செக்கச் சிவந்த வானம் – திரை விமர்சனம்

மணி ரத்னம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பின் மக்களுக்குப் பிடிக்கும் வகையில் ஜனரஞ்சகமான ஒரு படத்தைத் தந்துள்ளார். எத்தனையோ டான் கதைகளை பார்த்துவிட்டோம் ஆனால் இது இயக்குநர் முத்திரை பதிந்த புது முயற்சி. திமுகவில் தலைமை பொறுப்புக்கு வர சண்டை ஏதும் வரவில்லை. ஆனால் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கூட இக்கதையை மணி ரத்னம் புனைந்திருக்கலாம். இது என் யூகம். அதில் ஒரு வசனம் அண்ணா நீ தானே ஆரம்பித்தாய் என்று ஒரு தம்பி பேசும் வசனம் என்னை அப்படி நினைக்கத் தூண்டியது. எதேச்சையான ஒரு வசனமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அப்பா டானிற்குப் பிறகு மூன்று மகன்களிடையே யார் அந்த இடத்துக்கு வருவது என்கிற போட்டியும் மணிக்கு இந்தப் படத்தின் கரு உதிக்கக் காரணமாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது.

பிரகாஷ் ராஜ், ஜெயசுதா பெற்றோர் பாகங்களில் அருமையாக நடித்திருக்கிறார்கள். பண்பட்ட நடிகர்கள், சொன்னதற்கு மேல் செய்து கொடுப்பவர்கள். பாசகாரக் குடும்பத் தலைவனாக, கள்ளச் சந்தை/சமூக விரோத செயல்கள் நடத்துவதில் பெரிய அளவில் கொடிக்கட்டிப் பறக்கிறவராக ஓவர் ஏக்டிங் இல்லாமல் செய்திருக்கிறார். ஜெயசுதா அன்பு மனைவியாக பிற்பாடு மகன்களிடையே சமரசம் செய்து எப்படியாவது குடும்பத்தில் அமைதி நிலவ, தலைமைப் பொறுப்பை ஏற்க நடக்கும் சகோதரப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைபவராக வெகு பாங்காகக் பாத்திரத்தில் பரிமளிக்கிறார். எதிரணி டாணாக தியாகராஜன். நல்ல பொருத்தம்! நடிகர்களை சரியாக பாத்திரங்களுக்குத் தேர்வு செய்து இயக்குவதை எளிதாக்கிக் கொண்டுள்ளார் மணி என்றே சொல்ல வேண்டும்.

தந்தையுடன் கூடவே இருந்து அவர் சொல்வதை எல்லாம் செய்யும் பொறுப்புள்ள முதல் மகனாக அர்விந்த் சாமி, அதே போல பொறுப்புள்ள மூத்த மருமகளாக அர்விந்த் சாமியின் மனைவியாக ஜோதிகா. இரண்டாவது மகனாக துபாயில் ஷேக்குகளுடன் கடத்தல் வியாபாரம் செய்யும் அருண் விஜய், அவர் மனைவியாக சிலோன் தமிழராக ஐஸ்வர்யா ராஜேஷ், மூன்றாவது மகனாக செர்பியாவில் ஆயுதங்கள்/தளவாடங்கள் விற்கும் STR, அவர் காதலியாக பின் மனைவியாகும் டயானா என்று பெரிய நடிகர் பட்டியலைப் படம் தாங்கி நின்றாலும் ஒவ்வொருவர் பாத்திரமும் கவனத்துடன் செதுக்கப்பட்டு ஒன்றுக்கு ஒன்று குறைவில்லாமல் எல்லாருக்கும் சம பங்கு கிடைக்குமாறு செய்ததில் தான் மணி ரத்னம் சிறப்பு மென்ஷன் பெறுகிறார். விஜய் சேதுபதி அர்விந்த் சாமியின் நண்பராக ஓர் இறந்த டானின் மகனாக போலிஸ் இன்ஸ்பெக்டராக இத்தனை பாத்திரங்களுக்கு நடுவிலும் சம பங்குடன் வளைய வருகிறார். என் வழி தனி வழின்னு எல்லார் நடிப்பையும் அசால்டா தன் கேசுவல் நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.

ஒரு சமயம் இது அர்விந்த் சாமி படம், இது STR படம், அட இல்லை அருண் விஜய் படம், இல்லை ஜோ படம், இல்லை கண்டிப்பாக விஜய் சேதுபதி படம் என்று எண்ண வைத்துக் கடைசியில் இது மணி ரத்னம் படம் என்று புரிய வைக்கிறார் இயக்குநர். நடித்த அனைவருமே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

உடைகள் படு கச்சிதம். அருண் விஜய், STR இருவருக்குமே மிக ஸ்டைலிஷான உடைகள். ஜோதிகாவின் படங்களும் அழகு. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரம் தான். ஆனால் அதிலும் முத்திரை பதிக்கிறார். அதிதி ராவ் ஹைதாரியின் பங்கும் சிறியதே ஆனால் அதையும் அழுத்தமானாதாக பதிகிறது அவர் நடிப்பாலும் பாத்திரப் படைப்பாலும்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்து என்று சொல்லவும் வேண்டுமோ! அதுவும் ஐரோப்பியாவிலும் துபாயிலுமான காட்சிகளின் வண்ணக் கலவையும் கழுகுப் பார்வையில் விரியும் காட்சிகளும் அற்புதம். பாடல்கள் முழுதாகப் படத்தில் பயன்படுத்தப் படவில்லை என்றே நினைக்கிறேன். மேலும் பாடல்கள் பின்னணியாக தான் ஒலிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று. ஸ்ரீகர் பிராசாதின் படத்தொகுப்பும் நன்றே. இவ்வளவு பாத்திரங்களை வைத்து சிக்கலில்லாமல் படத்தொகுப்பை செய்து கதையை நேர்த்தியாக நகர்த்தியிருக்கிறார்.

படம் முடியும்போது இவ்வளவு சிக்கல் நிறைந்த ஒரு டான் வாழ்க்கையை ஏன் ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்று தோன்றும். பல சமயங்களில் அது திணிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் அதுவே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது முதல் தலைமுறை டானுக்கு. அடுத்தத் தலைமுறைகளுக்கு அந்தப் பதவியில் கொடுக்கும் ஏராளமான பணமும் செல்வாக்கும் அந்தப் பாதையைத் தொடர தூண்டுதலாக அமைகிறது. போலிஸ் பாத்திரங்களின் பங்களிப்பு வெகு subtle. அதே சமயம் அவர்கள் நல்ல முறையில் காட்டப்படுகின்றன.

என்றுமே திரைக் கதை தான் ராஜா. அதைப் புரிந்து மணி படம் இயக்கியிருப்பது அவருக்கான வெற்றியைக் கொடுத்திருக்கிறது. எத்தனை கதாப் பாத்திரங்கள்! எத்தனை முன்னணி நடிகர்கள்! இவர்கள் அனைவரையும் அருமையாக இயக்கி அனைத்து நடிகர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான பங்களிப்பைப் பெற்று வெற்றிப் படத்தைத் தந்திருக்கும் அவருக்கும் அவர் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

அச்சம் என்பது மடமையடா – திரை விமர்சனம்

aym

சில இயக்குநர்கள் பிறரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை திரைக்குக் கொண்டுவருவதில் வல்லுநர்களாக இருப்பார்கள். சிலர் தங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தாக்கத்தைக் கதையாக வெளிப்படுத்துவார்கள். கௌதம் மேனன் தன்னையே ஒவ்வொரு படத்திலும் ஒரு பகுதியாகக் கொடுப்பதாகத் தோன்றுகிறது. அவரின் ஒவ்வொரு படத்தின் ஹீரோவிலும் அவரின் ஒரு பகுதி உள்ளதாகவே ஓர் எண்ணம் வருகிறது. இந்தப் படத்திலும் சிம்புவில் அவர் உள்ளார். அந்தத் தொடர்பு இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

சிம்பு சூபர்லேடிவ் பெர்பார்மென்ஸ் தந்திருக்கிறார். முழு படத்தின் பாரத்தையும் அவர் ஒருவரே தாங்குகிறார். மஞ்சிமா மோகன் நாயகி, சிம்புவுடன் படம் முழுவதும் வருகிறார். நன்றாக நடித்துள்ளார். இன்னும் கொஞ்சம் உடல் எடையில் கவனம் வைத்தால் நிறைய வாய்ப்புகள் அவருக்கு வரும்.

முதல் பாதியில் படித்த, வேலையில்லா வெட்டிப் பையனாக வருகிறார் சிம்பு. அதன் தொடர்ச்சியாக மஞ்சிமாவுடன் காதல் உணர்வுடன் பைக்கில் ஒரு ரோட் ட்ரிப் செய்கிறார். அதனால் திரும்ப ஒரு விடிவி படத்தைப பார்ப்பது போலவே முதல் பாதி நகர்கிறது. திடீரென்று எதிர்பாராத சம்பவத்தால் சாதா நிலையில் இருந்து அசாதாரண நிலைக்குத் தள்ளப்படுகிறார் சிம்பு. அதை எப்படி கையாள்கிறார் என்பதே கதை. பின் பாதியில் வேகம் எடுக்கிறது கதை. அதே சமயம் சண்டையும் வயலென்சும்  வெளுத்து வாங்குகிறது. ஏன் எதுக்கு என்று தெரியாமல் நடக்கும் நிகழ்ச்சிகளில் இருந்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கண நேரத்தில் சிம்பு செய்யும் அதிரடி நடவடிக்கைகள் அவரை மாஸ் ஹீரோவாகக் காட்டுகிறது!

திரைப்படம் என்பது விஷுவல் மீடியா. ஆனால் கௌதம் மேனன் பாத்திரங்களை அதிகம் பேச வைத்தே கழுத்தறுத்து விடுகிறார். அதுவும் இந்தப் படத்தில் முக்கியமான சஸ்பென்ஸ் வெளி வருவதே வசனத்தின் மூலம் தான். வாய்ஸ் ஓவராக சீனில் புரியாததை சொல்ல எத்தனிக்கலாம். கண்ணால் காண்பதையே எதற்குத் திரும்ப சிம்பு வாய்ஸ் ஓவரால் விளக்க வேண்டும்? சிம்பு நன்றாக டயலாக் டெலிவரி செய்வதால் படம் பிழைக்கிறது.

எப்பவும் படம் ரொம்ப தாமதமாக வெளிவரும்போது எடுத்த நேரத்துக்கும் வெளி வரும் நேரத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் கதை பழையதாகி இருக்கும். அ எ ம படம் அந்தப் பாதிப்புக்கு ஆளாகவில்லை. பாடல்கள் படத்திற்கு ஏற்றம் தருகிறது. முக்கியமாக ராசாளி & தள்ளிப் போகாதே இரண்டும் படம் பிடித்த விதமும், வரும் இடமும் அருமை. தள்ளிப் போகாதே பாடல் படமாக்கப் பட்ட விதம் கௌதம் மேனனின் இயக்கத்தைப் பாராட்ட வைக்கிறது! அவளும் நானும் பாடலும் நன்கு படமாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை அதுவும் பின் பாதியில் படத்துடன் இயைந்துள்ளது.

காக்க காக்கப் படத்தையும், விடிவி படத்தையும் கலந்து செய்தக் கலவையாக் சில இடங்களில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. நெருக்கமான குடும்பம், பயங்கரமான வில்லன் குழு, அவர்களை எதிர்க்கும் ஹீரோ என்றே போகிறது கதை. இதில் சிம்புவின் கதாப்பாத்திரத்தின் பெயரே படத்தின் கடைசிப் பகுதி வரை தெரியாது. நல்ல டச் அது.

குழந்தைப் பையனாக ஜாலியாக இருந்த அவரை ஒரே நாளில் adult ஆக்குகிறது வாழ்க்கை. இது சிம்பு ரசிகர்களுக்கான படம்!

aym1

வாலு – திரை விமர்சனம்

vaalu-movie-poster

எந்தப் பெரிய நடிகர் நடித்தப் படமாக இருந்தாலும் தயாரித்து மூன்று வருடம் கழித்து ரிலீஸ் ஆகும் எந்தப் படமும் வரவேற்பின்றி வந்த சுவடு தெரியாமல் மறைந்து விடுவது தான் வழக்கம். ஏனென்றால் அதற்குள் trend மாறியிருக்கும். வாலு அதற்கு விதிவிலக்கு. அதற்கு முழுக் காரணம் சிம்பு! படம் முழுதும் லாகவமாக வலம் வருகிறார்.

இந்தப் படத்தை தல, தளபதி இணைந்து வழங்கும் என்று மட்டும் அல்ல மக்கள் திலகம், சூப்பர் ஸ்டார் அனைவரும் சேர்ந்து வழங்கும் படம் என்றும் விளம்பரப் படுத்தி இருக்கலாம். அந்த அளவு எல்லோரையும் பயன்படுத்தி இருக்கிறார் சிம்பு 🙂 படம் பார்த்தால் நான் ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்று புரியும் 🙂

ரொம்ப லைட்டான கதை. கதாப்பாத்திரங்கள் அனைவருமே likeable characters ஆக இருப்பது நாம் படம் பார்க்கும் அனுபவத்தை இதமானதாக ஆக்குகிறது. ஓவராக குடி சீன்கள்/டாஸ்மாக் காட்சிகள் இல்லை. சிகரெட் பிடிப்பதைக் கூடக் கதாநாயகன் நிறுத்துவது போல ஒரு காட்சி. மிக்க நன்றி இயக்குநரே! இரட்டை அர்த்த வசனங்களோ முகத்தை சுளிக்க வைக்கும் நடன அசைவுகளோ இல்லை. தந்தை-மகன், தாய்-மகன், அண்ணன்-தங்கை, காதலன்- காதலி, நண்பன்-நண்பி, தோழன்-தோழன், ஹீரோ-வில்லன், ஹீரோ-அடியாட்கள் ஆகியோருடனான உறவுகள் நன்றாக கையாளப் பட்டுள்ளன. புதுமுக இயக்குநரான விஜய் சந்தர், கதை வசனமும் எழுதி ரொம்ப மெனக்கெடாமல் ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.

படம் நகைச்சுவையாக உள்ளது. ஆனால் படத்தில் ஒன்றுமே இல்லை. நல்ல டைம்பாஸ், அவ்வளவே. சிம்பு ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். எல்லா படங்களில் பார்க்கும் அதே படிக்காத, வேலை இல்லாத, மிடில் கிளாஸ், பார்க்க சுமாரான பையன்- ரொம்ப அழகான, படித்த, அந்தஸ்துள்ள ஒரு பெண்ணை காதலித்து அவளை அடைவது தான் கதை. முறைப்பையன்/தாதா தான் வில்லன். உஸ்ஸ் அப்பா என்று தலையில் கை வைத்துக் கொள்ளாத அளவு எளிமையாக நகருகிறது படம். காமெடியான ஸ்டன்ட் காட்சிகள் மேலும் ஒரு ப்ளஸ். சிம்பு விரல் வித்தையெல்லாம் காட்டாமல் சாதாரணமாக நடித்திருப்பது பெரிய நிம்மதி. நன்றாக நடனமும் ஆடியிருக்கிறார்.

ஹன்சிகா மிகவும் அழகாக வருகிறார். பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைத் தருகிறார். சிம்புவுக்கு இணையாக நடனம் ஆடுகிறார். சிம்புவின் சகாக்கள் சந்தானம், விடிவி கணேஷ். அவர்களும் ஓவர் சலம்பல் இல்லை. அடக்கியே வாசித்திருக்கிறார்கள். க்ளைமேக்ஸ்ஸில் சண்டைக் காட்சி இல்லாமல் முடிவது நன்று. எப்படியிருந்தாலும் ஹீரோவுக்கு தான் லட்டு. பிறகு எதற்கு ஒரு ஆக்ரோஷமான சண்டைக் காட்சி என்று சிம்பிளாக முடிவு பண்ணிட்டார் இயக்குநர்/கதாசிரியர்.

இசை – தமன். பாடல்கள் நன்றாக உள்ளன, அதாவது படத்தின் தரத்திற்கேற்ப! யூத் டைப்!  சிம்புவும், தமனும் தனித் தனியாகப் பாடிய பாடல்கள் இரண்டும் FM வானொலி சேனல்களில் ஹிட். பின்னணி இசைக்குப் பழைய பாடல்கள் தமனுக்கு நன்கு கை கொடுத்திருக்கின்றன.

இரண்டு மணி நேரம் தான் படம் என்று பார்க்கும் நிலைமைக்கு நாம் பழகிவிட்டோம். பைட் சீன்களில் கத்திரி போட்டிருக்கலாம். படம் கொஞ்சம் வேகமாக நகர்ந்திருக்கும்.

பல வருட காத்திருப்பிற்குப் பிறகு படம் ரிலீஸ் ஆனதற்கு சிம்புவிற்கும் படத்தின் குழுவினருக்கும் வாழ்த்துகள்!

vaalu1