வெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்

இரண்டு நகைச்சுவை நடிகர்களை வைத்து ஒரு தொடர் கடத்தல் கொலை மர்ம படத்தை தந்துள்ளார் அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன். நடிகர்கள் விவேக், சார்லி இருவருமே கே.பியின் மாணவர்கள். அவர் பட்டறையில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வகை நடிப்பும் எளிதாக வரும். திரைக்கதை ஆசிரியர்களும்(விவேக் இளங்கோவன், ஷண்முக பாரதி) இயக்குநர் விவேக் இளங்கோவனும் அவர்கள் இருவரையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒரு தரமான அதே சமயம் வித்தியாசமான படத்தை தந்திருக்கிறார்கள்.

99% கதை நடப்பது சியாட்டில், அமெரிக்காவில். மிக சமீபத்தில் ஓய்வுபெற்ற கொலை வழக்குகளை துல்லியமாக துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிக்கும் திறன் உள்ள போலிஸ் அதிகாரியாக விவேக் வருகிறார். மிகைபடாத நடிப்பு. நகைச்சுவை நடிகராக நடிக்கும்போது வரும் உடல்மொழிகள் இன்றி நல்ல ஒரு குணச்சித்திர பாத்திரத்தின் தன்மை புரிந்து நடித்துள்ளார். சுறுசுறுப்பாக வேலை செய்து வந்த அவர் மகன் வீட்டில் போரடித்துக் கொண்டு நடமாடுவது முதல் கடத்தப்பட்ட மகனின் நிலை பற்றி அனுமானித்து உடைந்து அழும் வரை எல்லா உணர்ச்சிகளும் கச்சிதமான வெளிப்பாடு. அவருக்குத் துணை பாத்திரமாக சார்லி. பிள்ளைகளுக்காக அமேரிக்கா செல்லும் பெற்றோர்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே யதார்த்தமாக இருக்கிறது சார்லி, அவர் மனைவி மற்றும் விவேக்கின் பாத்திரப்படைப்புகள்.

அதேபோல சார்லி மகள் (பூஜா தேவரியா) மற்றும் விவேக் மகன் மற்றும் மருமகள் பாத்திரங்களும் இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் உள்ளன. இந்தக்கதையில் ஓர் இழை குழந்தைகளின் பாலியல் வன்முறை தொடர்பாக அமெரிக்க பாத்திரங்களின் வாயிலாக தொடர்ந்து வருகிறது. அதில் சிறு பெண்ணாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு மிக அருமை. மனத்தைப் பிழியும் இழை. அந்த இழை கடைசியில் எப்படி மெயின் கதையோடு ஒட்டுகிறது என்பது நல்ல சஸ்பென்ஸ்.

விவேக் தன் மகன் வீட்டிற்கு வந்த இடத்தில் பக்கத்து வீட்டு பெண் கடத்தப் படுவதும் அந்தப் பகுதி சிறுவனும் கடத்தப் படுவதும் நடக்கிறது. அதைப் பார்த்து துப்பறியும் தன்மை உடலோடு கலந்திருப்பதால் விவேக்கும் அமெரிக்க போலிசுக்கு இணையாக துப்பறிய தொடங்குகிறார். அவர் தனியாக ஒவ்வொரு இடத்துக்கும் செல்லாமல் துணைக்கு தன் மகனின் அலுவலக தோழி பூஜா தேவரியாவின் அப்பாவான சார்லியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ளவும் குற்றவாளியை கண்டுபிடிக்கவும் முயற்சிகள் எடுக்கிறார். இவ்விரு பாத்திரங்களே படம் முழுவதும் தொடர்ந்து வருவதாலும் வசனங்கள் நிறைய இருப்பதாலும் கொஞ்சம் அலுப்புத் தட்டுகிறது. படம் ஓடும் நேரம் இரண்டு மணி தான் என்றாலும் மிக நீண்ட நேரம் போலத் தோன்றுகிறது.

இந்தக் கதை அமெரிக்க படங்களில் அதிகம் காணப்படும் மனோதத்துவ ரீதியான த்ரில்லர் படம். படம் எடுத்திருப்பது அமேரிக்கா வாழ் தமிழர்கள் திகா சேகரன், வருண் குமார், அஜய் சம்பத். அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு இந்தக் கதைக் களம் எளிதாக புரியவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். நமக்கும் ஒன்றும் கஷ்டமில்லை. ஆனால் இந்த மாதிரி ஒரு பாத்திரத்துக்கு இள வயதில் உண்டாகும் கொடுமையான நிகழ்வுகளால் வளர்ந்த பிறகு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி ஆவதும் பழி வாங்க பலரை கொல்வதும் நம்மூர்களில் அவ்வளவாக நடப்பதில்லை.

விவேக்கின் அமெரிக்க மருமகளாக வரும் பெய்ஜ் ஹென்டர்சன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். விவேக்கின் அன்பை பெற அவர் ஆசைப்படுவதும் முதலில் விவேக் அவரை உதாசீனப் படுத்துவதும் பின்பு சார்லியின் அறிவுரையின் பேரில் விவேக் மாறி அன்பை செலுத்த ஆரம்பிக்கத் தொடங்கும் போது வேறு பல நிகழ்வுகளால் உண்டாகும் உணர்ச்சிகளை அவர் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க வாழ் இந்தியர்களே இந்தப் படத்தை எடுத்திருப்பதால் அமெரிக்க வாழ்க்கை பற்றிய தவறான சித்தரிப்பு இல்லாமலும் செயற்கைத் தனம் இல்லாமலும் உள்ளது. ஒளிப்பதிவாளர் ஜெரால்ட் பீட்டர் கண்ணுக்கு விருந்தாக சியாட்டில் நகரத்தை படமாக்கியிருக்கிறார். பாடல்கள் பின்னணியில் ஒலிக்கின்றன. அதில் பொற்றாமரை பாடலில் எஸ்பிபி குரல் தேவ கானமாக ஒலிக்கிறது. பின்னணி இசை த்ரில்லர் படத்துக்கு சரியானதாக உள்ளது. இசை அமைத்திருப்பவர் ராம்கோபால் க்ரிஷ்ணராஜூ.

நல்ல முயற்சி. த்ரில்லர் படம். மெஸ்சேஜ் என்று தனியாக எதுவும் எந்தப் பாத்திரமும் உரைப்பதில்லை. ஆனால் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை பற்றி ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படும் இப்படத்தைப் பார்க்கையில். பெற்றோராக படம் பார்ப்பவர் இருப்பின் குழந்தைகள் வளர்ப்பில் கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உறைக்கும்.

ஆண்டவன் கட்டளை – திரை விமர்சனம்

andavankattalai

முதல் படத்தில் சிக்சர் அடித்துவிட்டுப் பின் வரும் படங்களில் டக் அவுட் ஆவது பல இயக்குநர்களின் சாபம். ஆனால் தொடர் ஹேட்ரிக் அடித்துள்ளார் இயக்குநர் மணிகண்டன். அருள் செழியன், அனுசரணுடன் திரைக்கதை அமைத்து முன் எடுத்த இரு படங்களுக்கும் இப்படத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாமல் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படத்தின் பெயருக்கும் படத்துக்கும் என்ன தொடர்பு என்று தான் படம் முடிந்த பிறகும் புரியவில்லை.

வெற்றிக்கொடி கட்டு படத்தின் எப்படியாவது வெளிநாட்டுக்குப் போய் பணம் சம்பாதிப்பது, ஆனால் முடியாமல் இங்கேயே இருந்து சாதிப்பது தான் இந்தப்படத்தின் ஆரம்பமும். பின்னர் வேறு பாதையில் பயணிக்கிறது கதை. ஆனால் சொல்ல வரும் கசப்பு உண்மையை சர்க்கரைப் பாகில் நனைத்துத் தருகிறார் மணிகண்டன்.  சோகமாக சொல்லியிருக்கக் கூடிய ஒரு கதையை காக்கா முட்டைப் போலவே சுவாரசியமாக, நகைச்சுவைக் கலந்து அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி அமைதியாக தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல இடத்துக்கு முன்னேறி வருகிறார். அலட்டல் இல்லாத, அதே சமயம் பாத்திரத்துக்கேற்ற சிறந்த நடிப்பு அவரின் பிளஸ் பாயின்ட். இந்தப் படத்தில் பிரமாதமாக நடித்துள்ளார். இறுதிச் சுற்று ரித்திகா சிங் கச்சிதமான பங்களிப்பைத் தந்துள்ளார். கார்மேகக் குழலியாக தொலைக் காட்சி ஏங்கராக, விஜய் சேதுபதிக்கு உதவுவதற்காக அவர் முதலில் யோசிப்பதும், பின் உதவப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டு வெளிவர முனையும்போதும் முகத்தில் நல்ல உணர்ச்சி பாவங்கள்.

துணைப் பாத்திரங்களில் வரும் அனைவரும் மனத்தில் நிற்கின்றனர். அது மணிகண்டனின் தனிப் பட்ட வெற்றி. நாடகக் கலைஞர்/ஆசான் நாசர், லண்டனுக்குப் போய் அவதியுற்றுத் திரும்பி வரும் யோகி பாபு, இலங்கை அகதியாக வரும் அரவிந்தன் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர், அதிலும் அரவிந்தனின் நிலை நம் மனத்தில் கழிவிரக்கத்தை உண்டு பண்ணுகிறது. பூஜா தேவார்யாவும் உள்ளார். வக்கீல், வக்கீலின் உதவியாளர், நீதிபதி, பாஸ்போர்ட் அதிகாரி, என ஒவ்வொரு பாத்திரத்தையும் நுணுக்கத்துடன் செதுக்கியுள்ளார் மணிகண்டன்.

இசை K. பாடல்கள் படத்துடன் இணைந்து உறுத்தாமல் இருந்தன. பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது, வசனம் இல்லா இடங்களில் இசை பேசுகிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் நன்று.

வாழ்க்கையின் யதார்த்தத்தை, ஒரு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு சொந்த நாட்டிலேயே புலம் பெயர்வதில் வரும் இன்னல்களை, உண்மையாக இருக்க முயற்சி செய்கையில் பொய் வாழ்வில் வந்தால் அதை அகற்றி வாழ முற்படும் போது வரும் சவால்களையும் நகைச்சுவையுடன் காட்டுகிறார் மணிகண்டன். இன்னும் சிறப்பான படங்களை மென்மேலும் தர வாழ்த்துகள்.

aandavan-kattalai-new-1