புலி – திரை விமர்சனம்

puli

இது முழுக்க முழுக்க பேண்டசி படம். விஜய் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அம்புலிமாமா இதழ்களில் வரும் கதைகள் போல் ஒரு கதை புலி. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி மந்திரவாதியின் உயிர் ஒரு கிளியினுள் இருக்கும். அதைக் கொன்று அசகாய சூரனான கதையின் நாயகன் நாயகியை மந்திரவாதியின் பிடியில் இருந்து விடுவித்து மணந்து கொள்வான். படிக்க ஜாலியா இருக்கும் அந்தக் காலத்தில். கதாநாயகனுக்கு உதவ பேசும் விலங்குகள், வழிகாட்டும் பறவைகள் என்று கதையில் வரும். அதே பார்முலா தான் இப்படத்திலும் சிம்பு தேவன் கையாண்டிருக்கிறார்.

ஸ்ரீதேவி இடைவேளைக்குப் பிறகு தான் வருகிறார். சிறப்பாகவே செய்திருக்கிறார். டிரெயிலரில் பார்த்ததை விட படத்தில் நன்றாக உள்ளார். உடைகளும், அவரின் அனுபவப்பட்ட நடிப்பும் வெகு நேர்த்தி. ஸ்ருதி ஹாசன் குரல் காதை ரொம்பப் பதம் பார்க்கிறது. அவருக்கு வேறு யாராவது டப்பிங் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதி இருவருமே வெறும் டூயட் பாடவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். இருவர் பெர்பார்மன்சும் சாதா. சுதீப் வில்லன். நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் அவரின் வில்லத்தனம் முதல் பாதியில் கொஞ்சமே தெரிகிறது. கிளைமேக்சில் கொஞ்சம் வெளிப்படுகிறது. அதனால் அவரின் பங்களிப்பு பெரிதாக சோபிக்கவில்லை.

கதையில் விஜய்க்கு நண்பர்கள்/உதவியாளர்களாக தம்பி ராமையாவும், சத்யனும் வருகிறார்கள். இவர்களுக்குப் பதிலாக வேறு இருவரை போட்டிருக்க வேண்டும். படம் முழுக்க இவர்கள் தொடர்ந்து வருவது மேலும் எரிச்சலைக் கூட்டுகிறது.

நடனம் – ராஜூ சுந்தரம், கலை – டி.முத்துராஜ், ஒளிப்பதிவு – நடராஜன் சுப்பிரமணியன், எடிடிங் – ஸ்ரீகர் பிரசாத், நான்குமே நன்றாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் பாடல்களும் மோசம். டிஎஸ்பி நல்ல வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறார். கம்பியுடர் கிராபிக்ஸ் நன்றாக உள்ளது.

விஜயின் நடிப்பில் மாற்றம் ஏதும் இல்லை. ஒரே மாதிரி செய்வதால் சமயங்களில் அலுப்பு தட்டுகிறது. அரசியல் நெடி வசனங்கள் குறிப்பிட்டு சொல்லும் அளவு உள்ளன, முக்கியமாக படம் முடிவில். இவரும் அரசியலில் குதிப்பதாக இருந்து சினிமாவை ஒரு பிளேட்பார்மாக பயன்படுத்துகிறாரா என்று தெரியவில்லை.

ரொம்ப எதிர்பார்ப்போடு போனால் மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும். படம் வேஸ்ட் என்று நினைத்துப் போனால், பரவாயில்லையே நன்றாகத் தானே இருக்கிறது என்று எண்ண வைக்கும் இப்படம்.

puli1

எனக்குள் ஒருவன் – திரை விமர்சனம்

enakuloruvan1

கன்னடத்தில் லூசியா என்ற பெயரில் சக்கை போடு போட்ட படம் தமிழில் எனக்குள் ஒருவனாக வந்துள்ளது. நான் கன்னடப் படம் பார்க்கவில்லை அதனால் ஒப்பீடு பண்ண முடியாது. ஹீரோ சித்தார்த். எந்த நடிகரும் செய்ய விரும்பும் பாத்திரமாக அமைந்த இந்தக் கதையின் நாயகன் ரோல் இவருக்குக் கிடைத்திருக்கிறது. வாய்ப்பை முழுவதுமாகப் பயன் படுத்திக் கொண்டுள்ளார். காவியத் தலைவனில் பாத்திரம் சரியாக அமையாததால் நன்றாக நடித்தும் அதில் அவர் சோபிக்கவில்லை.

இந்தப் படத்தில் அவர் கேரக்டரின் complex தன்மையை புரிந்து கொண்டு ரொம்ப நன்றாக நடித்துள்ளார். இந்தப் பாத்திரத்திற்கும் இதை விட தமிழில் உள்ள இளம் நடிகர்கள் வேறு யாரும் இவ்வளவு சரியாகப் பொருந்தியிருப்பார்களா என்பது சந்தேகமே. சித்தார்த்தின் நடிப்பு உண்மையிலேயே அற்புதம். ஒரு கேரக்டரில் மிகவும் அழகாகவும் வருகிறார். A real heart throb! அவரை கூடுதல் அழகாகக் காட்டிய ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு “ஓ”!

படம் ஒரு ஆர்ட் பில்ம் மாதிரி உள்ளது. சினிமாவை ரொம்ப விரும்பும் மக்கள் தான் இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முயற்சியை பாராட்டுவார்கள். கன்னட ஆடியன்ஸ் சிலாகித்தப் படம், ஆயினும் நம்மூரில் இது எப்படி ஓடும் என்று எனக்குத் தெரியவில்லை. ஓரிடத்தில் எது கனவு எது நிஜம்னே எனக்கு இப்போப் புரியலை என்று சித்தார்த் ஒரு வசனம் பேசுவார். அதற்கு தியேட்டரில் அப்படி ஒரு அப்ளாஸ். (அதாவது ஆடியன்ஸ் படத்தைப் பார்த்து வந்த பீலிங்கை அந்த வசனம் பிரதிபலிக்கிறது என்று கொள்க)

இயக்குநர் பிரசாத் இராமர் மூன்று கதைகளை ஒரே சமயத்தில் parallel ஆக சொல்லி அதில் நம்மை லயிக்கவும் வைத்துத் திறமையாகக் கையாண்டுள்ளார். ஆயினும் ஒரிஜினல் படம் நிச்சயம் இதை விட நன்றாக இருந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. இதில் நிறைய இடங்களில் தொய்வு. இன்னும் வலுவானத் திரைக் கதை படத்திற்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கும். எனக்கென்னவோ கதைக் கருவான “லூசியா”வுக்கு தமிழ் versionல் போதிய முக்கியத்துவம் தரப் படவில்லை என்று தோன்றுகிறது.

யோக் ஜப்பி சிரிப்புப் போலீஸ் மாதிரி ஆகிவிட்டார். அவர் வரும் சீன்கள் எப்படி பட்டவையாக இருந்தாலும் தியேட்டரில் சிரிப்பலை தான். தனி டிராக்காகவோ அல்லது படத்துடன் இழைந்தோ எந்த நகைச்சுவையும் இல்லாதது கொஞ்சம் குறையாகப் படுகிறது.

நாயகி தீபா சந்நிதி, கன்னட நடிகை. நன்றாகச் செய்துள்ளார். அழகு நடிப்பு இரண்டுமே பாஸ் மார்க்கிற்கு மேல்.

இசை சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை super! பாடல்களும் நன்றாக உள்ளன. இரண்டு பாடல்களில் பாடகர் சாய்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை, (ஏண்டி இப்படி – சந்தோஷ் நாராயணன் & குட்டிப்பூச்சி by மாணிக்க விநாயகம்) சுத்தமாக சித்தார்த்துக்குக் கொஞ்சமும் பொருந்தவில்லை. பிரபலமாகவே by சித்தார்த்த் அருமை!

கடைசியில் வரும் ட்விஸ்ட் ஏன் கடைசியில் வருகிறது என்பது ஒரு பெரிய கேள்வி. அதை கதையின் எந்தப் பகுதியிலும் சொல்லியிருக்கலாம், ஆனால் கடைசியில் சொல்வதால் தான் படத்தை இரண்டு மணி இருபத்தைந்து நிமிடங்கள் வரை நீட்டிக்க முடிகிறது.

புதிய முயற்சியை மேற்கொண்ட தயாரிப்பாளர்கள் CV குமார், வருண் மணியன், YNot சஷி, அபினேஷ் இளங்கோவன் ஆகிய நால்வருக்கும் பாராட்டுக்கள். சித்தார்த்தின் உழைப்புக்குக் கூலி கிடைக்குமா என்று தெரியவில்லை.

enakuloruvan

இரண்டாம் உலகம் – திரை விமர்சனம்

irandaamulagam

படம் ஆரம்பிக்கும் முன் வந்த செர்டிபிகேடில் படம் ஓடும் நேரம் 2 மணி 40 நிமிடம் என்றிருந்தது. அதற்குள் ட்விட்டரில் ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்திருந்ததால், ஐயோ இரண்டே முக்கால் மணி நேரமா என்று நினைத்தேன். உண்மையில் நேரம் போனதே தெரியவில்லை 🙂 இரண்டு உலகக் கதைகள். துளிக் கூட confusionஏ இல்லாமல் பயணிக்கிறது திரைக்கதை. The existence of a Parallel Universe is the premise to this story. கதை அம்சத்தோடு கூடிய Fantasy. Hats off to you Selva! புத்திசாலித்தனமாக எடுத்திருக்கிறார் செல்வராகவன். எனக்கு அவரின் படைப்புகள் மேல் தனி ஈர்ப்புக் கிடையாது. 7G ரெயின்போ காலனியோ, ஆயிரத்தில் ஒருவனோ எனக்குப் பிடித்தமானப் படங்கள் இல்லை. ஆனால் இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது. எல்லா இயக்குநர்களும் படம் ஆரம்பிக்கும்போது புதுவிதமானக் கதை என்று தான் விளம்பரப் படுத்துவார்கள், ஆனால் உண்மையிலேயே இதுப் புதுப் பணியாரம் தான்!

ஆர்யாவும் அனுஷ்காவும் பாத்திரங்களை நன்குணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆர்யாவுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள். இலகுவாகச் செய்திருக்கிறார். 6 pack வைத்துள்ளார். அனுஷ்கா படம் முழுக்க அழகாக வருகிறார். நடிப்புக்கும் குறைவில்லை. Computer Graphics படத்தோடு இணைந்திருக்கிறது. சமீபத்தில் வந்தப் படங்களில் குளிர்ச்சியான CGஐ இந்தப் படத்தில் தான் பார்த்தேன். இரண்டாம் உலகில் இயற்கை எழிலோடு CGயும் சேர்ந்து ஒரு மாய உலகத் தோற்றத்தைத் தருகிறது. பிரேசிலிலும் ஜியார்ஜியாவிலும் (வெஸ்டேர்ன் ஏசியா) கடுங்குளிரில் படமாக்கியிருக்கிறார்கள். அற்புதமாக உள்ளது. Cinematography (Ramji) உலகத் தரத்தில் உள்ளது!

இரண்டு ஆர்யா இரண்டு அனுஷ்கா, சில similarities மட்டும் வைத்து கதையை லாவகமாக கையாண்டுள்ளார். Not easy. கதையில் தொய்வே இல்லை. குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். விரசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ, கடுப்படிக்கும் சந்தான நகைச்சுவைக் காட்சிகளோ இல்லை. செல்வா நிறைய research செய்திருக்கிறார், முக்கியமாக இந்த உலகத்தில் வாழும் ஆர்யாவின் தந்தை ஸ்கூட்டரில் வரும் காட்சியும், நாய் வரும் காட்சியும் உள்ளர்த்தம் வாய்ந்தவை.

இரண்டாம் உலகம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இரண்டு இசையமைப்பாளர்கள். பின்னணி இசையும் இரண்டு பாடல்களும் அனிருத், மற்ற பாடல்கள் ஹாரிஸ். பாடல்கள் நன்றாக உள்ளன. ஆனால் பின்னணி இசை தான் படத்தை நல்ல உயரத்துக்கு இட்டுச் செல்கிறது. எனக்கு மேற்கத்திய இசைப் பற்றிய ஞானம் கிடையாது. அதனால் அனிருத் இங்கிருந்து மெட்டெடுத்தார், அங்கிருந்து மெட்டெடுத்தார் என்று இசை அறிஞர்கள் குறை கூறலாம். ஆனால் திரையில் வரும் காட்சிகளுக்குப் பின்னணி இசை பிரமாதமாக உயிரூட்டுகிறது. அவர் வேலையை நன்றாகவே செய்திருக்கிறார். Symphony இசை காதுக்கும் இனிமை!

செல்வா படத்தில் லக்குகாக தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதுவும் ஒரு சூப் சாங் தான், நன்றாக உள்ளது 🙂 படத்தில் வரும் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

இது ஒரு காதல் கதையல்ல, இரு காதல் கதைகள். I am a sucker for love stories and when it is well told how can I not but appreciate and enjoy it! படத்தில் காதல் அரும்பும் போது என் கண்களிலும் சிறு துளி நீர் அரும்பியது. அது செல்வாவுக்குக் கிடைத்த வெற்றி 🙂