மணல் கயிறு -2 திரை விமர்சனம்

manal-kayiru-2

1982ல் கே.பாலச்சந்தரின் நிறுவன தயாரிப்பிலும் விசுவின் கதை இயக்கத்திலும் வெளிவந்த மணல் கயிறு படத்தை யாரும் மறக்க முடியாது. நாயகனான எஸ்.வீ.சேகர் {கிட்டுமணி} தன் திருமணத்திற்குப் போடும் எக்குத்தப்பான எட்டு கண்டிஷன்களுக்கும் ஏற்றப் பெண்ணென நாரதர் நாய்டுவாக வரும் விசு எட்டுக் கண்டிஷங்களுக்குமே பொருந்தாத ஒரு பெண்ணை அவருக்குத் திருமணம் செய்துவைப்பார். உண்மை தெரிந்த பின் நடக்கும் மணவாழ்க்கை கலாட்டாக்கள் நிறைந்த படம் மணல் கயிறு. படத்தின் இறுதியில் மனைவியை ஏற்றுக்கொள்ளும் கிட்டுமணி நாரதர் நாய்டுவை வெறுத்து ஒதுக்கிவிடுவார்.

எஸ்.வீ.சேகர் கதை, திரைக்கதையிலும், மதன் குமார் இயக்கத்தில் வரும் பகுதி இரண்டில் பெரிய தொழிலதிபராகியிருக்கிறார் எஸ்.வீ.சேகர். அவருக்கு ஒரு மகள் உள்ளார். கதாநாயகி மாப்பிள்ளைக்கான தகுதியென அப்பாவைப் போல் தானும் எட்டுக் கண்டிஷன்கள் போடுகிறார். தற்போது பத்தாயிரம் திருமணங்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கும் அதே நாரதர் நாய்டுவாக விசு இந்தப் பெண்ணின் திருமணத்தையும் எஸ்.வீ சேகருக்கேத் தெரியாமல் சூத்திரதாரியாக இருந்து எட்டு கண்டிஷங்களுக்குமே பொருந்தாத ஒரு பையனுக்குத் திருமணம் முடித்து வைக்கிறார்.

உண்மை தெரிந்த பின் வரும் கோபதாபங்களும் குழப்பங்களுமே கதை. முடிவு சுபம். மணல் கயிறு படத்தில் நாரதர் நாய்டுவாக கெத்தாக வருவார் விசு. இரண்டாம் பகுதியில் மூப்பின் காரணமாகவும், உடல் நலக் கோளாறின் காரணமாகவும் அந்த கெத்து இல்லை. குரலும் தளர்ந்து போயிருக்கிறது. அனால் நல்ல வேளையாக அவருக்கு முழு பாத்திரத்தையும் கொடுக்காமல் ஒரு உதவியாளர் பாத்திரத்தை உருவாக்கி {சுவாமிநாதன்} திரைக்கதையை சற்றே நிமிர வைக்கப் பார்த்திருக்கிறார்கள். சாந்தி கிருஷ்ணா முதல் படத்தில் கிட்டுமணி மனைவி உமாவாக வெகு பொருத்தமாக இருப்பார். இப்பொழுது அவர் கால்ஷீட் கிடைக்காததால் பழைய நடிகை ஜெயஸ்ரீ அந்தப் பாத்திரத்தில் வருகிறார். நடிப்பும், பாத்திரப் பொருத்தமும் பரவாயில்லை.

நாயகனாக அஷ்வின் சேகர் முந்தைய படங்களை விட நன்றாக நடித்துள்ளார். நகைச்சுவை நன்றாக வருகிறது.  நாயகி பூர்ணா ரொம்ப அழகாக உள்ளார். நடிப்பும் நடனமும் வெகு நன்றாக வருகிறது. நல்ல பெரிய கண்கள். ஆனால் மொத்தப் படத்துக்குமே உயிர்நாடி எஸ்.வீ.சேகரும் அவரின் டைமிங் நகைச்சுவை வசன டெலிவரியும் தான். அவருக்கும் நாரதர் நாய்டுவுக்காமன பகை சில நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. சாம்ஸ் {சுவாமிநாதன்} நகைச்சுவைக் காட்சிகள் சுவையாக இல்லை. ஆனால் ஜெகன், அஸ்வின், ஜார்ஜ் கூட்டணியில் வரும் விளமரப் பட நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக இருக்கின்றன.

இப்படத்தில் கல்யாணம் செய்து கொள்ளப் பெண் போடும் சில கண்டிஷன்கள் இன்றைய சமூகத்தில் நடைமுறையில் கேள்விப்படுகிற கட்டளைகள் தான். அந்த வகையில் கதையில் யதார்த்தம் உள்ளது. நாயகனும் நாயகியின் மேல் காதல் உருவாகிவிட்டதால் கண்டிஷங்களுக்குத் தான் சரிப்பட்டு வரமாட்டோம் என்று தெரிந்தே திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். திருமணத்திற்குப் பின் கதை சுவாரசியமாக நகரும், எப்படி பொய்கள் உடையும், எப்படி பொய்களை சமாளிக்கப் போகிறார், என்று ஆவலுடன் உட்கார்ந்தால் எல்லாமே புஸ்வாணம் தான். ஒரு கம்பெனியை நிர்வகிக்கும் பெண் எப்படி பையனைப் பற்றி எந்த புலன் விசாரணையும் செய்யாமல் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்கிறார் என்பதில் ஆரமபித்துத் திரைக் கதையில் பல ஓட்டைகள். இசை தரன்குமார்.வெகு சுமார். எடிட்டிங்கில் பாடல்களை கத்திரித்திருக்கலாம்.

குடும்ப வால்யுசின் பங்கைப் பற்றி நல்ல முறையில் இப்படம் பேசுகிறது. அதற்காக இப்படத்தை பாராட்ட வேண்டும். மேலும் முந்தைய மணல் கயிறு படத்தின் தொடர்ச்சியாக இப்படமும் இருப்பது நன்று. என்ன ஒன்று, இம்மாதிரி இரண்டாம் பகுதி படங்கள் வருவதினால் முதல் பாகம் எவ்வளவு அருமையான படம் என்று உணரவைக்கிறது. அதுவும் இப்படம் ஆரம்பிக்கும்போது முதல் படத்தின் காட்சிகள் முன்கதை சுருக்கமெனக் காட்டப்படுகின்றன. அந்தப் படத்தையே மறுமுறை முழுதாகப் பார்த்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது 🙂

manalkayiru2

சென்னை 28 – 2 திரை விமர்சனம்

chennai28_part2_1102016_m

இரண்டாயிரத்து ஏழாம் வருடம் வந்த வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் மனசைத் தொட்டப் படம். கிரிக்கெட் நம் இரத்தத்தில் ஊறிய ஒரு விளையாட்டு. அதுவும் தெரு கிரிக்கெட்டும், பந்தய மேட்ச்களும் எல்லா தமிழக இளைஞர்களின் வாழ்வில் கண்டிப்பாக ஒரு அங்கமாகவே பள்ளி, கல்லூரி நாட்களில் கலந்திருக்கும். சென்னை 28 பகுதி 2 முதல் படத்தின் இரண்டாம் பாகம். இந்தப் படத்திலும் மேட்ச் முக்கிய அங்கம் வகிப்பதினால் கிரிக்கெட்டில் நாம் காணும் சுவாரசியம் படத்திலும் காண முடிகிறது.

முதல் படத்தில் நடித்தவர்களையே இரண்டாம் பாகத்திலும் வெங்கட் பிரபு நடிக்க வைத்திருப்பது சிறப்பு, அதுவும் படம் வந்து பத்து வருடங்கள் ஆன பிறகு எடுத்திருக்கும் போது அதே மாதிரி அந்தக் கதாப்பாத்திரங்களின் வயதையும் பத்து வருடம் அதிகப் படுத்திக் கதை அமைத்து சொல்லியிருப்பது  அழகு. முந்தின பகுதியில் வந்த நண்பர்கள் குழுவில் நாலு நண்பர்களுக்குத் திருமணம் முடிந்து அதில் இவருக்குக் குழந்தைகளும் இருக்கு. அதில் ஒரு நண்பரான ஜெய்யின் காதல் திருமணத்திற்கு இவர்கள் அனைவரும் தேனீக்கு செல்கின்றனர். அங்கு நடக்கும் பிரச்சினைகளில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கதையை நகர்த்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது.

ஆங்கிலப் படமானாலும் சரி தமிழ் படமானாலும் சரி இரண்டாம் பகுதி என்று எடுக்கும் போது முதல் பகுதியில் இருந்து எல்லாமே சற்று மாறுபட்டிருக்கும், எதிர்பார்த்த அளவும் இருக்காது.  அந்தக் குறை இப்படத்தில் இல்லை. முதல் கதையின் தொடர்ச்சியாக இதைப் பார்க்க முடிகிறது. கதாப்பத்திரங்களின் குணாதிசயங்களில் மாற்றம் இல்லாமல் கொண்டு செல்கிறார் இயக்குநர். அதே சமயம் வெறும் கிரிக்கெட் என்றில்லாமல் கதையில் கொஞ்சம் மசாலாவும் சேர்த்திருப்பதால் சுவைக்கிறது.

லகான், சென்னை 28 முதல் பகுதி ஆகியவை கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்ததால் தான் நமக்கு ஈர்ப்பு அதிகம் இருந்தது. அதே ஈர்ப்பு, பகுதி இரண்டிலும்! போட்டி மேட்ச்களின் போது நகைச்சுவையும் விறுவிறுப்பும் கலந்து நன்றாக உள்ளது. முதல் பகுதியில் பீச்சில் விளையாடிக் கொண்டிருக்கும் பள்ளிப் பிள்ளைகளிடம் இந்த நண்பர் குழு மேட்சில் தோத்து பேட்டை பறிகொடுப்பது ஹைலைட்டான விஷயம். அதே பிள்ளைகள் வளர்ந்து இவர்களின் சென்னை ஷார்க்ஸ் அணியிடம் திரும்ப அதே அளவு டஃப் பைட் கொடுப்பதாக இரண்டாம் பகுதியிலும் வைத்திருப்பது நகைச்சுவை ட்விஸ்ட்!

யுவன் சங்கர் ராஜாவின் இசை சொல்லிக் கொள்ளும் படியாகவே இல்லை. சீக்கிரம் பார்முக்கு வருவார் என்று எதிர்பார்ப்போம்.  படத்தின் வேகத்தைப் பாடல்கள் குறைக்கின்றன. சில பாடல்களை எடுத்துவிட்டால் படம் இன்னும் வேகமாக நகரும். முதல் பாகத்தில் இருந்தப் பின்னணி இசையைப் பல இடங்களில் அவர் பயன்படுத்தியிருப்பது நன்றாக உள்ளது. பிரேம்ஜி உடல் இளைத்திருக்கார், வயதும் நன்றாகத் தெரிகிறது. அதே மொக்கக் காமெடி தான் அவரின் பங்களிப்பு. ஜெய் ஒரு ஹீரோ பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வைபவ் வில்லனாக நன்றாக நடித்துள்ளார். மற்ற நடிக நடிகையர் பாத்திரத்துக்கேற்ப நல்ல தேர்வு.

நக்கல் நையாண்டி நிறைய இருக்கு. இடிஸ்பிரஷாந்த் வீடியோவில் திரை விமர்சனம் செய்வதையும் விஜய் டிவி எல்லாருக்கும் அவார்ட் கொடுப்பதையும் கிண்டல் செய்கிறார் நடிகர் சிவா. பிராஷாந்தைக் கிண்டல் அடிக்கிறாங்களேன்னு நினச்சா அவர் இரண்டு காட்சிகளில் கிரிக்கெட் கமெண்டேடரா வரவும் செய்கிறார்! படம் முழுவதும் நண்பர்கள் கூடினால் மது அருந்துவது தான் செய்யப்படும் ஒரே செயல் என்பது போல அதிகமான மது அருந்தும் காட்சிகள். அவை சிறிதும் நன்றாக இல்லை. முதல் பாதியில் கதையில் ஒன்ற முடியவில்லை. அதே போல இறுதி முடிவும் கதையை முடிக்க சட்டென்று எதோ ஒரு முடிவை போட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

சென்னை 28க்கு நல்ல இரண்டாம் பாகம் இப்படம். முதல் படம் பிடித்தவர்களுக்கு இதுவும் பிடிக்கும். லைட்டான படம். பெரிதா எதிர்பார்த்துச் செல்லாதீர்கள், ஏமாற்றம் அடைய மாட்டீர்கள்!

chennai-28-ii-movie-stills-16-1000x600

 

என் பார்வையில் செல்வி ஜெயலலிதா

Image result for images of jayalalitha

பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. சில பெண்களின் வாழ்க்கை சிறு வயது முதலே போராட்ட வாழ்க்கையாய் அமைந்து இறுதி வரை போர்க்களத்திலேயே வீழும் வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒருவர் தான் நம் மாநில முதல் மந்திரி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

சிறந்த படிப்பாளி, நாட்டியத்தில் நன்கு தேர்ச்சிப் பெற்றவர், அழகும் அறிவும் ஒரு சேரப் பெற்ற நடிகையாகப் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தன் கேரியரை ஆரம்பித்தார். அம்மு என்று அவரை நெருங்கிய அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மென் மனத்தினராக இருந்தார். நடிக்கும்போது கூட செட்டில் தன் பகுதி முடிந்தவுடன் புத்தகமும் கையுமாக தான் இருப்பார், யாரிடமும் வம்புப் பேச்சு கிடையாது என்று அவருடன் நடித்தவர்கள் சொல்லுவர்.

இரண்டு வயதில் தந்தையை இழந்து ஸ்டெனோகிராபராக இருந்து பின் நடிப்புத் தொழிலுக்கு வந்த தன் தாயுடனும், அண்ணனுடனும் வளர்ந்தார். ஒரு கட்டத்தில் எந்த உறவும் இல்லாமல் சுற்றி இருந்தோர் அனைவருமே அவரை பயன்படுத்தி கொண்டார்கள்! நடிகையாக தான் வாழ்ந்த நாளில் ஒரு நொடி கூட தான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்று ஒரு வட இந்திய ஊடக பேட்டியில் {சிமி காரேவால்} சொல்லியிருந்தார். நன்றாக படிக்கும் ஒரு இளம் பெண்ணை, மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்த ஒருவரை வலுக்கட்டாயமாக நடிப்புத் தொழிலுக்கு அனுப்பியது அவரது தாய் சந்தியா. அது ஒரு சுயநலச் செயல். மகன் படித்து முன்னுக்கு வர மகளை பொருள் ஈட்ட அனுப்பினார். நடிகை சந்தியாவிற்கு அச்சமயத்தில் நடிப்பு வாய்ப்புகள் இல்லை, மகளை வைத்து நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதால் அவர் செய்த ஏற்பாடு இது. எங்கும் இருப்பது போல் இரட்டை நிலை. சமுதாயம் ஆண் உயர்ந்தவன் என்றும் பெண் தாழ்ந்தவள் என்றும் கூறி பேதப்படுத்துகிறது

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்

எட்டுமறிவில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காண் என்று கும்மியடி” என பாரதியார் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்துப் பாடிவிட்டுப் போய்விட்டார். ஆனால் அது நடைமுறையில் இன்று வரை முழுமையாக வந்தபாடில்லை 😦

சினிமாவில் நடிப்பது ஒரு வங்கிப் பணியோ, ஆசிரியர் பணியோ மாதிரி 9 to 5 வேலை கிடையாது. ஆண்களுடன் நெருங்கி டூயட் பாடுவதும், உடலைக் காட்டும் உடைகளை அணிவதும் ஒரு நடிகையின் வாழ்வின் இயல்பான ஓர் அங்கம். அதில் எத்தனை ஆண்கள் அவர் விருப்பத்திற்கு மீறி அத்து மீறீனார்களோ தெரியாது. ஒரு சமயத்தில் அவர் நடிகர் ஷோபன் பாபுவுடன் திருமண உறவில் இருந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும் ஒரு செய்தி பல காலம் உலவியது. அப்படி இருந்திருந்தால் நிச்சயம் இன்றைய ஊடகங்கள் அதை கண்டுபிடித்து அவர் மகனையோ மகளையோ இந்நேரம் வெளிக் கொண்டுவந்திருக்கும். ஆதலால் பிள்ளைச் செல்வம் இல்லை என்றே நினைக்கிறேன்.

தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும், ஆங்கிலம் பேசும் புலமையினாலும், எம்ஜிஆருடன் நிறையப் படங்களில் நடித்தப் பழக்கத்தினாலும், மேலும் அவருடன் நெருக்கமான உறவும் இருந்ததாக கூறப்பட்டதாலும் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தவுடன் அவரை தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஆக்கினார். அரசியலுக்கும் அவர் விருப்பபட்டு வந்தாரா என்று தெரியாது. அவருக்கு அந்தக் காலகட்டத்தில் நிறைய கடன் இருந்ததாக சொல்லப்பட்டது. அதை அடைக்க இந்தப் பணி உதவியதால் இதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கலாம். அதில் இருந்து தொடங்கியது அவரது அரசியல் வாழ்க்கை. எம்ஜிஆர் முதல் மந்திரியாக இருந்த பத்து வருட காலத்தில் படிப்படியாக அரசியலை இவர் நன்கு கற்றுக்கொண்டார்.

எம்ஜிஆர் இறந்த போது அவர் உடலின் தலைமாட்டில் சோகமே உருவாக அமைதியாக நின்றிருந்தார். ஆனால் அவரால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இறுதி ஊர்வல வண்டியில் இருந்து தள்ளி விடப்பட்டார். ஆனால் எம்ஜிஆர் இறந்த இரண்டே ஆண்டுகளில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனார். அவரின் சலியாத உழைப்பும் போராட்டக் குணமும் அவருக்குப் படிப்படியாக வெற்றிகளைத் தந்தன. அவரை கட்சி ரீதியாக பிடிக்காதவர்கள் கூட அவரிடம் இருக்கும் வைராக்கியத்திற்காக அவரை பிடித்தவர்கள் அநேகம் பேருண்டு.

கலைஞர் இந்திய அரசியல் சரித்திரத்தில் இடம்பெறப் போகும் மாபெரும் அரசியல் வித்தகர். அவரின் எழுபது, எழுபத்தைந்து வருட அரசியல் பயணத்தில் அவரை விஞ்ச எவரும் இல்லை. அப்படிப்பட்ட ஜாம்பவானையும் அவரது கட்சியையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவது எளிதன்று. அத்தகைய சாகசத்தை அவர் தனியாகப் பலமுறை நிகழ்த்தியிருக்கிறார்.

அரசியல் ஒரு சாக்கடை என்பது தான் பலரின் கருத்து. அதில் இருப்பவர்கள் பெரும்பாலும் ரவுடிகளும் அராஜகப் போக்கும் கொண்டவர்கள் என்பது பொது கண்ணோட்டம். அப்படிப்பட்ட அரசியலில் தனியொரு பெண்ணாக எந்த ஒரு ஆணின் துணையில்லாமல் தனித்துத் தலைமைப் பொறுப்பில் பல்லாண்டு காலம் தமிழகத்தை வழி நடத்தியிருகிறார். இது ஒரு மாபெரும் சாதனை.

‘‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்’’ (ப.,214)

என்கிற பாரதியார் பாடலுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.

வீட்டில் ஆண் குடித்து விட்டு அடிக்கும்போதும், பணம் கொடுக்காமல் சச்சரவு செய்யும்போதும், அதட்டி மிரட்டி ஆணாதிக்கத்தைக் காட்டும் போதும், பொது வெளியில் ஆண்கள் பெண்களை சீண்டும் போதும், இன்ன பிற எரிச்சலூட்டும் செயல்களை ஆண்கள் செய்யும்போதும் நம் முதலமைச்சரின் கெத்து, ஆண் வர்க்கத்தையே அடக்கி ஆளும் திறன், பெண் வர்க்கத்துக்கு எரியும் புண்ணின் மேல் வருடும் குளிர் காற்றாக இருந்தது. துணிச்சலில்  அவருக்கு நிகர்  எவருமே இல்லை. அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதே இந்தத் துணிச்சல் குணத்தை தான்.

எத்தனை தோல்விகள் வந்தாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சளைக்காமல் எதிர் கொண்டு போராடினார். சாவுடனும் 75நாட்கள் விடாமல் போராடி சாகா வரம் இவ்வுலகில் யாருமே பெறாததால் அந்தப் போராட்டத்தில் மட்டுமே அவர் வெற்றி காணவில்லை.

நான் அவர் பதவியில் இருந்தபோது செய்த முறைகேடுகளை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை, தத்தெடுத்து அந்தப் பிள்ளைக்கு வெகு ஆடம்பரமாகத் திருமணம் செய்ததை, மக்களுக்கு இலவசங்களை அளித்ததைப் பற்றியெல்லாம் இங்கு நான் விமர்சிக்கவில்லை. இந்திய அரசியலில், ஏன் தற்போது டிரம்ப் தான் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என்னும் நிகழ்வுக்குப் பின், உலக அரசியலில் கூட இவ்வாறான முறைகேடுகள் எல்லாம் வெகு சாதாரணமப்பா என்று அனைவரும் கடக்கின்ற நிலையில் இவர் ஆட்சியில் நடந்த சில எல்லை மீறுதல்களை இங்கே இப்பொழுது பேச விரும்பவில்லை. அதனால் அவர் செய்த தவறுகள் எல்லாம் சரி என்றும் சொல்லவில்லை. இத்தருணத்தில் அவை முக்கியமில்லை என்றே கருதுகிறேன்.

அவர் உண்மையிலேயே தாயுள்ளம் கொண்டவர். உங்களால் நான் உங்களுக்காகவே நான் என்று அவர் ஒவ்வொரு முறை கூறும்போதும் அது அவர் உள்ளத்தில் இருந்து ஒலிக்கும் குரலே! அம்மா என்று அனைவரும் அவரை அழைப்பது மரியாதைக்காக மட்டுமல்ல உண்மையான அன்பினாலும் தான். சிலவற்றை மக்களிடம் திணிக்க முடியாது. அதிகாரத்தால் அன்பை விலைக்கு வாங்க முடியாது. அன்பையும், மரியாதையும் ஒருவர் தன் நடத்தையினால் மட்டுமே பெற முடியும். அதனால் தான் இலட்சக்கணக்கான மக்கள் அவருக்காக இத்தனை பிரார்த்தனைகளையும்  தானாக முன் வந்து செய்கின்றனர். அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா பேருந்துகள், அம்மா மருத்துவக்காப்பீட்டு திட்டம், ஆகியவை அரசாங்கம் வைத்தப் பெயராக இருந்தாலும் அவைகளை மக்கள் விருப்பத்துடனேயே அவ்வாறு அழைக்கின்றனர். அவரின் பெயரை வருங்காலம் முழுவதும் அவர் கொண்டு வந்த இந்த நலத் திட்டங்கள் சொல்லும். அம்மா என்றால் அன்பு தான்! அவர் புகழ் நிலைக்கட்டும்!