எமன் – திரை விமர்சனம்

lyca-production-for-yeman

இப்போதைய ட்ரன்ட்  ஹீரோவுக்கு வில்லன் குணாதிசயங்கள் இருப்பது தான். விஜய் ஆண்டனி எக்ஷன் ஹீரோவாக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாக முயல்கிறார். இரட்டை வேடம் அவருக்கு, அப்பா மகன். இரண்டிலும் ஒகேவாக செய்திருக்கிறார். அப்பாவாக சிறிது நேரமே வருகிறார். அரசியல் களத்துக்கான ஆரம்பத்தை அப்பா விஜய் விதைத்து விடுகிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சமாவது வேறுபாட்டைக் காட்ட அடுத்தப் படத்திற்குள்ளாவது பயிற்சி எடுக்க வேண்டும்.

இன்று அரசியல் சூழ்ச்சிகள் நிறைந்தும், பதவிக்காகக் கொலை, வஞ்சகம், கூட இருக்கும் நட்பே குழி பறிப்பது, ஜாதி அரசியல் செய்வது, போன்றவை சாதாரணமாக நடப்பது தமிழக மக்களுக்கு ரொம்ப பரிச்சயமாகியிருக்கும் ஒரு விஷயம். அதை எமன் படத்தில்  திரையில் காண்கிறோம்.

தியாகராஜன் இந்தப் படத்தில் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி பாத்திரத்தில் வருகிறார். அரசியல்வாதி/சட்டத்துக்குப் புறம்பான வியாபாரங்கள் செய்யும் ஒருவராக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ரொம்ப நாள் பிறகு சார்லிக்கும் ஒரு நல்ல பாத்திரம். மந்திரியின் காரியதரிசியாக எல்லா விஷயங்கள் தெரிந்தாலும் அமைதியாக சொல்வதை செய்யும் செயலாளராக அடக்கி வாசித்து நன்றாக நடித்துள்ளார். தியாகராஜனும் சார்லியும் படத்துக்குப் பலம். ஹீரோயினாக மியா ஜார்ஜ், நடிகை அஞ்சனாவாக வருகிறார். அவர் பாத்திரம் படத்தின் கதையை சற்றே திசை திருப்பினாலும் அவர் நடிப்பும் கச்சிதம்.

தமிழரசுவாக வரும் விஜய் ஆண்டனி முதல் முப்பது வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தார் என்று சொல்லப்படவில்லை. குற்றம் செய்த ஒருவனை தப்பிவிக்க, செய்யாத குற்றத்துக்குப் பணம் வாங்கிக் கொண்டு அவர் சிறைக்குச் செல்வதாகத் தான் கதை ஆரம்பிக்கிறது, அதுவும் தாத்தாவின் மருத்துவ செலவுக்காக. ஆனால் சிறையில் நுழைந்த உடனேயே எல்லாரையும் அதகளம் செய்யும் அளவு பலமும் சாமர்த்தியமும் பொருந்தியவராக அவரைக் காட்டுகிறார் இயக்குநர். அங்கேயே திரைக்கதையில் நம்பகத் தன்மை குறைந்து விடுகிறது.

அதன் பின் அரசியலில் அசுர வளர்ச்சி அடைகிறார் விஜய் ஆண்டனி. சண்டைக் காட்சிகளைப் பார்க்கும்போது குழந்தைகள் விளையாடும் சிசர்ஸ் பேப்பர் ஸ்டோன் என்கிற விளையாட்டு தான் நினைவுக்கு வருகிறது. இந்தப்  படத்தில் கத்தி வைத்திருப்பவரை விட துப்பாக்கி வைத்திருப்பவர் வெற்றி பெறுவார், நெருப்பைப் பயன்படுத்துபவர் எல்லாத்தையும் வெற்றிக் கொள்வார். அந்த மாதிரி உள்ளது அனைத்து ஸ்டன்ட் சீன்களும்.

ஜீவா சங்கர் தான் திரைக் கதை, இயக்கம், ஒளிப்பதிவாளரும் அவரே. அவர் அரசியல் களத்தை எடுத்ததற்கு பாராட்டு ஆனால் திரைக்கதையில் கனமில்லை. ஒரு சஸ்பென்ஸ் இருந்தும் அதைக் கதையில் கடைசி வரை கொண்டு வராதது இயக்குநரின் தவறு. விஜய் ஆண்டனி இசை வெகு சுமார்.

விஜய் ஆண்டனி ஹீரோ என்றாலும் அவர் ஒரு அரசியல்வாதி. அதனால் நீங்க நல்லவரா கெட்டவரா என்று கேட்கவே வேண்டாம், கண்டிப்பாகக் கெட்டவர் தான். ஆனாலும் நமக்கு அவரை பிடிக்க வைக்க இயக்குனர் முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால் படத்தில் பாத்திரப் படைப்பு நன்றாக இருந்தாலும் கதையில் சுவாரசியம் இல்லை. கடைசியில் ஆயாசமே மிஞ்சுகிறது.

yemen

 

 

 

 

சிங்கம் – 3 திரை விமர்சனம்

singam3

சிங்கம் 2 templateலேயே இன்னுமொரு ஹரி/சூர்யா/துரைசிங்கம் படம். இந்த முறை கிளைமேக்ஸுக்கு மட்டும் ஆந்திராவுக்குப் போகாமல் படம் முழுவதுமே ஆந்திராவில் நடக்கும்படி கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி. பெரும்பாலான கதை விசாகப்பட்டினத்தில், கொஞ்சம் ஆஸ்திரேலியாவிலும் {ஆஸ்திரேலியாவில் தான் படமாக்கப்பட்டதா என்று தெரியாது. ஏதோ ஒரு வெளிநாட்டில்க}. வைசாகின் கமிஷனரின் கொலையாளியை கண்டுபிடிக்க டெபுடேஷனில் அங்கே DCஆகப் பொறுப்பேற்கிறார் துரைசிங்கம். வில்லன் ஆஸ்திரேலியாவில் இருந்து செயல்படுவதால் அங்கும் சென்று துப்புத் துலக்கி பெரிய சதியை அமபலப்படுத்தி இறுதியில் வில்லனையும் கொல்கிறார் “universal cop” {புதிய அடைமொழி அவருக்கு} துரைசிங்கம்.

ஆந்திராவில் நடக்கும் கதை ஆனால் அனைவரும் தமிழிலேயே பேசுவர் என்று ஒரு டிஸ்க்ளைமர் போட்டு விடுகிறார் ஹரி.

முதல் சீனில் இருந்து ஒரே விர் விர்ரென்று பறக்கின்றன ஆட்களும் வண்டிகளும். சூர்யா சண்டையிடும்போது பாதி நேரம் வானத்தில் தான் இருக்கிறார். ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டு என்னும் டயலாக்குக்கு ஏற்ப இன்ட்ரோ சீனில் இவர் அடிக்கும் ஆள் ஒரு எடை இயந்திரத்தில் விழ அது உடனே ஒன்னரை டன் எடை காட்டுகிறது! துரைசிங்கம் கதாப்பாத்திரத்தை தான் இந்தப் படத்திலும் செய்வதால் நடிப்பில் மாற்றமில்லை என்று நாம் குறை சொல்ல முடியாது. அதே சத்தமான மிரட்டும் டயலாக் டெலிவரி தான். பெரிய பிளஸ் பாயின்ட் சூர்யா உடம்பை ரொம்ப ட்ரிம்மாக வைத்திருப்பது, அது அவர் பாத்திரத்துக்கு மிகவும் தேவையானது. காக்கி உடையல்லாத மற்ற உடைகளும் அவருக்கு நேர்த்தியாகப் பொருந்துகின்றன

அனுஷ்கா உடல் பெருத்து விட்டது. துரைசிங்கம் மனைவியாக அவர் பாத்திரம் படத்தில் அதிகமில்லை. அவரை விட ஸ்ருதி ஹாசனுக்கு நிறைய ஸ்க்ரீன் டைம் கிடைத்திருக்கு. முன் படங்களில் இருந்ததை விட இப்படத்தில் அழகாக இருக்கிறார் ஸ்ருதி. நன்றாகவும் செய்திருக்கிறார். சிங்கம் 2 வில் ஹன்சிகா வந்த மாதிரி இதில் ஸ்ருதி. அனுஷ்காவுக்கு ஒரு டூயட், ஸ்ருதிக்கு ஒன்று. இருவருமே சூர்யாவை விட உயரம் ஆதலால் நெருங்கி ஆடும் எந்த நடன அசைவுகள் இல்லை.

பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். BGM இரைச்சல். {இசை – ஹாரிஸ்}. படத்தில் நிறைய கண்ணைக் கவரும் ஏரியல் வியு. ஒளிப்பதிவாளர் பிரியன் பாராட்டைப் பெறுகிறார். கனல் கண்ணனின் ஸ்டன்ட், விஜயனின் நல்ல எடிட்டிங் இவையிரண்டும் தான் திரைக்கதையில் எந்த சுவாரசியமும் இல்லாவிட்டாலும் படத்தை ஓரளவு நிமிர்த்தி வைக்கிறது.

காமெடி என்று சொல்லி சூரி அடிக்கும் கூத்து மரண மொக்கை. அவர் சீன்களை கட் பண்ணியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நகைச்சுவை நடிகர்களுக்கும், நகைச்சுவைக்குமே தமிழ் திரையுலகத்தில் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.

படம் நார்மல் ஸ்பீடில் எடுக்கப்பட்டு பாஸ்ட் பார்வர்டில் பார்ப்பது போல ஒரு பிரமை ஏற்படுகிறது, அப்படி ஒரு வேகம். திரையரங்கை விட்டு வெளியே வந்தால் உலகமே ஸ்லோ மோஷனில் இயங்குவது போல சில மணித் துளிகள் நமக்குத் தோன்றுகிறது. சிங்கம் 4 வராது என்று நம்புவோமாக!

singam-3-3-1

போகன் – திரை விமர்சனம்

bogan

ஜெயம் ரவியும் அரவிந்த் சுவாமியும் இணைந்து நடிக்கும் படம்! முதல் நாளே கமலா திரை அரங்கில் சக்சஸ் மீட் எல்லாம் வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களுக்கே தெரிந்திருக்கிறது அடுத்த நாள் எல்லாம் வைக்க வாய்ப்பே இருக்காதென்று. தனி ஒருவன் போலொரு படத்தை எதிர்பார்த்துப் போனால் தலைவலி தரும் ஒரு படத்தைப் பார்த்துத் திரும்பி வர வேண்டியதாகிவிட்டது. இயக்குநர் இலட்சுமணன். ரோமியோ ஜூலியட்டை விட மோசமான படம் கொடுக்க முடியுமா என்று நினைத்தவர்களுக்கு, கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் இயக்குநர்.

சிறந்த நடிகர்கள், அருமையான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் உருவம் மாறி ஆனா கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் {கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி} வில்லனாக ஜெயம் ரவியும், நல்லவனாக அரவிந்த் சுவாமியும், பிராமதமாக நடித்துள்ளார்கள். கதையின் ஆரம்பத்தில் நல்லவர் ரவி, வில்லன் அரவிந்த். ஒரு சின்னக் கதைக் கருவை வைத்து பக்கா திரைக் கதை மூலம் மாஸ் படத்தையும் தர முடியும், போகன் மாதிரி ஒரு கடுப்புப் படைப்பையும் தர முடியும், திரைக்கதை தான் முக்கியம். அதைப் புரிந்து கொள்ள தவறிவிட்டார் இயக்குநர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கதை, இயக்குநரை தேர்ந்தெடுக்கும் நடிகர்களும் எப்படி யோசிக்காமல் இப்படி கால்ஷீட் தருகிறார்கள் என்று புரியவில்லை.

முதலில் அரவிந்த் சுவாமியுடன் ஆரம்பிக்கிறது கதை. உடனே கட், ஜெயம் ரவியிடம் போகஸ். அதன் பின் அவர் ஹன்சிகாவுடன் ஆடிப் பாடுகிறார். பிறகு அரவிந்த் சுவாமி பீல் பண்ணுவாரேன்னு அவருக்கு ஒரு ஆடல் பாடல். அந்த நேரத்தில் ஆடியன்ஸ் எல்லாம் செல் போனை நோண்டி கொண்டிருக்க வேண்டும்.  பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமை, {டி.இமான்} ஆனால் ஒன்று கூட படத்துக்குத் தேவையில்லை.

இரண்டு மணி நாற்பது நிமிடங்கள் படம். சஸ்பென்ஸ் வெளிவந்த பிறகும் ஜவ்வு மாதிரி இழுத்திருக்கிறார் இயக்குநர். ஏழாம் அறிவில் நோக்கு வர்மம். அதில் அந்த சைனீஸ் கழுத்தை சாய்த்து எதிராளியைப் பார்த்து எதிரே இருப்பவர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வைத்துவிடுவார். இதில் அரவிந்த் சுவாமி கையில் பாபா முத்திரை பிடித்து கூடு விட்டு கூடு பாய்ந்து வேண்டியதை நடத்திக் கொள்வார்! படத்தின் கடைசி பதினைந்து நிமிடங்கள் எதுக்குனே தெரியாத அளவுக்கு அரவிந்த் சுவாமியும், ஜெயம் ரவியும் புரண்டு புரண்டு சண்டை போடுவார்கள். இதில் பயங்கர காமெடி என்னவென்றால் அரவிந்த் சுவாமி செத்து விட்டார் என்று நினைப்போம், ஓலைச்சுவடி தண்ணீரில் தூக்கி எறியப்படும், ஆனால் சடக்கென்று அரவிந்த் சுவாமி கண் முழிப்பார், ஓலைச் சுவடியும் கடல் பாறையில் போய் சிக்கிக் கொள்ளும். அதாவது பார்ட் டூவிற்கு அடி போடுகிறார்கள். நண்பர்களே உங்களை நோக்கித் தான் வருகிறது, தாழ்வான இடத்தை நோக்கி ஓடுங்கள்!

இதன் தயாரிப்பாளர் பிரபு தேவா. எதை நம்பி பணம் போட்டாரோ தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு நேர விரயம், பண விரையம், மூளை செல்கள் விரையம்.

bogannew