விகடன் வாசகர்கள். அதாவது விகடன் ஆரம்பித்த காலத்தில் இருந்தே என்று வைத்துக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் விகடன் வாங்கியவர்கள் பலர் வீட்டிலும் இந்தக் கதை சொல்லப் பட்டுக் கேட்டிருப்பீர்கள், அதாவது விகடன் வந்தவுடன் யார் அதை முதலில் படிப்பது என்று சகோதர சகோதரிகள் இடையே போட்டி நடக்கும் என்பது தான் அது. எங்கள் தாத்தா வீட்டில் விகடன் வரும் நாளன்று என் மாமா புகை வண்டி நிலையத்துக்கே போய் புத்தகக் கட்டு பிளாட்பாரத்தில் போடப்படும் போதே வாங்கிக் கொண்டு வந்து, வரும் வழியிலேயே ஒரு பாலத்தின் சுவர் மீது உட்கார்ந்து முக்கியமான பகுதிகளைப் படித்து விட்டு அதன் பின் தான் வீட்டுக்கு இதழைக் கொண்டு வருவாராம். வீட்டில் என் அம்மா தான் கடைக் குட்டி. அதனால் அவருக்குப் படிக்கக் கடைசியில் தான் கிடைக்குமாம். இப்படி விகடனுக்கு அந்தக் காலத்தில் இருந்தே ஒரு சுவாரசியமான, ஜனரஞ்சகமான, குடும்பத்தில் அனைவரும் எவர் முன்னும் பிரித்து வைத்துப் படிக்கக் கூடிய ஒரு பத்திரிக்கை என்னும் மதிப்பு இருந்து வந்திருக்கிறது. எழுத்துத் துறையில் பல ஜாம்பவான்களை உருவாக்கியப் பத்திரிகை, பல புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வெளிவந்தப் பத்திரிகை என்னும் இரட்டைப் பெருமையையுடையது ஆனந்த விகடன்.

இதன் நிறுவநர் S.S.வாசன். அவர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்குக் கொண்டு வந்த வார இதழை அவர் பின் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் மகன் பாலசுப்பிரமணியன் இன்னும் அதிகமாக பரிமளிக்க வைத்தார். ஒரு ஆனந்த விகடன் பல குழந்தைகளை அல்லது பல சகோதர சகோதரிகளை பாலசுப்பிரமணியன் தலைமையில் பெற்றது. ஜூனியர் விகடன், அவள் விகடன், டாக்டர் விகடன், டைம் பாசுக்கும் ஒரு விகடன் என்று எல்லா துறைகளுக்கும் ஒரு விகடன் வந்துள்ளது. அதில் என்னை மிகவும் கவர்ந்தது ஜூனியர் விகடன் தான். முதல் இதழில் இருந்து போன வருடம் வரை வாரம் இரு முறை வந்த இதழ்களை அட்டைக்கு அட்டைப் படித்து வந்தேன். தமிழில் புலனாய்வுப் பத்திரிகையில்  தரமான முன்னோடி என்று சொல்லும் அளவுக்கு ஜூவி இருந்தது. துக்ளக் வார இதழ் 1970ல் ஆரம்பித்து இருந்தாலும் அது அரசியல் நையாண்டி பத்திரிக்கையாகவும் அரசியலை விமர்சிக்கும் பத்திரிக்கையாகவுமே இருந்து வருகிறது. ஆனால் ஜூனியர் விகடன் அவ்வாறு இல்லாமல் சமூகத்தில் நடக்கும் பல முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து ஆக்கப் பூர்வமான தீர்வுகளுக்கும் வழி வகுத்தது.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஜூனியர் விகடனின் செய்திகள் பரபப்பூட்டுகிற {sensationalism} வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகின. உருப்படியாகப் படிக்க விஷயங்கள் குறைய ஆரம்பித்தன. ஒரு நேரத்தில் ஜூனியர் விகடன் வரும் நாளில் இந்து நாளிதழை விட்டு முதலில் அப்பத்திரிக்கையை படித்து வந்த நான் இரண்டு நிமிடங்களுக்கு மேல் யோசிக்காமல் வாங்குவதை நிறுத்தும் முடிவையும் ஒரு நாள் எடுத்தேன். நடு நிலைமையாக அவர்கள் போட்டு வந்த செய்திகளின் நிறம் மாறியதும், அவர்கள் சொல்லுவதில் உள்ள நம்பகத் தன்மை குறைந்ததும் தான் அதற்கு முக்கியக் காரணங்கள்.

காலம் மாறிவிட்டது. அன்று கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாளையும், மணியனின் பயணக் கட்டுரைகளையும், சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதையையும், சுஜாதாவின் கனவு தொழிற்சாலையையும், கற்றதும் பெற்றதும் பகுதியையும், ஹாய் மதனையும் எதிர்ப்பார்க்க முடியாது தான். ஆனால் விகடனின் தரத்தை நிலை நிறுத்திக் கொள்ள அதற்குப் பதிலாக சுவாரசியமான, கருத்துச் செறிவான பகுதிகள் நிச்சயம் தேவை.  நல்ல இலக்கியத் தரம் வாய்ந்த தொடர் கதைகள் வாசகனை விகடனை வாரா வாரம் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும்.

வாசன் அவர்கள் விகடனில் குறுக்கெழுத்துப் போட்டிகள் வாராவாரம் வரும்படி வைத்திருந்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணமாகப் பரிசுத் தொகையும் அளித்து வந்தார். அது மாதிரி விகடன் முன்பு நிறைய போட்டிகள் வைத்து, பரிசுகள் கொடுத்து வாசகர்களை தன் வசப்படுத்தும். ஆனால் தற்போது விகடனோ ட்விட்டரிலும் பேஸ் புக்கிலும் மக்கள் பகிரும் கருத்துகளை அவர்களுக்கு எந்த சன்மானமும் கொடுக்காமல் அவற்றை வெளியிட்டு தங்கள் பத்திரிக்கையின் பல பக்கங்களை நிரப்புகிறது! அது தான் பத்திரிகை தர்மமா என்று எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய முக்கியமான வருத்தம் சமீப காலத்தில் விகடனில் நிலைத்தன்மை {consistency} இல்லை என்பதே. ஒரு வாரம் நன்றாக உள்ளது இதழ், மறு வாரம் சொங்கியாக இருக்கிறது. கட்டுரைகள், வாழ்க்கை அனுபவங்கள், பேட்டிகள் ஆகியவை சினிமாத் துறையைச் சார்ந்தவர்களுடையதாகவே உள்ளன. மற்ற துறைகளில் சாதிப்பவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். இன்னுமொரு பெரிய குறை எழுத்துப் பிழைகள் நிறைந்த கதை, கட்டுரைகள்! அதைத் தவிர எங்கும் எதிலும் ஆங்கிலக் கலப்பு.  இப்படி ஆங்கில சொற்களை தலைப்பாகவும், கட்டுரையின் நடுவிலும் புகுத்துவது  பாரம்பரியம் மிக்க ஒரு தமிழ் வார ஏட்டுக்கு அழகா?

மதுவினால் வரும் கேடு, பாரம்பரிய உணவு வகைகளின் முக்கியத்துவம், குடிநீரின்றி தவிக்கும் கிராமங்களின் நிலை, அத்தியாவசிய உணவுகளிலும் கலப்படம், ஈழத் தமிழர்களின் நிலை போன்ற பல சமூகத்துக்குத் தேவையான விஷயங்களை கட்டுரைகளாக கொண்டு வருகிறது விகடன். அந்தச் சேவைக்கு என் பாராட்டுகள். ஆனால் பல விஷயங்கள் வெறும் துணுக்குச் செய்திகளாக உள்ளன. இந்தக் காலத்து இளைய சமுதாயத்தின் கவனம் இவ்வளவு தான் {attention span} இருக்கும் என்று விகடனாகவே கணித்து அவ்வாறு வெளியிடுகிறதா என்று தெரியவில்லை. தமிழ்வாணனின் கல்கண்டு இதழை படிப்பது போல் உள்ளது.

திரை விமர்சனத்தில் விகடனை அடிச்சிக்க ஆளில்லாமல் இருந்த காலம் ஒன்றிருந்தது. அவர்களின் மதிப்பெண்களே அவார்டுகளாக இயக்குநர்/நடிகர்கள் நினைப்பர். நடுவில் திரை விமர்சனத்தின் தரம் படு மோசமாகப் போய் இப்பொழுது சற்றே இழந்த இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது.

தொடர் கதைகள் தான் அடியோடு வெளியிடுவதில்லை! சிறுகதைகளாவது சுவாரசியமானதாக வெளியிடலாம். எல்லாக் கதைகளும் ஒரே மாதிரி உள்ளன. எழுத்தாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதா அல்லது தேர்வு செய்பவரின் அளவுகோல் சரியாக இல்லையா? பல கதைகளைப் படிக்க ஆரம்பித்து பாதியோடு விட்டு விடுகிறேன். அதே போல பல சினிமாச் செய்திகளும் பயனற்றவையாக உள்ளன!

விகடன் இணையத்தில் காலூன்ற இன்னும் நிறைய மெனக்கட வேண்டும். நான் பேஸ் புக்கில் இல்லை. இணையத்தில் அவர்களின் சந்தாதாரராக இருந்து இப்போது துண்டித்து விட்டேன். ட்விட்டரில் அவர்களைத் தொடர்கிறேன். ட்விட்டரில் வெவ்வேறு ஹென்டில்களிலும் {சினிமா விகடன், ஜூனியர் விகடன் etc} இவர்கள் போடும் செய்திகள் ஈர்க்கவில்லை. தலைப்பை சுவாரசியமாக வைத்துவிட்டு உள்ளே செய்தியைப் படிக்கையில் சப்பென்றுள்ளது. மறுமுறை அம்மாதிரி இணைப்பை ஒரு புத்திசாலி திறந்து பார்ப்பானா? மேலும் பல முறை தவறான/தரமில்லாத செய்திகளை ட்வீட் செய்து பின் அழித்திருக்கிறார்கள்.

வலைத்தள செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில் தவறில்லை.  அது தான் புதிய யுகம். ஆனால் அதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க சரியாக பயிற்சி அளிக்கப்பட்ட ஒருவரை நியமித்தல் நன்று.

விகடனை பல விகடன்களாக ஆக்கியதனால் சுவாரசியம் குறைந்து விட்டதோ என்று தோன்றுகிறது. முன்பு விகடனில் பரணிதரனின் அல்லது ஸ்ரீ வேணுகோபலனின் ஆன்மிகப் பகுதி இருக்கும். இப்போ தனியாக அதற்கு சக்தி விகடன் வந்து ஆனந்த விகடனில் ஆன்மிகப் பகுதி போய் விட்டது. சுட்டி விகடன் வந்து விகடனில் சுட்டிகளுக்கான பகுதி போய் விட்டது. மருத்துவம், விவசாயம், சமையல், பங்குச்சந்தை, மோட்டார், தடம் எனப் பிரித்து மிச்சம் ஆனந்த விகடனில் இருப்பது சக்கையோ என எண்ணத் தோன்றுகிறது.

தனித் தனியாக ஒவ்வொரு விகடனை வாங்க எனக்கு அந்த அளவு ஒவ்வொருத் துறையிலும் ஆர்வம் இல்லை. ஒரே பத்திரிகையில் இவை அனைத்தும் கலப்படமாக வந்தால் அவியல் சுவைக்கும்! என்னால் விகடன் வாங்குவதை நிறுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஜூனியர் விகடனையும் ஒரு காலத்தில் இவ்வாறு தான் நினைத்தேன்.

vikatan1