செக்கச் சிவந்த வானம் – திரை விமர்சனம்

மணி ரத்னம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பின் மக்களுக்குப் பிடிக்கும் வகையில் ஜனரஞ்சகமான ஒரு படத்தைத் தந்துள்ளார். எத்தனையோ டான் கதைகளை பார்த்துவிட்டோம் ஆனால் இது இயக்குநர் முத்திரை பதிந்த புது முயற்சி. திமுகவில் தலைமை பொறுப்புக்கு வர சண்டை ஏதும் வரவில்லை. ஆனால் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கூட இக்கதையை மணி ரத்னம் புனைந்திருக்கலாம். இது என் யூகம். அதில் ஒரு வசனம் அண்ணா நீ தானே ஆரம்பித்தாய் என்று ஒரு தம்பி பேசும் வசனம் என்னை அப்படி நினைக்கத் தூண்டியது. எதேச்சையான ஒரு வசனமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அப்பா டானிற்குப் பிறகு மூன்று மகன்களிடையே யார் அந்த இடத்துக்கு வருவது என்கிற போட்டியும் மணிக்கு இந்தப் படத்தின் கரு உதிக்கக் காரணமாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது.

பிரகாஷ் ராஜ், ஜெயசுதா பெற்றோர் பாகங்களில் அருமையாக நடித்திருக்கிறார்கள். பண்பட்ட நடிகர்கள், சொன்னதற்கு மேல் செய்து கொடுப்பவர்கள். பாசகாரக் குடும்பத் தலைவனாக, கள்ளச் சந்தை/சமூக விரோத செயல்கள் நடத்துவதில் பெரிய அளவில் கொடிக்கட்டிப் பறக்கிறவராக ஓவர் ஏக்டிங் இல்லாமல் செய்திருக்கிறார். ஜெயசுதா அன்பு மனைவியாக பிற்பாடு மகன்களிடையே சமரசம் செய்து எப்படியாவது குடும்பத்தில் அமைதி நிலவ, தலைமைப் பொறுப்பை ஏற்க நடக்கும் சகோதரப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைபவராக வெகு பாங்காகக் பாத்திரத்தில் பரிமளிக்கிறார். எதிரணி டாணாக தியாகராஜன். நல்ல பொருத்தம்! நடிகர்களை சரியாக பாத்திரங்களுக்குத் தேர்வு செய்து இயக்குவதை எளிதாக்கிக் கொண்டுள்ளார் மணி என்றே சொல்ல வேண்டும்.

தந்தையுடன் கூடவே இருந்து அவர் சொல்வதை எல்லாம் செய்யும் பொறுப்புள்ள முதல் மகனாக அர்விந்த் சாமி, அதே போல பொறுப்புள்ள மூத்த மருமகளாக அர்விந்த் சாமியின் மனைவியாக ஜோதிகா. இரண்டாவது மகனாக துபாயில் ஷேக்குகளுடன் கடத்தல் வியாபாரம் செய்யும் அருண் விஜய், அவர் மனைவியாக சிலோன் தமிழராக ஐஸ்வர்யா ராஜேஷ், மூன்றாவது மகனாக செர்பியாவில் ஆயுதங்கள்/தளவாடங்கள் விற்கும் STR, அவர் காதலியாக பின் மனைவியாகும் டயானா என்று பெரிய நடிகர் பட்டியலைப் படம் தாங்கி நின்றாலும் ஒவ்வொருவர் பாத்திரமும் கவனத்துடன் செதுக்கப்பட்டு ஒன்றுக்கு ஒன்று குறைவில்லாமல் எல்லாருக்கும் சம பங்கு கிடைக்குமாறு செய்ததில் தான் மணி ரத்னம் சிறப்பு மென்ஷன் பெறுகிறார். விஜய் சேதுபதி அர்விந்த் சாமியின் நண்பராக ஓர் இறந்த டானின் மகனாக போலிஸ் இன்ஸ்பெக்டராக இத்தனை பாத்திரங்களுக்கு நடுவிலும் சம பங்குடன் வளைய வருகிறார். என் வழி தனி வழின்னு எல்லார் நடிப்பையும் அசால்டா தன் கேசுவல் நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.

ஒரு சமயம் இது அர்விந்த் சாமி படம், இது STR படம், அட இல்லை அருண் விஜய் படம், இல்லை ஜோ படம், இல்லை கண்டிப்பாக விஜய் சேதுபதி படம் என்று எண்ண வைத்துக் கடைசியில் இது மணி ரத்னம் படம் என்று புரிய வைக்கிறார் இயக்குநர். நடித்த அனைவருமே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

உடைகள் படு கச்சிதம். அருண் விஜய், STR இருவருக்குமே மிக ஸ்டைலிஷான உடைகள். ஜோதிகாவின் படங்களும் அழகு. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரம் தான். ஆனால் அதிலும் முத்திரை பதிக்கிறார். அதிதி ராவ் ஹைதாரியின் பங்கும் சிறியதே ஆனால் அதையும் அழுத்தமானாதாக பதிகிறது அவர் நடிப்பாலும் பாத்திரப் படைப்பாலும்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்து என்று சொல்லவும் வேண்டுமோ! அதுவும் ஐரோப்பியாவிலும் துபாயிலுமான காட்சிகளின் வண்ணக் கலவையும் கழுகுப் பார்வையில் விரியும் காட்சிகளும் அற்புதம். பாடல்கள் முழுதாகப் படத்தில் பயன்படுத்தப் படவில்லை என்றே நினைக்கிறேன். மேலும் பாடல்கள் பின்னணியாக தான் ஒலிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று. ஸ்ரீகர் பிராசாதின் படத்தொகுப்பும் நன்றே. இவ்வளவு பாத்திரங்களை வைத்து சிக்கலில்லாமல் படத்தொகுப்பை செய்து கதையை நேர்த்தியாக நகர்த்தியிருக்கிறார்.

படம் முடியும்போது இவ்வளவு சிக்கல் நிறைந்த ஒரு டான் வாழ்க்கையை ஏன் ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்று தோன்றும். பல சமயங்களில் அது திணிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் அதுவே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது முதல் தலைமுறை டானுக்கு. அடுத்தத் தலைமுறைகளுக்கு அந்தப் பதவியில் கொடுக்கும் ஏராளமான பணமும் செல்வாக்கும் அந்தப் பாதையைத் தொடர தூண்டுதலாக அமைகிறது. போலிஸ் பாத்திரங்களின் பங்களிப்பு வெகு subtle. அதே சமயம் அவர்கள் நல்ல முறையில் காட்டப்படுகின்றன.

என்றுமே திரைக் கதை தான் ராஜா. அதைப் புரிந்து மணி படம் இயக்கியிருப்பது அவருக்கான வெற்றியைக் கொடுத்திருக்கிறது. எத்தனை கதாப் பாத்திரங்கள்! எத்தனை முன்னணி நடிகர்கள்! இவர்கள் அனைவரையும் அருமையாக இயக்கி அனைத்து நடிகர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான பங்களிப்பைப் பெற்று வெற்றிப் படத்தைத் தந்திருக்கும் அவருக்கும் அவர் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

மகளிர் மட்டும் – திரை விமர்சனம்

இந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தவுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. எந்த மணமான பெண்ணுக்கும் இந்தப் படத்தைப் பார்க்கும்போது இதில் எந்த ஒரு பகுதியாவது அவர்கள் வாழ்வில் அனுபவித்ததாக, சொல்ல நினைத்ததாக, செய்யத் துடித்ததாக இருக்கும் என்பது உறுதி. முற்றிலுமாக பெண்கள் கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள படம்.

1978ல் கல்லூரியில் படிக்கும்போது பாதியில் பிரிந்த மூன்று உயிர்த் தோழிகள் தங்கள் ஐம்பதுகளில் சந்திக்கும்போது ஏற்படும் நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, தவிப்பு என பல உணர்வுகளை அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா. குடும்ப பாரத்தில் உழலும் இவர்களை சந்திக்க வைப்பது காட்டாற்று வெள்ளம் போல் தங்கு தடையின்றி சுதந்திரமாக ஒரு ஆணைப் போல் தனக்குப் பிடித்தததை செய்யும் பாத்திரத்தில் வரும் ஜோதிகா. நாற்பது வருடங்கள் கழித்து சந்திக்கும் மூவராக ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் கலக்குகிறார்கள். அருமையான தேர்வு. அதில் மற்றவர்களை ஊர்வசி தன் இயல்பான நடிப்பினால் சற்றே ஓவர்டேக் செய்துவிடுகிறார்.

இளம் வயது பாத்திரதிரங்களில் வரும் மூன்று பெண்களையும் அதே சாயலில் தேர்ந்தெடுத்திருப்பது கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஒரு கண்டிப்பான கிருஸ்துவ பள்ளி, அதன் விடுதியில் தாங்கும் இம்மூவர் செய்யும் சேட்டைகள், கடைசியில் விளையாட்டு வினையாகி மூவரும் பிரிவது என கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளை நிகழ் காலக் கதையோடு மாறி மாறி காட்டி சுவாரசியமாக எடுத்து செல்கிறார் இயக்குநர்.

குடியரசு ஆட்சியை மக்களால் மக்களுக்காக என்பார்கள். அது மாதிரி இந்தப் படம் பெண்களால் பெண்களுக்காக என்று இருந்தாலும் ஆண் மக்கள் இதைப் பார்த்தால் பெண்ணின் உணர்வுகள், அவர்கள் படும் சிரமம், செய்யும் தியாகம் அனைத்தும் கொஞ்சம் புரியலாம். இதில் ஒரு காட்சியில் பானுப்ரியாவின் மருமகளுக்கு இடுப்பு வலி எடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவரின் பின்புறம் இரத்தம் தோய்ந்திருக்கும். சாதாரணமாக அடி தடி சண்டையில் தான் நாம் படங்களில் இரத்தத்தைப் பார்க்கிறோம். அந்த வன்முறை இரத்தத்தை விட இந்த ஒரு காட்சி சொல்கிறது பொருள் ஆயிரம்.

எவ்வளவு தான் நல்ல குடும்பம் அமைந்தாலும் நட்புகளிடம் இருக்கும் நெருக்கும் உறவுகளில் கிடைப்பது அபூர்வமே. அதுவும் இளமையில் ஏற்படும் எந்த எதிர்பார்ப்பும் இல்லா நட்பு பெரும் வரமாகும். அதைத் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். முக்கால்வாசி படம் ஆக்ரா, சட்டிஸ்கரில் நடக்கிறது. இயற்கை காட்சிகள் அழகு. ஜிப்ரானின் பாடல்களும் இசையும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

ஜோதிகா சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். அது ஒரு மைனசாக உள்ளது. முக உணர்சிகளை விட குரல் அதிகமாக ஓவர் ஏக்டிங் செய்கிறதோ எனத் தோன்றுகிறது. மாயாவியில் அந்தப் பாத்திரத்துக்கு அவர் சொந்தக் குரல் ரொம்ப சரியாக பொருந்தியது.  மற்றபடி அவரின் இந்தப் பாத்திரம் அவர் உண்மை வாழ்க்கையில் இருப்பதற்கு அருகில் இருக்கும் போலத் தோன்றுகிறது. சிரமிமில்லாமல் செய்திருக்கிறார். எடை குறைந்து மிகவும் பொலிவுடன் விளங்குகிறார்.

சரண்யாவின் கணவனாக வரும் லிவிங்க்ஸ்டன் சின்ன வேடத்தில் வந்தாலும் steals the show. குடிகாரக் கணவன், ஆனால் அவர் நடிப்பும், கடைசியில் அவர் தொலைபேசியில் ஜோதிகாவிடம் ஒரு முக்கியத் தகவல் சொல்லும்போது அவர் எடுக்கும் முடிவும் அவர் பாத்திரத்தை உயர்த்துகிறது, அவர் நடிப்பினாலும் அந்த இடம் அதிக வலுவைப் பெறுகிறது.  பானுப்ரியாவின் கணவராக நாசர். அவரும் வடக்கத்தி அரசியல்வாதியாக பக்காவாக உள்ளார்.

குறைகள் என்று பார்க்கும்போது எல்லா பெண்களும் சுதந்திரம் அற்றும், திருமணத்திற்குப் பிறகு சுய வாழ்க்கையைத் தொலைத்தது போலும் காட்டப் படுவது செயற்கையாக உள்ளது. மேலும் எல்லா ஆண்களும் {ஜோதிகாவின் ஜோடி தவிர} மோசமான கணவனாக இக்கதைக்காக சித்தரிக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது. பானுப்ரியாவின் மகன் சட்டென்று ஒரு சம்பவத்தால் மனம் மாறுவதும் சிநிமேடிக். நடுவில் ஒரு கீழ் சாதி, மேல் சாதி கலப்புத் திருமணம் வருகிறது. அதை சேர்த்ததால் ஜோதிகா பாத்திரம் துணிச்சலான பெண் என்பதைத் தவிர வேறு எந்த மேச்செஜும் தரவில்லை.

படம் நடிகர் சூரியாவின் தயாரிப்பு. மனைவிக்காக அவர் செய்திருக்கும் இத்தயாரிப்புப் பாராட்டுக்குரியது :-}