பத்மாவத் – திரை விமர்சனம்

சித்தூர் ராணி பத்மினியின் சரித்திரக் கதை நாம் அறிந்ததே. அதை 3Dயில் பிரம்மாண்டமாக காணக் கிடைக்கிறது பத்மாவத் படத்தின் மூலம். நல்ல தயாரிப்பு. அரண்மனைகளும், ஆடை அலங்காரங்களும், சண்டைக் காட்சிகளும் 3Dயில் பிரமிப்பூட்டுகின்றன. இதில் திபிகா படுகோன் பத்மாவதியாகவே வாழ்ந்திருக்கிறார். ராணிக்குரிய கம்பீரம், அழகு, நடை உடை பாவனைகள் இவை அனைத்திலும் நாம் மதிக்கும் ஒரு சரித்திர நாயகியை நம் கண் முன் நிறுத்துகிறார். மேவாரின் ராஜபுத அரசன் ராவல் ரத்தன் சிங்காக ஷாஹித் கபூர் மிக அழகான, வீரமான ஆண்மகனாக அருமையாக நடித்திருக்கிறார். அல்லாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங். அத்தனை குரூரமான நடிப்பு. முதல் காட்சியிலேயே பால்ய நண்பனை அனாயாசமாக கொன்று பின் தன் திருமண விழாவில் மகிழ்ச்சியாக ஆடிப்பாடி இலகுவாக தான் எத்தனை பெரிய வில்லன் என்று நம் மனத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொள்கிறார். வரிசையாக கில்ஜியின் கொடூர செயல்களால் அவன் எப்படிப்பட்டவன் என்று காட்டிவிடுகிறது திரைக்கதை.

ரத்தன் சிங் பத்மாவதியை காட்டில் சந்திக்கும் முறையும் அவளின் வீர தீரத்தைக் கண்டு மையல் கொள்வதும் அழகாக உள்ளன. அவன் அரசன், அவள் சிங்கள் தேசத்து அரச குமாரி. அதனால் திருமணம் எளிதாக முடிகிறது. ஆனால் மேவார் ராஜபுத அரசனுக்கு அவள் இளைய ராணியே. பத்மாவதியை மேவார் அழைத்து சென்றவுடன் இவள் அழகையும் அறிவையும் கண்டு அரண்மனையில் உள்ள அனைவரும் மயங்குகின்றனர் ஆனால் மூத்த அரசிக்கு மனம் வாடுகிறது.

பார்யாள் ரூபவதி சத்ரு என்பதற்கு ஏற்ப {மனைவி அழகி என்றால் அதுவே எதிர்வினையாற்றும், சீதைக்கு அவள் அழகே சத்ரு} அவள் அழகே பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. ராஜ குருவே தீய எண்ணத்துடன் மாற பத்மாவதியின் அறிவுரையின் பேரில் ராஜ ராஜகுருவை நாடு கடத்துகிறான் அரசன். அதனால் அவனே எதிரியாக மாறி, நயவஞ்சகத்துடன் செயல்பட்டு மேவாருக்கே கில்ஜிக்கு வழி காட்டுகிறான். கிட்டத்தட்ட சூர்ப்பனகை செய்ததை இந்த ராஜகுரு செய்கிறான். இராவணன் இடத்தில் அல்லாவுதீன் கில்ஜி.

முதலில் விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் கதை பத்மாவதியும் ரத்தன் சிங்கும் மேவார் வந்த பிறகு தொய்வு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட இடைவேளை வரை சுமாராகவேப் போகும் படம் இடைவேளைக்குப் பிறகு வேகம் எடுக்கிறது. கணவனை கில்ஜியிடமிருந்து மீட்க பத்மாவதி போடும் கில்லியான யுக்தி, கில்ஜியின் மனைவி மேஹருனிஸ்ஸா செய்யும் உதவி, திருட்டுத்தனமா தில்லி கோட்டைக்குள் புகுந்த ராஜபுத வீரர்கள் அடையும் வெற்றி என்று சுவாரசியமாக போகிறது கதை. ஆனால் ஏமாற்றப்பட்ட கில்ஜி வெகுண்டெழுந்து பெரும் வேகத்தோடும் பெரும் படையோடும் வந்து அரசனை கொன்று கோட்டையை தகர்க்கிறான். ஜ்வாலையில் பத்மாவதி தீக்கு இரையாவதை கவிதையாய் வடித்திருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.

ஒளிப்பதிவு பெரும்பாலும் நன்றாக உள்ளது. தில்லி சுல்தான் அரியணை இருக்கும் தர்பார் மட்டும் இருளோ என்றிருக்கிறது. அது இஸ்லாமிய அரசின் இருளடைந்த ஆட்சியை குறியீடாக காட்ட இருக்குமோ என்னமோ! இசை வெகு சுமார். நான் பத்மாவத் படத்தைத் தமிழில் பார்த்தேன். வசனங்கள் நன்றாக இருந்தன. ஆனால் சில இடங்களில் கவிதைகள் வருகின்றன. அவை வெகு மொக்கையான மொழிப்பெயர்ப்பாக அமைந்திருந்தன. {இந்தியிலும் மொக்கையா என்று தெரியாது}.

இந்தப் படம் வெளியாவதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்று தெரியவில்லை. ராஜபுத்திரர்களையும் ராணி பத்மாவதியையும் எந்தத் தவறும் இல்லாமல் காட்டியுள்ளார்கள். கில்ஜியையும் கொடுங்கோலனாகத் தான் காட்டியிருக்கிறார்கள். எக்கச்சக்கப் பணம் செலவழித்து தயாரிக்கப்பட்டுள்ள படம் {இருநூறு கோடி ரூபாய்}. தயாரிப்பு நன்றாக இருந்தாலும் படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். முதல் பாதி ரொம்ப இழுவையாக உள்ளது. அதை குறைத்திருந்தால் இன்னும் ரசித்துப் பார்க்கலாம். தெரிந்த முடிவாக இருந்தாலும் கடைசி காட்சியில் மனம் பதைபதைக்கிறது. அது இயக்குநரின் வெற்றியே!

 

தானா சேர்ந்த கூட்டம் – திரை விமர்சனம்

 

மும்பையில் ஓர் நகைக் கடையில் உண்மையில் நடந்த ஒரு துணிகர ஏமாற்று சம்பவத்தை {பொய்யான CBI ரெயிட்} மையமாக வைத்து Special 26 என்ற இந்திப் படத்தின் தழுவல் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

மோசடி செய்யும் ஒருவனின் சாமர்த்தியமான செயல்களைப் பற்றிய படம் இது. இதைச் செய்வது ஒரு ஹீரோ என்பதால் அவன் செய்யும் செயல்களை நியாயப் படுத்த ஒரு பின்னணிக் கதை உள்ளது. ஆரம்பம் ஜோராக உள்ளது. சொடக்கு மேல சொடக்கு போட்டு தூளாக குத்தாட்டம் போடுகிறார் சூர்யா. முதல் ஏமாற்று வேலைக்குப் பிறகு அந்த ஆச்சரியத் தன்மை குறைந்து விடுவதால் அடுத்து ஏமாற்றும் சம்பவத்தில் அவ்வளவு சுவாரசியம் இல்லை. திரைக்கதையின் கோளாறு அது. சூர்யா மாதிரி ஒரு ஹீரோவை வைத்துக் கொண்டு அவரை பிரமாதமாக பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டாமா?  இன்னும் அழகாக விறுவிறுப்பாக திரைக் கதை அமைத்திருக்கவேண்டும். அதுவும் சிபிஐ ஆதிகாரிகள் இந்த ஏமாற்றும் கும்பல் யார் என்று கண்டுபிடித்தப் பிறகும் இடைவேளைக்குப் பிறகு அவர்களை பிடிக்காமல் திரைப்படம் தொடர்கிறது!

எண்பதுகளின் பிற்பகுதியில் நடக்கிறது கதை. ஆனால் அது தெளிவாகச் சொல்லப்படவில்லை. எண்பதுகளில் நடக்கிற கதை என்பதாக பொட்டிக் கடையில் தொலைபேசி, லாட்டரி டிக்கெட் விற்பனை முதலியன மூலம் காட்டப்படுகின்றன. செல் போன் இல்லை. வீட்டில், கடையில் இருக்கும் தொலைபேசி மூலம் எல்லா போன் உரையாடல்களும் நடப்பதால் செல் போன் வரும் முன் நடக்கும் கதை என்கிற அளவில் புரிந்து கொள்கிறோம் ஆனால் தெளிவாக சொல்ல மெனக்கெடல் இல்லை.

வேலையில்லா திண்டாட்டம் என்னும் காலகட்டம் என்றில்லாமல் வேலை கிடைக்க லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் என்று படம் தொடங்குவதாலும் கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது.அந்த மாதிரி சம்பவங்கள் இப்பொழுது தான் பெருகியுள்ளது. பணம் கொடுத்தும் நாளை வோட்டை வாங்குவார்கள் என்பது  போன்ற சில வசனங்கள் இடம் பெறுகின்றன. அவை மூலம் இந்தக் கதை அதற்கு முன்பு நடைபெற்றது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அந்தக் கதை தொண்ணூறு பிற்பாதியிலும் இராண்டாயிரத்தின் முற்பகுதியிலும் நடந்த கதை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தத் தெளிவு இந்தப் படத்தில் இல்லை.

சூர்யா படம் முழுவதும் எந்த இடத்திலும் சோடை போகாமல் நன்றாக செய்துள்ளார். அடுத்த பிளஸ் ரம்யா கிருஷ்ணன். அவர் இல்லை என்றால் படம் இந்த அளவு கூட சிறப்பாக இருந்திருக்காது. தேர்ந்த நடிகை! சிபிஐ உயர் அதிகாரியாக சுரேஷ் மேனன், நடிப்பு நன்று. கார்த்திக் ஸ்பெஷல் சிபிஐ அதிகாரியாக வந்து தன் அனாயசமான நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார். சோகம் என்னவென்றால் அவரை அவ்வளவு கெத்தாக ஆரம்பத்தில் காட்டிவிட்டு கிளைமேக்சில் அவர் பாத்திரத்தை சொதப்பி விட்டார்கள். அதே போல சூர்யாவின் தந்தையாக வரும் தம்பி ராமையா பாத்திரமும் எடுபடவில்லை. படத்தில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய சூர்யாவின் நண்பரான கலையரசன் பாத்திரம் வலுவாகவே இல்லை. அவனின் முடிவு தான் சூர்யாவின் பாதையை தேர்ந்தெடுப்பதற்கான தூண்டுதல். கலையரசன் எதற்காக போலீசில் சேரவேண்டும் என்று அவ்வளவு முயற்சி எடுக்கிறான் என்பதற்கோ கடைசியில் எடுக்கும் முடிவுக்கான காரணமோ சரியாக கொடுக்கப்படவில்லை. சூர்யாவின் கூட்டாளிகள் செந்தில், சத்யன், கீர்த்தி ரெட்டி இவர்களின் பங்களிப்பு நன்றே. கீர்த்தி சுரேஷ் இருக்கும் இடமே தெரியவில்லை. டூயட்டுடன் சரி.

படத்தின் பெரிய பலம் அனிருத். பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே நன்றாக அமைத்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் பாராட்டைப் பெறுகிறது.

க்ளைமேக்ஸ் நகைக் கடை சம்பவம் ரொம்ப குழப்பமாக சொல்லப்பட்டிருக்கு. ஒரு பரபரப்பும் இல்லாமல் ஒரு க்ளைமேக்ஸ் சம்பவம்! இந்திப் படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காது. அது ரொம்ப சுவாரசியமான கலகலப்பான திரைப் படம். மாற்றங்கள் ஏதும் செய்யாமல் அப்படியே எடுத்திருக்கலாம் விக்னேஷ் சிவன். சூர்யாவிற்கும் நமக்கும் ஒரு நல்ல படம் கிடைத்திருக்கும். நானும் ரவுடி தான் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் விக்னேஷ் சிவன் ஏமாற்றி விட்டார்.