சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை – சிறுகதை

“அப்பா நாங்க திரும்ப அமேரிக்கா திரும்பி போறதுக்குள்ள நிறைய விஷயம் முடிவு பண்ணணும்.”

கிருஷ்ணமூர்த்தி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்து நிமிர்ந்து பார்த்தார். இரண்டு மகள்கள் ஒரு மகன் முன்னே நின்று கொண்டிருந்தார்கள். பேசியது வினோத் கடைசிப் பிள்ளை.

“என்ன முடிவு பண்ணனும்?”

கிருஷ்ணமூர்த்தியின் எண்பதாவது பிறந்த நாளுக்காக அவர்கள் வந்திருந்தார்கள். அம்மா இல்லை என்றாலும் முக்கியமான அகவை, கொண்டாட வேண்டும் என்று அவர்கள் பிரியப்பட்டதால் அவரும் ஒத்துக் கொண்டார். பெரிய சடங்காக செய்யாவிட்டாலும் நெருங்கிய சொந்தங்களை அழைத்து விருந்து கொடுத்துப் பிள்ளைகள் அசத்திவிட்டது அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் அழகாக தந்தையைப் பற்றி பேசி விடியோ எல்லாம் தொகுத்து வழங்கி வெளியூரில் இருக்கும் உறவினர்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்படி இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பி ஹைடெக்காக செய்தது, வந்த உறவினர்களை எல்லாம் என்ன இருந்தாலும் பசங்க அமெரிக்காவில் இருக்காங்க இல்லையா அதான் பிரமாதமா பண்ணிட்டாங்கன்னு பேச வைத்தது.

“அப்பா இந்த வீட்டை இடிச்சு நீங்க இருக்கும்போதே பிளாட் ப்ரொமோட் பண்ணிடலாம்பா. நாங்க எல்லாரும் அமெரிக்காவில் இருக்கோம் எங்களால பொறுப்பு எடுத்து அப்புறம் செய்ய முடியாது. பில்டர்ட கூட பேசிட்டோம். அமெரிக்காவில் என் ப்ரெண்டோட தம்பி இங்கே பெரிய பிளாட் டெவலப்பர். நல்ல டீல் தரான். நாலு பிளாட் நமக்கு நாலு பிளாட் பில்டருக்கு. நம்ம கையை விட்டு ஒரு பைசா செலவழிக்க வேண்டாம்.”

தீர்க்கமாக அவர்களை பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி. வினோத்துடன் அவன் சகோதரிகள் இசைந்து நிற்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.

“இது விஸ்வநாதனுக்குத் தெரியுமா? அவன்ட்ட பேசிட்டீங்களா? அவன் என்ன சொல்றான்?”

“அவன்ட்ட என்ன பேசறது? நாங்க சொன்னா அவன் என்ன வேண்டாம்னு சொல்லிடுவானா?”

“ஏன் அவன் தானே என் மூத்த பிள்ளை. அவனையும் தானே நீங்க கலந்து ஆலோசிக்கணும்? அவன் தான் என்னை இன்னிக்கு வரைக்கும் பார்த்துக்கிட்டு இருக்கான். அப்படியே டெவலப் பண்ணணும்னாலும் நான் போனப்புறம் அவன் பார்த்துப் பண்ண மாட்டானா? என்ன அவசரம் இப்போ? நீங்க எல்லாருமே வீடு வாசலோட அமெரிக்காவில் நல்லா தானே இருக்கீங்க?”

“அப்பா விசுக்கு என்ன தெரியும்? அவனை எல்லாரும் ஏமாத்திடுவாங்க.” இது வைஷாலி மூத்த மகள்.

“அவனுக்கு உங்களை மாதிரி படிப்பு வேணா வராம இருக்கலாம். ஆனா அவன் எல்லாத்தையும் பொறுப்பா செய்யறவன் தான். என்ன அவனுக்கு என்னமோ அதிர்ஷ்டம் இல்லை. வியாபாரம் ஓஹோன்னு வரலை. பொண்டாட்டியும் கோச்சுக்கிட்டு போயிட்டா, குழந்தையும் இல்லை. ஆனா அவனை ஏமாளின்னு சொல்லாதீங்க.

இப்போ ஒன்னும் இடிச்சு கட்ட வேண்டாம். நான் எல்லா விவரத்தையும் உயில்ல எழுதி வெச்சிருக்கேன்.”

“வில்லு எழுதியாச்சா? என்ன எழுதியிருக்கீங்க?”

“அது நான் போனப்புறம் தெரியும். வக்கீல் ரங்கசாமி கிட்ட கொடுத்து வெச்சிருக்கேன்.”

மூவரும் அவசரமாக அறையை விட்டு வெளியே வந்தனர். அப்பா காதில் விழும் தூரம் தாண்டியதும் ரெண்டாவது மகள் விமலா “பார்த்தியா இந்த விசு ஊமைக் கோட்டானாட்டம் இருந்துக்கிட்டு அப்பாவை உயில் எல்லாம் எழுத வெச்சிருக்கான். ஒரு வேளை அப்பா வீட்டை அவன் பேருக்கே எழுதி வெச்சிருப்பாரோ?”

குசுகுசுவென்று கொஞ்ச நேர கூட்டு உரையாடலுக்குப் பின் மூவரும் திரும்ப அப்பாவின் அறைக்குச் சென்றார்கள். “உயில் எழுதி வெச்சிருக்கேன்னு சொல்றிங்களே அப்போ எப்படி போகணும்னு எல்லாம் எழுதி வெச்சிருகீங்களா?”

“என்னது எப்படி போகணுமா?”

இல்லை வீட்டில போகனுமா இல்லை ஆஸ்பத்திரியிலா? வீட்டுல தானான்னு நீ நெனச்சா ஒரு ஸ்டேஜ்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தா கூட வீட்டுக்கு உங்களை கொண்டு வந்திடுனும்.” விஷாலி விளக்கம் கொடுத்தாள்.

“சப்போஸ் உங்களுக்கு உடம்பு சீரியஸ் ஆகி வெண்டிலேடர்ல போடறா மாதிரி ஆகிட்டுதுன்னா போடனுமா வேண்டாமா? அப்படியே டாக்டர்கள் போட்டுட்டா எப்போ எடுக்கணும்னு இதெல்லாம் நீங்க எழுதி வெச்சுட்டா தேவலை. அம்மாக்கு முடிவு பண்ண நீங்க இருந்தீங்க. உங்களுக்கு என்ன பண்ணும்னு நாங்க தெரிஞ்சிக்கணும் இல்லையா? இதெல்லாம் அமெரிக்காவுல ரொம்ப சகஜம். இப்போ மூளைச்சாவு ஏற்பட்டா ஆர்கன் டொனேஷன் நிறைய பேர் பண்றாங்க. உடம்பையே கூட தானமா கொடுத்துடலாம். நீங்க என்ன நினைக்கறீங்க?” இது விமலா.

சிவ சிவா என்று ஆயாசமாக சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. “எனக்கு கேடராக்ட் ஆபரேஷன் செஞ்ச டாக்டரிடமே என் கண் தானம் பத்தி எழுதி கொடுத்திருக்கேன் விமலா. உடல் தானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் இன்னும் பழைய நம்பிக்கைகள்ல ஊறியிருக்கேன். அப்படி ஒரு வேளை நான் அனாதைப் பொணமா போகனும்னு தலையில் எழுதியிருந்தா அதை யாராலும் மாத்த முடியாது. நல்ல சாவுன்னு எனக்கிருந்தா விசு என்னை இழுத்துப் போட்டிடுவான். அப்படி வெண்டிலேடர்ல என்னை போட்டுட்டாங்கன்னா அவனுக்குத் தெரியும் எப்போ பிளக்கை புடுங்கனும்னு, நான் எதுவும் எழுதி வைக்கத் தேவையில்லை.”

“அப்பா என்ன நீங்க எங்களை தப்ப புரிஞ்சுக்கறீங்க. இதெல்லாம் அமெரிக்காவில் தெளிவா எழுதி வெச்சிடுவாங்க. அந்த ஊர்ல அவங்க கடைப்பிடிக்கிற சில நல்ல விஷயங்களை நாமளும் கடைபிடிச்சா நல்லது தானே? இதுலலாம் செண்டிமெண்ட் பார்க்கனுமா? நீங்க வேணா புதுசா இன்னொரு உயில் எழுதுங்களேன். உங்களோட வக்கீல் கிட்ட வந்து எல்லாத்தையும் முடிச்சுக் கொடுத்துட்டு அப்புறம் ஊருக்குக் கிளம்பறோம்”

உயிலில் எழுதப்பட்டிருப்பது என்னனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா அவர்கள் இருப்பது கிருஷ்ணமூர்த்திக்குப் புரிந்தது. மூணு நாலு கோடி ரூபாய் சொத்துக்குப் பங்கு பிரிப்பதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து வேதனையாக இருந்தது அவருக்கு. பிள்ளைகளை இப்படியா வளர்த்திருக்கோம் என்று நொந்து கொண்டார்.

மாலையில் விசு தன்னுடைய கணினி பழுது பார்க்கும் கடையை மூடிவிட்டு வந்தபோது சகோதர சகோதரிகள் அவனுடன் சரியாகப் பேசாதது கண்டு அப்பாவிடம் வந்தான். “என்னப்பா யாருமே சரியா பேசலை, ஏதாவது பிரச்சினையா? இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவாங்களே. ஏதாவது வாங்கி பேக் பண்ணனும்னா நான் ஹெல்ப் பண்ணலாமேன்னு கேட்டேன். யாருமே சரியா பதில் சொல்லலை” என்றான்.

“ஒண்ணுமில்லை, விடுடா, அவங்கவங்க வேணுங்கறதை வாங்கி பேக் பண்ணிப்பாங்க. சின்ன குழந்தைங்களா என்ன? நீ போய் உன் வேலையைப் பாரு” என்றார்.

இரவு உணவு உண்ணும்போதும் மௌனமாகவே கழிந்தது. விஸ்வநாதனுக்கு வருத்தமாக இருந்தது. அவனுக்கு விமலாவுடன் நெருக்கம் அதிகம். “என்ன விமலா எல்லாரும் பேசாம இருக்கீங்க? மனசுக்கு வருத்தமா இருக்கு. அப்பாவோட ஏதாவது வாக்குவாதம் ஆச்சா? அவர் முகமும் வாடியிருக்கு” என்று கேட்டான்.

“ம்க்கும், ரொம்ப அக்கறை தான் போ உனக்கு. அப்பா உயில் எல்லாம் எழுதி வெச்சிருக்காரு. ஒரு வார்த்தை எங்களிடம் சொன்னியா?” என்றாள்.

“என்னது? அப்பா உயில் எழுதி வெச்சிருக்காரா? எனக்கே தெரியாதே. அப்படியே எழுதி வெச்சாலும் நல்லது தானே, நாம நாலு பேரு இருக்கோம், பிரச்சினை வேண்டாம்னு அப்பா விவரமா எழுதியிருப்பார். அப்பாக்கு எப்பவுமே எதையும் நியாயமா பண்ணனும்னு விருப்பம் தானே? என்றான் வெகுளியாக.

“நாங்க வீட்டை இடிச்சு பிளாட் பிரமோட் பண்ணலாம்னு சொன்னோம். அப்பா அதுக்கு ஒத்துக்கலை.” என்றாள்.

“ஏன் விமலா அதுக்கு இப்போ என்ன அவசரம்? அம்மா இருந்த வீடு இது. இன்னும் அம்மா இங்கேயே இருக்கிறா மாதிரி தான் நானும் அப்பாவும் நினச்சிக்கிட்டு இருக்கோம். அப்பா காலத்துக்குப் பின்னாடி அதெல்லாம் பண்ணலாமே. இப்படியா அப்பாக்கிட்ட பேசுவீங்க?”

“ஆமாண்டா உனக்கென்ன? ஓசில அப்பாவோட இருந்துக்கிட்டு இருக்க. அப்பா போனப்புறம் வீட்டை காலி பண்ணுவியோ மாட்டியோ. நாங்க அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு உன்னை கிளப்பவா முடியும்?

விதிர்விதித்துப் போய்விட்டான் விசு. இவர்கள் வரும் முன் வீட்டை ஒழுங்கு படுத்தி, ஒவ்வொருவர் வரும்போதும் விமான நிலையத்துக்குப் போய் தேவுடு காத்து அழைத்து வந்து, வேண்டிய இடத்துக்கு எல்லாம் கூட்டிப் போய், அதிக எடையினால் எடுத்துப் போக முடியாத சாமான்களை எல்லாம் போஸ்ட் ஆபிஸ் போய் தனியாக பார்செல் கட்டி அனுப்பி, ஒவ்வொரு முறை இவர்கள் எல்லாரும் வந்து போகும் போதும் ஒரு கல்யாணம் நடத்தி முடித்த ஆயாசத்தை எல்லாம் பொருட்படுத்தாது அன்புடன் செய்து வந்த அவனுக்கு இந்தப் பேச்சு முகத்தில் அறைந்தார் போல் இருந்தது. அதுவும் அம்மா இருக்கும்போது அம்மா தனியாக பலகாரம், பணியாரம், ஊறுகாய், பொடி வகைகள் என்று தனியாக செய்து கொடுப்பாள். அதையெல்லாம் கட்டி அனுப்புவதும் இவன் பொறுப்பு தான். இதையெல்லாம் வேலையாக நினைக்காமல் ஆசையா செய்தும் இவர்கள் எண்ணம் இப்படி உள்ளதே என்று அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் தனக்குக் குழந்தைகள் இல்லாததால் அவர்களின் குழந்தைகளின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் விசு. இவ்வளவு செய்யும் அவனுக்கு அவர்கள்  சேலில் வாங்கிய டி ஷர்டையோ ஒரு கைக் கடிகாரத்தையோ பெரிய பரிசுப் பொருளாக கொடுப்பார்கள் தங்கைகளும் தம்பியும். இவன் கடையில் வேலை பார்க்கும் மெக்கானிக்குகள் கூட போன் மாடல் சொன்னா வாங்கி வருவார்களா என்று கேட்பார்கள். இவன் தட்டிக் கழித்து விடுவான், எதற்கு அவர்களுக்குத் தொந்தரவு என்று! கேட்டாலும் வாங்கி வர மாட்டார்கள் என்பதை அவன் உள்ளுணர்வு சொல்லியிருக்கும்.

இரவில் எப்பவும் போல அப்பாவின் அறையில் அப்பாவுக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டான் விசு. “ஏதாவது வேணுமாப்பா?” ஒரு நீண்ட பெருமூச்சு பதிலாக வந்தது. போர்த்தி விட்டுவிட்டு பக்கத்து கட்டிலில் படுத்துக் கொண்டான்.

எதோ சத்தம் கேட்டு முழிப்பு வந்தது. ஹாலில் வினோத் போனில் உரக்க பேசுவது காதில் விழுந்தது. அதற்குள் அப்பா “எனக்கு தொண்டை வறட்சியா இருக்கு கொஞ்சம் தண்ணி கொடேன்” என்றார். பக்கத்தில் இருந்த செம்பில் இருந்து டம்ளரில் ஊற்றி அவரிடம் கொடுத்தான்.

“நீயே என் வாயில் விடு நான் எழுந்திருக்கலை” என்றார்.

என்ன இப்படி சொல்கிறாரே என்று தண்ணீரை வாயில் ஒரு மடக்கு விட்டான், கொஞ்சம் உள்ளே போனது மீதி வழிந்தது. வேகமாக எழுந்து விளக்கைப் போட்டான். அப்பா கண் மூடியிருந்தார். நாடிப் பார்த்தான் இல்லை. நெஞ்சை பலமுறை அழுத்தி விட்டான் ஆனால் மூச்சு திரும்ப வரவில்லை.

அறைக்கு வெளியே வந்தவனிடம் விஷாலி “டேய் வினோத் பையன் விகாஸ் காலேஜ்லேந்து ப்ரென்ட் வீட்டுக்குப் போகும்போது பெரிய கார் ஆக்சிடன்ட்ல மாட்டி நினைவில்லாம ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருக்காங்க. பிரெயின் டெட்டா இருக்க வாய்ப்பிருக்குன்னு டாக்டர்கள் சொல்றாங்களாம். இப்ப தான் ஜெயந்தி போன் பண்ணினா.” என்று கதறினாள்.

“அவன் ஆர்கன் டோனர் என்பதால வினோத் வர வரைக்கும் லைப் சப்போர்ட் சிஸ்டத்துல வெச்சுட்டு அவன் வந்தப்புறம் ஆர்கன்லாம் எடுத்துட்டு அதுக்கு அப்புறம் அவனுக்கு நாம விடை கொடுக்கலாம்னு சொல்றாங்களாம்.” என்றால் விமலா.

அழவும் திராணி இல்லாமல் உட்கார்ந்திருந்தான் வினோத்திடம் வந்தான் விசு.

“ஒன்னும் கவலைப்படாதே விகாசுக்கு சரியாகிவிடும். கொஞ்சம் பொறுமையா இரு. நல்ல சேதி வரும்.” என்றான்.

“எப்படி சொல்ற நீ?” நிமிர்ந்து பார்த்தான் வினோத்.

“அப்பா போயிட்டார் டா, இப்ப தான். விகாஸ் பொழைச்சிடுவான், அவனை அப்பா காப்பாத்திடுவார். எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் ஆக வேண்டிய காரியத்தைப் பார்த்துக்கறேன். நீ எது அடுத்த ப்ளைட்டோ அதில் கிளம்பிப் போ.” என்றான். விஷாலியும் விமலாவும் அப்பாவின் அறைக்குள் ஓட வினோத் விசுவைக் கட்டிக் கொண்டான்.

“இல்லை விசு நான் இருக்கேன். அப்பா காரியம் ஆன பிறகு கிளம்பறேன். நிச்சயமா விகாஸ் பொழைச்சிடுவான். நீ சொன்ன வார்த்தையை நான் நம்பறேன். கஷ்டம்னு வரும்போது தான் தெரியுது உறவு எவ்வளவு முக்கியம்னு. என்னை மன்னிச்சுடு விசு” என்றுக் கட்டிப்பிடித்து அழுதான் வினோத்.

அறைக்குள் சென்ற சகோதரிகள், அப்பா நாங்க பேசினது தப்பு தான் பா. இப்படி சொல் பொறுக்காம உடனே எங்களை விட்டுட்டுப் போயிட்டீங்களே என்று அழுவது விசுவின் காதில் விழுந்தது. கொஞ்சம் தாமதம் தான். ஆனா அப்பா மன்னித்து விடுவார் என்று நினைத்துக் கொண்டான்.

 

photo courtesy: https://www.dreamstime.com/stock-images-old-indian-man-senior-citizen-closeup-shot-isolated-against-white-background-image29737264

தேடினேன் வந்தது… நாடினேன் தந்தது… – சிறுகதை

“ஏங்க சரசு மாமனார் நேத்து கல்யாணத்துக்கு வந்திருந்தாரே அவர்ட்ட நம்ம குல தெய்வம் எந்த சாமின்னு கேட்டீங்களா?”

“கேட்டேன் கனகா, அவருக்கும் தெரியலை. அவங்க சாமி அழகு சுந்தரி அம்மனாம்.”

“அவங்களும் குளித்தலை தானே? அப்ப நம்ம சாமியும் அந்த அம்மனா இருக்குமோ?”

“இருக்காதாம். என்னமோ உறவு முறை எல்லாம் சொன்னார். அந்த சாமி நமக்கு வராதாம்.”

“எப்போ தான் நம்ம குல தெய்வம் நமக்குக் கிடைக்குமோ தெரியலை” சலித்துக் கொண்டாள் கனகா.

தியாகு உடனே அங்கே இருந்து எஸ் ஆனார். தொடர்ந்து வரும் கனகாவின் புலம்பல் அவருக்கு மனப்பாடம். மகனுக்குத் திருமணம் ஆகி ஏழாண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. மகளுக்கு இருபத்தி ஒன்பது வயதாகிறது ஆனா இன்னும் எந்த வரனும் சரியாக வரவில்லை. ஜோசியரிடம் போனதில் குல தெய்வ வழிபாடு விட்டுப் போயிருக்கு, அதனால் தான் இந்தப் பிரச்சினை எல்லாம் என்று சொல்லிவிட்டார்.

புகுந்த வீட்டார் மேல் முதலில் இருந்ததே இருந்த எரிச்சல் இதை கேட்டதில் இருந்து பன் மடங்கைகிவிட்டது கனகாவிற்கு. அவள் பதினெட்டு வயதில் திருமணம் ஆகி வரும்போது மாமியார் இறந்து சில வருடங்கள் ஆகியிருந்தன. ஒரே நாத்தனாரும் திருமணம் முடிந்து போய்விட்டிருந்தார். புகுந்த வீட்டுக்கு வந்த கனகாவுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் திராவிட கட்சியினர். சாமி நம்பிக்கையே கிடையாது. வீட்டில் ஒரு சாமி படம் கூட இல்லை. கனகாவோ பெருமாள் பக்தை. பிறந்த வீட்டில் எல்லாமே பெருமாள் தான். திருமணமான முதல் வாரத்திலியே பிறந்த வீடு திரும்பி விட்டாள், அப்பாவுடன் படை சண்டை போட!

“தெரிஞ்சு தான் அந்த இடத்தில் என்னை கொடுத்தீங்களா? அவங்க சாமியே கும்பிட மாட்டாங்களாம். வீட்டுல விளக்கேத்தறது கூட இல்ல. இப்படி புடிச்சு தள்ளிவிட்டுட்டீங்களே. எனக்கு கீழ ரெண்டு பொட்டப் பசங்க இருக்குன்னு தான் இப்படி பண்ணீங்க? ஒழுங்கா காலேஜ் படிப்பையாவது முடிச்சிருப்பேன்.” கையில் சிலம்பில்லாத கண்ணகி போல் அப்பா முன்னாடி நியாயம் கேட்டு நின்றாள். கனகா சந்தேகப்பட்டது என்னமோ நிஜம் தான். பையனின் அப்பா சோமசுந்தரத்துக்குக் கடவுள் நம்பிக்கை இல்லைன்னு அவள் அப்பா வைகுண்டநாதனுக்குத் தெரியும். நல்ல, படிச்சப் பையன், வசதியான குடும்பம், அதனால் அந்த இடத்தை விட்டுவிட அவருக்கு விருப்பம் இல்லை. கல்யாணத்தைக் கூட சோமசுந்தரம் சோபா கல்யாணமா தான் பண்ணனும்னு சொன்னார். ஆனா அதுக்கு வைகுண்டநாதன் ஒத்துக் கொள்ளவில்லை. சோமசுந்தரத்துக்கும் மனைவி இல்லாத வீட்டில், மகளும் திருமணம் ஆகி போய்விட்டதால் சமைக்க, வீட்டைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவையாக இருந்தது. இந்த விஷயத்தில் ரொம்ப முரண்டு பிடித்து இதற்கு முன் வந்த இரண்டு மூன்று பெண் வீட்டார் வேண்டாம் என்று போய் விட்டனர். அதனால் ஐயர் வைத்துக் கல்யாணம் நடத்த சரி என்று ஒத்துக் கொண்டார்.

மகளை சமாதனப் படுத்தினார் வைகுண்டநாதன். “நீ தான் அந்த வீட்டுக்குப் போயிட்ட இல்லம்மா, நீ விளக்கேத்து. இந்தா இந்தப் பெருமாள் படத்தை எடுத்துப் போய் வெச்சுக்க. நீ சாமி கும்பிடு. உன்னை என்ன சொல்லப் போறாங்க? உங்க மாமனாருக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ ஒண்ணும் கவலைப்படாதே” அப்படின்னு சொல்லி ஒரு பெரிய பெருமாள் படத்தை பேப்பரில் கட்டிக் கொடுத்து அடுத்த வண்டியிலேயே ஏற்றிவிட்டுவிட்டார்.

அவளும் குடும்பத்தை நன்றாகவே வழி நடத்தினாள். மாமனாரும் இவள் சமைத்துப் போடும் அருமையான சாப்பாட்டுக்கும், வீட்டை நிர்வகிக்கும் சிறப்பான திறனுக்கும் அடிமையாகி அவள் சாமி கும்பிடுவதை தடை செய்ய முடியவில்லை. இவளும் ஒரு பண்டிகை பாக்கி விடாமல் எல்லா பண்டிகைகளும் கொண்டாடினாள். இஷ்டப்பட்ட கோவில்களுக்கும் கணவனையும் அழைத்துக் கொண்டு போனாள். எங்காவது கடவுள் மறுப்பு குணம் பசங்களுக்கு வந்துவிடுமோ என்று பயந்து சின்ன வயதில் இருந்தே விழுந்து விழுந்து சாமி கும்பிட பழக்கி வைத்தாள்.

என்ன பண்ணி என்ன, இப்ப குலதெய்வம் யார் என்று தெரியாமல் திண்டாடுகிறாள். மாமனாருக்குக் கட்சி விசுவாசிகளிடம் இருந்த நெருக்கம் உறவினர்களிடம் இல்லை. அதனால் இவளுக்கும் அவர் பக்க சொந்தங்களிடம் பழக்கமில்லாமல் போய்விட்டது. நாத்தனாரும் தன்னால் முடிந்த அளவு தன் அப்பா வழி சொந்தங்களை கேட்டுப் பார்த்தாள். யாருமே குல தெய்வ வழிபாடு செய்வதாகத் தெரியவில்லை.

இது தெரிந்தவுடன் திரும்ப அவள் கோபம் உச்சிக்குப் போனது. ” உங்க குடும்பத்தில யாருமே சாமி கும்பிடறதில்லையாம். என்ன குடும்பமோ இது. ஒரு பொங்கல் வைக்கறது இல்லை, கிடா வெட்டறதில்லை. நம்ம பசங்களுக்கு மொட்டை அடிச்சு, காது குத்தினதில் இருந்து வேற சாமிக்குப் பண்ணி சாமி குத்தம் தான் சேர்ந்திருக்கு.” மூக்கைச் சிந்தினாள். இப்படி சில வருடங்களாக மூக்கைச் சிந்தி சிந்தி அவள் மூக்கே சிவப்பாகிவிட்டது.

“அம்மா எனக்கு விஜயவாடாவுக்கு டிரேன்ஸ்பர் ஆகியிருக்கு. அடுத்த மாசம் ஒண்ணாந்தேதி ஜாயின் பண்ணனும். விநிதா வேலையை விட்டுடலாம்னு இருக்காம்மா. அவளுக்கு சொந்தமா ஏதாவது பிசினஸ் பண்ணனும்னு தோணுது. அதனால அவளும் விஜயவாடா வரதுல சிக்கல் இல்லமா.” பெங்களூரில் இருந்து மகன் அருணிடம் இருந்து போன் வந்தவுடன் கனகாவுக்கு மனசுக்குள் சந்தோஷம். ரெண்டு பேரும் வேலை வேலைன்னு ராப்பகலா உழைக்கறதுனால தான் அவங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கலையோன்னு அவளுக்கு ஒரு சந்தேகம். மருமகள் வேலையை விடுகிறாள் என்றதும் கொஞ்சம் நிம்மதி!

விஜயவாடா போய் மூணு மாசத்துக்கெல்லாம் வினிதா முழுகாம இருக்கான்னு சேதி, இங்கே மகள் ரம்யாவுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்து ரெண்டே வாரத்தில் ஹோட்டலில் திருமணம். மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள் கனகா. எப்படி குலதெய்வத்தைக் கண்டுபிடிக்காம எல்லாம் நடந்ததுன்னு தியாகுவுக்கு மனைவியை நறுக்குன்னு நாலு வார்த்தை கேக்க ஆசை. ஆனா மனைவியிடம் அனாவசியமாக வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்னு அவரின் பகுத்தறிவு சொல்லியதால் வாயை திறக்கவில்லை.

ஒரு மாசம் எங்களோடு வந்து இருங்கம்மா, நீங்க கவலைப்பட்டதுக்கெல்லாம் இப்போ சந்தோஷமா இருக்க வேண்டியது உங்க முறைன்னு தங்கைக்குத் திருமணம் முடிந்த கையோடு விஜயவாடாவுக்குக் கூட்டிப் போனான் அருண். அபார்ட்மென்ட் அமைதியான ஒரு பகுதியில் இருந்தது. மேல் மாடியில் இருந்து கிருஷ்ணா நதி தெரிந்தது, கூடவே பக்கத்தில் ஒரு கோவிலும்.

“அது என்ன கோவில் வினிதா?”

“சாயங்காலம் அவர் வந்ததும் உங்களை கூட்டிக்கிட்டுப் போகலாம்னு இருக்கோம் அத்தை. உங்க பேர் உள்ள கோவில் தான். அம்மன் பேரு கனகதுர்கா. இந்த வீட்டுக்கு வந்ததும் பக்கத்து வீட்டு அக்கா எங்களை அந்தக் கோவிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. சின்னக் கோவில் தான். ஆனா அந்தக் கோவிலுக்குப் போனதும் எங்க ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு நிம்மதி ஏற்பட்டது. அடுத்த வாரமே எதோ கோவில்ல திருவிழா, விசேஷம்னு சொன்னாங்க. பக்கத்து வீட்டு அக்கா தான் நல்ல சக்தி வாய்ந்த அம்மன் வேண்டிகிட்டு ஏதாவது செய்யுங்கன்னு சொன்னாங்க. அருணுக்கு என்ன தோணிச்சோ தெரியலை அத்தை அபிஷேகத்துக்கும் பணம் கட்டி, பட்டுப் புடைவை வாங்கி அம்மனுக்கு சாத்தினார். அடுத்த மாசமே குட் நியுஸ் எங்களுக்கு. அதனால குழந்தை பெண்ணா பிறந்தா கனகதுர்கான்னு பேரை தான் வைக்கறதா இருக்கோம். அது உங்க பேருன்னும் இவருக்கு ரொம்ப சந்தோஷம்.”

ஆச்சரியமா இருந்தது கனகாவுக்கு. தான் கும்பிடற எல்லா தெய்வமும் இந்த சாமி மூலம் கண்ணைத் திறந்து பிரச்சனைகளை தீர்த்துவிட்டது என்று நினைத்துக் கொண்டாள். சாயங்காலம் அருண் வந்ததும் கோவிலுக்குப் போனார்கள். வினிதா சொன்னா மாதிரியே அம்மனைப் பார்த்தவுடனேயே கனகாவுக்கும் மனத்தில் அமைதி ஏற்பட்ட மாதிரி தோன்றியது. தெலுங்கில் பேசிக்கொண்டிருந்த குருக்கள் அருணைப் பார்த்ததும் தமிழில் வரவேற்றார். அம்மாவை அறிமுகம் செய்து வைத்தான் அருண்.

“தமிழ் பேசறீங்களே எப்படி தமிழ் தெரியும்” என்றாள் கனகா.

“நாங்க வீட்டுல தமிழ் தான் பேசுவோம்மா. இங்கே இருந்து பல தலைமுறை முன்னாடி தமிழ்நாடு போய் செட்டில் ஆன குடும்பம் எங்களது. மதுரை பக்கம் தான் எங்க உறவினர்கள் பெரும்பாலும் வசிக்கிறாங்க. திருமலை நாயக்கர் காலத்தில் குடிபெயர்ந்தோம். இதோ இந்த கனகதுர்கா தான் எங்க குல தெய்வம். இங்கே இருந்த பூசாரிக்கு மலேசியால மாரியம்மன் கோவில் ஒண்ணுல வேலை கிடைச்சுது. அதனால எங்கப்பாவை இங்க வந்து பார்த்துக்க முடியுமான்னு கேட்டாங்க. மதுரையிலேயே ரெண்டு மூணு கோவிலுக்கு அவர் இன்சார்ஜா இருக்கார். அவர் தான் நம்ம குல தெய்வக் கோவில், பூசாரி இல்லாம இருக்கக் கூடாதுன்னு என்னை போன வருஷம் அனுப்பினார். எனக்கும் என் மனைவிக்கும் இங்க ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இங்க இருக்கறவங்களுக்கு நல்ல பக்தி இருக்கு, கோவிலுக்கு நல்லா செய்யறாங்க. அதனால டெம்பரவரியா வந்த நாங்க இங்கேயே செட்டில் ஆயிட்டோம்” என்றார்.

“இங்க பொங்கல் வைக்கிற வழக்கம் இருக்கா?”

“அது இல்லம்மா, ஆனா என்ன வேணா பிரசாதமா செஞ்சு சாமிக்குப் படைச்சு இங்க வரவங்களுக்குக் கொடுக்கறது வழக்கம். உங்க பையன் கூட சக்கரை பொங்கல், வடைன்னு சாமிக்கு ரெண்டு மாசம் முன்னாடி படைச்சு எல்லாருக்கும் அவர் கையாலேயே கொடுத்தாரே.”

பெருமையாக மகனை பார்த்துக் கொண்டாள். நல்லா தான் வளர்த்திருக்கோம் என்று மனத்தில் பூரிப்பு!

ஒரு மாதம் மகிழ்ச்சியாக இருந்து விட்டு ஊர் திரும்பினாள். சாமி அறையை சுத்தம் செய்து விளக்கேற்றிக் கொண்டிருக்கையில் தியாகு உள்ளே வந்தார். “போனில் சொல்ல மறந்துட்டேன் கனகா. ரெண்டு நாள் முன்னாடி சரசு மாமனாரை எதேச்சையாக பஸ்ஸில் பார்த்தேன். அவர் சமீபத்துல தான் எங்கப்பாவோட பெரியப்பாவின் கடைசி மகனை மதுரையில் ஒரு கல்யாணத்தில் பார்த்தாராம். நாம குல தெய்வம் தேடறதை சொல்லி ஏதாவது விவரம் தெரியுமான்னு கேட்டிருக்காரு. அதுக்கு அந்த பெரியப்பா  நம்ம பூர்வீகம் தமிழ்நாடே இல்ல, ஆந்திரால விஜயவாடா அப்படீன்னு சொன்னாராம். அங்கே இருந்து மதுரைல செட்டில் ஆன குடும்பங்கள்ல நம்மதும் ஒண்ணாம். எங்க தாத்தா தான் மதுரைலேந்து குளித்தலைக்கு வந்துட்டாராம். விஜயவாடால ஏதோ அம்மன் தான் நம்ம குலதெய்வம்னு சொன்னாராம். அவர் போன் நம்பர் கொடுத்திருக்காரு. நீ வந்ததும் பேசலாம்னு நான் இன்னும் பேசலை” என்றார் தியாகு.

கண்களில் கண்ணீர் மல்க தன் ஹேன்ட்பேகில் இருந்த சின்ன கனகதுர்கா படத்தை எடுத்து சாமி மாடத்தில் நடுவாக அமர்த்தி சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வணங்கினாள் கனகா.

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு…… -சிறுகதை

“அண்ணே கல்யாணப் பொண்ணு யாரோடவோ ஓடிப் போயிடிச்சாம்.” சோத்துல கையை வைக்க இருந்த சண்முகத்திடம் கதிரு ஒடி வந்து சொன்னார். கையை உதறியபடி எழுந்த சண்முகம், “என்னடா சொல்ற? யாருடா சொன்னா?” என்றார் பதைபதைப்புடன். குழம்பு சட்டியுடன் நின்றுகொண்டிருந்த அவர் மனைவி யோகலட்சுமி சட்டியை கீழே வைத்துவிட்டுப் புடைவை தலைப்பை வாயில் பொத்தியபடி சமையல் அறைக்குள் சென்றார்.

“இப்ப தான் பொண்ணோட தாய் மாமன் போன் பண்ணாருண்ணே. உங்க கிட்ட சொல்ல பயந்துகிட்டு எனக்குப் போன் பண்ணாரு. இராத்திரியே ஓடிப் போயிடுச்சு போல, இவங்க காலையில் இருந்து சல்லடை போட்டு தேடியிருக்காங்க. எங்கேயும் காணலையாம். அதான் நமக்கு சொல்லிடலாம்னு எனக்குப் போன் பண்ணியிருக்காங்க.”

“இப்ப என்னடா பண்றது கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு? சபரீஷ் அந்தப் பொண்ணோட நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தான்!”

அதற்குள் சமையல் அறையில் இருந்து பல அழுகுரல்கள், சின்னதும் பெரிசுமாக விசும்பல்கள் இவர் காதில் விழ உள்ளே பார்த்து ஒரு சத்தம் போட்டார், “இதென்ன எழவு வீடா, அழுகையை முதல்ல நிறுத்துங்க. சொந்தத்துல வேற பொண்ணு இருக்கான்னு யோசியுங்க. குறிச்ச முகூர்த்தத்துல என் புள்ளை கல்யாணம் நடக்கணும்.”

“டேய் கதிரு இங்க வா” என்று வாசப் பக்கம் நகர்ந்தார் சண்முகம். “சத்திரக்காரன்லேந்து சமையல்காரன் வரை இப்ப கேன்சல் பண்ணா எவனும் பணத்தைத் திருப்பித் தர மாட்டான். நாம எடுத்திருக்கிறதோ சென்னையிலேயே பெரிய சத்திரம், பெரிய கேடரிங். பூக்காரன், மேளக்காரன், மியுசிக் பார்டின்னு எல்லாத்துக்கும் பணத்தைக் கொடுத்தாச்சு. வேற பொண்ணு பார்த்து அதே முகூர்த்தத்துல முடிக்கறது தான் சரி.”

“அண்ணே கோச்சிக்காதீங்க, ஆனா இப்ப ரெண்டு நாளுல யாரைப் பார்க்க முடியும்? சபரீஷ் முதல்ல இதுக்கு ஒத்துப்பானா? இருங்க பையன்ட்ட முதல்ல பேசறேன்.”

“ஹலோ தம்பி சபரீஷ்,”

“சொல்லுங்க சித்தப்பா”

“வந்து.. கல்யாணப் பொண்ணு யார் கூடவோ ஓடிப் போயிடிச்சாம்”

“என்னது?”

“டேய், போனை எங்கிட்ட கொடு டா. ஏண்டா பேப்பயலே அந்தப் பொண்ணு கூடப் பேசும் போதெல்லாம் அந்தப் பொண்ணு வேற யாரையோ லவ் பண்ணுதுன்னு கூடவா உனக்குப் புரியாம இருந்திருக்கு? என்ன கர்மம் டா இது. லட்ச லட்சமா கொட்டி செலவு செஞ்சு இப்படியா ஆகணும்!”

“அப்பா, என்னப்பா இது, எனக்கு ஒன்னும் புரியலை. நல்லா தாம்பா போன்ல பேசிக்கிட்டு இருந்தோம். எனக்கும் பெரிய ஷாக்கா தான் இருக்கு.”

“சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். கல்யாணத்தை கேன்சல் பண்ண முடியாது. எந்த காண்டிறேக்ட்காரனும் பணத்தைத் திருப்பித் தர மாட்டான். அதனால இந்த ரெண்டு நாளுல வேற ஒரு பொண்ணைப் பார்த்து உனக்கு அதே நாளுல கல்யாணம் பண்ணப் போறேன்.”

“லூசாப்பா நீங்க? நீங்க கை காட்டுற யாரோ ஒரு பொண்ணை பேசிப் பழகாம ஒரே நாள்ல எப்படி கல்யாணம் செஞ்சுக்கறது?”

“நீ தாண்டா லூசு. இன்னொரு பையனை லவ் பண்ணி அவனோட ஓடிப் போயிருக்கா, நிச்சயதார்த்தத்துக்குப் பின்ன மூணு மாசமா அவளோட பேசிக்கிட்டு இருந்திருக்க அது கூட உனக்குத் தெரியலை.”

“வெந்த புண்ல வேலைப் பாய்சாதீங்க அப்பா. எனக்குக் கல்யாணமே வேணாம். நீங்க பார்க்கிற இன்னொரு பொண்ணு மட்டும் நல்ல பொண்ணாவா இருந்துடப் போவுது?”

“அதுக்காக காலம் முழுக்கக் கல்யாணம் செய்யாம இருக்கப் போறியா? பண்ணுவ இல்ல? அதை இப்பவே பண்ணு. அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்க மூஞ்சில கரியைப் பூசனும். கல்யாண செலவு மாப்பிள்ள வீட்டுக்காரங்களோடதுன்னு அவங்களுக்குத் தெனாவெட்டு. இதே அவங்க செலவுன்னா இப்படி இருந்திருப்பாங்களா?”

“என்னப்பா பேசற? பொண்ணு ஓடிப்போச்சுன்னா அவங்க மட்டும் என்ன செய்வாங்க? அப்படியே நான் எப்பவாச்சும் கல்யாணம் பண்ணாலும் ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கறேன், உங்களுக்கு செலவு வைக்க மாட்டேன். ஆளை விடுங்க.” போனை கட் பண்ணிவிட்டு உடனே சத்திரத்துக்குப் போன் போட்டான் சபரீஷ்.

“நான் சபரீஷ் பேசறேன், பிப்ரவரி ரெண்டாம் தேதி ரிசெப்ஷன், மூணாம் தேதி கல்யாணத்துக்கு உங்க ஹால் புக் பண்ணியிருக்கோம்.”

“தெரியும் சார். வணக்கம் சார்.”

“அந்தக் கல்யாணம் நின்னுப் போச்சுங்க. அதனால வேற யாராவது கேட்டா ஹாலை கொடுத்திடுங்க. ஜஸ்ட் உங்களுக்குத் தகவல் சொல்லலாம்னு கூப்பிட்டேன். அந்தத் தேதில கல்யாணம் இல்லை.”

“என்ன சார் என்ன ஆச்சு? ஆனா இந்த லாஸ்ட் மினிட்ல யாரும் இனிமே ஹால் புக் பண்ண மாட்டாங்க. நாங்க பணம் ரீபண்ட் பண்ண முடியாதுங்க.”

“ரீபண்ட் பண்ண மாட்டீங்கன்னு தெரியும். உங்களுக்கு விஷயம் சொல்றேன் அவ்வளவு தான்.”

அடுத்து நளபாகம் நாராயணனுக்குப் போன் போட்டான். “சார் நான் சபரீஷ் பேசறேன்”

“சொல்லுங்க சபரீஷ், நீங்க சொன்ன ஸ்பெஷல் ஸ்வீட் வகையெல்லாம் தயார் பண்ண ஆரம்பிச்சிட்டோம். நாலாயிரம் பேரு ரிசெப்ஷனுக்குன்னா லேசுப்பட்ட விஷயமா? சும்மா அசத்திடுவோம். கல்யாணத்துக்கு வரவங்க எல்லாம் வருஷக் கணக்கா உங்க விருந்தைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருப்பாங்க.”

“சார் கல்யாணம் நின்னுப் போச்சு. அதனால நீங்க ஸ்வீட் பண்றதையும் நிப்பாட்டுங்க.”

“என்ன சார் சொல்றீங்க? நாளன்னிக்கு ரிசெப்ஷன். அடுத்த நாள் கல்யாணம். காய்கறிலேந்து எல்லாத்துக்கும் ஆர்டர் கொடுத்தாச்சு.”

“பணம் திருப்பி தரதைப் பத்தி இப்ப நான் உங்க கிட்ட பேசலை. எதுவும் சமைக்காதீங்கன்னு சொல்ல தான் போன் பண்ணினேன்.” போனை கட் பண்ணிவிட்டு தன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து தலையைத் தேய்த்துக் கொண்டான்.  ச்சே இப்படி ஆகிவிட்டதே, முகத்தை நண்பர்களிடம் எப்படி காட்டுவது என்று கவலைப்பட ஆரம்பித்தான்.

“டேய் உன் மச்சானுக்கு ஒரு பொண்ணு ரேவதின்னு காலேஜ்ல படிக்குது இல்ல கதிரு?”

“அண்ணே அதுக்கு பத்தம்போது வயசு தான் ஆகுது. நம்ம சபரீஷுக்கு இருபத்தியெட்டு.”

“அதனால என்னடா? இந்த மாதிரி பணக்கார சம்பந்தம் கிடைக்குமா அவங்களுக்கு? உன் மச்சான் என்ன பேங்க்ல ஆபிசரா தானே இருக்கான். கோடிக்கணக்கான சொத்துக்கு என் பையன் ஒரே வாரிசு. கசக்குதாமா அவங்களுக்கு? போன் போட்டுக் கேளு.”

போனை போட்டார் கதிரு. கொஞ்சம் யோசித்தாலும் சரி என்றார்கள். யோகலட்சுமி, சண்முகம் முகத்தில் திரும்ப புன்னகை வந்தது.

“அண்ணே உங்க போன்ல ரெண்டு மிஸ்ட் கால் இருக்குப் பாருங்க. ஒன்னு சத்திரம், இன்னொண்ணு கேடரர்.”

“எம்எல்ஏ வீட்டுப் பொண்ணுங்கறதால ரிசெப்ஷனுக்கு நாலாயிரம் பேருன்னு சொன்னோம். நாராயணன் கிட்ட நம்ம பக்கம் ஆயிரம் பேர் தான் வருவாங்கன்னு சொல்லணும். ஒரு ப்ளேடுக்கு ஆயிரம் ரூபா சார்ஜ் பண்றான்! முதல்ல எண்ணிக்கையை குறைக்க சொல்லணும்.” என்றபடி நாராயணனுக்குப் போன் செய்தார் சண்முகம். போன் போட்டதும், “என்ன சார் இது? உங்க பையன் போன் பண்ணி கல்யாணம் நின்னிடுச்சுன்னு சொல்றார் உண்மையாவா?” என்றது எதிர்முனை குரல்.

“அப்படியா? அதுக்குள்ளே உங்களுக்குப் போன் போட்டுட்டானா? இல்லல்ல கல்யாணம் நிக்கலை. வேற பொண்ணு பார்த்துட்டோம். ஆனா ரிசெப்ஷனுக்கு மூவாயிரம் விருந்தினர்களை கட் பண்ணிடுங்க. எம்எல்ஏ பொண்ணு இல்ல இப்ப, எங்க சொந்தக்காரப் பொண்ணு தான். அதனால ஆயிரம் பேருக்கு மேல வரமாட்டாங்க.”

“ஓ அப்படியா சார், நல்லது. ரொம்ப சந்தோஷம். கெஸ்டுங்க ஆயிரம் பேரு தானா? நல்லா யோசிச்சு சொல்லுங்க, ஏன்னா பத்து பர்சென்ட் வரைக்கும் முன்ன பின்ன இருந்தாதான் எங்களால சமாளிக்க முடியும். அதுக்கும் மேலன்னா நாங்க அல்லாடனும், ஒரு ப்ளேடுக்கு இத்தனைனு பெனால்டி போடுவோம்.”

“அதுக்கு மேல வராதுயா. வேலையைப் பாருங்க.”

“பார்த்தியாடா கதிரு இந்த சபரீஷை அதுக்குள்ளே நாராயணனுக்குப் போன் பண்ணி கல்யாணம் நின்னுப் போச்சுன்னு சொல்லியிருக்கான். அப்ப சத்திரத்துக்கும் சொல்லியிருப்பான்” என்றபடியே சத்திரத்துக்கும் போன் போட்டார். நினைத்தபடியே சபரீஷ் சொல்லியிருந்ததை நேராக்கினார்.

அடுத்து சபரீஷுக்குப் போனை போட்டார். கதிரு பக் பக் என்று பயத்துடன் காத்திருந்தார். இந்தப் பக்கம் அண்ணன் அந்தப் பக்கம் மச்சான். இந்தக் கல்யாணம் சரிவராமல் நாளை ஏதாவது பிரச்சினை என்றால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி கதை தான். உள்ளூர சபரீஷ் இந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்லிட வேணும்னு அங்காளம்மனுக்கு வேண்டிக் கொண்டார் கதிரு.

அந்த வேண்டுதல் நிறைவேறவில்லை. கதிரின் மச்சான் பெண் ரதி மாதிரி இருப்பாள். எம்எல்ஏ மகளை விட அதி ரூப சுந்தரி. எம்எல்ஏ மகளை சண்முகம் முடித்ததே வரும் சொத்துக்காகத் தான். நண்பர்கள் மத்தியில் மானம் போகாது, அழகான மனைவி இப்படி அதிர்ஷ்டத்தில் வருகிறாள் என்னும் இரண்டு காரணங்கள் சபரீஷ் மனத்தை மாற்றிவிட்டன. கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டான்.

ரிசப்ஷன் அன்று மதியமே இரு குடும்பத்தாரும் மணடபத்துக்கு வந்துவிட்டனர். “டேய் கதிரு, நாராயணன்ட்ட கரெக்டா சொல்லிடு ஆயிரம் பேர் தானுன்னு. எம்எல்ஏ சாப்பாட்டு செலவுல பாதிய எத்துக்கறேன்னான், கடைசில பொண்ணே ஓடிப்போச்சு. எல்லா செலவும் நம்மளோடுது தான்.”

“ரெண்டு தடவை அழுத்தி சொல்லிட்டேன் அண்ணே, அவரும் புரிஞ்சுகிட்டு நீங்க கொடுத்த அட்வான்சுக்கு மேல ஆகாதுங்கன்னு சொல்லிட்டாரு.”

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம்வர ஆரம்பித்தது. நெருங்கிய சொந்தம் எல்லாம் புது மணமகள் ரேவதிக்கு அடித்த யோகத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். மணமகன் சபரீஷ் ஷெர்வானியில் மினுமினுத்தான். மணமகள் ரேவதி டிஷ்யு புடைவையில் ஜொலிஜொலித்தாள். தூரத்து சொந்தமும் நட்பும் வர வர ஆச்சரியத்துடன் குசுகுசு என்று பேசி விஷயத்தைப் பகிர்ந்து கொண்டனர். நல்ல கூட்டம். நேரம் ஆக ஆக கூட்டம் அம்ம ஆரம்பித்து. நிறைய கரை வேட்டிகள்.

“டேய் கதிரு என்னடா இது நிறைய கூட்டமா இருக்கு. டைனிங் ஹாலுக்குள் நுழையவே முடியலை. எங்கே இருந்துடா இத்தனை ஜனம் வருது?”

“அதான் அண்ணே எனக்கும் தெரியலை. கரை வேஷ்டி கும்பல் எல்லாம் பார்த்தால் எம்எல்ஏவை சேர்ந்தவங்களாட்டம் இருக்கு”

“என்னது எம்எல்ஏ கட்சியாளுங்களா? அவங்க எதுக்குடா வந்தாங்க?”

அதற்குள் நளபாகம் நாராயணன் ஓடிவந்தார். “என்ன சார் நீங்க ஆயிரம் பேர் தான் வருவாங்கன்னு சொன்னீங்க, மணி ஏழரை தான் ஆகுது அதுக்குள்ளே இரண்டாயிரம் கிட்ட கணக்கு வருது. நான் பக்கத்துல இருக்கிற நீல்கிரீசுக்கு ஆளுகளை அனுப்பியிருக்கேன், மளிகை சாமான் வாங்க சொல்லி.”

தட்டு நிறைய ஸ்வீட் வகைகளை அடுக்கி அமுக்கிக் கொண்டிருந்த ஒரு கரை வேட்டியைப் பிடித்தார் சண்முகம், “நீங்க பொண்ணு வீடா பையன் வீடா?”

“என்ன சார் கேனத்தனமா கேக்கறீங்க. எங்க தலைவர் கல்வித் தந்தை இராமசாமி வீட்டுக் கல்யாணம் இது, பொண்ணு வீடு தான்.”

“ஏன்யா கல்யாண வீடுன்னா உள்ள நுழைஞ்சு இப்படி ஸ்வீட்டை அள்ளி வெச்சு சாப்பிடுவீங்களோ? உங்கத் தலைவர் பொண்ணு தான் யார் கூடவோ ஓடிப் போயிடுச்சே. எங்க இருக்காரு உங்கத் தலைவர் இங்க காட்டுப் பார்க்கல்லாம்.”

“இந்தக் கூட்டத்துல தலைவர எங்கத் தேடறது! என்னது அவர் பொண்ணு ஓடிப் போயிடிச்சா? அப்ப ஏன்யா மண்டப வாசல்ல எங்க தலைவர் பேரை போட்டு கல்வித் தந்தை இராமசாமி இல்லத் திருமணம்னு போர்டு வெச்சிருக்கீங்க?” அந்தக் கரை வேட்டி ஸ்வீட் தட்டைக் கீழே வைக்காமல் இன்னொரு கையால் சண்முகத்தை வாசலுக்குத் தரதரவென்று இழுக்காத குறையுடன் இழுத்துச் சென்று காட்டினார். பெரிய வளைவாக கல்வித் தந்தை இராமசாமி MLA, வணிக மன்னர் சண்முகம் இல்லத் திருமணம் என்ற வரவேற்புப் பலகை அலங்காரத்துடன் இவரைப் பார்த்து சிரித்தது, அதற்குப் பக்கத்திலேயே செந்தாமரை வெட்ஸ் சபரீஷ் என்ற பெயர் பலகையும்!

“எங்கக் கட்சித் தலைவரோட அம்மா பேரை தான் எங்க தலைவர் மகளுக்கு ஆசையா வெச்சாரு. அதான் செந்தாமரை. எல்லாம் பார்த்து தான் உள்ளே நுழைஞ்சோம். இப்ப என்னான்னா தலைவர் பொண்ணு ஓடிப் போயிடிச்சுன்னு சொல்ற? ஏன்யா எதிர்கட்சியா நீயி?” கோபமாக கேட்டுவிட்டு இனிப்புகளை ருசிக்க ஆரம்பித்தார் கரை வேட்டி.

வாசலில் நின்றுகொண்டிருக்கும் போதே அலையாக ஒரு நூறு கரை வேட்டிகள் இவர்களை ஓரமாகத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. சாப்பாட்டு எண்ணிக்கையை சமையல்காரரிடம் குறைக்க சொல்ல எடுத்துக் கொண்ட அக்கறையில் சிறிது ஸ்டேஜ் டெகரேஷன் ஆளிடம் புது மணமகள் பெயரைப் போடவும் எம்எல்ஏ பேரை போடாமல் இருக்க சொல்லவும் எடுத்துக் கொண்டிருக்கலாம் சண்முகம்! நளபாகம் நாராயணன் எவ்வளவு பணம் தீட்டப் போகிறாரோ என்று திக் பிரமைப் பிடித்து ஓரமாக உட்கார்ந்தார் சண்முகம்.

 

உணர்வுகள் தொடர்கதை… உறவுகள்..? – சிறுகதை

பதினஞ்சு வருஷம் கழிச்சு அந்தத் தெருவுக்கு வருகிறான் வருண். வசந்தி அக்கா வீடு இருக்குமா இல்லை இடிச்சு அடுக்குமாடி குடியிருப்பு வந்திருக்குமான்னு கொஞ்சம் சந்தேகம் அவன் மனத்தில். கூகிள் மேப்சில் பார்த்தபோது சரியா தெரியலை. ஆனா அவங்க வீடு அரை கிரவுண்டில் இருந்ததால் இடிச்சிருக்க வாய்ப்பில்லை, வித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். தெரு நிறைய மாறியிருந்தது. செட்டியார் கடை போய் அங்கே சூப்பர் மார்கெட் வந்திருந்தது. அவன் முன்பு குடியிருந்த வீட்டையே காணவில்லை. அங்கொண்ணும் இங்கொண்ணுமா சில மரங்களே இருந்தன. முன்பு தெருவே சோலையா குளுகுளுன்னு இருக்கும். கோடை விடுமுறைல கிரிக்கெட் ஆட அதுக்காகவே பக்கத்து காலனி பசங்களெல்லாம் அந்தத் தெருவுக்கு வருவாங்க. தெரு இன்னும் குறுகிப் போன மாதிரி அவனுக்குத் தோணியது. வசந்தி அக்கா வீடு தெரு கடைசில தான் இருக்கும், எனவே வீடுகளைப் பார்த்துக் கொண்டே பைக்கை மெதுவாக ஓட்டினான்.

அந்த நாட்களை அசை போட்டான் வருண். அந்தத் தெருவில அவன் வசிச்சபோது மூணு வீட்டுல தான் கொலு வெப்பாங்க. வசந்தி அக்கா வீடு, ராகேஷ் வீடு, கல்கண்டு ரோகினி அக்கா வீடு. ராகேஷ் வீட்டுல தான் பெரிய கொலு வெப்பாங்க. ஒன்பது படி. ஆனா அவங்க சரியான கருமிங்க. முதல் நாள் போயிட்டு அடுத்த நாள் போனா நேத்து தானேடா வந்து சுண்டல் வாங்கிண்டு போன? அப்படின்னு அந்த வீட்டுப் பாட்டி கேப்பாங்க. அதனால் அவங்க வீட்டுக்கு ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஒரு நாள் தான் போவாங்க. கல்கண்டு ரோகினி அக்கா வீட்டு சுண்டல், ஒண்ணு வேகாம இருக்கும் இல்லேனா உப்புக் கம்மியா இருக்கும். ஆனா எவ்வளவு தடவை போனாலும் கல்கண்டு அக்கா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்குக் குழந்தை இல்லை, அதனால சின்னப் பசங்க அவங்க வீட்டுக்குப் போனா எப்பவும் கல்கண்டு கொடுப்பாங்க. ஆனா வசந்தி அக்கா வீடு தான் சூப்பர். மூணு படி தான் வெப்பாங்க. பொம்மை எல்லாம் நல்ல உயரமா இருக்கும். ஆனா அவங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலகாரம் பண்ணுவாங்க. கோதுமையை வறுத்து சர்க்கரை ஏலக்காய் எல்லாம் போட்டு நெய் வாசனையா ஒரு பொடி பண்ணுவாங்க. அவ்வளவு நல்லா இருக்கும். நியுஸ் பேப்பர்ல தான் மடிச்சுத் தருவாங்க. சுண்டல் பண்ணுவாங்க. ஆனா எல்லாம் கொஞ்சமா காகிதத்துல பொட்டலம் கட்டிக் கொடுப்பாங்க. சாப்பிட்டு விட்டு இன்னும் கொஞ்சம் வேணும் போல இருக்கும் அவனுக்கு. அவங்க பையன் ராகவேந்தர் வருணைவிடப் பெரியவன், வருண் அஞ்சாவது படிக்கும்போது அவன் ஏழாவது. ஆனா தெருவுல எல்லாரும் சேர்ந்து தான் கிரிக்கெட் ஆடுவாங்க. அந்தப் பழக்கத்தில் தான் அவங்க வீட்டுக் கொலுவுக்குப் போவாங்க எல்லாப் பசங்களும். வருண் அந்தத் தெருவில் மூணு வருஷம் தான் இருந்தான். வாடகை ஏத்த ஏத்த அவன் அப்பா வீட்டை மாத்துவார்.

ராகவேந்தர் வீட்டைக் கண்டுபிடித்து விட்டான் வருண். அதே மாதிரி தான் இருந்தது. கேட்டுக்கு இந்தப் பக்கம் பப்பாளி மரம், அந்தப் பக்கம் முருங்கை மரம். இரண்டிலேயும் காய்கள் நிறைய தொங்கின. மெதுவா கேட்டைத் திறந்து கொண்டு வெராண்டா சுவத்தில் உள்ள அழைப்பு மணியை அடித்தான். வசந்தி அக்கா தான் கதவைத் திறந்தாங்க. ஒரு சிரமும் இல்லாமல் அவங்களை கண்டுபிடிச்சதில் ஒரு நிம்மதி வருணுக்கு.

“யாரு வேணும்?”

“அக்கா நான் தான் வருண். ராகவேந்தரோட ப்ரென்ட். செட்டியார் கடைக் கிட்ட இருந்த வீட்டுல ஒரு போர்ஷன்ல நாங்க இருந்தோம். எங்க அக்கா பேரு அஞ்சனா.  நியாபகம் இருக்கா?”

“உங்கம்மா பேரு ஜானகி தானே? நல்லா எம்பிராயடரி போடுவாங்க. அவங்க பையனா? ரொம்ப மாறி போயிட்ட. ராகவேந்தர் இப்ப துபாய்ல இருக்கான்பா. உள்ள வா” என்றபடி கதவை முழுசா திறந்தாங்க. வருண் ஹெல்மெட்டைக் கழட்டியபடி உள்ளே நுழைந்தான். வீடு அப்படியே தான் இருந்தது. புதுசா பெயின்ட் பண்ணியிருந்தாங்க. ராகவேந்தர் அப்பா படம் பக்கத்துல அவங்க பாட்டிப் படம் மாட்டியிருந்தது. அந்தப் பெரிய நிலைக் கண்ணாடியைக் காணோம்.

“இன்னும் ஸ்கூல்ல டீச்சரா இருக்கீங்களா அக்கா?”

“இல்லபா. VRS வாங்கி ஒரு வருஷம் ஆகுது. நிறைய பிள்ளைங்களுக்கு டியுஷன் எடுக்கறேன். ராகவேந்தர் தான் பிடிவாதமா வேலையை விடச் சொல்லிட்டான். நல்லா சம்பாதிக்கறான். நான் கூட துபாய் போயிட்டு வந்தேன். இப்ப நீ என்ன பண்ற? உங்கக்காக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”

“ஆயிடுச்சு கா. பெங்களூர்ல இருக்கா. அவளும் அவ புருஷன் ரெண்டு பேரும் சாப்ட்வேர் எஞ்சினியர்கள். அம்மாவும் அப்பாவும் அடிக்கடி போய் இருந்துட்டு வருவாங்க. நான் இங்க சென்னைல ஆங்கில வார இதழ் ஒண்ணுல ரிபோர்டரா இருக்கேன்.” பத்திரிகை பேரை சொன்னதும் அக்கா முகத்துல மகிழ்ச்சி.

“இவ்வளவு பெரிய பத்திரிக்கைல வேலை பாக்கறியா? வெரி குட். என்ன சாப்பிடற?”

“இல்லக்கா ஒன்னும் வேணாம். உங்க கூட சில விஷயங்கள் பேசணும். ரிபோர்டரா தான் வந்திருக்கேன்.”

“என்கிட்டே பேச என்ன இருக்கு? நான் இப்பப் பள்ள ஆசிரியையா கூட இல்லையே.”

“இப்ப சமீபத்துல சந்தியா தற்கொலை பத்தி தொலைக்காட்சி நாளிதழ்லலாம் பார்த்திருப்பீங்க இல்லக்கா? அவங்க வீட்டுல அவங்க மாமனாரும் கொழுந்தனாரும் பண்ணப் பாலியல் தொந்தரவுனால தற்கொலை பண்ணிக்கறேன்னு ஐஜி ஆபிசுக்கு ரெஜிஸ்டர்ட் தபால்ல கடிதம் எழுதி போட்டுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அவங்க அந்தப் பிரச்சினையை வெளிய யாரிடமும் சொல்ல முடியாம மன அழுத்தத்துல தான் தற்கொலை முடிவுக்குப் போயிருக்காங்கன்னு உளவியல் மருத்துவர்கள் கருத்துத் தெரிவிச்சிருக்காங்க.”

என்னை நிமிர்ந்து பார்த்தாங்க.”இதை எதுக்கு இப்போ என் கிட்ட சொல்ற?”

தொண்டையை செருமிக் கொண்டான், “அக்கா, ராகவேந்தர் அப்பா இறந்த வருஷம் உங்க வீட்டுல கொலு கிடையாதுன்னு எனக்குத் தெரியாது. எப்பவும் போல உங்க வீட்டுச் சுண்டல் வாங்கி சாப்பிட வந்தேன். உங்களுக்கு நினைவிருக்கான்னு தெரியலை.”

வசந்தி அக்கா முகம் கருத்து, சிறுத்துப் போய் பேசாம இருந்தாங்க.

“ராகவேந்தர் பாட்டி இங்க தான் சோபால மோட்டுவளையை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க. நீங்க கொலு இந்த வருஷம் இல்லப்பான்னு சொன்னதும் நான் கிளம்பத் திரும்பினேன். என் வாடின முகத்தைப் பார்த்து, இருப்பா ஏதாவது சாப்பிடக் கொடுக்கறேன்னு சமையல் அறைக்குப் போனீங்க. அப்ப அந்த எதிர் அறைல இருந்து ராகவேந்தர் சித்தப்பா சமையல் அறைக்கு வந்து உங்களைப் பின்னாடியில் இருந்து கட்டிப் பிடிச்சாரு. நீங்க அவரை தள்ளி விட்டுட்டு கன்னத்துல அறைஞ்சீங்க. அப்போ இங்க ஒரு பெரிய கண்ணாடி இருக்கும். நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அந்தக் கண்ணாடில எல்லாம் பார்த்தேன். பயந்து போய் உடனே எங்க வீட்டுக்கு ஓடிப் போயிட்டேன். இது வரைக்கும் இந்த விஷயத்தை நான் யார் கிட்டயும் சொன்னதில்லை.”

வசந்தியின் கண்கள் கலங்கி கன்னத்துல கோடு மாதிரி கண்ணீர் வழிந்தது. சுருக்கமா, “நீ கிளம்பு” என்றாள்.

“அக்கா, ப்ளீஸ் கா, உங்க பேரு, நீங்க எங்க இருக்கீங்க, நீங்க யாருன்னு எந்த விவரமும் வெளி வராது. ப்ராமிஸ் கா. இந்த மாதிரி கொடுமையை அனுபவிச்சவங்க எப்படி இந்தப் பிரச்சினையைக் கையாண்டாங்கன்னு எழுதினா நாலு பேருக்கு அதனால நல்லது நடக்கும். அதுக்காகத் தான் கேக்கறேன்கா.”

“வெளிய போகும்போது வாசக் கதவை மூடிட்டுப் போ” எழுந்து உள்ள போய் அறைக் கதவை சாத்திக்கொண்டாள் வசந்தி. தயங்கி நின்றான். பின் தன் விசிடிங் கார்டை மேஜை மேல் வைத்துவிட்டு வெளியே வந்து கதவை சாத்தினான்.

மனசு வேதனையாக இருந்தது அவனுக்கு. வசந்தி அக்கா வாழ்க்கையில பொருக்குத் தட்டிப் போயிருந்த ஒரு காயத்தைத் திரும்ப பேத்து இரத்தம் வழியவிட்டதை நினச்சு வருந்தினான்.

படுக்கை அறைக்கு வந்த வசந்திக்கு வேர்த்துக் கொட்டியது. பேனை பெரிசாக சுழலவிட்டாள். படுக்கையில் உட்கார்ந்தபடி அந்தக் கொடூரமான நிமிஷங்களை நினைத்துப் பார்த்தாள். “குமரன் என்ன காரியம் பண்றீங்க? நான் உங்க அண்ணி, அம்மா மாதிரி.” இன்னும் அவள் கொழுந்தனிடம் கோபமாகச் சொன்னது காதில் ஒலித்தது. “என்னோட இருங்க நீங்க, ப்ளீஸ். என் மனைவியோட நான் சந்தோஷமாவே இல்லை.” எல்லா ஆண்களும் சொல்லும் வசனத்தை தான் அவனும் சொன்னான். அவனைவிட்டு விலகி ஹாலில் மாமியார் முன் வந்து உட்கார்ந்து கொண்டதை நினைத்துக் கொண்டாள். இது உண்மையிலேயே நடந்ததா இல்லை தன் கற்பனையோ என்று ஒரு நிமிஷம் சந்தேகம் வந்தது வசந்திக்கு. ஆனால் இன்னும் அவனை அடித்தக் கை எரிந்து கொண்டிருந்தது. நடந்தது உண்மை தான் என்று உரைத்தது. அவன் அண்ணன் இறந்து இன்னும் முழுசாக ஒரு மாசம் கூட முடியவில்லை, இவனுக்கு எப்படி இப்படியொரு கீழ்த்தரமான எண்ணம் வந்தது என்று உடல் நடுங்கினாள்.

அவன் பிடித்த அவள் இடுப்பை அடுப்பில் வைத்து சுட்டுப் பொசுக்க வேண்டும் போலத் தோன்றியது அவளுக்கு. அவனுக்கு இந்த எண்ணம் வரும்படி எப்பவாவது தவறாக நடந்து கொண்டோமா என்று யோசித்துப் பார்த்தாள். அவன் வேலை விஷயமா விஜயவாடாவில் இருந்து வந்து இவர்கள் வீட்டில் தங்கும்போதெல்லாம் அவள் இரவில் நைட்டிப் போடுவதைக் கூட தவிர்த்து புடைவையிலேயே இருப்பாள். எப்படி இவள் இடுப்பை அவன் தொடவும், இவளை அடையவும் ஆசைப்பட்டிருக்கான் என்று நொந்து போனாள்.

வசந்தி கணவனுக்குக் கேன்சர் வந்தவுடன் துடித்துப் போனது குமரன் தான். கணேசனை ஒவ்வொரு கீமோ சிட்டிங்கிற்கும் அவன் தான் தவறாமல் அழைத்துப் போவான். விஜயவாடாவில் இருந்து ஒவ்வொரு முறையும் வந்து “அண்ணி நீங்க லீவ் எடுக்காதீங்க, நான் பார்த்துக்கறேன்” என்று கணேசனை பார்த்துப் பார்த்து ஒவ்வொரு கட்டத்திலும் தூணாக நின்று உதவினான்.

அவனுக்கு சொந்த பிசினஸ். மாமனார் பெரிய பணக்காரர். அவரின் கிரானைட் தொழிலை அவன் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதனால் அவன் விஜயவாடாவிலேயே மனைவியின் பெற்றோர் வீட்டுக்கருகில் வசித்து வந்தான். திருமணம் ஆகி மனைவி குழந்தை இருப்பவன் எப்படி இப்படி நடந்து கொண்டான்? அதுவும் அவன் அம்மா வீட்டில் இருக்கும்போது! நல்ல வேளை ராகவேந்தர் வீட்டில் இல்லை என்று அப்பொழுது நினைத்துக் கொண்டாள் வசந்தி.

படபடப்பு சற்று அடங்கியவுடனே மாமியாரிடம் நடந்ததை சொல்லிவிடத் துடித்தாள் வசந்தி. மாமியாருக்குக் குமரன் செல்வாக்கோடு இருப்பதிலும் அண்ணனுக்கு உதவி செய்ததிலும் அவன் மீது பெருமையோடு இருந்து வந்தாள். இவன் இப்படி நடந்து கொண்டதைக் கேட்டால் போயே போய்விடுவாள். அகாலமாக மகனைப் பறிக்கொடுத்த ஒரு தாய்க்கு இன்னொரு தண்டனையும் தேவையா என்று நினைத்தபடி அமைதியா இருந்தாள் வசந்தி. குமரன் இவள் சொன்னதை மாமியாரிடம் மறுத்து விட்டால், அவள் தன்னை நம்புவாளா இல்லை மகனையா என்று ஒரு பயமும் அவள் மனத்தில் ஓடியது. மாமியார் தன் கணவனின் மருத்துவச் செலவுக்காக அவளிடம் இருந்த கடைசி பொட்டுத் தங்கம் வரைக்கும் வசந்தியிடம் கொடுத்தவள். அப்படிப்பட்ட நல்லவளை வருத்த வசந்தி விரும்பவில்லை.

ராகவேந்தர் வந்ததும் அவனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு வெறும் வயிற்றுடன் அன்று தூங்கிப் போனாள், முதல் முறையாகப் படுக்கை அறைக்குத் தாள் போட்டுவிட்டு.

அடுத்த நாள் குமரனைக் கூப்பிட்டு இனி தன் வீட்டுக்கு தேவை இருந்தால் தவிர வரக் கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னதும் அவன் அதற்கு சரி சரியென்று தலையை ஆட்டிவிட்டு அம்மா அங்கு இருக்கும் சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வருவது குறையாமல் இருந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா அவள் மனத்தில் நிழலாடியது. அவன் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் உடம்பில் திராவகம் ஊற்றியது போல் எரியும். அவன் வேண்டுமென்றே அருகில் நெருங்கி நிற்க வரும்போது அவசரமாக விலகித் தலையில், முட்டியில் என அடிபட்டுக் கொள்வாள். அவனுக்கு சோறு போடுவதையே நிறுத்திவிட்டாள். எல்லாவற்றையும் மேஜை மேல் வைத்துவிட்டு உள்ளே சென்று விடுவாள். மாமியார் முடிந்தால் பரிமாறுவார். அல்லது அவனே எடுத்துப் போட்டு சாப்பிடுவான்.

முதல் வருஷ திவசம் முடிந்த அன்று அவன் ஊருக்குக் கிளம்பும் முன், “என்ன முடிவெடுத்தீங்க?” என்று கேட்டான். என்ன கேட்கிறான் என்று கூட வசந்திக்குப் புரியவில்லை. “என்ன கேக்கற?” என்றாள் எரிச்சலுடன். “இல்லை சேர்ந்து வாழறதைப் பத்தி யோசிச்சு முடிவெடுத்தீங்களா?” என்றான்.

நொறுங்கிப் போனாள் வசந்தி. பெண்ணென்றால் அவ்வளவு கேவலமா என்று கண்ணில் இருந்து அவளையறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவளுக்குக் கூடப் பிறந்தவர்கள் யாரும் கிடையாது. பெற்றோர் ஒரு பேருந்து விபத்தில் இவள் சிறுமியாக இருந்தபோதே இறந்து விட்டனர். அத்தை வீட்டில் வளர்ந்து, அத்தை தான் திருமணமும் முடித்து வைத்தார். எங்கே போய் நிற்பாள் அவள்? யாரிடம் இவனைப் பற்றி முறையிடுவாள்?

விடுவிடுவென்று வாசலுக்கு விரைந்தாள். அவனும் பின் தொடர்ந்து வந்தான். “பெட்டியை எடுத்துட்டு வா” என்றாள். அவன் எடுத்து வந்தான். ”இது தான் கடைசி முறை நீ இந்த வீட்டு வாசப்படியை மிதிப்பது. உங்கம்மாவை பார்க்கணும்னா நான் அவங்களை அங்க அனுப்பி வைக்கிறேன். இல்ல உங்கம்மாவை அங்கேயே வெச்சுக்க. என்னால தனியா இருக்க முடியும். என் முகத்திலேயே முழிக்காத இனிமேல்.”

அப்படியே வெராண்டாவில் தடாலென்று அவன் காலில் விழுந்தான் குமரன். “அண்ணி ப்ளீஸ் நான் பண்ணது தப்பு தான். நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடுங்க. நான் ராகவேந்தரைப் படிக்க வைக்கிறேன். என் அண்ணன் எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்காரு. வீட்டுக்கு வராதேன்னு மட்டும் சொல்லிடாதீங்க.”

“ஒரு நிமிஷத்துல உனக்கு மனசு மாறிடிச்சா? வா சேர்ந்து வாழலாம்னு உள்ளே சொல்லிட்டு இங்க கால்ல விழறியா? நம்பிடுவேனா? அவர் செஞ்சதுக்கு நீ காட்டற நன்றி இது தானா?” கதவை மூடித் தாள் போட்டுவிட்டு உள்ளே வந்தாள் வசந்தி. சோர்ந்து போய் உட்கார்ந்தாள். கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் எவ்வளவு கேவலமானவன் இவன் என்று வருந்தினாள். இப்படி நிராதரவாக விட்டுச் சென்ற அவள் கணவன் மேல் அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் வந்தது. ராகவேந்தரும் தன்னை போல் யாருமில்லாத ஒரு அநாதை தானா? சித்தப்பாங்கற ஓர் உறவும் இப்படி கேவலமா இருக்கே. பல நாளாக அழாதது எல்லாம் சேர்த்து வைத்து அழுதாள். சிறிது நேரத்தில் மனம் தெளிந்து எழுந்தாள்.

முகம் கழுவிக் கொண்டு மாமியாருக்குக் காபி போட்டு எடுத்துச் சென்றாள். மத்தியானம் பரீட்சை என்று பள்ளி சென்றிருந்த மகனிடமும் மாமியாரிடமும் குமரனைப் பற்றி சொல்லப் போவதில்லை என்று முடிவு செய்தாள். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பையனுக்கு இந்த அசிங்கம் தெரிய வேண்டாம் என்று நினைத்தாள். பெரியவன் ஆனதும் சொல்லத் துணிவு இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள்.

மாமியார் இருந்த அறைக்குச் சென்றவள் மாமியார் சோர்ந்து படுத்திருப்பதைப் பார்த்து விளக்கைப் போட்டாள். விளக்கைப் போட்டும் மாமியார் எழுந்திருக்காததைப் பார்த்து சந்தேகத்துடன் அவரின் கையைத் தொட கை சில்லிட்டுப் போயிருந்தது. மாமியார் வீட்டில் இருப்பதை கூட மறந்து குமரனிடம் இறைந்து கத்தியது அப்பொழுது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. சரிந்து தரையில் உட்கார்ந்தவள் மாமியார் தலையை தன் மடி மீது வைத்து மூக்கின் கீழே விரல் வைத்து மூச்சு வருகிறதா என்று பார்த்தாள். மூச்சு நின்று எவ்வளவு நேரம் ஆச்சோ!

தனியா வாழ்ந்து பிள்ளையை வளர்த்து ஆளாக்கி இன்னும் தனிமையே தோழியாய் இருக்கும் ஒரு வாழ்க்கை அவளுக்கு விதிக்கப்பட்டிருக்கு. கணவன் இறந்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் குமரன் செய்தது அவளின் மிச்ச வாழ்க்கையை முழுசாகப் புரட்டிப் போட்டு விட்டது. அத்தனை நல்ல மாமியார், அந்த கேடுகெட்டவன் முகத்தை இனிமேல் பார்க்கக் கூடாது என்று இறந்து போனார். ஆனால் அதனால பாதிக்கப்பட்டது குமரன் இல்லை. கணவனும் போன நிலையில் ஒரு நல்ல துணையை இழந்தது அவள் தான். எந்த வித்தியாசமும் இல்லாம ஆண்களுடன் பழகிவந்த அவள் எந்த ஆணையும் நம்புவதை அடியோடு நிறுத்தி விட்டாள். அதனால நஷ்டப்பட்டதும் கஷ்டப்பட்டதும் அவள் தான்.

ஹாலில் வந்து மேஜையின் மேலிருந்த வருணின் கார்டைப் பார்த்தாள். ஆண்கள் என்னைக்கும் எதனாலும் மாறப் போவதில்லை, எந்தக் கதையும் அவங்கள்ள கெட்டவங்களை திருத்தப் போவதில்லை என்று மனத்துக்குள் சிரித்துக் கொண்டாள். இதுல உலகத்துக்குச் சொல்ல அவளிடம் என்ன இருக்கு என்று அவன் வைத்துவிட்டு சென்ற கார்டை இரண்டாகக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டாள்.

Thanks for the images:

https://fr.dreamstime.com/images-libres-de-droits-couples-sur-la-moto-image31064659

http://www.touchtalent.com/artist/455971/pvr-murty

 

குமாராகிய நான்…… சிறுகதை

“நாளைக்கு அமாவாசை. நாளைக்குத் தாண்டாது.”

“ரெண்டு நாளா தண்ணி கூட இறங்கலை, வயிறும் உப்பி இருக்கே.”

“ஒண்ணுக்கு வெளிக்கு எதுவுமே போகலை.”

“கர் கர்னு இப்படித் தொண்டக் குழியில கடையுதேடீ”

சுத்தி இருக்கறவங்க பேசறதெல்லாம் என் காதில் விழுது. பாழும் வாய் தான் பேசவும், கண்ணு திறக்கவும் மாட்டேங்கிது. கண்ணுல நிக்கிற அம்முவைக் கட்டி முத்தம் கொடுக்க ரொம்ப ஆசையா இருக்கு ஆனா அதை சொல்லக் கூட முடியலையே.

indianchild

“உசிரு போவேனான்னு இழுத்துக்கிட்டு இருக்கே, அடியே, அம்முக்கு மொட்டை அடிச்சு காது குத்தணும்னு குமாரு சொல்லிக்கிட்டே இருந்தானே, அதை வேணா நாளைக்கு நாகாத்தம்மன் கோவில்ல போய் பண்ணிட்டு வந்திடு. அப்பவாவது நிம்மதியா போறானான்னுப் பார்க்கலாம்” பக்கத்து வீட்டு பாட்டி குரல் தான் இது. இன்னும் ஒரு மாசம் முடிஞ்சா தான் முப்பது வயசை தொடுவேன். முப்பது வயசு இளைஞனை அந்தக் கிழவி வழியனுப்ப அவசரப்படுது.

“அதையும் செஞ்சிடலாமே, ஏண்டா சுரேஷு நீ போய் அவன் பெண்டாட்டிட்ட கேட்டுட்டு வரியா?” பெத்த தாயே என்னை மேலே சீக்கிரம் அனுப்பத் துடிக்குது.

“என்னம்மா, என்னை போய் அந்த நாய் வீட்டு வாசல்ல நிக்க சொல்றியா?” இது அண்ணன்.

“என்னடா பண்றது, புள்ள அவ கிட்ட தானே இருக்கு. ஒரு எட்டு போய் கேட்டுடுடா. நாளைக்கு அம்முவை ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்னு சொல்லிடு. காலையில போய் மொட்டை அடிச்சு, காது குத்திடலாம். நம்ம தெருல இருக்கிறவங்களுக்கு மட்டும் கறி சோறு ஆக்கி போட்டுடலாம்.”

என் வீட்டுலேந்து நாலாவது வீடு தான் ஜென்னி வீடு. அப்படி தெருல பார்த்து பார்த்து தான் லவ் ஸ்டார்ட் ஆச்சு. ஞாயிறு ஆனா அவங்க வீட்டுல எல்லாரும் நல்லா டிரெஸ் பண்ணி மாதா கோவிலுக்குப் போவாங்க. அதுல ஜென்னி பளிச்சுன்னுத் தனியா தெரிவா. டேன்சர் ஆச்சே. எல்லா க்ரூப் டேன்சிலும் அவளைத் தான் முதல் வரிசைல நிக்க வெப்பாங்க. தெலுங்கு படத்திலும் தமிழ்ப் படத்திலும் அவளுக்கு நிறைய சான்ஸ் வரும். என் மெக்கானிக் கடைல இருக்கிற டிவில அவ டேன்ஸ் ஆடுன பாட்டு வந்தா ஸ்பேனர கீழ போட்டுட்டு பாட்டு முடியுற வரைக்கும் டிவி பொட்டியை விட்டு நகர மாட்டேன்.

groupdance

நானும் நல்லாத் தான் இருப்பேன் பார்க்க. அதான் அவளுக்கும் என்னை பிடிச்சிடுச்சு. நான் சொந்தமா கடை வெச்சிருக்கேன்னு மயக்கிடிச்சுன்னு அம்மா தான் பேசிக்கிட்டே திரிஞ்சிது. நான் நாலாம் கிளாஸ் தான் படிச்சிருக்கேன். ஜென்னி ப்ளஸ் டூ. ஒரு நாள் கால் ஷீட்டுக்கு அது மூவாயிரம் ரூபாய் வாங்கும். அது ஏன் என் கடையைப் பார்த்து மயங்கனும்? சினிமால டேன்ஸ் ஆடுற பொண்ணுன்னு அம்மாக்குப் பிடிக்கலை. அதுக்கும் மேல அது கிறிஸ்டியன் வேற!

நான் பத்து வயசிலேயே படிப்பும் வராம, வழிகாட்ட அப்பாவும் இல்லாம ஒரு மெக்கானிக் கடைல போய் வேலைக்குச் சேர்ந்தேன். அது என்னவோ நான் கை வெச்சா எந்த டூ வீலருக்கும் உடனே உசிர் வந்திடும். முதலாளி எல்லா பைக்கையும் என்னைத் தான் முதல்ல பார்க்க சொல்லுவாரு. அவர் ஒரு நாள் பஸ் ஏக்சிடன்ட்ல திடீர்னு செத்துப் போனதும் அவரு கஸ்டமருங்க எல்லாம் என்கிட்டே வர ஆரம்பிச்சிட்டாங்க. மரத்தடில வேலை பார்க்க ஆரம்பிச்ச நான் சீக்கிரமே பக்கத்துல ஒரு கடையை தொறந்துட்டேன்.

இருபது வயசுல கடை ஓனர் நான். நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சேன். குடி, சிகரெட்டு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது.ஜென்னி என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னப்ப எதுனால என்னைப் பிடிச்சிருக்குன்னு கேட்டேன். இதத் தான் சொல்லிச்சு. சினிமால நடிக்கிறவங்க, ஏன் நம்ம ஏரியால இருக்கிறவங்க எல்லாருமே சிகரெட்டு, தண்ணின்னு இருக்காங்க. நீ நல்லா சம்பாதிச்சாக் கூட அப்படி இல்லைன்னிச்சு.

கொஞ்ச நாள்லயே ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் ரொம்பப் பிடிச்சுப் போயி ரெண்டு குடும்ப எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். ஜென்னி தான் வேற வீடு பார்க்க வேணாம் இங்கேயே இருக்கலாம்னு சொல்லிச்சு. அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஜென்னி சினிமால டேன்சர்னு எப்பப் பார்த்தாலும் கேலி பேச்சு. என்னோட ஆத்தா அது கிரிஸ்டியனுன்னு நின்னா குத்தம் உக்காந்தா குத்தம்னு திட்டிக்கிட்டே இருந்தாங்க.

மூணே மாசத்துல தனிக் குடித்தனம் போயிட்டோம். அப்போ அம்மு அவ வயத்துல ரெண்டு மாசம். ஆறு மாசம் வரைக்கும் டேன்சுக்குப் போனா, அப்புறம் முடியலை. எனக்கு அவ்வளவு சந்தோசம். கடையிலேயே என்னோடயே உக்காந்திருக்கும். கடைக்கு வர கஸ்டமர்ட்ட நல்லா பேசும். அம்மு பிறந்த அன்னிக்கு தெரு முழுக்க எல்லாருக்கும் ஜிலேபி வாங்கிக் கொடுத்தேன். எங்க ஆத்தாவும் அண்ணனும் அண்ணியும் கூட சந்தோஷமா இருந்தாங்க.

மூணு மாசத்துலேயே திரும்ப டான்ஸ் ஆட சான்ஸ் வர ஆரம்பிச்சுது. நான் போக வேணாம்னு சொன்னேன். அதுல ஆரம்பிச்சுது சின்ன சின்னத் தகராறு. சரி வா அம்மா வீட்டோட போயிடலாம், அம்மா குழந்தையைப் பார்த்துக்கும், நீ ஷூட்டிங் போலாம்னு சொன்னேன். அதெல்லாம் வேணாம், எங்கம்மாட்ட விட்டுட்டுப் போறேன். என் தங்கச்சி ஸ்கூலேர்ந்து வந்த பார்த்துப்பான்னா. பாலு கொடுக்கறதையும் நிப்பாட்டிட்டு புட்டி பால் கொடுக்க ஆரம்பிச்சா. பாப்பாக்கு வயிறே ஆங்கலை. எப்பப் பார்த்தாலும் அழுக. அதுவும் நடு ராத்திரில வீல்னு கத்தும். ஜென்னி டேன்ஸ் ஆடிட்டு வந்த அசதில எந்திரிக்கக் கூட மாட்டா. நான் தான் பாலைக் கரைச்சுக் கொடுப்பேன். வேக வேகமா குடிக்கும். கொஞ்ச நாள் பார்த்தேன் பொறுக்கலை. ஒரு வருஷம் கழிச்சு தான் வேலைக்குப் போயேன். கொழந்த தவிக்குது பாரேன்னேன். எங்கேர்ந்து தான் இத்தனை கோபமோ, சான்ஸ் கிடைக்கறப்பப் போகணும். ஒரு வருஷம் போகாம இருந்துட்டா அப்புறம் யாரு சான்ஸ் தருவாங்கன்னு சத்தமா கத்த ஆரம்பிச்சிட்டா. இவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்ல.

சோறு ஆக்கறதும் நினைச்சப்பத் தான். நான் ஓட்டல்ல வாங்கி துன்னறது பார்த்துட்டு அம்மா தினம் வீட்டாண்ட வந்து சாப்பிட சொல்லிச்சு. மத்தியானம் தினம் சாப்பிடப் போனேன். அண்ணனுக்கு ஈபில லைன் மேன் வேலை. அது இருக்காது. ஆனா அண்ணி இருக்கும். ஜாடை மாடையா பேசிச்சு. அதனால அம்மாவை எங்க வீட்டுக்கு வரச் சொல்லி சாப்பாடு செய்யச் சொன்னேன். அப்படியே ஜென்னி அம்மா வீட்டிலேந்து பாப்பாவை இங்கக் கொண்டாந்து கொஞ்ச நேரம் பார்த்துக்க சொன்னேன்.

ஜென்னி வீட்டுல புள்ளை அழுதுகிட்டு இருக்கும். ஆனா ஜென்னியோட அம்மா அதும் பாட்டுக்கு டிவி பார்த்துக் கிட்டு இருக்கும். காது தான் கேக்காதோன்னு தோணும். அடிக்கடி ஜலுப்பு ஜுரம்ன்னு பாப்பாக்கு வர ஆரம்பிச்சுது. ஆசுபத்திரிக்கும் பாப்பாவை தூக்கிக்கிட்டு அம்மா தான் ஓடும்.

ஷூட்டிங்ல ஓவர் டைம்னு சில நாளைக்கு லேட்டா வர ஆரம்பிச்சா ஜென்னி. ஒரு நா எவனோ ஒருத்தன் பைக்ல கொண்டாந்து விட்டான். கேட்டா அவனும் டேன்சர் தான், ஆட்டோவே கிடைக்கலை அதான் கொண்டாந்து விட்டான்னு சொல்லிச்சு. எனக்கு தான் இப்போ நல்லா பணம் வருதே பாப்பாவை எதிர் வீட்டு ஆயாக்கிட்ட காசு கொடுத்துப் பார்த்துக்கச் சொல்லலாம். உங்கம்மா என்னை எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க. அவங்க ஒன்னும் இனிமே பார்த்துக்க வேணாம்னு சொல்ல ஆரம்பிச்சா.

இதக் கேட்டு ஆத்தாக்கு ரொம்பக் கோபம். அடிச் சிறுக்கி, உன் கொழந்தைய உன்னால பார்த்துக்க முடியாதுன்னு ஆயாவ காசுக் கொடுத்து வேலைக்கு வெப்பியான்னு அடிக்கவே போயிடிச்சி. அப்புறம் தினத்துக்கும் சண்டை தான். திடீர்னு ஒரு நாள் வந்து ஒரு வாரம் அவுட் டோர் ஷூட்டிங் போகணும்னு சொல்லுச்சு. பெரிய ஹீரோ படம். கண்டிப்பாப் போகணும்னு ஒரே அழிச்சாட்டியம். கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய அவுட் டோர் போகும். கல்யாணத்துக்கு அப்புறம் அதான் மொத தடவ. போகாதன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேக்கலை. சூட்கேஸ்ல துணிய எடுத்து வெச்சுட்டு கிளம்பிடுச்சு.

அம்மா தான் ஒரு வாரம் முழுக்க பாப்பாவை பார்த்துக்கிச்சு. அண்ணியும் தான். ஜென்னி அம்மா வீட்டுக்கே குழந்தைய அனுப்பலை. ரெண்டு நாளுக்கு ஒருக்கா போன் பண்ணி விசாரிச்சிக்கிடிச்சி ஜென்னி. எவனோ ஒருத்தனோட பைக்ல வந்து இறங்கினதுலேந்தே என் மனசே சரியாயில்லை. ஓரு வாரம் ஜென்னி ஊர்ல இல்லாத போது ஏதேதோ எண்ணம் மனசுல. அவனும் கூட அவுட்டோர் வரானான்னு கேட்டதுக்கு என்னை முறைச்சிட்டு ஆமாம் அதுக்கென்னன்னு கேட்டுட்டுப் போனா. அதுவரைக்கும் டாஸ்மாக் பக்கமே போகாத நான் அந்த வாரத்துல ரெண்டு மூணு நாள் போயிட்டு வந்தேன். அங்கே போய் ரெண்டு கட்டிங் போட்டா மனசு லேசான மாதிரி இருந்துது.

ஒரு வாரத்துல ஷூட்டிங் முடியாம இன்னும் ரெண்டு நாள் கூட இருந்துட்டு வந்தா. அவ திரும்பி வந்தன்னிக்கு நான் டாஸ்மாக் போயிட்டு லேட்டா தான் வீட்டுக்கு வந்தேன். கிட்ட வந்து குடிச்சிருக்கியான்னு கேட்டா. அமா, அதைப் பத்தி உனக்கென்னன்னு நானும் திமிரா பதில் சொன்னேன். அப்புறம் என் கூட சரியாவே பேசலை. ரெண்டு நாள் வீட்டிலேயே இருந்தா. ரெண்டு நாளும் வேணும்னுட்டு குடிச்சிட்டே வந்தேன். திரும்ப ஷூட்டிங்கிற்கு போயிட்டு சாயந்திரமா அதே ஆளோட பைக்ல வந்தா. ஆனா நாலு மணிக்கே வந்துட்டா. நான் எப்பவும் அந்த சமயத்துல கடைல தான் இருப்பேன். ஆனா அன்னிக்கு வீட்டுல இருந்தேன். வண்டியை விட்டு இறங்கும்போது அவனை உரசிகிட்டே வண்டிய விட்டு இறங்கினா. என் நெஞ்சில் யாரோ எசிட் பாட்டிலை கவுத்தா மாதிரி இருந்தது.

நான் ஜன்னல் வழியா பார்த்தது அவளுக்குத் தெரியலை. என்ன சீக்கிரம் வந்துட்டன்னு கேட்டேன். உடம்பு சரியாயில்லைன்னு சொன்னா. நேரா படுக்கப் போயிட்டா. அவ செல் போன் எடுத்துப் பார்த்தேன். ஆனந்துன்னு ஒரு நம்பருக்கு நிறைய கால் போயிருந்தது. அதை நான் தனியா என் போனில் சேவ் பண்ணிகிட்டேன். அவ உரசிக்கிட்டு இறங்கினது என்னை ரொம்ப உறுத்த ஆரம்பிச்சுது. நேரா டாஸ்மாக் போயிட்டு என்னிக்கும் இல்லாத அளவு குடிச்சிட்டு வந்தேன். என்னை பார்த்துட்டு உனக்கு இந்த கருமாந்திர பழக்கம் இல்லேன்னு தானே உன்ன கட்டிக்கிட்டேன், இப்படி குடிக்க ஆரம்பிச்சிட்டியேன்னு திட்டினா.

ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்கு வரும்போது ஆத்தாவும் ஜென்னியும் பயங்கரமா சண்டை போட்டுக் கிட்டு இருந்தாங்க. ஆத்தா ஜென்னி வீட்டை விட்டு வெளிய துரத்திக் கிட்டு இருந்துச்சு. சண்டையை விலக்கி என்னன்னு கேட்டா அம்மா வாயிலையும் வயித்திலேயும் அடிச்சிக்கிட்டு நான் தலை தலையா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா? இந்தச் சிறுக்கி வேணாம்னு சொன்னேனே கேட்டியான்னு அழுவுது. அவ ஒண்ணும் சொல்லாம முறைச்சுக்கிட்டு நின்னா. திடீர்னு புள்ளையை தூக்கிக்கிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினா ஜென்னி. என்னடின்னு கேட்டா, இப்படி சந்தேகப் படற உன்னோட இனிமே வாழ விருப்பம் இல்லை, உன்ன பிடிக்கலை. நான் போறேன்னு போயிட்டா.

எனக்கு அவ பின்னாடி போறதான்னு தெரியலை. அம்மா பக்கத்துல வந்து போகட்டும்டா அவ எவனோடயோ ஊர் மேயறா. அன்னிக்கே பக்கத்துத் தெருல இருக்கிற போட்டோ கடைக்காரன் என்கிட்டே சொன்னான். அவன் ஏதோ ஷூடிங்கல போட்டோ எடுக்கப் போயிருந்தானாம். ஜென்னியும் இன்னொருத்தனும் கொஞ்சிக் குலாவிக்கிட்டு இருந்தாங்க, பாவம் குமாருன்னு சொன்னான். இன்னிக்கு எவன் கூடவோ ஒட்டிக் கிட்டு பைக்ல வந்து இறங்கினா. யாருடி அவன்னு கேட்டா நீ யாரு அதை கேக்கன்னு கத்தரான்னுச்சு.

எனக்கு ஜென்னி மேல உசுரு. அது தப்புப் பண்ணும்னு நெனைக்க முடியல. அவங்க வீட்டுக்குப் போயி அவ ஜடையை புடிச்சு ஏண்டி வீட்டை விட்டுக் கிளம்பி வந்தேன்னு கத்தினேன். குடிச்சிட்டுப் போயிருக்கக் கூடாது. நான் போட்ட சத்தத்துல அம்மு அழ ஆரம்பிச்சிடுச்சு. இதப் பாரு, நீயும் உங்கம்மாவும் என் மேல சந்தேகப் படறீங்க. நான் உன்னை நம்பி இல்லை. என் சொந்தக் கால்ல நிக்க முடியும். முதல்ல நீ குடிக்கறதை நிறுத்திட்டு வந்து பேசுன்னிச்சு. இப்படியே ஒரு மாசம் போச்சு. நானும் அவ அம்மா வீட்டு வாசப் படிய அதுக்கப்புறம் மிதிக்கலை. வைன் ஷாப் போறதையும் நிறுத்தலை. குடிச்சிட்டு அந்த ஆனந்த் நம்பருக்கு அப்பப்ப போன் பண்ணுவேன். அவன் எடுத்ததும் கட் பண்ணிடுவேன்.

என்னால குடிக்கறதை நிறுத்த முடியலை. ஜென்னி என்னை விட்டுட்டுப் பாப்பாவையும் தூக்கிட்டுப் போனதைத் தாங்கவும் முடியலை. ஒரு நாள் ஜென்னி கடைக்கு வந்திச்சு. நீ குடிக்கறதை நிறுத்தப் போறியா இல்லையான்னு என் கடை பசங்க முன்னாடி கோபமா கேட்டுது. நீ முதல்ல வீட்டுக்கு வா அப்புறம் நிறுத்தறேன்னு நானும் கோபமா சொன்னேன். பதில் கூடப் பேசலை அப்படியே போயிடுச்சு. அடுத்த மாசம் அந்தப் பொறுக்கி அவங்க வீட்டுக்கே குடி வந்துட்டான். ஜென்னி மேல நான் வெச்சிருந்த நம்பிக்கை தவிடு பொடியாகிடிச்சி. அவன் அவங்க வீட்டுக்குக் குடி வந்ததும் புத்தி பேதலிச்சா மாதிரி ஆயிடிச்சி எனக்கு. கடையை ஒரு வாரம் தொறக்கலை. கஸ்டமருங்க போன் பண்ணா எடுக்கலை. கடை ஹெல்பர் பசங்க வீட்டுக்கு தினம் வந்து வாங்கண்ணே கடையை தொறங்கன்னு கெஞ்சினாங்க. நான் போகலை.

அம்மா போய் அம்முவை தூக்கிக்கிட்டு வரப் பார்த்தாங்க. அவ கொடுக்க மாட்டேன்னு பஜாரி மாதிரி கத்தியிருக்கா. எங்கண்ணன் ஏரியா கவுன்சிலர் கிட்ட போய் சொல்லி பஞ்சாயத்துக்கு ஏற்பாடு பண்ணினாரு. அவ குழந்தையை கொடுக்க முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டா. எங்கம்மா அவ குழந்தையப் பார்த்துக்காம தானே ஷூட்டிங் போனா, நான் தானே பார்த்துக்கிட்டேன், இப்ப மட்டும் ஏன் குழந்தை வேணும்னு அவங்கம்மாட்ட கேட்டாங்க. எதுவும் வேலைக்கு ஆவலை. நாளைக்கு அதையும் நடிக்க விட்டு சம்பாதிப்பா அதான் கொடுக்க மாட்டேங்கறான்னு ஏரியால எல்லாரும் பேசினாங்க. நாறிப் போச்சு. கவுரதையா இருந்தா எங்க வீட்டு மானம் கப்பலேறிடிச்சு. ஆளாளுக்கு தோணுனத எல்லாம் பேசினாங்க.

எனக்கு தான் அன்னிலேர்ந்து உயிர் போகிற வலி. ஆனா எங்க வலின்னு தெரியலை. எழுந்து நிக்கவே முடியல. அண்ணன் டாக்டருகிட்ட கூட்டிப் போச்சு. எதோ மருந்து கொடுத்தாங்க தூக்கம் தூக்கமா வந்துது. தூங்கி முழிப்பேன் வலிக்கும். வலுக்கட்டாயமா என் ஷாப் ஆளுங்க கடையை தொறந்து என்னை அங்கே ஒக்கார வெச்சாங்க. சில சமயம் மூச்சு விட முடியாத மாதிரி அடைக்கும்.

திரும்பவும் வலிக்கு மருந்து பாட்டில் தானுன்னு ஆச்சு. குடிச்ச உடனே வலி காணாம போயிடும். தினமும் டாஸ்மாக் தொறக்கும் போதே போய் குடிச்சிட்டு வந்து தான் என் மெக்கானிக் ஷாப்பை தொறக்க ஆரம்பிச்சேன். எப்பவும் போல நல்லா வேலை செஞ்சேன். நான் இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டு அம்மா வீட்டோட வந்துட்டேன்.

தினம் என் கடையத் தாண்டி தான் அவனோட பைக்ல போகும் ஜென்னி. உடனே எனக்கு உடம்பு முழுக்க வலிக்கும். கையோட இருக்கிற பாட்டிலை எடுத்து ஒரு மடக்கு ராவா குடிப்பேன். நெஞ்சு எரிச்சல்ல உடனே வலி மரத்துப் போகும். ஜென்னி வீட்டுல இல்லாத சமயமா அம்மா அவங்க வீட்டுல போயி அவ தங்கச்சிட்ட கேட்டு அம்முவை தூக்கியாரும். அதுஞ் சிரிப்புல தான் உசிரோட இருந்தேன்னு நினைக்கிறேன்.

முதல்ல நான் தினம் குடிக்கறதை பத்தி அண்ணன் ஒன்னும் சொல்லலை. ஒரு நாள் சோறு துன்றச்சே என் கை நடுக்கத்தைப் பார்த்து ஏண்டா குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்கறேன்னுச்சு. ஏன் நான் உசிரோடு இருந்து என்ன ஆகணும்னு கேட்டேன். உடனே அம்மாவும் அண்ணனும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. என்னால அவளை நினைக்காம இருக்க முடியலை. அவ ஏன் என்னை விட்டுட்டுப் போனான்னு புரியலை. அந்த வலி மறக்க எனக்கு குடி தேவையா இருந்தது.

ஒரு நாளைக்கு ரெண்டு தடவை டாஸ்மாக் போக ஆரம்பிச்சேன். லீவ் விடுவாங்கன்னு தெரிஞ்சா முதல்லியே ரெண்டு பாட்டில் வாங்கி வெச்சிப்பேன். ஆத்திர அவசரத்துக்கு எப்பவும் கடைல ஸ்டாக் இருக்கும். கொஞ்ச நாளா காச்சல் வந்து முடங்கி படுக்க ஆரம்பிச்சேன். குடியை நிப்பாட்டுற டாக்டர் கிட்ட என்னை கூடிப் போச்சு அண்ணன். அவரு எல்லா டெஸ்டும் எடுத்தபோது தான் எனக்குக் காச நோய் இருப்பது தெரிய வந்துச்சு.

drunk

தாம்பரம் சேனடோரியம் ஆசுபத்திரில போய் சேர்த்து வுட்டாங்க. ரெண்டே நாள்ல ஒடி வந்துட்டேன். தாம்பரத்துலேயே ஒரு டாஸ்மாக்குல கட்டிங் போட்டப்புறம் தான் ஒரு நிதானத்துக்கே வந்தேன். அது வரைக்கும் உடம்பு ஒரே உதறல். வீட்டுக்கு வந்தப்புறம் அம்மா கெஞ்சிச்சு, நான் முடியவே முடியாதுன்னுட்டேன். தினம் அம்முவை பார்த்துக் கிட்டு இங்கேயே இருக்கேன். ஆசுபத்திரிக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டேன்.

அம்மு ஸ்கூல் போக ஆரம்பிச்சதுலேந்து ஸ்கூல் விட்டதும் நேரா என் கடைக்கு தான் ஒடி வரும். நான் வாங்கி வெச்சிருக்கிற பிஸ்கட்டை துன்னுட்டு என்னக் கட்டி முத்தம் கொடுத்துட்டு அவங்க வீட்டுக்கு ஓடிடும்.

எனக்கு டிபின்னு யாரோ ஜென்னி கிட்ட போய் சொல்லிட்டாங்க. சின்னக் குழந்தைக்கும் டிபி வந்துடும்னு அது உடனே அம்மு என்னைப் பார்க்க போகக் கூடாதுன்னு சொல்லிடிச்சு. அதுலேந்து இன்னும் அதிகமா குடிக்க ஆரம்பிச்சேன். கடைய பசங்க தான் பார்த்துக் கிட்டாங்க. எழுந்து நிக்கக் கூட முடியலை. பசி எடுக்கறதும் நின்னுப் போச்சு. எங்கண்ணன்ட டாக்டர் லிவர் அழுகிப் போச்சுன்னு சொன்னாராம். ஒரு நாள் மயக்கமாயிட்டேன். ஜிஹெச்சுக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க. அங்க என்னல்லாமோ செஞ்சிப் பார்த்திருக்காங்க. முத்திப் போச்சு, இன்னும் நாள் கணக்கோ நேரக் கணக்கோ தான், வீட்டுக்குக் கொண்டு போயிடுங்கன்னு சொல்லிட்டாங்களாம். பாதி நினைவும் பாதி மயக்கமுமா இருந்தேன். ஒண்ணுமே புரியல. ஆனா மனசு சந்தோஷமா இருந்திச்சி. இன்னும் கொஞ்ச நாள்ல வலி போயிடும். நிம்மதியா ஜென்னிய நினைக்காத வேற உலகத்துக்குப் போயிடலாம்னு தோணுச்சு.

இதோ அம்மு பக்கத்துல வந்து நிக்குது, ஆனா பார்க்க முடியலை.  அதை எனக்கு வாயில பால் ஊத்தச் சொல்றாங்க. அம்முக் கொடுத்தப் பாலை கஷ்டப்பட்டு முழுங்கறேன். “அடே சுரேஷு, குமாரு பால முழுங்கறாண்டான்னு” அம்மா அண்ணனைக் கூப்பிட்டுது. அண்ணன், அண்ணி, அம்மா எல்லாரும் பாலை வாயில ஊத்தறாங்க. பாதி உள்ளப் போகுது பாதி வெளியே வழியுது.

அம்மு இன்னும் அங்கேயே நிக்குது போல. அண்ணன் அதுங்கிட்ட “அழாதடா கண்ணு”ன்னு சொல்றது காதுல விழுது. பாவம் அம்மு. என்னமோ சத்தம். ஜென்னி போடும் சென்ட் மணம் வருது. “அம்முவை கூட்டிப் போக வந்தேன்” அப்படின்னு சொல்லுது ஜென்னி. இவங்கல்லாம் பால் கொடுக்கறதை பார்த்துட்டு அதுக்கும் கொடுக்கணும்னு மனசுல தோண வெச்சிருக்கான் அந்த நல்ல ஆண்டவன். கிட்ட வந்து வாயில பாலை விடுது. அது பாலை விட்டதும் அப்படியே கண்ணை தொறக்கறேன், கண்ணிலேந்து தண்ணி வழியுது, ஜென்னியப் பார்க்கிறேன், பக்கத்துல மொட்டை அடிச்சு காது குத்தியிருக்கற அம்முவை பார்க்கறேன், கீழே இருக்கற என் உடம்பையும் பார்க்கறேன். குமாராகிய நான் இனி இங்கில்லை.

innerpeace

 

என் சுவாசக் காற்றே… – சிறுகதை

 

mask

“ஜானு, நல்ல வேளை நீ வந்தம்மா. காத்தாலேந்து மூச்சு விடறேதே கஷ்டமாயிருக்கு.” பிராணவாயு மாஸ்கை சற்றே தூக்கிவிட்டு மெதுவாக சிரமத்துடன் பேசினார் அப்பா. அப்பாக்கு 85 வயசு. கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா சிலிண்டரில் உள்ள பிராண வாயுவின் துணையோடு தான் வளைய வருகிறார். நுரையீரல் வலுவிழந்து விட்டது. மகனை அகாலமாக ஒரு விபத்தில் பறிகொடுத்தது அவரை சம்மட்டியால் அடித்து போட்டு உடல் பலத்தை வாங்கிக் கொண்டு விட்டது. அதன் பின்னும் மருமகளுக்கும், பேரனுக்கும், பேத்திக்கும் துணையாக, தைரியமாக இருந்து வருகிறார். அந்த மனோ திடம் அம்மாக்கு இல்லாமல் போய்விட்டது. அண்ணன் இறந்த இரண்டாம் மாதம் அம்மா போய் சேர்ந்து விட்டாள்.

“ஏம்பா. நேத்து ஹாஸ்பிடல் போயி ஹார்ட் ரிதிமை சரி செஞ்சப்போ கூட சரியா இருந்தீங்களே. டாக்டர்சே உங்க வயசுக்கு அந்த ப்ரோசீஜரை நல்லா ஹேண்டில் பண்ணீங்கன்னு சொன்னாங்களே”

“தெரில மா. இன்னிக்கு கார்த்தால பாத் ரூம் போயிட்டு வந்தேன். அப்போ ஆக்சிஜன் மாஸ்கை எடுத்துட்டுப் போனேன். அதுலேந்து ரொம்ப சிரமமா இருக்கு”

அவரின் பிரத்தியேக மருத்துவர் சமீபத்தில் அவரை பரிசோதித்தப் போது அவரை தொடர்ந்து ஆக்சிஜன் வைத்துக் கொள்ள அறிவுருத்தி இருந்தார்.    முன்பு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பிராண வாயு வைத்துக் கொண்டால் போதுமானதாக இருந்தது. இப்போ உடல் நிலையில் சீர்கேடு அதிகரித்து உள்ளது. அதுவும் இரண்டு நாட்களுக்கு மின் இதயத் துடிப்பு அதிகரித்து மருத்துவமனைக்குப் போய் ஒரு சின்ன இதய சிகிச்சை பெற்று வர வேண்டியிருந்தது.

அப்பாவால் பிறருக்கு எந்த தொந்தரவும் கிடையாது. அவரே ஆக்சிஜன் சிலிண்டருக்கு போன் பண்ணி ஆர்டர் செய்து சரியாக ஒரு சிலிண்டர் முடியும் தருவாயில் மற்றொன்று வரும்படி வாங்கி விடுவார். மத்திய ஆரசில் ஒய்வு பெரும் போது மேல் நிலையில் இருந்ததால் இருபதினாயிரம் பென்ஷன் வருகிறது. அண்ணி வேலைக்குப் போனாலும் அவர் பென்ஷன் பணம் குடும்பத்துக்கு பெரும் உதவியே.

அண்ணி ரூம் உள்ளே வந்து “நானே உனக்கு போன் பண்ணி உன்னை வரச் சொல்லனும்னு நினச்சேன் ஜானு, நீயே வந்துட்ட. அப்பாவை திரும்ப ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்னு நினைக்கிறேன்.” என்றாள்.

சமீபத்தில் எடுத்த மருத்துவ பரிசோதனை ரிபோர்ட்கள் அனைத்தையும் அவர் தயாராக மேஜையில் எடுத்து வைத்திருந்தார். பிளாஸ்கில் காபி, பிஸ்கட் பேக்கட், டவல், மாற்று உடை அனைத்தையும் ஒரு பையில் வைத்து, ரிபோர்ட்களையும் அதே பையில் வைத்துக் கிளம்பத் தயாரானேன்.

எப்பவும் போல் அப்பா ரூமில் இருந்த சாமி படத்தின் முன் நின்று திருநீறு அணிந்து கொண்டு மகன் புகைப்படத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துப் பின் வாசல் வராந்தாவுக்கு வந்தார். அதற்குள் நான் கூப்பிட்டிருந்த ஆம்புலன்ஸ் வந்திருந்தது. மாலை மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. அண்ணன் மகன் தினேஷ் கல்லூரியில் இருந்து அப்போது தான் உள்ளே நுழைந்தான். “அத்தை இருங்க நானும் வரேன். நீங்க தனியா எப்படி எல்லாம் பார்த்துப்பீங்க” என்று காபி கூடக் குடிக்காமல் எங்களுடன் ஆம்புலன்சில் ஏறினான். அவர்களும் உடனே ஆக்சிஜன் மாஸ்கை அப்பாவுக்கு மாட்டி விட்டு பத்தே நிமிஷத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டனர்.

Big build hospital (done in 3d)

கேசுவாலிடியில் அவரை பரிசோதித்த மருத்துவர், “நுரையீரலில் கொஞ்சம் நீர் சேர்ந்திருக்கு. பங்க்சர் பண்ணி எடுத்தால் சரியாகிவிடும் ஆனால் அதை ஆபரேஷன் தியேட்டரில் தான் செய்ய வேண்டும். நீங்க ஒரு ரூம் எடுத்துத் தங்கிடுங்க, எப்போ தியேட்டர் ப்ரீ ஆகுதோ அப்போ கூட்டிட்டுப் போய் செஞ்சிடுவாங்க. இன்னிக்கு ராத்திரி பத்து பதினோரு மணிக்குள்ள பண்ணுவாங்க இல்லைனா காலைல பண்ணுவாங்க” என்றார்.

“நாளை காலை வரை வெயிட் பண்ணலாமா டாக்டர்? ஒண்ணும் பயமில்லையே?” என்றேன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைமா. அவர் வைடல்ஸ் எல்லாம் சரியாத் தான் இருக்கு. ஆக்சிஜன் மாஸ்கில் தொடர்ந்து இருக்கட்டும். லங்க்சில் கோத்திருக்கும் நீரை எடுத்து விட்டால் சிரமம் இல்லாமல் மூச்சு விட ஆரம்பித்து விடுவார்” என்றார்.

அறைக்கு ஏற்பாடு செய்த பின் கேசுவாலிடியில் இருந்து ஸ்டிரெச்சரில் ஆக்சிஜன் மாஸ்குடனே வந்தார் அப்பா. தொடர்ந்து ஆக்சிஜன் மாஸ்கிலேயே இருந்தார். அப்பப்ப சரியாக பிராணவாயு குழாயில் போகிறதா என்று சிலிண்டரை செக் பண்ணிக் கொண்டே இருந்தேன். வீட்டில் இப்படி செய்வது எங்கள் எல்லாருடைய பழக்கமும் ஆகிவிட்டது. சில சமயம் சிலிண்டரில் வாயு தீர்ந்த பிறகு அப்பாக்குச் சொல்லத் தெரியாது. திடீரென்று மூச்சு வாங்கும், பின் தான் ஆக்சிஜன் தீர்ந்திருப்பதைக் கண்டுபிடிப்போம்.

தினேஷை வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு எனக்கும் அப்பாவிற்கும் ரசம் சாதம் எடுத்து வர அனுப்பினேன். சின்ன வயதிலேயே பொறுப்பு வந்து விட்டதால் எல்லாம் சரியாக செய்வான் அவன். அவன் கூட இருப்பதும் எனக்கு தைரியமாக இருந்தது. என் கணவர் வெளிநாடு போயிருந்தார். அது என்னமோ மருத்துவமனை என்றாலே ஒரு பயம் வந்துவிடுகிறது. ஆனால் அப்பா எப்பவும் போல தைரியமாக இருந்தார்.

நர்ஸ் வந்து பிபி பார்த்து வாயில் தெர்மாமீடரை நுழைத்துத் தன் கடமையை செய்து விட்டுப் போனாள். அவளிடம், “எப்போ மா பங்க்சர் பண்ணி நீர் எடுக்க தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போவாங்க” என்றேன். “தெரிலமா, அவங்க போன் பண்ணி சொன்னா வந்து சொல்றேன்” என்றபடி அடுத்த அறைக்குச் சென்றாள்.

நமக்கு தான் அப்பா என்கிற கவலை. அவர்களுக்கு அவர் இன்னொரு பேஷன்ட் அவ்வளவு தான். ஒன்பது மணிக்கு தினேஷ் வந்தவுடன் அப்பாவுக்குக் கொஞ்சம் ரசம் சாதம் கொடுத்தேன். விரும்பி சாப்பிட்டார். தினேஷை வீட்டுக்குப் போகச் சொன்னேன் ஆனால் அவன் “இல்ல அத்தை நாளைக்கு நான் காலேஜுக்குப் போகலைன்னாலும் பரவாயில்லை. இங்கே உங்களுடனேயே இருக்கேன்” என்றான். பத்தரை மணி இருக்கும். “அம்மா, தூக்கம் வருதே, தூங்கட்டுமா” என்றார் அப்பா.

நான் நர்சிடம் போய் “இனிமே வருவாங்களாமா? கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க” என்றேன். “நாங்க கேக்க முடியாதும்மா, அவங்க தான் எங்களுக்குச் சொல்லுவாங்க. அவர் தூங்கறதுன்னா தூங்கட்டும். இனிமே காலையில தான் பண்ணுவாங்க” என்றாள்.

தினேஷும் அட்டெண்டர் படுக்கையில் தூங்கிவிட்டான், பாவம் அசதி. நான் சேரில் உட்கார்ந்து கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தேன். அப்பா எங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் உறவினர் அனைவருக்குமே ஒரு நல்ல பாதுகாவலர். எந்த ஒரு பிரச்சினையையும் சரியான கோணத்தில் அணுகுவார். யார் மனத்தையும் புண்படுத்தாமல் அறிவுரை சொல்வார். மகன் உடலைப் பார்த்துக் கூட குடும்பத்தினருக்காக அழாமல் நின்றவர் அவர்.

தடதடவென ரோலர் உருளும் சத்தம் கேட்டு முழித்தேன். கடிகாரத்தைப் பார்த்தேன், மணி ஒன்று. ஸ்டிரெச்சரை தள்ளிக் கொண்டே ஒரு மருத்துவப் பணியாளர் அறையின் உள் நுழைந்து அப்பாவை அவர் படுக்கையில் இருந்து ஸ்டிரெச்சருக்கு மாற்ற துவங்கினான்.

“என்னப்பா, என்ன பண்றே” என்றேன் பதைபதைப்புடன்.

“தியேட்டர் ரெடியா இருக்குமா. பேஷண்டை கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க” என்றான். அதற்குள் வார்ட் நர்சும் வந்து உதவி செய்ய ஆரம்பித்தாள்.

“என்னப்பா இது இந்த நேரத்துல பண்ணுவாங்களா?”

“தெரிலமா. கொஞ்ச நேரம் CCUல ஆப்சர்வேஷன்ல வெச்சிட்டு அப்புறம் பண்ணுவாங்களா இருக்கும்” என்றான்.

அப்பாவும் தூக்கம் கலைந்து அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். ரூமில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து தொடர்பை துண்டித்து அவன் ஸ்டிரெச்சருடன் கொண்டு வந்த சிலிண்டருக்குக் கனெக்ஷன் கொடுத்தான். அறையில் இருந்து தள்ளிக் கொண்டே லிப்ட் இருக்கும் இடத்துக்குக் கொண்டு போனான். ஆக்சிஜன் சரியா குழாயில் வருகிறதா என்று ஒரு சந்தேகம் வந்தது. சிலிண்டர் திருகாணியை வார்ட் பாய் சரியாக திருப்பவில்லை என்று எனக்குத் தோன்றியது. ஸ்டிரெச்சர் பின்னாடியே ஓடிய நான் “ஆக்சிஜன் கனெக்ஷன் சரியா இருக்கா பாருப்பா, அவருக்கு மூச்சு வாங்குது பாரு” என்றேன். “எல்லாம் சரியாத் தான் இருக்கு. நீங்க படிக்கட்டுல இறங்கி கீழ போயிடுங்க நான் லிப்ட்ல கூட்டிக்கிட்டு வரேன்” என்றான்.

வேகமாகக் கீழே இறங்கி லிப்ட் வாயிலில் நின்றேன். லிப்ட் பத்தாவது மாடிக்குப் போயிருந்தது. முதல் மாடிக்கு வந்து கீழே வர ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். கதவு திறந்ததும் அப்பா முகம் வெளிறி இருப்பதைப் பார்த்தேன். அவர் தன் கையை நீட்டி என் கையைப் பிடித்துக் கொண்டார். “கோபால் குழந்தைகளை நல்லா கவனிச்சிக்கமா. உன்னால முடிஞ்ச உதவியை நீ அவங்களுக்கு எப்பவும் செய்யணும்” என்றார் மூச்சுத் திணறலுக்கு இடையே.

“அப்பா உங்களுக்கு ஒண்ணும் இல்லை. இப்போ அந்த ப்ளுயிட் எடுத்தவுடன் சரியாகிடுவீங்க” என்றேன்.

அதற்குள் CCU வந்து விட்டது. உள்ளே இருந்து வந்த நர்ஸ் நேராக ஆக்சிஜன் சிலிண்டரைப் பார்த்து அந்தத் திருகாணியைத் திருப்பி விட்டாள்.

“ஏம்மா ஆக்சிஜன் போய்கிட்டு தானே இருந்தது?’ என்றேன்.

“இப்போ போக ஆரம்பிச்சிருக்கு” என்றாள். “அப்போ இத்தனை நேரமா போகலையா?’ என்ற என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அப்பாவின் ஸ்டரெச்சரை உள்ளே தள்ளிக் கொண்டு போய்விட்டனர்.

“நீங்க போய் ரூம்ல இருங்க. நாங்க ப்ரோசீஜர் முடிஞ்சதும் சொல்லி அனுப்பறோம்” என்று இன்னொரு பெண் வெளியே நின்ற என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள்.

ரொம்ப கவலையுடன் மாடி எறிப் போனேன். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அவர் பிராணவாயுவின் உதவி இல்லாமல் மூச்சுவிட்டு இருக்கிறார். அந்த சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. அதனால் இத்தனை நாள் தைரியமாக இருந்த அவர் இப்பொழுது என்னை அண்ணன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கார். இராம இராமா என்று மனம் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. பத்து நிமிஷம் கூட ஆகியிருக்காது நர்ஸ் வேகமாக வந்து உங்களை கீழே கூப்பிடறாங்க என்றாள். அதற்குள் முடிச்சிட்டாங்களா என்று எண்ணியபடி “தினேஷ் எழுந்து வா என்னோட” என்றபடி அவசரமாகக் கீழே இறங்கிப் போனேன்.

CCU வாசலில் ஒரு டாக்டர் நின்று கொண்டிருந்தார். “மேடம் நீங்க பேஷண்டுக்கு என்ன உறவு” என்றார்.

“நான் அவர் மக” என்றேன்.

“அவர் இந்த ப்ரோசீஜருக்கு பிட் இல்லைங்க. அதனால் இந்த ப்ரோசீஜர் வேண்டாம்னு நீங்க இந்த பார்ம்ல ஒப்புதல் கையெழுத்துப் போட்டுடுங்க” என்றார்.

“என்ன சார் நல்லா தானே இருந்தார்? கேசுவாலிடில சாயங்காலம் டாக்டர் செக் பண்ண போது கூட ஒண்ணும் பயம் இல்ல, காலைல கூட பண்ணலாம்னு சொன்னாரே?”

“இப்போ பிட்டா இல்லைமா. அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? வயசானவர் தானே? நீங்க கையெழுத்துப் போடுங்க.”

“நீங்க நார்மலா ஏதாவது செய்யறத்துக்கு முன்னாடி தானே கையெழுத்து வாங்குவீங்க? இப்போ வேண்டாம்னு எழுதி கையெழுத்துப் போட சொல்றீங்களே? எனக்கு புரியலை”

எனக்கு உண்மையிலேயே ஒண்ணும் புரியலை. நடு ராத்திரி. தினேஷ் தான் துணை. எப்பவும் அப்பா தான் அவர் உடல் நிலை சம்பந்தமாகக் கூட முடிவெடுப்பார்.

“சார், நான் அப்பாவை பார்க்கலாமா? அவரிடமே கேட்டுவிடுகிறேன்.”

“நீங்க கையெழுத்துப் போட்டுட்டுப் போய் பாருங்க மேடம்”

சட்டென்று பொறி தட்டியது. “டாக்டர் அவர் உயிரோடு இருக்காரா இல்லையா?”

“சாரி மேடம், ஹி இஸ் நோ மோர்” என்றார்.

தினேஷ் டாக்டரை நெட்டித் தள்ளிக் கொண்டு CCUவினுள் நுழைந்தான். நானும் அவன் பின்னே நுழைந்தேன். அப்பாவின் கண்கள் மலங்க மலங்க மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. லேசாக நெஞ்சு ஏறி இறங்கிக் கொண்டு இருந்தது. “சார், அவர் உயிரோடு தானே இருக்கார்? பாருங்க” என்றேன்.

“இல்லைமா கொஞ்ச நேரத்தில் அடங்கிடும். நீங்க சாமி பேரு சொல்றதுன்னா அவர் பக்கத்தில் நின்னு சொல்லுங்க” என்றார்.

வந்தது கோபமா, துக்கமா, ஆத்திரமா, இயலாமையா என்று தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு அவர் காதில் ராம நாமத்தைச் சொன்னேன். தாத்தாவின் நிலை பார்த்து முதலில் விக்கித்து நின்ற தினேஷின் கண்களில் இருந்து அருவியாக நீர் கொட்ட ஆரம்பித்தது. பார்த்துக் கொண்டே இருந்தபோது மெல்ல அடங்கியது அவர் ஆவி. அவரின் இரு கண்களையும் மூடினேன்.

“இந்த பார்மில் கையெழுத்துப் போடுங்க” என் அருகில் வந்து அந்த மருத்துவர் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

“நான் வந்தவுடனே அவர் இறந்த விஷயத்தை சொல்லாம பார்மில் கையெழுத்துப் போட சொல்லிக்கிட்டே இருந்தீங்களே, ஏன்? எங்கப்பா எப்படி இறந்தார்னு சொல்லுங்க டாக்டர்”

“இங்கே வரும்போதே அவர் ஆக்சிஜன் சேசுரேஷன் ரொம்பக் கம்மியா இருந்தது மேடம்.”

“ரூமை விட்டுக் கிளம்பும்போது அவர் கையில் இருந்த பல்ஸ் மீட்டரில் 93%ஆக்சிஜன் செசுரேஷன் இருந்ததை நான் பார்த்தேன் டாக்டர்”

“இங்க நான் அவரை பார்க்கும்போது அவ்வளவு இல்லை மேடம்”

“அது ஏனுன்னு விசாரிச்சீங்களா டாக்டர்?”

“அவர் வயசுக்கு இதெல்லாம் நடப்பது சகஜம் தான்மா.”

“அப்போ ஏன் சார் எங்கப்பா செத்ததை கூட சொல்லாம கையெழுத்து வாங்கறதுலேயே குறியா இருந்தீங்க? ஸ்டிரெச்சரில் மாத்தும் போது அந்த வார்ட் பாய் ஆக்சிஜன் கனெக்ஷன் சரியா கொடுக்கலை. நான் அவனிடம் கேட்டபோதும் சரியா திரும்ப அவன் செக் பண்ணலை. இங்கே கீழே CCU வந்ததும் தான் நர்ஸ் ஆன் பண்ணாங்க. நான் என் கண்ணாலேயே பார்த்தேன். பத்து நிமிஷத்துக்கு மேல அவருக்கு ஆக்சிஜன் போகலை. அஜாக்கிரதையினால எங்கப்பாவை கொன்னுட்டீங்க”

என் குரல் பெரிதாவதைக் கண்ட டாக்டர் என்னை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். “இப்போ என்ன பண்ணலாம்னு சொல்றீங்க? அவருக்கு 85 வயசாகுது. போஸ்ட்மார்டம் பண்ண சொல்றதுன்னா சொல்லுங்க, ஆர்டர் பண்றேன்.”

“எதுக்குங்க போஸ்ட்மார்டம்? கண்ணு முன்னால தவறு நடந்திருக்கு, நான் பார்த்தேன்னு சொல்றேன்.”

“எதனால் இறந்தாருன்னு போஸ்ட் மார்டம் ரிபோர்ட் சொல்லும். நீங்க பார்த்து உண்மைனே வெச்சுக்கிட்டாலும் அதனால் தான் அவர் உயிர் போச்சுன்னு சொல்ல முடியுமா?”

“ஏங்க எங்கப்பாக்கு எந்த முதலுதவியும் கொடுக்காம சுவாசம் அடங்கற வரைக்கும் எங்களை பார்த்துக்கிட்டு நிக்க சொன்னீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?”

“அதெல்லாம் தேவையில்லை. அவர் இறந்துட்டாரு. நாங்க டாக்டரா நீங்க டாக்டரா? போஸ்ட்மார்டம் வேணும்னா சொல்லுங்க, ரெண்டு நாள் ஆகும் பாடிய கொடுக்கறதுக்கு. நிறைய போஸ்ட்மார்டம் வெயிட்டிங்க்ல இருக்கு”

இதய சிகிச்சைக்காக சென்னையிலேயே இந்த மிகப் பெரிய மருத்துவமனைக்கு ரெண்டு நாள் முன்பு தான் முதல் முறையாக தந்தையை அழைத்து வந்திருந்தேன், அதுவும் அந்த சிகிச்சைக்கான வசதி இந்த மருத்துவமனையில் தான் நன்றாக இருக்கும் என்று டாக்டர் சொன்னதால். அதனால் தொடர்ந்து இங்கேயே சிகிச்சை எடுக்கலாம் என்று நான் முடிவு செய்தது அப்பாவின் உயிரையே காவு வாங்கிவிட்டது. முதல் சிகிச்சையின் போதே நேர்ந்த அஜாக்கிரதையால் தான் நுரையீரலில் நீர் கோத்துக் கொண்டதோ என்று இப்பொழுது தோன்றியது.

“போஸ்ட்மார்டம் வேண்டாம் டாக்டர், எங்களிடம் அவரை ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் நடத்துவது உயிரைக் காக்கும் மருத்துவமனை அல்ல. பணம் ஈட்டும் கார்பொரேட் நிறுவனம். உங்களை மாதிரி பெரிய நிறுவனங்களுடன் எங்களால் சண்டையிட்டு ஞாய தர்மத்தை நிலை நாட்ட முடியாது. எங்கப்பா எந்த சிகிச்சையும் இன்றி வீட்டில் இறந்திருந்தால் கூட எனக்கு அது இத்தனை கஷ்டமாக இருந்திருக்காது, ஆனால் இங்கே உங்க அஜாக்கிரதையினால் அவர் உயிர் இழந்ததை நினைத்து என் வாழ்நாள் முழுக்க அந்தக் குற்ற உணர்வு என்னை அரித்துக் கொண்டே இருக்கும்”

“தினேஷ் வா நாம வெளியே காத்திருப்போம்.” பணம் செலுத்த பில் கட்டும் கவுண்டரை நோக்கி நடந்தேன். பின்னாடியே ஓடிவந்து ஒரு நர்ஸ் அந்த பார்மை எடுத்து வந்து மறக்காமல் கையெழுத்துக்காக நீட்டினாள். கையெழுத்திட்டேன், ஆனால் என் கண்களில் தேங்கி நின்ற கண்ணீரால் பார்மில் எழுதப்பட்டிருந்தது மறைந்து போயிற்று.

woman

எனக்கு இன்னொரு வீடு இருக்கு! – சிறுகதை

“ஆண்டி, அங்கிள் காபி ரெடி” காப்பாளர் சுதா சிரித்த முகத்துடன் ஜன்னல் வழியா சொல்லிவிட்டு சென்றாள். அறைக்கதவை மூடிவிட்டு காமன் கிட்செனுக்குப் போனார்கள் சுவாமிநாதனும் சகுந்தலாவும். பலர் அப்போ தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர். அங்கே வைத்திருந்த டப்பாவில் இருந்து ரெண்டு பிஸ்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு காபி கோப்பையுடன் தோட்டத்தில் உட்கார்ந்தனர். பல பறவைகளின் காலை கீச்சுக்கள் மரக்கிளைகளின் இடையே இருந்து ஒலித்தன. பக்கத்தில் வந்து உட்கார்ந்த பாலுவிடம் சுவாமிநாதன், “சாந்தா மேடம்க்கு எப்படி இருக்கு? நீங்க நேத்து போய் பார்த்தீங்களே” என்று கேட்டார். “இப்போ நல்ல improvement சார். நல்லா தெளிவா பேசறாங்க. Electrolyte imbalanceஆம். உப்பு சத்து குறைந்து விட்டதாம். ட்ரிப் ஏத்தறாங்க, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்ன்னு சொன்னாங்க.”

oldage2

அந்த இல்லத்தில் இருந்த சக வசிப்பாளர் சாந்தா. திடீரென்று முன்னுக்குப் பின் முரணாகப் பேச ஆரம்பித்தார். அங்கே இருந்த பராமரிப்பாளர் உடனே ஏம்புலன்சை கூப்பிட்டு மருத்துவமனையில் சரியான நேரத்தில் சேர்த்து மருத்துவ உதவி கொடுத்ததில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம். சுவாமிநாதனுக்கும் சகுந்தலாவுக்கும் இந்த இல்லத்தில் பிடித்தது இரண்டு விஷயங்கள், ஒன்று இன்முகத்துடனான சேவை, இரண்டாவது சிறந்த மருத்துவ வசதி. உணவு ருசி முன்ன பின்ன இருந்தாலும் மற்ற வசதிகள் நன்றாக இருந்தன.

இதை ஒரு உயர்தரமான ஹோட்டல் என்று கூட சொல்லலாம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அறநூறு சதுரடி இருக்கும். ஒரு வரவேற்பறை, படுக்கை அறை, குளியல் அறை. அலங்கார விளக்குகளும், ஒரு மூலையில் இருக்கும் குட்டி ப்ரிட்ஜும், மின்சார அடுப்பும், மைக்ரோவேவும், சன்னமாக ஒலிக்கும் ஸ்ப்ளிட் ஏசியும், சுவரில் பதிந்திருக்கும் டிவியும், மெத்தென அமுங்கும் சோபா செட்டும் அவர்கள் இருந்த பழைய வீட்டின் நிலையை எண்ணிப் பார்க்கையில் சொர்க்கம் தான்.

oldagehome

அவர்கள் முன்பு இருந்து வளசரவாக்கத்தில், ஒரு கிரவுண்டில் சிறிய வீடு, சுற்றி மரம் செடி கொடிகள். ஆனால் வீடு ரொம்ப பழையது. அவர்கள் வீட்டை வாங்கும் போதே அது பத்து வருட பழைய வீடு. ஓர் அறை கொண்ட வீட்டை இரண்டு அறைகள் கொண்ட வீடாக மாற்றினார் சுவாமிநாதன். வீட்டுக் கடன் அடையவே பத்து வருடங்களுக்கு மேல் ஆகியது. அதுவும் அப்போ விலை ரொம்ப கம்மி. அவர்கள் சக்திக்கு இயன்றதை வாங்கினார்கள். வாங்கியபோது சுற்றி வயல் வெளி தான். பின்னாளில் இப்படி ஒரு பெரிய குடியிருப்பாகும் என்று அன்று அவர்கள் கொஞ்சமும் நினைக்கவில்லை. சுவாமிநாதன் போஸ்ட் ஆபிசில் கிளார்க். சாந்தா அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர். ரொம்ப சிரமப்பட்டு தான் இரு பிள்ளைகளையும் வளர்த்தனர். மகன் மேல் படிப்புக்கு அமேரிக்கா போன போது சுவாமிநாதனுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. படிப்புக்குக் கடன் வாங்க அந்த வீட்டை தான் இணையாகக் கொடுத்தார். அதன் பின் மகளுக்கு அமேரிக்கா மாப்பிள்ளை வரன் வந்தது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண்ணுக்கு ஒன்றும் சீர் செய்ய வேண்டாம் அனால் கல்யாணத்தை சிறப்பாக செய்து விடுங்கள் என்றனர். அந்த “சிறப்பாக” பல லட்சங்களை தொட்டது. அதற்கும் அந்த வீடு தான் கை கொடுத்தது.

oldhouse

இருவரும் ஒய்வு பெற்ற பிறகு கடனெல்லாம் அடைத்து பென்ஷன் பணத்தில் வாழும்போது தான் தனிமையின் துயரத்தையும் பணப் பற்றாக்குறையையும் உணர்ந்தனர். பழைய வீடானதால் நிறைய மராமத்து வேலைகள் வந்து கொண்டே இருந்தன. மின்சாரக் கசிவை சீர் செய்யக் கை வைத்தால் சீலிங்கில் உள்ள ஒழுகல் தெரிய வந்தது. டாய்லெட் அடைப்பை சரி செய்ய வந்த பிளம்பர் மெயின் டிரெயினேஜ் கனேக்ஷனே கட் ஆகியிருக்கு. தெரு வரை புது பைப் போடனும் என்று பெரிய லிஸ்டை நீட்டினார். பிளம்பரோ எலேக்டிரிஷியனோ சொன்ன நேரத்துக்கு வராமலும், வேலை முடித்த பிறகு சொன்ன எஸ்டிமேட்டை விட இரண்டு மடங்கு அதிகம் வாங்கிச் செல்வதுமே வழக்கமாக இருந்தது. எதோ சின்ன சின்ன ரிபேர்களை செய்து ஒப்பேத்தி வந்தவர்களை டிசம்பர் மழை புரட்டிப் போட்டுவிட்டது. உச்சக்கட்ட மழையின் போது அவர்கள் வீட்டில் எட்டடி தண்ணீர் நின்றது.

பிள்ளைகளிடம் தான் உதவி கேட்டாகவேண்டும் என்ற நிலை. ஆனால் மகளும் மகனும் உள்ளத்தாலும் அமெரிக்கர்களாகிவிட்டனர் என்பது தான் இவர்களின் மிகப் பெரிய இழப்பு. மகளும் மகனும் கடைசியாக இந்தியா வந்து ஐந்து வருடங்கள் ஆயிற்று. மருமகள் அவள் வீட்டு விசேஷம் எதற்காவது ஒரு வார லீவில் வந்து அட்டென்ட் பண்ணிவிட்டு போய்விடுவாள். அந்த பங்க்ஷனுக்கு இவர்களையும் அழைத்து இருப்பார்கள். அங்கேயே மாமியார் மாமனாரை பார்த்தாயிற்றே என்று வீட்டுக்குக் கூட வராமல் “அத்தை நிறைய பர்சேஸ் இருக்கு. ஸௌமியாவை டேன்ஸ் கிளாசில் சேர்த்திருப்பதால் மைலாப்பூரில் அவ டேன்சுக்குத் தேவையான நிறைய சாமான்கள் வாங்க வேண்டியிருக்கு. நீங்க இருக்கிறது வளசரவாக்கத்தில். இங்கே அம்மா வீடு ராயப்பேட்டை. அதனால் அம்மா வீட்டில் இருந்து கொண்டு சாமான் எல்லாம் வாங்கி சேகரித்துக் கொண்டு போக எனக்கு வசதியாக இருக்கும்” என்று இவர்கள் எதுவும் கேட்பதற்கு முன் அவளே தன் திட்டத்தைச் சொல்லிவிடுவாள். சகுந்தலாவும் மனசு கேட்காமல் செய்து கொண்டு போயிருந்த பலகாரங்களையும், பேத்திக்கு வாங்கி வைத்திருந்த காதணி, கழுத்தணிகளைக் கொடுத்து விட்டு வீட்டிற்குக் கணவனுடன் திரும்பி வருவாள்.

சுவாமிநாதனும் சகுந்தலாவும் இது வரை ஒரே ஒரு முறை தான் அமேரிக்கா போயிருக்கிறார்கள், அதுவும் மகளின் முதல் பிரசவத்துக்கு. அவள் இருந்தது பிலடெல்பியாவில், குழந்தை பிறந்தது டிசம்பர் மாதத்தில். ஸ்வெட்டரையும் கம்பளியையும் சுற்றிக் கொண்டு நாலு மாசம் சேவை செய்து விட்டு வந்து விட்டார்கள். அங்கிருந்த மளிகைக் கடையையும், பக்கத்தில் இருந்த சிவா விஷ்ணு கோவிலையும் தவிர வேறு ஒன்றையும் பார்க்கவில்லை. நடுவில் எண்ணி ஏழே நாட்கள் பீனிக்சில் இருந்த மகனையும் மருமகளையும் போய் பார்த்துவிட்டு வந்தார்கள். மகனும் மருமகளும் அப்பா அம்மா வந்திருக்கிறார்களே என்று ஓவரா கொண்டாடவும் இல்லை அதே சமயம் வெறுப்பாகவும் நடந்து கொள்ளவில்லை. வெளிநாடு போனாலே இந்த விட்டேத்திக் குணம் வந்துவிடுமோ என்று பல முறை நினைத்திருக்கிறாள் சகுந்தலா. அவர்கள் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்தால் அவளும் சுவாமிநாதனும் விழுந்து விழுந்து கவனிப்பார்கள். ஆனால் பெண்ணும் பிள்ளையும் யாருக்கு வந்த விருந்தோ என்று நடந்து கொள்வது அவளுக்கு வியப்பைத் தந்தது. “நம்ம இரத்தம் தானேங்க ஓடுது, ஏன் இப்படி இருக்காங்க” என்று பல முறை கணவனிடம் அங்கலாய்த்திருக்கிறாள் சகுந்தலா. அவரோ மௌன சாமியாக பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருப்பார்.

மகள் இரண்டாவது பிரசவத்துக்குக் கூப்பிடுவாள் என்று நினைத்திருந்தாள் சகுந்தலா. ஆனால் அவளோ “உன்னைக் கூப்பிட்டால் என் மாமியாரையும் ஒரு தடவை கூப்பிட வேண்டும், எல்லாம் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று வேறு யார் தயவும் இல்லாமல் இரண்டாவது பிரசவத்தைக் கணவன் துணையுடன் முடித்துக் கொண்டாள். அவ்வளவு சாமர்த்தியம்! “ஒரு தடவை வந்துட்டுப் போடி, உன் குழந்தைகளோடு இருக்கணும்னு அப்பாக்கும் எனக்கும் ஆசையா இருக்கு” என்று ஒரு முறை சகுந்தலா சொன்னாள். “அதான் ஸ்கைப்பிலேயே அடிக்கடி பேசறோமே மா எதுக்கு அங்க பணம் செலவழிச்சிக்கிட்டு வரணும்? கார்த்திக் பாட்டிக்கு இங்க வந்து நீ புதுசா கத்துக்கிட்ட பாட்ட பாடிக் காட்டு” என்று அவள் மகனைக் கூப்பிட்டு அதோடு அந்தப் பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டாள். அவள் மாமனார் இறந்த போது கூட அவள் கணவன் மட்டும் வந்து காரியம் செய்து விட்டுப் போனான்.

“அப்பா வேலைக்குப் போன உடனே கடனை உடனை வாங்கிக் கட்டின வீடு டா, அம்பது வருஷத்துக்கு மேல் ஆச்சு. போன டிசம்பர் மழைல ரொம்ப மோசமாயிடிச்சு. உனக்குத் தெரியாததா? அமபத்தூர்ல மாமா வீட்டில தானே ஒரு மாசம் இருந்து இந்த வீட்டை சரி பண்ணினோம். டாய்லெட் எல்லாம் பழசா பள்ளத்துல இருக்கு. அதனால அடிக்கடி வெளிய சாக்கடை தண்ணி வழியுது. வாசக் கதவெல்லாம் ரொம்ப பாழாயிருக்கு. ஒரு உதை விட்டா கதவு உடஞ்சிடும், அவ்வளவு இத்துப் போயிருக்கு.”

“அதுக்கு என்ன செய்ய சொல்ற மா?” என்றான் வேணு. “எங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பே இல்லடா. வயசானவங்க தனியா இருக்கோம்னு இங்க எல்லாருக்கும் தெரியும். இடிச்சு பிளாட்டா கட்டிடலாம். எங்களுக்கும் துணைக்கு பில்டிங்கில் மத்த குடித்தனங்கள் இருப்பாங்க. உனக்கு ஒரு பிளாட், காவ்யாக்கு ஒரு பிளாட் கொடுக்கணும்னு அப்பாக்கு ஆசை. ஒரு தடவை வந்துட்டுப் போடா. நல்ல பில்டரா பார்த்துப் பேசி, இந்த வீட்டு சாமானை ஒழுங்கு படுத்தி எங்களை வேற வீடு பார்த்து வெச்சிட்டு போனினா ரொம்ப சௌகரியமா இருக்கும். அப்பாக்கு எழுபத்தஞ்சு வயசு ஆகுது. எனக்கும் முடியலை, அப்பாக்கும் முடியலை” என்றாள் சகுந்தலா மகனிடம். ஸ்கைப்பில் அந்தப் பக்கம் அவள் மகன் வேணு எதையும் காதில் போட்டுக் கொண்டா மாதிரியே தெரியவில்லை. சகுந்தலாவிற்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இவனெல்லாம் என்ன பிள்ளை! பாரின் போறான்னு நினச்சு எவ்வளவு சந்தோஷப் பட்டோம் ரெண்டு பேரும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஒரு நாள் மகளிடம் இதே வீட்டு மேட்டரை பேச ஆரம்பித்தாள் சகுந்தலா. “ எல்லாம் அண்ணா சொன்னான் மா. இப்படியே அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருங்கம்மா. இப்போ எதுக்கு வீட்டை இடிக்கணும்? நானோ அண்ணனோ இந்தியா திரும்பி வரப் போறதில்லை. கட்டடத்துக்கு ஒன்னும் விலை கிடையாது எப்பவும் நிலத்துக்கு தான் மதிப்பு. இப்போ எதுக்கு அனாவசியமா இடிச்சு கட்டறீங்க. பின்னாடி நிலத்தை வித்து நானும் அவனும் பணத்தை அமெரிக்காவுக்குக் கொண்டு போயிக்கிறோம்” என்றாள் சர்வ சாதரணமாக.

மனம் நொந்துவிட்டது சகுந்தலாவிற்கு. வயதான பெற்றோரை கவனிக்க வேண்டும் என்கிற எண்ணமும் இல்லாமல், அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை வாய் விட்டுச் சொல்லியும் கவலைப்படாமல் சொத்தை மட்டும் கனகச்சிதமாகப் பங்கு போட்டுக் கொள்ள அவர்கள் தயாராக இருப்பது உண்மையிலேயே அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்பொழுதுமே தலைமுறை இடைவெளி இருப்பது சகஜம் தான். ஆனால் இவ்வளவு பெரிய இடைவெளியா என்று மனம் வேதனை பட்டது. அவள் மாமியாருக்குப் புற்று நோய் வந்து, கடைசி காலத்தில் இரண்டு வருடம் குளிப்பாட்டி, சோறூட்டி மற்ற உதவிகள் செய்து மாமியார் மனம் கோணாமல் பார்த்துக் கொண்டவள் சகுந்தலா. தனக்கும் தன் கணவருக்கும் உடல் நலமில்லாமல் போனால் ஸ்கைப்பில் விசாரிப்பதுடன் நின்று விடும் என்று புரிந்து கொண்டாள்.

இவர்களே தெரிந்தவர்கள் மூலம் ஜாயின்ட் வென்சருக்காக சில பில்டர்களை பார்க்க ஆரம்பித்தனர். சுவாமிநாதனின் மாமா பையன் சமீபத்தில் அவன் வீட்டை இடித்துக் கட்டியிருந்தான். அவனை சென்று சந்தித்ததில் அவன் தன் பில்டரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் சொல்லி அவர்களை அவனே பில்டர் ஆபிசுக்கும் கூட்டிச் சென்றான். பேசிக் கொண்டிருக்கையில் சகுந்தலா அங்கிருந்த சில மாடல்களை வியந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை கவனித்த இஞ்சினியர் கோபால்சாமி வாருங்கள் நாங்கள் கட்டிய சில கட்டங்களின் மாடல்களை உங்களுக்குக் காட்டுகிறேன் என்று ஒரு பெரிய ஹாலுக்கு அழைத்துச் சென்றார். ஆசிரியர் ஆனதால் சகுந்தலாவுக்குக் குழந்தைகளுக்கு மாடல்கள் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கிறாள். பார்த்துக் கொண்டே வந்தவள் ஒரு மாடலைப் பார்த்து இது என்ன ஹாஸ்பிடலா இல்லை ஹோட்டலா என்று கேட்டாள். அதற்கு அவர், “இல்லைமா இது ஒரு முதியோர் இல்லம். ரொம்பப் பிரமாதமா கட்டியிருக்கோம். ஒரு பெரும் பணக்காரர் அவர் மனைவி ருக்மணி பெயரில் இதை காட்டியுள்ளார். மாச வாடகை அதிகம் தான். ஆனால் உயர்தர சேவை என்றார்.

பொறி தட்டியது சகுந்தலாவுக்கு. ஏன் இந்த வீட்டை இடித்துக் கட்டி கஷ்டப்படனும்? பேசாம இந்த மாதிரி ஒரு முதியோர் இல்லத்தில் போய் இருந்தால் இருவரில் ஒருவர் போன பின்பும் பழகிய இடத்தில் மற்றவர் தொடர்ந்து இருக்கலாமே! வீட்டிற்குத் திரும்பி வந்தவுடன் கணவரிடம் பேசினாள். அவருக்கும் அந்த யோசனை மிகவும் நல்ல யோசனையாகப் பட்டது. நாலு பில்டர்களை போய் காத்திருந்து பார்த்து, அவர்கள் சொல்லும் கணக்கு வழக்குகளை மனத்தில் ஏற்றிக் கொள்வதே அவருக்கு பெரும் சிரமாமாக இருந்தது. இதற்கு மேல் ஒரு பில்டரை முடிவு செய்து அக்ரீமென்ட் போட்டு ஏமாறாமல் பிளாட்களை கட்டி முடிக்க வேண்டுமே என்னும் கவலை அவர் மனத்தில் அரித்துக் கொண்டிருந்தது.

அடுத்த நாளே எஞ்சினியர் கோபால்சாமியிடம் தங்கள் முடிவை சொன்னார்கள். அவரும் உங்க வீடு நல்ல லொகேஷனில் உள்ளது அதனால் நானே நிலமாகவே வாங்கிக் கொள்கிறேன் என்று டோக்கன் அட்வான்சும் அன்றே கொடுத்து விட்டார். டாகுமென்ட்சை வக்கீலிடம் காட்ட அவர்களிடம் இருந்து எடுத்து சென்றார். அவரிடமே அந்த புதிய முதியோர் இல்லத்தில் தங்களுக்கு இடம் கிடைக்குமா என்று பார்க்க சொன்னார்கள். அவரும் விசாரிப்பதாக சொன்னார். அந்த வாரத்தில் மகளுடனும் மகனுடனும் பேசும் போது ஒரு முதியோர் இல்லத்தில் போய் தங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். இருவருமே பேசி வைத்துக் கொண்டு சொன்னா மாதிரி, ஓ நல்ல முடிவும்மா, வீடு ரிப்பேர் பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றனர். மகனும் மகளும் மறக்காமல் வீட்டை என்ன பண்ணப் போகிறீர்கள் என்று கேட்டனர். எளிதா வாடகைக்கு விட்டுடலாம். அந்த வாடகையும் எங்கள் செலவுக்கு சரியாகும் என்று சகுந்தலா கூறியதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டனர் இருவரும். ஒரு ஆறுதலுக்குக் கூட ஏம்மா அங்க போறீங்க, இல்லை மாதச் செலவுக்குப் பணம் அனுப்பறோம் என்று இருவரும் சொல்லவில்லை.

oldagehome1

 

 

விரைவில் வீட்டை விற்று ஒரு நல்ல நாளில் ருக்மணி முதியோர் இல்லத்துக்குக் குடி வந்தனர். மகிழ்ச்சியாக செல்கிறது வாழ்க்கை. அவர்கள் வயதுக்கு ஏற்ற ஏக்டிவிடீஸ் அவர்களை சுறுசுறுப்புடன் வைத்திருக்கிறது. தங்கள் காலத்துக்குப் பிறகு அவர்கள் வீட்டை விற்ற பணத்தை அந்த முதியோர் இல்லத்துக்குப் போய் சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்தனர். அந்தப் பணத்தில் எத்தனை குடியிருப்புகள் கட்ட முடியுமோ அந்த எண்ணிக்கையில் கட்டி மாத வாடகை கொடுக்க முடியாதவர்கள் பயன் பெறும்படி இலவச விடுதியாகப் பயன் படுத்தப் பட வேண்டும் என்று தெளிவாக எழுதி வைத்தனர். எப்பவும் போல ஸ்கைப் கால்கள் தொடர்ந்தன, விசாரிப்புகள் தொடர்ந்தன. எப்போதாவது அவர்கள் சென்னை வந்து வீட்டைப் பார்க்க சென்றார்களானால் அது ஒரு 3 மாடி குடியிருப்பாக மாறி இருப்பதைப் பார்ப்பார்கள்.

houseandmoney

மனைவி அமைவதெல்லாம்……. சிறுகதை

 

horoscope

“சுசீலா மைலாப்பூர்ல ஒரு ஜோசியர் இருக்காராம். ரொம்ப நல்லா ஜாதகம் பார்த்து சொல்றாராம். என் ப்ரெண்டு ஜானு சொன்னா. கார்த்திக்குக்கு இப்போ செய்யிற வேலை பிடிக்கலையாம். தினம் வீட்டுக்கு வந்ததும் வேலையை விட்டுடறேன்னு பயமுறுத்தறான். அவன் ஜாதகத்தைக் காட்டலாம்னு இருக்கேன். உன் பையன் ஜகன் ஜாதகத்தையும் எடுத்துக்கிட்டு வாயேன். என்ன சொல்றாருன்னு பார்ப்போம். பீஸ் கூட ஒரு ஜாதகத்துக்கு நூறு ரூபாய் தானாம்.”

“ப்ச் எனக்கு ஜாதகம் ஜோசியத்துல எல்லாம் நம்பிக்கையே போச்சு சவிதா. ஒவ்வொருத்தனும் இப்ப ஆயிடும் அப்ப ஆயிடும்னு சொல்றான். எங்க ஆச்சு?” சலித்துக் கொண்டாள் சுசிலா.

“இல்ல, இவரு சொன்ன மாதிரியே ஜானு புருஷனுக்கு ஒரே மாசத்துல வெளிநாட்டுல வேலை கிடைச்சுதாம். அவ நாத்தனார் புருஷனுக்கு வேலை போகாதுன்னு அடிச்சு சொன்னாராம். அவரு கம்பெனில நிறைய பேரை வேலையை விட்டு எடுத்துட்டாங்களாம், ஆனா இவரை வேலையை விட்டு அனுப்பலையாம். சும்மா தான் வாயேன்” கையைப் பிடிச்சு இழுக்காத குறையாகக் கூப்பிட்டாள் சவிதா.

சரி ஒரு நூறு ரூபாய் தானே. போய் பார்ப்போம் என்று சவிதாவுடன் டூ வீலரில் கிளம்பினாள் சுசிலா. ஜோசியர் இருந்த அறை ரொம்ப சின்ன அறை. வாசல் கதவில் ஜோசியர் குஞ்சிதபாதம் என்ற பலகை கோணலாகத் தொங்கிக் கொண்டிருந்தது. வெராண்டாவில் டாக்டர் கிளினிக்கில் இருப்பது போல கூட்டம் வழிந்தது. ஒரு பெரிய வெங்கடாஜலபதி படம் சீரியல் விளக்குகளுடன் மின்னியது. யாருக்குப் பின் யாரென்று அவர்களே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு முடிவு செய்து கொண்டிருந்தனர். வியாதியை விட பிரச்சினைகள் தான் அதிகம் போலிருக்கு என்று எண்ணினாள் சுசிலா. ஜோசியர், ஒருவருக்கு சொல்லும் ஜாதகப் பலன்கள், பரிகாரங்கள் எல்லாம் அங்கு இருந்த எல்லார் காதிலும் விழுந்தது. ப்ரைவசி என்பதெல்லாம் கிடையாது. ஆனால் ஒன்று, நேரம் கடத்தாமல் விறு விறுவென்று எல்லாரையும் பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தார். அரை மணி நேர காத்திருப்பில் இவர்கள் முறை வந்தது. முதலில் சவிதா கேட்க வேண்டியவற்றைக் கேட்டுக் கொண்டாள். பின் சுசிலா ஜகன் ஜாதகத்தைக் காட்டினாள். “ஆயிடும் மா இன்னும் மூணு மாசத்துல ஆயிடும்” என்றார் ஜோசியர். “இந்த மாதிரி தாங்க ஒவ்வொரு ஜோசியரும் சொல்றாங்க. மூணு மாசம் மூணு மாசம்னு நிறைய ஜோசியக்காரங்க சொல்லியே இப்போ அவனுக்கு முப்பத்தஞ்சு வயசாச்சு” என்றால் சுசீலா. “சோழி உருட்டிப் பார்த்து கரெக்டா பொண்ணு பேரு என்ன, எங்க இருக்கான்னு கூட சொல்ல முடியும். செய்யவா? ஆனா அதுக்கு ஆயிரம் ரூபாய் ஆகும்” என்றார்.

சரி நூறு ரூபாய் தண்டம். இதோடு கிளம்பலாம் என்று சவிதாவைப் பார்த்தாள் சுசிலா. அதற்குள் சவிதா “நீங்க போட்டுப் பார்த்து சொல்லுங்க சார்” என்றாள். அவர் உடனே கண்ணை மூடிக் கொண்டு எதோ மந்திரங்களைச் சொல்லி சோழியை உருட்டிப் போட்டார். பின் கூட்டல் கழித்தல் எல்லாம் செய்து, “உங்கம்மா பேர் என்ன சொல்லுங்க?” என்றார்.

“அம்மா பேர் ரமணியம்மா”

“உங்க பிள்ளையை கட்டிக்கப் போறவ பேரும் அது தான். ஊரு பெங்களூரு மைசூரு பக்கம். அவங்க வீட்டுக்கு கிழக்கால ஒரு அம்மன் கோவில் இருக்கும். நல்ல சக்தி வாய்ந்த அம்மன். மேற்கு பக்கத்துல ஒரு அரசாங்க அலுவலகம் இருக்கும். உங்க பிள்ளைக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கும்” என்றார்.

“பொண்ணு எங்க ஜாதி பொண்ணா இருக்குமா?”

“கண்டிப்பா உங்க ஜாதிப் பொண்ணு தாம்மா. வேற ஜாதிப் பொண்ணு வரா மாதிரி ஜாதகத்துல இல்லவே இல்லை. அதான் பொண்ணு பேரு கூட உங்கம்மா பேரு தானுன்னு சொல்றேனே” என்றார்.

சுசீலா பர்சில் ஐநூறு ரூபாய் தான் இருந்தது. சவிதா மீதி அறநூறு ரூபாயைக் கொடுத்தாள். “ஏய் ஒன்னும் கவலைப்படாதே. இவரு சொல்றது அப்படியே பலிக்குதாம். வெயிட் பண்ணிப் பார்ப்போமே” என்றாள் சவிதா.

அடுத்த மாதத்திலேயே ரெண்டு ஜாதகங்கள் வந்தன, ஒன்று ஹோசூர் இன்னொன்று பெங்களூர். சுசீலா ரொம்ப ஆர்வம் ஆனாள். “ஜகன் ரெண்டு ஜாதகம் வந்திருக்கு. நல்ல குடும்பம். ரெண்டு பேருக்குமே சென்னைல தான் வேலை. என்ன சொல்ற?”

“நானே பார்த்துக்கறேன், நீ தேடாதேன்னு எவ்வளவு தடவை சொல்றதுமா? சீக்கிரமே உனக்கு ஒரு நல்ல சேதியை சொல்லப் போறேன். பொறுமையா இரு.” என்று சொல்லிவிட்டு அகன்றான்.

சுசீலாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இது வரை அவன் பிடி கொடுத்தே பேசியது இல்லை. கணவரிடம் சென்று, “அவன் யாரையோ லவ் பண்றான் போலிருக்குங்க. யாரா இருந்தாலும் நாம சரின்னு சொல்லிடலாம். அவன் சந்தோஷம் தான் நம்ம சந்தோஷமும்.” என்றாள்.

wedding4

ஒரு வாரம் கழித்து ஒரு நாள் அவர்கள் டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது, டிவியை மியுட் பண்ணிவிட்டுப் பேச ஆரம்பித்தான், “அம்மா அப்பா நான் சொல்றதைக் கேட்டு நீங்க அதிர்ச்சி அடையக் கூடாது. என் ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒருத்தரை நான் விரும்பறேன். பெங்களூரில் இருந்து மாத்தலாகி சென்னை வந்து ஒரு வருஷம் இருக்கும். பழகினதில் ரொம்பப் பிடிச்சிருக்கும்மா.”

“அடேய் பேரு என்னடா?” என்றாள் சுசீலா.

“பேரு கொஞ்ச பழங்காலப் பேரு தான்மா. ரமணி.”

ஜிவ்வென்று மகிழ்ச்சி தலைக்கு ஏறியது சுசிலாவுக்கு. “பெங்களூர்ல அவங்க வீட்டுப் பக்கத்துல ஏதாவது அம்மன் கோவில் இருக்காடா? தெரியுமா?”

“நான் போன வாரம் அபிஷியலா பெங்களூர் போயிருந்த போது அவங்க வீட்டுக்குப் போய் அவங்க அம்மா அப்பாவை சந்திச்சிட்டு வந்தேன் மா. வாராஹி அம்மன் கோவில் இருக்கு. அவங்க தெரு பேரே வாராஹி அம்மன் டெம்பிள் ஸ்ட்ரீட் தான். BSNL ஆபிஸ் பக்கத்து கட்டடத்தில் தான் இவங்க பிளாட் இருக்கு.”

திக்கு முக்காடிப் போனாள் சுசீலா. ஒரு மூச்சு விட மறந்து அடுத்த மூச்சை இழுத்தாள். “கோச்சுக்காதடா, நம்ம ஜாதி தானே?”

“ஆமாம்மா”

“அப்புறம் ஏண்டா அதிர்ச்சி அடையக் கூடாதுன்னு சொன்ன. எவ்வளவு சந்தோஷமான விஷயம். உனக்குப் பிடிச்சா மாதிரி பொண்ணு கிடச்சுதேன்னு சந்தோஷம் தானேடா படப் போறோம்.”

“பொண்ணு இல்லம்மா பையன்.”

LGBTflag

 

 

பணமும் பாசமும் – சிறுகதை

 

flood1

‘அத்தை எதையாவது பிடிச்சிக்கங்க, யாராவது ஒடி வாங்களேன் எங்க அத்தையை காப்பாத்துங்களேன்” நிர்மலா அலறிக் கொண்டே இருக்கும் போதே பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் பணப்பெட்டியை கட்டிக்கொண்டே நிர்மலாவின் மாமியார் கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போனாள். விடாமல் பெய்த மழையினால் காய்ந்து வரண்டிருந்த பக்கத்தில் இருந்த ஆறு இவ்வளவு வேகமாக வெள்ளமாக மாறும் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆனால் கொஞ்சம் தண்ணீர் வீட்டிற்குள் வந்தவுடனேயே நிர்மலா தன் மாமியாரை மாடிக்கு அழைத்துச் செல்ல முயன்ற வரை கெஞ்சிப் பார்த்தாள். “வந்திடுங்க அத்தை. அப்புறம் பீரோவை திறக்கலாம். தண்ணி வேகமா ஏறுது.”

“இருடி வரேன். உனக்கென்னடி தெரியும் பணத்தோட அருமை” அதான் அவள் சொன்ன கடைசி வார்த்தை. பீரோவில் இருந்த பணத்தையும் நகைகளையும் எடுத்து ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டிருக்கும்போதே கரை புரண்டு வேகமாக வந்த தண்ணீர் அவரை அப்படியே அடித்துச் சென்றது. தண்ணீருக்கு தான் இத்தனை சக்தியா? அத்தை எங்கே? மாடியின் மேல் படியில் நின்றிருந்த நிர்மலா அப்படியே சரிந்து உட்கார்ந்தாள்.

‘மருந்துக்கு எவ்வளவு ஆச்ச?’

‘780ரூபா அத்தை.’

‘மீதி இருபது ரூபா எங்க?’

‘இருங்க அத்தை கொடுக்கறேன். கை வேலையா இருக்கேன் இல்ல.’

‘அப்புறம் மறந்து போயிடுவ. இப்பவே கொடு. நேத்து வாசல்ல கீரக்காரிக்கிட்ட இருபது ரூபாய்க்கு கீரை வாங்கினேன். அதுவே நீ இன்னும் திருப்பிக் கொடுக்கலை. போன மாசம் மருந்துக்கு 750ரூபாய் தானே ஆச்சு, ஏன் முப்பது ரூபா அதிகம் இந்த மாசம்?’

“உங்க மருந்துல ஏதோ ஒண்ணு விலை ஏறி இருக்காம் அத்தை. பில்லைப் பாருங்க. மெடிகல்ச்லையே சொன்னாங்க.”

“சரி, அந்தப் பூஜை ரூம் லைட்டை அணைச்சிட்டுப் போ. சாமி கும்பிட்ட பிறகு லைட்டை அணைக்கனும்னு கூட பிள்ளைங்களுக்குச் சொல்லித் தரர்தில்லை. லைட்டு காலையில் போட்டது. இன்னும் எரியுது. என்ன குடும்பம் நடத்தறியோ?”

grandma2

இந்தக் கிழவியுடன் தினம் இதே போராட்டம் தான் நிர்மலாவிற்கு. பணத்தோடே சாகும் மாமியார். மாமியார் ஒரு கோடீசுவரி. அந்த வீடு மட்டுமே ஒரு கோடி தேறும். வங்கியிலும் வைப்பு நிதி இருக்கு. ஆனால் விருந்தினர் வந்தால் கூட அரை லிட்டர் பால் அதிகமா வாங்கக் கூடாது. இருப்பதை வைத்தே சமாளிக்கணும். கடைசியில் நிர்மலாவுக்குத் தான் காபியோ மோரோ இருக்காது.

இடுப்பில் ஒன்றும் வயிற்றில் ஒன்றும் இருக்கும் போது கார்கில் போரில் நிர்மலாவின் கணவன் கேப்டன் ராஜேந்திரன் இறந்து விட்டான். கணவன் இறந்த உடனே அவளால் வேலைக்குப் போக முடியவில்லை. மகனைப் பெற்றெடுத்து, மூத்த மகளையும் கைக்குழந்தையையும் பராமரிப்பதிலேயே முதல் சில வருடங்கள் கழிந்தன. கொஞ்ச காலத்திலேயே மகன் போன துக்கத்தில் மாமனார் படுத்தப் படுக்கை ஆனார். அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் வேலைக்குப் போகும் முயற்சியையும் கை விட்டாள். மாமனார் மிகவும் நல்லவர். ராஜேந்திரன் இறந்த உடனேயே, “நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் மா. எங்களுக்குப் பொண்ணு இல்ல. இனிமே நீ தான் எங்க மக. காசு பணத்துக்கு ஒன்னும் பஞ்சமில்லை. நீ வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டால் அதுவே போதும் மா” என்று சொன்னார். அவர் இருந்த வரை வீட்டு நிர்வாகத்துக்கு அவளிடமே பணத்தைக் கொடுப்பார். அவள் பென்ஷன் பணத்தைத் தொட வேண்டிய அவசியமே வரவில்லை. அவர் இறந்த பிறகு எல்லாம் தலை கீழாக மாறியது.

அவள் மகன் இறந்ததற்கே நிர்மலாவின் ஜாதகம் தான் காரணம் என்று கருவிக் கொண்டிருந்த மாமியாருக்கு கணவன் இறந்த பிறகு கட்டுப்படுத்த யாரும் இல்லை என்பதால் கோபம் அனைத்தையும் மருமகள் மேல் கொட்ட ஆரம்பித்தாள்.

housewife

நிர்மலாவின் பென்ஷன் பணத்தில் தான் வீட்டுச் செலவு அத்தனையும் என்று நிலைமை மாறியது. ‘இந்த வீட்டில வாடகைக் கொடுத்தா இருக்க? பென்ஷன் பணத்தை எடுத்து செலவழிக்க இவ்வளவு யோசிக்கற” என்பாள். மாமியாரின் மருந்து செலவுக்கு மட்டுமாவது அவள் தன் சொந்தப் பணத்தைக் கொடுக்கிறாளே என்று தேற்றிக் கொள்வாள் நிர்மலா.

மகனே போய் விட்டான். அவன் போகும்போது எதையுமே கொண்டு போகவில்லை. அனால் அந்த உணர்வு கொஞ்சமும் இல்லை நிர்மலாவின் மாமியாருக்கு. தன் வைரத் தோட்டையும் மூக்குத்தியையும் எப்பவாவது கழட்டினால் கூட பிரோவில் பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக் கொள்வாள். நகையும் பணமுமே அவள் உயிர் நாடி.

வேலைக்குப் போகாதது அவள் செய்த பெரும் தவறு என்று நிர்மலா இப்பொழுது உணர்ந்தாள். பென்ஷன் பணம் அவளின் இன்றைய தேவைகளுக்குக் கொஞ்சமும் போதவில்லை. குழந்தைகள் ஸ்கூல் பீஸ் கட்டுவதில் இருந்து துணி மணி வாங்குவது வரை மாமியார் கையை எதிர்ப்பார்த்தே இருக்க வேண்டியிருந்தது. குழந்தைகளும் பாட்டி வாங்கித் தரும் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அவளிடமே அதிகம் ஒட்டுதலுடன் இருந்தன.

“பாட்டி, நீ போட்டிருக்கிற இந்த செயின் நான் காலேஜ் போறச்சே எனக்குப் போட்டுக்கக் கொடுப்பியா”

“அடி போடி. நீயே டிக்ரீ பாஸ் பண்ணி வேலைக்குப் போய் வாங்கிக்க”

“ஏன் பாட்டி, எப்படி இருந்தாலும் எனக்கு தானே வரும். நான் தானே உன் ஒரே பேத்தி?” சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அன்று நிர்மலாவின் மகள் ஓடிவிட்டாள்.

ஆனால் கிழவி தான் உயிராக மதித்த பணம் நகையோடு தான் ஜல சமாதி ஆகியிருக்கிறாள். யாருக்கும் கொடுக்காமல் தன்னோடே எடுத்துக் கொண்ட சென்ற நகையும் பணமும் சாவிலாவது அவளுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.

தண்ணீர் வடிய ஒரு நாள் ஆகியது. மெல்ல மூவரும் இறங்கி வந்தனர். கொலைப் பசி. குழந்தைகள் அழுது அழுது முகம் வீங்கிப் போயிருந்தது. கண்ணெதிரே அவர்களின் பாட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

தண்ணீர் கணுக்கால் அளவு இருந்தது. மெல்ல இருவரையும் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள். குழந்தைகளுக்குச் சாப்பிட வாங்கிக் கொடுக்க என்ன செய்யலாம் என்று கேட்டைத் திறக்க வருகையில் வேப்ப மரத்தடியில் அவள் பார்வை சென்றது. என்ன அது, அத்தையின் நகைப் பெட்டி மாதிரி உள்ளதே என்று அருகில் சென்று பார்த்தாள். அவள் மாமியாரின் நகைப் பெட்டியே தான். அழுத்தி மூடியிருந்த தாழ்பாளை திறந்தாள். உள்ளே நகைகளும் பணமும் ஈரமாகக் காட்சியளித்தன. இது வரை அடக்கி வைத்திருந்த அழுகை பொத்துக் கொண்டு வெளியே வந்தது நிர்மலாவிற்கு. மரத்தைப் பிடித்துக் கொண்டு தன் மாமியாரின் மறைவுக்காகக் கதறி அழுதாள்.

moneybox

மாமியாரைப் பொறுத்த வரை அவளைக் காப்பாற்ற வேண்டிய மகன் அவளுக்கு முன்னே போய்விட்டான், அதைத் தொடர்ந்து அவள் கணவனும். வேலைக்குப் போகாத மருமகள், படித்து முன்னேற்ற வேண்டிய பேரக் குழந்தைகள், இவர்களை கண் முன்னே பார்ப்பது தான் அவளை பணத்துடன் ஐக்கியமாகி இருப்பவளாக ஆக்கியிருக்குமோ? வேதனையில் நிர்மலா மனம் எண்ணியது.

பெட்டியையும் குழந்தைகளையும் பிடித்துக் கொண்டே தெருவுக்கு வந்த நிர்மலாவை தூரத்தில் ஒருவர் கைக் காட்டி அழைப்பது தெரிந்தது. “அம்மா உங்க வீட்டு ஆயா ஒரு கிலோமீட்டர் தள்ளி ஒரு மரத்து மேலே உட்கார்ந்திருந்திச்சு. அந்தப் பக்கத்துல யாரோ காப்பாத்தி இருக்காங்க. கவலைப் படாம இருங்க. கொஞ்ச நேரத்தில் கூட்டியாந்திடுவாங்க” என்று உரக்கக் கத்தினார். குழந்தைகள் அவளைக் கட்டிக் கொண்டு பெரிதாக மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

ஒரு தன்னார்வலத் தொண்டர் குழந்தைகள் கையில் பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் தண்ணி பாட்டில்களையும் கொடுத்து விட்டுப் போனார். வாழ்க்கை அழகு தான்!

photo courtesy from the websites below, with thanks.

https://www.pinterest.com/pin/563653709589924482/

http://www.vkartgallery.com/paintings-detail/508-intazaar

https://wanelo.com/shop/vintage-money-box

http://www.azgs.az.gov/hazards_floods.shtml

காசு பணம் துட்டு மணி மணி – சிறுகதை

wheelchair

வெறித்தப் பார்வையுடன் வீல் சேரில் உட்கார்ந்து இருக்கும் கணவனைப் பார்த்தாள் விமலா. சுற்றிலும் மனித நடமாட்டம் நின்று போய் ஒரு சுழல் காற்றில் அவளும் சுரேந்தரும் மட்டும் சிக்கிக் கொண்டது போல் செயலற்று நின்றாள். சுரேந்தரைக் கொண்டு வந்து விட்டவன் இவளிடம் அவசர அவசரமாக சில காகிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டான். எதற்குப் போடுகிறோம் ஏன் போடுகிறோம் என்று தெரியாமல் கையெழுத்துப் போட்ட அவளிடம் அவன், “நான் ரிடர்ன் பிளைட்டிலேயே மலேசியா போறேன் மேடம், பார்த்துக்கங்க” என்று சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினான்.

“சார் என்னாச்சு இவருக்கு? ஏன் இப்படி இருக்கிறார், சொல்லிட்டுப் போங்க” என்று அவன் சட்டையைப் பிடித்தாள் விமலா.

சட்டையிலிருந்து அவள் கைகளை விலக்கி, “தெரியாது மேடம், காலையில வேலைக்கு வரலையேன்னு என்னை அவர் ரூமுக்குப் போய் பார்க்க சொன்னாங்க, இப்ப இருக்கிறா மாதிரியே இருந்தாரு. அதுக்கப்புறம் அங்கப் பக்கத்துல இருக்கிற டாக்டர் வந்து பார்த்துட்டு, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணனும்னு சொன்னாரு. ஹைதிராபாத் ஆபீசுக்குத் தகவல் சொன்னோம். அவங்க அங்கெல்லாம் அட்மிட் பண்ண வேண்டாம், அவர் பழைய கேஸ் ஹிச்டரி எல்லாம் நமக்குத் தெரியாது. அதனால உடனே சென்னைக்குக் கூட்டிப் போய் உங்க கிட்ட ஒப்படைக்கச் சொல்லிட்டாங்க. உங்களையும் ஏர்போர்ட்டுக்கு வரச் சொல்லிடறோம்னு சொன்னாங்க. எனக்கு வேற எதுவும் தெரியாதுங்க” என்றான்.

“ஏங்க, எந்த மருத்துவ உதவியும் கொடுக்காமையா கூட்டிக்கிட்டு வந்தீங்க?” கசங்கிய சட்டையும் சாய்ந்தத் தலையுமாக உட்கார்ந்திருந்த கணவனைப் பார்த்து அடக்க முடியாமல் கோபமும் அழுகையும் ஒருசேர வந்தது விமலாவுக்கு. அவனோ பதில் சொல்லக் கூட நிற்காமல் அந்த இடத்தைவிட்டுக் காணாமல் போயிருந்தான். சுற்றி இருந்த மனிதர்களும் விமான நிலைய இரைச்சலும் திடீரென்று இவள் முகத்தில் ஓங்கி அறைவது போலத் தோன்றியது. முதலுதவிக்கு விமான நிலையத்தில் இருந்தவர்களை அணுகினாள். அவர்கள் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்தார்கள். உடனே பாரதி ராஜா மருத்துவமனைக்கு விரைந்தாள். ஆம்புலன்ஸ் பயணத்தின் போது அவன் கண்களை மூடி உறங்கிக் கொண்டு வருவது போலத் தோன்றியது. ஒரு பேச்சுமில்லை அவனிடம் இருந்து. மருத்துவமனையில் நேராக அவனை ICUவுக்குக் கொண்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த ஒரு மருத்துவர், “அவருக்கு எதோ பெரிய ஷாக் ஏற்பட்டிருக்கணும். அல்லது நினைவுகளை பாதிக்கிற அளவு ஏதாவது சாப்பிட்டிருக்க வேண்டும். மெண்டல் பிரேக் டவுன் ஆகியிருக்கு. என்ன காரணம்னு செக் பண்ணா தான் தெரியும். உயிருக்கு ஆபத்தில்லைம்மா கவலைப் படாதீங்க. இப்போ நான் கேக்கிற கேள்விக்கெல்லாம் விளக்கமா பதில் சொல்லுங்க” என்று விரைவாக பல கேள்விகள் கேட்டு அவருக்குத் தேவையானவற்றைத் தெரிந்து கொண்டார்.

நடு இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஹாஸ்பிடல் நெடியும் பயமும் சேர்ந்து குமட்டிக் கொண்டு வந்தது விமலாவுக்கு. மலேசியாவுக்குப் போகவே விருப்பம் இல்லாத சுரேந்தரைப் பிடித்துத் தள்ளியது இவள் தானே? எத்தனை முறை அவனை நச்சரித்திருப்பாள்! அவனை வாட்டும் சொற்களைக் கொட்டிய வாய் இன்று கேவலை அடக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது..

“எவ்வளவு நாளு தான் எடுத்துக்கப் போறீங்க முடிவு பண்ண? இங்க வாங்கினதை விட மூணு மடங்கு அதிக சம்பளம் கொடுக்கறாங்க. உங்களுக்கு வேலை போய் நாலு மாசம் ஆகுது, இன்னிக்கு வரைக்கும் இன்டர்வியு போறீங்களே தவிர வேலை ஒண்ணும் கிடைக்கலை. மலேசியா போய் வேலை செய்ய என்ன கஷ்டம் உங்களுக்கு?”

“இல்லை விமலா, உன்னையும் குழந்தைகளையும் விட்டுட்டுப் போகணுமா? நீயோ பேங்க்ல வேலை செய்யற, அதையும் விட மாட்ட. நீ இங்கேயும் நான் அங்கேயும்னு எவ்வளவு நாள் இருக்க முடியும்? நான் போற இடம் மலேசியாவில் பெரிய நகரத்துல கூட இல்ல. சின்ன ஊர். ஹெட் ஆபிஸ் ஹைதிராபாத்தில் இருக்கு. இந்தக் கம்பெனியை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. எனக்குத் தெரிஞ்சவங்க யாரும் அங்க வேலை பார்க்கலை.”

“நீங்க என்ன கல்யாணம் கட்ட பொண்ணு பாக்கறீங்களா இல்லை வேலைக்குப் போக கம்பெனி தேடறீங்களா? எதுக்கு யாரையும் தெரிஞ்சிருக்கணும். ஒரொரு வேலைக்கும் உங்களை புடிச்சுத் தள்ள வேண்டியிருக்கு. சிவில் இஞ்ஜிநீயரிங் படிச்சிருக்கீங்கன்னு எங்கப்பா கட்டிக் கொடுத்தாரே, அவரை சொல்லணும்.” தேளாகக் கொட்டினாள்.

அடிபட்டவனாக அவன் அவளைப் பார்த்து, “கொஞ்சம் பொறுமையா இரு விமலா, நிச்சயமா சென்னையிலேயே வேலை கிடச்சிடும்.”

“இப்படியே தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இதோ அதோன்னு நாலு மாசம் ஆச்சு. பழைய கம்பெனியிலேயே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்துருந்தீங்கன்னா வேலையே போயிருக்காது. அவங்க பண்ற கலப்படத்துக்கு நான் எப்படி உடந்தையா இருக்க முடியும், நேர்மை நியாயம்னு GM கிட்ட சண்டை போட்டீங்க, அவங்க போயிட்டு வான்னு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.” வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சினாள்.

அவள் தொணதொணப்புக்குப் பலன் கிடைத்திருந்தது. ரெண்டு நாள் கழித்து மாலை அவள் ஆபிசில் இருந்து வந்தவுடன், “அவங்கள்ட்ட பேசிட்டேன் விமலா. ஒரு வாரத்துல வீசாக்கு ஏற்பாடு பண்ணிடறதா சொன்னாங்க. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை சென்னை வந்து போக அவங்களே டிக்கெட் தருவாங்களாம். ரெண்டு வார லீவில் வந்து போகலாமாம்” என்றான்.

மகிழ்ச்சியுடன் அவனை ஆணைத்துக் கொண்டாள். எல்லாம் விரைவில் நடந்தது. கிளம்பும் போது இவனுக்கு தான் கண்களில் நீர் தளும்பியது. விமலாவோ அவன் ஆறு மாதத்தில் வரும்போது என்னல்லாம் வாங்கி வரச் சொல்லவேண்டும் என்று மனத்தில் ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொண்டிருந்தாள். விமான நிலையத்தில் குழந்தைகளை கட்டியணைத்து ரெண்டு கன்னத்திலேயும் மாறி மாறி முத்தமிட்டுக் கிளம்பினான்.

fatherchild

கோலாலம்பூர் போய் அங்கிருந்து பஸ்ஸில் கோலா கங்சர் போகவேண்டும். நாலு மணி நேர பேருந்து பயணத்தின் பின் அவன் சென்றடைய வேண்டிய ஊர் போய் சேர்ந்தான்.

அங்கு வரவேற்க கம்பெனியை சேர்ந்த அகௌன்ட்ஸ் மேனேஜர்  ஜெயகிருஷ்ணா வந்திருந்தார். அவர் முன்பே தொலைபேசியில் பேசியிருந்ததால் அவரை சந்தித்து அவருடன் காரில் அவர்களுக்கான இருப்பிடத்திற்குப் போனார்கள். அவர் தெலங்கானாவை சேர்ந்தவர், அந்த ப்ராஜெக்டில் ஆரம்பித்த நாள் முதல் இருப்பவர், என்று பேசியதில் தெரிந்து கொண்டான். அவர் அவனுக்காகவும் சமைத்து வைத்திருந்தார். அவர் ரூமிலேயே அவன் உணவருந்திய பின் அவனுக்கான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் ரூமில் இருந்து இரண்டு அறைகள் தள்ளி சுரேந்தருக்கான ரூம்.

house2

ஒரு பெரிய ஹாலிடே ரிசார்ட் கட்டும் பணி இவர்கள் கம்பெனிக்குக் கிடைத்திருந்தது. அழகிய கங்ஸர் நதிக்கு எதிரில் மிக நவீனமான அடுக்கு மாடி கட்டடம், ஒரு படுக்கை அறை அல்லது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சிறு பயண விடுதிகள் கட்டும் பணி. அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பழைய ப்ராஜெக்ட் இஞ்சினீயர் வேலையை விட்டதால் சுரேந்தர் அந்த இடத்திற்கு நியமிக்கப் பட்டிருந்தான். ஊரில் இருந்து சிறிது தொலைவில் தான் இந்த கட்டடம் எழும்புவதால் அவர்கள் தங்கும் இடமும் சைட்டுக்கு அருகிலேயே அமைக்கப் பட்டிருந்தது.

house1

இரவு விமலாவிடம் மகிழ்ச்சியாகப் பேசினான். அவளுக்கோ இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கே இவன் போய் இடம் பிடிக்கவில்லை என்று சொல்வானோ என்று பயந்து கொண்டிருந்தாள்.

ரெண்டு வாரம் போயிருக்கும் நடு இரவில் போன் வந்தது. படபடப்புடன் போனை எடுத்தாள். “விமலா நான் திரும்பி வந்துடறேன். இங்கே நிலைமை ரொம்ப மோசமா இருக்கு” சுரேந்தர் நடுங்கியக் குரலில் சொன்னான்.

“ஐயோ என்ன விஷயம்? இப்படி நடு ராத்திரியில் போன் பண்றீங்க?”

“இப்போ தான் பண்ண முடிஞ்சிது. இங்கே கன்ஸ்டிரக்ஷனில் பயங்கர தில்லு முல்லு நடக்குது. அக்கவுண்ட்ஸ் மேனேஜர் கட்டுமான வேலைக்கு வாங்காத சாமானுக்கெல்லாம் வாங்கியதாக என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கிறான். நான் ஹைதிராபாத்தில் மேலதிகாரிக்குத் தகவல் சொல்வேன் என்றால், எல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சு தான் நடக்குது. ஒழுங்கா கையெழுத்துப் போடு இல்லேனா முந்தின ப்ராஜெக்ட் மேனேஜருக்கு ஆன கதி தான் உனக்குன்னு மிரட்டுறான். முந்தின ப்ராஜெக்ட் மேனேஜருக்கு என்ன நடந்ததுன்னு யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க. நாலஞ்சு பேர் தான் இந்தியாவில் இருந்து வந்து வேலை பார்க்கிறாங்க. அவங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்காங்க. மத்தவங்க எல்லாம் மலாய்காரங்க, சைனீஸ். அவங்கள்ட்ட என்னால எதுவும் கேக்க முடியலை.”

“என்னங்க, போய் ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ளே இப்படி குண்டை தூக்கிப் போடறீங்களே.”

“இங்க இருக்கிற நிலைமை புரிஞ்சிக்காம இப்படி பேசறியே விமலா, நான் இப்போ அங்கே திரும்பி வரணும்னா கூட வரமுடியாதபடி அவங்க என் பாஸ்போர்ட்டை எல்லாம் வாங்கி வெச்சிருக்காங்க. நானே என்ன பண்றதுன்னு தெரியாம உன்கிட்ட யோசனை கேக்க போன் பண்ணா நீயும் இப்படி சொல்றியே” எரிச்சலுடன் போனை வைத்து விட்டான்.

விமலாக்குப் பிறகுத் தூக்கமே வரவில்லை. கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது. ஏதாவது பிரச்சினை என்றால் அவனுக்கு உதவியாக இருக்க அங்கு தெரிந்தவர்கள் கூட யாருமே இல்லையே என்று அப்பொழுது அவளுக்குத் தோன்றியது. அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு அவனுக்குப் போன் போட்டு பேசினாள்.

“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருங்க. ஒரு ஆறு மாசம் கழிச்சு வருவீங்க இல்ல அப்போ திரும்பி போகாம இருந்திடுங்க. எல்லா இடத்திலேயும் தான் கணக்கு வழக்குல மோசடி பண்றாங்க.”

“விமலா உனக்குப் புரியலை. இவங்க பெரிய மோசடியா பண்றாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு நான் கட்டுமானத்துக்கு எடுத்துக் கொள்ளும் இரும்பு ராடுகள், செங்கல், சிமெண்டு மூட்டைகள் கணக்கை என் கம்பியுட்டரில் தனியா நோட் பண்ணிக்கிட்டு வரேன். ஆனா அவங்களுக்கு நான் இது மாதிரி பண்றது தெரிஞ்சாக் கூட எனக்கு ஆபத்து தான்.”

இதை கேட்டதில் இருந்து விமலாவுக்கு உண்மையிலேயே குலை நடுங்க ஆரம்பித்து விட்டது. அடுத்து வந்த நாட்களில் அவன் பக்கத்தில் வேறு யாரோ இருந்தால் அவளுடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்தான். அதனால் அவன் கூப்பிடும் போது மட்டுமே அவளால் பேச முடிந்தது.

கடைசியா அவனுடன் பேசி ரெண்டு நாள் ஆகியிருக்கும். அன்று மத்தியானம் ஹைதிராபாதிலிருந்து “சுரேந்தருக்கு உடல் நிலை சரியில்லை, அதனால் சென்னைக்கு ஒருவர் துணையுடன் அனுப்பி வைக்கிறோம்” என்று போன் வந்தபோது கூட இந்த நிலைமையில் கணவனைப் பார்ப்போம் என்று அவள் நினைக்கவில்லை.

விடிகாலையில் அவளிடம் வந்து டாக்டர், “நாங்க செடடிவ் கொடுத்துத் தூங்க வச்சிருக்கோம் மா. அது தான் இப்போதைய நிலைமைக்கு சிறந்த நிவாரணி. நீங்க வீட்டுக்குப் போயிட்டு குளிச்சு சாப்பிட்டுட்டு வாங்க, காலையில் ஒரு EEG எடுப்போம். வேற டெஸ்டுகள் பண்ணுவோம். இன்னிக்கு முழுக்க அவரை செடெஷனில் தான் வைத்திருப்போம். கவலைப் படாம வீட்டுக்குப் போயிட்டு வாங்க” என்றார்.

வீட்டுக்குப் போய் திரும்பி வந்த பின் டாக்டரைப் சந்தித்தாள். “அவரை அட்மிட் பண்ணவுடனே பிளட் சாம்பிள் எடுத்து டெஸ்டுக்குக் கொடுத்து ரிசல்டும் வந்திட்டுது மா. அவர் இரத்தத்தில் ஒரு வித விஷத் தன்மை கலந்திருக்கு. அவர் இப்போ உயிருடன் இருப்பதே நீங்க செய்த அதிர்ஷ்டம் தான். அவர் மூளைக்கும் பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு. விஷத்தன்மையைப் போக்க மருந்து ட்ரிப்சில் கொடுக்க ஆரம்பித்து விட்டோம். கொஞ்ச கொஞ்சமாகத் தான் ரிகவரி இருக்கும். மெதுவாக அவர் நிலை சீரடைந்து நினைவும் திரும்பும். நீங்க பொறுமையா இருக்கணும். அவர் நல்ல முறையில் பேச ஆரம்பித்த பிறகு தான் என்ன நடந்ததுன்னு கேட்டுத் தெரிஞ்சிக்க முடியும்.” என்றார்.

ஒரு வாரம் ஒரு யுகமாகக் கழிந்தது. கண் விழிப்பதும் உறங்குவதுமாக இருந்தான். அவளைப் பார்த்தும் ஏதும் பேசவில்லை, சிரிக்கவில்லை. டாக்டர் குழந்தைகளை அழைத்து வரச் சொன்னார். குழந்தைகளைப் பார்த்ததும் முதல் முறையாக லேசாக மலர்ந்தது முகம். கைகளை நகர்த்தி குழந்தைகள் கைகளைப் பிடித்துக் கொண்டான். கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது விமலாவுக்கு.

fatherdaughter

போஸ்டில் ஒரு செக்கும் வேலையை விட்டு சுரேந்தரை நீக்கியதற்கானக் கடிதமும் வந்து சேர்ந்தது. அவன் உடல் நலமின்மையையைக் காரணம் காட்டி வேலை நீக்கம் செய்திருந்தார்கள். இதை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை விமலா. அவர்களின் ஆபிசுக்குப் போன் பண்ணி பேசினாள். HRல் ஒருவர் “நீங்க இது மாதிரி உடல் நலக் கோளாறு முன்னமே இருந்ததுன்னு எழுதி கொடுத்திருக்கீங்களே மேடம். எப்படி அவரை கன்ஸ்டிரக்ஷன் சைட்டில் வேலைக்கு வெச்சுக்க முடியும்? அவர் திடீர்னு மயங்கி விழுந்தா நாங்க பொறுப்பேத்துக்க முடியுமா சொல்லுங்க?” நறுக்குத் தெரித்தாற் போலக் கேட்டார்.

“சார், இதுக்கு முன்னாடி அவருக்கு இந்த மாதிரி வந்ததே இல்லை. நானே பயங்கர ஷாக்கில் இருக்கேன். மலேசியாவில் தான் ஏதோ நடந்திருக்கணும். நீங்க தான் மருத்துவ செலவை எல்லாம் ஏத்துப்பீங்கன்னு நினச்சேன், இப்படி வேலையை விட்டே அனுப்பிட்டீங்களே சார். காண்டிரேக்ட் எல்லாம் போட்டு தானே வேலைக்கு எடுத்தீங்க?”

“மேடம், நீங்களே ஏர்போர்டில் எங்க ஆபிசரிடம் இவருக்கு இது மாதிரி உடல் கோளாறு முன்பே இருந்ததுன்னு எழுதி கொடுத்திருக்கீங்க, இப்ப இப்படி சொல்றீங்களே?” தெளிவாகப் பேசினார் எதிர் முனையில் இருப்பவர்!

சகலமும் புரிந்தது விமலாவுக்கு. சூழ்ச்சியுடன் நடந்து கொள்வது அந்த கம்பெனிக்குப் புதுசு இல்லை என்று தெரிந்து கொண்டாள். இனிப் பேசி பிரயோஜனமில்லை.

மெல்ல மெல்ல சகஜ நிலைமைக்குத் திரும்பி வந்தான் சுரேந்தர். பழைய நினைவுகள் கூடிய விரைவில் திரும்பி விடும் என்று டாக்டர் நம்பிக்கை அளித்ததில் இரண்டு வாரத்தில் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டாள்.

திடீரென்று ஒரு நாள் “விமலா நான் கூல்ட்ரிங்க் குடிச்சப் பிறகு எனக்கு என்ன நடந்துதுன்னே தெரியலை” என்றான். மலேசியாவில் நடந்தது அவனுக்கு நினைவுக்கு வருவது கண்டு மனம் நெகிழ்ந்து, “எதை பத்திச் சொல்றீங்க?” என்று அருகில் அமர்ந்து கேட்டாள்.

“அந்த ஜெய கிருஷ்ணா அவன் ரூமுக்கு வான்னு என்னைக் கூப்பிட்டான். எனக்குப் போகவே பயமா இருந்தது. முந்தின நாள் தான் என் லேப் டாப்பை என் அறைக்கு வந்து யாரோ பயன்படுத்தின மாதிரி எனக்கு ஒரு சந்தேகம், ஏன்னா டேபிள் மேல பேப்பர்ஸ் கலஞ்சு இருந்தது. அதனால் நான் கம்பியுட்டரில் கணக்கு வச்சிருப்பதைக் கண்டுபிடிச்சிருப்பானோன்னு நினச்சு, உடம்பு சரியாயில்லை அப்புறம் வரேன்னு சொன்னேன். ஆனா அவனோ ஒரு அஞ்சு நிமிஷம் தான் வந்துட்டுப் போன்னுச் சொன்னான். போனவுடன் ஒரு கிளாஸ்ல ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தான், நானும் தாகமா இருந்துதுன்னு உடனே குடிச்சிட்டேன். அதுக்கு அப்புறம் எனக்கு இங்கே ஆசுபத்திரியில் தான் கொஞ்சம் கொஞ்சமா நினைவு வந்தது. எப்படி சென்னை வந்தேன்னு ஒண்ணுமே ஞாபகமில்லை.”

அவனை ஏர்போர்டில் பார்த்தபோதே அவன் பெட்டியோ லேப்டாப்போ ஒண்ணுமே கொண்டு வரவில்லையே என்று விமலா நினைத்தாள். ஆனால் அவன் உடல் நிலை சரியாகித் திரும்பிப் போவான் என்று நினைத்ததால் அதைப் பற்றி வந்தவனிடம் கேட்கவும் இல்லை, அதை கேட்கும் நிலையிலும் அவள் இல்லை.

சுரேந்தர் மெல்ல மீண்டு பெரிய வேலை இல்லையெனினும் ஒரு சின்ன கம்பெனியில் பிடித்த வேலையில் சேர்ந்தான். ஏமாற்றப் பட்டதால் மனத்தில் ஏற்பட்ட வடு மட்டும் காயம் ஆறாமலே தான் இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தமிழ் தினசரியில் நாலாவது பக்கத்தில் “மலேசியாவில் ஹாலிடே ரிசார்ட் கட்ட காண்டிரேக்ட் கிடைத்த ஹைதிராபாத் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். மலேசிய போலீஸ் கம்பெனி தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை” என்று வந்த செய்தியை சுரேந்தர் பார்த்திருந்தால் அவன் மனம் சிறிது ஆறுதல் அடைந்திருக்கலாம்.

Images taken from these sites with thanks.

http://www.cliparthut.com/wheelchair-sports-clipart.html

http://seattle.urbansketchers.org/2014/07/portland-for-2nd-annual-west-coast.html

http://pencil-bender.deviantart.com/art/Father-Daughter-Time-422404333

http://www.dreamstime.com/stock-illustration-father-child-pencil-sketch-hand-drawn-man-gently-holding-toddler-image49286492

Previous Older Entries