சர்கார் – திரை விமர்சனம்

என் உறவினர் ஒருவருக்கு அந்தக் காலத்தில் திருமண நிச்சயதார்த்தத்துக்குப் பிள்ளை வீட்டில் கட்டம் கட்டமா போட்ட பட்டுப் புடைவை வாங்கியிருந்தாங்க. ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு நிறம். என் அக்கா முறை உறவினருக்கு அந்தப் புடைவையைப் பார்த்து அழுகையே வந்துவிட்டது. அவ்வளவு மோசமாக இருந்தது புடைவை. என் பெரியம்மா ஏண்டி அழற உங்க மாமனார் மாமியாருக்கு எல்லா நிறத்திலேயும் உனக்குப் புடைவை எடுக்கனும்னு ஆசையா இருந்திருக்கும் அவ்வளவு புடைவை வாங்க முடியுமா அதான் எல்லா நிறத்தயையும் ஒரே புடைவைல போட்டு வாங்கியிருக்காங்க. போய் கட்டிக்கிட்டு வான்னு சிம்பிளா சொல்லிட்டாங்க. அந்த மாதிர் ஏ.ஆர்.முருகதாசுக்கு எல்லா பிரச்சினைகளுக்கும் படங்கள் எடுக்கனும்னு ஆசை போலிருக்கு ஆனா அவ்வளவு படம் எடுக்க முடியுமான்னு சந்தேகம் வந்திருக்கும். அதான் எல்லா பிரச்சினையையும் ஒரே படத்துல வெச்சு ரசிகர்களை காவு வாங்கிட்டாரு.

ஆனா சும்மா சொல்லக் கூடாது இந்தப் படத்திலேயும் ஒரு கதை இருக்குன்னு கண்டுபிடிச்சு அது வருண் ராஜெந்திரனோட கருன்னு தீர்மானிச்சு அவருக்கு முப்பது லட்ச ரூபாய் இழப்பீடும் வாங்கிக் கொடுத்த பாக்கியராஜ் சிம்ப்ளி கிரேட்! ஆனா பாக்கியராஜ் கில்லாடி. முருகதாஸ் படத்தைப் போட்டு காட்டறேன் போட்டு காட்டறேன்னு பல தடவை சொன்ன போது கூட பார்க்க மறுத்துட்டார் பாருங்க, நீ எப்படி எடுத்திருப்பேன்னு தெரியும்னு சொல்லிட்டாரு. அங்க நிற்கிறார் ஜாம்பவான்!

இந்தப் படத்துல முக்கியமான ஒரு விஷயம் நாம தெரிஞ்சுக்கறது சட்ட நுணுக்கமான 49P. அதாவது நம் பெயரில் யாராவது கள்ள வோட்டு போட்டுட்டா அதை நாம் நிரூபிச்சா வாக்குச் சாவடியிலேயே நமக்கு அவர்கள் மறுபடியும் வாக்களிக்கும் உரிமையை தர வேண்டும். நமக்கு நோட்டா பத்தித் தெரியும், அதாவது எந்த வேட்பாளரும் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் 49 O விதிப்படி None of the above என்று வாக்களிக்கலாம். 49P பற்றி இந்தப் படத்தின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

சுந்தர் பிச்சை Google நிறுவனத்தின் CEO. அவருக்கும் விஜய் பாத்திரத்துக்கும் துளி சம்பந்தம் இல்லை. சுந்தர் பிச்சை அமெரிக்காவில் மிகப் பெரிய கம்ப்யுடர் நிறுவனத் தலைவர், அந்த அளவு அந்தத் துறையில் பெரிய ஆள். இந்தப் படத்தில் விஜய் வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியர் பெரிய பணக்காரர், அவர் பாத்திரத்துக்கு வித்தியாசத்தைக் காட்ட முனைந்து கம்பியுடர் நிறுவனத்தின் தலைவர் என்கிறார் இயக்குநர், அவ்வளவு தான். கம்பியுடர் தொடர்பா அவர் இந்தப் படத்தில் வேறு எதுவும் செய்யவில்லை. அவர் வெளிநாட்டில் ஒரு பெரிய ஹோட்டல் நடத்தியிருக்கலாம், விமான நிறுவனம் நடத்தியிருக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். அவர் சென்னையில் வாக்களிக்கத் தனி விமானத்தில் பறந்து வரும் அளவுக்கு, சுத்தி வெள்ளைக்காரர்களை எடுபிடி வேலைக்கு வைத்துக் கொள்ளும் அளவுக்குப் பணக்காரர். அவ்வளவு தான். Techie விஷயம் ஒன்றுமே இல்லை. சாதா ட்விட்டர் பேஸ்புக் பயன்படுத்திக் கதையில் கூட்டத்தைச் சேர்க்கிறார். பெரும் பணக்காராரக இருந்தும் ஏழைகள் குடியிருப்பில் வெள்ளையடித்து அட்மின் ஆபிஸ் போடுகிறார்.

எப்பவுமே படத்தின் ஹீரோவின் பலம் வில்லனின் பலத்தைப் பொறுத்தது. அரிச்சுவடி பாடம் இது. மகா சொத்தையான வில்லன் பழ. கருப்பையா, ஒரு கட்சித் தலைவர் முதலமைச்சர் வேட்பாளர். காமெடி டிராக் இல்லாததால் காமெடி பீசாக ராதா ரவி, பழ கருப்பையாவின் அல்லக்கை, பெயர் இரண்டு. (அவ்வளவு imaginative, அவர் தான் கட்சியில் நெ2வாம். மாறன் சகோதரர்களே ஸ்டாலினை கேலி பண்ண அனுமதித்து இருக்கிறார்களே. மேக்கப், லேசா கோண வாய் எல்லாம் ஸ்டாலினை குறிக்கின்றன. அவ்வளவு கோபமா ஸ்டாலின் மேல் அவர்களுக்கு,). இவர்களை ரிமோட்டில் இருந்து வழி நடத்துபவர் வரலட்சுமி என்னும் பாப்பா என்னும் கோமளவல்லி. கேனடாவில் வாழ்ந்து கொண்டு இங்கே அப்பாவுக்கு கட்சி நடத்துவதற்கும் ஆட்சி செய்வதற்கும் நயவஞ்சக திட்டம் தீட்டுவதற்கும் யோசனைகளை சொல்லுபவர். கதைப் பஞ்சம் கதைப் பஞ்சம் என்று கேள்விப்பட்டிருக்கேன், இந்தப் படத்தில் காட்சி அமைப்பதில் கூட கற்பனை வறட்சி 😦

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தேவையில்லை. விஜயின் நடிப்பு, அவர் நேரம், அவர் உழைப்பு அனைத்தும் அனாவசியமாக வீணடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு அல்லது கதையை (?) கேட்டுவிட்டோ ரஹ்மான் ஸ்டூடியோவை விட்டே ஓடிவிட்டார் போலிருக்கிறது. ஒரு பாடலும் நன்றாக இல்லை. ரீ ரிகார்டிங், அது எங்கோ ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கும் என்கிற அளவில் உள்ளது. சண்டைக் காட்சிகள் நன்றாக இருக்குன்னு சொல்லலாம் ஆனால் கொஞ்சமாவது நம்பும்படியா இருக்க வேண்டாமா? 27 பேரை ஒத்தை ஆளா நின்று அடிக்கிறார் விஜய். அவனவன் கொடாலியோட வரான் இவர் ஸ்வைங் ஸ்வைங்குன்னு மயிரிழையில் தப்பித்து எல்லாரையும் சகட்டு மேனிக்குப் போட்டுத் தள்ளிவிடுகிறார். அவருடைய நடனம் கூட இந்தப் படத்தில் எடுபடவில்லை. அழுகையா வருது.

ஹீரோயின் பத்தியும் சொல்லணும் இல்ல? திருவிழாவில் தொலைஞ்ச பிள்ளையாட்டம் திரு திருன்னு முழித்துக் கொண்டு விஜய் பின்னாடியே சுத்துகிறார். நடிகையர் திலகமாக வாழ்ந்த கீர்த்திக்கு இந்த நிலைமை வர வேண்டாம்.

கூடங்குளம் பிரச்சினையிலிருந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் இருந்து, மீனவர் பிரச்சினை, X Y Z என்று ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு பிரச்சினை என்று சொல்லி அனைத்துக்கும் நடக்கும் ஆட்சி தீர்வு கொடுக்காது என்று விஜயே களத்தில் இறங்கி தீர்வு காண முயலும்போது ஏற்படும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவதாக காட்டியுள்ளார் முருகதாஸ்.

திரைக் கதை சரியில்லாததால் அவர் உருக்கமாக நடிப்பதும் எடுபடவில்லை ஆக்ரோஷமாக நடிப்பதும் எடுபடவில்லை. கடைசி மூணு மணி நேரத்துல அவர் பேஸ்புக்ல போடற விடியோனால எல்லாரும் போய் வாக்களிக்கறது எல்லாம் ஷ்ஷ்ப்பா! அதைவிட ஆயாசம் இவர் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவது தான். அதில் என்ன தப்புன்னு கேக்கறீங்களா? இதெல்லாம் நடப்பது பதினைந்தே நாட்களில்.

Better luck next time. நான் எனக்கு சொல்லிக்கிட்டேன்.

வேதாளம் – திரை விமர்சனம்

vedhalam1

அவுட் அண்ட் அவுட் அஜித் ரசிகர்களுக்கான படம். ஆலுமா டோலுமா பாடலும் வீர விநாயகா பாடலும் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது. அனிருத்தின் பின்னணி இசை சத்தமாக இருந்தாலும் இந்தப் படத்திற்கு செட் ஆகிறது.

லட்சுமி மேனனுக்கு நல்ல ரோல். அஜித்தின் தங்கையாக படம் முழுவதும் வருகிறார். இருவருக்கும் அண்ணன் தங்கை கெமிஸ்டிரி நன்றாக வொர்க் அவுட் ஆகிறது. ஸ்ருதி ஹாசனுக்கும் அவருக்கு ஏற்ற ரோல், ஒரு கேஸ் கூட வின் பண்ணத் தெரியாத வக்கீல் கேரக்டர். படத்தில் கொஞ்சமே தான் வருகிறார். அதற்கு இயக்குநருக்கு நன்றி. இதில் அவர் வாய்ஸ் அவர் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. அஜித்துடன் டூயட் இருந்தாலும் டூயட்டாக அது தோன்றவில்லை. அவரின் உடைகள் ரொம்ப அழகாக உள்ளன. இதே ட்ரெஸ் டிசைனரை அவர் மற்ற படங்களுக்கும் பயன்படுத்தலாம்.

ஆல்ரெடி இணையத்தில் சொன்னா மாதிரி ஏய் படம் போலத் தான் கதை. ஆனால் இதில் அண்ணன் தங்கை அஜித், லட்சுமி மேனன். அது தான் ஸ்பெஷல். மற்றபடி ஹீரோ என்றால் நூறு பேரையும் பந்தாடுவார், குண்டு அவர் மேல் பாயாது, வில்லன்களை வெற்றிகரமாக சாகடிப்பார் போன்ற அனைத்தும் இப்படத்திலும் உண்டு. முதலில் நல்ல கணேசாக வந்து பின் வில்லன்களை பரலோகத்துக்கு அனுப்புவபராக மாறுகிறார் அஜித்.

பின் பாதியில் எக்கச்சக்க பைட்டிங். அதுவும் பலத்த பின்னணி இசையில் தலையை வலிக்கிறது. கொல்கத்தாவில் பாதி கதை நகருகிறது. கொஞ்சம் கொல்கத்தா, மீதி செட். லாஜிக்கை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் பார்த்தால் படம் பிடிக்கும். வீரம் படத்தை விட பெட்டர். சூரி, கோவை சரளா வரும் இடங்கள் தாங்க முடியவில்லை.

இப்படத்தில் எனக்கு முக்கியமாக பிடித்த ஒன்று பெண்களை மதிக்க வேண்டும், பெண்களுக்கு அவர்களுக்கான சுதந்திரத்தை யாரும், எந்த சூழலும் பறிக்கக் கூடாது என்ற நல்ல கருத்தைச் சொல்கிறார் அஜித். விஜய், அஜித், போன்ற இன்றைய பிரபல ஹீரோக்கள் எது சொன்னாலும் அதன் ரீச் அதிகம்.

எடிட்டிங்க் ரூபனும், ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவும் இப்படத்தில் பாராட்டப் பட வேண்டியவர்கள். அஜித் கொஞ்சம் உடம்பை குறைத்தால் நன்றாக இருக்கும். டேன்ஸ் ஆடும்போது உடல் எடை தெறிக்கிறது! இது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக இருக்கும் என்பது என் கணிப்பு.

vedhalam

தூங்காவனம் – திரை விமர்சனம்

Thoongavanam-poster2

படத்தின் டிரெயிலரிலேயே கமல் ஒரு போலீஸ், அவர் மகனை ஒரு போதை பொருள் கடத்தும் கும்பல் கடத்திவிடுகிறது, மகனை மீட்க கமல் போராடுகிறார் என்பது நமக்குத் தெரிந்து விடுகிறது. இப்படி இருக்கும்போது கமல் தன் மகனை காப்பாற்றாமல் இருப்பாரா என்பதும் பார்க்கும் ரசிகனுக்குத் தெரிந்திருக்கும். இவ்வளவு தெரிந்த பின், படத்தைப் பார்ப்பவரை கட்டிப் போடும் வகையில் திரைக்கதையை சுவாரசியமாக்க காதாசிரியர்/இயக்குநர் சிந்தித்து இருக்க வேண்டுமா வேண்டாமா? மொக்கப் படம் என்று சொல்ல வேண்டாம் என்று தான் நினைக்கிறேன் ஆனால் சொல்ல வைத்து விட்டார்களே என்று வேதனைப் படுகிறேன்.

என்னா ஸ்டார் காஸ்ட்! த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷா சரத், உமா ரியாஸ், கிஷோர், யூகி சேது, சம்பத், மது ஷாலினி, சந்தான பாரதி, ஜகன் மற்றும் பலர்! பிரகாஷ் ராஜ், கிஷோர், த்ரிஷா யூகி சேது தவிர மற்றவர்கள் எல்லாரும் ஓரிரு சீன்களில் தான் தலையைக் காட்டுகிறார்கள். இவர்களுக்குப் பதிலாக அந்தப் பாத்திரங்களில் எந்த துணை நடிகர் நடித்திருந்தாலும் சரியாகவே இருந்திருக்கும். அதுவும் யூகி சேது அவர் பாத்திரத்துக்கு சரியான தேர்வே இல்லை. நடிகர் கிஷோர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வருகிறார். அதுவே ஒரு வித நடிப்பு என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதில் குறிப்பிட்டு சொல்லும்படி மனத்தில் நிற்பது கமலின் மகனாக வரும் அமன் அப்துல்லா தான். மிகையில்லாத நடிப்பு. பாத்திரத்தை சரியாக உணர்ந்து நன்றாக நடித்துள்ளார். மொத்தப் படத்தில் ஒரே ஒரு சீன் மனத்தை தொடுகிறது. அது மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் ஒரு தொலைபேசி உரையாடல். மது ஷாலினியுடன் சில முத்தக் காட்சிகள் உள்ளன. அவையும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கமலுக்கு வயதாகிவிட்டதா இல்லை இயக்குநருக்கு அந்தக் காட்சியை சரியாகக் கையாளத் தெரியவில்லையா என்று தெரியவில்லை.

இது ஒரு பிரெஞ்ச் படத்தின் தமிழாக்கம். பிரெஞ்ச் படமே இவ்வளவு மொக்கையான திரைக்கதை உள்ளதாக இருந்திருந்தால் அதை தேர்வு செய்ததே தவறு. இல்லை இவர்கள் எடுத்த விதத்தில் தான் தவறு இருந்தது என்று எடுத்துக் கொண்டாலும் இயக்குநர்-தயாரிப்பாளர் குழு மொத்தப் பழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரே இரவில் நடக்கும் காட்சிகள், ஒரே பப்பில் நடக்கும் காட்சிகள். அதனால் வித்தியாசமாக எதுவும் செய்ய இயலாதது புரிகிறது. ஆனாலும் ஒரே இடத்தை ஹீரோவும் வில்லன்களும் சுத்தி சுத்தி வருவதும், பப்பின் strobe விளக்குகளினால் நமக்கு உண்டாகும் தலைவலியும் சொல்லி மாளாது. முதல் பாதியாவது சகித்துக் கொள்ள முடிகிறது. இரண்டாவது பாதி, படம் எப்போ முடியும் எப்போ எழுந்து போகலாம் என்று தவிக்க வைக்கிறது.

அவ்வளவு பெரிய ஹோட்டல்/pub, ஆனால் கரெண்டின் மெயின் சுவிட்சை அணைத்தால் ஜெனரேட்டர் மூலம் கரண்ட் வராமல் உள்ளது. கொஞ்சமாவது ரசிகனுக்கு மூளை உண்டு என்று யோசியுங்கப்பா!

கடைசி சீனில் அமன் அப்துல்லா தன் அம்மாவிடம் போனில் பேசும் காட்சியில் உள்ள வசனம் தசாவதாரம் கடைசி வசனத்தை நினைவு படுத்துகிறது. அங்கு மட்டும் சுகா தெரிகிறார். வேறு எங்கும் இல்லை. ஜிப்ரான் இசையும் இல்லை என்றால் இது த்ரில்லர் படம் என்று மாமியார் நாகம்மா மேல சத்தியம் பண்ணா கூட யாரும் நம்பமாட்டாங்க.

கமல் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அவர் நடிப்பின் இலக்கணம். இந்த ரோல் எல்லாம் அவருக்கு ஜுஜுபி. படத்தைப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட தாக்கம் ஒன்றே ஒன்று. தாய் தந்தையர் பிரிந்து அதன் நடுவில் வளரும் பிள்ளைகள் பாவம்.

thoongavanam

உத்தம வில்லன் – திரை விமர்சனம்

 

uv2

இப்போ அப்போ என்று கண்ணாமூச்சி காட்டி விளையாடிய உத்தம வில்லன் இன்று 3மணி ஆட்டத்திற்கு வெளிச்சத்துக்கு வந்தார். கமல் படம் என்றாலே ஹைப் அதிகம் தான். அதிலும் அவர் குருநாதர் கேபியுடன் என்னும் போது கூடுதல் எதிர்ப்பார்ப்பு!

நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார் கமலஹாசன். அதுவும் இப்படத்தில் அவர் பாத்திரம் very close to his real life. இப்பட நாயகன் மனோரஞ்சனுக்கும் கமலஹாசனுக்கும் நிறைய parallel உள்ளது. அதனால் இப்படத்தைப் பார்க்கும்போது அவரைப் பற்றிய ஒரு பயோபிக் ( biopic) மாதிரியும் உணர்வதை தடுக்க முடியவில்லை.

நான் தான் சகலகலா வல்லவன் என்று அவர் அன்று பாடியது இன்று இப்படத்துக்குத் தான் மிகவும் பொருந்தும். அனாயாசமாக உணர்ச்சிகளைக் கொட்டுகிறார், பாடுகிறார், பல நடன வகைகளை நளினமாக ஆடுகிறார். கதை, திரைக் கதை வசனமும் அவரே! இயக்கம் ரமேஷ் அரவிந்த் என்று வந்தாலும் படம் முழுக்கக் கமலஹாசனே வியாபித்து இருப்பதால் இயக்கத்தை ரமேஷ் அரவிந்த் செய்திருப்பாரா அல்லது அவர் இயக்க ஏதாவது இருந்திருக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது.

கேபியை மிகவும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார் கமல். முன்பு பொய் என்று ஒரு படம் அவர் நடிப்பில் வந்தது. மிகப் பெரிய disappointment அது. அதனால் இந்தப் படத்தில் பாலச்சந்தர் எப்படி செய்திருப்பாரோ என்று கொஞ்சம் அச்சமாகவே எனக்கு இருந்தது. ஆனால் அற்புதமாக நடித்திருகிறார். எப்படி இந்தப் படத்தில் கமல் almost தன் வாழ்க்கையைத் திரையில் வாழ்ந்திருக்கிறாரோ அதே போலத் தான் கேபியும் அவர் வாழ்க்கையை மார்க்கதரிசியாக வாழ்ந்திருக்கிறார்.

ஊர்வசி, K.விஸ்வநாத், இருவருக்கும் சின்ன சின்னப் பாத்திரங்கள் தான். ஆனால் பொருத்தமானப் பாத்திரத் தேர்வுகள். K. விஸ்வநாத் விக்ரமுடன் ராஜபாட்டை என்றொரு படத்தில் சிறிதும் பொருந்தா ஒரு ரோலில் நடித்திருப்பார். இதில் கம்பீரமாக வருகிறார்.

ஸ்பெஷல் மென்ஷன் to M.S.பாஸ்கர். எப்படி தேவர் மகனில் வடிவேலுவுக்கு மனத்தில் நிற்கும்படியான ஒரு பாத்திரம் அமைந்ததோ அது மாதிரி மிகவும் லேட்டானாலும் லேடஸ்டாக எம்.எஸ்.பாஸ்கருக்கு நினைவில் நிற்கும் சொக்கு செட்டியார் பாத்திரம் அமைந்துள்ளது. நடிகனின் மேனேஜராக வாழ்ந்திருக்கிறார் மனுஷன்.

கமல் படங்களின் செட் ப்ராபெர்டிகளான ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் ஒகே. அதில் பூஜா பெட்டர், நடிப்பில் செயற்கை தன்மை இருப்பினும், நடனத்தில் ஸ்கோர் செய்கிறார். இன்னொரு கமல் பட ஆஸ்தான நடிகரான ஜெயராமன் மென்மையான நடிப்பில் மிளிர்கிறார்.

படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் இசை. ஜிப்ரான் பூந்து விளையாடி இருக்கார். பின்னணி இசை and பாடல்கள் இரண்டும் நன்று. ஒரு சின்ன ரோலில் வந்து போகிறார், அதே போல கு. ஞானசம்பந்தமும். இருவருக்கும் பதில் வேறு எவரேனும் வந்திருக்கலாம்.

இனி படத்தின் தொய்வுக்கானக் காரணத்தைப் பார்ப்போம். கதைக்குள் கதையாக வரும் கதை தான் இழுவை. படத்தில் பாலச்சந்தரே எந்தப் படத்துக்கும் கதை தான் முக்கியம் என்று ஒரு டயலாக் சொல்கிறார். பிறகு அத்தனை பெரிய நடிகரை ஒரு குழந்தைகள் கதை பட ரேஞ்சில் அவரே இயக்குவது விந்தையாக உள்ளது. சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டு எதுக்கு? எடிட்டிங் டேபிளில் அதன் தொடர்ச்சி கட் ஆகிவிட்டதோ? முழுதாகவே கட் பண்ணியிருக்கலாமே. நாசர் என்றொரு நல்ல நடிகரை இப்படி வீணடித்திருக்க வேண்டாம் கமல்! கதைக்குள் கதையில் அவர் வருவதால் வரும் சோகம் இது. அதில் எந்தப் பாத்திரத்தில் யார் வந்தாலும் சோபிக்காமல் போய் விடுகின்றனர்.

படத்தின் கரு சாகாவரம். அதற்கு இரண்டாம் கதை இல்லாமலே இன்னும் அழகான ஒரு திரைக்கதையை இயற்றி இருக்கலாம். படத்தில் பிராமணர்களைக் காட்டும் ஒரு காட்சி வருகிறது. மிக மிக அனாவசியமானக் காட்சி. கமலுக்கு அப்படிக் காட்டுவதில் எதோ கிக் வருகிறது என்று நினைக்கிறேன்.

படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாதது ஒரு மகிழ்ச்சி.

Overdose of கமல் இப்படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ்.  அதன் குறைகளுடனே எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. பல இடங்களில் நெகிழ்ச்சி, கண்களைத் துடைத்துக் கொள்ளும் அளவுக்கு 🙂

uv3

இரும்புக் குதிரை – திரை விமர்சனம்

Irumbu_Kuthirai_Official_Poster

ரெண்டு விரலில் ஒரு விரலைத் தொடச் சொல்லி ட்விட்டரில் கேட்டேன், ஒரே ஒருவர் தான் விரலைத் தொட்டார். அதுவும் அவர் தொட்ட விரல் விமர்சனம் எழுதாதே என்று நான் நினைத்திருந்த விரலை. ஆனாலும் படத்தைப் பார்க்கச் செலவழித்தப் பணத்துக்கு விமர்சனம் எழுதியாவது ஒரு பலனைப் பெற வேண்டும் என்று எழுதுகிறேன்.

R.B.குருதேவ், கோபிநாத் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். Simply superb! பாண்டிச்சேரியில் நடக்கிறது கதை, ஊரை அணு அணுவாக ரசிக்க முடிகிறது, நன்றி அவர்களுக்கு. மேலும் கடைசியில் நடக்கும் பைக் ரேசில் அவர்களின் பங்களிப்பு அமர்க்களம்!

அதர்வா சிறந்த நடிகர். நல்ல உயரமும், உடற்கட்டும் அவருக்குக் கூடுதல் பலம். இந்தப் படத்தின் பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். முரளியின் மகன் என்பதால் அவரைப் பார்க்கும் போது கொஞ்சம் he tugs at my heart strings, அதுவும் தந்தையை இழந்த பாத்திரத்தில் நடிப்பதால்.

தேவதர்ஷினிக்கு அண்ணி, அக்கா ரோலில் இருந்து ப்ரமோஷன், அதர்வாவுக்கு அம்மா. நன்றாகச் செய்திருக்கிறார். சச்சு பாட்டியாக வருகிறார், எந்த விதத்திலும் கதைக்கு வலு சேர்க்காதப் பாத்திரம், கலப்பு மணத்தை narsim அழகாக வசனத்திலேயே சொல்லிவிடுகிறார், அதற்கு சச்சுவை வீணடித்திருக்க வேண்டாம். இந்தப் படத்தின் அடுத்த பலம் நர்சிம்மின் வசனம். ஒரு இடத்தில் கூட அதிகப்படியானப் பேச்சு இல்லை. ரெட்டைப் பொருளில் வசனங்கள் இல்லை.

ஹீரோயின் ப்ரியா ஆனந்த். இப்போ அஞ்சான் படம் வரை அச்சு பிச்சு பாத்திரங்கள் தான் ஹீரோயின்களுக்கு. நல்ல வேளை இதில் ப்ரியா ஆனந்துக்கு ஜெனிலியா பாத்திரம் இல்லை. அறிவுடன் பேசுகிறார். ராய் லட்சுமி, ஜெகன் நண்பர்களாக வருகிறார்கள்.

G.V. பிரகாஷ் இசை, பெண்ணே பெண்ணே பாடல் நன்றாக உள்ளது. மற்றப்படி திரைக் கதையே சரியாக அமையாத இந்தப் படத்துக்குப் பாடல்களும் பின்னணி இசையும் தலை வலியைத் தான் தருகின்றன. Editing by T.S.சுரேஷ். ரேஸ் சீனில் சிறப்பாக உள்ளது அவரின் கைவண்ணம்.

சம்பந்தமே இல்லாமல் திடீரென்று ஒரு flashback. ஏழாம் அறிவு வில்லன் நிகுயின் தான் இதிலும் வில்லன். பறந்து பறந்து அடிக்கிறார். செமத்தியாக வாங்குகிறார் அதர்வா. படத்தின் நடுவில் டெம்போவே இல்லாமல் தொய்கிறது கதை. (சூமோ இருக்கிறதா என்று கேட்காதீர்கள் ப்ளீஸ்) இஷ்டத்துக்கு நடு நடுவே நடனம், யார் யாரோ ஆடுகிறார்கள். சோகமான சிசுவேஷனிலும் டூயட் வருகிறது.

எழுதி இயக்கியிருக்கும் யுவராஜ் போஸ் அவர்களே, படம் எடுக்க முதலில் கதை வேண்டும் ஐயா! சூப்பரான ரேஸ் காட்சிகளுக்காகப் படம் ஓடாது. தயாரிப்பாளரும் எந்த நம்பிக்கையில் பணம் போடுகிறார் என்று தெரியவில்லை. சரி விடுவோம், அவர்களுக்கே இல்லாத கவலை நமக்கெதுக்கு? ஆனால் தமிழகத்தில் நல்ல படங்கள் மட்டுமே ஓடும் என்பது பல முறை நிரூபணம் ஆன ஒன்று!

irumbu kuthirai

சைவம் – திரை விமர்சனம்

 

 

 

 

 

saivam

சைவம் திரைப்படத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்கள் சாரா அர்ஜுன், நாசர், நிரவ் ஷா, G.V.பிரகாஷ் குமார். ரொம்ப லைட்டான கதை. இயக்குநர் விஜய், செட்டியார் ஆனதால் அவர் சமூகத்துக் கதையை எளிதாகக் கையாண்டிருக்கிறார். செட்டிநாட்டு வீடும் பாத்திரத் தேர்வுகளும் authentic ஆக இருப்பத்து படத்தின் பலம்.

சிறுமி சாரா மனத்தைக் கொள்ளைக் கொள்கிறாள். நாசருக்கு இந்த மாதிரி பாத்திரம் அல்வா சாப்பிடுவது மாதிரி. அனாயாசமாக செய்து இருக்கிறார். நிறைய கதாப் பத்திரங்கள் வருவது முதலில் நம்மைக் கொஞ்சம் தடுமாற வைக்கிறது. இவ்வளவு நல்ல இயக்குநர் விஜய் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகத் தந்திருக்கலாம். படம் இன்னும் நல்ல உயரத்துக்குப் போயிருக்கும். குழந்தைக்கு சேவல் மேல் உள்ள பாசத்தை வைத்து ஒரு feel good movie. சின்ன சின்ன சம்பவங்களின் மூலம் கதாப்பாத்திரங்களின் தன்மையை வெளிக் கொண்டு வரும்போது விஜய் மிளிர்கிறார்.

gv பிரகாஷின் இசை நன்றாக உள்ளது, முக்கியமாக பின்னணி இசை நல்ல பலம். உத்திரா உன்னிகிருஷ்ணன் பாடிய அழகே அழகு இனிமை. இந்தப் படத்தில் நிரவ் ஷா சம்பளம் வாங்காமல் cinematography செய்திருக்கிறார். அவரின் பங்களிப்பு படத்தின் தயாரிப்புத் தரத்தை உயர்த்துகிறது. Editing ஆன்டனி, படம் நன்றாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது.

நாசர் மகன் இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். முதல் படத்துக்கு நன்றாக செய்திருக்கிறார். இன்னாரின் மகன் என்றாலே இன்னும் கூடுதல் எதிர்ப்பார்ப்பு வந்துவிடுகிறது.

முடிவு என் மனத்துக்குப் பிடித்தமான ஒரு முடிவு, அதனாலேயே அரங்கை விட்டு வரும்போது மகிழ்ச்சியோடு வெளிவர முடிந்தது. மேலும் இது இயக்குநர் விஜயின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்றறியும் பொழுது இன்னும் மகிழ்ச்சி 🙂

டைட்டிலில் நிறைய பேருக்கு நன்றி சொல்கிறார் இயக்குநர். அமலா பாலுக்கும் நன்றி என்று ஒரு டைட்டில் மின்னி மறைகிறது. எதற்கு என்று தெரியவில்லை. may be இவரைத் திருமணம் புரிந்ததற்காக இருக்கலாம்.

நல்ல படம். தனி காமெடி track இல்லை. அதுவே பெரிய நிம்மதி. ஹீரோயிச சண்டை காட்சிகளும் கிடையாது. அதை விட பெரிய நிம்மதி. குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். வேற்று மொழி படத்தின் காபியாக இருக்கவும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் படம் ரொம்ப சுவாரசியமாக இல்லாதது ஒரு குறை தான்.

saivam_movie_poster_stills_images_photos_04

கல்யாண சமையல் சாதம் – திரை விமர்சனம்

KSS

நான் ரொம்ப அபூர்வமாகத் தான் FDFS போவது. இன்று KSS க்கு மிகுந்த எதிர்ப்பார்ப்போடு சென்றேன் 🙂 இது எந்த மாஸ் ஹீரோ படமோ, மாஸ் டைரக்டர் படமாகவோ இல்லாததால் டைட்டில் கார்ட் போடும்போது எந்த ஆரவாரமும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது அரங்கம். ஆனால் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திற்கெல்லாம் சிரிப்பு அலைகள் வந்தவண்ணம் இருந்தன. முக்கியமாக கதாநாயகனுக்கு “அந்த” பிரச்சினை ஆரம்பித்து அவர் நண்பர்களும் அவருக்குப் பல்வேறு வகையில் உதவ ஆரம்பித்தவுடன் சிரிப்புக்குப் பஞ்சமில்லை 🙂

லேகா வாஷிங்க்டன் ஹீரோயின், நடிகர் பிரசன்னா ஹீரோ. இருவருமே ரொம்ப நன்றாக நடித்துள்ளனர். லேகா வாஷிங்க்டன் செம அழகாக உள்ளார். யார் காஸ்டியும் இஞ்சார்ஜோ அவர்களுக்கு ஒரு பூங்கொத்து, நல்ல ரசனை. லேகாவின் நடிப்பு இந்தப் படத்திற்கு நல்ல பலம். மேலும் பிரசன்னாவும் இந்த ரோலை நன்றாகக் கையாண்டுள்ளார்.

படத்தின் ஆரம்பித்திலேயே @kryes ஐ நினைக்க வைத்துவிட்டார் இயக்குனர். (KRSஐப் பற்றி தெரியாதவர்களுக்கு, அவர் சிலுக்கின் பக்தர்) இயக்குனரும் சிலுக்கின் பக்தரோ என்று எண்ணுகிறேன் 🙂

எழுத்து/இயக்கம் R.S.பிரசன்னா. அவருக்கு இது முதல் படம். பாலு மகேந்திராவின் மாணவர். ஆண்களுக்கு வரும் ஒரு பிரச்சினையை முதல் படத்திலேயே நகைச்சுவையோடு கையாண்டு பௌண்டரி அடித்துள்ளார். திரைக்கதையில் ஆங்காங்கே தடுமாற்றம் உள்ளது. ஆனாலும் கப்பென்று கடிவாளத்தைக் கையில் பிடித்து track குக்குள் குதிரையை கொண்டு வந்து விடுகிறார். பிரசன்னா கவலைப்படுவதாகக் காட்டும் சில repetitive சீன்களைத் தவிர்த்திருக்கலாம். இன்றைய இளைஞர்கள் பலருக்கு stressசினால் உண்டாகும் சிக்கலைத் தொடுகிறது படம். பாராட்டுக்குரிய முயற்சி!

வளர்ந்த பெண்ணுக்குத்  தந்தையாக டெல்லி கனேஷ் சரியாக இருக்கிறார், அதுவே முதலில் சின்னக் குழந்தையின் தகப்பனாகவும் வரும்போது ரொம்ப இடிக்கிறது. உமா பத்மாநாபன் பெண்ணுக்குத் தாயாக கனகச்சிதம். ரொம்ப நாள் கழித்து ராகவ்வை திரையில் பார்க்கிறோம். பிரசன்னாவின் நண்பனாக நன்றாக செய்துள்ளார். ஸ்ரீலேகா பார்த்தசாரதி, Dr ஷர்மிலா சின்ன பாத்திரங்களில் வருகிறார்கள். அவர்களின் பாத்திரப் படைப்புத் தான் கொஞ்சம் கடுப்படிக்கின்றது. கிரேசி மோகன் சின்ன ரோலில் டாக்டராக வந்து அனாயாசமாக நடித்து விடுகிறார் 🙂

முழுக்க முழுக்க பிராமண குடும்பத்துக் கதை. பெண் வளர்வது, பெண் பார்ப்பது, திருமணம் நிச்சயிப்பது, மற்ற சடங்குகள் எல்லாமே அக்மார்க் பிராமண வீட்டில் நடப்பவைகளையே காட்டியுள்ளார்கள். திருமண வீட்டில் பெண் வீட்டாருக்கும் பிள்ளை வீட்டாருக்கும் நடக்கும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், அது எப்படி மணமகனையும் மணமகளையும் பாதிக்கும் ஆகியவையைக் கதையை நடத்திச் செல்ல பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் கதை சொல்லும் திறமைக்கு ஒரு சான்று.

லோ பட்ஜெட் படம் என்று நன்றாகத் தெரிகிறது. ஆனால் புதுமுக இயக்குனருக்கு ஒரு ப்ரேக் கிடைப்பதே பெரிய விஷயம். அதனால் அதைக் குறையாகச் சொல்லக் கூடாது. லோ பட்ஜெட் படத்தையும் ரிச்சாகக் காட்டியிருக்கும் செட் டிசைனருக்கும் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்துக்கும் பாராட்டுகள்.

பாடல்கள் வெகு இனிமை. பின்னணி இசையும் நன்றாகவே உள்ளது. இந்து திருமணம் பற்றிய கதையாதலால் பின்னணியில் வரும் பாடல்கள் பல நாம் மாலை மாற்றும் சடங்கு முதலிய சமயங்களில் அடிக்கடி கேட்கும் traditional பாடல்கள். ஆதலால் ஒரு familiarity உள்ளது. மெல்ல சிரித்தாள், காதல் மறந்தாயடா ஆகிய இரு பாடல்களும் ஆல்ரெடி நல்ல ஹிட்.

சிறிதும் விரசமில்லாமல் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்கள் படைப்பு என்றும் தெரிகிறது. ஒரு ஜாலி படம் 🙂 வாழ்த்துகள்!

கேடி பில்லா கில்லாடி ரங்கா – திரை விமர்சனம்

KBKR

நானெல்லாம் பாருக்குப் போனதில்லை. திரை அரங்கத்தை விட்டு வரும்போது ஒரு குடிமகன் சாரி குடிமகள் பாரை விட்டு வந்த பீலிங் தான் எனக்கு இருந்தது. சரக்கு அடிப்பது தான் இன்றைய இளைஞர்களின் டைம் பாஸ் என்பது இந்த படத்தில் இருந்த்து தெள்ளத் தெளிவாகிறது! படம் முடிந்து க்ரேடிட்ஸ் ஓடும் நேரத்திலும் இயக்குனர் பாண்டிராஜ் சக நடிகர்களோடு குடித்து நமக்கு வாழ்த்துத் தெரிவிப்பது மகாக் கொடுமை! குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று படத்தின் ஆரம்பத்தில் ஸ்டில் போடுவது வெறும் கேலி கூத்து தான்.

சரி கதைக்கு வருவோம். ஆனால் எப்படி வருவது? கதையை எந்த கூகிள் சர்ச் எஞ்சினாலும் தேடிக் கண்டுபிடிக்கவே முடியாது. சும்மா சொல்லக் கூடாது, பாண்டிராஜுக்கு அசாத்திய தைரியம் தான். கதையே இல்லாமல் கதை பண்ணியிருக்காரே. இன்று தனியாக முட்டாள்கள் தினம் (ஏப்ரல் ஒண்ணு) என்று கொண்டாடுகிறோம். இந்த மாதிரி தயாரிப்பாளர்கள் கிடைத்தவண்ணம் இருந்தால் இயக்குனர்களுக்கு ஜாலி தான், தினமும் ஏப்ரல் ஒண்ணுதான்.

சிவ கார்த்திகேயன், விமல், பரோட்டா சூரி, டெல்லி கணேஷ், பிந்து மாதவி இவர்கள் தெரிந்த பெயர்கள். என்ன எண்ணத்தில் இந்த மாதிரி படங்களில் நடிக்கிறார்கள் என்ற லாஜிக் எனக்கு சிறிதும் புரியவில்லை. கொஞ்சம் கூட சிரிப்பு வராத வசனங்கள் மட்டும் இன்றி நகைச்சுவை என்ற பெயரில் அவர்கள் செய்யும் டார்ச்சர்கள் கடுப்பை மட்டுமே வரவழைக்கின்றது. கொஞ்சம் கூட கோவையே இல்லாமல் அலைபாய்கிறது திரைக்கதை. இசை யுவன் ஷங்கர் ராஜாவாம்.

படத்தில் சிவகார்த்திகேயனைக் காணவில்லை என்று அவர் தந்தை பிட் நோடீஸ் நகல் எடுக்கப் போவார். பசங்க எடுத்த  பாண்டிராஜைக் காணவில்லை என்று நாம் தான் பிட் நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யவேண்டும்.

ஒரே ஆறுதல் படத்தின் கடைசியில் இயக்குனருக்குத் திடீர் ஞானோதயம் ஏற்பட்டு ஒரு மெசேஜ் சொல்லியிருப்பது தான். அஸ்திவாரம் சரியாகப் போடப்படாத கட்டடத்துக்கு மேல் விமானம் அழகாக இருந்து என்ன பயன்?

சில சமயம் படத்தில் கதையே இல்லாவிட்டாலும் கண்ணில் நீர் வரும் வரை சிரித்துவிட்டாவது வருவோம். இதில் அதுவும் இல்லை. ட்விட்டரில் எடுத்தவுடனே எல்லா படத்தையும் மொக்கை என்று சொல்லிவிடுகிறார்களே, போய் தான் பாப்போம் ஒரு வேளை நன்றாக இருக்குமோ என்று நினைத்துப் போனேன். இனி அந்தத் தவறை செய்யவே மாட்டேன் 🙂