இது ஒரு சைக்கோ திரில்லர் படம். சைக்கோ எஸ்.ஜே.சூர்யா. அவரை கண்டுபிடித்து அவர் செய்யும் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது tech savvy ஹீரோவான மகேஷ் பாபு. மகேஷ் பாபு ஆண் அழகராக உள்ளார். நல்ல அமுல் பேபி முகம். எல்லா சமயத்திலும் ஒரே முக உணர்ச்சியுடன் இருப்பதை ஒரு வித ஜேம்ஸ் பாண்ட் தனமான நடிப்பு என்றும் பாராட்டலாம் அல்லது நடிக்க வரவில்லை என்றும் சொல்லலாம். நமக்கு அவரைப் பிடித்தால் முன்னது இல்லாவிட்டால் பின்னது. ஹீரோ செய்யும் சாகசங்கள் ஸ்பைடர் மேனும் இல்லை, சூப்பர் மேனும் இல்லை. பேட் மேன் ரகம்.
பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு தேவை ஏற்படும்போது அவர்களுக்கு அபாயம் ஏற்படும் முன்னரே உதவும் ஒரு வேலையை செய்கிறார் மகேஷ் பாபு. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கும் பெரிய வேலை அவருக்கு வருகிறது. அந்தக் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் அதன் பின் என்னவாகிறது, எவ்வளவு கேடுகள் நடக்கின்றன என்பதை வெள்ளித் திரையில் பார்க்கலாம். இப்படம் தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டிருப்பதால் நடனங்கள் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் உள்ளன.
எஸ்.ஜே.சூர்யா சைக்கோ பாத்திரத்துக்கு நன்றாக பொருந்துகிறார். அவர் பண்ணும் சேட்டைகள், கொலைவெறி தாக்குதல் எல்லாம் எரிச்சல் ஏற்படுத்தும் சிறந்த நடிப்பு! முழுக்க முழுக்க கெட்டவன் பாத்திரம். கதையை வளர்த்த வேண்டும் என்று பிடிபட்டும் தப்பிக்கிறார்.
ராகுல் {ரகுல்?} பரீத் நாயகி. பார்க்காமலே காதல், கடிதம் மூலம் காதல், நாக்கை அறுத்துக் கொண்டு காதல், இன்டர்நெட் காதல் எல்லாம் போய் இப்போ காதலே கிடையாது, தேவைக்கு செக்ஸ் என்று முன்னேறியிருக்கிறது ஹீரோ ஹீரோயின் கதைப் பாகம். நல்ல முன்னேற்றம்! Friends with benefitsஆம். இதில் கொடுமை என்னவென்றால் U/A செர்டிபிகெட் கொடுக்கப்பட்டும் மக்கள் குழந்தைகளுடன் படத்துக்கு வந்திருந்தனர். என் அருகில் உட்கார்ந்திருந்த எட்டு வயது சிறுமி அடுத்து என்ன வரப்போகிறது என்று இட்சிணியாட்டம் சொல்லிக் கொண்டே வந்தார். முருகதாஸ் போன்ற பெரிய இயக்குநர்களும் பெண்களை வெறும் bimbosஆக பயன்படுத்துவது வேதனைக்குரியது.
ஹீரோ தன் குடும்பத்தை சமயோஜித அறிவைக் கொண்டு காப்பாற்றும் காட்சி அருமை. வில்லனை வளைத்துப் பிடிக்க சீரியல் பார்க்கும் குடும்பத் தலைவிகளைப் பயன்படுத்தியதும் நல்ல யுக்தி. ஆனால் குண்டு பெண்கள் ஏறி, இறங்கி, குதித்து, சாகசம் செய்வது கொஞ்சம் நம்பும்படியாக இல்லை. நம்பகத் தன்மையைத் தள்ளிவைத்து விட்டு அந்தக் காட்சியை ரசிக்கலாம். ஆனால் அதுக்காக மிகப் பெரிய பாறை உருண்டு ஒடி வருவதை ஒரு பெரிய வண்டி மூலம் ஹீரோ தடுப்பதெல்லாம் ரொம்ப ஓவர். கடைசியில் கட்டடம் இடிபாடுகளிடையே நடக்கும் சண்டையும் அதே ரகம்.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஆனால் எடிடிங் ஸ்ரீகர் பிரசாத் படத்தின் நீளத்தைக் குறைத்து இருக்கலாம். இசை ஹாரிஸ் ஜெயராஜ்.
ஹீரோ வில்லனில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நமக்குத் தெரிந்திருந்தாலும் நம்மை சீட்டில் உட்காரவைப்பது சுவாரசியமான திரைக் கதை தான். அது இப்படத்தில் சில இடங்களில் நன்றாக உள்ளது, சில இடங்களில் காணவே இல்லை. வசனங்கள் சில இடங்களில் பளிச், அதே மாதிரி கடைசி மெச்செஜும். முருகதாசின் கடினச் சாவு விசிறிகளுக்கான படம் இது.