கவண் – திரை விமர்சனம்

தூர்தர்ஷன் காலத்தில் செய்தி வெறும் நடப்பு செய்தியாக இருந்தது. ஆனால் இன்றோ பரபரப்பான பிரேக்கிங் நியுசுக்கு அடிமையாகிவிட்ட பார்வையாளர்களை எப்படி தங்கள் சேனலையே பார்க்குமாறு தக்க வைத்துக் கொள்ளவும், டிஆர்பி ரேடிங்கை உயர்த்தவும் தகிடு தத்தம் வேலை செய்யும் இன்றைய தொலைக்காட்சி ஊடகத்தின் உண்மை முகத்தைக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அவர் கதைக்கு உதவி எழுத்தாளர் சுபா.

ஒரு நல்ல ஊடவியலாளராக வர உழைக்கும் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு. முதலில் வரும் கெட் அப்பில் நன்றாக இருக்கிறார். அப்படியே தொடர்ந்து இருந்திருக்கலாம். ஒரு மாறுதலான முக அமைப்பைப் புது சிகை அலங்காரம் அவருக்குக் கொடுத்தது. மெருகேறிய நடிப்பு விஜய் சேதுபதிக்கு. அவருக்குத் துணை பாத்திரமாக மடோன்னா செபாஸ்டியன். அவரும் மிகவும் நன்றாக நடிக்கிறார். டண்டணக்கா டணக்குணக்கா என பாத்திரக் கடைக்குள் யானை புகுந்தார் போல டி.ஆர் எட்டு வருடத்திற்குப் பிறகு ரீ என்டிரி! ஒரு ராஜ் டிவி மாதிரி சேனலின் உரிமையாளராக வருகிறார். முதலில் சில சீன்களில் எரிச்சல் படுத்தினாலும் பின் பாதியில் அதகளப் படுத்துகிறார்.

ஆகாஷ்தீப் செய்கால் அயன் படத்தில் வில்லன், இந்தப் படத்திலும் அவரே. நன்றாக தடித்து வயதும் ஏறியிருக்கிறார். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் தானே. ரொம்ப சுமாரான நடிப்பு. இவரைத் தவிர நாசர், ஜெகன், விக்ராந்த், பாண்டியராஜன் & நமது ட்விட்டர் கிரேசி கோபாலும் நடித்துள்ளனர். பாண்டியராஜனின் குரலில், வார்த்தை உச்சரிப்பில் அவ்வளவு தெளிவில்லை.

இசை ஹிப் ஹாப் தமிழா. ஆக்சிஜன் பாடல் தவிர வேறு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. கே.வி.ஆனந்த் எடிட்டிங், ஒளிப்பதிவில் குறை வைக்கவில்லை. தேவையற்ற இடங்களில் பாடல்களும் நடனங்களும் படத்தில் தொய்வை ஏற்படுத்துகின்றன.

உண்மைக்கு முக்கியத்துவம் தராமல் பணத்துக்காக எப்படி ஊடக இயக்குநர்கள் எந்தக் கீழ் தரத்துக்குப் போகவும், குற்றம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் கதைக் கரு. பாலியல் தொல்லைக்கு உட்பட்ட பெண்ணுக்கு ஊடகங்கள் எப்படி தனி மனித அந்தரங்கத்துக்கு மதிப்பளிக்காமல் வெட்ட வெளியில் போட்டுடைக்கின்றன, அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் மனக் கஷ்டம் இவை காட்டப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் எடுத்துக் கொண்ட எந்தச் சம்பவத்திலும் சுவாரசியமே இல்லை. ரகுவரன் அர்ஜுன் முதல்வன் பேட்டி மாதிரி இதில் போஸ் வெங்கட்டுக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு நச் பேட்டி உள்ளது. அதுவும் க்ளைமேக்சிலும் மட்டுமே கொஞ்சம் சுவாரசியம். நிறைய விஷயங்களை சொல்ல முற்பட்டிருக்கிறார்கள், எதிலுமே முழுமை இல்லை. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை.

நீயா நானா கோபி, கலந்துரையாடல் ஏங்கர்கள் குஷ்பூ, இலட்சுமி இராமகிருஷ்ணன், போன்றவர்களை நன்றாக கலாய்த்திருக்கிறார்கள். ஆனால் கதை, சித்தன் போக்கு சிவன் போக்கு என்று போய் ஒரு மாதிரி இஸ்லாம், தீவிரவாதி என்று பின்னிப் பிணைத்து முடிகிறது.

சில நல்ல சீன்கள் உள்ள சுமாரான படம் கவண். அவர் இயக்கியப் படங்களில் அயனுக்குப் பிறகு கோ பரவாயில்லை. அதன் பின் வந்த மாற்றான் சொதப்பல். அநேகனுக்கு அவர் எழுதிய திரைக்கதையை விட அப்படத்தைப் பார்த்தவர்கள் அளித்தப் பொழிப்புரை இன்னும் சுவாரசியமாக இருந்தது. உண்டிவில்லை இன்னும் கொஞ்சம் டைட்டா இழுத்து விட்டிருக்கலாம் – கவண்.