ஆனந்த விகடன் – என் பார்வையில்

 

vikatan

என் பெற்றோர், அவர்களின் பெற்றோர் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம் விகடன் வாசகர்கள். அதாவது விகடன் ஆரம்பித்த காலத்தில் இருந்தே என்று வைத்துக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் விகடன் வாங்கியவர்கள் பலர் வீட்டிலும் இந்தக் கதை சொல்லப் பட்டுக் கேட்டிருப்பீர்கள், அதாவது விகடன் வந்தவுடன் யார் அதை முதலில் படிப்பது என்று சகோதர சகோதரிகள் இடையே போட்டி நடக்கும் என்பது தான் அது. எங்கள் தாத்தா வீட்டில் விகடன் வரும் நாளன்று என் மாமா புகை வண்டி நிலையத்துக்கே போய் புத்தகக் கட்டு பிளாட்பாரத்தில் போடப்படும் போதே வாங்கிக் கொண்டு வந்து, வரும் வழியிலேயே ஒரு பாலத்தின் சுவர் மீது உட்கார்ந்து முக்கியமான பகுதிகளைப் படித்து விட்டு அதன் பின் தான் வீட்டுக்கு இதழைக் கொண்டு வருவாராம். வீட்டில் என் அம்மா தான் கடைக் குட்டி. அதனால் அவருக்குப் படிக்கக் கடைசியில் தான் கிடைக்குமாம். இப்படி விகடனுக்கு அந்தக் காலத்தில் இருந்தே ஒரு சுவாரசியமான, ஜனரஞ்சகமான, குடும்பத்தில் அனைவரும் எவர் முன்னும் பிரித்து வைத்துப் படிக்கக் கூடிய ஒரு பத்திரிக்கை என்னும் மதிப்பு இருந்து வந்திருக்கிறது. எழுத்துத் துறையில் பல ஜாம்பவான்களை உருவாக்கியப் பத்திரிகை, பல புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வெளிவந்தப் பத்திரிகை என்னும் இரட்டைப் பெருமையையுடையது ஆனந்த விகடன்.

இதன் நிறுவநர் S.S.வாசன். அவர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்குக் கொண்டு வந்த வார இதழை அவர் பின் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் மகன் பாலசுப்பிரமணியன் இன்னும் அதிகமாக பரிமளிக்க வைத்தார். ஒரு ஆனந்த விகடன் பல குழந்தைகளை அல்லது பல சகோதர சகோதரிகளை பாலசுப்பிரமணியன் தலைமையில் பெற்றது. ஜூனியர் விகடன், அவள் விகடன், டாக்டர் விகடன், டைம் பாசுக்கும் ஒரு விகடன் என்று எல்லா துறைகளுக்கும் ஒரு விகடன் வந்துள்ளது. அதில் என்னை மிகவும் கவர்ந்தது ஜூனியர் விகடன் தான். முதல் இதழில் இருந்து போன வருடம் வரை வாரம் இரு முறை வந்த இதழ்களை அட்டைக்கு அட்டைப் படித்து வந்தேன். தமிழில் புலனாய்வுப் பத்திரிகையில்  தரமான முன்னோடி என்று சொல்லும் அளவுக்கு ஜூவி இருந்தது. துக்ளக் வார இதழ் 1970ல் ஆரம்பித்து இருந்தாலும் அது அரசியல் நையாண்டி பத்திரிக்கையாகவும் அரசியலை விமர்சிக்கும் பத்திரிக்கையாகவுமே இருந்து வருகிறது. ஆனால் ஜூனியர் விகடன் அவ்வாறு இல்லாமல் சமூகத்தில் நடக்கும் பல முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து ஆக்கப் பூர்வமான தீர்வுகளுக்கும் வழி வகுத்தது.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஜூனியர் விகடனின் செய்திகள் பரபப்பூட்டுகிற {sensationalism} வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகின. உருப்படியாகப் படிக்க விஷயங்கள் குறைய ஆரம்பித்தன. ஒரு நேரத்தில் ஜூனியர் விகடன் வரும் நாளில் இந்து நாளிதழை விட்டு முதலில் அப்பத்திரிக்கையை படித்து வந்த நான் இரண்டு நிமிடங்களுக்கு மேல் யோசிக்காமல் வாங்குவதை நிறுத்தும் முடிவையும் ஒரு நாள் எடுத்தேன். நடு நிலைமையாக அவர்கள் போட்டு வந்த செய்திகளின் நிறம் மாறியதும், அவர்கள் சொல்லுவதில் உள்ள நம்பகத் தன்மை குறைந்ததும் தான் அதற்கு முக்கியக் காரணங்கள்.

காலம் மாறிவிட்டது. அன்று கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாளையும், மணியனின் பயணக் கட்டுரைகளையும், சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதையையும், சுஜாதாவின் கனவு தொழிற்சாலையையும், கற்றதும் பெற்றதும் பகுதியையும், ஹாய் மதனையும் எதிர்ப்பார்க்க முடியாது தான். ஆனால் விகடனின் தரத்தை நிலை நிறுத்திக் கொள்ள அதற்குப் பதிலாக சுவாரசியமான, கருத்துச் செறிவான பகுதிகள் நிச்சயம் தேவை.  நல்ல இலக்கியத் தரம் வாய்ந்த தொடர் கதைகள் வாசகனை விகடனை வாரா வாரம் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும்.

வாசன் அவர்கள் விகடனில் குறுக்கெழுத்துப் போட்டிகள் வாராவாரம் வரும்படி வைத்திருந்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணமாகப் பரிசுத் தொகையும் அளித்து வந்தார். அது மாதிரி விகடன் முன்பு நிறைய போட்டிகள் வைத்து, பரிசுகள் கொடுத்து வாசகர்களை தன் வசப்படுத்தும். ஆனால் தற்போது விகடனோ ட்விட்டரிலும் பேஸ் புக்கிலும் மக்கள் பகிரும் கருத்துகளை அவர்களுக்கு எந்த சன்மானமும் கொடுக்காமல் அவற்றை வெளியிட்டு தங்கள் பத்திரிக்கையின் பல பக்கங்களை நிரப்புகிறது! அது தான் பத்திரிகை தர்மமா என்று எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய முக்கியமான வருத்தம் சமீப காலத்தில் விகடனில் நிலைத்தன்மை {consistency} இல்லை என்பதே. ஒரு வாரம் நன்றாக உள்ளது இதழ், மறு வாரம் சொங்கியாக இருக்கிறது. கட்டுரைகள், வாழ்க்கை அனுபவங்கள், பேட்டிகள் ஆகியவை சினிமாத் துறையைச் சார்ந்தவர்களுடையதாகவே உள்ளன. மற்ற துறைகளில் சாதிப்பவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். இன்னுமொரு பெரிய குறை எழுத்துப் பிழைகள் நிறைந்த கதை, கட்டுரைகள்! அதைத் தவிர எங்கும் எதிலும் ஆங்கிலக் கலப்பு.  இப்படி ஆங்கில சொற்களை தலைப்பாகவும், கட்டுரையின் நடுவிலும் புகுத்துவது  பாரம்பரியம் மிக்க ஒரு தமிழ் வார ஏட்டுக்கு அழகா?

மதுவினால் வரும் கேடு, பாரம்பரிய உணவு வகைகளின் முக்கியத்துவம், குடிநீரின்றி தவிக்கும் கிராமங்களின் நிலை, அத்தியாவசிய உணவுகளிலும் கலப்படம், ஈழத் தமிழர்களின் நிலை போன்ற பல சமூகத்துக்குத் தேவையான விஷயங்களை கட்டுரைகளாக கொண்டு வருகிறது விகடன். அந்தச் சேவைக்கு என் பாராட்டுகள். ஆனால் பல விஷயங்கள் வெறும் துணுக்குச் செய்திகளாக உள்ளன. இந்தக் காலத்து இளைய சமுதாயத்தின் கவனம் இவ்வளவு தான் {attention span} இருக்கும் என்று விகடனாகவே கணித்து அவ்வாறு வெளியிடுகிறதா என்று தெரியவில்லை. தமிழ்வாணனின் கல்கண்டு இதழை படிப்பது போல் உள்ளது.

திரை விமர்சனத்தில் விகடனை அடிச்சிக்க ஆளில்லாமல் இருந்த காலம் ஒன்றிருந்தது. அவர்களின் மதிப்பெண்களே அவார்டுகளாக இயக்குநர்/நடிகர்கள் நினைப்பர். நடுவில் திரை விமர்சனத்தின் தரம் படு மோசமாகப் போய் இப்பொழுது சற்றே இழந்த இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது.

தொடர் கதைகள் தான் அடியோடு வெளியிடுவதில்லை! சிறுகதைகளாவது சுவாரசியமானதாக வெளியிடலாம். எல்லாக் கதைகளும் ஒரே மாதிரி உள்ளன. எழுத்தாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதா அல்லது தேர்வு செய்பவரின் அளவுகோல் சரியாக இல்லையா? பல கதைகளைப் படிக்க ஆரம்பித்து பாதியோடு விட்டு விடுகிறேன். அதே போல பல சினிமாச் செய்திகளும் பயனற்றவையாக உள்ளன!

விகடன் இணையத்தில் காலூன்ற இன்னும் நிறைய மெனக்கட வேண்டும். நான் பேஸ் புக்கில் இல்லை. இணையத்தில் அவர்களின் சந்தாதாரராக இருந்து இப்போது துண்டித்து விட்டேன். ட்விட்டரில் அவர்களைத் தொடர்கிறேன். ட்விட்டரில் வெவ்வேறு ஹென்டில்களிலும் {சினிமா விகடன், ஜூனியர் விகடன் etc} இவர்கள் போடும் செய்திகள் ஈர்க்கவில்லை. தலைப்பை சுவாரசியமாக வைத்துவிட்டு உள்ளே செய்தியைப் படிக்கையில் சப்பென்றுள்ளது. மறுமுறை அம்மாதிரி இணைப்பை ஒரு புத்திசாலி திறந்து பார்ப்பானா? மேலும் பல முறை தவறான/தரமில்லாத செய்திகளை ட்வீட் செய்து பின் அழித்திருக்கிறார்கள்.

வலைத்தள செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில் தவறில்லை.  அது தான் புதிய யுகம். ஆனால் அதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க சரியாக பயிற்சி அளிக்கப்பட்ட ஒருவரை நியமித்தல் நன்று.

விகடனை பல விகடன்களாக ஆக்கியதனால் சுவாரசியம் குறைந்து விட்டதோ என்று தோன்றுகிறது. முன்பு விகடனில் பரணிதரனின் அல்லது ஸ்ரீ வேணுகோபலனின் ஆன்மிகப் பகுதி இருக்கும். இப்போ தனியாக அதற்கு சக்தி விகடன் வந்து ஆனந்த விகடனில் ஆன்மிகப் பகுதி போய் விட்டது. சுட்டி விகடன் வந்து விகடனில் சுட்டிகளுக்கான பகுதி போய் விட்டது. மருத்துவம், விவசாயம், சமையல், பங்குச்சந்தை, மோட்டார், தடம் எனப் பிரித்து மிச்சம் ஆனந்த விகடனில் இருப்பது சக்கையோ என எண்ணத் தோன்றுகிறது.

தனித் தனியாக ஒவ்வொரு விகடனை வாங்க எனக்கு அந்த அளவு ஒவ்வொருத் துறையிலும் ஆர்வம் இல்லை. ஒரே பத்திரிகையில் இவை அனைத்தும் கலப்படமாக வந்தால் அவியல் சுவைக்கும்! என்னால் விகடன் வாங்குவதை நிறுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் ஜூனியர் விகடனையும் ஒரு காலத்தில் இவ்வாறு தான் நினைத்தேன்.

vikatan1

பாலித் தீவு -இந்துத் தொன்மங்களை நோக்கி! @kanapraba வின் புத்தக ஆய்வு

bali

கானாபிரபாவின் எழுத்துக்கு நான் ரசிகை. அவரின் ப்ளாக் பதிவுகளை விரும்பிப் படிப்பேன். அதுவும் அவரின் பயணக் கட்டுரைகள் ரொம்பப் பிடிக்கும்.

மடத்து வாசல் பிள்ளையார் பதிப்பகத்தாரின் முதல் வெளியீடாக வந்துள்ள இப்புத்தகத்தை மிகுந்த ஆவலுடன் வாங்கிப் பார்த்தேன். புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் கண்ணைக் கவரும் வண்ணப் படங்களும், அழகிய வழவழாத் தாளில் அச்சும் பிரபாவின் taste for perfection and beautyஐக் காட்டியது.

“தன் சைக்கிளில் எனை இருத்தி உலகத்தைக் காட்டிய என் அப்பாவுக்கு” என்று அழகிய சமர்ப்பணத்துடன் எழுத்து ஆரம்பிக்கிறது. பாராவின் முன்னுரை புத்தகத்தின் மதிப்பை உடனே உயர்த்திவிடுகிறது,

பாலித் தீவு பயணப்பட செய்யும் ஏற்பாட்டில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பி வந்து சேரும் வரை நாமும் அவருடன் சேர்ந்து பயணிக்கிறோம் வெறும் 15௦ரூபாய் செலவில்.

பல வருடங்களுக்கு முன் நானும் என் கணவரும் பாலித் தீவுக்குச் சென்றிருக்கிறோம். இவர் புத்தகத்தைப் படிக்கும் போது அவர் எழுதியிருக்கும் சில இடங்களை நாங்களும் பார்த்திருந்ததால் மலரும் நினைவுகளாகவும் இருந்தது 🙂

இந்தப் புத்தகத்தின் சிறப்பு:

1. பாலிக்குச் செல்பவர்களுக்கு இது ஒரு டூர் கைடாக இருக்கும்.

2. பாலிக்குச் செல்லாதவர்களுக்கு இருந்த இடத்தில் இருந்தே அவ்வூரை பார்த்த ஆனந்தம் கிட்டும்.

3. குறிப்பாக இந்து ஆலயங்களும், தமிழ் கலாச்சாரமும் எப்படி அங்கு வந்தன என்பதை ஆய்வு செய்து தெரிவிப்பதால் சரித்திரத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு இப்புத்தகம் வெகு சுவாரசியமாக இருக்கும். தமிழ் மொழியும், சம்ஸ்கிருத மொழியும் கூட அவர்கள் மொழியில் கலந்திருப்பதை அவர் காட்டுகிறார்.

4. அவ்வூரில் இருக்கும் சில வினோத பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம், முக்கியமாகக் காபி, ஸ்பெஷல் காபி தயாரிக்கும் முறையை விளக்கியுள்ள இடம் LOL.

5. ஒவ்வொரு தகவலையும் முடிந்தவரை ஆதியோடு அந்தமாக கொடுத்திருக்கிறார். அதனால் நிறையக விஷயம் கற்றுக்கொள்ள முடிகிறது.

6. புத்தகத்தின் focus பாலியின் கலை, பண்பாடு. அதனால் பதின்ம வயதினருக்கும், பெரியவர்களுக்கும் இப்புத்தகத்தைப் பரிசாகத் தரமுடியும். விரும்பிப் படிப்பர்.

7. நிச்சயமாக பள்ளி லைப்ரரிகளில் இருக்க வேண்டிய புத்தகம். ஏனெனில் பாலியை ஒரு மாய உலகம் போலக் காட்டியுள்ளார் பிரபா. அதனால் பள்ளிக் குழந்தைகள் இப்புத்தகத்தைப் படித்தால் கண்கள் விரியக் கனவு காண ஆரம்பித்து விடுவது மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்குப் போய் பலதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டாகும்.

8. சிட்னி நூல் வெளியீட்டு விழாவில் இப்புத்தக விற்பனையின் மூலம் வரும் இலாபத்தை ஒரு நல்ல காரியத்துக்குப் பயன் படுத்துகிறார். அதைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் http://www.madathuvaasal.com/2011/07/blog-post.html

ஆதலால் புத்தகத்தை உடனே வாங்குவீர்! பயனடைவீர்! 🙂

சென்னையில் Discovery Book Storeலும் இணையத்தில் http://www.flipkart.com/bali-theevu-inthu-thonmangalai-nokki/p/itme6sr45f7mcjhn?pid=RBKE6SR4HHMTJVFM வாங்கலாம்.

வாழ்த்துகள் கானாபிரபா 🙂bali1

திருவண்ணாமலை கிரிவலம் – நூல் அணிந்துரை

 

 

girivalam2

சொ.மணியன், நா.மோகன கிருஷ்ணன் எழுதியிருக்கும் ‘திருவண்ணாமலை கிரிவலம்’ என்னும் ஆன்மிக புத்தகம் கிரி வலம் செய்ய விரும்போவோர்க்கு ஒரு நல்ல எளிமையான கையேடு. திருவண்ணாமலையின் பெருமையும் அங்கு சுற்றி இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய தொகுப்பும் படிக்கும்போதே அங்கே போய்விட்டு வந்த திருப்தியைத் தருகிறது.

திருவாரூரில் பிறந்தாலும், காசியில் இறந்தாலும் முக்தி. சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அப்படி பட்ட ஒரு தலத்தைப் பற்றியும் கிரி வலத்தின் முக்கியத்துவம் பற்றியும் அழகாக எழுதியுள்ளார்கள் நூல் ஆசிரியர்கள்.

கிரிவலம் என்றாலே ஒரு மலைப்பு வந்துவிடும், அதைப் போக்கி, எப்படி வலம் வரவேண்டும், வழியில் தரிசிக்க வேண்டிய கோவில்கள், அஷ்ட லிங்கங்கள் பற்றிய தகவல்களும் அளித்து நம்மை இந்தப் புத்தகம் கிரி வலத்துக்குத் தயார் செய்கிறது.

திருவண்ணாமலையின் இன்னும் ஒரு சிறப்பு அங்கு பல ஆசிரமங்கள் இருப்பது தான். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம் சூரத் குமார் ஆகியோரின் வரலாறுகளை ஆசிரியர்கள் மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார்கள். ஆசிரமங்கள் அமைந்திருக்கும் பகுதி, திறந்திருக்கும் நேரம், மற்ற தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

கிரிவலத்தை மையமாக எழுதிய புத்தகம் ஆனதால் கார்த்திகை தீபம் பற்றி இதில் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன். அது பற்றிய தகவலும் சிறிது சேர்த்திருக்கலாமோ என்பது என் எண்ணம்.

ஜெ.பியின் அருமையான கோட்டோவியங்கள் திருவண்ணாமலையை நம் கண் முன் கொண்டு நிறுத்துகிறது. பலப் பல ஓவியங்கள் – அண்ணாமலையார், விசிறி சாமியார், ரமண மகரிஷி, ஆசிரம சூழல், மலையின் பல வடிவங்கள், இவை புத்தகத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றது.

தங்கத் தாமரை பதிப்பகம்

சென்னை60002௦

விலை ரூ.25

girivalamback

நீங்களும் ஆகலாம் அப்பாடக்கர் Unleash the Appatucker in you – புத்தக மதிப்பீடு

vibrantsubbu

இமய மலையில் ஐஸ் வித்துவிடுவார் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள வைப்ரன்ட் சுப்பு! எனக்கும் ஸெல்ப் help புத்தகங்களுக்கும் வெகு தூரம். என்னையே புத்தகத்தைக் கையில் எடுத்தப் பின் கடைசி பக்கம் முடித்தப் பின் தான் கீழே வைக்கும்படி செய்த அவரின் வைப்ரன்ட் எழுத்தாற்றலும் செறிவான கருத்துக் கோவையும் பாராட்டுக்குரியது.

தலைப்பே very catchy! இராமயணத்தில் ரிஷ்யஸ்ரிஞர் என்று ஒரு முனிவர். அவரின் தமிழ் பெயர் கலைக் கோட்டு முனி. கலை என்றால் மான், கோடு என்றால் கொம்பு. அந்த முனிவரின் நெற்றியில் ஒரு சிறு கொம்புப் போல இருக்கும். அவர் மகா பெரிய அறிஞர். நாம் பேச்சு வழக்கில் பலமுறை அவன் தலையில் என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்று கேட்போம், அதாவது அவன் என்ன எல்லாம் தெரிந்த ஞானியா என்ற பொருளில். அதுவே இப்போ பேசும்போது அவன் என்ன பெரிய அப்பாடக்கரா என்று கேட்கும் வழக்கம் வந்துள்ளது. இரண்டு சொற்றொடருக்குமமே எப்படி அந்த சொல்வழக்கு வந்தது என்று நம்மில் பலபேருக்குத் தெரியாது ஆனால் கேட்பவருக்கு நாம் என்ன சொல்கிறோம் என்று கண்டிப்பாகப் புரிந்து விடும்.

அது மாதிரி அப்பாடக்கர் என்ற சொல்லும் பழக்கத்தில் வருவதற்கு ஒரு அழகிய காரணம் உள்ளதை இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளலாம். சென்னையில் வசிப்பவர்களுக்கு இந்த சொல் வெகு பிரபலம். ஆனால் மற்றவர்களுக்கு நடிகர் சந்தானம் சினிமாவில் பயன்படுத்தியதால் தெரிய வந்திருக்கும். அந்த வகையில் இதை பிரபலப் படுத்திய சந்தானத்துக்கு பதிப்பகத்தார் ஒரு புத்தகத்தை இலவசமாக அனுப்பிவைக்கலாம் 🙂

எவரையும் கவரும் எளிமையான எழுத்து இந்தப் புத்தகத்தின் முதல் ப்ளஸ் பாயின்ட். இரண்டாவது, சின்ன சின்ன real life உதாரணகள் மூலம் சொல்ல வந்தக் கருத்தை சுவாரசியமாக சொல்லியுள்ளார் ஆசிரியர் சுப்பு. The book has a very analytical approach. அதனால் படிப்பவர்களை சிந்திக்க வைத்து அவர் சொல்ல வந்ததை மனத்தில் ஏற்றுக் கொள்ள வைக்கிறது. There is no preaching. இப்படி செய் அப்படி செய் என்றால் படிப்பவர்கள் நீ என்ன பெரிய அப்பாடக்கரா? எனக்கு சொல்ல வந்துட்டான்னு புத்தகத்தை மூடி வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அந்த மாதிரி தொனி இல்லாமல் ஆழ்ந்த கருத்துக்களையும், நாம் வாழ்க்கையில் முன்னேற எப்படி நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதையும் சாதாரணமாக சொல்லி எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பதை படிப்பவர் முடிவுக்கு விட்டு விடுகிறார். இது நல்ல உக்தி.

இந்தப் புத்தகம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வயதுள்ளோருக்கு இந்தப் புத்தகம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இதை யார் வேண்டுமானாலும் படித்துப் பயன் பெறலாம். அவர் இன்று பிரபலமாக இருக்கும் பலரின் ஆரம்ப வாழ்க்கையை சொல்லி அவர்களின் முன்னேற்றத்தை விவரிக்கும்போது நம்மாலும் முயன்றால் இந்த நிலையை அடையலாம் என்கிற எண்ணம் சட்டென்று மனத்திற்குள் வந்து அமருகிறது.

உழைப்புக்குக் குறுக்கு வழி கிடையாது என்பதையும் மாற்றி சிந்திக்கும்போது வெற்றி எளிதாகிறது என்பதையும் புரிந்துகொள்கிறோம். இலக்கு என்ன என்பதை முதலில் நிர்ணயித்துக் கொண்டால் வழி எளிதாகிறது. இல்லையென்றால் நாம் செக்கு மாட்டைப் போல ஒரே இடத்தில் உழன்று கொண்டிருப்போம், எந்த முன்னேற்றமும் இல்லாமல்.

இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த ஒரு கருத்து, “நீங்கள் எங்கே பிறந்தீர்கள்; யாருக்குப் பிறந்தீர்கள்; எந்த நிலையில் பிறந்தீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் சாதனையும் வெற்றியும் அமைவதில்லை. ஆகவே அடுத்தவர்களைக் குறைசொல்வதை நிறுத்துங்கள்.”

இந்தப் புத்தகத்தின் பதிப்பகத்தார் “முன்னேர் பதிப்பகம்”. தரமான ஒரு புத்தகத்தை வெளியிட்டதற்கு ஒரு பாராட்டு பொக்கே 🙂 நாலு வரி நோட் பாகம் 1,2,3 க்குப் பிறகு இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். நல்ல விற்பனை ஆகி மேலும் நல்ல புத்தகங்களை வெளியிட வாழ்த்துகள்.

ஆசிரியர் வைப்ரன்ட் சுப்புவின் பெயர் காரணம் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தவுடன் புரிந்துகொண்டேன் 🙂 அவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

முன்னேர் பதிப்பகம் +91 (0)9900160925

munnerpub@gmail.com

author email: vibrantsubbu@gmail.com

விலை: Rs.75

bouquet

ஜாலியா தமிழ் இலக்கணம் by Freemason! :-) (இலவசக் கொத்தனார்)

elavasam

இரண்டு வார்த்தைகளில் @elavasam அவர்களின் “ஜாலியா தமிழ் இலக்கணம்” புத்தகத்தைப் பற்றி  விவரிக்க வேண்டும் என்றால், இப்படித்தான் சொல்லவேண்டும் “User friendly” 🙂

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்து மற்றப்படி இலக்கண இலக்கியங்கள் அறிந்திராதவர்களுக்கு ஒரு ready reckoner இந்தப் புத்தகம். முக்கியமாக எழுத்துப் பிழை வராமல் எழுத இப்புத்தகம் பெரிதும் உதவும். எளிமையாக ஆரம்பித்து சினிமாப் பாடல்களையும் பேச்சு வழக்கில் உள்ள உரையாடல்கள் மூலமாகவும் தமிழ் இலக்கணத்தை அல்வா சாப்பிடுவது போல சுவையாகச் சொல்லித் தருகிறார்.

புணர்ச்சி, குற்றியலுகரம், வலி மிகும் இடங்கள், மிகா இடங்கள், இரட்டைக் கிளவி, தொகை, எழுவாய், செயப்படு பொருள், பயனிலை, உருபு, போலி, இவையெல்லாம் முன்பு எனக்கு Greek and Latin தான். இப்பொழுது புத்தகத்தை ஒரு முறை படித்து ஓரளவு தெளிவு பெற்றிருக்கிறேன். இன்னும் சில முறை இந்தப் புத்தகத்தைப் படித்தால் நானே தமிழ் ஆசிரயராகவும் மாறிவிடுவேன் 🙂

Mother saw father wear the turban suddenly என்பது ராகு காலத்தை நினைவு வைத்துக் கொள்ள உதவும் ஒரு வரி. 7.30 to 9, 9 to 10.30 என்று ஆரம்பித்து 4.30 to 6 என்று ஒண்ணரை மணி நேரக் கணக்கை திங்கள், சனி, வெள்ளி, புதன், வியாழன், செவ்வாய், ஞாயிறு என்று அந்த ஆங்கில வரியின் முதல் சில எழுத்துகள் கொண்டு ஞாபகம் வைத்துக் கொள்வது போல இலவசக் கொத்தனாரும் நிறைய இலக்கண விதிகளை நினைவில் வைத்துக் கொள்ளும்படி சுலபமான வழிமுறைகள் சொல்லிக் கொடுத்திருப்பது இனிமை, சிறப்பு! 🙂 அட்டவணைகள் வேறு!

மேலும் ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் bulletin points ஆக அந்த அத்தியாயத்தின் சாராம்சத்தைக் குறிப்புகளாக நினைவில் வைத்துக் கொள்ளும்படி தந்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

விலை எழுபத்தைந்து ரூபாய் தான். கிழக்குப் பதிப்பகத்தார் வெளியிட்டு உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்துப் பயன்பெறலாம்.