சூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்

 

திரைக்கதையில் 100/100 பெறுகிறது சூப்பர் டீலக்ஸ் திரைப்படம். திரைக்கதை நன்கு அமைந்தாலே பாதி கிணறு தாண்டிய நிலை தான். அதில் மேலும் தியாகராஜன் குமாரராஜா மாதிரி ஓர் இயக்குநர் அக்கதையை இயக்கும்போது நல்ல ஒரு வெற்றி படமாக அமைய வாய்ப்புகள் அதிகமாகிறது. ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு எட்டு வருடங்கள் கழித்து இப்படம் அவர் எழுதி இயக்கி வெளிவந்துள்ளது. நிச்சயமாக ஆரண்ய காண்டத்தைவிட பல அதிக பரிமாணங்களைக் கொண்டு எழுத்திலும் இயக்கத்திலும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது இப்படம். எழுத்தில் மிஷ்கின், நலன் குமாரசாமி. நீலன் கெ.சேகர் ஆகியோர் தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். வசனங்கள் அருமை!

நான்கு முக்கிய கதைகள, நிறைய கதாப்பாத்திரங்கள், சமூகத்திலுள்ளமிகவும் சங்கடமான பாலியல் சார்ந்த பிரச்சினைகள் இவை அனைத்தையும் சுவைபட நகைச்சுவை இழையோட திரைப்படமாக அமைத்துக் கொடுத்திருப்பது தியாகராஜா குமாரவேல் குழுமத்தின் வெற்றி. இந்தப் படம் அடல்ட்ஸ் ஒன்லி படம். ஆனாலும் எப்பவும் போல நம் மக்கள் குழந்தைகளுடன் தான் திரை அரங்கத்திற்கு வந்திருந்தனர். அதில் ஒரு குழந்தை படத்தின் நடுவில் சமந்தா திரையில் வரும்போது அம்மா இந்த அக்கா குட் கிர்லா பேட் கிர்லா என்று உரக்க கேட்டு திரையரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. நாயகன் படத்தின் நீங்க நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு இணையானது தான் இந்தக் கேள்வியும். ஏனெனில் இயக்குநர் கதாப்பாத்திரங்களை வெள்ளையும் கருப்பும் கலந்து நாம் வாழ்க்கையில் சந்திக்கும் உண்மை மனிதர்களை பிரதிபலிக்கும் வகையிலேயே படைத்திருப்பது தான்.

ஃபஹத் ஃபாசல் சமந்தா நடிப்பு மிகப் பிரமாதம். வஞ்சிக்கப்பட்ட கணவனாக அவர் புலம்பும் காட்சிகள் அருமை. அவர் பாத்திரத்துக்கான அவருடைய வசனங்கள் குறிப்பாக அரசியல் மற்றும் சமூகம் சார்ந்தவை அற்புதம். இயல்பாக நகைச்சுவை ததும்பியதாக உள்ளது. அதை அவர் வெளிப்படுத்தும் விதமும் அருமை. அவர்கள் கதையில் வரும் இதர துணைப்பத்திரங்கள் யதார்த்தமான சிரிப்பை வரவழைப்பவர்களாக  உள்ளனர். பாராட்டு வசனங்களுக்கு. முதல் பாதியில் திடுக் நிகழ்வுடன் தொடங்கும் இக்கதை பின் பாதியில் இழுவையாக மாறி விடுவதை குமாரராஜா தடுக்காதது அவரின் தோல்வி. முக்கியமாக சமந்தா பகத் பாசல் கதையில் சப் இன்ஸ்பெக்டர் பெர்லின் (பகவதி பெருமாள் பக்ஷ்) நுழைந்தவுடன் நடக்கும் மெலோடிராமா (வன்புணர்வு முயற்சி) நிறைய பழைய படங்களில் பார்த்தது. கோடி காண்பித்தாலே பார்ப்பவர்கள் புரிந்து கொள்வர். ஆனால் அதை மிகவும் கொடூரமாக காட்டிக் கொண்டே இருந்தது பார்வையாளர் பொறுமையை சோதிக்கிறது. அதுவும் அதற்கு முன் பெர்லின் விஜய் சேதுபதியை வேண்டிய அளவு படுத்தியதை பார்த்த பின் இதையும் அதிகமாக பார்க்க வைத்திருக்க வேண்டியதில்லை. மூன்று மணி நேரத்தை இந்தக் காட்சிகளை கத்திரித்தாலே நேரம் குறைந்திருக்கும்.

பொருளாதாரத்தில் கீழ் நிலையிலுள்ள விடலைப் பையன்கள் பகுதி அவர்கள் வயது பொறுப்பின்மை, ஆசை, கோபம், அவமானம், நம்பிக்கை தகர்தல் ஆகியவைகளை அவர்கள் எதிர்கொள்ளும்போது அவர்கள் நிலை என்ன என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டியுள்ளார். நான்கு பையன்களும் மிக மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். இக்கதையில் வரும் ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் பகுதியும் தினப்படி வாழ்வில் நாம்பார்க்காத ஒன்று ஆனால் ஆங்காங்கே நடந்துகொண்டிருப்பது தான். கணவன் சரியாக அமையாவிட்டால் மனைவி போகும் பாதை எப்படியாக இருக்கும் அதனால் பாதிப்படையும் பிள்ளைகள் நிலை அனைத்தும் நம் சமூகம் கண்டும் காணாமல் கடந்து செல்கிறது. பாதிப்படைபவர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் புரியும். இதில் ரம்யா கிருஷ்ணன் தன் மகனை காப்பாற்ற மருத்துவமனையில் பணத்துக்காக போராடும் காட்சியில் ஒரு தாயை மட்டுமே பார்க்க முடிகிறது, அவர் வாழ்க்கையை நடத்த அவர் தேர்ந்தெடுத்த வழியை அங்கே நாம் காண்பதில்லை.

விஜய் சேதுபதியின் மகனாக வரும் அஸ்வந்த் அசோக் குமார் எப்படி ஒரு இயக்குநர் சொல்லிக் கொடுத்தால் கூட இந்த மாதிரி நடித்திருக்க முடியும் என்று தெரியவில்லை! விஜய் சேதுபதிக்கு இந்தப் பையனின் முகபாவங்களை பார்த்தே நெகிழ்ந்திருப்பார் மகிழ்ந்திருப்பார் அவர் செய்ய வேண்டிய முகபாவங்கள் தானாக வந்திருக்கும், நடிக்கத் தேவையே இருந்திருக்காது. அந்த அளவு நிபந்தனையற்ற அன்பை வெளிக்காட்டும் ஒரு கதாப்பாத்திரமாக அவன் வருகிறான். அற்புதமான பாத்திரப் படைப்பு+நடிப்பு. அதே மாதிரி விஜய் சேதுபதி மனைவியாக வரும் காயத்திரியும் பாத்திரத்தை உணர்ந்து மிக அழகாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் கண்கள் உணர்சிகளை கொட்டுகின்றன. அவரின் நிலையை உணர்த்துகிறது அவர் பேசும் வசனங்கள். அந்தப் பகுதியை எழுதியவருக்கு பாராட்டுகள்.

யுவனின் பின்னணி இசை மிக நன்றாக உள்ளது. அவர் அப்பா பாதி படத்துக்கு இசை அமைத்திருந்தாலும் எங்கெங்கு எந்தெந்த பாடல்களை சேர்த்தால் படத்துக்கு சரியாக வரும் என்ற முடிவை சரியாக எடுத்திருக்கிறார் யுவன். இசை இருப்பதே தெரியாமல் இருக்கும் படம் இது. மிக மிக நல்ல இசையமைப்பு! பல வருடங்களுக்குப் பிறகு யுவன் ஜொலிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை பாத்திரத்தை எடுத்து நடித்ததற்கும் சமந்தா “நல்ல பெண்” என்று நாம் முத்திரை குத்தும் பாத்திரமல்லாத பாத்திரத்தைத் துணிந்து எடுத்து நடித்ததற்கும் பாராட்டுகள். முன்பெல்லாம் திருமணம் முடிந்த பிறகு கதாநாயகிகளுக்கு சினிமா கெரியர் முடிந்துவிடும். பிறகு தான் நாயகியாக நடித்த ஹீரோவுக்கே அம்மாவாக நடிப்பார். சமந்தா அந்த நிலையை உடைத்தெறிந்து பாலிவுட், ஹாலிவுட்டில் இருப்பது போல் திருமணத்திற்கு பிறகும் சர்ச்சைக்குரிய பாத்திரத்தைத் துணிந்து ஏற்று நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்குத் திருநங்கை பாத்திரம் anti hero பாத்திரம், கொஞ்சம் கூட கோபத்தை வீராவேசமாக கட்டமுடியாது. எல்லாராலும் ஏளனப்படுத்தப்படும் அருவருப்பாக பார்க்க வைக்கும் பாத்திரம். அதை துணிந்து செய்ததற்கு பாராட்டுகள். கோபத்தை காட்ட முடியாத தன் அவல நிலையிலும் சாபம் விட்டு தன் கோபத்தை வெளிக்காட்டும் இடம் அற்புதம். (இறுதியில் அந்த சாபம் பலிப்பது நல்ல directorial touch 🙂 )

இந்தப் படத்தில் பாத்திரத்தில் சரியாக ஒட்டாத நடிகர் என்றால் அது பக்ஷ் தான். ரொம்பக் கொடூரமாக சித்தரிக்கப்பட்டிருக்கார் ஆனால் அவர் நடிப்பு அவ்வளவாக நம்மை ஈர்க்கவில்லை, வெறுக்கப்பட வேண்டிய பாத்திரம் எரிச்சல் பட வைக்கிறது. தவறு கண்டிப்பாக இயக்குனருடையது தான். சவமாக கதை முழுதும் பயணிக்கும் பாத்திரம் பற்றி சொல்லாமல் இருக்கக் கூடாது. அவரின் நடிப்பு மகளிர் மட்டும் நாகேஷின் நடிப்புக்கு இணையானது அல்ல என்றாலும் கதையின் திருப்பத்திற்கு, சைலன்ட் கவுன்சலராக சமந்தா பகத் பாசல் மணவாழ்க்கை பிரச்சினைகளுக்கு அந்த டெட் பாடியை பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

ஒரு பெரிய குழப்பம் கதை நடக்கும் கால கட்டம்! எந்தக் காலகட்டத்தில் கதை நடக்கிறது என்று சரியாக புரியவில்லை. செல்போனில் ஒரு பாத்திரம் படம் பிடிக்கிறது. அதனால் இப்பொழுது நடக்கும் கதை என்று எடுத்துக் கொள்ளலாம். சுனாமி ரெபரன்ஸ் நிறைய வருகிறது. சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது சுனாமி நடந்து பத்து வருடத்திற்குள் நடக்கும் கதை போல் உள்ளது. ஆனால் டிமாநிடைசேஷனும் வருகிறது. அப்போ சமீபத்திய காலகட்டம் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் ஒருகதையில் விடலைப் பையன்கள் பலான படம் பார்க்க ஒரு ஷேடி சிடி கடைக்குப் போய் பெற்றோர்கள் இல்லாத போது டெக்கில் படம் பார்ப்பதாக வருகிறது. இந்தக் காலத்தில் ஏன் இந்த வழி? செல்போனில் எல்லாமே பார்க்க முடியும். இணையத்தில் எல்லாமே கொட்டிக் கிடக்கிறது. அடுத்து ஒரு பழைய திரையரகத்திற்கும் இந்த மாதிரி படம் பார்க்க செல்கிறார்கள். அவ்வளவு மெனக்கெடனுமா இப்போ என்று தோன்றுகிறது. டிக் டோக்கிலேயே இப்போ ஆல்மோஸ்ட் எல்லாம் வந்துவிடுகிறதே. கொஞ்சம் சொதப்பல் தான் அந்தப் பகுதியில்! பின்னணி இசையில் இளையராஜா பாடல்கள் நிறைய சேர்க்கப்பட்டு படத்தைப் பார்க்கும்போதே ஒரு போதை ஏற்படுகிறது. ஆனால் அதிலும் காலக்கட்ட கணிப்பில் ஒரு சிக்கல், பொதுவாக எண்பதுகள் தொன்னூறுகள் காலக் கட்டத்தை  காட்ட தான் ராஜா பாடல்கள் பின்னணியில் ஒலிக்கும்.

எந்த ஊரில் நடக்கிறது என்றும் புரியவில்லை. சென்னையா புறநகர் பகுதியா? விஜய் சேதுபதி மகனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்லும் வழி எதோ மும்பையின் கச்சடா பகுதி மாதிரி உள்ளது, அவர் வீடோ செட்டிநாட்டு வீடு மாதிரி இருக்கு. நகர சாயலே இல்லை பல இடங்களில் அதாவது மருத்துவமனை, காவல் நிலையம் முதலிய இடங்களில். இப்பொழுது நடக்கும் கதை என்றால் காவல் நிலையம் மருத்துவமனை கட்டடங்கள் மிகவும் நன்றாக இருக்கவேண்டும். எல்லாம் பாடாவதியாக உள்ளன.

உணர்ச்சிகளைப் பற்றிய படம் தான் என்றாலும் உணர்ச்சி வசப்பட்டு நாம் படத்துடன் ரொம்ப ஒன்ற முடிவதில்லை. ஏனென்றால் நேரியலாக கதை சொல்லப்படவில்லை. நான்கு காதைகள் கத்திரித்து கத்திரித்து நம் முன் வைக்கப்படுவது காரணமாகிறது. நேரக்கோடும் ஒரு பிரச்சினை. அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் காலையில் தொடங்கி இரவில் முடிகிறது. அதில் சில சந்திப்புகள் உதாரணத்துக்கு ஒரு கதையில் இருக்கும் மிஷ்கின்னும் இன்னொரு கதையில் இருக்கும் விஜய் சேதுபதியும் சந்திப்பது எந்த நேரத்தில் என்று புரியவில்லை. ஆனாலும் படத்தை நேர்த்தியாக படத் தொகுப்பாளர் சத்தியராஜ் நடராஜன் தொகுத்தளித்திருக்கிறார். இந்தப் படத்தை தொகுப்பது எளிதன்று. ஒளிப்பதிவாளர்கள் நிரவ் ஷா, பி.எஸ்.வினோத் கதாப்பாத்திரங்களுடன் பயணித்திருக்கிறார்கள். படத்தின் வண்ணம் மூலம் படத்தின் மனநிலையை பிரதிபலிக்க வைத்திருக்கிறார்கள். குறுகலான தெருக்களில், சின்ன சின்ன வீடுகள் குடியிருப்புகளில் தான் கதைகள் நடக்கின்றன. அந்த இறுக்கமான இடச் சூழலை பார்ப்பவரும் உணரும் வண்ணம் ஒளிப்பதவு செய்திருப்பது அவர்களின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒளிப்பதிவாளர்களும் ஜாம்பவான்கள் தானே!

பாலியல் சார்ந்த காட்சிகள், வசனங்கள் வெளிப்படையாக உள்ளன. பொதுவாக நாம் எதெல்லாம் சமூகத்தில் தவறு என்று சொல்லுவோமோ அதை செய்பவர்கள் தான் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரங்கள். அதை செய்பவர்களும் சமந்தாவாகட்டும் ரம்யா கிருஷ்ணன் ஆகட்டும் விஜய் சேதுபதி ஆகட்டும் அதை தவறாக நினைக்காமல் இயல்பு அல்லது செய்ய வண்டிய நிர்பந்தம் அதனால் தவறில்லை அல்லது வேறு வழியில்லை என்கிற தொனியில் குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்கிறார்கள். சப் இன்ஸ்பெக்டர் பக்ஷ் செய்யும் அட்டுழியங்களும் காவல் துறையில் நடப்பவை என்பதாக உள்ளது.

குழப்பத்தில் அமைதி மாதிரியான நிலையை இந்தப் படத்தில் உணரலாம். இந்தப் படத்தை காட்சிக்குக் காட்சி ஆராய்ந்து பல பொழிப்புரைகள் கண்டிப்பாக வரும். எனக்கே மறுமுறை பார்த்து விரிவாக எழுத ஆர்வம் உள்ளது. அந்த அளவு இந்தப் படம் பன்முகங்களை கொண்டுள்ளது. மிக மிக விரிவாக திட்டமிட்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. பல நுணுக்கமான விஷயங்களை கொண்டுள்ளது. இறுதியில் sci-fi எல்லாம் வருவது வேற லெவல்! சொல்லப்படும் விஷயம் நல்லதா கெட்டதா என்று விவாதிக்கலாம். ஆனால் அந்த விவாதத்தை ஏற்படுத்த முனைந்திருப்பது தான் இயக்குநரின் குறிக்கோளுமாக இருக்கும் என்று நினைக்கிறேன். வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம்.

 

 

96 – திரை விமர்சனம்

இன்னுமொரு பள்ளிப் பருவக் காதல் கதை என்று நகர்ந்து போக விடாமல் கட்டிப் போடுவது பலருக்கும் இது வாழ்க்கையில் நடந்திருப்பதால் எப்படி முடியப்போகிறது இந்தக் கதை என்று எதிர்பார்க்கும் ஆர்வம் தான். மேலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்கான காரணம் விஜய் சேதுபதி த்ரிஷா கூட்டணி. ஆனால் எழுதி இயக்கியிருக்கும் C.பிரேம்குமார் முழுவதாக இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சில இடங்களில் அற்புதமாக திரைக் கதையைக் கையாண்டிருக்கிறார். சில இடங்களில் தொய்வு. அவர் மனத்தில் கற்பனை செய்ததை உருவாக்கித் தருவதில் சற்று ஏறக்குறைய ஆகிவிட்டது. அவர் வாழ்க்கையில் நடந்ததோ நெருக்கமானவருக்கு நடந்த கதையாகவோ இருக்க சாத்தியமுள்ளது.

இது அந்தக் கால சாந்தி கிருஷ்ணா சுரேஷ் நடித்த பன்னீர் புஷ்பங்கள் மாதிரி ஓர் அழகான பள்ளிப் பருவக் காதல் கதை. ஆனால் பெற்றோர்களோ ஜாதியோ இதில் வில்லன் இல்லை, சந்தர்ப்ப சூழ்நிலை தான் வில்லன். தொண்ணுறுகளில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்/அல்லது ஆத்மார்த்தமாகப் புரியக் கூடும். மற்றவர்களுக்கு அந்த அளவு இந்தப் படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

விஜய் சேதுபதி புகைப்படம் எடுப்பதைத் தொழிலாகக் கொண்டவர், தனியாக சுற்றுபவர் என்பது படத்தின் முதல் சில நிமிடங்களில் புரிந்துவிடுகிறது. அவர் வாழ்க்கை ஏன் அம்மாதிரி ஆனது என்பதில் திரைக் கதை விரிகிறது. அவர் எதேச்சையாகப் படித்தப் பள்ளியிருக்கும் தஞ்சை வரும்போது அதை சுற்றிப் பார்க்கையில் பழைய நினைவுகளில் மூழ்கி அதன் பின் கதை பின்னோக்கியும் முன்னோக்கியும் விரிகிறது. நாயகியின் பெயர் ஜானகி (பெற்றோர்களுக்கு S.ஜானகி பிடிக்கும் என்பதால்), நாயகன் பெயர் இராமச்சந்திரன். பெயர் பொருத்தம் இருந்தும் இணையாதக் காதல் 😦

இளமை காலத்து விசேவாக எம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். பெரிய பாத்திரம். மிகவும் சுமாராக நடித்துள்ளார். உணர்ச்சிகளை சரியாக காட்டவில்லை. இளம் வயது த்ரிஷாவாக கௌரி G.கிஷன் பிச்சு உதறியிருக்கார். இவர்கள் இருவரும் தான் முதல் பாதி படத்தை ஆக்கிரமிக்கிறார்கள். பள்ளிக் காட்சிகள் நன்றாக இருந்தாலும் மிகவும் நீளமாக உள்ளது. படம் இரண்டு மணி நாற்பது நிமிடங்கள். நிச்சயமாக அரை மணி நேரம் படத்தின் முன் பாதியிலும் கொஞ்சம் பின் பத்தியிலும் கத்திரித்து இருந்தால் இன்னும் அழகான காவியமாக படம் வந்திருக்கும். படமே இந்த இளைஞர்களுடன் நின்றிருந்தால் இந்த அளவு அவர்கள் கட்டப்படுவதற்கான நியாயம் உள்ளது. ஆனால் படத்தின் பின் பாதியில் த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் சந்தித்து அவர்கள் சில மணி நேரம் மட்டுமே சேர்ந்து இருக்கும் வாய்ப்பின் போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்களும், 22வருடங்கள் பிரிந்து பின் பார்த்துக் கொண்டும், உண்மைகளை தெரிந்து கொண்டும், அதன் தாக்கத்தைப் பற்றியதும் தான் என்கிறபோது முதல் பாதியை நிறைய குறைத்திருக்கலாமே!

எஸ்.ஜானகி, இளையராஜா இல்லாமல் தொண்ணூறுகளில் வாழ்ந்த தமிழர்களின் இளமைப் பருவம் இல்லை. அதை நல்ல முறையில் பயன்படுத்தியுள்ளார் எழுதி இயக்கியுள்ள பிரேம்குமார். பள்ளித் தோழர்களாக வரும் தேவதர்ஷினி, பகவதி பெருமாள் இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பள்ளி காவல் காரராக ஜனகராஜை ஒரு சில நிமிடங்களே எனினும் பல வருடங்களுக்குப் பிறகு பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கவிதாலயா கிருஷ்ணன் பாத்திரம் நல்ல ஒரு சேர்க்கை, விசே அழகாக அவர் உதவியதற்கு ஒரு நன்றி 🙂

த்ரிஷாவின் நிலை எப்பவும் போல் ஒரு திருமணமான பெண்ணுக்கு ஏற்படும் தர்மசங்கடமான நிலை.  பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண் காதலுனுக்காக காத்திருக்க முடியாமல் சமூகமும், குடும்பமும் நிர்பந்தத்தை ஏற்படுத்தும். உயிர் காதல் எனினும் இன்னொருவனுக்குக் கழுத்தை நீட்ட வேண்டிய கட்டாயம். ஆனாலும் அதில் முடிந்த வரை உண்மையாக இருப்பவராக வருகிறார் த்ரிஷா. மிகவும் நன்றாக நடித்திருந்தாலும் அவர் நிலையில் உள்ள துன்பங்களின் வெவ்வேறு பரிணாமத்தை அவர் நடிப்பில் காட்டவில்லை. நடிக்க நிறைய வாய்ப்பிருந்தும் அபியும் நானும் படத்தில் கோட்டை விட்டது போல் இதிலும் அவ்வாறே. அது இயக்குநரின் பாத்திரப் படைப்பில் உள்ள தவறா என்று தெரியவில்லை. சின்மயியின் டப்பிங்கிற்கு தனி மென்ஷன். அருமையாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி அவர் பாத்திரத்தையும் படத்தையுமே தாங்கி உயரத்துக்கு எடுத்து செல்கிறார். விஜய் சேதுபதி மட்டும் இல்லை என்றால் இந்த படத்தின் திரைக்கதை, ஆக்கத்துக்கு இது அட்டர் ப்ளாப்பாகி இருக்கும். நாயகன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.  காதலியை நினைத்து உருகி சூப் பாயாக உள்ளார். அதனால் அவருக்கு அனுதாபம் தானாக மக்களிடமிருந்து வந்துவிடும். ஆனால் அதையும் தாண்டி அவர் மேல் நமக்கு ஈடுபாடு கொள்ள வைப்பது அவரின் முப்பரிமாண நடிப்பு! எல்லா படங்களிலுமே ஒரே மாதிரி நடிப்பது போலத் தோன்றும் ஆனால் எப்படியாவது மாற்றத்தைக் கொண்டு வந்து எந்த ஒரு பாத்திரத்துக்கும் அதிக மதிப்பைப் பெற்று தந்து விடுகிறார் விஜய் சேதுபதி. த்ரிஷா விசே பகுதிகளில் எளிதாக த்ரிஷாவை மிஞ்சி நடிக்கிறார் விசே.

இளைய ராஜா இசை படம் முழுதும் வியாபித்து இருப்பதால் கோவிந்த் மேனன் இசை அவ்வளவாக கவனிக்கப்படலை. இசை பின்னணி & பாடல்கள் சுமார் ரகம் தான். படத்தொகுப்பில் கோவிந்தராஜ் சொதப்பி இருக்கார். இன்னும் நன்றாக செதுக்கி இருக்கலாம். ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் நன்றாக செய்திருக்கிறார். தொண்ணூறுகளின் காட்சிகளும் தற்போதைய காட்சிகளும் சரியான முறையில் காட்டப்படுவதற்குக் கலை பொறுப்பாளர் பாராட்டைப் பெறுகிறார்.

புகைப்படக் கலைஞன் என்பதிலேயே அவர் தருணங்களை மனத்தில் பதிய வைத்து வாழ்பவர் என்கிற குறியீட்டைக் காண்கிறோம். அதே மாதிரி பெட்டியில் சேமித்து வைத்தப் பழைய நினைவுகளின் பொக்கிஷங்களை காதலியிடம் பகிரும்போது காதலின் அழுத்தத்தைக் காண வைக்கிறார் இயக்குநர். பகுதிகளில் அருமையாகவும் பகுதிகளில் சுமாராகவும் உள்ள ஒரு படம். விஜய் சேதுபதி த்ரிஷாவிற்காக பார்க்கலாம். Nostalgia படம்.

செக்கச் சிவந்த வானம் – திரை விமர்சனம்

மணி ரத்னம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பின் மக்களுக்குப் பிடிக்கும் வகையில் ஜனரஞ்சகமான ஒரு படத்தைத் தந்துள்ளார். எத்தனையோ டான் கதைகளை பார்த்துவிட்டோம் ஆனால் இது இயக்குநர் முத்திரை பதிந்த புது முயற்சி. திமுகவில் தலைமை பொறுப்புக்கு வர சண்டை ஏதும் வரவில்லை. ஆனால் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கூட இக்கதையை மணி ரத்னம் புனைந்திருக்கலாம். இது என் யூகம். அதில் ஒரு வசனம் அண்ணா நீ தானே ஆரம்பித்தாய் என்று ஒரு தம்பி பேசும் வசனம் என்னை அப்படி நினைக்கத் தூண்டியது. எதேச்சையான ஒரு வசனமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அப்பா டானிற்குப் பிறகு மூன்று மகன்களிடையே யார் அந்த இடத்துக்கு வருவது என்கிற போட்டியும் மணிக்கு இந்தப் படத்தின் கரு உதிக்கக் காரணமாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது.

பிரகாஷ் ராஜ், ஜெயசுதா பெற்றோர் பாகங்களில் அருமையாக நடித்திருக்கிறார்கள். பண்பட்ட நடிகர்கள், சொன்னதற்கு மேல் செய்து கொடுப்பவர்கள். பாசகாரக் குடும்பத் தலைவனாக, கள்ளச் சந்தை/சமூக விரோத செயல்கள் நடத்துவதில் பெரிய அளவில் கொடிக்கட்டிப் பறக்கிறவராக ஓவர் ஏக்டிங் இல்லாமல் செய்திருக்கிறார். ஜெயசுதா அன்பு மனைவியாக பிற்பாடு மகன்களிடையே சமரசம் செய்து எப்படியாவது குடும்பத்தில் அமைதி நிலவ, தலைமைப் பொறுப்பை ஏற்க நடக்கும் சகோதரப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைபவராக வெகு பாங்காகக் பாத்திரத்தில் பரிமளிக்கிறார். எதிரணி டாணாக தியாகராஜன். நல்ல பொருத்தம்! நடிகர்களை சரியாக பாத்திரங்களுக்குத் தேர்வு செய்து இயக்குவதை எளிதாக்கிக் கொண்டுள்ளார் மணி என்றே சொல்ல வேண்டும்.

தந்தையுடன் கூடவே இருந்து அவர் சொல்வதை எல்லாம் செய்யும் பொறுப்புள்ள முதல் மகனாக அர்விந்த் சாமி, அதே போல பொறுப்புள்ள மூத்த மருமகளாக அர்விந்த் சாமியின் மனைவியாக ஜோதிகா. இரண்டாவது மகனாக துபாயில் ஷேக்குகளுடன் கடத்தல் வியாபாரம் செய்யும் அருண் விஜய், அவர் மனைவியாக சிலோன் தமிழராக ஐஸ்வர்யா ராஜேஷ், மூன்றாவது மகனாக செர்பியாவில் ஆயுதங்கள்/தளவாடங்கள் விற்கும் STR, அவர் காதலியாக பின் மனைவியாகும் டயானா என்று பெரிய நடிகர் பட்டியலைப் படம் தாங்கி நின்றாலும் ஒவ்வொருவர் பாத்திரமும் கவனத்துடன் செதுக்கப்பட்டு ஒன்றுக்கு ஒன்று குறைவில்லாமல் எல்லாருக்கும் சம பங்கு கிடைக்குமாறு செய்ததில் தான் மணி ரத்னம் சிறப்பு மென்ஷன் பெறுகிறார். விஜய் சேதுபதி அர்விந்த் சாமியின் நண்பராக ஓர் இறந்த டானின் மகனாக போலிஸ் இன்ஸ்பெக்டராக இத்தனை பாத்திரங்களுக்கு நடுவிலும் சம பங்குடன் வளைய வருகிறார். என் வழி தனி வழின்னு எல்லார் நடிப்பையும் அசால்டா தன் கேசுவல் நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.

ஒரு சமயம் இது அர்விந்த் சாமி படம், இது STR படம், அட இல்லை அருண் விஜய் படம், இல்லை ஜோ படம், இல்லை கண்டிப்பாக விஜய் சேதுபதி படம் என்று எண்ண வைத்துக் கடைசியில் இது மணி ரத்னம் படம் என்று புரிய வைக்கிறார் இயக்குநர். நடித்த அனைவருமே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

உடைகள் படு கச்சிதம். அருண் விஜய், STR இருவருக்குமே மிக ஸ்டைலிஷான உடைகள். ஜோதிகாவின் படங்களும் அழகு. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரம் தான். ஆனால் அதிலும் முத்திரை பதிக்கிறார். அதிதி ராவ் ஹைதாரியின் பங்கும் சிறியதே ஆனால் அதையும் அழுத்தமானாதாக பதிகிறது அவர் நடிப்பாலும் பாத்திரப் படைப்பாலும்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்து என்று சொல்லவும் வேண்டுமோ! அதுவும் ஐரோப்பியாவிலும் துபாயிலுமான காட்சிகளின் வண்ணக் கலவையும் கழுகுப் பார்வையில் விரியும் காட்சிகளும் அற்புதம். பாடல்கள் முழுதாகப் படத்தில் பயன்படுத்தப் படவில்லை என்றே நினைக்கிறேன். மேலும் பாடல்கள் பின்னணியாக தான் ஒலிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று. ஸ்ரீகர் பிராசாதின் படத்தொகுப்பும் நன்றே. இவ்வளவு பாத்திரங்களை வைத்து சிக்கலில்லாமல் படத்தொகுப்பை செய்து கதையை நேர்த்தியாக நகர்த்தியிருக்கிறார்.

படம் முடியும்போது இவ்வளவு சிக்கல் நிறைந்த ஒரு டான் வாழ்க்கையை ஏன் ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்று தோன்றும். பல சமயங்களில் அது திணிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் அதுவே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது முதல் தலைமுறை டானுக்கு. அடுத்தத் தலைமுறைகளுக்கு அந்தப் பதவியில் கொடுக்கும் ஏராளமான பணமும் செல்வாக்கும் அந்தப் பாதையைத் தொடர தூண்டுதலாக அமைகிறது. போலிஸ் பாத்திரங்களின் பங்களிப்பு வெகு subtle. அதே சமயம் அவர்கள் நல்ல முறையில் காட்டப்படுகின்றன.

என்றுமே திரைக் கதை தான் ராஜா. அதைப் புரிந்து மணி படம் இயக்கியிருப்பது அவருக்கான வெற்றியைக் கொடுத்திருக்கிறது. எத்தனை கதாப் பாத்திரங்கள்! எத்தனை முன்னணி நடிகர்கள்! இவர்கள் அனைவரையும் அருமையாக இயக்கி அனைத்து நடிகர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான பங்களிப்பைப் பெற்று வெற்றிப் படத்தைத் தந்திருக்கும் அவருக்கும் அவர் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

ஜூங்கா – திரை விமர்சனம்

தமிழ் படம் 1, 2, இவற்றிற்கு டஃப் கொடுக்கும் ஒரு நல்ல சபூஃப் ஜூங்கா! நானும் ரவுடி தான் படத்தில் விசே தான் ஒரு ரவுடி என்று அலப்பறை பண்ணுவார். ஆனா நயன் சிம்பிளா நீங்க ரௌடி இல்லை ஒரு பிராட் என்று சொல்லிவிடுவார். அந்த மாதிரி இந்தப் படத்திலும் இவர் டான் என்று சொல்லிக் கொண்டாலும் காமெடி டானாக இருக்கிறார். சீரியஸா எடுத்துக்கற படம் இல்லை இது. லாஜிக் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம். ஆரம்பமே சூப்பர் ஸ்டாருக்குக் கொடுக்கற பில்டப் மாதிரி தொடங்குது, இவர் பாத்திரமும் முதலில் கண்டக்டர் தான்! அரங்கத்திலும் ஆரவாரம் அதிகம். விசில் பறக்குது!

கஜினி படத்தில் அசின் அவர் அப்பா டிராவலஸ் நடத்தி நொடித்துப் போய் கார்களை விற்றதால் மூணு அம்பாசிடர் கார் வாங்கின பிறகு தான் கல்யாணம் பணன்னும்னு சொல்றா மாதிரி விசேயும் அவர் அப்பாவும் தாத்தாவும் டானாக இருந்தும் வரவுக்கு மேல் செலவு செய்து ஒரு செட்டியாரிடம் அநியாயமாக தொலைத்தத் தன் அம்மாவின் சீதன சொத்தான திரை அரங்கை மீட்க சபதம் எடுத்து டானாக மாறுகிறார். அதற்காக சென்னை வந்து கம்மி ரேட்டில் கொலை, கடத்தல் எல்லாம் செய்கிறார். அதனால் தொழிலில் இருக்கும் மத்த டான்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். இதில் ராதா ரவி சின்ன வேடத்தில் பெருங்காய டப்பா டான் சங்கத் தலைவராக வந்து போகிறார். அந்தக் காட்சிகள் எல்லாம் நல்ல ஸ்பூஃப்!

விசே கெட்டப் காமெடியா இருக்கு. யார் இதை அவருக்கு செய்து கொடுத்து நல்லா இருக்குன்னு சொன்னதோ தெரியலை. ஆனா வடிவேலு மாதிரி காமெடி செய்யனும்னு நினச்சு இந்த கெட்டப்பை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். மடோன்னா செபாஸ்டியன் சில சீன்களிலேயே வந்து கழட்டி விடப்படுகிறார் (literally). கஞ்சப்பிசினாரி டான் விசே, அதனால் ஒரு டூயட் மட்டும் பாடிவிட்டு செலவு வைக்கும் காதலியை கழற்றி விடுகிறார். அடுத்து சாயிஷா. இவர் வெள்ளைத்தோல் வடிவழகி!  செட்டியாரின் (சுரேஷ் மேனன்) செல்ல மகள். நன்றாக நடனம் ஆடுகிறார். குறை சொல்ல ஒன்றும் இல்லை. செட்டியார் விசேவிடம் திரை அரங்கை தவணை முறையில் விற்க மறுக்க விசே உடனே பேரிசில் இருக்கும் மகளை கடத்தி செட்டியாரை பணிய வைக்க பேரிஸ் போகிறார். எந்தப் பேரிசுக்கு முதலில் போகிறார் என்பாதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்!

அவர் பேரிஸ் போகும்வரை செய்யும் காமெடிகள் சிரிப்பை வரவழைக்கின்றன, ஆனால் கஞ்சத்தனமான டானாக சென்னையில் செய்தவைகளையெல்லாம் மொழி தெரியாமல் யோகிபாபுவுடன் பாரிசில் தொடர்வது அபத்தமாக உள்ளது. ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரி நடித்து வந்த அவர் இப்படத்தில் செய்யும் சேட்டைகள் ஒரு மாற்றாக நன்றாக அமைந்திருக்கிறது. நன்றாக செய்திருக்கிறார். ஆனால் இயக்குநர் பாரிஸ் சென்ற பிறகு திரைக் கதையில் கோட்டை விட்டுவிட்டது படத்தின் சறுக்கல்.

படிக்காத, ஏழை, கஞ்சனான சுமார் மூஞ்சி குமார் டான் ஹீரோவுக்கும் பணத்திலே புரண்டு வளர்ந்த, படித்த, அழகி ஹீரோயினுக்கும் காதல் வருவதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்பது தமிழ் சினிமா பார்க்கும் அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும். அதே போல இடாலியன் மாஃபியா கண்ணில் மண்ணைத் தூவி காதலியைக் காப்பாற்றி, பிரெஞ்ச் போலிசிடமிருந்தும் செம கார் சேசிங் செய்து தப்பிக்கும் ஹீரோ நமக்கும் புதுசும் இல்லை. எப்படியோ ஹீரோ காதலியையும் கைப்பற்றி தன் சபதத்தையும் நிறைவேற்றி விடுவார்.

இவருக்கு அம்மாவாக சரண்யா. இவர் ப்ளாஷ் பேக்கை சொல்லி இவர் டான் குடும்பம் என்பதை தெரிவிக்கிறார். அதில் டாடா சுமோவை பிரபலப்படுத்தியதே இவரின் அப்பாவும் தாத்தாவும் தான் போன்ற வசனங்கள் நல்ல நகைச்சுவை. அவரை விட அவர் மாமியாராக விசேவின் டான் பாட்டியாக வருபவர் பின்னி பெடலெடுக்கிறார். விசே தோழனாக யோகி பாபு படத்தின் பலம்.

பாடல்கள் எல்லாம் ஏன் வருது எதுக்கு வருதுன்னு தெரியலை ஆனா இயக்குநர் சொன்ன நேரத்தில் கரெக்டா வருது. விபின் சித்தார்த்தின் பாடல்கள் ரொம்ப சுமார். பின்னணி இசையை நான் கவனிக்கவேயில்லை. அது பிளஸ்சா மைனஸா தெரியலை! டட்லியின் ஒளிப்பதிவு வெளிநாட்டு லொகேஷன்களில் அருமை!

முன்னெல்லாம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது பெரிய விஷயம், அதனால் படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டுக் காட்சிகளைக் கண்டு களிக்க நிறைய பேர் அப்படங்களுக்கு செல்வார்கள். அது மாதிரி இந்தப் படமும் பிரான்ஸ் ச்விட்சர்லேந்து என்று படமக்கப்பட்டிருப்பதால் கண்ணுக்குக் குளிர்ச்சியா காட்சிகளை கண்டு களித்துவிட்டு வரலாம்.

பிரெஞ்சு போலீசுக்கே அல்வா கொடுத்த விசே எதற்காக தமிழக போலீசில் மாட்டினார்? முதல் சீனே சிறைச்சாலை தான், ஆனால் அது கடைசி சீன் வரை புரியவில்லை. அவ்வளவு சிறப்பான திரைக்கதை! கோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களில் சில பகுதிகள் மிகச் சிறப்பாகவும் சில பகுதிகள் மிகத் தொய்வாகவும் இருக்கும். இந்தப் படத்தில் முன் பாதி நகைச்சுவை துணுக்குத் தோரணம், பின் பாதியில் கதை இல்லை. ஆனால் திரை அரங்கில் படத்துக்கு செம வரவேற்பு உள்ளது!

 

 

ஆரஞ்சு மிட்டாய் – திரை விமர்சனம்

orange-mittai-movie-poster_143469445800

விஜய் சேதுபதியும் ரமேஷ் திலக்கும் நல்லதொரு நடிப்பாற்றலைக் காட்டியிருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய். சூது கவ்வும், காக்கா முட்டை இவைகளில் சிறு பாத்திரங்களில் வந்தவர் நடிகர் ரமேஷ் திலக். ஆனால் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் வந்து மனத்தில் நிற்கிறார். விஜய் சேதுபதியும் வயதானப் பாத்திரத்தில் வெகு இயல்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.

இயக்கம், எழுத்து, ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் பிஜு விஸ்வநாத். இந்த மாதிரி ஒரு கதையும், திரையாக்கமும் தமிழ் சினிமா சமீபத்தில் பார்த்ததில்லை. படம் ஓடும் நேரம் ஒரு மணி 41நிமிடங்கள் தான். சமூகத்தில் தனிமையை எதிர்கொள்ள முடியாத முதியவர்கள் படும் வேதனையை கொஞ்சம் நகைச்சுவையுடன் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. படத்தின் கடைசி 15நிமிடங்கள் சொல்ல வந்த மெஸ்சேஜை சொல்கிறது. அதன் முன் வரும் ஒரு மணி நேரம், சொச்ச நிமிடங்களின் போது கதை மெதுவாகத் தான் செல்கிறது 108 ஆம்புலன்சில் பயணித்தும்!

மசாலா எதுவும் இல்லாத படம். குத்து டேன்ஸ், அடி தடை சண்டை, டாஸ்மாக் காட்சிகள், frameக்கு frame புகை மண்டலமாக சிகரெட் பிடிக்கும் ஹீரோ, இவை எதுவுமே படத்தில் இல்லை. இதை எல்லாம் ஓவர்டோசில் பார்த்துப் பழகிவிட்டதாலோ என்னவோ கொஞ்சமும் மெலோட்ராமா இல்லாமல் நகரும் கதை சற்றே சப்பென்று இருக்கிறது. திரைக் கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பிஜு விஸ்வனாத்தே எழுதி இயக்கும் போது இன்னொருவரின் பார்வையில் எடிட்டிங் செய்யப்பட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அவரின் ஒளிப்பதிவு A1. பாபநாசம் திருநெல்வேலி பகுதியில் படமாக்கப்பட்டிருக்கு. கிராமப்புற அழகு படம் முழுதும் பரவியிருக்கிறது. பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசை அமைத்த ஜஸ்டின் பிரபாகரன் தான் இப்படத்தின் இசை அமைப்பாளர். பின்னணி இசை சுமார். பாடல்கள் சுமார். தீராதே ஆசைகள் பாடல் நன்றாக உள்ளது.

படத்தில் சில வசனங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. கதாப்பாத்திரத்தின் தன்மையை வசனங்கள் நச்சென்று சொல்லிவிடுகிறது. வசனகர்த்தா விஜய் சேதுபதிக்குப் பாராட்டுகள். இப்படம் அவரின் முதல் தயாரிப்பும் கூட. வித்தியாசாமான கதையை தேர்ந்தெடுத்து முதல் முயற்சியிலேயே நல்ல பெயர் வாங்குகிறார். சிறப்பான பாராட்டுதல்களை ரசிகர்கள் அனைவரிடம் இருந்தும் பெற வாழ்த்துகிறேன்.

31-1438317271-orange-mittai-1