கொடி – திரை விமர்சனம்

kodi

கதை/திரைக்கதை தான் என்றும் ராஜா! வெற்றி மாறன் தயாரிப்பில் எழுதி இயக்கி இருக்கும் துரை செந்தில்குமார் இப்படத்தின் மூலம் அதை நிருபித்து வெற்றி கொடி நாட்டியுள்ளார்! தனுஷ் இரட்டை வேடத்தில் அசத்தி உள்ளார். மேக்கப்பிலோ நடை உடை பாவனையிலோ {தாடி+ கூலிங் கிளாஸ்/தாடி+ கூலிங் கிளாஸ் இல்லை விலகலாக} இரு வேடத்துக்கும் வெளிப்படையாக வித்தியாசம் காட்டப் பெரிதாக மெனக்கெடாமல் அனாலும் அதே சமயத்தில் சூப்பராக இரு வேடங்களிலும் அமர்க்களப் படுத்தி இருக்கார் தனுஷ்.

த்ரிஷா இந்த வேடத்துக்காக தான் இது நாள் வரை காத்திருந்தது போல் உள்ளது. என்ன ஒரு வாய்ப்பு! நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். முதலில் vulnerable ஆகவும் பிறகு சாதுர்யத்துடன் அரசியலில் காய் நகர்த்தும் போது படு கெத்தாகவும் இரட்டை தனுஷுக்கு ஒத்தை ஆளாக நடிப்பில் ஈடு கொடுக்கிறார் த்ரிஷா. அவரின் மேக்கப் அருமை. மிகவும் இளமையாகவும் பாத்திரத்துக்கேற்ற கம்பீரத்துடன் வருகிறார். அவர் படம் முழுக்க அணிந்துவரும் புடைவை ரவிக்கை செட்கள் அருமையான தேர்வு. உடை அலங்கார நிபுணருக்கு அதற்காக ஒரு பூங்கொத்து! இறுதி க்ளைமேக்ஸ் வரை அற்புதமாக செய்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆச்சரிய பாத்திரம் SAC அவர்கள். மிகவும் அருமையாக ஒரு நல்ல அரசியல் தலைவர் பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஒரு தனுஷுக்கு ஜோடியாக வரும் அனுபமா மலையாளத் தமிழில் பேசி நம்மை ஈர்க்கிறார். மலையாளத்து அழகியும் கூட :-}  இந்தப் படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களின் நடிகர்களுக்கானத் தேர்வு நன்று! அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவு & ஸ்டன்ட் இரண்டும் நன்றே. வசனங்கள் பல இடங்களில் அப்ளாஸ் வாங்குகிறது.

மிகவும் விறுவிறுப்பான திரைக் கதை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டுகிறது. மேலும் படம் ஓடும் நேரம் இரண்டு மணி இருபது நிமிடங்களே, அதனால் எந்த இடத்திலும் தொய்வு இல்லை. அரசியல், காதல், சூழ்ச்சி, பலி என்று இருந்தாலும் அனாவசிய மெலோடிராமா இல்லாமல் உள்ளது படம். சரண்யா பொன்வண்ணன் இரட்டையர் தனுஷுக்கு அம்மா. டபுள் மடங்கு நன்றாக நடித்துள்ளார்.

ஸ்டெர்லைட் மாசு தொடர்பாக வைகோ போராடியது போலவும், உணர்ச்சி வயப்பட்டத் தொண்டன் தீக்குளிப்பது போன்ற நமக்கு நெருக்கமான அரசியல் நிகழ்வுகளை படத்தில் சேர்த்திருப்பது வலுவான கதைக்கு நல்ல ஹோம் வாரக் செய்திருக்கிறார் இயக்குநர் என்று தெரிகிறது.

அடி மட்டத் தொண்டன் நிலையில் இருந்து அரசியலில் ஆர்வமும் வேகமும் இருப்பவர்கள் எப்படி படிப்படியாகப் பல பதவிகளை அடைகிறார்கள் என்பதை நாம் வெளியுலகில் பார்ப்பதையே அழகாகத் திரையிலும் காண்பித்துள்ளார் இயக்குநர். அவ்வளர்ச்சியே ஒரு சமயம் பதவி வெறியாக மாறும்போதும், இருக்கும் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும்போதும் அது அவர்களை எந்த நிலைக்குத் தள்ளுகிறது என்பதை தான் கதை. நல்லது செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளும் அதை செய்ய தனி சாமர்த்தியம் தேவையாக உள்ளதையும் காட்டுகிறது படம்.

இரண்டு டூயட்கள் இருக்கின்றன. ஆனால் படத்தின் ஓட்டத்தைத் தடை செய்யாமல் வந்து போய்விடுகிறது. இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் பாடல்களில் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்தி இரு பாடல்கள் நன்றாக அமைந்துள்ளன.

தனுஷ், வெற்றிமாறன் இருவருக்கும் நல்ல வெற்றியைத் தந்துள்ளது இப்படம். வாழ்த்துகள் டீம் கொடி!

kodi1

காஷ்மோரா – திரை விமர்சனம்

kashmora1

கோகுலின் கதை இயக்கத்தில் கார்த்தி இரு வேடத்தில் நடித்துள்ளார். காஷ்மோரா என்கிற ஒரு டுபாக்கூர் பேய் ஒட்டுபவராகவும், ஐநூறு வருடங்களுக்கு முந்தைய படைத் தளபதியாகவும் வருகிறார் கார்த்தி. கார்த்தியிடம் எப்பவும் ஒரு விளையாட்டுப் பிள்ளை குணம் இயல்பாகவே குடிகொண்டிருக்கும். அது முதல் பாத்திரத்துக்கு நன்கு பொருந்துகிறது. ஒரு பயங்கர வில்லனாக, மொட்டைத் தலையுடன் படைத் தளபதி பாத்திரத்தையும் மிக சிறப்பாக செய்திருக்கிறார் அவர்.

முதல் பாதியில் பேய் ஓட்டும் குடும்பமாக அப்பா விவேக், அம்மா, தங்கை ஜாங்கிரி மதுமிதா & மெயின் ஃப்ராடாக கார்த்தியும் கலகலக்க வைக்கிறார்கள். ஸ்ரீதிவ்யா பேய் ஓட்டுபவர்கள் என்று சொல்லிக்கொண்டு பித்தலாட்டம் செய்பவர்களைத் தோலுரித்துக் காட்டும் ஆய்வில் முனைவர் பட்டம் பெற இந்தக் குடும்பத்தில் ஒருவராக நுழைகிறார். படத்தின் இறுதி வரை வந்தாலும் ஒரு தாக்கத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் வந்த அழகிய பெண்ணா இவர் என்கிற சந்தேகம் தான் வருகிறது! நயன்தாரா எப்பொழுது வாருவார் என்று காத்துக் காத்துக் கிடந்து கடைசியில் பின் பாதியின் பின் பாதியில் அரசிளங்குமரியாகத் தோன்றுகிறார். நயனின் அழகிலும் உடையிலும் சிறு குறையும் இல்லை.  சிறிய பாத்திரம் தான் எனினும் கொடுக்கப்பட்ட ரோலை  நன்கு செய்துள்ளார். சைனீஸ் படங்களில் வருவது போல அவரும் கார்த்தியும் பறந்து பறந்து சண்டை போடுகிறார்கள். நீண்ட வாளை நயனும், கதை மாதிரி ஒரு ஆயுதத்தை கார்த்தியும் வைத்து இருவரும் சண்டையிட்டாலும் நயனின் அழகிய வெள்ளை உடையில் சிறு கீறல் கூட விழாமலும், முத்து மாலைகளில் ஒரு மணி கூட சிதறாமலும் சண்டையிட்டு கின்னஸ் சாதனை படைக்கின்றனர்!

கொஞ்சம் கூட பயமில்லாத பேய் படம் இது. கருப்பு உருவத்தில் வரும் புகை போன்ற பேய்கள் காமெடியாகத் தோன்றுகின்றனவே தவிர பயமுறுத்தும்படியாக இல்லை. படத்தில் நிறைய CG உள்ளது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். பட்ஜெட் பிரச்சினையாக இருந்திருக்கும். இசை சந்தோஷ் நாராயணன் – பாடல்கள் படு சுமார், எப்பவும் போல அவர் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து விடுகிறார்.

இது ஒரு fantasy கதை. லாஜிக் எல்லாம் கிடையாது. 168நிமிடங்கள் ஓடுகின்றது படம். சில இடங்களில் ஜவ்வு மாதிரி இழுக்கிறது. நிச்சயமாக 15 நிமிடங்கள் நறுக்கியிருக்கலாம். பேய் பங்களாவில் சுத்தி சுத்தி ஒரே மாதிரியான காட்சிகள் அலுக்க வைக்கின்றன. வசனங்கள் நன்றாக உள்ளன, அந்த பலத்தைப் பயன்படுத்தி முன் பாதியில் இன்னும் கொஞ்சம் நகைச்சுவையை அதிகப் படுத்தி இருக்கலாம்.

kashmora

தேவி – திரை விமர்சனம்

devi

படத்தின் ஆரம்பமே ரொம்பப் பழைய பல்லவி தான். மாடர்ன் ஆன பெண் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று மும்பையில் வேலை செய்யும் ஹீரோ பிரபுதேவா விரும்புகிறார். ஆனால் அப்பாவின் மேலுள்ள பயத்தால் அவர் பார்த்து வைக்கும் கிராமத்துப் பெண்ணை மணந்து மும்பை திரும்புகிறார். அதன் பின் மும்பையில் அவர்கள் தங்கும் வீட்டில் உலாவும் பேய் ஹீரோயின் தமன்னா மீது ஏற ஒரு திகில்/நகைச்சுவை பேய் கதையைத் தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் AL விஜய்!

சவசவ என்று போகிறது படம். பேய் என்கிற பயமும் இல்லை, சுவாரசியமான திரைக்கதையும் இல்லை. என்ன ஒன்று, குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கலாம், அது மட்டுமே பிளஸ் பாயின்ட்.  பிரபு தேவாவுக்கு வயது தெரிகிறது. புதிதாகத் திருமணம் ஆன ஜோடியாக தமன்னா பிரபுதேவா செட் ஆகவில்லை. பிராமதமாக நடனம் ஆடினாலும் முக பாவங்களில் சோகத்தையோ, அதிர்ச்சியையோ,  இயலாமையையோ பிரபுதேவா பெரிதாகக் காண்பிப்பதில்லை.

தமன்னா நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். பை போலார் டிசார்டர் மாதிரி ஒரு பாத்திரம் அவருக்கு. இரு வேறு பாத்திரங்களில் வித்தியாசம் காட்டி நன்கு நடித்துள்ளார். நடனமும் லாகவமாக வருகிறது. இதில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் சினிமா ஹீரோவாக வரும் வட இந்திய நடிகர் சோனு சூட். கதையும் மும்பையில் நடக்கிறது. மும்மொழியிலும் {தமிழ், தெலுங்கு, இந்தி} ஒரே சமயத்தில் எடுத்திருக்கிறார்கள். அதனால் நமக்கு ஒரு தமிழ் படம் பார்க்கிற பீலே இல்லை. பாடல்கள் ரொம்ப ரொம்ப சுமார் ரகம். பல இடங்களில் வசனத்துடன் லிப் சின்க் ஆகவில்லை.

RJ பாலாஜிக்கு இந்தப் படத்தில் சிறிய பாத்திரம், அதிலும் அவர் சோபிக்கவில்லை. பிரபு தேவாவையும் இன்னும் நன்றாக நடிக்க வைத்திருக்கலாம். பாத்திரங்களில் நடிகர்கள் பொருந்தாதது இயக்குநர் தவறு. திரும்பத் திரும்ப ஒரே மாதிரி காட்சி அமைப்பும் சலிப்பை ஏற்படுத்துகிறது!

எல்லா பேய்களுமே ஏதாவது ஒரு நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவே ஒருவர் உடம்பை ஆக்கிரமித்துக் கொள்கிறது என்பது தான் தொன்றுதொட்டு சொல்லப்படும் காரணம். அதே தான் இக்கதையிலும். ஆசை நிறைவேறியதும் உடலை விட்டு அகன்றதா இல்லையா என்பதை வெள்ளித் திரையில் காண்க.

devi1