சாமி 2 – திரை விமர்சனம்

முதல் படத்துக்கு அடுத்த பாகம் எடுப்பது என்று முடிவு செய்தால் உடனே எடுத்திடுங்க இயக்குநர்களே. நாள் கழிச்சு (வருடங்கள்!!) எடுத்து அந்த ஹீரோவுக்கு வயதாகி, தொப்பை வந்து பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. 28 வயதுள்ளவராக விக்ரமை எப்படி ஒத்துக் கொள்வது? ஆனால் உடம்பை படு ஃபிட்டாக வைத்துள்ளார் விக்ரம். நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் பிராமாதமாக செய்துள்ளார். ஹரி படங்கள் என்றுமே விறுவிறுப்புக்குப் பெயர் போனவை. வேகமாக நகரும் கதையாக அமைத்துத் திரைக் கதையிலும் தவறுகளை கண்டுபிடிக்க விடாமல் செய்துவிடுவார். இந்தப் படம் வேகமாக நகர்கிறது ஆனால் திரைக் கதை சொதப்பல். அதில் மைனஸ் மதிப்பெண்கள் பெறுகிறார். படத்தின் ஆரம்பத்தில் சாமி 1 படத்தைக் கொஞ்சம் காட்டுகிறார்கள், முன் கதை சுருக்கம் மாதிரி. ஆனால் த்ரிஷாவுக்குப் பதிலா திவ்யான்னு அதே பழைய கதையில் ஐஸ்வர்யா ராஜேஷை த்ரிஷா இடத்தில் மணமகளாக மனைவியாக நடிக்க வைத்துக் கதையை தொடர்கிறார் இயக்குநர். பெருமாளை பிச்சையை கொலை செய்து எரித்து விடுவதுடன் சாமி படம் முடியும். அதைத் தொடர்ந்து அவரைத் தேடி அவர் மகன்கள் வருவதாக இதில் படம் தொடங்குகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிராமண பாஷை சுத்தமாக வரவிவில்லை. கொஞ்சம் பயிற்சி எடுத்திருக்கலாம். த்ரிஷா மாமியாக பச்சக் என்று மனத்தில் நின்றதே அந்த பிராமண பெண் பாத்திரத்துக்கு சரியாக பொருந்தியதால் தான். சின்ன பாத்திரம் தான் ஐஸ்வர்யாவுக்கு, அதனால் அவர் சரியாக பொருந்தாததை மன்னித்துவிடலாம். ஆனால் பிரச்சினை கதையின் தொடர்ச்சியில் தான். திடீரென்று கதை திருநெல்வேலியில் இருந்து தில்லிக்குத் தாவி அங்கு ஓர் விக்ரம் மத்திய மந்திரியின் அலுவலகத்தில் வேலை செய்கிறார். முதலில் பார்த்த ஆறுச்சாமி விக்ரமுக்கு இவர் என்ன உறவு, டபுள் ரோலா என்று குழப்பம் வருகிறது. எது ப்ளாஷ் பேக் எது தற்போதைய கதை என்று சொல்வதிலேயே திரைக் கதை தடுமாறுகிறது. அனுபவம் வாய்ந்த இயக்குநர் ஹரி இந்தத் தவறை செய்யலாமா?

தில்லி விக்ரம் ஒரு பிராமணர், ஐஏஎஸ் தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் போது மத்திய மந்திரி அலுவலகத்தில் வேலை செய்பவராக, பகுதி நேர கல்யாணம் செய்து வைக்கும் புரோகிதராகக் காட்டப்படுகிறார். முதலில் வேறு மாதிரி கதை அமைத்துப் பின் கதை மாற்றப்பட்டதா என்று தெரியவில்லை. எனிவே முதல் குழப்பத்திற்குப் பிறகு அவர் யார் என்று புரிந்து அவரும் பூணுலை கழட்டி விட்டு ஐபிஎஸ் ஆகி அதே திருநெல்வேலிக்கு போஸ்டிங் வாங்கி பெருமாள் பிச்சையின் மூன்று மகன்களை பழி தீர்த்துக் கொள்வதே மிச்சக் கதை. பூணுல் போட்டு வளர்க்கப்பட்டவர் பின் எதற்கு அதை கழட்ட வேண்டும் என்று தெரியவில்லை. சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை.

மிச்சக் கதைக்கு வருவதற்குள்ளே சூரி நம்மை ஒரு வழி பண்ணி விடுகிறார். தாமிரபரணி புஷ்கரத்துக்குத் தடை வாங்க முயல்வதை விட முதலில் சூரி காமெடிக்குப் படங்களில் தடை வாங்க முயன்றால் புண்ணியமாப் போகும். அவ்வளவு திராபையாக உள்ளது அவரின் நகைச்சுவை பகுதி. படத்தின் இளங்காற்று கீர்த்தி சுரேஷ், அழகாக இருக்கிறார், பதமாக நடிக்கிறார். உடை அலங்காரம் அருமை. இதில் ஹீரோ நாயகியை பின் தொடர்ந்து ல்தகா சைஆ இருக்கா என்று படுத்தாமல், நாயகி நாயகனை பின் தொடர்ந்து வலுக்கட்டாயமாக காதலிக்க வைக்கிறார். வாழ்க காதல்.

பிரபு மத்திய மந்திரியாக கனமான பாத்திரத்தில் வருகிறார். கனம் எடையில் மட்டும் தான் பாத்திரத்தில் இல்லை என்பது பெரும் சோகமே. அவருக்கும் வில்லனுக்கும் என்ன தொடர்பு என்று கடைசி வரை புரியாத புதிராக இயக்குநர் கதையை நகர்த்தியிருக்கிறார். ஐஸ்வர்யா அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷின் தாயாக ஓர் ஒப்புக்கு சப்பாணி பாத்திரத்தில் வந்து போகிறார். அவருக்கு மேக்கப் சரியில்லை. மிகவும் வயது முதிர்ந்தவராக தெரிகிறார்.

ஊர் முழுவதும் ஆறுச்சாமிக்கு பயந்து பெருமாள்பிச்சை தலைமறைவாகிவிட்டதாக நினைக்க, உண்மையைக் கண்டறிய தன் இரண்டு அண்ணன்களோடு இலங்கையிலிருந்து  வருகிறார் பெருமாள்பிச்சையின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகனான முக்கிய வில்லனான பாபி சிம்ஹா, பெயர் இராவண பிச்சை. அவர் தான் ஹீரோ ராம் சாமிக்கு சவால் விடுபவராக வருகிறார். (பெயர் தேர்வெல்லாம் நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா!) அவரின் மூத்த அண்ணன் ஓ.எ.கே. சுந்தர், இரண்டாவது அண்ணன் ஜான் விஜய். சிங்களவர்களா தமிழர்களா என்று புரியாத இலங்கையில் இருந்து இறக்குமதியான இப்படத்தின் வில்லன் பத்திரங்கள் இவர்கள். பாபி சிம்ஹா வில்லனாக நன்றாக ஜொலிக்கிறார். மற்ற பாத்திரங்களை விட வில்லன் பாத்திரம் அவருக்கு நன்றாக செட் ஆகிறது. பிச்சை பெருமாளின் மனைவி பிள்ளைகளுக்குத் தாயாகவும் சோழி உருட்டிப் போட்டு ஆரூடம் சொல்லும் ஜோசியக்காரியாக இருபத்தி எட்டு வருடங்களாக அவர்களை இலங்கையில் இருந்து வழி நடத்தும் சூத்திரதாரியாக வருகிறார். காதுல ஒரு கண்டு பூ!

இசை டிஎஸ்பி. பின்னணி இசையில் கூட சோபிக்கவில்லை. காயத்திரி மந்திரம் பொருள் தெரிந்து தான் பின்னணி இசையில் அதை ஒலிக்க விடுகிறாரா? சண்டை வரும்போதெல்லாம் இது தான் பிஜிஎம். பாடல்கள் வெகு சுமார். படத்தொகுப்பாளர் V.T.விஜயன் உண்மையாக வேலை செய்திருந்தால் நிறைய இடத்தில் கத்திரி போட்டிருக்க வேண்டும். ஒளிப்பதிவாளர் A.வெங்கடேஷ்.

படம் முழுக்க ஒருவரை ஒருவர் பளார் பளார் என்று அடித்துக் கொள்வதால் நாம் திரை அரங்கை விட்டு வெளியே வரும்போது நம் கன்னத்தையே தடவிப் பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது. இதில் கீர்த்தி சுரேஷை விக்ரம் அடிப்பதை, பிரபு ஐஸ்வர்யாவை அடிப்பதை எல்லாம் சென்சாரில் கட் செய்திருக்க வேண்டும். ஒரு விதமான வன் கொடுமை இது! இன்னும் நிறைய குறைகளை சொல்லிக் கொண்டே பகலாம். ஆயாசமாக உள்ளது. அதனால் நிறுத்திக் கொள்கிறேன்.

சீறிப் பாயும் புல்லட் டிரெய்னாக படம் எடுக்க எண்ணி ஆனால் அதைத் தாங்கக் கூடிய அளவு சரியான தண்டவாளம் அமைக்கவில்லை ஹரி.

திருட்டுப்பயலே 2 – திரை விமர்சனம்

பாபி சிம்ஹா போலீசில் கண்காணிப்புத் துறையில் உள்ளார். சில தொலைபேசி எண்களை ஒட்டுக் கேட்க பாபி சிம்ஹாக்கு மேலதிகாரியிடம் இருந்து கட்டளை வருகிறது. இதில் தொடங்குகிறது படம். பாபி சிம்ஹா எடை கூடியுள்ளார் ஆனால் நடிப்பில் சோடை போகவில்லை. படத்தின் தொடக்கத்திலேயே பாபி சிம்ஹா திருட்டுத்தனம் செய்கிற போலிஸ் என்று தெரிகிறது. இந்தப் படத்தில் ஹீரோ என்பவனும் சற்றே வில்லத்தனத்துடன் இருப்பதால் வில்லன் பாத்திரம் இன்னும் பயங்கர கெட்ட வில்லனாகக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது இயக்குநருக்கு.

பிரசன்னா படு குயுக்தியான சிந்தனைகளையுடைய வில்லனாக வருகிறார். கதாநாயகன், வில்லன் இரண்டு பாத்திரங்களிலும் பிரமாதமாக வேறுபாடு காட்டி நடிக்கும் திறன் அவருக்குள்ளது. அருமையாக செய்திருக்கிறார். உடம்பை மிகவும் பிட்டாக வைத்துள்ளார். அவரின் இருபத்தி ஐந்தாம் படம் இது. வாழ்த்துகள்! அமலா பால் இவரிடம் பேஸ்புக்கில் நட்புப் பாராட்டி பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். நடிக்க நல்ல வாய்ப்புக் கொடுத்திருக்கும் பாத்திரம். நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். திரைக்கதையைவிட பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பாலின் நடிப்பே படத்தைப் பரபரப்பாக்கி நம்மை ஆவலுடன் பார்க்க வைக்கிறது.

ஆளை சரியாகத் தெரியாமல் அவர் இணையத்தில் காட்டும் முகத்தை வைத்து எத்தனை பேர் இந்த மாதிரி ஏமாந்துள்ளார்களோ என்று தான் படம் பார்க்கும்போது தோன்றுகிறது. அந்த அளவுக்கு உண்மைக்கு வெகு அருகில் பயணிக்கிறது கதை.

பாடல்கள் FMல் ரொம்ப் பிரபலம் அடைந்துவிட்டன. இரண்டு டூயட்கள் இனிமையாக உள்ளன. இசையமைப்பாளர் வித்யாசாகருக்குப் பாராட்டுகள். திருட்டுப் பயலே 2 முதல் பாகத்துக்குத் தொடர்பு இல்லாவிட்டாலும் நவீனத்தனமாக களவாணித்தனம் செய்கிறவர்கள் பற்றிய கதை தான் இதுவும்.

கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தாலும் பெண் சமூக ஊடகத்தில் மயிரிழையில் தடம் புரண்டு மாட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது என்பதை சொல்லும் விதம் நன்று.  பிரமாதமான வசனங்கள் ஒன்றும் இல்லை. ஆனால் கதை நகர்த்தப்படும் விதம் சுவாரசியமாக உள்ளது. முக்கியமாக கணவன் மனைவி உறவில் ஏற்படும் சிக்கல் இதில் வித்தியாசமானது.

இயக்குநர் சுசி கணேசன் ஒரு துப்பறிவாளர் பாத்திரத்திலலும் வருகிறார். சின்ன பாத்திரம் தான் எனினும் முக்கியப் பாத்திரம். அவருக்கு சுத்தமாக நடிக்க வரவில்லை. வேறு யாராவது நடித்திருந்தால் திரைக் கதை/படம் மெருகேறியிருக்கும். திரைக் கதையில் சில இடங்களில் தெளிவு இல்லை. குழப்பத்தைத் தவிர்த்து இருக்கலாம்.

தன் வினை தன்னைச் சுடும் என்பதாக க்ளைமேக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர்க்கேத்த தண்டனை கிடைக்கிறது. பிரசன்னா க்மேளைக்ஸ் பகுதி சற்றே நம்பகத் தன்மை குறைவாக உள்ளது. இன்னும் நன்றாக முடித்திருக்க கொஞ்சம் யோசித்திருக்கலாம்.