சர்கார் – திரை விமர்சனம்

என் உறவினர் ஒருவருக்கு அந்தக் காலத்தில் திருமண நிச்சயதார்த்தத்துக்குப் பிள்ளை வீட்டில் கட்டம் கட்டமா போட்ட பட்டுப் புடைவை வாங்கியிருந்தாங்க. ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு நிறம். என் அக்கா முறை உறவினருக்கு அந்தப் புடைவையைப் பார்த்து அழுகையே வந்துவிட்டது. அவ்வளவு மோசமாக இருந்தது புடைவை. என் பெரியம்மா ஏண்டி அழற உங்க மாமனார் மாமியாருக்கு எல்லா நிறத்திலேயும் உனக்குப் புடைவை எடுக்கனும்னு ஆசையா இருந்திருக்கும் அவ்வளவு புடைவை வாங்க முடியுமா அதான் எல்லா நிறத்தயையும் ஒரே புடைவைல போட்டு வாங்கியிருக்காங்க. போய் கட்டிக்கிட்டு வான்னு சிம்பிளா சொல்லிட்டாங்க. அந்த மாதிர் ஏ.ஆர்.முருகதாசுக்கு எல்லா பிரச்சினைகளுக்கும் படங்கள் எடுக்கனும்னு ஆசை போலிருக்கு ஆனா அவ்வளவு படம் எடுக்க முடியுமான்னு சந்தேகம் வந்திருக்கும். அதான் எல்லா பிரச்சினையையும் ஒரே படத்துல வெச்சு ரசிகர்களை காவு வாங்கிட்டாரு.

ஆனா சும்மா சொல்லக் கூடாது இந்தப் படத்திலேயும் ஒரு கதை இருக்குன்னு கண்டுபிடிச்சு அது வருண் ராஜெந்திரனோட கருன்னு தீர்மானிச்சு அவருக்கு முப்பது லட்ச ரூபாய் இழப்பீடும் வாங்கிக் கொடுத்த பாக்கியராஜ் சிம்ப்ளி கிரேட்! ஆனா பாக்கியராஜ் கில்லாடி. முருகதாஸ் படத்தைப் போட்டு காட்டறேன் போட்டு காட்டறேன்னு பல தடவை சொன்ன போது கூட பார்க்க மறுத்துட்டார் பாருங்க, நீ எப்படி எடுத்திருப்பேன்னு தெரியும்னு சொல்லிட்டாரு. அங்க நிற்கிறார் ஜாம்பவான்!

இந்தப் படத்துல முக்கியமான ஒரு விஷயம் நாம தெரிஞ்சுக்கறது சட்ட நுணுக்கமான 49P. அதாவது நம் பெயரில் யாராவது கள்ள வோட்டு போட்டுட்டா அதை நாம் நிரூபிச்சா வாக்குச் சாவடியிலேயே நமக்கு அவர்கள் மறுபடியும் வாக்களிக்கும் உரிமையை தர வேண்டும். நமக்கு நோட்டா பத்தித் தெரியும், அதாவது எந்த வேட்பாளரும் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் 49 O விதிப்படி None of the above என்று வாக்களிக்கலாம். 49P பற்றி இந்தப் படத்தின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

சுந்தர் பிச்சை Google நிறுவனத்தின் CEO. அவருக்கும் விஜய் பாத்திரத்துக்கும் துளி சம்பந்தம் இல்லை. சுந்தர் பிச்சை அமெரிக்காவில் மிகப் பெரிய கம்ப்யுடர் நிறுவனத் தலைவர், அந்த அளவு அந்தத் துறையில் பெரிய ஆள். இந்தப் படத்தில் விஜய் வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியர் பெரிய பணக்காரர், அவர் பாத்திரத்துக்கு வித்தியாசத்தைக் காட்ட முனைந்து கம்பியுடர் நிறுவனத்தின் தலைவர் என்கிறார் இயக்குநர், அவ்வளவு தான். கம்பியுடர் தொடர்பா அவர் இந்தப் படத்தில் வேறு எதுவும் செய்யவில்லை. அவர் வெளிநாட்டில் ஒரு பெரிய ஹோட்டல் நடத்தியிருக்கலாம், விமான நிறுவனம் நடத்தியிருக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். அவர் சென்னையில் வாக்களிக்கத் தனி விமானத்தில் பறந்து வரும் அளவுக்கு, சுத்தி வெள்ளைக்காரர்களை எடுபிடி வேலைக்கு வைத்துக் கொள்ளும் அளவுக்குப் பணக்காரர். அவ்வளவு தான். Techie விஷயம் ஒன்றுமே இல்லை. சாதா ட்விட்டர் பேஸ்புக் பயன்படுத்திக் கதையில் கூட்டத்தைச் சேர்க்கிறார். பெரும் பணக்காராரக இருந்தும் ஏழைகள் குடியிருப்பில் வெள்ளையடித்து அட்மின் ஆபிஸ் போடுகிறார்.

எப்பவுமே படத்தின் ஹீரோவின் பலம் வில்லனின் பலத்தைப் பொறுத்தது. அரிச்சுவடி பாடம் இது. மகா சொத்தையான வில்லன் பழ. கருப்பையா, ஒரு கட்சித் தலைவர் முதலமைச்சர் வேட்பாளர். காமெடி டிராக் இல்லாததால் காமெடி பீசாக ராதா ரவி, பழ கருப்பையாவின் அல்லக்கை, பெயர் இரண்டு. (அவ்வளவு imaginative, அவர் தான் கட்சியில் நெ2வாம். மாறன் சகோதரர்களே ஸ்டாலினை கேலி பண்ண அனுமதித்து இருக்கிறார்களே. மேக்கப், லேசா கோண வாய் எல்லாம் ஸ்டாலினை குறிக்கின்றன. அவ்வளவு கோபமா ஸ்டாலின் மேல் அவர்களுக்கு,). இவர்களை ரிமோட்டில் இருந்து வழி நடத்துபவர் வரலட்சுமி என்னும் பாப்பா என்னும் கோமளவல்லி. கேனடாவில் வாழ்ந்து கொண்டு இங்கே அப்பாவுக்கு கட்சி நடத்துவதற்கும் ஆட்சி செய்வதற்கும் நயவஞ்சக திட்டம் தீட்டுவதற்கும் யோசனைகளை சொல்லுபவர். கதைப் பஞ்சம் கதைப் பஞ்சம் என்று கேள்விப்பட்டிருக்கேன், இந்தப் படத்தில் காட்சி அமைப்பதில் கூட கற்பனை வறட்சி 😦

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தேவையில்லை. விஜயின் நடிப்பு, அவர் நேரம், அவர் உழைப்பு அனைத்தும் அனாவசியமாக வீணடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு அல்லது கதையை (?) கேட்டுவிட்டோ ரஹ்மான் ஸ்டூடியோவை விட்டே ஓடிவிட்டார் போலிருக்கிறது. ஒரு பாடலும் நன்றாக இல்லை. ரீ ரிகார்டிங், அது எங்கோ ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கும் என்கிற அளவில் உள்ளது. சண்டைக் காட்சிகள் நன்றாக இருக்குன்னு சொல்லலாம் ஆனால் கொஞ்சமாவது நம்பும்படியா இருக்க வேண்டாமா? 27 பேரை ஒத்தை ஆளா நின்று அடிக்கிறார் விஜய். அவனவன் கொடாலியோட வரான் இவர் ஸ்வைங் ஸ்வைங்குன்னு மயிரிழையில் தப்பித்து எல்லாரையும் சகட்டு மேனிக்குப் போட்டுத் தள்ளிவிடுகிறார். அவருடைய நடனம் கூட இந்தப் படத்தில் எடுபடவில்லை. அழுகையா வருது.

ஹீரோயின் பத்தியும் சொல்லணும் இல்ல? திருவிழாவில் தொலைஞ்ச பிள்ளையாட்டம் திரு திருன்னு முழித்துக் கொண்டு விஜய் பின்னாடியே சுத்துகிறார். நடிகையர் திலகமாக வாழ்ந்த கீர்த்திக்கு இந்த நிலைமை வர வேண்டாம்.

கூடங்குளம் பிரச்சினையிலிருந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் இருந்து, மீனவர் பிரச்சினை, X Y Z என்று ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு பிரச்சினை என்று சொல்லி அனைத்துக்கும் நடக்கும் ஆட்சி தீர்வு கொடுக்காது என்று விஜயே களத்தில் இறங்கி தீர்வு காண முயலும்போது ஏற்படும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவதாக காட்டியுள்ளார் முருகதாஸ்.

திரைக் கதை சரியில்லாததால் அவர் உருக்கமாக நடிப்பதும் எடுபடவில்லை ஆக்ரோஷமாக நடிப்பதும் எடுபடவில்லை. கடைசி மூணு மணி நேரத்துல அவர் பேஸ்புக்ல போடற விடியோனால எல்லாரும் போய் வாக்களிக்கறது எல்லாம் ஷ்ஷ்ப்பா! அதைவிட ஆயாசம் இவர் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவது தான். அதில் என்ன தப்புன்னு கேக்கறீங்களா? இதெல்லாம் நடப்பது பதினைந்தே நாட்களில்.

Better luck next time. நான் எனக்கு சொல்லிக்கிட்டேன்.

மெர்சல் – திரை விமர்சனம்

அட்லீயும் விஜயும் சேர்த்து கலக்கியிருக்கும் புது ரோஸ்மில்க். பழைய ரோஸ் எஸ்சென்சை புதிய பாலில் கலக்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனா ரோஸ்மில்க் சுவை பிடித்தோருக்கு அது ரோஸ்மில்காக இருந்தா போதும். அதே மாதிரி விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படம் பழைய கதையாக இருந்தாலும் மூன்று விஜய்கள் மிகவும் நன்றாக செய்திருப்பதால் நிச்சயமாக பிடிக்கும்.

விஜயின் வசிகரிக்கும் தன்மை இப்படத்தில் இன்னும் அதிகரித்துள்ளது. மூன்று நாயகிகளும் சரியான தேர்வு. அதனால் ஒவ்வொரு விஜய்யும் தனித்து மிளிர்கின்றனர். திரையில் தோன்றும் முதல் நாயகி காஜல் அகர்வாலாக இருந்தாலும் அடுத்து வரும் சமந்தா அவரை மிஞ்சுகிறார். கடைசியில் வரும் நித்யா மேனன் மற்றவர்களை தூக்கி சாப்பிட்டு விடுகிறார். அப்பா விஜய் ‘தளபதி’ பாத்திரத்தில் நன்றாக பொருந்தி நடித்திருக்கிறார்.

பல படங்களில் இருந்து பல சீன்களை அட்லி உருவியிருந்தாலும் – உதாரணம், கை விலங்கு மாறும் சீன் ஒரு கொரியன் படம், உதவும் குணம் கொண்ட ஒரு விஜயை ஏமாற்றி வெளியே அழைத்து வரும் சீன் நாயகன், முழுக் கதை கமலின் அபூர்வ சகோதரர்களின் தழுவல். மனோரமாவுக்குப் பதிலாக கோவை சரளா, {அந்தப் படத்திலாவது மனோரமாவுக்கு எப்படி ஒரு கமலை வளர்க்கும் வாய்ப்பு வருகிறது என்று தெரிகிறது, இதில் கோவை சரளாவுக்கு எப்படி ஒரு விஜய் கிடைத்தார் என்று சரியாக புரியவில்லை. ஒரு ஊகமாகப் புரிந்து கொள்ளலாம்.} ஸ்ரீவித்யாவின் பாத்திரத்துக்கு நித்யா மேனன். அதே அழகிய பெரிய கண்கள் + அதே சாயல். கௌதமி பாத்திரத்துக்கு சமந்தா. அதே அழகு, இளமை, மிடுக்கு. அந்தப் படத்தில் குள்ள கமலின் காதல் ஒரு தலைக் காதல். இதிலும் கொலை செய்யும் விஜயின் காதல் சங்கடமான காதல் தான் ஏனென்றால் கொலைகள் செய்யும் விஜய் கடைசியில் சிறைத் தண்டனை பெறுவாராயின் அந்தக் காதலி காத்திருக்க வேண்டும். அவர் தான் காஜல்.

ஒரு விஜய் மருத்துவர், வெறும் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்க்கும் நன்மனிதர். இன்னொரு விஜய் மேஜிக் செய்வதில் வித்தகர். டேவிட் காப்பர்பீல்ட் அளவு கை தேர்ந்த மந்திரவாதி. ஆனால் இரண்டு விஜய்களுமே சண்டை போடுவதில் சூரப் புலிகள். அபூர்வ சகோதரர்களில் நான்கு வில்லன்கள். இதில் முக்கிய வில்லன் ஒருவர் தான், எஸ்.ஜே.சூர்யா. உப வில்லன் ஹரீஷ் பேராடி. அபூர்வ சகோதரர்களில் அப்பு அம்மாவிடம் தான் குள்ளமாக பிறந்ததின் காரணத்தை கண்டறிந்த பிறகு வரிசையாக திட்டமிட்டு அனைத்து வில்லன்களையும் கொல்வார். வெகு சுவாரசியமாக இருக்கும். இதில் உப வில்லனை கொல்லும் திரைக் கதை பகுதி மட்டும் நன்று. ஆனால் தன் பெற்றோர் சாவுக்குக் காரணமான வில்லன்களை பற்றி இளைய விஜய் {மேஜிக்} எப்பொழுது தெரிந்து கொள்கிறார், எப்படி திட்டமிட்டு கொல்கிறார் போன்றவை நம் யூகத்துக்கே விடப்பட்டிருக்கு. வடிவேலு சிறுவனாக இருந்த போது அப்பா விஜயுடன் இருந்தவர். அவர் தான் இரண்டு விஜய்களுடன் அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகும் இருக்கிறார். அவர் தான் தம்பி விஜயிடம் அவர் பெற்றோருக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி சொல்லியிருக்கணும், அண்ணன் விஜயிடம் ஏன் அதெல்லாம் சொல்லவில்லை என்று தெரியவில்லை. சங்கிலி முருகன் இளைய விஜயை எடுத்து வளர்ப்பது புரிகிறது. மூத்த விஜய் கோவை சரளாவிடம் எப்படி வந்தார் என்று புரியவில்லை.

சத்தியராஜ் போலிஸ் அதிகாரி. ஒப்புக்கு சப்பாணி பாத்திரம். அவருக்குத் துணை சத்யன்.  {நீ என்ன வேலை செய்யற? அப்பாவுக்கு உதவியா இருக்கேன். அப்பா என்ன பண்றார், சும்மா தான் இருக்கார்.} சத்தியராஜ் இளைய விஜயிடம் ஒரு வசனம் சொல்லுவார், ஆக நீயா தான் வந்து எங்கிட்ட மாட்டியிருக்க, நாங்க உன்னை பிடிக்கலை என்று. விஜய் ஏன் போலீசிடம் தானாக வந்து மாட்டிக் கொண்டு பின் தப்பித்து செல்ல வேண்டும் என்று புரியவில்லை. எ.ஆர்.ரஹ்மான் பாடல்களும் சோபிக்கவில்லை {ஆளபோறான் தமிழன் பாடல் தவிர்த்து}, பின்னணி இசையும் வெகு சுமார்.

ஆனால் கடைசியில் மருத்துவத் துறை பற்றி அட்லி கொடுக்கும் மெச்செஜ் இத்தனை அளப்பரைகளையும் தாங்க வைத்துவிடுகிறது. மருத்துவத் தொழிலில் இருப்போர் நமது நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவர்கள். அவர்கள் நம்மை ஏமாற்றி விடுவது மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் என்பதை நச்சென்று மனத்தில் பதிய வைக்கிறார். பணத்திற்காக மருத்துவர்கள் உயிரை துச்சமாக மதிப்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அதை உணர்த்தும் கதைப் பகுதிகள், வசனங்கள் அழுத்தமாகவும் உருக்கமாகவும் இருக்கின்றன.

ஜிஎஸ்டி பத்தி ஏன் இவ்வளவு கலாட்டா என்று தெரியவில்லை. ஒரு மருத்துவராக அந்தக் கதாபாத்திரம் சொல்லும் கருத்து அது. அவர் சொல்லும் புள்ளி விவரம் தவறாக இருக்கு எனினும் அது ஒரு பிளோவில் அவர் சொல்கிறார் என்று விட்டுவிட வேண்டும்.  இன்று கமலா திரை அரங்கில் மதிய ஆட்டத்தில் எந்த வசனமும் எடுக்கப்படவில்லை.