
தங்க மீன்கள் படத்துக்குப் பிறகு அடுத்த லெவலில் படம் தந்துள்ளார் ராம். தங்க மீன்கள் சாதனா தான் இதிலும் மாற்றுத் திறனாளியாக ஸ்பாஸ்டிக் குழந்தையாக நடித்துள்ளார். அந்தக் குழந்தையை பதின்ம பருவத்தில் தன் பொறுப்பில் தனியாக வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் அப்பாவான மம்முட்டி. இந்த மாதிரி கதையை படமாக்க நிறைய நிறைய ஹோம்வர்க் செய்ய வேண்டும். அதை செவ்வனே செய்திருக்கிறார் ராம். ஒரு நல்ல சமூக கருத்தை திரைக்கதை வடிவாக நம் முன் வைக்க சினிமா எனும் ஊடகத்தின் மேல் passion இருக்க வேண்டும். அதுவே ராமின் வெற்றி.
நிறைய சம்பவங்கள் நிறைந்த திரைக்கதை. பத்து அத்தியாயங்கலில் விவரிக்கிறார், விவரிப்பது மம்முட்டி. படத்தின் பெரும்பகுதி திக் திக்கென்றே இருந்தது. ஏனென்றால் பதின்ம வயதுப் பெண்ணை (பாப்பா) தனியாக பாதுகாக்கிறார் (அமுதவன்) மம்முட்டி. பாப்பா தனியாக பல சமயங்களில் இருக்க வேண்டிய சூழல், நம் ஆண்களின் போக்கும் நமக்கு தெரிந்ததே. ஒவ்வொரு சூழலிலும் அவள் பேராபத்தில் விழாமல் இருக்க வேண்டுமே என்று பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் படம் பேரன்பு.
படத்துவக்கம் மகள் அப்பாவிடம் திணிக்கப் படுவதுடன் ஆரம்பிக்கிறது. அம்மா குடும்ப அழுத்தம் தாளாமல் வேறொருவருடன் போய்விடுகிறார். அதற்கு மம்முட்டியும் ஒரு காரணம். 12 வயது வரை பெண்ணைப் பற்றிய பொறுப்பில்லாமல் இருந்ததற்கு தனி ஒரு ஆளாக திடீரென்று மகளை பேணி காக்க வேண்டிய நிர்பந்தம். ஆனாலும் மகள் தந்தை பாசம் மெதுவாக ஆரம்பித்து அழுத்தமாக வளர்ந்து எவ்வளவோ சிரமத்திலும் மகளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள அவர் செய்யும் செயல்கள் ஒன்பது அத்தியாயங்களில் விரிகிறது. அவை புது யுகத்தவையும் கூட.
படத்தில் மிகவும் பிடித்தது அமைதியாக செல்லும் திரைக் கதை தான். அதுவும் முதல் பாதி எதோ ஒரு மலைப் பிரதேசத்தில் யாரும் இல்லாத அத்துவான காட்டில் அமைந்த அழகிய வீடும், நதியும், பரிசலும் கவிதையாக உள்ளது. ஆனால் கவிதை சோகம் இழையோடியது, மிகவும் சிக்கலான ஒரு செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணை சுற்றிய கதை என்பதால். அவள் வயதுக்கு வருவதும், திகைத்துத் தடுமாறிய தந்தை, ஆனால் அடுத்து செய்ய வேண்டியவற்றுக்கு உதவி தேடி அழைத்து வந்து, இன்னொரு சமயத்தில் அவளே தான் ஒரு பெண் என்பதை உணர்ந்து அப்பாவிடம் சேனிடரி பேட் மாற்றிக் கொள்ள தயங்கி தன்னாலும் செய்து கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு, ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி பெற வைத்து என்று இதுவரை சினிமாவில் கையாளப்படாத சென்சிடிவ் ஆன விஷயங்களை நாகரீகமாக சொல்லி இயக்கியுள்ளார் ராம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் மம்முட்டி. பல சமயங்களில் ஒரு நடிகரை அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டார் என்று சொல்லுவோம். இதில் நான் மம்முட்டியை பார்க்கவே இல்லை. பாப்பாவின் அப்பா மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தார்.
அமைதியான மலைப் பிரதேசத்தில் இருந்து ஏமாற்றப்பட்டு கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த நிலையில் இருந்த மகளுடன் மம்முட்டி வேலைத் தேடி நகரத்துக்கு வந்து அங்கு சீப்பான விடுதிகளில் தங்கும் நிலைமையிலும், அடுத்தடுத்து காப்பகம், நண்பர் என்று உதவி கேட்டு தடுமாறி, ஓடிப்போன மனைவியின் வீட்டுக்கே சென்று மகளை அவர் பார்த்துக் கொள்ள மாட்டாரா என்று பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகி கடைசியில் என்ன மாதிரி முடிகிறது கதை என்பதை கண்டிப்பாக வெள்ளித் திரையில் காணவேண்டும். அற்புதமாக கோர்வையாக கதையை நகர்த்தி செல்கிறார் இயக்குநர். அருமையான வசனங்கள்.
அஞ்சலியின் பத்திரம் சிறிதே எனினும் மனத்தில் நிற்கிறார். அஞ்சலி அமீர் என்னும் திருநங்கையும் கதைக்கு நல்ல திருப்பம், நல்ல மெஸ்சேஜ். யுவன் சங்கர் ராஜாவின் இசை மிக நன்று. முக்கியமாக பின்னணி இசை தான். பாடல்கள் மனத்தில் நிற்கவில்லை. அனால் இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தால் இப்படம் ஓர் உன்னத காவியமாகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீகர் பிராசாத்தின் படத்தொகுப்பு அற்புதம். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு அதைவிட அருமை.
மிகவும் கடினமான கதை. இந்த மாதிரி மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஓர் அப்பாவாக மம்முட்டி படும் வேதனை பல இடங்களில் நம்மை அழ வைக்கிறது. செரிபரல் பால்சி வந்த பெண்ணாக சாதனா எப்படி தான் நடித்தாரோ தெரியவில்லை. மிக மிக கடினமான உழைப்பு. ராம், மம்முட்டி, சாதனா அனைவருக்குமே விருது கிடைக்கவேண்டிய அளவு உழைப்பு உள்ளது.
பல சமயங்களில் மிக மெதுவாக செல்லும் திரைக்கதை படத்தின் பலவீனம். அவ்விடங்களில் தான் இது ஒரு ஆர்ட் பில்ம் என்று எண்ண வைக்கிறது. கதையே இல்லாமல் வரும் படங்களின் நடுவே நெகிழவைக்கும் கதையுடன் ஒரு நல்ல படம் இது.
