#MeToo

பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டவர்கள் அந்தக் கொடுமையை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ சொல்லக் கூட கூச்சமும், பயமும், தயக்கமும் இருக்கும். இது தான் நிதர்சனம். இது ஏன் என்று உளவியல் மருத்துவர்கள் தான் விளக்க வேண்டும். ஏதோ சிலர் துணிந்து உறவினர்களிடம் சொல்லி சில சமயம் உதவி கிடைக்கும் பல சமயம் கிடைக்கா சூழ்நிலை தான் உலக நடைமுறை. அதனால் இந்த அவமானத்தை பல வருடங்கள் மனத்தில் பூட்டி பலர் அதை தங்களுடனே இருத்தி வைத்து மரணிக்கின்றனர். வெளியே வரும் உண்மைகள் வெகு வெகு குறைந்த சதவிகிதமே! இது ஜாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து நிற்கும் ஒரு கேவலமான நியதி.

இப்போ அமெரிக்காவில் நடந்ததையே உதாரணமாக சொல்கிறேன். நீதிபது Bret Kavanaugh என்பவரை சுப்ரீம் கோர்டுக்கு நீதிபதியாக அமர்த்த அந்நாட்டுப் பாராளுமன்றம் முடிவெடுக்கும் தருவாயில் Dr. Christine Blasey Ford (உளவியல் துறை பேராசிரியர், பாலோ ஆல்டோ பலகலைக் கழகம், கேலிபோர்னியா) என்பவர் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை வைத்து சுப்ரீம் கோர்டுக்கு அவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று கூறினார். அவர் நீண்ட testimony அளித்தும் FBIஐ வெள்ளை மாளிகை சரியான புலன் விசாரணை மேற்கொள்ள விடாமல் முக்கியமான Ford, மற்றும் Kavanaugh இருவரையும் விசாரிக்க விடாமல் தடுத்தது. அந்நாட்டுப் பாராளுமன்றம் Kavanaughஐ சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அவர் நியமனத்தை உறுதி செய்துள்ளது. போர்டை 15 வயதில் கற்பழிக்க Kavanaugh முயற்சி செய்தார். Ford வாயில் கையை வைத்து அவரை கத்தவிடாமல் வன்கொடுமை நடந்துள்ளது. அப்பொழுது கவானாகிற்கு 17 வயது. இது நடந்தது ஒரு மேல் நிலைப் பள்ளி விழாவில். போர்ட் senateல் testimony கொடுத்த போது அவரை குறுக்கு விசாரணை செய்தவர்கள் அவரிடம் நீ உன்னைக் கற்பழிக்க முயன்றது Kavanaugh என்று மறதியில் சொல்கிறாயா? எப்படி இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறாய்? வேறொருவரை இவர் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாயா, எப்படி இவர் தான் என்பது உன் நினைவில் உள்ளது என்று தான் கேள்விகள் கேட்டுத் துளைத்தார்களே தவிர அவள் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நினைத்து விசாரணை நடத்தவில்லை. இறுதியில் Kavanaugh சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிவிட்டார். அவர் வாழ்நாள் முழுவதற்குமான பதவி இது. இந்தக் குற்றச்சாட்டை போர்ட் பொது வெளியில் வைத்தபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் இவரை கேலியும் கிண்டலும் செய்து அவமானப் படுத்தினார். இது தான் வாழ்க்கையின் நிதர்சனம். இத்தனைக்கும் குற்றம் சாட்டுபவர் ஒரு முனைவர், ஒரு பெரிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்! இதை வெளியில் சொன்னதால் அவருக்கு கொலை மிரட்டல்கள் பல வந்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழவேண்டிய சூழ்நிலையில் தற்போது உள்ளார்.

இவ்வாறு பொது வெளியில் வந்து இப்படி தனக்கு நேர்ந்தது என்று பல வருடங்கள் கழித்து ஒருவர் சொல்லக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இதனால் என்ன தனிப்பட்ட பயன் அவர்களுக்கு? இப்படி தான் அவர்கள் பிரபலம் ஆகவேண்டுமா? இல்லை இதற்குப் பெயர் பிரபலம் ஆகுதல் என்பதா? இல்லை ஒருவர் மேல் தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சியினால் அபாண்டமாகப் பழிப் போட்டு தன் நிம்மதியான் வாழ்க்கை/எதிர்காலத்தை இழக்க ஒருவர் துணிவாரா?

பாலியல் வன்முறைக்குப் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள்/இளைஞர்களாக இருப்பினும் இதில் மட்டும் ஆண் பெண் இருவருமே சமம். இருவரையும் சரிசமமாகவே கேவலமாக சமுதாயம் பார்க்கும், உதவி செய்யாது. இந்த #MeToo இயக்கம் அமெரிக்காவில் தான் தொடங்கியது. அதன் பின் பாலிவுட்டில் நானா படேகர் மேல் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நம் நாட்டிலும் இது வலுப் பெற ஆரம்பித்தது.

இங்கே குற்றம் சாற்றப்பட்டவர்களை விட குற்றம் சாட்டுபவர்களை தான் சமுதாயம் தண்டிக்கிறது. அவரின் நிலை என்ன, ஓ சினிமாவில் இருக்கிறாரா அப்போ வேசி தான் (ஸ்ரீ ரெட்டி இதைத் தான் எதிர்கொண்டார்) இவள் என்ன இயக்குநரை, நடிகரைப் பற்றி குற்றம் சொல்வது? நடிக்க வாய்ய்புத் தருவார் என்று தானே படுக்கப் போனாள் இப்போ என்ன திடீர் ஞானோதயம்? இதே தான் கேரளா கன்னியாஸ்திரீக்கும் நடந்தது. ஏன் இத்தனை முறை பாலியல் தொடர்பு நடந்த பிறகு வெளியே வந்து சொல்கிறார்? அப்போ அது வரை அந்த ருசி தேவையாக இருந்ததோ போன்ற கேள்விகள் உண்மையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தான். இந்தக் கேள்விகளால் தப்பிப்பது யார் என்று யோசித்தீர்களா?

எப்பொழுதும் harass செய்கிறவர்கள் பவரில் இருப்பவர்கள். அதாவது மேலதிகாரியாகவோ, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களாகவோ, அவரை பகைத்துக் கொண்டால் வேலை வாய்ப்பில் முன்னேற்றத்துக்குத் தடை விதிக்க சக்தியுள்ளவராகவோ, நம்முடைய உறவினர்கள் எனில் தந்தை ஸ்தானத்தில் அல்லது தந்தையேவோ, மாமா, அக்கா புருஷன், கணவனின் சகோதரன், மாமனார் என்கிற நெருங்கிய உறவினர்களாகவோ தான் இருப்பார்கள். அவர்களை எதிர்க்க துணிச்சல் தேவை, குடும்ப ஆதரவு தேவை. குடும்ப உறுப்பினர்கள் செய்யும் பாலியல் வன்முறைகள் மற்ற உறவினர்களுக்குத் தெரியாமல் நடக்காது. ஆனாலும் உதவிக்கு வரவேண்டியவர்களே குடும்பம் உடைந்து விடும் என்று உதவ வரமாட்டார்கள். பின் எப்படி பாதிக்கப்பட்டவள் வெளியே வந்து தனக்கு நேர்ந்தக் கொடுமையை சொல்ல முடியும்? மேலதிகாரி எனில் அவனை எதிர்த்தால் வேலை போகும் அல்லது மேலதிக கொடுமைகள் நடக்கும். மாதச் சம்பளத்தை நம்பி குடும்பம் நடத்தும் பெண் எப்படி எதிர்ப்பது? இந்த தொழில் துறையிலேயே வேலை கிடைக்காதபடி செய்துவிடுவேன் என்று மிரட்டுபவரை எப்படி எதிர்ப்பது?

பின்னர் ஒரு நாள் எப்போதாவது நல்ல ஆதரவு கிடைத்த பிறகு வெளியே வந்து சொன்னால் ஏன் இவ்வளவு தாமதம்? நீ அந்த ஆபிசரோடு தானே எல்லா மீட்டிங்கிலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாய்? அப்போதே செருப்பை கழட்டி அடித்திருக்க வேண்டாமா என்கிற கேள்விகளைக் கேட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டவரை இன்னும் நோகடிக்கிறீர்களே தவிர உதவி செய்யவில்லை. இந்த எதிர்வினைகளுக்குப் பயந்து தான் இத்தனை நாள் அவர் வாய் மூடி இருந்தார். இதையே ஒரு ஆண் கேட்டால் கூட புரிந்து கொள்ளலாம் ஏனென்றால் அவனுக்கு பெண்ணின் நிலை புரியாது. ஆனால் கேள்வி கேட்பது பெண்களாக இருப்பின் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பாலியல் வன்கொடுமையை அனுபவித்து இருக்க மாட்டீர்கள் என்று கடந்து போவதா இல்லை அப்பெண்ணின் நிலையை உணரும் தன்மை இல்லாமல் போனதே என்று உங்கள் அறிவைக் குற்றம் சொல்வதா என்று புரியவில்லை.

பொது வெளியில் ஒரு பெண் நான் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று சொல்வதனால் வரும் பாதிப்புகளை முதலில் பட்டியலிடுகிறேன். இப்படி ஒரு பெண் சொன்னால் சராசரி ஆண்களும் பெண்களும் நினைப்பதை இங்கே பதிவிடுகிறேன்.

  1. எல்லாம் போய் படுத்திருப்பா, இப்போ என்னமோ பத்தினியாட்டம் வெளியே வந்து சொல்றா.
  2. ஏன் இத்தனை நாள் சொல்லலை, 5 வருஷம் முன்னாடி நடந்தது, 10 வருஷம் முன்னாடி நடந்தது இப்போ தான் சொல்ல நேரம் வந்ததா?
  3. பணம் கேட்டிருப்பா, படிஞ்சிருக்காது அதான் ஓபனா சொல்ல வந்துட்டா.
  4. அவனை எதுக்குத் தன்னோட திருமணத்துக்கு அழைப்பு கொடுத்தா? அப்போ மதிச்சு கூப்டுட்டு இப்போ மட்டும் ஏன் குத்தம் சொல்றா?
  5. அம்மாகாரி அப்பன்காரன் எல்லாம் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாங்க? நாலு அப்பு அப்பி பொண்ணை காப்பாத்தியிருக்க வேண்டாமா?
  6. எல்லார்கிட்டேயும் சிரிச்சு சிரிச்சுப் பேசுவா அப்படி இருந்தா எந்த ஆம்பளை தான் இப்படி கூப்பிட மாட்டான்?
  7. அவ உடையும் அவளும்! ஆபிசுக்கே ஸ்லீவ்லெஸ் தான் போட்டுக்கிட்டுப் போவா அதான் அவளுக்குப் பாலியல் தொந்தரவு வந்திருக்கு!
  8. எவ்வளவு விவரமா தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை விவரிச்சு எழுதியிருக்கா, படிக்கவே பிட்டுப் படம் பார்த்த பீலிங் வருது. அப்ப அனுபவிச்சிட்டு இப்போ வந்து குறை சொல்றா பாரேன்.

இவை தான் மக்கள் மனத்தில் ஓடும் என்று தெரிந்தும் அப்பெண் ஏன் துணிந்து வெளியே வந்து அவளுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்கிறாள்? பாதிக்கப்பட்டவள் மணமானவள் என்றால் கணவனும் அவன் குடும்பத்தாரும் அவள் வெளிப்படையாக பேசிய பின் மரியாதையோடு பார்ப்பார்களா என்பது மிகப் பெரிய கேள்வி. சாட்சிகள் வைத்து இக்குற்றங்கள் நடப்பதில்லை. அதனால் தான் இவை நிரூபிக்க இயலா குற்றங்கள் ஆகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணோ ஆணோ வாய் மூடி மௌனித்திருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். அப்படி இருந்தும் இவை அனைத்தும் தாண்டி ஒருவர் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார் என்றால் அது எதனால்?

  1. முதலில் சொன்ன அமெரிக்க நீதிபதி விவகாரத்தின் உதாரணம் மாதிரி ஒரு கெட்டவன் பலரையும் பாதிக்கும் ஒரு பதவியை அடைந்து மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்கிற நல்லெண்ணம்.
  2. குடும்ப ஆதரவு கிடைத்து அவர்கள் இதை வெளியே சொல் மற்றவர்களுக்கும் அவன் உண்மை முகம் தெரியட்டும் என்று ஆதரவு கரம் நீட்டுவதால்.
  3. சில சமயம் மனச்சிதைவு அதிகம் ஏற்பட்டு அவர்களே தாங்க முடியாமல் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் இதை வெளியே சொல்லியே தீருவேன் என்று முடிவெடுப்பதால்.
  4. சமூகத்தில் ஒரு நம்பகத் தன்மையான இடத்திற்கு வந்த பிறகு நான் சொல்வதை மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கும்போது உண்மையை பலரும் அறியட்டும் என்று சொல்வது.
  5. மிரட்டல் பயம் நீங்கும்போது. பலரும் blackmail செய்யப்படும் சூழ்நிலையில் தான் இருப்பார்கள். புகைப்படம் வீடியோ harass செய்பவன் வசம் இருக்கும். பெரும் பதவியில் இருப்பவர்களை தனியாக எதிர்கொள்ள முடியும் சூழல் வரும்போது.
  6. ஒரு குருட்டு தைரியம்.

ஒரே ஒரு நிமிஷம் பாலியல் குற்றச்சாட்டை முன் வைப்பவர் உண்மையாகத் தான் பேசியிருக்கிறார் என்று நம்பி அவர் பக்கத்து நியாயத்தைப் பாருங்களேன். அப்பொழுது குற்றம் சாட்டப்பட்ட மகானுபாவர் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு சமூகத்தில் பெரிய மனுஷன் என்கிற போர்வையோடு வளைய வருகிறார் என்கிற உண்மை பகீர் என்று உரைக்கிறது அல்லவா? இதேக் கொடுமை நம் வீட்டில் யாருக்காவது நிகழ்ந்து அப்பெண் பொது வெளியில் இப்படி மனச்சிதைவின் காரணமாக  போட்டு உடைத்திருந்தால் நீங்கள் சின்மையிக்கும் #MeToo வில் மற்ற பெண்களின் கதைகளுக்கும் ஆதரவு தராமல் கொடுத்த எதிர்வினையைத் தான் கொடுத்திருப்பீர்களா? உங்கள் வீட்டுப் பெண்ணை தள்ளி வைத்துவிடுவீர்களா? வேசி என்று அழைப்பீர்களா?

ஏதோ ஒரு சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தைரியம் வரும். இப்படி எல்லாம் எனக்கும் நிகழ்ந்திருக்குன்னு ஒருவர் வெளிப்படையா சொல்லும்பொழுது அவளே சொல்றா சின்னப் பெண், அவளுக்கு இருக்கும் துணிச்சல் கூட நமக்கு இல்லையே என்று தோன்றி சிலர் தங்களுக்கு நேரந்ததை பகிரலாம். அது தாமதமாகத் தான் நடக்கும். அத்தனை நாள் குற்றம் சாற்றப்பட்டவர்களுடன் தொழில் சார்ந்த தொடர்பு இருந்து கொண்டு இருக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு தான் கொடுமை இழைத்தவர்களை விட்டு வெட்டிக் கொண்டு விலகியிருக்கும் பேரு கிடைக்கும். பலருக்கும் அந்தக் கயவனோடே தொடர்பில் இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை இருந்தால் அது பாதிக்கப்பட்ட பெண்ணின் தவறல்ல. சமூக சூழ்நிலையின் நிர்பந்தம்.

பாதிக்கப்படவ்வர்களை குற்றம் சாட்டி பார்க்கும் நிலையிருக்கும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் குஷியாக பாலியல் வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டு பெரிய மனிதர்கள் என்று தான் வலம் வந்து கொண்டிருப்பார்கள். ஒரு பெண் தன் அனைத்தையும் தியாகம் செய்து ஒருவர் மேல் வன்கொடுமை குற்றம் சாட்டும்போது செவி கொடுத்துக் கேளுங்கள். நீதிமன்றத்தால் சாட்சியம் இல்லா குற்றங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. சமூகத்தில் நாமாவது அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். கெட்டவர்களின் தோலுரித்த அவர்களின் துணிச்சலுக்கு நன்றி சொல்வோம். குற்றம் சாட்டுபவரின் ஜாதி, செய்யும் தொழில், அன்னார மேல் நமக்கிருக்கும் பழைய பகை இவற்றை வைத்து பாதிக்கப்பட்டவரை இகழாதீர்கள். நேர்மையோடு அணுகுங்கள். அது மட்டுமே நம்மால் இயன்றது. அவர்கள் பட்ட துன்பத்தை நாம் வாங்கிக் கொள்ள முடியாது, இனி வருங்காலங்களில் அவர்கள் இதனை வெளிப்படையாக சொன்னதால் படப் போகும் துனப்த்துக்கும் நாம் பொறுப்பேற்கப் போவதில்லை. ஆறுதல் கூற மனம் இல்லாவிட்டாலும் இகழாமல் இருப்போம்.

பெண்மையை போற்றுவோம் என்று பேச்சளவில் நில்லாமல் மனத்தளவில் நினையுங்கள். உலகம் சற்றே மாற்றம் பெறும்.

காமாக்யா கோவில் – அஸாம்

Kamakhya-temple

என் தோழிகள் நான்கு பேர் காமாக்யா கோவில் சென்று வந்து அந்தக் கோவிலைப் பற்றிய சிறப்புகளை என்னிடம் பகிர்ந்தனர். மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. ஐம்பத்தோரு சக்தி பீடத்தில் ஒன்றானது இக்கோவில். அஸாம் மாநிலம் கௌஹாடி நகரில் உள்ள நீலாந்சல் மலையில் அமைந்துள்ளது இக்கோவில்.

தந்தை தட்சனால் ஏற்பட்ட அவமானத்தால் சதி தன் உயிரை மாய்த்துக் கொண்ட துக்கத்தில் சிவன் தன் காதல் மனைவியின் உடலைத் தாங்கிக் கொண்டு கோபமாகத் தாண்டவம் ஆடுகிறார். அதைத் தணிக்க விஷ்னு தன் சக்கரத்தை அனுப்பி உடலைப் பல துண்டங்களாக்குகிறார். அவை நூற்றியெட்டு இடங்களில் விழுகின்றன. யோனியும் கர்பப்பையும் விழுந்த இடமே இக்கோவில் இருக்கும் இடம். சதி சிவனை முதலில் கண்டு காதலித்த இடமும் இதுவே என்றும் சொல்லப்படுகிறது.

இக்கோவிலில் கர்பக்கிரகத்தில் தெய்வ விக்கிரகம் கிடையாது. பெண்ணின் யோனி மட்டுமே உள்ளது.  அதன் அடியில் கர்பப்பையும் உள்ளதாக நம்பிக்கை. தாய்மை, பெண்ணின் கருவுறும் சக்தி, தாய் மண், இயற்கை அன்னை, இவைகளின் அடையாளமாக இத்தெய்வம் போற்றி வணங்கப்படுகிறாள். சக்தியே காமாக்யாவாக வழிபடப்படுகிறாள்.

இக்கோவிலின் தனிச் சிறப்பு ஜூன் மாதத்தில் தேவிக்கு உதிரப் போக்கு ஏற்படுவதாக நம்பப் படுவது. அம்மாதத்தில் மட்டும் அருகில் ஓடும் பிரம்மபுத்திரா நதி சிவப்பாக மாறுகிறது. தீட்டு என்று மாதவிடாய் காலத்தில் பெண் தள்ளி வைக்கப் படுகின்ற இச்சமூகத்தில் இக்கோவிலில் இதைக் கொடுப்பினையாகவும், இந்தச் சக்தியால் பெண் கருத்தறிக்க முடிகிற பாக்கியத்தையும் போற்றி பெருமைப்படுத்துகிறது. ஜூன் மாதத்தில் அன்னைக்கு மாதவிடாய் ஏற்படும்போது எப்பொழுதும் நீரூற்று வந்துகொண்டிருக்கும் கர்ப்பகிரகத்தில் யோனியில் இருந்து வரும் நீர் சிவப்பு நிறமாக மாறுகிறது. இந்த சமயத்தில் அம்புவாச்சித் திருவிழா வெகு கோலாகலமாக நடை பெறுகிறது. மூன்று நாட்கள் கோவில் நடை சாத்தப்பட்டுப் பின் திறக்கப்படுகிறது. இவ்விழாவில் அகோரிகளும் தாந்த்ரிக வழிமுறையில் நம்பிக்கை உள்ளவர்களும் பெரும் திரளாக வந்து வழிபடுகின்றனர். பில்லி சூன்யத்தில் இருந்து விடுபடபவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். மானச பூஜா, துர்கா பூஜா இங்கு நடக்கும் வேறு சில திருவிழாக்கள் ஆகும்.

இங்கு கர்பக்கிரகம் தரை மட்டத்துக்குக் கீழே சிறிய குகை அறையாக அமைந்திருக்கிறது. ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தரிசனம் உண்டு. மூன்று செங்குத்தான படிகளில் இறங்கி சிறிய கும்மிருட்டான கர்ப்பகிரகத்திற்குள் சென்றால் இரண்டு பெரிய அகல் விளக்குகள் நடுவில் நாம் யோனியை தரிசிக்கலாம். செம்பருத்திப் பூக்களாலும் சிவப்புத் துணியினாலும் யோனி அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கே ஊற்றாக நீர் வந்துகொண்டே இருக்கிறது. குனிந்து வணங்கி அந்தத் தீர்த்தத்தை நம் தலையில் தெளித்துக் கொள்வதே பிரசாதமாகிறது. இந்த நீர் பல நோய்களை தீர்க்கும் அருமருந்து என நம்பப்படுகிறது.

நம் அனைத்து இச்சைகளையும் பூர்த்தி செய்கிறவள் காமாக்யா தேவி. இங்கு குங்குமமாக ஒரு வகைக் கற்களைப் பொடி செய்த செந்தூரப் பொடியைப் பிராசதமாக அளிக்கிறார்கள். இதை இட்டுக் கொண்டால் தேவியின் ஆசி பரிபூரணமாக நமக்கு அமைகிறது என்பது நம்பிக்கை. ஈரமான சிவப்புத் துணி முக்கியமானவர்களுக்குப் பிராசதமாகக் கிடைக்கிறது. இதை அம்புவாச்சி வஸ்திரம் என்று கூறுகிறார்கள். புஷ்பங்களையே காணிக்கையாக அளிப்பது வழக்கமாக இருந்தாலும் வெளியே ஆடு பலியிடுவதும் நடக்கிறது. நாம் எடுத்து செல்லும் பூக்கள்,தேங்காய் சிவப்பு ஜரிகை துணி முதலியவை அங்கு இருக்கும் பாண்டாவால் அன்னையின் மேல் சமர்ப்பிக்கப் பட்டு திரும்ப நம்மிடமே கொடுக்கப்படுகிறது. சமர்ப்பிக்கப்பட்ட தேங்காயை குகைக்கு வெளியே வந்ததும் அங்கிருக்கும் பாண்டா அதை உடைத்து நெற்றியில் திலகம் இட்டு அனுப்புகிறார். சில பக்தர்கள் வளையல்கள், பொட்டு, ஏன் லிப்ஸ்டிக் கூட அன்புடன் அன்னைக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

காமாக்யா பற்றிய முதல் கல்வெட்டு ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது. இக்கோவிலும் இஸ்லாமிய படையெடுப்புகளால் (ஹுசெய்ன் ஷா) 1498 அழிக்கப்பட்டுப் பின் கோச் வம்ச அரசர் விஷ்வசிங்கனாலும் அவருடைய மகன் நாராயணனாலும் திரும்ப 1565ல் கட்டப்பட்டுள்ளது.

kamakhya-templecrowd

திருப்பதி கோவில் மாதிரி இங்கும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சாதரண வரிசையில் நின்று தரிசனத்திற்குச் சென்றால் சராசரியாக ஏழு மணி நெரம் ஆகும். விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்கள், வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் இன்னும் அதிகம். சிறப்பு தரிசனமாக ஐநூறு ரூபாய் கொடுத்துச் செல்லலாம். ஆனால் அந்தக் குறுகிய மூன்று படிகளைக் கடந்து தரிசிக்க செல்லும் அதே படிகளில் தான் தரிசனம் முடித்துத் திரும்புவர்களும் மேலே ஏறி வரவேண்டியுள்ளதால் காக்கும் நேரம் அனைவருக்கும் அதிகரிக்கிறது.

மிகப் புராதனமான கோவில், மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகக் கருதப்படுகிறது. இக்கோவில் பெண்மையைப் போற்றும் கோவிலாக இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. நம் மதத்தில் எதுவும் விலக்கப்பட்டதல்ல. இயற்கை எதுவோ அதை அங்கீகரித்து, நேசிக்கும் பழக்கம் போற்றுதலக்குரியது ஆகும். பெண்ணின் சக்தி ஆக்கும் சக்தியாகும், அழிக்கும் சக்தியல்ல. பெண்மை போற்றுவோம்! பெண்மை போற்றுவோம்!

ஜெய் காமாக்யா மாதா!

Kamakhya Temple Picture 2

 

என் மாமியார் – தோற்றம் 23.04.1929 மறைவு 18.04.2017

ஆண்டும்மா என்று அன்போடு குடும்பத்தாரால் அழைக்கப்படும்  என் மாமியார் அவர் வீட்டில் மூத்த மகள், புகுந்த வீட்டில் மூத்த மருமகள். அவர் ஜபல்பூரில் வளர்ந்தவர். கொஞ்சம் வைதீகமான சென்னை வாழ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்குத் தனது பதினாறாவது வயதில் வாக்கப்பட்டார். அந்த வீட்டுப் பழக்க வழக்கங்களை அந்த இளம் வயதில்அவர் விரைவில் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. பிறந்த வீடும் புகுந்த வீடும் மக்கள் செல்வம் நிறைந்த வீடுகள். அதனால் சிறு வயது முதலே ரொம்ப பொறுப்பு அதிகம் அவருக்கு. அவர் திருமணமாகிப் போன போது அவர் கடைசி நாத்தனாருக்கு நாலு வயது தான். இந்தத் தலைமுறையில் பலர் பிள்ளை வரம் வேண்டி செயற்கைக் கருத்தரிப்பை நாடும் இவ்வேளையில், இவர் முதல் குழந்தையை உண்டாகியிருந்த சமயத்தில் அவரின் தாயாரும் உண்டாகியிருந்தார். அது ஒரு கனாக் காலம் :-}

சின்ன வயது முதலே பொறுப்பை இயல்பாக ஏற்றுக் கொண்டதனால் அவருக்குக் சுற்றமும் நட்பும் மரியாதையையும் இயல்பாகவே வழங்கியது. அனைத்து நாத்தனார்கள், மைத்துனர்கள் திருமணங்களை முன்னின்று நடத்தியது மட்டுமில்லாமல் அவர்களின் பேறு காலத்திலும் எல்லா விதத்திலேயும் உதவியாக இருப்பார்.  என் மாமனார் அப்பொழுது மத்திய அரசில் குமாஸ்தா வேலையில் தான் இருந்தார். பின்பு உழைப்பால் படிப்படியாக முன்னேறினார். அந்தக் கால வழக்கப்படி கூட்டுக் குடும்பத்தில் சம்பளத்தை முழுக்க அவரின் அப்பாவிடம் கொடுத்துவிட வேண்டும். தன் கைச்செலவுக்கும், தன் மனைவியின் கைச்செலவுக்கும் டியுஷன் எடுத்து உபரி வருமானம் ஈட்டினார் என் மாமனார். நான்கு குழந்தைகள் பிறந்த பிறகு அவருக்கு பெங்களூருக்கு மாற்றல் ஆகியது. நான்கு குழந்தைகளுடன் பெங்களூருக்குக் குடி போகிறவருக்கு அங்கே குடும்பம் அமைக்க அவரின் அப்பா சொல்ப பணமே கொடுத்தனுப்பினாராம். பெரிய குடும்பம், நடுத்தர வர்க்கம் என்றாலே எப்பொழுதும் பண நெருக்கடி தான்! என் மாமனாரின் வருமானத்தில் நாலு குழந்தைகளுடன் தனிக் குடித்தனமாக இருப்பது சிரமம் என்று இரண்டு பிள்ளைகளை என் மாமியாரின் பெற்றோர், மாமாக்கள் சில வருடங்கள் வளர்த்துள்ளனர்.

பெங்களூரு சென்று சிறிது காலத்திலேயே பெல்காமுக்கு மாமனாருக்கு மாற்றலாகிவிட்டது. பிள்ளைகள் எல்லாரையும் நல்ல பள்ளியிலிருந்து மாற்ற வேண்டாம் என்பதால் என் மாமியார் பெங்களூருவிலேயே தனியாக குடும்பத்தை நிர்வகிக்க என் மாமனார் பெல்காமில் தனியாக வசித்து வந்தார். என் மாமியாருக்கு உதவியாக அவரின் தம்பி குடும்பம் பெங்களூருவுக்கு வந்தது. உறவுகள் உதவுவதற்காக மாற்றல் வாங்கிக் கொண்டு வருவது போன்ற நிகழ்வுகள் இந்த மாதிரி பதிவுகளில் தான் இனி பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். என் கணவரை தன்னம்பிக்கை மிக்கவராக, தமிழில் ஆர்வமுள்ளவராக, பொறியியல் துறையில் சேர்ந்து படிக்க உந்துகோலாக இருந்தவர் இந்த மாமா தான்.

அந்தக் காலத்தில் விசேஷங்களோ துக்கங்களோ ஆள் பலம் அவசியம். ஏனென்றால் வெளியாட்களை நியமித்தால் அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். உறவினர்கள் தான் உழைப்பை எந்த பதிலுதவியும் எதிர்பார்க்காமல் செய்வார்கள். அதில் முதன்மையானவர் என் மாமியார். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே இவரின் தன்னலம் கருதா உழைப்பையே எதிர்பார்த்திருந்தன. எல்லா விசேஷங்களும் இவர் பங்களிப்பினால் மட்டுமே சிறப்படையும். மிகவும் புத்திசாலி. எதையும் திட்டமிட்டு செய்வார். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையையும் தன் பராமரிப்பினால் நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விடுவார். எப்படி செலவை குறைத்து நிறைவாக செய்யலாம் என்று தான் பார்ப்பார். என் அத்தை மகள் திருமணத்துக்கு வந்து இவர் ஓடியாடி செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் என் அத்தை இறந்து விட்டதால் தாயில்லா பெண் கல்யாணம் என்று சீர் சாமான் வாங்குவதில் இருந்து திருமணத்தில் உணவு பரிமாறுவது வரை உதவி செய்தார். அவரின் பிள்ளைகளை மிகவும் நன்றாக வளர்த்துள்ளார். மகன்கள் அனைவரும் வீட்டு வேலைகளை அருமையாக செய்வர். பெண் ஆணென பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் எல்லா வேலைகளிலும் நன்கு பயிற்சி அளிப்பார்.

முதலில் வாழ்க்கையில் சிரமப்பட்டாலும் பிள்ளைகள் எல்லாரும் நல்ல நிலைக்கு வந்த பிறகு அவருக்கு மகிழ்ச்சியான வாழ்வே. அந்த விதத்தில் என் மாமனார் மாமியார் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உழைப்பின் பயனை அவர்களால் பார்க்க முடிந்தது. என் மாமியார் தன் பள்ளி இறுதி வகுப்பை முடிக்காவிட்டாலும் தன் முயற்சியால் ஆங்கிலம், இந்தி, கன்னடம் கற்றுக் கொண்டு நன்றாகப் பேசுவார். சிறந்தத் தையல் கலை நிபுணர். அமெரிக்காவில் எங்களுடன் வாழ்ந்த போது என் மகளுக்கும் மகனுக்கும் ஹேலோவீன் காஸ்டியும் செய்து கொடுத்திருக்கிறார். {என் மகனுக்கு பேட்மேன், என் மகளுக்கு சின்டரெல்லா.} புது இடங்கள் சுற்றிப் பார்க்க, எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் அவருக்கு. அமேரிக்கா வந்திருந்த போது என் மாமனார் அமைதியாகப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் இவர் டிவியில் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து எது சுவாரசியமான நிகழ்ச்சி என்றும் என்னிடம் சொல்லிவிடுவார்.

சமையல் அறையை பார்த்தால் சமைக்கும் இடமா என்று தோன்றும். அவ்வளவு துப்புரவாக இருக்கும். ஒரு இடத்தில் எண்ணெய் பிசுக்கு இருக்காது. சமையல் செய்வதை அவர் ஒரு தவமாக மேற்கொள்வார். எது செய்தாலும் அப்படியொரு ருசி! பெரிய குடும்பத்தை நிர்வகித்ததால் இருபது பேருக்கு என்றாலும் அனாயாசமாக சமைத்து விடுவார். ஸ்ரீ ராம ஜெயம் தினமும் எழுதுவார். கையெழுத்து முத்து முத்தாக இருக்கும்.

அவர்களின் ஐம்பதாவது திருமண நாள் விழாவும், மாமனாரின் எண்பதாவது பிறந்த நாளும் விமர்சையாகக் கொண்டாடப் பட்டது. என் மாமனார் இறந்த பிறகு ஒன்பது வருடங்கள் எங்களுடன் இருந்து கொள்ளுப் பேரன்கள், பேத்திகளையும் கொஞ்சி மகிழ்ந்தார். என்பது வயதுக்கு மேல் குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பு ஒடிந்து அறுவை சிகிச்சைக்குப் பின் தன் விடா முயற்சியால் திரும்பவும் நன்றாக நடக்க ஆரம்பித்து 2 கிலோமீட்டர் வரை வாக்கிங் போவார். கடைசி இரண்டு ஆண்டுகளாக dementia வந்து அவரையும் மீறி உடல் நலக் குறைபாட்டினால் அவதிப்பட்டார். ஆனால் அவரின் நல்ல மனசுக்கு அவரின் நான்கு வாரிசுகளும் அவரை கடைசி வரை நன்கு கவனித்துக் கொண்டனர். இறுதி முடிவும் ரொம்ப சிரமப் படாமல் வந்தது.

சேவை மனப்பான்மையோடு கர்ம யோகத்தைக் கடைபிடித்து ஆச்சாரியன் திருவடியை அடைந்த அவருக்கு என் இதயம் கனிந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் பார்வையில் செல்வி ஜெயலலிதா

Image result for images of jayalalitha

பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. சில பெண்களின் வாழ்க்கை சிறு வயது முதலே போராட்ட வாழ்க்கையாய் அமைந்து இறுதி வரை போர்க்களத்திலேயே வீழும் வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒருவர் தான் நம் மாநில முதல் மந்திரி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

சிறந்த படிப்பாளி, நாட்டியத்தில் நன்கு தேர்ச்சிப் பெற்றவர், அழகும் அறிவும் ஒரு சேரப் பெற்ற நடிகையாகப் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தன் கேரியரை ஆரம்பித்தார். அம்மு என்று அவரை நெருங்கிய அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மென் மனத்தினராக இருந்தார். நடிக்கும்போது கூட செட்டில் தன் பகுதி முடிந்தவுடன் புத்தகமும் கையுமாக தான் இருப்பார், யாரிடமும் வம்புப் பேச்சு கிடையாது என்று அவருடன் நடித்தவர்கள் சொல்லுவர்.

இரண்டு வயதில் தந்தையை இழந்து ஸ்டெனோகிராபராக இருந்து பின் நடிப்புத் தொழிலுக்கு வந்த தன் தாயுடனும், அண்ணனுடனும் வளர்ந்தார். ஒரு கட்டத்தில் எந்த உறவும் இல்லாமல் சுற்றி இருந்தோர் அனைவருமே அவரை பயன்படுத்தி கொண்டார்கள்! நடிகையாக தான் வாழ்ந்த நாளில் ஒரு நொடி கூட தான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்று ஒரு வட இந்திய ஊடக பேட்டியில் {சிமி காரேவால்} சொல்லியிருந்தார். நன்றாக படிக்கும் ஒரு இளம் பெண்ணை, மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்த ஒருவரை வலுக்கட்டாயமாக நடிப்புத் தொழிலுக்கு அனுப்பியது அவரது தாய் சந்தியா. அது ஒரு சுயநலச் செயல். மகன் படித்து முன்னுக்கு வர மகளை பொருள் ஈட்ட அனுப்பினார். நடிகை சந்தியாவிற்கு அச்சமயத்தில் நடிப்பு வாய்ப்புகள் இல்லை, மகளை வைத்து நன்றாக சம்பாதிக்க முடியும் என்பதால் அவர் செய்த ஏற்பாடு இது. எங்கும் இருப்பது போல் இரட்டை நிலை. சமுதாயம் ஆண் உயர்ந்தவன் என்றும் பெண் தாழ்ந்தவள் என்றும் கூறி பேதப்படுத்துகிறது

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்

எட்டுமறிவில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காண் என்று கும்மியடி” என பாரதியார் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்துப் பாடிவிட்டுப் போய்விட்டார். ஆனால் அது நடைமுறையில் இன்று வரை முழுமையாக வந்தபாடில்லை 😦

சினிமாவில் நடிப்பது ஒரு வங்கிப் பணியோ, ஆசிரியர் பணியோ மாதிரி 9 to 5 வேலை கிடையாது. ஆண்களுடன் நெருங்கி டூயட் பாடுவதும், உடலைக் காட்டும் உடைகளை அணிவதும் ஒரு நடிகையின் வாழ்வின் இயல்பான ஓர் அங்கம். அதில் எத்தனை ஆண்கள் அவர் விருப்பத்திற்கு மீறி அத்து மீறீனார்களோ தெரியாது. ஒரு சமயத்தில் அவர் நடிகர் ஷோபன் பாபுவுடன் திருமண உறவில் இருந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும் ஒரு செய்தி பல காலம் உலவியது. அப்படி இருந்திருந்தால் நிச்சயம் இன்றைய ஊடகங்கள் அதை கண்டுபிடித்து அவர் மகனையோ மகளையோ இந்நேரம் வெளிக் கொண்டுவந்திருக்கும். ஆதலால் பிள்ளைச் செல்வம் இல்லை என்றே நினைக்கிறேன்.

தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும், ஆங்கிலம் பேசும் புலமையினாலும், எம்ஜிஆருடன் நிறையப் படங்களில் நடித்தப் பழக்கத்தினாலும், மேலும் அவருடன் நெருக்கமான உறவும் இருந்ததாக கூறப்பட்டதாலும் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தவுடன் அவரை தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஆக்கினார். அரசியலுக்கும் அவர் விருப்பபட்டு வந்தாரா என்று தெரியாது. அவருக்கு அந்தக் காலகட்டத்தில் நிறைய கடன் இருந்ததாக சொல்லப்பட்டது. அதை அடைக்க இந்தப் பணி உதவியதால் இதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கலாம். அதில் இருந்து தொடங்கியது அவரது அரசியல் வாழ்க்கை. எம்ஜிஆர் முதல் மந்திரியாக இருந்த பத்து வருட காலத்தில் படிப்படியாக அரசியலை இவர் நன்கு கற்றுக்கொண்டார்.

எம்ஜிஆர் இறந்த போது அவர் உடலின் தலைமாட்டில் சோகமே உருவாக அமைதியாக நின்றிருந்தார். ஆனால் அவரால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இறுதி ஊர்வல வண்டியில் இருந்து தள்ளி விடப்பட்டார். ஆனால் எம்ஜிஆர் இறந்த இரண்டே ஆண்டுகளில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனார். அவரின் சலியாத உழைப்பும் போராட்டக் குணமும் அவருக்குப் படிப்படியாக வெற்றிகளைத் தந்தன. அவரை கட்சி ரீதியாக பிடிக்காதவர்கள் கூட அவரிடம் இருக்கும் வைராக்கியத்திற்காக அவரை பிடித்தவர்கள் அநேகம் பேருண்டு.

கலைஞர் இந்திய அரசியல் சரித்திரத்தில் இடம்பெறப் போகும் மாபெரும் அரசியல் வித்தகர். அவரின் எழுபது, எழுபத்தைந்து வருட அரசியல் பயணத்தில் அவரை விஞ்ச எவரும் இல்லை. அப்படிப்பட்ட ஜாம்பவானையும் அவரது கட்சியையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவது எளிதன்று. அத்தகைய சாகசத்தை அவர் தனியாகப் பலமுறை நிகழ்த்தியிருக்கிறார்.

அரசியல் ஒரு சாக்கடை என்பது தான் பலரின் கருத்து. அதில் இருப்பவர்கள் பெரும்பாலும் ரவுடிகளும் அராஜகப் போக்கும் கொண்டவர்கள் என்பது பொது கண்ணோட்டம். அப்படிப்பட்ட அரசியலில் தனியொரு பெண்ணாக எந்த ஒரு ஆணின் துணையில்லாமல் தனித்துத் தலைமைப் பொறுப்பில் பல்லாண்டு காலம் தமிழகத்தை வழி நடத்தியிருகிறார். இது ஒரு மாபெரும் சாதனை.

‘‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்’’ (ப.,214)

என்கிற பாரதியார் பாடலுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.

வீட்டில் ஆண் குடித்து விட்டு அடிக்கும்போதும், பணம் கொடுக்காமல் சச்சரவு செய்யும்போதும், அதட்டி மிரட்டி ஆணாதிக்கத்தைக் காட்டும் போதும், பொது வெளியில் ஆண்கள் பெண்களை சீண்டும் போதும், இன்ன பிற எரிச்சலூட்டும் செயல்களை ஆண்கள் செய்யும்போதும் நம் முதலமைச்சரின் கெத்து, ஆண் வர்க்கத்தையே அடக்கி ஆளும் திறன், பெண் வர்க்கத்துக்கு எரியும் புண்ணின் மேல் வருடும் குளிர் காற்றாக இருந்தது. துணிச்சலில்  அவருக்கு நிகர்  எவருமே இல்லை. அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதே இந்தத் துணிச்சல் குணத்தை தான்.

எத்தனை தோல்விகள் வந்தாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சளைக்காமல் எதிர் கொண்டு போராடினார். சாவுடனும் 75நாட்கள் விடாமல் போராடி சாகா வரம் இவ்வுலகில் யாருமே பெறாததால் அந்தப் போராட்டத்தில் மட்டுமே அவர் வெற்றி காணவில்லை.

நான் அவர் பதவியில் இருந்தபோது செய்த முறைகேடுகளை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததை, தத்தெடுத்து அந்தப் பிள்ளைக்கு வெகு ஆடம்பரமாகத் திருமணம் செய்ததை, மக்களுக்கு இலவசங்களை அளித்ததைப் பற்றியெல்லாம் இங்கு நான் விமர்சிக்கவில்லை. இந்திய அரசியலில், ஏன் தற்போது டிரம்ப் தான் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என்னும் நிகழ்வுக்குப் பின், உலக அரசியலில் கூட இவ்வாறான முறைகேடுகள் எல்லாம் வெகு சாதாரணமப்பா என்று அனைவரும் கடக்கின்ற நிலையில் இவர் ஆட்சியில் நடந்த சில எல்லை மீறுதல்களை இங்கே இப்பொழுது பேச விரும்பவில்லை. அதனால் அவர் செய்த தவறுகள் எல்லாம் சரி என்றும் சொல்லவில்லை. இத்தருணத்தில் அவை முக்கியமில்லை என்றே கருதுகிறேன்.

அவர் உண்மையிலேயே தாயுள்ளம் கொண்டவர். உங்களால் நான் உங்களுக்காகவே நான் என்று அவர் ஒவ்வொரு முறை கூறும்போதும் அது அவர் உள்ளத்தில் இருந்து ஒலிக்கும் குரலே! அம்மா என்று அனைவரும் அவரை அழைப்பது மரியாதைக்காக மட்டுமல்ல உண்மையான அன்பினாலும் தான். சிலவற்றை மக்களிடம் திணிக்க முடியாது. அதிகாரத்தால் அன்பை விலைக்கு வாங்க முடியாது. அன்பையும், மரியாதையும் ஒருவர் தன் நடத்தையினால் மட்டுமே பெற முடியும். அதனால் தான் இலட்சக்கணக்கான மக்கள் அவருக்காக இத்தனை பிரார்த்தனைகளையும்  தானாக முன் வந்து செய்கின்றனர். அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா பேருந்துகள், அம்மா மருத்துவக்காப்பீட்டு திட்டம், ஆகியவை அரசாங்கம் வைத்தப் பெயராக இருந்தாலும் அவைகளை மக்கள் விருப்பத்துடனேயே அவ்வாறு அழைக்கின்றனர். அவரின் பெயரை வருங்காலம் முழுவதும் அவர் கொண்டு வந்த இந்த நலத் திட்டங்கள் சொல்லும். அம்மா என்றால் அன்பு தான்! அவர் புகழ் நிலைக்கட்டும்!

 

இராமானுஜர் பகுதி -6 நிறைவு பகுதி!

ramanujar13

முந்தைய இராமானுஜர் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5

சைவ மன்னனது சூழ்ச்சி

சைவ மன்னனின் ஆட்சி அப்பொழுது சோழ நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இராமானுஜர் இருக்கும் வரை சைவ சமயம் ஏற்றம் பெறாது என்பதை மன்னன் உணர்ந்தான். எனவே வஞ்சகமாக அவரை வரவழைத்துக் கொன்றுவிட திட்டமிட்டான். அதன்படி இராமானுஜரை அழைத்துவர ஏவலாட்களை அனுப்பி வைத்தான். நுண்ணிய அறிவுடை கூரேசனுக்கு மன்னன் எதற்காக ஆள் அனுப்பியிருக்கிறான் என்று புரிந்து விட்டது. அவர் இராமானுஜரிடத்துப் போய் ”உடனே இங்கிருந்துத் தப்பி சென்று விடுங்கள்” என்று கூறினார். “வைணவம் தழைக்கவும், அடியவர்களைக் காக்கவும் தேவரீர் உயிருடன் இருக்க வேண்டும்” என்று யாசித்தார். அதனால் அவரே உடையவரின் காவியுடையை அணிந்து கொண்டு திரி தண்டத்தையும் எடுத்துக் கொண்டு பெரிய நம்பியுடன் அரசனைக் காணக் கிளம்பினார். இந்த உக்தியை கூரேசர் சொன்னதும், மனம் பதைபதைத்து இராமானுஜர் முதலில் உடன்படவில்லை. ஆனால் வேறு வழியின்றி அவர் கூரத்தாழ்வாரின் வெள்ளை வேட்டியை அணிந்து கோவிந்தன் முதலான சில சீடர்களுடன் திருவரங்கத்தை விட்டுப் புறப்பட்டார்.

தன் முன் நின்ற கூரத்தாழ்வாரை இராமானுஜர் என்று எண்ணி அவரருக்கும் அவர் உடன் வந்திருந்த பெரிய நம்பிகளுக்கும் முதலில் தக்க ஆசனம் கொடுத்து அமர வைத்தான் சோழ அரசன். பின் சபையோருடன் விவாதம் செய்ய வைத்தான். கூரேசரும் நிறைய மேற்கோள்கள் காட்டி எப்படி நாராயணனே அனைத்து உயிர்களுக்கும் தெய்வம் என்று சொன்னார். ஆனால் நாலூரான் என்கிற அவனின் மந்திரி வந்திருப்பது இராமானுஜர் அல்ல கூரத்தாழ்வான் என்று அரசனிடம் கூறிவிட்டான். ஏனென்றால் அவன் கூரத்தாழ்வாரின் சீடர். அதனால் அவரை நன்கு தெரியும். இதனால் கோபம் அடைந்த அரசன் கூரத்தாழ்வார், பெரிய நம்பிகள் இருவரின்  கண்களையும் பிடுங்கி விடுமாறு ஆணையிட்டான். இதைக் கேட்டவுடன் கூரத்தாழ்வார் அவர்களுக்கு அந்த வேலையை வைக்காமல் தானே தன் கண்களைப் பிடுங்கிக் கொண்டார். அவர்கள் இருவரையும் காட்டுக்குள் அழைத்துச் சென்று காவலர்கள் பெரிய நம்பி கண்களை பிடுங்கி எறிந்தனர். அப்போதும் கூரேசர் மனத்திலும் பெரிய நம்பி மனத்திலும் இராமானுஜரை காப்பாற்றிய மகிழ்ச்சி தான் இருந்தது. அவர்கள் இருவரும் ஒரு பிச்சைக்காரன் உதவியுடன் திருவரங்கம் திரும்பும் வழியிலேயே பெரிய நம்பி பரமபதம் அடைந்து விட்டார். கொடுமைகள் பல செய்த சோழ மன்னனுக்குக் கண்ட மாலைத் தோன்றி கிருமிகள் அவன் கழுத்தை அழித்துக் கொல்ல, பெரும் துன்பத்துக்கு ஆளானான். அவனுக்குக் கிருமி கண்டன் என்ற பெயரும் நிலைத்து விட்டது.

பௌத்தர் வைணவராதல்

திருவரங்கத்தை விட்டுக் கிளம்பிய இராமானுஜர் இரண்டு நாட்கள் தொடர்ந்து இரவும் பகலும் நடந்து, சோழ நாட்டு எல்லையை அவரும் அவருடன் வந்த சீடர்களும் தாண்டினர். களைத்துப் போய் பசி, தாகம், குளிரும் வாட்ட சில பாறைகளின் மேல் படுத்து உறங்கினர். அவ்விடம் வேடுவர்களின் இருப்பிடம். அவர்கள் இவர்களுக்காகத் தீமூட்டி, தின்னக் கனிகளும் எடுத்து வைத்திருந்தனர். எழுந்தவுடன் இவர்களின் உதவியைக் கண்டு இராமானுஜர் நெகிழ்ந்து போனார். பின்னர் அங்கிருந்த ஒரு பிராமணர்கள் குடியிருப்புக்குச் சென்று அங்கு ஒருவர் வீட்டில் வயிறார உண்டு அனைவரும் களைப்பாறினர். அவர்கள் வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்து பின் அங்கிருந்து வடமேற்கு திசை நோக்கிக் கிளம்பினர். அதற்கு முன்பு தங்களுக்கு உதவிய அவ்வீட்டுக்குரிய ரங்கதாசருக்கு மந்திர தீக்ஷையும் அளித்துத் தன் சீடராக்கிக் கொண்டார். பின்னர் சாலக்கிராமம் என்னும் ஊரில் சில நாட்கள் தங்கி அடுத்து ஒரு நரசிம்ம ஷேத்திரத்துக்குப் புறப்பட்டார். அவ்வூர் அரசர் பெயர் விட்டலதேவர். பௌத்த மதத்தைச் சார்ந்தவர். ஆயிரக் கணக்கான பௌத்தர்களுக்கு அன்னதானம் செய்வதை தினப்படி வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மகள் ஒருத்தி இருந்தாள். அவளுக்குப் பிடித்திருந்த பேயை பலர் முயன்றும் ஓட்டமுடியவில்லை. அரசர் இராமானுஜரை தன் அரண்மனைக்கு அழைத்தார். இவர் உள்ளே வந்ததுமே அந்தப் பேய் அடுத்தக் கணம் ஓடிவிட்டது. இதனால் பெரிதும் மகிழ்ந்தார் அரசர்.

இராமானுஜரின் தெய்வீக ஆற்றலை உணர்ந்த விட்டலதேவர் வைணவ சித்தாந்தத்தைத் தனக்கு போதிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டார். அரசவையில் இருந்த பௌத்தப் பண்டிதர்களுடனும் வாதம் புரிந்தார் இராமானுஜர். இராமானுஜரை அவர்களால் வாதத்தில் வெல்ல முடியவில்லை. அதனால் அவரை நிந்திக்கத் தொடங்கினர். இதைக் கண்ட அரசர் கோபமுற்றார். சான்றுகளுடன் வாதம் புரிய முடியாவிட்டால் உடனே நிந்திக்கத் தொடங்குவது தவறு என்று சொல்லி அவர்களை அவையை விட்டு அகற்றினார். அவர்களும் அரசர் வைணவத்தைத் தழுவி விட்டார் என்று அறிந்து அகன்றனர். அச்சபையில் இருந்த பல பௌத்தர்களும் இராமானுஜரின் பேச்சால் ஈர்க்கப் பட்டு வைணவத்துக்கு மாறினார். அந்நாட்டு மக்களும் மாறினார். இவ்வாறு தான் செல்லும் இடம் எல்லாம் தன் சமயத்தை நிலைநாட்டி வந்தார் இராமானுஜர். தன்னை ஆதரித்து பௌத்த மதத்தில் இருந்து வைணவத்துக்கு மாறிய விட்டலதேவருக்கு “விஷ்ணுவர்த்தனர்” என்ற விருதினை வழங்கிப் பெருமை படுத்தினார் உடையவர்.

திருநாராயணபுரப் பெருமாள்

இராமானுஜர் பல ஊர்களுக்குச் சென்று திருநாராயணபுரத்தை அடைந்தார். அங்கு ஒரு நாள் காலை துளசி வனத்தை வலம் வரும்போது மண்ணில் புதைந்து கிடந்த திருமாலின் திருவிக்கிரகம் ஒன்று கிடைத்தது. அவ்வூர் மக்களிடம் காட்டியபோது அவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இஸ்லாமிய படை எடுப்பின் போது பல விக்கிரங்கள் சேதப்படுத்தப் பட்டதால் அதனில் இருந்து காப்பற்ற இப்படி ஒளித்து வைத்து விட்டனர் அவ்வூர் மக்கள். பின்னர் அன்றே ஒரு கூரையால் வேயப்பட்ட ஆலயம் எழுப்பப்பட்டு அவ்விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார் உடையவர். யாதவாத்ரிபதி என்ற திருநாமத்துடன் அப்பெருமாள், கோவிலில் குடி கொண்டார். வெகு விரைவில் கோவில் பெரிதாக மாறியது. பக்கத்திலேயே ஒரு குளமும் எழுப்பினார் இராமானுஜர். அதன் அருகில் வெள்ளை நிறத்தில் மணல் இருப்பதைப் பார்த்தார். அவ்வெண்மையான மண்ணே வைணவர்கள் திருமண் தரித்துக் கொள்வதற்குப் பெரிதும் பயன் பட்டது. திருவரங்கத்தில் இருந்து அவர் கொண்டு வந்திருந்த திருமண் குறைந்து கொண்டே இருந்த சமயம் இறை அருளலால் இது கிடைக்கப் பெற்றது.

பீ பீ நாச்சியார் (அல்லது) துலுக்க நாச்சியார்

ஒரு நாள் இரவு அவர் கனவில் யாதவாத்ரிபதி தோன்றி “எனக்குக் கோவில் எழுப்பி, குளம் அமைத்து, வைணவர்கள் இட்டுக் கொள்ளத் திருமண் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து சேவை செய்துள்ளாய். இன்னுமொரு வேலை உள்ளது. உத்சவ மூர்த்தி இல்லாததால் கோவிலுக்கு வர முடியாதவர்களுக்காக நான் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் இருக்கிறேன். தில்லி அரசனின் பாதுகாப்பில் இருக்கும் “இராமப்ரியரை” இங்கே கொண்டு வந்து சேர்த்துவிடு” என்று ஆணையிட்டார்.

தில்லி சென்று அரசனை சந்தித்தார் இராமானுஜர். இஸ்லாமிய மன்னன் ஆயினும் அவரை நல்ல முறையில் வரவேற்று தன் கஜானாவைத் திறந்து காட்டினான் பாதுஷா. அங்கு விக்கிரகம் எதுவும் இல்லை. மனமொடிந்த இராமானுஜருக்கு அன்று இரவு பெருமாள் கனவில் தோன்றி தான் அரசன் மகளிடம் இருப்பதாகச் சொன்னார். அடுத்த நாள் அரசனிடம் இவ்விஷயத்தைச் சொல்ல அவன் அதை நம்பவில்லை. இருந்தால் எடுத்துச் செல் என்று அந்தப்புரத்துக்கு எதிராஜரை அழைத்துப் போனான். போனதும் இராமப்ரியர் ஜல் ஜல் என்று நடந்து வந்து உடையவர் மடியில் அமர்ந்தார். “வாராய் என் செல்லப் பிள்ளாய்” என்று கட்டித் தழுவி கண்ணீர் உகுத்தார் உடையவர். அரசகுமாரி அங்கு இல்லாததால் நல்லதாகிப் போக உடனே உடையவரும் பெருமாளுடன் திருநாராயணபுரம் கிளம்பினார்.

ஆனால் அரசகுமாரிக்கு இராமப்ரியரைப் பிரிந்து ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை. பாதுஷாவின் புத்திரி பித்தம் பிடித்தவள் போல் ஆனாள். இராமானுஜரை பின் தொடர்ந்து ஓடி வந்தாள். இராமானுஜரும் இராமபிரியரும் இருந்த பல்லக்கை நெருங்கி தடுத்து நிறுத்தினாள். அவளின் கள்ளம் கபடமற்றக் காதலைக் கண்டு உருகினார் உடையவர். நந்தகுமாரனை நேசித்த நப்பின்னையின் சாயலை அவளிடம் கண்டார். அவளை இராமப்ரியருடன் பல்லக்கில் அமர வைத்துவிட்டு அவர் இறங்கிக் கொண்டார். கொஞ்ச தூரம் சென்றதும் பல்லக்குத் தூக்கிச் செல்பவர்கள் எடை குறைகிறது என்று கூற, பட்டுச்சீலையை விலக்கி இராமானுஜர் பல்லக்கின் உள்ளே பார்க்க அங்கே இராமப்ரியர் மட்டுமே இருந்தார், அரசகுமாரியைக் காணவில்லை. இராமப்ரியருடன் ஒன்றிவிட்டாள் என்பதை உணர்ந்த உடையவர் “ தேவி, உன் திருவுருவத்தை விக்கிரகமாக வடித்து பெருமாள் திருவடி நிழலிலேயே பீ பீ நாச்சியாராகப் பிரதிஷ்டை செய்வேன்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் உரக்கக் கூறினார் எதிராஜர். அவ்வாறே பின்பு செய்தும் முடித்தார்.

அவர் திருநாராயணபுரம் நெருங்கும் போது திருடர் கூட்டம் ஒன்று அவர்களைத் தாக்க, உடனே அந்தப் பகுதி சேரியில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை விரட்டி இராமப்ரியரைக் காப்பாற்றிக் கொடுத்தனர். அதற்குப் பிரதிபலனாக எதிராஜர் அவர்களுக்குத் “திருக்குலத்தார்” என்று திருநாமம் சூட்டி வருடந்தோறும் நடக்கும் பிரம்மோத்சவத்தில் மூன்று நாட்கள் அவர்களின் திருவிழாவாக இருக்கும் என்றும் அருளினார். அது இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமர் உகந்த திருமேனி

இந்நிலையில் பன்னிரெண்டு ஆண்டு காலம் திருநாரயணபுரத்தில் எழுந்தருளியிருந்த இராமானுஜர், பெரிய நம்பி பரமபதம் எய்ததையும் கூரேசர் திருமாலிருஞ்சோலையில் தனித்து வாழ்வதையும், மேய்ப்பனில்லாத ஆடுகள் போல் அடியார்கள் திருவரங்கத்தில் தனித்து விடப்பட்டதையும் அங்கிருந்து வந்த வைணவர் மூலம் கேள்விப்பட்டு கண்ணீர் உகுத்தார். அதற்கு மேல் இராமானுஜருக்கு திருநாராயணபுரத்தில் இருக்க முடியவில்லை. திருவரங்கம் செல்லத் தீர்மானித்தார். அங்கிருந்த அடியவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க உடையவர் தன் உருவத்தை விக்கிரகமாக வடிக்கச் செய்தார். அதில் தனது அருளை முற்றும் வைத்தார்.

“தமர் உகந்த திருமேனி” என்னும் திருநாமத்தோடு இன்றளவும் திருநாராயணபுரத்தில் திகழ்கிறது. அங்கு தினப்படி பூஜைகள் தவறாமல் நடக்கின்றான்.

திருவரங்கம் திரும்பினார்

திருவரங்கம் திரும்பிய போது அவருக்கு வயது நூறு இருக்கும். உடலும் தளர்ந்து விட்டது. அங்கு வந்து சேர்ந்த சில நாட்களில் பெரிய நம்பியின் இல்லத்துக்குச் சென்று அவரின் மகள் அத்துழாய்க்கும், அவரின் மகனும் இராமானுஜரின் சீடருமான புண்டரீகருக்கும் ஆறுதல் கூறினார். பின் கூரேசரைக் கூட்டிவர திருமாலிருஞ்சோலைக்கு ஒரு திருத் தொண்டரை அவசர அவசரமாக அனுப்பி வைத்தார்.

தன்னை வந்து தொழுது எழுந்த கூரேசரின் நிலையைக் கண்டு மனம் வெதும்பிக் கலங்கினார். ஆழ்வாரை அள்ளி எடுத்து ஆணைத்துக் கொண்டார் எதிராஜர். தன் கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினார். அவரை விட பெரிய அடியவர் எவரும் உண்டோ என்று சொல்லி கூரேசர் வைணவத்துக்காகவும் தனக்காகவும் செய்தத் தியாகங்களை நினைத்து உருகி அவர் திரும்பப் பார்வை பெற இறைவன் அருள வேண்டும் என்று விரும்பினார்.

காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் வேண்டி மீண்டும் கூரேசர் கண் பார்வை பெற வேண்டும் என்று அவரிடம் அறிவுருத்தினார். அனால் கூரத்தாழ்வார் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அகக் கண்கள் இனி தனக்குத் தேவை இல்லை என்று கூறினார். வைகுந்தனைக் காண ஞானக் கண்களே போதும் என்றார்.

ஆனாலும் இரண்டு நாட்களில் திரும்ப எதிராஜர் கூரத்தாழ்வாரை வரதராஜன் மேல் வாழ்த்துக் கவி பாட நிர்பந்தித்தார். குருவின் பேச்சை மீற முடியாமல் கூரத்தாழ்வார் “வரதராஜஸ்த்வம்” இயற்றி அதை அவர் சன்னதியில் பாடி முடித்தார். அத்திகிரியார் மனமகிழ்ந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்க கூரேசரோ தனக்குப் பார்வை வேண்டும் என்று கேட்காமல் தன் பார்வைப் போவதற்குக் காரணமாக இருந்த தன் சீடன் நாலூரானும் நற்கதி அடைய வேண்டும் என்று வரம் வாங்கினார். கெட்டவரோ நல்லவரோ குருவைச் சார்ந்த சீடன் நற்கதி அடைகிறான் என்னும் உயரிய வைணவ சித்தாந்தத்தை நடைமுறையில் செய்து காட்டினார் கூரேசர். விரைவில் அரங்கனின் அடி மலர்களில் யாசித்து பரமபதத்தைப் பெற்றார். அவருக்குப் பின் அவர் மகன் பராசரரை ஆச்சாரியன் ஆக்கினார் உடையவர்.

இவருக்குப் பின் உறங்காவில்லியும் எம்பெருமானார் எதிராஜர் திருவடியில் தலை வைத்து பரமபதம் போனார். அப்பொழுது இராமானுஜருக்கு ஏறத்தாழ நூற்றி இருபது வயது ஆகிவிட்டது.

அவரும் பரமபதம் புகும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்தார். தம் பிரிவைத் தாளாது தொண்டர்கள் தவிப்பார்கள் என்று உணர்ந்து சில காரியங்களை உடனே செய்தார். தன்னைப் போலவே தத்ரூபமாக ஒரு விக்கிரகத்தை வடிக்கச் சொல்லி அதை ஆரத் தழுவி அதனுள் தன் அருட்சக்தியை வைத்தார். “தான் உகந்த திருமேனி” என ஏற்றம் பெற்ற அந்த விக்கிரகத்தை தன் அவதாரத் தலமான ஸ்ரீ பெரும்பூதூரில் பிரதிஷ்டை செய்யுமாறு முதலியாண்டான் மகன் கந்தாடையாண்டனிடம் கூறினார்.

அவர் நாட்பட நாட்படத் தளர்வுற்று ஒரு நாள் தன் திருமுடியை எம்பார் மடியிலும் திருவடியை வடுக நம்பி மடியிலும் வைத்து வைகுந்தம் ஏகினார். திருமாலின் படுக்கையாகத் திரும்ப ஆனார். அரங்கன் அவரைத் திருப்பள்ளிப் படுத்த தன் வசந்த மண்டபத்தையே கொடுத்தார். அந்த இடத்திலேயே அவருக்கு ஒரு சன்னதி எழுப்பினர் அவருடைய சீடர்கள். “தானான திருமேனியாய்” திகழ்கிறது இன்று வரை.

குரு பரம்பரை தொடர் அறாத ஒரு பரம்பரை. அவர் நியமனம் செய்த எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள் மூலம் இன்றும் வைணவ மரபு செழித்தோங்கி வாழ்கிறது.

சீராரும் எதிராசன் திருவடிகள் வாழி

திருவரையில் சார்த்திய செந்துவராடை வாழி

ஏராரும் செய்யவடி எப்பொழுதும் வாழி

இலங்கிய முன்னூல் வாழி இணைதோள்கள் வாழி

செராததுய்ய செய்யமுகச் சோதிவாழி

தூமுறுவல் வாழி துணைமலர் கண்வாழி

ஈராறு திருநாம(ம்) அணிந்த எழில்வாழி

இனி திருப்போ(டு) எழில் ஞான முத்திரைவாழி!

ஸ்ரீ இராமானுஜர் திருவடிகளே சரணம்

இன்னும் ஒரு முக்கியக் குறிப்பு:  

இராமானுஜர் வலியுறுத்துவது என்ன? பரமனின் 1000 நாமங்களையும் சொல்லக்கூடத் தேவையில்லை, “நாராயணா” என்ற ஒரு திருநாமத்தையாவது (ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம் (அ) அட்சாட்சர மந்திரம், ரகசிய மந்திரங்கள் என்று சொல்லப்படும் மூன்றில் முதன்மையானது, மற்றவை துவய மந்திரம், சரம சுலோகம்) தினம் ஓதி உய்யும் (வீடு பேறு அடையும்) வழியை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் என்று நமக்கு அருளியிருக்கிறார்.

திருமந்திரத்தை வதரியாசிரமத்தில் (பத்ரிநாத்) நாராயணன் நரனுக்கு அருளினான். அவனே நரன் (சீடன்), அவனே நாராயணன் (ஆச்சார்யன்)!

மந்திர ரத்தினம் என்று போற்றப்படும் துவயத்தை வைகுந்தத்தில் தான் மார்பில் தரித்த பிராட்டிக்கு (இலக்குமி தேவிக்கு) பரமன் உபதேசித்தார்.

ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நமஹ!

சரம சுலோகத்தை பார்த்தசாரதியாக குருச்சேத்திரப் போர்க்களத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்தார். பகவத் கீதையில் இது உள்ளது.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

இந்த 3 மந்திரங்களையுமே நாராயணனே அருளியதால், அவன் குருபரம்பரையின் முதல் ஆச்சார்யன் ஆகிறான்! பரம்பொருளின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மை, முக்திக்கான வழிவகைகள், முக்தி என்ற இலக்கின் தன்மைகள், முக்திக்குத் தடையாக இருப்பவை ஆகிய 3 விஷயங்களை விளக்கும் சாரமாகவே இம்மூன்று ரகசிய மந்திரங்களும் (ரகஸ்யத்ரயம்) விளங்குவதாக மணவாள மாமுனிகள் அருளியிருக்கிறார்

விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் தான் அருளிய திருப்பல்லாண்டில்

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம் பொழி
வந்தொல்லைக் கூடுமினோ

நாடும் நகரமும் நன்கறிய நமோ
நாராயணாய வென்று
பாடு மனமுடைப் பத்தருள்ளீர், வந்து
பல்லாண்டு கூறுமினே!

திருமந்திரத்தின் மேன்மையை உணர்த்துகிறார்.

இதனாலேயே, பன்னிரு ஆழ்வார்களுக்கும், அவ்வாழ்வர்களை திருமாலுக்கும் மேலாகக் கொண்டாடிய, குருபரம்பரையின் நடு நாயகமாகத் திகழும், பகவத் ராமானுசருக்கும் வைணவத்தில் மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது!

அவ்வகையில், திருமால் மேல் பற்றும், பக்தியும் உள்ள எவரும் வைணவரே என்பதும் பல பிரபந்தப் பாசுரங்களில் காணக்கிடைக்கும் செய்தியே. இத்தகைய வர்ண பேதத்திற்கு எதிரான செய்தியையே எந்தை இராமனுச முனி திருக்கோட்டியூர் கோபுரத்தின் மேலேறி நின்று, தனது குருவின் ஆணைக்கும் எதிராக, உலகுக்கே உரக்க அறிவித்தார்!

ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம்!

ramanujar12

கிரேசி மோகனுடன் ஒரு இனிய சந்திப்பு

crazy1

கிரேசி மோகன் பேச ஆரம்பித்தாலே ஒரு வரிக்கு ஒரு நகைச்சுவை துணுக்கு வரும்படி பேசுகிறார். அது அவர் இயல்பு. கூட இருக்கிறவர்கள் கொடுத்து வைத்தவர்கள். எப்பவும் சிரிப்பு மழை தான். அவருடைய தாரக மந்திரமே, “Take it easy. Life is crazy”! பேசும்போதே இதை நிறைய தடவை பயன்படுத்துகிறார்.

வெகு வேகமாகப் பேசுகிறார். அதாவது அவர் எண்ணங்கள் சொற்களாக மாறும் முன் அடுத்த எண்ணம் வந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. பழக மிகவும் எளிமையாக உள்ளார். காலையில் எழுந்தவுடன் சாப்பிட ரசம் சாதம் இருந்தால் அதைவிட என்ன வேண்டும் ஒருவனுக்கு என்று கேட்கிறார்.

 

crazy2

அவர் வரவேற்பு அறையில் நிறைய வெற்றி விழா கேடயங்கள் அலங்கரிக்கின்றன. மந்தைவெளியில் உள்ள அவர் வீடு தான் அவருக்கு சொர்க்கம். வெளிநாட்டில் நாடகம் நடத்தச் சென்றால் கூட எப்போ மந்தைவெளி திரும்ப வருவோம் என்று சென்னையை விட்டுக் கிளம்பியவுடனே நாட்களை எண்ண ஆரம்பிப்பது அவர் வழக்கம் என்று அவர் தம்பி கிரேசி பாலாஜி கூறுகிறார்.

அதற்கு கிரேசி மோகன் சொல்கிறார்: எனக்குக் கோடம்பாக்கம் போனால் கூட home சிக்னெஸ் வந்துவிடும். எல்லாமே எனக்கு மைலாப்பூர் மந்தவெளி தான். நான் படித்தது P.S. ஹை ஸ்கூல், விவேகானந்தா காலேஜ், கிண்டி இஞ்சினியரிங் காலேஜ். எங்க பாட்டி நான் கிண்டி இஞ்சினியரிங் காலேஜ் சேர்ந்த போது, விவேகானந்தா காலேஜிலேயே இஞ்சினியரிங் படிச்சிடு டா கிண்டி வரைக்கும் போக வேண்டாம்னு சொல்லியிருக்காங்கன்னா பார்த்துக்கங்களேன். நான் கலைத் துறையில் வளரக் காரணமா இருந்த K.பாலச்சந்தர் சாரும் கமல் சாரும் கூட மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை தான். மைலாப்பூரை  My love பூர் என்று தான் சொல்வேன்.

நீங்கள் எழுதுவதற்கு யார் அல்லது என்ன உங்கள் inspiration?

நான் நிறைய படிப்பேன். வியாசரை மறந்து போவோம். ஆனா மகாபாரதத்தை மறக்க மாட்டோம். சின்ன வயசில் இருந்தே நிறைய படிப்பேன். ல.ச.ரா, கி.வா.ஜ, நா.பார்த்தசாரதி, கல்கி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் எல்லார் எழுத்தும் படிப்பேன். என் மனைவி இரவில் படுக்க வரும்போது என்னை சுத்தி படுக்கைல இருக்கிற புஸ்தகங்களை எல்லாம் நகர்த்தி வெச்சுட்டு அவங்க இடம் பண்ணி தான் படுத்துப்பாங்க. என் நண்பன் சு.இரவி தான் எனக்கு கம்பன், காளிதாசன், காளமேகம் இவர்களை அறிமுகம் செஞ்சு வெச்சான். இவங்க தான் எனக்கு inspiration.

நல்ல ரசனையுள்ளவன் அனைத்து எழுத்தாளர்களையும் படிப்பான். என் எழுத்து தான் வேதம்னு என்னிக்குத் திமிர் வந்துச்சோ போச்சு! உடம்புல தொப்பை விழுந்தா ஜிம்முக்குப் போய் தொப்பையை குறைச்சுக்கலாம். மனசுக்கு தொப்பை விழுந்தா ரொம்ப ஆபத்து. அது வராம இருக்க நிறைய படிக்கணும்.

நீங்க படிக்கிற புத்தகங்கள் எல்லாம் சீரியஸ் ரகமா இருக்கே. எப்படி நகைச்சுவையா எழுதறீங்க?

இப்போ நான் நிறைய ஆன்மிகப் புஸ்தகங்கள் தான் படிக்கிறேன். ரமண மகரிஷி பற்றி, விட்டோபா, அரபிந்தோ, சேஷாத்திரி சுவாமிகள், இந்த மாதிரி books தான். நாம சாப்பிடற உணவு எப்படி ஒரு இரசாயன மாற்றத்தினால் நமக்கு பலத்தைத் தருதோ அது மாதிரி தான் நான் படிக்கிற ஆன்மிக புத்தகங்கள் எனக்கு நகைச்சுவையா எழுத ஆற்றலைத் தருது.

நான் ஆஸ்திகனோ நாஸ்திகனோ இல்லை. ஹாஸ்திகன். நான் தினம் கும்பிடற தெய்வம் பாக்கியம் இராமசாமி தான். அவர் எழுத்தை தினம் படிக்காம வெளிய கிளம்பமாட்டேன். ஜாலியா இருக்கிறது தான் வாழ்க்கைல முக்கியம்.

நிறைய பேர் கேட்டிருப்பாங்க அனா நானும் கேட்கிறேன். உங்கள் இந்த take it easy மனப்பான்மைக்கும், வெற்றிக்கும் காரணம் என்ன?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லுவார்கள். எனக்குப் பல பெண்கள். தப்பா நினைச்சுக்காதீங்க, முதல்ல என் பாட்டி, அப்புறம் என் அம்மா, என் மனைவி, கூட்டுக் குடும்பம் என்கிறதனால என் தங்கைகள்னு இவங்க எல்லாரும் தான் என் வெற்றிக்குக் காரணம். இதுல முக்கியமா நான் ஜானகி டீச்சரைப் பத்தி சொல்லியாகனும். அவங்க இப்போ பெங்களூர்ல இருக்காங்க, 85 வயசாறது. அவங்க தான் என்னை ஒண்ணாங் கிளாஸ் படிக்கிறப்போ அட்டை கத்தி கிரிடம் எல்லாம் போட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் டயலாக்கை மனப்பாடம் செய்ய வெச்சு ஸ்கூலா ஸ்கூலா காம்படீஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போவாங்க. எனக்கு டிராமாவை அறிமுகப் படுத்தி வெச்சவங்க அவங்க தான். அதனால தான் நான் ரஜினி படமா இருந்தாலும் சரி கமல் படமா இருந்தாலும் சரி என் சம்பளத்தைப் பத்திக் கூட பேச மாட்டேன், ஹீரோயின் பேர் ஜானகி, அதுக்கு மறுப்பு சொல்லக் கூடாதுன்னு உத்தரவாதம் வாங்கிப்பேன். என் நாடகங்கள்ல ஹீரோயின் பேர் எப்பவும் ஜானகி தான். நான் அவங்களுக்கு செய்யிற நன்றிக் கடன் இது.

crazy4

நீங்க டிவி சீரியல்கள் எதுக்கும் கதை எழுதுவதில்லையா?

டிவி சீரியல்கள் தயவு செய்து பார்க்காதீங்க. ஜவ்வு மாதிரி இழுக்கறாங்க. சாதாரணமா இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால். ஆனா டிவி சீரியல்ல இன்னிக்கு செத்தா நானூறாவது எபிசோடில் தான் பால், அதுக்குள்ளே பாடி வேற மாறி போயிருக்கும். டிவி சீரியல்ல எல்லா கெட்ட கேரக்டர்ஸும் வந்தாச்சு. கெட்ட மாமியார், துஷ்ட நாத்தனார், கெட்டுப் போன பத்தினி. உறவு முறைகளைக் கேவலப் படுத்த இதை விட முடியாது. நானும் டிவி சீரியல்கள் பண்ணியிருக்கேன். ஆனா அதெல்லாம் நகைச்சுவை வகை.

நீங்க இப்போ நிறைய வெண்பாக்கள் எழுதறீங்கன்னு கேள்விப்பட்டேன். அதில் எப்படி ஆர்வம் வந்தது? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் வர முக்கியக் காரணம் என் தாத்தா வேங்கட கிருஷ்ணன். நான் சாதாரணமா ஒரு கவிதை எழுதினாக் கூட காளிதாசன் மாதிரி எழுதற டா என்பார். அல்பத் தனமா ஒரு படம் வரைஞ்சாக் கூட ரவி வர்மா மாதிரி வரையரேன்னு சொல்லுவார். அவர் சொன்னதை நம்பிண்டு தான் நான் பின்னாடி எழுத்தையும் ஓவியத்தையும் develop பண்ணிண்டேன்.

ஒரு பதினேழு பதினெட்டு வயசுல பரணிதரனின் அருணாச்சல மகிமை படிச்சு எனக்கு ரமண மகரிஷியிடம் ஈர்ப்பு வந்தது. ரமண மகரிஷிக்கும் வெண்பா எழுதறது ரொம்பப் பிடிக்கும். அவர் தெலுங்கில், சமஸ்கிரதத்தில் எல்லாம் வெண்பா எழுதியிருக்கார். எனக்குக் கற்றுக் கொள்ள ஆர்வம் வர அதுவும் ஒரு காரணம். என் நண்பன் சு.இரவி தான் எனக்கு வெண்பா இயற்றவும் கற்றுக் கொடுத்தான். கிட்டத்தட்ட 450 வெண்பாக்கள் ரமண மகரிஷியின் மேல் இயற்றி இருக்கேன். அவர் முக்தியடையறதை வெண்பாவா எழுதும்போது விக்கி விக்கி அழ ஆரம்பிச்சுட்டேன். என்னாலேயே control பண்ண முடியலை. அப்போ உள்ளே வந்த மனைவி, “இதோப் பாருங்கோ வெண்பா எழுத வரலைன்னா இப்படி அழக் கூடாது. யாருக் கிட்டயாவது கேட்டா கத்துத் தரப்போறா”  அப்படீன்னா. எங்க வீட்டில எல்லாமே நகைச் சுவை தான்.

இரா.முருகனும் நானும் ஒரு சமயத்தில் வெண்பாவிலேயே பேசிக் கொள்வோம். அவ்வளவு பைத்தியம் ஆயிடுத்து. அவர் காலயில் ஒரு வெண்பா அனுப்புவார். அதற்குப் பதிலாக நான் அவருக்கு இன்னொரு வெண்பா அனுப்புவேன். நான் சாக்லேட் கிருஷ்ணாக்குப் பிறகு இன்னொரு டிராமா எழுதாம இருக்க இந்த வெண்பா மேல உள்ள அதிக ஈடுபாடு தான் காரணம். என் தம்பி பாலாஜி திட்டி திட்டி இப்போ தான் நான் கூகிள் கடோத்கஜன்னு அடுத்த டிராமா எழுத ஆரம்பிச்சிருக்கேன்.

சாக்லேட் கிருஷ்ணாவின் ஒவ்வொரு ஷோக்கு முன்னாடியும் ஒரு வெண்பா எழுதுவேன். தினம் ஹிந்து கேஷவ் கிருஷ்ணர் படத்தை வரஞ்சு எனக்கு அனுப்புவார். உடனே அதற்கு ஒரு வெண்பா எழுதி நான் பதில் அனுப்புவேன், அது தினம் நடக்கிறது.

keshav4

அழகவன் கோலம், அழகவன் ஜாலம்,

 அழகவன் லீலா அபங்கம் -பழக,

 அழகனவன் நட்போ, அலுக்காத கற்பு,
பொழுதுமவன் பொற்பைப் புணர்

….கிரேசி மோகன்….

 

 

keshav1

காய்ச்சிய பாலுரை குத்தத் தயிராகும்,

 ஆய்ச்சியர் பாடி அவனுறையூர், –மேய்ச்சல்

 மனன்யன்  முகுந்தன் மடியேந்தி தாளால்,

 அனன்யபக்தி ஆவுக்(கு) அளிப்பு’’

கிரேசி மோகன்….

 

 
keshav2

சோவர்த்த மானமழை தேவர னர்த்தமாய்,

ஆவர்த்த மானம் அதில்நனைய , –கோவர்த்

தனத்தையன்று சுண்டுவிரலால் தாங்கி,   தலையின்(இந்திரன்)

கனத்தையன்று கர்வபங் கம்”

….கிரேசி மோகன்….

 

keshav5

விளக்கீசல் போலே, வியனுலகில் ஈசா,
உளத்தாசை கொண்டிங்(கு) உதிர்ந்தேன், –அளப்பரிய,
ஆதியே உந்தனனு பூதியில் மூழ்கிடும்,
தேதியைச் சொல்லியெனைத் தேற்று

….கிரேசி மோகன்….

 

சில சமயம் ஏதாவது புஸ்தகம் படிக்கும் போது சில வெண்பாக்கள் தோன்றும்.

கீதா விளக்கம் ‘’ஞானேஸ்வரி’’ படிக்கையில், கண்ணன் அர்ஜுனனுக்கு சொல்வது….

‘’மரண(ம்)அமு  துக்குண்டோ !மேகம்கண்(டு)  அஞ்சி,

 கரணம்  அடிக்குமோ  காற்று!, –தருணம்

 இருளென்று  பானு  இயங்காது  போமோ!,

 உறவென்(று)  உருகா(து)  உழை’’

….கிரேசி மோகன்….

’’தூங்கும் முன் தோன்றியது’’….

பாட்டுக்கு  நாச்சியார், பரவசம்  மீராவால்,

 கூட்டுக்கு  ராதை, குவலயப் -பாட்டுக்கு(பாடு),

 பாரதம்வீட்டுக்கு(வீடு) பாகவதம்மாட்டுக்கு

 பேரிதம்  சேர்க்கப் பிறப்பு’’

….கிரேசி மோகன்….


‘’நோகா  வரம்பெற நோய்நொடி  நாடாதே,

  சாகா  வரம்கூட  சாத்தியமே, –யோகா

  நிலையாமை  நீக்கி நிரந்தரம்  சேர்க்கும்,

  கலையாம் அதுபாது காப்பு’’

….கிரேசி மோகன்….

 

என் பேத்தியோடு போகோ பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போ தோன்றியது இது.

 ‘’ஈகோவை விட்டு இரைந்து சிரித்திடப்

  போகோவைப் பார்பேரன் பேத்தியொடு, –ஆகாகா!

  சாகா வரம்பெற்ற சோட்டாபீம் கார்டூனால்,

  தேகாபி மானம் தொலைப்பு’’

….கிரேசி மோகன்….

 

இன்றைய தமிழகத்தில் எழுத்தாளர்களின் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?

நான் சினிமா இன்டஸ்ட்ரிக்கு வந்தது கமலஹாசனோட விசிடிங் கார்ட் வைத்து. என்னை முதலில் சினிமாவில் அறிமுகப் படுத்தியதே கேபி சார் தான். அதனால் நான் ஒரு blue eyed boy. இங்கே நான் ஒரு கஷ்டமும் பட்டதில்லை. என் டயலாக்கை எந்த இயக்குநரும் கட் பண்ணியதில்லை, மாத்தச் சொன்னதில்லை. ஆனா எல்லாருக்கும் இந்த நிலைமை இல்லை. ஆனானப்பட்ட சுஜாதாவே சரியான முறையில் போற்றப் படவில்லை என்பது என் கருத்து. நான் ஒரு நாள் சாயங்காலம் ரெக்ஸ் கடைப் பக்கம் நடந்துண்டு இருக்கேன், சுஜாதா வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ். மாடிக்குப் போனா அவர் மூச்சு விட சிரமப்பட்டுண்டு இருக்கார். அப்பவும் எதுக்கு வந்திருக்க, என்னன்னு விசாரிக்கிறார். அதற்குள் அபோல்லோ ஆம்புலன்ஸ் ஆளு ஸ்டெரச்சரை தூக்கிண்டு மேலே வரான். ஆனா ஒருத்தன் தான் ரெண்டு பேர் கூட அந்த அம்புலன்சில் இல்லை. அந்த பில்டிங்கில் லிப்ட் work பண்ணலை. நான், அவர் பிள்ளை, அந்த ஆம்புலன்ஸ் ஆளு மூணு பேருமா அவரை சேரில் வைத்துத் தூக்கிக் கொண்டு வந்து ஆம்புலேன்சில் ஏத்தினோம். நீல் சைமன்னு ஒருத்தன், சுஜாதாவின் கால் தூசுக்கு வரமாட்டான். வெளிநாட்டு எழுத்தாளர்  . அவன் வீட்டில் ஹெலிபேட் இருந்தது. வெளிநாட்டில் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு மதிப்பு. ஆனா இங்கே எழுத்தாளர்களின் நிலை அப்படி இல்லை. பல பழைய எழுத்தாளர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமை நிலையில் இருக்கின்றன. அவர்களுக்கு என்னால் ஆன சிறு உதவிகளை செய்து வருகிறேன்.

 

கிரேசி மோகனுக்கு “நமது திண்ணை” சார்பாக கூகிள் கடோத்கஜன் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்தி விடை பெற்றேன் J

நன்றி @keshav61 அவரின் கண்ணனின் வண்ண ஓவியங்களை இங்கே போட அனுமதித்ததற்கு.

 

 

ஜூன் மாத ‘நமது திண்ணை’ இணைய இதழில் வந்த நேர்காணல்.

பிரபல ஓவியர் கேஷவ்வின் நேர்காணல்

keshav6

ஓவியர் கேசவ் வீடு கிரீன்வேய்ஸ் ரோடில் அமைதியும் அழகும் ததும்ப அமைந்திருக்கிறது. அவரது குடும்பத்தினரும் மிகவும் அன்புடன் வரவேற்று ஆசையுடன் உரையாடினார்கள்.

வீட்டின் முன் பகுதியை ஆபிசாகவும் பின்பகுதியை இல்லமாகவும் அமைத்துள்ளார். வரவேற்பறை சுவரிலேயே விஷ்ணுவின் மிகப் பெரிய வண்ண ஓவியம் வரைந்துள்ளார். அதே போல பல வண்ண ஓவியங்களை பிரேம் போட்டும் எல்லா அறைகளிலும் மாட்டியுள்ளார். எல்லாமே இறைவனின் எண்ணற்ற ரூபங்கள். ஒரு ஓவியத்தை நின்று ரசிக்கவே பல நிமிடங்கள் ஆகிறது. திரும்பும் இடமெல்லாம் கண்ணைக் கவரும் ஓவியங்கள் தான்! அவர் வீட்டுக்குச் சென்று வந்தாலே தியானம் செய்த அமைதி கிட்டுகிறது.

  1. உங்களுக்கு சிறு வயது முதலே வரைவதில் ஆர்வம் இருந்ததா? யாரிடமாவது பயின்றீர்களா? உங்கள் படிப்புப் பின்னணி என்ன?

நான் எழுத ஆரம்பிக்கும் முன்பே வரைய ஆரம்பித்துவிட்டேன் என்று என் அம்மா சொல்வார் 🙂 ஜன்னல் வழியாக வெளியே தெரியும் எல்லாவற்றையும் சாக் பீசினால் சுவரிலும் தரையிலும் வரைவேன். நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போது என் டிராயிங் மாஸ்டர் திரு பி.ஏ.ரெட்டி என்னை மிகவும் ஊக்குவித்தார். அவர் அனைத்து மாணவர்களையுமே ஊக்குவிப்பார். நான் பள்ளியில் இருந்த காலம் வரை அவர் ஒரு முறை கூட கரும்பலகையில் வரைந்தோ எப்படி வரையவேணும்னு சொல்லிக் கொடுத்தோ பார்த்ததில்லை. ஆனால் அவர் தன் பேச்சாலையே எங்களை inspire செய்வார்.

நான் எந்த ஆர்ட் கோர்ஸ் சேர்ந்தும் பயிலவில்லை. மியுசியங்களில் முக்கியமாக சாலார் ஜங் மியுசியம் (ஹைதிராபாத்), புத்தகங்களில் (ஐரோப்பிய ஓவியர்கள் வரைந்தவை) இவைகளைப் பார்த்து தான் நான் வரையக் கற்றுக் கொண்டேன். புகழ்பெற்ற ஓவியர் எஸ்.ராஜம் அவர்களின் ஓவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவரின் ஓவியங்களை முதன் முதலில் ஒரு இராமாயண கதைப் புத்தகத்தில் பார்த்து அசந்து போனேன். எல்லாரையும் விட ராஜா ரவி வர்மாவின் ஓவியங்கள் தான் என்னை மிகவும் ஈர்த்தன. அவரின் ஒரிஜினல் ஓவியங்களை மைசூரில் உள்ள ஜெயச்சாமராஜேந்திர ஆர்ட் கேலரியில் பார்த்தபோது என்னுள் ஒரு பொறி தட்டியது.

நான் ஹைதிராபாத்தில் ராக்வுட்ஸ் பள்ளி என்ற கான்வென்டில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பிறகு கோல்கொண்டாவில் உள்ள கேந்திரிய வித்யாலாயாவில். பிறகு சென்னை வந்து, இங்கு B.Com, M.com படித்து முடித்தேன்.

  1. நீங்கள் உங்கள் பெயருக்கேற்ப கண்ணனின் படங்களையே பெரும்பாலும் வரைகிறீர்கள். அதை ஆரம்பித்ததற்கு ஏதாவது தனிக் காரணம் உள்ளதா? அப்படித் தொடங்க உங்கள் வாழ்வில் ஏற்பட்ட ஏதாவது அதிசய நிகழ்வை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

கண்ணனுடனான என் பயணம் மிகவும் கால தாமதமாகத் தான் ஆரம்பித்தது. எனக்கு சரித்திரத்திலும் இதிகாசங்களிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. நான் வளர்ந்தது ஒரு பாரம்பரிய வைணவ குடும்ப சூழலில். வீட்டிலும் எங்கள் காலனியிலும் ஏகாதசி அன்று பஜனைகள், மார்கழி மாதங்களில் பஜனைகள், பாகவத சப்தாகங்ககள் என்று பலதும் நடைபெறும். வளர்ந்த இந்த சூழல் தான் என்னை கண்ணனிடம் அழைத்துச் சென்றது என்று நினைக்கிறேன். எனக்கு முதலில் பிடித்தக் கடவுள் இராமன் தான். அவரை தான் நிறைய வரைந்தேன். இராமாயண காவியத்தின் மூலத்தில் இருந்து சம்பவங்களுக்கேற்ப நான் பலவாறு இராமனை வரைந்தேன். நான் வரைந்தவைகளை என் தந்தையின் குரு  திரு புரிசை நடாதூர் கிருஷ்னமாச்சாரியார் என்னும் மகா பண்டிதரிடம் காட்டுவேன். நான் பலமுறை அவரிடம் கொடுத்தவைகளை ஒன்றுமே சொல்லாமல் என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுவார். ஒரு நாள், “நீ கிருஷ்ணனை போடு” என்றார். அது ஒரு ஆணையாக எனக்குத் தோன்றியது. அந்த ஆணையை ஏற்றுக் கொண்டு அன்றில் இருந்து நான் கிருஷ்ணனைத் தான் வரைகிறேன். இது நடந்தது 2002ஆம் ஆண்டு.

keshav4

  1. உங்கள் பெற்றோருக்கு ஓவியம் வரைவதிலோ வேறு கலைகளிலோ ஆர்வம் இருந்ததா? நீங்கள் இதையே உங்கள் தொழிலாக வைத்திருப்பதை முதலில் உங்கள் பெற்றோரும் பின்னால் உங்கள் மனைவியும் எந்த அளவு ஆதரவு கொடுத்தார்கள்?

என் தந்தை ஒரு நாடக நடிகர். அவர் ட்ரிப்ளிகேன் பைன் ஆர்ட்ஸ் கிளப், NSN தியேட்டர்ஸ் இரண்டிலும் இருந்தவர். மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், சோ, ஸ்ரீகாந்த், SV வெங்கட்ராமன், (SV சேகரின் தந்தை) இவர்களுடன் பல நாடகங்களில் நடித்தவர். மடிசார் புடைவை உடுத்திக் கொண்டு பெண் வேடங்களிலும் நிறைய நடித்திருக்கிறார். தேவனின் துப்பறியும் சாம்புவில் வேம்புவாக நடித்து பிரபலம் அடைந்தவர். அவர் மிகவும் நன்றாகப் பாடவும் செய்வார். மார்கழி மாதங்களில் விடியற்காலையில் திருப்பாவைப் பாசுரங்களைப் பாடும் போது அவர் குரல் வேணுகானமாக ஒலிக்கும்.

என் தந்தைக்குக் கலையில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் அவர் நான் செல்லும் பாதையைப் பற்றிக் கவலைப்படவில்லை. விகடனில் வரைய ஆரம்பிக்கும் பொழுது மகிழ்ச்சியே அடைந்தார். ஆனால் என் வங்கி வேலையை விட்டுவிட்டு முழு நேர ஓவியனாக ஆக முடிவு செய்தபோது சற்றே கவலைப்பட்டார். ஆனால் நான் இந்தத் துறையில் நல்ல முறையில் வளர்வேன் என்று சீக்கிரமே நம்பிக்கை அடைந்தார். என் அம்மாவின் பரிபூரண ஆசி எனக்குத் தொடக்கம் முதலே இருந்தது. என் மனைவிக்கு முதலில் இந்த ஓவியத் துறை பற்றி ரொம்பத் தெரியவில்லை. சிறிது காலம் கழித்து, புரிந்த பின் நான் செய்வதற்கு முழு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தார். என் வேலைக்கு எந்த இடையூறும் தருவதில்லை. அது இறைவன் தந்த வரம் தான். மனைவியின் ஆதரவு இன்றி எதையுமே சிறப்பாகச் செய்ய முடியாது. இம்மாதிரி துறையில் இருப்பவர்களுக்கு குடும்ப ஆதரவு மிகவும் முக்கியம்.

keshav9

  1. உங்களை இத் துறையில் இன்றும் ஊக்குவித்துக் கொண்டிருப்பவர் அல்லது ஊக்குவித்துக் கொண்டிருப்பது எது? அதே போல படம் வரைவதற்கு உங்கள் inspiration என்ன?

ஓவியம் வரைவது ஒரு addiction மாதிரி தான், ஒரு போதை. நான் எப்பொழுதும் வரைந்து கொண்டே இருக்கவேண்டும். என்னால் வரையாமல் இருக்க முடியாது. என் ஓவியங்களைப் பார்த்தவர்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு நிறைய பாராட்டுகள் வந்துள்ளன. சமூக வலை தளம் என்னை மிகவும் பாராட்டுகிறது. நிறைய பேர் நான் தினம் பதிவேற்றும் கிருஷ்ணனின் ஓவியங்களுக்கு FaceBookல் அழகிய வெண்பாக்களை ஆர்வத்துடன் இயற்றுகிறார்கள். சிலர் அவ்வோவியங்களில் உள்ள நுணுக்கங்களை ஆராய்ந்து அவர்களுக்குத் தோன்றும் அழகிய விளக்கங்களும் அளிக்கின்றனர்.

மிகப் பெரிய ஓவியர் கோபுலு அவர்கள் என்னை வெகுவாகப் பாராட்டுவார். என் ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களையும், வரைய நான் பயன்படுத்திய டெக்னிக்குகளையும் மிகவும் சிலாகிப்பார். அவர் ஒரு சமயம் என்னிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கும்போது எனக்கு அவர் அன்புடன் கொடுத்தப் பட்டம் “கிருஷ்ணப் ப்ரேமி”. இந்த மாதிரி பாராட்டுகள் தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

கிரேசி மோகனுக்கு நான் தினமும் காலையில் வரைந்த கிருஷ்ண ஓவியத்தை ஈமெயிலில் அனுப்புவேன். அவர் உடனே அதுக்கு ஒரு வெண்பா இயற்றி அனுப்புவார். பலமுறை தொலைபேசியிலேயே வெண்பாவை கூறிவிடுவார்.

அருமையான ஓவியரான நடிகர் சிவகுமார் என் ஓவியங்களைப் பார்த்து நிறைய கருத்துத் தெரிவித்துள்ளார். திரு. மணியன் செல்வன் என் ஓவியங்களை துல்லியமாக ஆராய்ந்து மிகுந்த கவனத்துடன் கருத்துச் சொல்வார். இவர்களின் கருத்துக்களை நான் பெரிதும் மதிக்கிறேன்.

கிருஷ்ணனும் அவன் கதைகளுமே என் inspiration. வரைவதற்கு அவனே ஒரு காரணி 🙂

keshav3

  1. நீங்கள் ஹிந்து நாளிதழில் கார்டூனிஸ்டாகப் பணிபுரிகிறீர்கள்.அந்த வேலைக்கும் நீங்கள் கண்ணன் ஓவியங்கள் வரைவதற்கும் நிறைய வேறுபாடு, எண்ணங்களில் மாற்றம் தேவைப்படும். எப்படி அதை செய்ய முடிகிறது?

கார்டூன் வரைவதற்கு நேரடியாகப் பார்த்தவுடன் ஸ்கெட்ச் செய்யும் திறன் வேண்டும். அது எனக்கு இயல்பாகவே இருந்தது. மேலும் அவ்வகை ஓவியத்துக்குத் தேவையான மற்ற திறன்களையும் நான் வளர்த்துக் கொண்டேன். சில கோடுகளிலேயே உடல் பாகங்களை நன்றாக வரையத் தெரிந்திருக்க வேண்டும். கார்டூன் வரைவதற்கு முதலில் நன்றாகக் கவனிக்கப் பழக வேண்டும். வெறும் முக பாவம் மட்டும் அல்ல குணாதிசயங்களும் கார்டூனில் வெளிப்பட வேண்டும். கார்டூன் என்பது ஒரு உருவத்தின் caricature. கிருஷ்ணனை வரைவதோ இதற்கு நேரெதிர். ஒன்றில் ஈடுபடும் போது மற்றொன்றில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டு விடுவேன். ஆனால் இரண்டு வித ஓவியங்களுக்கும் புதுப் புது ஐடியாக்கள் தேவை.

keshav5

  1. உங்கள் வீடே கண்ணனின் கோவிலாக உள்ளது. சுவர்களில் மிகப் பெரிய சித்திரங்களை தீட்டி வைத்திருக்கிறீர்கள். இவை எல்லாம் எப்பொழுது வரைந்தவை?

நான் 2002ல் இருந்து வரைந்து வருகிறேன். இவையெல்லாம் என் கிருஷ்ணனைப் பற்றிய ஆறாய்ச்சியின் படிக் கற்கள். இவ்வோவியங்கள் அனைத்தும் ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து எடுத்தவை. பாகவதக் கதைகளைச் சொல்லும் ஓவியங்கள் தான் சுவரை அலங்கரிக்கின்றன.

keshav7

    7. நீங்கள் இந்தக் கலையைக் கற்றுக் கொடுக்கிறீர்களா? உங்களுக்கு மாணவர்கள் உள்ளனரா?

நிறைய பேர் அவர்களின் ஓவியங்களை எடுத்து வந்து கருத்துக் கேட்பார்கள். சிலர் மெயிலில் அனுப்பியும் அறிவுரை கேட்பார்கள். நான் என்ன மாற்றம் செய்ய வேண்டும், எப்படி வரைந்தால் ஓவியங்கள் இன்னும் அழகு பெறும் என்று சொல்வேன். என் கருத்து எப்பொழுதுமே ஒவ்வொருவரும் அவரவர் ரசனைப்படியும், திறனின் அடிப்படையிலும் வரைய வேண்டும் என்பதே. வாழ்க்கையில் இருந்து உதாரணங்களை எடுத்துக் கொள்ளுதல் நலம். மேலும் பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

  1. உங்களைப் பலப் பிரபலங்கள் வந்து சந்தித்திருப்பார்கள், பாராட்டியிருப்பார்கள். அவற்றில் உங்கள் நினைவில் நிற்பவை சிலவற்றைச் சொல்லுங்கள்.

நிறைய பேர் வந்து சந்தித்திருக்கிறார்கள். Dr.பத்மா சுப்பிரமணியம், கேரளாவில் பாகவத கிராமம் உருவாகக் காரணமாக இருந்த சுவாமி உதித் சைதன்யா, திரு.மோகன்லால், மணியம் செல்வம், சுவாமி ஓம்காரானந்தா, ஹிந்து எடிட்டர்கள், N.ராம், N.ரவி, மாலினி பார்த்தசாரதி, பத்திரிக்கையாளர் காஞ்சன் குப்தா, எழுத்தாளர் பாலகுமாரன், சித்ரவீணா ரவிகிரன், பாடகர் நவநீத கிருஷ்ணன், கிரேசி மோகன். ஏன் நீங்களும் தான் 🙂

  1. தினம் நீங்கள் ட்விட்டரில், Facebookல் ஒரு கண்ணன் ஓவியத்தைப் பகிர்கிறீர்கள். கண்ணுக்கு விருந்து, மனத்துக்கு மருந்து. கிரேசி மோகனுக்கும் அதே ஓவியத்தை நீங்கள் ஈமெயிலில் அனுப்பி அவர்தினம் ஒரு வெண்பா இயற்றுவதாகக் கூறியிருந்தார். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

மோகன் சாருடனான என் நட்பு மிகவும் உன்னதமானது, தனித்துவம் மிக்கது. அவருக்கு நிறைய ஐடியாக்கள் தோன்றிய வண்ணம் இருக்கும். அதனால் என் ஓவியத்துக்கு அவர் மூலம் புது விளக்கங்கள் கிடைக்கிறது. அவர் ஆற்றலால் என் படங்களை மிக உயரிய இடத்துக் கொண்டு செல்கிறார். என் ஓவியங்கள் அவர் மூலம் வேறு ஒரு பரிணாமத்தை அடைகின்றன. நாம் எதிர்ப்பார்க்காத கோணத்தில் இருந்து அவர் படத்தைப் பார்த்து எழுதும் வெண்பா பரவசத்தை உண்டு பண்ணும். அவர் தொலைபேசியில் கூப்பிட்டு எப்படி அந்த யோசனை வந்தது, ஏன் அப்படி ஒரு வெண்பா இயற்றினேன் என்று விளக்கமும் கொடுப்பார். போன வருடம் டிசெம்பர் மாதம் திருவல்லிக்கேணியில் நடந்த பாரதியார் விழாவில் அவர் வெண்பாக்களுடன் என் படைப்புக்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

keshav2

  1. உங்கள் கண்ணன் ஓவியங்களில் எப்பொழுதும் வாஞ்சையுடன் ஒரு பசு மாடும் கூடவே இருக்கும். அதன் காரணம் என்ன?

பசு என்பது பொதுவாக ஜீவாத்மாவைக் குறிக்கும். சில சமயம் பசு பூமியையும் உபநிடங்களையும் குறிக்கும். அதனால் என் ஓவியங்களில் பசு எப்பொழுதும் இருக்கும், அந்தந்த ஓவியத்தில் நான் சொல்ல வருவதைப் பொறுத்து அது ஜீவாத்மாவாக அல்லது பூமியாக அல்லது உபநிடமாக மாறுபடும். மேலும் ஒரு காரணம் உண்டு, எனக்கு பசுக்களை மிகவும் பிடிக்கும் J

keshav1

  1. இதுவரை எவ்வளவு ஓவியங்கள் வரைந்திருப்பீர்கள்?

நான் கணக்கு வைத்துக் கொள்வதே இல்லை. ஆயிரக் கணக்கில் இருக்கும். இதைத் தானே நான் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறேன் 🙂

இவரின் ஓவியங்கள் பல பிரபலங்களின் வீடுகளிலும் பெரிய நிறுவனங்களின் வரவேற்பு அறைகளிலும் அலங்கரிக்கின்றன. மேலும் மேலும் அருமையான ஓவியங்களை தீட்டவும், பேரும் புகழும் அடையவும், விருதுகள் மூலம் அங்கீகாரங்கள் பெறவும் நமது திண்ணை சார்பாகத் திரு.கேஷவ் அவர்களை வாழ்த்துகிறோம்.

இவரின் ஓவியங்களைக் காணவும் தொடர்புக் கொள்ளவும் Kamadenu.blogspot.in

இவரின் ட்விட்டர் ஹேண்டில் @keshav61

இந்த நேர்காணல் ஆகஸ்ட் மாதம் ‘நமது திண்ணை’ இணைய இதழில் வெளியானது.

மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்

kalam2

நமது பாரத குடியரசுத் தலைவர் கலாமின் பிறப்பு, வளர்ப்பு, அவர் வகித்தப் பல பதவிகள் பற்றி நம்மில் பலரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவரின் மறைவு நம்மிடையே  ஏற்படுத்திய தாக்கம் நாம் நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அவர் திங்களன்று  இரவு ஏழேமுக்காலுக்கு ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் இறந்தார். தமிழ்நாட்டில் பல பள்ளி, கல்லூரிகளுக்குச் செவ்வாய் அன்று விடுமுறை அறிவித்திருந்தும் பல பள்ளிக் குழந்தைகள் செவ்வாய் காலை சீருடை அணித்து பள்ளிக்குச் சென்று கலாம் அவர்களைப் பற்றி பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளனர். விடுமுறை அன்று மாணவர்கள் விருப்பத்துடன் பள்ளிக்குச் சென்று, இறந்த ஒருவரைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் அவர் எவ்வளவு பெரிய inspiring personalityயாக இருந்திருக்க வேண்டும் என்று நாமே புரிந்து கொள்ள முடியும்.

நல்லடக்கம் இன்று. நேற்று முதலே திரும்பிய இடமெல்லாம் அவரின் படமும், அதற்கு மாலையும் அதன் முன் சில மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டு ஒளி வீச ஆரம்பித்து விட்டன. இவ்வாறு இறுதி மரியாதை செய்தவர்கள் எல்லாம் பணம் படைத்தவர்கள் அல்ல. துப்புறவு தொழிலாளர்களும், வாகன ஓட்டிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், சின்ன மளிகைக் கடைகளும் , மரக்கடைகளும், சின்ன சாப்பாட்டுக் கடைகளும், அயர்ன் கடைகளும் வைத்திருப்பவர் தாம். இவர்கள் தான் கலாமின் படம் வைத்து மாலை போட்டு ஊதுபத்தி ஏற்றி மரியாதை செய்தனர். ஒவ்வொரு தெரு முனையிலும் கலாமின் படம், இவர் சொன்ன பொன் மொழியுடன் வைக்கப் பட்டிருந்தது. எந்த ப்லெக்ஸ் பேனரிலும் ஸ்பான்சர் செய்தவர் பெயர் இல்லை, புகைப்படம் இல்லை. அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இன்று முழு கடையடைப்பு. இந்த மாதிரி ஒரு மரியாதையை அவர் பெற அவர் வாழ்க்கை இவர்கள் அனைவரையும் எந்தளவு பாதித்திருக்க வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

kalam3

நம் நாட்டின் குடியரசுத் தலைவராக அவர் 2002-2007 வரை இருந்தார். இது வரை அந்தப் பதவியை அலங்கரித்தவர்களுள் இவரைப் போல ஒருவரை சுதந்திர இந்தியா கண்டதில்லை. ஐந்தாண்டுகள் அவரின் இல்லமாக இருந்த ராஷ்டிரபதி பவனை எளிய மக்கள் வந்து பார்க்கும் இடமாக மாற்றி வரவேற்று விருந்தோம்பல் செய்தவர் அவர்.

kalam5

ராமேஸ்வரத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டுப் படித்து முன்னேறியதால் அவருக்கு எளியவர்களின் சிரமம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. எளிமையானவராக இருந்ததால் அவர் இந்தியாவின் மிகப் பெரிய பதவியை வகித்தவர் ஆயினும் எல்லாராலும் எளிதாக நெருங்க முடிந்தது. அவர் குடியரசுத் தலைவர் ஆனது கூட ஒரு எதிர்பாராத நிகழ்வே. பிஜேபி அரசு காங்கிரஸ் அரசுக்கும் தோதான அரசியலைச் சார்ந்தவர் யாரும் கிடைக்காததால் கலாமை சட்டென்று தேர்ந்தெடுத்தார் அப்போதைய பிரதம மந்திரி வாஜ்பாய். யாராலும் மறுப்புச் சொல்ல முடியாத ஒரு வேட்பாளர்! அதற்கு முன் அவர் வகித்தப் பதவிகள் மிகச் சிறப்புடையவை. ஆயினும் அவர் குடியரசுத் தலைவர் ஆனது தான் அவரின் உன்னதமான குணங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியது. அதற்கு நாம் இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

குடியரசுத் தலைவரான பின் அவர் தன் முதல் இரண்டு மாத சம்பளங்களை புட்டப்பர்த்தியில் உள்ள கல்லூரிக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார். ராஷ்டிரபதி பவனில் நடக்கும் இப்தார் விழாவுக்கு சுமார் இரண்டரை லட்சம் செலவாகுமாம். அது அரசாங்கத்தின் செலவு. அதில் இவர் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் தன் பங்காகக் கொடுத்துள்ளார். இதெல்லாம் சிலர் அவர் மறைவுக்குப் பின் சொல்லக் கேட்டது. இது வரை தெரியாது. அப்போ இன்னும் வெளியில் தெரியாத வண்ணம் எவ்வளவு தான தர்மம் செய்திருப்பார் என்று நாம் சற்றே சிந்தித்துப் பார்க்கலாம்.

இளைஞர்களுக்கு முதியவர்களைக் கண்டால் பிடிக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அவர் ஈர்த்தது மொத்தமும் இளைஞர்களைத் தான். இன்று அவர் கடைசிப் பயணத்தில் அஞ்சலி செலுத்தக் கலந்து கொண்ட லட்சோப லட்ச மக்கள் அனைவரும் இளைஞர்களே. அதனினும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் குழந்தைகள் தாமாகவே முன்வந்து கலாமுக்கு தங்கள் சிறு கைகளாலும் பெரிய மனத்தாலும் செய்திருக்கும் அஞ்சலிகள் தான்.

kalam

அது எப்படி சாத்தியம் ஆயிற்று? அவர் உண்மை மட்டுமே பேசினார். அதனால் சாத்தியம் ஆயிற்று. வெளிப்பூச்சும் பாசாங்கும் அவரிடம் எள்ளளவும் இலை. குழந்தைகள் அதிபுத்திசாலிகள், அதனால் அவர்களுக்கு அவரைக் கொண்டாடத் தெரிந்திருக்கிறது. தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கப்பட்ட ஒவ்வொரு மாணவியும், மாணவனும் அவரைப் பற்றிச் சொல்லும் கருத்து நம்மை அசர வைக்கிறது. மரம் வளர்க்க வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், பெற்றோர்களைப் பேணிக் காக்க வேண்டும், கடுமையாக உழைக்கவேண்டும் என்று அவர் சொன்னார், அவற்றை எல்லாம் நாங்கள் கடைபிடிக்கப் போகிறோம் என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.

kalam1

சமூக வலைதளங்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு அவர் பதில் கடிதம் போட்டார், கையெழுத்திட்டப் புத்தகங்களை அனுப்பினார் என்று படங்களைப் பகிர்ந்துள்ளனர்! ஜனாதிபதி பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பின் அவரின் உழைப்பு இன்னும் அதிகமாகியது என்று சொல்லலாம். அவர் தொடர்ந்து மாணவர்களையும் இளைஞர்களையும் சந்தித்து உரை நிகழ்த்தி அவர்கள் மனத்தில் ஞான விளக்கை ஏற்றினார். ஒய்வு என்பதே அவர் அகராதியில் இல்லை. அவர் உதாரணப் புருஷராய் வாழ்ந்ததால் தான் அவரால் மக்களை அவர்பால் இழுக்க முடிந்தது. எப்பொழுது சொல் ஒன்றும் செயல் வேறோன்றுமாய் இருக்குமோ அப்பொழுது ஒருவரின் நம்பகத் தன்மை போய்விடும்.

அவர் எத்தனையோ பெரிய பதவிகளை தன் வாழ்நாளில் வகித்தார். அவரின் உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங் சமீபத்தில் அவரிடம் என்னவாக உங்களைப் பின்னாளில் மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அவர் ‘ஆசிரியராக’ என்று உடனே பதில் அளித்திருக்கிறார். அது ஒன்றே போதும் அவரின் தன்மையை நமக்கு வெளிக்காட்ட. அவர் தன்னிடம் இருந்த ஞானம் அனைத்தையும் மற்றவர்களிடம் பகிரவே ஆசைப்பட்டார். கொடை வள்ளல். நாளைய தலைமுறையை சிறப்பாக வடிவமைக்க கையில் உளியுடன் செதுக்கவே தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவழித்துள்ளார்.

தமிழ் மொழி தெரிந்தவர்கள் எனில் கண்டிப்பாக அவருடன் தமிழிலேயே உரையாடுவார். தமிழில் பேசும்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் அவர் உரையாடுவதே ஒரு தனி அழகு. அவர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே கிடையாதாம். ஆல் இந்தியா ரேடியோவில் தான் செய்திகள் கேட்பாராம். ஆனால் உடனுக்குடன் ஈமெயில் மட்டும் செக் பண்ணிக் கொள்வாராம். அவர் ட்விட்டரில் இருந்து கொண்டு ஷில்லாங் போவது பற்றிக் கூட கடைசியாக ட்வீட் பண்ணியுள்ளார்.

எந்த அரசியல் பின்புலமும் இல்லை. எந்த பணக்கார, பாரம்பரியம் மிக்கக் குடும்பத்தில் இருந்தும் வரவில்லை, தன் கடமை என்று எதை நினைத்தாரோ அதைப் பழுதின்றி செய்தார். அனைத்து உயரிய விருதுகளையும் பெற்றும் பணிவுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார். குழந்தை உள்ளம் கொண்டவராக இருந்தார். ஆனாலும் அவர் மறைவுக்கு இந்தியாவே அழுதது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் பதைபதைக்கும் வெய்யிலிலும் கூடி நின்று, அவரின் நல்லடக்கத்தின் போது நெஞ்சுருக அழுதனர். யாருக்குக் கிடைக்கும் இந்தப் பேரு?

நம் மத்திய அரசும் இராணுவ மரியாதையோடும் சகல ஏற்பாடுகளை செவ்வனே செய்து அவரை நல்ல முறையில் வழியனுப்பியது அனைவர் மனத்துக்கும் ஒரு ஆறுதலைத் தந்தது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்துக்கே சென்று இறுதி அஞ்சலி செய்தது அவருக்குரிய மேன்மையை பறைசாற்றியது. மோடியும் தில்லியில் ஒரு முறை, இராமேஸ்வரத்தில் இன்னொரு முறை வந்து அஞ்சலி செலுத்தி ஒரு நல்ல முன் மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறார்.

கல்யாண சாவு தான். அவர் திருமணம் புரிந்து கொள்ளவில்லை என்பது வேண்டுமானால் அவர் குடும்பத்தாருக்கு ஒரு குறையாக இருக்கலாம். அனால் அதைத் தவிர நிறை வாழ்வே வாழ்ந்தார். அனைவரும் விரும்பும் அனாயாச மரணத்தை இறுதியில் அடைந்தார். ஆயினும் செய்தி கேட்டவுடன் நம் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது போல மனத்தில் சோகம் கவ்வியது ஏன்? இன்னும் அந்த வேதனை விலகவில்லையே. அது தான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு. அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்து அவரின் வாழ்க்கை வரலாறு. அதில் உள்ள ஒவ்வொரு பக்கத்தையும் நம் வாழ்நாளில் அனுபவித்து செயல்படுத்துவது தான் அவரின் சொத்தை சரியான முறையில் பயன்படுத்துவதாகும்.

அவருக்கும் அவரின் வாழ்க்கைப் பாடத்துக்கும் நாம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கோம். வாழ்க அவர் புகழ். வளர்க அவர் வகுத்த நன்னெறிகள்!

kalam6

Thanks to @jvs2020 and @paramporul for their photos.

பாலித் தீவு -இந்துத் தொன்மங்களை நோக்கி! @kanapraba வின் புத்தக ஆய்வு

bali

கானாபிரபாவின் எழுத்துக்கு நான் ரசிகை. அவரின் ப்ளாக் பதிவுகளை விரும்பிப் படிப்பேன். அதுவும் அவரின் பயணக் கட்டுரைகள் ரொம்பப் பிடிக்கும்.

மடத்து வாசல் பிள்ளையார் பதிப்பகத்தாரின் முதல் வெளியீடாக வந்துள்ள இப்புத்தகத்தை மிகுந்த ஆவலுடன் வாங்கிப் பார்த்தேன். புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் கண்ணைக் கவரும் வண்ணப் படங்களும், அழகிய வழவழாத் தாளில் அச்சும் பிரபாவின் taste for perfection and beautyஐக் காட்டியது.

“தன் சைக்கிளில் எனை இருத்தி உலகத்தைக் காட்டிய என் அப்பாவுக்கு” என்று அழகிய சமர்ப்பணத்துடன் எழுத்து ஆரம்பிக்கிறது. பாராவின் முன்னுரை புத்தகத்தின் மதிப்பை உடனே உயர்த்திவிடுகிறது,

பாலித் தீவு பயணப்பட செய்யும் ஏற்பாட்டில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பி வந்து சேரும் வரை நாமும் அவருடன் சேர்ந்து பயணிக்கிறோம் வெறும் 15௦ரூபாய் செலவில்.

பல வருடங்களுக்கு முன் நானும் என் கணவரும் பாலித் தீவுக்குச் சென்றிருக்கிறோம். இவர் புத்தகத்தைப் படிக்கும் போது அவர் எழுதியிருக்கும் சில இடங்களை நாங்களும் பார்த்திருந்ததால் மலரும் நினைவுகளாகவும் இருந்தது 🙂

இந்தப் புத்தகத்தின் சிறப்பு:

1. பாலிக்குச் செல்பவர்களுக்கு இது ஒரு டூர் கைடாக இருக்கும்.

2. பாலிக்குச் செல்லாதவர்களுக்கு இருந்த இடத்தில் இருந்தே அவ்வூரை பார்த்த ஆனந்தம் கிட்டும்.

3. குறிப்பாக இந்து ஆலயங்களும், தமிழ் கலாச்சாரமும் எப்படி அங்கு வந்தன என்பதை ஆய்வு செய்து தெரிவிப்பதால் சரித்திரத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு இப்புத்தகம் வெகு சுவாரசியமாக இருக்கும். தமிழ் மொழியும், சம்ஸ்கிருத மொழியும் கூட அவர்கள் மொழியில் கலந்திருப்பதை அவர் காட்டுகிறார்.

4. அவ்வூரில் இருக்கும் சில வினோத பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம், முக்கியமாகக் காபி, ஸ்பெஷல் காபி தயாரிக்கும் முறையை விளக்கியுள்ள இடம் LOL.

5. ஒவ்வொரு தகவலையும் முடிந்தவரை ஆதியோடு அந்தமாக கொடுத்திருக்கிறார். அதனால் நிறையக விஷயம் கற்றுக்கொள்ள முடிகிறது.

6. புத்தகத்தின் focus பாலியின் கலை, பண்பாடு. அதனால் பதின்ம வயதினருக்கும், பெரியவர்களுக்கும் இப்புத்தகத்தைப் பரிசாகத் தரமுடியும். விரும்பிப் படிப்பர்.

7. நிச்சயமாக பள்ளி லைப்ரரிகளில் இருக்க வேண்டிய புத்தகம். ஏனெனில் பாலியை ஒரு மாய உலகம் போலக் காட்டியுள்ளார் பிரபா. அதனால் பள்ளிக் குழந்தைகள் இப்புத்தகத்தைப் படித்தால் கண்கள் விரியக் கனவு காண ஆரம்பித்து விடுவது மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்குப் போய் பலதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டாகும்.

8. சிட்னி நூல் வெளியீட்டு விழாவில் இப்புத்தக விற்பனையின் மூலம் வரும் இலாபத்தை ஒரு நல்ல காரியத்துக்குப் பயன் படுத்துகிறார். அதைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் http://www.madathuvaasal.com/2011/07/blog-post.html

ஆதலால் புத்தகத்தை உடனே வாங்குவீர்! பயனடைவீர்! 🙂

சென்னையில் Discovery Book Storeலும் இணையத்தில் http://www.flipkart.com/bali-theevu-inthu-thonmangalai-nokki/p/itme6sr45f7mcjhn?pid=RBKE6SR4HHMTJVFM வாங்கலாம்.

வாழ்த்துகள் கானாபிரபா 🙂bali1

மரகதவல்லி alias Maggie

maggie

என் அம்மாவின் வாழ்க்கை வண்ணமயமானது. வளரும் பருவத்தில் எல்லாமே பளிச் வண்ணங்கள். என் அம்மாவின் அப்பா திரு. சக்கரவர்த்தி ஐயங்கார் செஷன்ஸ் கோர்ட் நீதிபதியாக இருந்தார். அதனால் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றலாகும் வேலை. என் அம்மாவிற்கு முன் நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்திருந்தார்கள். ஒரு பெண் குழந்தை இறந்தே பிறந்ததால் என் அம்மா பிறந்த போது என் பாட்டியின் தகப்பானருக்குப் பெரும் மகிழ்ச்சி, வறுத்த பயிர் முளைத்தது போல பெண் பிறந்திருக்கிறாள் என்று அவருக்கு மரகதவல்லி என்று பெயர் சூட்டினார்.

நடு ரோவில் என் அம்மாவின் தாய் தந்தை, இடது ஓரத்தில் தாய் மாமன். கீழ் வரிசையில் நாலு சகோதரர்கள், மேல் வரிசையில் டவாலியின் கையில் என் அம்மா.

நடு ரோவில் என் அம்மாவின் தாய் தந்தை, இடது ஓரத்தில் தாய் மாமன். கீழ் வரிசையில் நாலு சகோதரர்கள், மேல் வரிசையில் டவாலியின் கையில் என் அம்மா.

என் அம்மா பிறந்தது தாய் மாமன் வீட்டில், அரியலூரில். ஆனால் அந்த சமயம் என் அம்மாவின் அப்பா இருந்த ஊர் ஸ்ரீவைகுண்டம். அங்கு தான் அவர் மழலைப் பருவம் கழிந்தது. அரசாங்க வேலையில் சம்பளம் நிறைய இல்லாவிட்டாலும் அரசாங்க குவார்டர்ஸ், வேலையாட்கள் என்கிற வசதிகள் நிறைய உண்டு. அதுவும் நான்கு ஆண் குழந்தைகளுக்குப் பின் ஒரு பெண் என்பதால் எல்லாராலும் சீராட்டப் பட்டார் என்றே சொல்ல வேண்டும். அண்ணன்கள் எல்லாருமே அந்தக் கால சூழலுக்கேற்ப மரம் ஏறுதல், விளையாட்டு என்பது சண்டையில் முடிதல் என்பது போல் இருந்ததால் என் அம்மாவும் ஒரு Tomboy தான். எதற்கும் அஞ்சமாட்டார்.

இன்னும் சொல்லப் போனால் இவர் ஒரு மருத்துவர் ஆகியிருந்தால் மிகவும் நல்ல பெயர் பெற்றிருப்பார். அண்ணன்களுக்கு அடிபட்டாலும் முதல் உதவி செய்வது இவராகத் தான் இருக்கும். யாரும் வீட்டில் இல்லாத பொழுது இவர் அண்ணன் ஒருவருக்கு முதுகு முழுக்கத் தேள் பல இடங்களில் கொட்டிவிட்டது. சிறுமியாக இருந்தாலும் உடனே கொட்டிய இடத்தில் எல்லாம் சுண்ணாம்பைத் தடவி முதலுதவி செய்திருக்கிறார். இவருக்கு முன் பிறந்த அண்ணனுக்கு சிறு வயதில் போலியோ நோய் தாக்கியதால் வலது கை செயலிழந்து விட்டது. அது இன்று வரை என் அம்மாவுக்குப் பெரிய குறை. அவர் உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணராக இன்று வலம் வந்தாலும் அவரின் உடற்குறை அவரை இன்றும் மனதளவில் வேதனைக் கொள்ள வைக்கும். பள்ளிக்குப் பேருந்தில் பயணம் செல்லும்போது முதலில் அண்ணனை பத்திரமாக வண்டியில் ஏற்றிவிட்டு அதன்பின் தான் இவர் ஏறுவாராம்.அதனால் ரொம்ப நாள் வரை அந்தப் பேருந்தின் ஓட்டுநர் இவரை தமக்கை என்றும் அவர் அண்ணனை தம்பி என்றும் நினைத்திருந்தாராம்.

ஸ்ரீவைகுண்டத்திற்குப் பிறகு என் தாத்தாவிற்கு பழனிக்குப் போஸ்டிங். எங்கள் தத்தா பாட்டி ஸ்ரீ வைஷ்ணவர்களாக இருந்தாலும் பலமுறை பழனி மலையை வலம் வந்தவர்கள். என் அம்மாவும் ஒரு வேலையாள் இடுப்பில் உட்கார்ந்தவாறு பழனி மலையை அவர்களுடன் வலம் வந்திருக்கிறார். அதன் புண்ணியப் பலனாகத் தான் எனக்கும் முருகன் அருள் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். முருகனே என் இஷ்ட தெய்வம்.

பழனிக்குப் பின் சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கடலூர், தூத்துக்குடி என் பல ஊர்களுக்கு என் பாட்டனாருக்கு transfer ஆனதால் சில சமயம் ஒரே வகுப்பைக் கூட இரண்டு வெவ்வேறு பள்ளிகளில் படித்திருக்கிறாராம். நடுவில் இரண்டு வருடம் அரியலூரில் தாய் மாமா வீட்டில் இருந்தும் படித்திருக்கிறார். அங்கும் மாமாவிற்கு ஐந்து ஆண் பிள்ளைகள் ஒரு பெண். அந்தப் பெண்ணே பின்னாளில் என் அம்மாவின் இரண்டாவது அண்ணனின் மனைவியாக வந்தார்.

அம்மாவிற்குப் படிப்பில் ரொம்ப ஆர்வம் கிடையாது ஆனால் அவர் எந்த விளையாட்டுப் போட்டியில் சேர்ந்தாலும் முதல் பரிசைத் தட்டிக் கொண்டு வந்துவிடுவார். நன்றாகப் பாடுவார். வீட்டில் பாட்டுப் பயிற்சி தரப்பட்டது. அதனால் பாட்டுப் போட்டிகளிலும், அண்ணன்கள் trainingல் பேச்சுப் போட்டிகளிலும் எப்பவும் அம்மாவிற்கு முதல் பரிசு தான். பின்னாளில் பாட்டுப் பயிற்சியைத் தொடர்ந்திருக்கலாம். சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை என்று நினைக்கிறேன்.

என் தாத்தா எந்தெந்த ஊரில் வேலை பார்த்தாலும் அதன் சுற்றுப்புறத்தில் இருக்கும் இடங்களுக்கு எல்லாம் கோடை விடுமுறைகளில் இவர்களை அழைத்துச் சென்றதால் என் அம்மா தென் இந்தியாவில் அநேக ஊர்களையும், கோவில்களையும், அருவிகளையும், நதிகளையும் பார்த்து இருக்கிறார். இயற்கையிலேயே இவருக்கு சரித்திரத்திலும் பூகோளத்திலும் மிகுந்த ஆர்வம். எந்த இடம் சென்றாலும் அவ்விடத்தின் கதையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுவார். இன்றும் கோவில்களுக்குச் சென்றாலும் சிற்பங்களையும் அந்தக் கோவிலைக் கட்டிய அரசரைப் பற்றியும் தெரிந்து கொள்ளவே மிகுந்த ஆர்வமாக இருப்பார்.

ஒரு முறை மகாத்மா காந்தியின் சொற்பொழிவைக் கேட்கவும் அவரை கண்ணால் கண்டு மகிழவும் இவரின் அம்மாவும் ஒரு அண்ணனும் மதுரைக்குச் சென்ற போது இவர் சிறுமியாக இருந்ததால் இவரை அழைத்துப் போகாதது இவருக்கு மிகுந்த வருத்தம். காந்தியைப் பார்க்க முடிந்த ஒரு அரிய வாய்ப்பை அவர் தவற விட்டதை நினைத்து அளவில்லா வருத்தமே. காந்திஜி சுடப்பட்டு இறந்த செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்டு இவர் காதில் விழுந்த பொழுது இவர் ஒரு கோவிலில் இருந்திருக்கிறார். விடாமல் கோவிலை வலம் வந்து இவர் கேட்ட செய்தி பொய்யாக இருக்க வேண்டுமே என்று இறைவனைப் பிரார்த்தித்து அழுதிருக்கிறார். இளம் வயதிலேயே அவருக்கு நிறைய தேசிய உணர்வு உண்டு. இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்று இருக்க மாட்டார். அரசியலில் நடப்பதைக் கூர்ந்து கவனிப்பார்.

பிராணிகளிடமும் நிறைய அன்பு! கால் ஒடிந்த பறவையோ, தாயில்லா பூனைக்குட்டியோ இவரின் பராமரிப்பில் நன்றாகிவிடும். இவர் இண்டர்மீடியட் இரு வருட படிப்பினை ஒரு வருடம் திருச்சியிலும், ஒரு வருடம் பாளையங்கோட்டையிலும் படித்து முடித்தார். பின்பு பட்டப் படிப்புக்கு இவரின் அண்ணன்களின் பிடிவாதத்தால் மெட்ராஸ் Queen Mary’s கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருட பட்டப் படிப்பை ஒரே ஊரில் படித்து சாதனை படைத்தார். படிப்பை விட எப்பவும் போல என் அம்மா மற்ற செயல்பாடுகளில் முன்னின்று, பல குழுக்களின் செயலாளராக பங்காற்றி Queen Mary’s கல்லூரி பிரபலமாக இருந்தார் 🙂

maggiegrad

என் அம்மா என் அப்பாவை திருமணம் புரிந்த பிறகு அவரின் கவலையற்ற வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து பொறுப்புள்ள தலைவியாக அவரை மாற்றியது. என் அப்பா மிகவும் எளிமையானக் குடும்பத்தில் மூத்த மகனாப் பிறந்து குடும்ப சுமையைத் தாங்கும் அவசியம் இருந்ததால்  என் அம்மா அவருக்கு உற்றத் துணையாக மாறி தோள் கொடுத்தார். என் தாத்தாவிற்கு என் அப்பாவை மருமகனாக்கிக் கொள்ள முக்கியக் காரணம் அவரின் நேர்மையும், கடின உழைப்பும், அன்பான அணுகுமுறையும் தான். இல்லாவிட்டால் ஒரே பெண்ணை இவ்வளவு பெரிய குடும்பத்தின் மூத்த மருமகளாகக் கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம்.

திருமண புகைப்படம்

திருமண புகைப்படம்

 

தாஜ் மகாலில்

தாஜ் மகாலில்

மேல் படத்தில் நான் என் அம்மாவுடன், கீழ் படத்தில் என் தம்பி.

மேல் படத்தில் நான் என் அம்மாவுடன், கீழ் படத்தில் என் தம்பி.

என் நான்கு அத்தைகளுக்கும் என் அம்மாவும் அப்பாவும் தான் திருமணம் செய்து வைத்தனர். ஒரு சித்தப்பா என் பெற்றோரின் திருமணத்திற்குப் பின் பிறந்தவர். சித்தாப்பாக்களைப் படிக்க வைத்து அவர்களுக்கும் திருமணம் நடத்தி எல்லா உறவுகளையும் என் அம்மா அரவணைத்துக் கொண்டாடினார். என் தந்தை வழி தாத்தா ரொம்ப சிம்பிள்டன். எளிமையானவர் ஆனால் சாமர்த்தியம் கிடையாது. என் பாட்டி முடிந்த வரை தன் சாமர்த்தியத்தில் குடும்பத்தை நடத்தினார். ஆனாலும் அவருக்கும் எல்லா சுமையையும் என் அப்பா மீது சுமத்தி விட்டது மனதுக்கு வேதனையை அளித்தது. என் பாட்டி கேன்சர் வந்து 63 வயதிலேயே இறந்து விட்டார். என் அப்பா அவருக்கு 13 வயதில் பிறந்தவர். தாயின் மேல் மிகுந்த பாசம் உண்டு. என் தாத்தா அதற்கு பின் பல வருடங்கள் நல்ல முறையில் வாழ்ந்து தனது 93வது வயதில் தான் இயற்கை எய்தினார்.

என் தந்தை முதலில் பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் நல்ல நிலைக்கு வர ரொம்பக் கஷ்டப்பட்டதால் பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இளம் வயது முதலே அவருக்கு இருந்தது. அதனால் அவர் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் செய்யும் சிறு தொழிற்சாலையை ஆரம்பித்தார். மிகவும் நல்ல முறையில் நடந்த அந்த தொழிற்சாலை, ஒரு பார்ட்னர் ஏமாற்றியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவர் தனியாகவும் இன்னொரு நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். அதில் பால் பேரிங்க்ஸ் செய்ய ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்டிற்கு நிறைய முதலீடு செய்ததால் அதிலும் பல பணப் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.

என் அம்மா தான் ஆபிஸ் நிர்வாகத்தை முதலில் இருந்து கவனித்து வந்தார். அவர் திருமணத்திற்குப் பிறகு என் தந்தையின் உந்துதலின் பேரில் B.Ed படிப்பையும் முடித்திருந்தார். ஆனால் ஆசிரியர் வேலைக்குச் சென்றதில்லை. மிகச் சிறந்த நிர்வாகி. என் தந்தை மிகப் பெரிய  பொறியாளர் ஆயினும் அதிர்ஷ்டம் இல்லை. பால் பேரிங்க்ஸ் அது வரை ஜப்பானில் இருந்தும் ஜெர்மனியில் இருந்தும் தான் இம்போர்ட் செய்யப்பட்டது. முதன் முதலில் ஒரு ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரியில் இன்டிஜீனஸ் மெஷீன்களுடன் உள்நாட்டு டெக்னாலஜியுடன் பால் பேரிங்க்சை தயாரித்த முதல் இந்தியர் என் தந்தை. ஆனால் ப்ரொடக்ஷன் காஸ்ட் அதிகம். வெளிநாட்டுப் பொருளின் குறைந்த விலையோடு  போட்டிப் போட முடியவில்லை.

எத்தனையோ பணப் பிரச்சினைகளையும், வங்கிக் கடன், தனியார் கடன் இவற்றை சமாளித்து என்னையும் என் தம்பியையும் நல்ல முறையில் வளர்த்ததில் என் தாயின் பங்கு மிகப் பெரியது. அவர் தைரிய லட்சுமி. எதற்கும் கலங்காமல், அடுத்து என்ன செய்வது என்று யோசித்து செயல் புரிந்தார்.

இதன் பின் தான் உண்மையான சோதனைக் காலம் ஆரம்பித்தது. என் தந்தைக்கு பார்கின்சன்ஸ் டிசீஸ் வந்துள்ளது தெரிய வந்தது. முதலில் அவரது வலது கை ஒத்துழைக்காமல் இருந்தது. அந்த சமயம் நான் திருமணம் முடிந்து அமெரிக்கா சென்று விட்டேன். பார்கின்சன்ஸ் டிசீசுக்கு இன்று வரை நோய் தீர்க்கும் மருந்து கண்டுபிக்கப் படவில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரின் அவயங்களை செயலிழக்கச் செய்யும். அந்த நோய் இந்தியாவில் பொதுவாக யாருக்கும் வருவதும் குறைவு. அதனால் நோய் பற்றிய ஞானமும் குறைவு. ஆனால் என் அப்பா மிக மிக பாசிடிவ் பெர்சன். எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்தவர், இதைக் கண்டும் அசரவில்லை.  பார்கின்சன்ஸ் நோயுடன் இருபது வருடம் போராட்ட வாழ்வு வாழ்ந்தார். நான் அவரைப் பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். படிப்படியாக அவர் தன் நிலையை உயர்த்திக் கொண்டு மனிதன் தெய்வ நிலையை, வாழும் போதே அடைய முடியும் என்னும் பாடத்தை எங்களுக்கு உணர்த்திச் சென்றார்.

இத்தனை நாள் வியாபாரத்தில் என் அப்பாவிற்கு வலது கையாக இருந்த என் அம்மா உண்மையில் உமையொரு பாகனாக மாறினாள். எத்தனையோ வருடங்கள் அம்மா தான் முழுக்க முழுக்கப் பார்த்துக் கொள்ளும் நிலையில் என் தந்தை இருந்தார். உணவு ஊட்டுவதில் இருந்து குளிப்பாட்டி விடுவது வரை எல்லாமே என் தாய் தான். உதவிக்கு ஆள் இருந்தும் பலப் பல விஷயங்கள் என் அம்மா ஒருவரால் தான் என் தந்தைக்கு சரியாகச் செய்ய முடியும். அதை இன்முகத்துடன் செய்தார் என் தாய். காந்தாரி திருதிராஷ்டிரனுக்குப் பார்வை இல்லை என்று தானும் தன கண்ணைக் கட்டிக் கொண்டாள், ஆனால் என் தாய் ஒரு படி மேல். என் தந்தைக்குக் கண்ணாகவே இருந்தாள்.

என் தந்தைக்கு என் தாய் மேல் மிகுந்த காதல், அன்பு, பாசம். பெரிய இடத்துப் பெண் தன்னை விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டது அவருக்கு மிகப் பெரிய பெருமை. அவர்களின் திருமணத்தில் K.B.சுந்தராம்பாள் கச்சேரியும், கொத்தமங்கலம் சுப்புவின் கச்சேரியும் நடைபெற்றது. தெரு அடைத்துப் பந்தல் போட்டு பாண்டிச்சேரியில் என் பெற்றோர் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதனால் என் தந்தை என் அம்மாவை மனத்தில் ராணியைப் போல தான் வைத்திருந்தார். மரகதம் என்ற என் அம்மாவின் பெயரை திருமணத்திற்குப் பின் அவர் மேகி என்று தான் சுருக்கி ஸ்டைலிஷ் ஆக அழைப்பார். அதனால் இன்றும் எங்கள் வீட்டுக் குழந்தைகள் என் அம்மாவை மேகி பாட்டி என்று தான் அழைக்கின்றனர் 🙂

என் அம்மாவிற்கு நிறைய படிக்கப் பிடிக்கும், உலக விஷயங்கள் அனைத்திலும் ரொம்ப ஈடுபாடு, எந்த டாபிக் பற்றியும் அறிவுசார்ந்து பேச முடியும். அன்பே நிறைந்த என் அம்மாவிற்கு உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தர எல்லாம் வல்ல இறைவனையும் என் தந்தையையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

சிங்கப்பூரில்

சிங்கப்பூரில்

 

 

 

என் தந்தையின் 80வது பிறந்த நாளின் போது.

என் தந்தையின் 80வது பிறந்த நாளின் போது.

 

என் வலைதளத்தில் இது என் நூறாவது இடுகை. இதை என் அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன் 🙂

 

Previous Older Entries