ஜூங்கா – திரை விமர்சனம்

தமிழ் படம் 1, 2, இவற்றிற்கு டஃப் கொடுக்கும் ஒரு நல்ல சபூஃப் ஜூங்கா! நானும் ரவுடி தான் படத்தில் விசே தான் ஒரு ரவுடி என்று அலப்பறை பண்ணுவார். ஆனா நயன் சிம்பிளா நீங்க ரௌடி இல்லை ஒரு பிராட் என்று சொல்லிவிடுவார். அந்த மாதிரி இந்தப் படத்திலும் இவர் டான் என்று சொல்லிக் கொண்டாலும் காமெடி டானாக இருக்கிறார். சீரியஸா எடுத்துக்கற படம் இல்லை இது. லாஜிக் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம். ஆரம்பமே சூப்பர் ஸ்டாருக்குக் கொடுக்கற பில்டப் மாதிரி தொடங்குது, இவர் பாத்திரமும் முதலில் கண்டக்டர் தான்! அரங்கத்திலும் ஆரவாரம் அதிகம். விசில் பறக்குது!

கஜினி படத்தில் அசின் அவர் அப்பா டிராவலஸ் நடத்தி நொடித்துப் போய் கார்களை விற்றதால் மூணு அம்பாசிடர் கார் வாங்கின பிறகு தான் கல்யாணம் பணன்னும்னு சொல்றா மாதிரி விசேயும் அவர் அப்பாவும் தாத்தாவும் டானாக இருந்தும் வரவுக்கு மேல் செலவு செய்து ஒரு செட்டியாரிடம் அநியாயமாக தொலைத்தத் தன் அம்மாவின் சீதன சொத்தான திரை அரங்கை மீட்க சபதம் எடுத்து டானாக மாறுகிறார். அதற்காக சென்னை வந்து கம்மி ரேட்டில் கொலை, கடத்தல் எல்லாம் செய்கிறார். அதனால் தொழிலில் இருக்கும் மத்த டான்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். இதில் ராதா ரவி சின்ன வேடத்தில் பெருங்காய டப்பா டான் சங்கத் தலைவராக வந்து போகிறார். அந்தக் காட்சிகள் எல்லாம் நல்ல ஸ்பூஃப்!

விசே கெட்டப் காமெடியா இருக்கு. யார் இதை அவருக்கு செய்து கொடுத்து நல்லா இருக்குன்னு சொன்னதோ தெரியலை. ஆனா வடிவேலு மாதிரி காமெடி செய்யனும்னு நினச்சு இந்த கெட்டப்பை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். மடோன்னா செபாஸ்டியன் சில சீன்களிலேயே வந்து கழட்டி விடப்படுகிறார் (literally). கஞ்சப்பிசினாரி டான் விசே, அதனால் ஒரு டூயட் மட்டும் பாடிவிட்டு செலவு வைக்கும் காதலியை கழற்றி விடுகிறார். அடுத்து சாயிஷா. இவர் வெள்ளைத்தோல் வடிவழகி!  செட்டியாரின் (சுரேஷ் மேனன்) செல்ல மகள். நன்றாக நடனம் ஆடுகிறார். குறை சொல்ல ஒன்றும் இல்லை. செட்டியார் விசேவிடம் திரை அரங்கை தவணை முறையில் விற்க மறுக்க விசே உடனே பேரிசில் இருக்கும் மகளை கடத்தி செட்டியாரை பணிய வைக்க பேரிஸ் போகிறார். எந்தப் பேரிசுக்கு முதலில் போகிறார் என்பாதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்!

அவர் பேரிஸ் போகும்வரை செய்யும் காமெடிகள் சிரிப்பை வரவழைக்கின்றன, ஆனால் கஞ்சத்தனமான டானாக சென்னையில் செய்தவைகளையெல்லாம் மொழி தெரியாமல் யோகிபாபுவுடன் பாரிசில் தொடர்வது அபத்தமாக உள்ளது. ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரி நடித்து வந்த அவர் இப்படத்தில் செய்யும் சேட்டைகள் ஒரு மாற்றாக நன்றாக அமைந்திருக்கிறது. நன்றாக செய்திருக்கிறார். ஆனால் இயக்குநர் பாரிஸ் சென்ற பிறகு திரைக் கதையில் கோட்டை விட்டுவிட்டது படத்தின் சறுக்கல்.

படிக்காத, ஏழை, கஞ்சனான சுமார் மூஞ்சி குமார் டான் ஹீரோவுக்கும் பணத்திலே புரண்டு வளர்ந்த, படித்த, அழகி ஹீரோயினுக்கும் காதல் வருவதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்பது தமிழ் சினிமா பார்க்கும் அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும். அதே போல இடாலியன் மாஃபியா கண்ணில் மண்ணைத் தூவி காதலியைக் காப்பாற்றி, பிரெஞ்ச் போலிசிடமிருந்தும் செம கார் சேசிங் செய்து தப்பிக்கும் ஹீரோ நமக்கும் புதுசும் இல்லை. எப்படியோ ஹீரோ காதலியையும் கைப்பற்றி தன் சபதத்தையும் நிறைவேற்றி விடுவார்.

இவருக்கு அம்மாவாக சரண்யா. இவர் ப்ளாஷ் பேக்கை சொல்லி இவர் டான் குடும்பம் என்பதை தெரிவிக்கிறார். அதில் டாடா சுமோவை பிரபலப்படுத்தியதே இவரின் அப்பாவும் தாத்தாவும் தான் போன்ற வசனங்கள் நல்ல நகைச்சுவை. அவரை விட அவர் மாமியாராக விசேவின் டான் பாட்டியாக வருபவர் பின்னி பெடலெடுக்கிறார். விசே தோழனாக யோகி பாபு படத்தின் பலம்.

பாடல்கள் எல்லாம் ஏன் வருது எதுக்கு வருதுன்னு தெரியலை ஆனா இயக்குநர் சொன்ன நேரத்தில் கரெக்டா வருது. விபின் சித்தார்த்தின் பாடல்கள் ரொம்ப சுமார். பின்னணி இசையை நான் கவனிக்கவேயில்லை. அது பிளஸ்சா மைனஸா தெரியலை! டட்லியின் ஒளிப்பதிவு வெளிநாட்டு லொகேஷன்களில் அருமை!

முன்னெல்லாம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது பெரிய விஷயம், அதனால் படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டுக் காட்சிகளைக் கண்டு களிக்க நிறைய பேர் அப்படங்களுக்கு செல்வார்கள். அது மாதிரி இந்தப் படமும் பிரான்ஸ் ச்விட்சர்லேந்து என்று படமக்கப்பட்டிருப்பதால் கண்ணுக்குக் குளிர்ச்சியா காட்சிகளை கண்டு களித்துவிட்டு வரலாம்.

பிரெஞ்சு போலீசுக்கே அல்வா கொடுத்த விசே எதற்காக தமிழக போலீசில் மாட்டினார்? முதல் சீனே சிறைச்சாலை தான், ஆனால் அது கடைசி சீன் வரை புரியவில்லை. அவ்வளவு சிறப்பான திரைக்கதை! கோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களில் சில பகுதிகள் மிகச் சிறப்பாகவும் சில பகுதிகள் மிகத் தொய்வாகவும் இருக்கும். இந்தப் படத்தில் முன் பாதி நகைச்சுவை துணுக்குத் தோரணம், பின் பாதியில் கதை இல்லை. ஆனால் திரை அரங்கில் படத்துக்கு செம வரவேற்பு உள்ளது!

 

 

கடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்

 

கார்த்தி நடிப்பில் பட்டையை கிளப்பும் படம் கடைக்குட்டி சிங்கம். முழுக்க முழுக்க ஒரு பெரிய குடும்பத்தில் நடக்கும் உறவின் முறை சண்டை சச்சரவுகள், பாசப் பிணைப்பு, பரிதவிப்பு, ஏமாற்றத்தின் எதிரொலி, கடைசியில் எல்லாம் எப்படி அன்பின் முன் அடங்குகிறது என போகிறது திரைக்கதை. இயக்குநர் பாண்டிராஜூக்கும் சூர்யாவுக்கும் பசங்க 2 படத்தைத் தயாரித்ததில் நல்ல புரிதல் ஏற்பட்டதால் இந்தப் படத்தையும் சூர்யாவே தயாரித்துள்ளார் போலிருக்கிறது. சூர்யா தயாரிக்கும் எல்லா படத்திலும் அவர் தலையைக் காட்டுவதை வழக்கமாகிக் கொண்டுள்ளார். தவிர்க்கலாம். படத்தில் அவர் கல்விக்கு நிறைய செய்கிறார் என்று தலைமைத் தாங்க வந்து பரிசு கொடுப்பதெல்லாம் எவ்வளவு முறை பார்ப்பது. அடக்கி வாசிக்கலாம்.

படத்தின் ஆரம்பம் கொஞ்சம் கொடூரமாக உள்ளது. அதாவது ஆண் குழந்தை வேண்டுமென்று சத்தியராஜ் அக்கா தங்கையை கட்டியது போதாதென்று இன்னொரு பெண்ணையும் மணம் முடிக்க நினைக்கிறார். கதைக்களம் நடக்கும் காலம் தற்போது, ஏனென்றால் ஐ பேட் வைத்துக் கொண்டு தான் சத்தியராஜ் வளைய வருகிறார். அதனால் ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் முன் இவ்வாறு சத்தியராஜ் நடந்து கொண்டதாக இருந்தாலும் என்ன கண்றாவி இது என்று நினைக்கத் தோன்றுகிறது. பின் பாதியில் இந்த இரண்டு பெண்டாட்டி ப்ளஸ் ஏகப்பட்ட குழந்தைகளினால் ஏற்படும் இடியாப்ப சிக்கல் அந்தச் செயலின் தாக்கத்தை நன்றாக வெச்சு செய்வது ஒரு ஆறுதல்!

கார்த்தி விவசாயி. விவசாயத்தின் தேவை, ஜல்லிக்கட்டு, காளை மாடுகள், ரேக்ளா ரேஸ் போன்ற முக்கியமான விஷயங்களைத் தொட்டு சென்றாலும் படம் அவற்றைப் பற்றியது அல்ல. பாண்டிராஜின் இயக்கத்தில் வந்த பல படங்களிலும் அந்தக் குறை உண்டு. சமூக அக்கறையுடன் ஆரம்பிக்கும் படம் பின் வேறு மாதிரி பயணிக்கும். அதே மாதிரி இந்தப் படமும் முறைப் பெண்கள் இருவர் இருக்கும் போது இன்னொரு பெண்ணை காதலித்து எப்படி நவக்கிரகங்களாக முறுக்கி நிற்கும் உறவுகளை பாசத்தினால் கைக் கோர்க்க வைத்து அவர்கள் சம்மதத்துடன் தன் காதலியை கைப்பிடிக்கிறார் என்பதே கதை. இதில் ஜாதி, ஆணவக் கொலை ஆகியவையும் பேசப்படுகின்றன.

ஐந்து அக்காக்களுக்குப் பின் கடைக்குட்டி கார்த்தி என்பதால் ஏகப்பட்டப் பாத்திரங்கள். முதலில் தலையை சுத்தினாலும் பிறகு சீராக பயணிக்கிறது திரைக் கதை. நிச்சயமாக இந்தப் படத்தின் பலம் திரைக்கதையே. அடுத்து நடித்த அனைவரின் பங்களிப்பும். சத்தியராஜ் ஓவர் ஏக்டிங் செய்ய எத்தனையோ சந்தர்ப்பம் இருந்தாலும் அருமையான பண்பட்ட நடிகர் என்பதை படம் முழுவதும் பிரதிபலிக்கிறார். நல்லதொரு பாத்திரம், அதற்கேற்ற கச்சிதமான நடிப்பு. முதல் மனைவியாக விஜி சந்திரசேகர் கிளைமேக்சில் பிரமாதமாக செய்கிறார். பானுப்ரியா இரண்டாவது மனைவி, அவரும் தேர்ந்த நடிகர் என்பதால் இயல்பாக பாத்திரத்தில் பொருந்துகிறார்.

சரவணன், இளவரசு, மௌனிகா, யுவராணி, பொன்வண்ணன், ஜான் விஜய், மனோ பாலா, ஸ்ரீமன், என மகள்கள, மருமகன்களாக, இதர பாத்திரங்களாக வருபவர்கள் அந்தந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பாட்டியாக வருபவரும் அருமை! நாயகி சாயிஷா சைகால் நன்றாக செய்திருக்கிறார் ஆனால் முறைப் பெண்களும் நன்றாக தான் இருக்கிறார்கள், எது கார்த்தியை அவரிடம் ஹெவியா லைக் பண்ண வெச்சுதுன்னு சொல்கிற அளவுக்கு ஸ்பெஷலா அவரிடம் ஒன்றும் இல்லை. நகைச்சுவைக்கு சூரி. கார்த்தியுடன் பெரும்பாலான காட்சிகளில் அவரும் இருக்கிறார். காமெடி பரவாயில்லை. படத்தின் பின் பாதி ஓவர் மெலோடிராமா தான். ஆனால் இந்த மாதிரி குடும்ப சண்டைகள் நடக்கும் என்பதால் படத்துடன் ஒன்ற முடிகிறது. வசனங்கள் கூர்மை!

இவ்வளவு நல்ல நடிகர் பட்டாளத்தைத் தேர்ந்தெடுத்த பாண்டிராஜ் வில்லன் தேர்வில் சொதப்பியுள்ளார். சரியான சோதா வில்லன். அதற்குக் காரணம் பாத்திரப் படைப்பும் தான். யாருமே செய்யாத அளவு மோசமான முறையில் கார்த்தியை கொலை செய்ய திட்டம் போடுவதாக காட்டிவிட்டு சும்மா ஒரு அடியாள் பட்டாளத்தை ஒவ்வொரு முறையும் அனுப்பி கார்த்தியினால் பந்தாடப்பட்டு திரும்பி வருகின்றனர். குடும்பத்தைக் கலைக்க வில்லன் மேற்கொள்ளும் வழிகளும் பயங்கர சாதா. பாண்டிராஜ் இதற்காக மூளையை செலவழிக்கவில்லை. அது படத்தின் மிகப் பெரிய மைனஸ். பாடல்கள் எதுவுமே நன்றாக இல்லை. D.இமானின் பின்னணி இசை நன்றாக உள்ளது. வேல்ராஜின் ஒளிப்பதிவு ரேக்ளா ரேசில் அருமை. ரூபனின் படத்தொகுப்பு ஓகே, கொஞ்சம் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். படத்தின் தலைப்பில் ஒற்றுப்பிழை உள்ளது. கடைக்குட்டிச் சிங்கம் என்றிருக்க வேண்டும். ஏன் இந்தத் தவறு என்று தெரியவில்லை.

மாயாண்டி குடும்பத்தார் அந்தக்காலம், கடைக்குட்டி சிங்கம் இந்தக்காலம்.

 

மிஸ்டர் சந்திரமௌலி – திரை விமர்சனம்

இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியில் கதையை ஆரம்பிக்க ரொம்ப துணிச்சல் வேண்டும் இயக்குநர் திருவுக்கு. முதல் பாதி முழுக்க ஆமை வேகத்தில் ஊர்கிறது கதை(?)! இரண்டு கேப் கம்பெனிகளுக்குள் போட்டி என்பது மட்டுமே முதல் பாதியில் நாம் தெரிந்து கொள்வது. ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனியை அழிக்க எந்த அளவு போகிறது என்பது மறு பாதியில் தெரிகிறது. டூ ஃபார் ஒன் விலையில் கார்த்திக், கௌதம் கார்த்திக் நடிக்க ஒத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்பா மகன் பாத்திரம். கார்த்திக் இன்னும் இளமை மாறாமல், அவரின் சேஷ்டைகள் மாறாமல், டயலாக் டெலிவரி மாறாமல் அப்படியே இருக்கிறார். கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் நல்லதொரு முன்னேற்றம் காணமுடிகிறது.

கௌதம் கார்த்திக் ஒரு வளரும் குத்துச் சண்டை வீரர். உடற் கட்டும், சண்டைப் பயிற்சியும் அவரை முன்னிலைப் படுத்துகிறது. ஆனால் அதையெல்லாம் காட்டுவதற்கு வாய்ப்பு பின் பாதியில் தான். முதல் பாதியில் அப்பாவும் மகனும் பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் நம் பொறுமையை சோதித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அப்பா மகன் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. இயக்குநர் மகேந்திரன் சின்ன பாத்திரத்தில் வருகிறார். தெறி படத்தில் வில்லனாக நன்றாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. இயக்குநர் அகத்தியனும் கார்த்திக்கின் நண்பனாக ஒரு நல்ல பாத்திரத்தில் வருகிறார்.

கௌதம் கார்த்திக்கின் ஜோடி ரெஜினா கசான்ட்ரா டூயட்களில் நன்றாக கவர்ச்சி காட்டுகிறார். முதல் பாதியில் உப்புச்சப்பில்லாமல் அவர்களுக்குள் ஏற்படும் காதலுக்கு ஓரிரு டூயட்கள் துணை போகின்றன. நடிகை வரலட்சுமி, கார்த்திக்குக்கு திடீரென அறிமுகமாகிறார். இருவரும் நட்பாகிறார்கள். அவர்கள் அறிமுகமே பின் பாதியில் தான். நடக்கும் கொலை, திருட்டு இன்ன பிற குற்றங்களுக்கான காரண புதிரை விடுவிக்க வரலட்சுமி பாத்திரம் உதவுகிறது. வரலட்சுமி வெகு இயல்பாக நடிக்கிறார். அவரை தமிழ் திரையுலகம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளத் தவறுகிறது. நடிகர் சதீஷ் இருந்தும் காமெடி துளியும் இல்லை. ஓரிரு இடத்தில் கஷ்டப்பட்டு சிரிக்கலாம்.

ஒரு விபத்தால் கௌதமுக்கு பெரிய குறை ஏற்பட்டப் பின் அந்தக் குறையுடன் குற்றப் பின்னணியை கண்டுபிடிக்க சதீஷ் ரெஜினா கௌதம் கூட்டணி கையாளும் டெக்னிக் படத்துக்கு முதலுதவி செய்து பிழைக்க வைக்கிறது. இறுதியில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்தது படத்துக்கு ஊக்க மருந்தாக அமைகிறது. இவை மட்டும் இல்லையென்றால் படத்துக்கு விமர்சனமே எழுத தேவையிருந்திருக்காது.

இசை சாம் C.S, பின்னணி இசை சில இடங்களில் நன்றாகவும் சில இடங்களில் பழைய படங்களில் வரும் பின்னணி இசை போலவும் உள்ளது. ஒரு பாடல் ஏதேதோ ஆனேனே அதற்குள் வானொலியில் பிரபலமாகியுள்ளது. ஒளிப்பதிவு ரிச்சர்ட் நாதன், தண்ணீருக்கடியில் எடுக்கப்பட்ட டூயட்டில் அவரின் கை வண்ணம் மிளிர்கிறது. T.S.சுரேஷின் படத்தொகுப்பு நன்றாக உள்ளது. ஆனால் முன் பாதியை கத்திரிக்காமல் விட்டதற்கு அவரை மன்னிக்க முடியாது.

கௌதம் கார்த்திக் நன்றாக நடித்துள்ளார். சூர்யா, கார்த்திக் தவிர மற்ற வாரிசு நடிகர்கள் ஒருவரும் பேர் சொல்லும்படியாக தமிழ் சினிமாவில் முன்னணிக்கு வரவில்லை. இவருக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கார்த்திக் ஒரு பேட்டியில் நிறைய அப்பா மகன் கதைகள் வந்தும் அவையெல்லாம் பிடிக்காமல் இக்கதையைப் பிடித்துத் தேர்வு செய்ததாக கூறியுள்ளார். அப்போ அவர் கேட்ட மத்த கதைகள் எல்லாம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்று நாம் யூகிக்கலாம். இதில் அப்பா மகன் உறவில் நெகிழ்ச்சித் தரக் கூடிய காட்சிகள் உள்ளன ஆனால் இருவருக்கும் தீனி போடும் விதத்தில் திரைக் கதையில் ஒன்றும் இல்லை.

மௌன ராகம் பட மிஸ்டர் சந்திரமௌலி பெயரை வைத்துத் திரை அரங்கத்துக்கு அழைத்து வந்துவிட்டார்கள். ஆனால் இறுக்கையில் இருத்தி வைக்க முடியலையே!