பைரவா – திரை விமர்சனம்

bairavaa

பெர்மியுடேஷன் காம்பினேஷன் மாத்தி விஜய்யின் இன்னொரு மசாலா படம் பைரவா! நாளுக்கு நாள் எப்படித்தான் இளமையா ஆகிறாரோ தெரியவில்லை, விஜய் இன்னும் உடல் மெலிந்து அதிக முகப் பொலிவுடன் இருக்கிறார். படத்தில் சைக்கிளில் என்ட்ரி என்றாலும் கில்லி என்ட்ரி!

வண்ணத்திரையில் தீமையை எதிர்த்து நன்மைக்குப் போராடுவது தான் எம்ஜிஆர் பாணி. அதையே இவரும் தொடர்ந்து பாலோ செய்கிறார்.  கல்வியறிவே இல்லாத அராஜகவாதி, கெட்ட வழியில் சம்பாதித்தப் பணத்தை இன்னும் பன்மடங்காக்க அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொடங்கியிருக்கும் கல்வி நிறுவனத்தில் சிக்கிச் சீரழியும் மாணவர்களைக் காப்பாற்றும் செயல் வீரராக வருகிறார் விஜய். அவருக்கேற்ற கதை. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக யூகிக்கக் கூடியத் திரைக் கதையா என்று கேட்பவர்களுக்கு, அவரைப் பொறுத்த வரையில் இது tried and tested. அவர் ரசிகர்கள் விரும்புவது இதைத் தான் என்பதால் தொடர்ந்து இவ்வாறே கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார் என்று நினைக்கிறேன்.

விஜய் முதலில் கலெக்ஷன் ஏஜண்டாக ஒரு ஏமாற்றுக் கும்பலிடம் பணம் வசூல் செய்ய கிரிக்கெட் ஆடி, அடிக்கும் காட்சிகள் நல்ல நகைச்சுவை. தொடர்ந்து நிறைய சண்டைக் காட்சிகள். எவ்வளவு தடியான ஆளுடன் சண்டை போட்டாலும் எதிராளி எத்தனை பெரிய ஆயுதம் வைத்திருந்தாலும் அனாயாசமாக சண்டை போட்டு ஒரு சின்னக் கீறல் கூட மேலே படாமல் ஒவ்வொரு சண்டையிலும் வெற்றிப் பெறுகிறார் விஜய்! ஜகபதி பாபுவும், டேனியல் பாலாஜியும் முரட்டு வில்லன்களாக வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் நன்றாக செய்திருக்கிறார். அவர் சொல்லும் பிளாஷ்பேக்கை நச்சுன்னு முடித்திருக்கலாம். அங்கே ஆரம்பிக்கிறது இழுவை. எடிட்டிங் சொதப்பல். பாடல்களும் படத்தின் தொய்வுக்குப் பெரும் காரணம். வரலாம் வா வரலாம் வா பைரவா பாடலையும் இன்ட்ரோ பாடலான பட்டையக் கிளப்புப் பாடல்களைத் தவிர அனைத்துப் பாடல்களையும் படத்திலிருந்து வெட்டியிருக்கலாம்.

சதீஷ், மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா ஆகியோர் படத்துக்குத் தேவையே இல்லை. வங்கி மேலாளராக Y.G. மகேந்திரனும் எரிச்சலை ஏற்படுத்துகிறார். இவர்களை சரியாகக் கையாளாதது அல்லது தவறாக தேர்ந்தெடுத்திருப்பது இயக்குநரின் தவறு. மேலும் விஜய், சதீஷ் இருக்கும் மேன்ஷன், தெரு ஆகியவை செட் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. கலையலங்காரத்துக்கு ஒரு குட்டு. விஜயின் உடைகள் நன்றாக இருந்தாலும் அவரின் விக் அவருக்கு சரியாகப் பொருந்தவில்லை.

உண்மையிலேயே கல்லூரிகளில் இன்று நடக்கும் தவறுகளை, ஆசிரியரே மாணவியிடம் சொற்களால் வன்கொடுமை செய்வது போன்றவைகளை திரைக்கதையில் சேர்த்திருப்பதாலும் {அதை விஜய்யும் தட்டிக் கேட்கிறார்} கோர்ட்டில் விஜய் உண்மை சம்பவங்களையே மேற்கோள் காட்டி எப்படி நிர்வாகத்தின் அஜாக்கிரதையினால் பல மரணங்கள் பள்ளி, கல்லூரிகளில் நடக்கின்றன என்பதை சொல்வதினாலும் படம் என்டேர்டேயின்மென்ட் தாண்டி நல்ல மெஸ்சேஜ்ஜையும் தருகிறது. அது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

இங்கே சோஷியல் மீடியாவில் சொல்லப்படுவது போல மகா மோசமனப் படமாக எனக்குப் படவில்லை. விஜய் ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தும் உள்ளன. முழுப் படத்தையும் விஜய் ஒருவரே தாங்குகிறார். பஞ்ச் வசனம் கைத்தட்டல் பெறுகின்றது. ஒளிப்பதிவாளர் சுகுமார் விஜயை அழகாகவும் ஸ்க்ரீனில் நல்ல ப்ரசன்சுடன் காட்டுவதில் பாராட்டைப் பெறுகிறார்.

bairavaa1

தங்கல் – திரை விமர்சனம்

dangal

அது எப்படியோ ஆமிர் கான் தேசப் பற்று மிக்கப் படங்களைப் பிரமாதமாக எடுத்துவிடுகிறார். அதுவும் விளையாட்டுப் போட்டியும் சேர்ந்த கதையம்சத்துடன் இருந்தால் படத்தின் தரம் இன்னும் ஒரு படி உயர்ந்து விடுகிறது. நித்தேஷ் திவாரி இயக்கியிருக்கும் இந்தப் படம் உண்மை நிகழ்சிகளை வைத்தே பின்னப்பட்டிருக்கிறது.

மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகாட்டின் {ஆமிர் கான்} வாழ்க்கையில் ஆரம்பித்து அவர் மகள்களின் வாழ்க்கையில் மையம் கொள்கிறது இக்கதை. மல் யுத்தத்தில் இந்தியாவிற்கு தங்கம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற அவரின் கனவு நினைவாகவில்லை. தனக்குப் பிறக்கும் மகன் மூலம் அதை சாதிக்கலாம் என்று எண்ணியவருக்குப் பிறக்கும் நான்கு குழந்தைகளுமே பெண் பிள்ளைகள்.

ஒரே ஒரு ப்ளாஷ் பேக் தான் ஆமிர்கானின் மல் யுத்தப் போட்டியைக் காட்டுகிறது. மிகவும் இளமையாகவும் சிக்ஸ் பேக் உடல் அமைப்புடன் அதில் விளங்குகிறார். படத்தின் மிச்சப் பகுதிகள் அனைத்தும் எப்படி தன் பெண்களை மல்யுத்த வீராங்கனைகளாக ஆக்குகிறார் என்பதைச் சுற்றி வலம் வருகிறது. மகள்களாக கீதா, பபிதா பாத்திரங்களில் வரும் நடிகைகள் {கீதாவாக பாத்திமா சானா ஷேக், குழந்தை கீதாவாக சைரா வாசிம். பபிதாவாக சான்யா மல்ஹோத்ரா, குழந்தை பபிதாவாக சுகானி பட்நாகர்} பிராமதமாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெற்றிக்கு அவர்கள் முக்கிய காரணம்.

மகன் பிறக்கவில்லையே என்கிற வருத்தத்தில் இருக்கும் மகாவீர் சிங் தன்னுடைய பெண்களின் சண்டை போடும் திறனை எதேச்சையாகத் தெரிந்து கொண்டு அந்தத் திறமையை வளர்க்கப் பாடு படுகிறார். கிராம சூழ்நிலையில் இம்முயற்சி எத்தனை எதிர்ப்பை கிளப்பும் என்று நாம் யூகிக்க முடியம். மகள்களும் கடுமையான பயிற்சியையும், குழந்தைப் பருவ மகிழ்ச்சிகளை தொலைப்பதையும் விரும்பவில்லை. ஆனால் தந்தையாக இல்லாமல் ஒரு கோச்சாகக் கடுமையாக அவர்களை தயார் செய்கிறார் மகாவீர் சிங்.

இந்த இடத்தில் தந்தைக்கான பாத்திரத்தில் அவர் கொடுமைக்காரராக தான் காட்சியளிக்கிறார். அடித்துத் துன்புறுத்துதல் இல்லை, ஆயினும் சில செயல்கள் மூலம், தான் சொல்படி நடக்க வேண்டும் என்கிற தந்தையாக வருகிறார். மைக்கேல் ஜெக்சனின் தந்தையும் தன் மகன் மகள்களை அடித்துத் துன்புறுத்தி இசையில் பயிற்சி எடுக்க வைத்தார் என்றொரு குற்றச்சாட்டு உண்டு.  இள வயதில் இருந்தே தீவிர பயிற்சி எடுக்க வேண்டிய கலை, விளையாட்டு ஆகியவை சார்ந்த பயிற்சிகளில் பெற்றோர்/கோச் சரியான/தவறான முறை எது என்பதில் ஒரு நூலிழையில் அவர்களின் பயிற்சி முறை மதிப்பீடு மாறுபடும். இக்கதையிலும் அக்கோணம் உள்ளது.

பெண் சிசுக் கொலைகளும், குழந்தைத் திருமணங்களும் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு மாநிலம் ஹரியானா. அப்படிப்பட்ட பின்தங்கிய மாநிலத்தில் மஹாவீர் சிங் தன்னுடைய மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கியதன் பின்னணியை இந்தப் படம் அலசியிருக்கிறது. மஹாவீர் தன்னுடைய கனவை மகள்கள் மீது திணித்திருக்கிறார் என்ற பொதுவான ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

மல்யுத்த வீராங்கனைகளாக தத்ரூபமாக நடித்திருக்கிறார் பாத்திமா சானா ஷேக். அம்மாவாக வரும் சாக்ஷி தன்வார், கசினாக வருபவர், இருவரும் நல்ல தேர்வு. நடக்கும் போட்டிகளை நாமே அரங்கில் இருந்து பார்ப்பது போன்ற பீலிங்கை ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் ஏற்படுத்துகிறார். உண்மை கதை, ஆயினும் சஸ்பென்சுக்கும், ட்விஸ்டுக்கும், பஞ்சமில்லாமல் நகருகிறது திரைக்கதை. படம் நீளமாக இருந்தாலும் நேரம் போவதே தெரியவில்லை. ப்ரீதமின் இசையமைப்பும் நன்றாக உள்ளது.

ஆமிர் கான் பாத்திரமாகவே மாறிவிடுகிறார். எப்படியாவது தன் மகள்கள் தன் கனவை நினைவாக்க வேண்டும் என்கிற வெறியோடு ஒவ்வொரு செயலையும் செய்கிறார். விளையாட்டு வீரர் ஒருவரின் வாழ்க்கையை நேர்மையாகவும் எளிமையாகவும் பதிவுசெய்திருக்கிறது இந்தப் படம். இந்த நேர்மைக்காக இயக்குநர் நித்தேஷ் திவாரியைப் பாராட்ட வேண்டும்.

குறைகள் இல்லாமல் இல்லை. ஒரு தோழியின் அறிவுரையினால் கீதாவும் பபிதாவும் மனம் மாறிவிடுவது, பதின் பருவ பெண்கள் அதே வயதையொத்த ஆண்களுடன் மல் யுத்தம் செய்வது எவ்வாறு போன்ற கேள்விகள் எழுகின்றன. அதே சமயம் விளையாட்டு வீரர்களுக்கு அரசாங்கம் எந்தவித உதவியும் செய்யாமலிருப்பதும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பல பரிமாணங்கள் உள்ள படம். கண்டிப்பாகப் போற்றி பாராட்டப் பட வேண்டும். படத்தைப் பார்த்தத் தாக்கத்தினால் ஜெய் ஹிந்த் சொல்லி முடிக்கிறேன் 😉

பின்குறிப்பு: படம் முடிந்து க்ரடிட்சில் கீதா பபிதா வாங்கிய தங்கம், வெள்ளி மெடல்கள் பற்றிய விவரங்களும், மொத்தம் அவர்கள் வாங்கிய மெடல்களின் எண்ணிக்கையும் காட்டபடுகின்றன. இவர்களினால் இன்று பெண்கள் மல்யுத்தப் போட்டிகளில் பெருமளவில் பங்கு பெறுவதையும் குறிப்பிடுகிறார்கள்.

dangal1