பாபி சிம்ஹா போலீசில் கண்காணிப்புத் துறையில் உள்ளார். சில தொலைபேசி எண்களை ஒட்டுக் கேட்க பாபி சிம்ஹாக்கு மேலதிகாரியிடம் இருந்து கட்டளை வருகிறது. இதில் தொடங்குகிறது படம். பாபி சிம்ஹா எடை கூடியுள்ளார் ஆனால் நடிப்பில் சோடை போகவில்லை. படத்தின் தொடக்கத்திலேயே பாபி சிம்ஹா திருட்டுத்தனம் செய்கிற போலிஸ் என்று தெரிகிறது. இந்தப் படத்தில் ஹீரோ என்பவனும் சற்றே வில்லத்தனத்துடன் இருப்பதால் வில்லன் பாத்திரம் இன்னும் பயங்கர கெட்ட வில்லனாகக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது இயக்குநருக்கு.
பிரசன்னா படு குயுக்தியான சிந்தனைகளையுடைய வில்லனாக வருகிறார். கதாநாயகன், வில்லன் இரண்டு பாத்திரங்களிலும் பிரமாதமாக வேறுபாடு காட்டி நடிக்கும் திறன் அவருக்குள்ளது. அருமையாக செய்திருக்கிறார். உடம்பை மிகவும் பிட்டாக வைத்துள்ளார். அவரின் இருபத்தி ஐந்தாம் படம் இது. வாழ்த்துகள்! அமலா பால் இவரிடம் பேஸ்புக்கில் நட்புப் பாராட்டி பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். நடிக்க நல்ல வாய்ப்புக் கொடுத்திருக்கும் பாத்திரம். நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். திரைக்கதையைவிட பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பாலின் நடிப்பே படத்தைப் பரபரப்பாக்கி நம்மை ஆவலுடன் பார்க்க வைக்கிறது.
ஆளை சரியாகத் தெரியாமல் அவர் இணையத்தில் காட்டும் முகத்தை வைத்து எத்தனை பேர் இந்த மாதிரி ஏமாந்துள்ளார்களோ என்று தான் படம் பார்க்கும்போது தோன்றுகிறது. அந்த அளவுக்கு உண்மைக்கு வெகு அருகில் பயணிக்கிறது கதை.
பாடல்கள் FMல் ரொம்ப் பிரபலம் அடைந்துவிட்டன. இரண்டு டூயட்கள் இனிமையாக உள்ளன. இசையமைப்பாளர் வித்யாசாகருக்குப் பாராட்டுகள். திருட்டுப் பயலே 2 முதல் பாகத்துக்குத் தொடர்பு இல்லாவிட்டாலும் நவீனத்தனமாக களவாணித்தனம் செய்கிறவர்கள் பற்றிய கதை தான் இதுவும்.
கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தாலும் பெண் சமூக ஊடகத்தில் மயிரிழையில் தடம் புரண்டு மாட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது என்பதை சொல்லும் விதம் நன்று. பிரமாதமான வசனங்கள் ஒன்றும் இல்லை. ஆனால் கதை நகர்த்தப்படும் விதம் சுவாரசியமாக உள்ளது. முக்கியமாக கணவன் மனைவி உறவில் ஏற்படும் சிக்கல் இதில் வித்தியாசமானது.
இயக்குநர் சுசி கணேசன் ஒரு துப்பறிவாளர் பாத்திரத்திலலும் வருகிறார். சின்ன பாத்திரம் தான் எனினும் முக்கியப் பாத்திரம். அவருக்கு சுத்தமாக நடிக்க வரவில்லை. வேறு யாராவது நடித்திருந்தால் திரைக் கதை/படம் மெருகேறியிருக்கும். திரைக் கதையில் சில இடங்களில் தெளிவு இல்லை. குழப்பத்தைத் தவிர்த்து இருக்கலாம்.
தன் வினை தன்னைச் சுடும் என்பதாக க்ளைமேக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர்க்கேத்த தண்டனை கிடைக்கிறது. பிரசன்னா க்மேளைக்ஸ் பகுதி சற்றே நம்பகத் தன்மை குறைவாக உள்ளது. இன்னும் நன்றாக முடித்திருக்க கொஞ்சம் யோசித்திருக்கலாம்.