இஞ்சி இடுப்பழகி – திரை விமர்சனம்

inji

தெலுங்கு தமிழ் இரண்டிலும் ஒரே சமயத்தில் எடுத்தப் படம் இது. தெலுங்கில் சைஸ் ஜீரோ, தமிழில் இஞ்சி இடுப்பழகி. க்ளோஸ் அப் சீன்களில் தமிழ் உச்சரிப்பு சரியாக உள்ளது. லாங் ஷாட்களில் தெலுங்கு வாயசைப்புக்குத் தமிழ் வசனம் சரியாக ஒட்டவில்லை. லாங் ஷாட்ஸ் எல்லாம் ரீ ஷூட் பண்ணாமல் ஒப்பேத்தி விட்டார்கள். மேலும் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடித்தமான ஸ்டேப்சுடன் குத்து டேன்ஸ், நிறைய தெலுங்கு நடிகர்கள் படத்தில் இருப்பது, ஆந்திர மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்தியிருப்பது, இவையால் படத்தில் தெலுங்கு வாடை அதிகம் வீசுகிறது.

ஒரு குண்டு பெண்ணின் இன்னல்களையும்,  அதனால் அவளின் திருமணத்திற்கு ஏற்படும் தடைகளையும் காட்டுகிறது இப்படம். படத்தில் நல்ல மெஸ்சேஜ் உள்ளது. அனுஷ்காவும் ரொம்ப நன்றாக நடித்துள்ளார். அனுஷ்காவின் தொண தொண அம்மாவாக ஊர்வசி. அனுஷ்காவும் ஊர்வசியும் தான் படத்தின் இரு தூண்கள் {figuritively also, pardon my pun 🙂 }ஆனால் திரைக்கதை தான் பயங்கரமாக சொதப்பி விடுகிறது. காமெடி என்று அவர்கள் நினைத்து சேர்த்திருக்கும் வசனங்கள் எல்லாம் மருந்துக்குக் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை.

வெகு விரைவில் உடல் எடையை குறைக்க உதவும் சைஸ் ஜீரோ நிறுவனத்தின் முதலாளியாக வரும் பிரகாஷ் ராஜ் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான நடிப்பைத் தருவது சலிப்பூட்டுகிறது. மாஸ்டர் பரத்துக்கு (போக்கிரியில் உப்புமா பையன்) அனுஷ்கா தம்பியாக, நல்ல ரோல். வேறு நல்ல இயக்குநரிடம் இன்னும் நன்றாக சோபிப்பார் என்று நம்புகிறேன்.

முதல் பாதி பெட்டரா இரண்டாம் பாதி பெட்டரா என்று யோசிக்கும்போது அது அவரவர் ரசனையைப் பொறுத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் மொத்தத்தில் படம் பல இடங்களில் விறுவிறுப்பு இல்லாமல், சுவாரசியம் இல்லாமலும் தொய்கிறது. ஒரு நல்ல திரைக் கதையும் நல்ல எடிட்டரும் இருந்திருந்தால் இப்படம் ஹிட் படமாகியிருக்கும்.

அனுஷ்கா இப்படத்திற்காக எடை கூடினார் என்று செம பில்ட் அப் கொடுத்தார்கள். அதெல்லாம் ஒன்றும் எடை கூடவில்லை. எல்லாம் பாடி சூட் தான். அது நன்றாகத் தெரிகிறது. ஆ மறந்துவிட்டேனே, படத்தின் ஹீரோ ஆர்யா! நல்ல பிட் பாடி. மத்தபடி நடிக்க ரொம்ப வாய்ப்பில்லை, அவரும் பெருசா மெனக்கெடவும் இல்லை.

இசை மரகத மணி. இனிமையான இசை. நிறைய நல்ல விஷயங்களைச் சொல்ல வருகிறார்கள், அனால் தடுமாறி விட்டார் இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடி. ஒரு சண்டை காட்சியோ, டாஸ்மாக் காட்சியோ இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக அமைந்தும் நம்மை சீட்டில் கட்டிப் போடத் தோற்று விடுகிறார் இயக்குநர். தெலுங்கில் ஓடுமோ என்னமோ.

inji1

விடியலைத் தேடி – சிறு கதை

birds

அக்காக் குருவி கத்தலும் கிளிகளின் கூட்டுக் கிக்கிக்களும் மஞ்சுவை எழுப்பின. ஒரு நிமிடம் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு. கார், பஸ்களின் வேக ஓட்டத்தின் ஒலிகளின் நடுவில் வாழ்ந்த அவளுக்கு இந்தக் கிராம சூழ்நிலை நினைத்தே பாராமல் கிடைத்த ஒரு வரம்.

சுற்றிப் பார்த்தாள். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் போடாமல் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி வருவதற்குள் சில குழந்தைகள் சிணுங்க ஆரம்பித்து இருந்தன. சிலவை அழகாகக் குப்புறப் படுத்துத் தலையைத் தூக்கித் தொட்டிலில் இருந்து கருவண்டு கண்களுடன் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தன.

வேகமாக ஒவ்வொன்றிற்கும் டயப்பர் மாற்ற ஆரம்பித்தாள். அதற்குள் அவள் சக காப்பாளர் மாலா புட்டிகளில் பாலை நிரப்பி வந்து குழந்தைகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தாள். சில குழந்தைகள் தானே பாட்டிலைப் பிடித்துக் கொண்டு சப்ப ஆரம்பித்தன. சில இன்னும் சிறுசு, அதனால் அவைகளில் ஒன்றை தொட்டிலில் இருந்து எடுத்து மடியில் போட்டுக் கொண்டு பால் கொடுத்தாள் மஞ்சு. வயிறு முட்டக் குடித்தப பின் வாயில் இருந்து பால் வழிய அவளை பார்த்து ஒரு பூஞ்சிரிப்பை உதிர்த்தது.

motherandchild

கண்களில் பொங்கி வந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அடுத்தக் குழந்தையிடம் சென்றாள். ஒரு குழந்தைக்காக ஏங்கிய அவளுக்கு பத்துக் குழந்தைகளைக் கொடுத்துவிட்டார் இறைவன். இங்கு வந்து சேர்ந்தது நேற்று தான். அதுவும் கனவு போல இருந்தது. இன்னும் உறக்கம் கலையாமல் கனவில் இருக்கிறோமோ என்று கூட அவளுக்குத் தோன்றியது.

ஜேகப்பை விட்டுத் தொடர்ந்து இந்த ஹோமில் வாழமுடியுமா என்று ஒரு சிறு பயமும் வந்தது. இருபது வருட வாழ்க்கை எளிதாக மறக்கக் கூடியதா? இந்த முடிவை எடுக்க அவள் எவ்வளவு மன உளைச்சல் பட்டாள்! இன்னும் உள் மனம் பயத்தில் இருந்து மீளவில்லை.

உண்மையில் திருமணம் அவளுக்கு மிகவும் இனிமையான ஒரு வாழ்வின் ஆரம்பம். அவளுடையது காதல் திருமணம். அதற்கு முன் கசந்த அவள் கன்னி வாழ்க்கையை இனிய காதல் திருமணம் தித்திக்க வைத்தது. அவள் அலுவலகத் தோழி வேதா பிரசவ விடுப்பு முடிந்து வேலைக்குச் சேரும் முன் தன் மூணு மாதக் குழந்தையை ஆபிசுக்கு எடுத்து வந்தபோது தான் சக ஆபிஸ் கொலீக் ஜேகப்பை முதலில் கவனித்தாள். வேதா மெடிகல் இன்சியுரன்ஸ் கிளைமுக்காக சில பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டியிருந்த சமயத்தில் அழும் குழந்தையை அவ்வளவு லாகவமாக அவன் கையாண்டான். இவளும் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு “பப்புக்குட்டி சின்னிக் குட்டி” என்று கொஞ்ச இருவருக்கும் இடையே சிநேகமான நட்பு தோன்றியது. “எனக்குக் குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும்” என்று அவன் சொன்னபோது அவன் மேல் சின்ன ஈர்ப்பு ஏற்பட்டது.

வாழ்வில் பிடிப்பின்றி இருந்த மஞ்சுவிற்கு ஜேகப்பின் கண்ணியமான பேச்சு மெதுவாகக் கவரத் தொடங்கியது. பெற்றோர் இல்லாமல் அண்ணன் அண்ணியுடன் வாழ்ந்த அவளுக்கு முப்பது வயதாகியும் அவர்கள் திருமண ஏற்பாடு எதுவும் செய்வதாக இல்லை. அதற்குக் காரணம் அவள் சம்பளம் தான் என்றும் அவளுக்குத் தெரியும். ஜேகப்புக்கும் அவளுக்கும் இடையே ஆரம்பித்த சிநேகமான நட்பு சில மாதங்களில் இயல்பாகக் காதலாக மாறியது. ஒரு நாள் அவனே, “எனக்கும் வயசாகிட்டு வருது. நான் உன்னை நல்லா வெச்சுப்பேன். என்னைக் கல்யாணம் செஞ்சுப்பியா” என்று நேரடியாக கேட்டதும் அவள் மனம் துள்ளி குதித்தது. அவனின் அன்பும் பரிவும் அவள் அது வரை எவர் மூலமும் அனுபவித்ததில்லை. முதலில் ரொம்ப யோசித்தாள். வேற்று மதம் பயமுறுத்தியது. ஜாதி விட்டு மணமுடித்தாலே கஷ்டம், இதில் மதம் மாறி ……

ஆனால் உறவுகள் யாரும் எந்த விதத்திலும் உதவாத போது இக்கலப்புத் திருமணத்தால் புதிதாக என்ன நஷ்டம் வரப் போகிறது என்று எண்ணித் துணிந்தாள். இவள் மதம் மாறி மஞ்சு கேதரின் ஆகத் திருமணம் புரிந்ததால் ஜேகப் வீட்டில் பெரிதாக எதிர்ப்பு ஏதும் இல்லை.

வீட்டில் மாமியார் மட்டும் தான். ஜேகப் தந்தை இறந்து சில வருடங்கள் ஆகிஇருந்தது. மாமியாருடன் நல்ல உறவு, தினமும் ஜெகபும் அவளும் ஒன்றாக வேலைக்குப் போய் வந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவள் கேட்கும் முன் புடைவையும் அவன் சக்திக்கு ஏற்ப நகையும் வாங்கிக் கொடுத்தான். அவள் சமையல் கைப் பக்குவம் மாமியாருக்கும் கணவனுக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டதால் ஆசையாக விதம் விதமாக தினம் சமைத்துப் பரிமாறினாள். முதல் முறை நாள் தள்ளிப் போன போது இருவரும் வானத்தில் மிதந்தார்கள். ஆனால் சில வாரங்களிலே அது பொய் என்றாகிவிட்டது. அது தான் அவர்களின் மண வாழ்க்கையின் முதல் பெரிய ஏமாற்றம்!

கொஞ்ச நாளிலே வேலையை விட்டுவிட்டு பிசினெஸ் ஆரம்பித்தான் ஜேகப். மஞ்சு ரொம்ப கெஞ்சினாள் வேலையை விட வேண்டாம் என்று. அவனோ பிடிவாதமாக “இப்படியே எத்தனை நாள் வாழறது, காரு வீடெல்லாம் நம்ம சம்பளத்தில் வெறும் கனவு தான். துணிஞ்சு இறங்கனும்”. என்றான்.

கார்மென்ட் பிசினெஸ். ஆர்டர் பிடிக்க அடிக்கடி வெளியூர் செல்ல  வேண்டியிருந்ததால் மஞ்சுவையும் வேலையை விடச் சொன்னான். “நீ தான் கணக்கு வழக்கெல்லாம் பார்த்துக்கணும். எவனுக்கோ போய் உழைப்பதுக்கு பதிலா நம்ம கம்பெனியில் உழைச்சா இலாபம் நமக்கு தானே” என்றான். அவன் இல்லாத போது கம்பெனியில் சின்ன சின்ன திருட்டுகள் நடக்க ஆரம்பித்தன. அதனால் அவள் அங்கு இருப்பது அவசியமாயிற்று. பிசினசும் சூடு பிடித்ததால் வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் கம்பெனியில் அமர்ந்தாள்.

பிசினஸ் நன்றாக வளர்ந்தது. ஆசைப்பட்ட மாதிரி ஜேகப் கார் வாங்கினான். ஆனால் யார் வைத்தக் கண்ணோ திடீரென்று ஒரு பெரிய ஆர்டர் கேன்சல் ஆனது. ஆர்டரை எதிர்பார்த்து தைத்து வைத்திருந்த சரக்கெல்லாம் விற்க முடியாமல் தேங்கிப் போனது. அதே சமயம் இருந்த ஒரே உறவான மாமியாரும் இறந்து போனார். முடிந்த அளவு ஜேகப்புக்கு ஆறுதலாக இருந்தாள் மஞ்சு. முதல் குறை பிரசவத்துக்குப் பிறகு மேலும் இரண்டு குறைப் பிரசவங்கள் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு இடைவெளியை கொஞ்ச நாளாகவே ஏற்படுத்தியிருந்தது. குழந்தைக்காக ஏங்கிய இருவருக்கும் இறைவன் அந்த பாக்கியத்தை கொடுக்கவில்லை. இந்த சமயத்தில் இது வரை இல்லாத புதுப் பழக்கத்தை மதுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான் ஜேகப். தினமும் அளவுக்கு அதிகமாக குடிக்க ஆரம்பித்தான். எப்படி இந்தப் பழக்கம் ஆரம்பித்தது என்று அவள் யோசிப்பதற்குள் அவன் ஆபிசுக்கு வராமல் அதிகமாக பார் பக்கம் ஒதுங்க ஆரம்பித்திருந்ததை கவனித்துப் பெரும் குழப்பத்துக்கு ஆளானால் மஞ்சு.

பிசினஸ் என்று ஒன்று ஆரம்பித்தப் பின் நஷ்டம் வந்தால் சோம்பி உட்கார முடியுமா? மஞ்சுவே தன் சாமர்த்தியத்தால் பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடங்களுக்குச் சென்று சீருடை ஆர்டர் வாங்கி பொறுப்புடன் கம்பெனியை நடத்த ஆரம்பித்தாள். தொய்வு ஏற்பட்ட பிசினஸ் நன்றாகப் பிக் அப் ஆனது.அது ஜெகபை எரிச்சல் படுத்தியது. “பொட்டச்சி நீ, என் உதவி இல்லாம ஆர்டர் வாங்கி கம்பெனியை நடத்துறியா? எவ்வளவு நாளைக்கு ஓடுது பாக்கலாம்” என்று எல்லார் முன்னிலையிலும் கம்பெனியில் கத்தி அவமானப் படுத்தித் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். அவளால் நம்ப முடியவில்லை. இந்த மாதிரி கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தி அவள் கேட்டதே இல்லை. குடியின் பாதிப்பால் மாறிவிட்டானா அல்லது உண்மையிலேயே பொறாமைப் படுகிறானா என்றும் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் குடிக்காத போது அன்பாகத் தான் இருந்தான்.

ஜேகபை சர்ச் பாதிரியாரிடம் கவுன்சலிங்கிற்கு அழைத்துச் சென்றாள். அவர் பேசும்போது நல்ல பிள்ளையாக எல்லாவற்றிற்கும் தலை ஆட்டிவிட்டு வீட்டுக்கு வந்ததும் இவளை முதல் முறை கை நீட்டி அடித்தான். அவன் விட்ட அறையில் நிலைகுலைந்து போனாள். “நீ யாருடி என்னைப் பத்தி பாதரிடம் போய் கம்ப்ளெயின் பண்ண? முதல்ல நீ கிருஸ்துவச்சியே இல்லை. உன்னைக் கல்யாணம் கட்னதே தப்பு” வாய்க்கு வந்தபடி பேசினான். அதன் பின் அடிப்பதும் உதைப்பதும் தினப்படி வாடிக்கை ஆனது.

அவள் நொந்து போனால். எவ்வளவு மென்மையானவன், குழந்தைகளிடம் எவ்வளவு அன்புடன் பழகுபவன், எப்படி இப்படி மாறினான் என்றே அவளுக்குப் புரியவில்லை. அவன் அடித்தாலும் அவளுக்கு அவன் மேல் உள்ள அன்புக் குறையவில்லை. இரவு ஒரு மணிக்கு தள்ளாடி வீடு திரும்பும் அவனுக்கு சூடாக உணவு பரிமாறி அவனை நல்ல முறையில் படுக்க வைத்தப் பின் தான் அவளுக்கு உறக்கமே வரும்.

waitingwife

கம்பெனிக்கு வந்து, அங்கு இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு குடிக்கப் போவதால் பணம் அதிகம் petty cash பாக்ஸில் வைக்காமல் இருந்தாள். அதனால் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துச் சென்று விற்றோ அடமானம் வைத்தோ குடிக்க ஆரம்பித்தான். இதற்காகவே அவன் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்க ஆரம்பித்தாள் மஞ்சு.

அவன் குடிக்காத நேரத்தில் அவனிடம் நல்லவிதமாகப் பேசி அவனை மருத்துவமனையில் சேர்த்து அடிக்ஷனில் இருந்து விடுபட வைக்க எவ்வளவு முயன்றும் அவளின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஜேகப், தான் குடிப்பதால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே சாதித்தான். “எங்கப்பாவும் தான் குடிப்பார். எங்கம்மா அவருடன் சந்தோஷமா வாழலையா? உனக்கு என்ன கொழுப்பு என்னை குடிக்காதே என்று சொல்ல?” பேச்சில் ஆரம்பித்து அடி உதையில் முடிவது சகஜமாயிற்று. அவன் அப்பா இறந்ததே அதிகம் குடித்து அதனால் வந்த லிவர் பிரச்சினையால் என்று ஒரு நாள் வேறு ஒரு உறவினர் மூலம் தெரிந்து கொண்டாள் மஞ்சு. இந்தக் குடி நோய் அடுத்த சந்ததிக்கும் தொடரும் என்பதை அவள் உதவித் தேடிச் சென்ற மருத்துவர் மூலம் அறிந்து கொண்டாள். என்ன செய்வது? அவனின் சொந்தங்கள் அவன் அம்மா இறந்த பிறகு இவர்களுடன் தொடர்பில் இல்லை. அவர்கள் யாரிடமும் இவளால் உதவி கேட்கப் போக முடியவில்லை.

இந்த நேரத்தில் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்த பாண்டியன், தான் ஜேகபிடம் பேசிப் புரிய வைப்பதாக அவளிடம் வந்து சொன்ன போது ஒரு பாரம் இறங்கியது போல இருந்தது அவளுக்கு. பாண்டியனை வேலைக்குச் சேர்த்ததே ஜேகப் தான். பிசினஸ் ஆரம்பித்த நாள் முதலாக அவன் கம்பெனியில் இருந்தான்.

“தினம் சாயங்காலம் நான் அவர் கூடவே இருக்கேன் மேடம். ரொம்ப குடிக்காம பார்த்துக்கறேன். அப்படியே நல்லவிதமா பேசி சரி பண்ணிடலாம், கவலைப் படாதீங்க” என்று தைரியம் சொன்னான்.

இரவு பாண்டியனே அவனை வீட்டில் வந்து விட்டுவிட்டுப் போக ஆரம்பித்தான். குடித்துவிட்டு வண்டி ஒட்டாமல் வருகிறானே என்று ஒரு சிறு நிம்மதி மஞ்சுவுக்கு. அதுவும் சொற்ப காலமே. அவர்கள் கம்பெனி வங்கிக் கணக்கு ஜாயின்ட் அக்கௌன்ட். அதனால் அவள் மிகவும் ஜாக்கிரதையாக செக் புக்கை ஜேகப் கண்ணில் படாமல் வைத்திருந்தாள். வங்கி மேலாளர் ஒரு நாள் கணக்கில் overdraft இருப்பதால் ஒரு செக்கைத் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கு என்று போன் பண்ணியபோது அவள் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது.

“சார், சான்சே இல்லை. கரென்ட் அக்கௌண்டில் மட்டுமே 5லட்சம் இருக்கணமே” என்றாள். “இல்லையே மா, ரெண்டு வாரமா நிறைய வித்ட்ராயல்ஸ் இருந்ததே. எல்லாமே cash வித்ட்ராயல்ஸ். நீங்க சரியா செக் பண்ணிப் பாருங்க” என்று சொல்லி போனை கட் பண்ணினார்.

செக் புக்கை எடுத்துப் பார்த்தாள். வரிசையாக எண்களைப் பார்த்துக் கொண்டே வந்தவள் கடைசி 5 செக்குகள் கிழிக்கப் பட்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

ரேஸ்கல் பாண்டியன் பண்ணின வேலை இது என்று புரிந்து கொள்ள நிமிஷ நேரம் போதுமானதாக இருந்தது அவளுக்கு. அவளின் ஆபிஸ் ரூமுக்குள் வந்தபோது எப்போதோ ஒரு சமயம் அவள் கவனிக்காத சமயத்தில் அவன் செக்குகளைக் கிழித்து வைத்திருக்க வேண்டும். பின் ஜேகபிடம் கையெழுத்து வாங்கி வங்கியில் இருந்து பணத்தை எடுத்திருக்க வேண்டும். ஜேகப்புக்கு ஏதாவது பணம் கொடுத்தானோ அல்லது எதுவுமே கொடுக்கவில்லையோ தெரியவில்லை, மனம் கொதித்தது மஞ்சுவுக்கு.

“பாண்டியனை கூப்பிடுங்க” என்று இவள் ஆள் அனுப்பிய போது அவன் அதற்குள் தலைமறைவாகி இருந்தான். ஜேகபிடம் வங்கியில் இருந்து பணம் எடுத்ததைப் பற்றி கேட்க, அவன் உடனே “நீ பணத்தை எடுத்து எவனுக்கோ கொடுத்துட்டு என்னை கேக்கறியா” என்று இவளை ஏச, அதன் பின் பேச்சு முற்றிலும் வேறு திசைக்கு மாறியது. “யாரோட டீ நீ தொடர்பு வெச்சிருக்க, என் கம்பெனி பணத்தை எல்லாம் எடுத்து தானம் பண்ற?” என்று ஆரம்பித்து காது கூசும்படி அர்ச்சனை செய்ய ஆரம்பித்தான். குடி போதையில் செக்கில் கையெழுத்துப் போட்டதே தெரியவில்லை அவனுக்கு. நான் உன்னைக் கண் கலங்காம பார்த்துக்கறேன் என்று சொன்ன ஜேகப் எங்கே போனான் என்று நினைத்துக் கலங்கி நின்றாள் மஞ்சு.

ஒரு நாள் ஆபிசில் மும்முரமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது டெய்லரிங் செக்ஷன் வாசுகி தயங்கி தயங்கி எதோ சொல்ல வந்து எச்சில் கூட்டி முழுங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்து சற்றே எரிச்சலுடன், “என்ன வாசுகி, என்ன விஷயம் ஏதாவது அட்வான்ஸ் வேணுமா? ஏன் தயங்கி தயங்கி நிக்கற?” என்றாள் மஞ்சு.

“எப்படி சொல்றதுன்னு தெரியலை மேடம், சாரை ரெண்டு மூணு தடவை ஒரு பொண்ணோட பார்த்தேன். நல்ல பொம்பளை மாதிரி தெரியலை.” மென்று முழுங்கினாள் வாசுகி. “சில பேர் கொஞ்ச நாளாவே சேர்ந்து வாழறாங்கன்னு ஆபிசுல பேசிக்கறாங்க” விதிர்விதிர்த்துப் போய்விட்டாள் மஞ்சு.

அன்று இரவு குடித்து விட்டு வந்தபோது அமைதியாக இருந்தாள் மஞ்சு. காலையில் எழுந்தவுடன் அவனிடம், “உங்களை யாரோ ஒரு பொண்ணோட பார்த்ததா சிலர் வந்து எங்கிட்ட சொன்னாங்க. யாருங்க அந்தப் பொண்ணு?” என்றாள். “யாரோட வேணா நான் போவேன், அதை கேக்க நீ யாரு?” கோபத்தில் அவளைப் பிடித்து வெறியுடன் தள்ளியவன் அவள் தலை ஜன்னல் கம்பியில் மோதி இரத்தம் வழிவதைக் கூடக் கண்டுகொள்ளாமல் வாசக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்.

மனோ தத்துவ மருத்துவரை அணுகினாள். அவனாக வந்து அடிக்ஷன் சென்டரில் அனுமதித்துக் கொண்டால் அன்றி அவன் நோய் குணமாக வாய்ப்பில்லை என்றார் டாக்டர். தினம் அடி உதை வாங்குவதால் இரவில் அவன் வரும் நேரத்தில் பயம் வயிற்றைக் கவ்வி இம்சை பண்ணுவதை மருத்துவரிடம் தெரிவித்தாள். அவளை சாந்தமான மன நிலையில் இருக்க உதவும் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். அதைத் தவிர அவரிடம் இருந்து அவளுடைய பிரச்சினைக்கு வேறு பதில் கிடைக்கவில்லை.

ஆபிசில் ஒரு நாள் வந்து இறங்கிய சரக்கைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த போது, துணியைச் சுற்றி வந்த பேப்பரில் உள்ள வரி விளம்பரம் ஒன்று அவள் கண்ணில் பட்டது. முதியோர் இல்லமும் அநாதை ஆசிரமமும் சேர்ந்தே இருந்த ஒரு இடத்துக்குக் குழந்தைகளை பராமரிக்கத் தாயுள்ளம் கொண்ட பெண் தேவை என்று விளம்பரத்தைப் பார்த்தாள். உணவும் இருப்பிடமும் கொடுத்து மாதச் சம்பளம் ரூ10,00௦ என்று போட்டு முகவரியும் தொலைபேசி எண்ணும் இருந்தது. தினசரியின் தேதியைப் பார்த்தாள். ஒரு வாரப் பழைய பேப்பர்.

திருமணம் செய்ய முடிவெடுக்கும் முன் யோசித்ததை விட இப்பொழுது எடுக்கப் போகும் முடிவுக்காக இரவும் பகலும் மன வேதனையில் உழன்றாள் மஞ்சு. அன்று அவள் வீட்டை விட்டுக் கிளம்பி ஜேகப்புடன் வாழ முடிவு செய்தபோது அர்த்தமற்ற வாழ்க்கை பொருள் பொதிந்ததாயிற்று. ஆனால் இன்று எடுக்கப் போகும் முடிவோ ஒரு உறவின் நிரந்தரப் பிரிவை ஏற்படுத்தப் போகும் முடிவு, உண்மையில் ஓரு மரணத்துக்கு நேர்.

மிகுந்த யோசனைக்குப் பின் தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டு நேர்காணலுக்குச் சென்றாள். “நான் ஒரு அநாதை, பயமில்லாமல் வாழ ஓர் இடம் தேடி வருகிறேன் மேடம். இப்போ ஒரு கார்மென்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். ஆனால் தங்குமிடம் சரியா இல்லை” என்று நிர்வாக இயக்குநரிடம் உண்மையும் பொய்யும் கலந்து உருக்கத்துடன் சொன்னாள்.

அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்தவுடன் அவள் மனம் பல வருடங்களுக்குப் பின் லேசானது போலத் தோன்றியது. சில குழந்தைகள் தொட்டிலில் இருந்தன. சில தவழ்ந்து கொண்டிருந்தன. குழந்தைகளை பராமரிக்க இவளை விட சிறந்தவர் அவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை இவளுடன் பேசி, இவள் செய்கைகளை கவனித்த சிறிது நேரத்திலேயே நிர்வாக இயக்குநர் புரிந்து கொண்டார். அவர்களுக்கும் குழந்தைகளைப் பராமரிக்க ஒருவர் உடனடித் தேவையாக இருந்ததால் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அடித்து அப்பொழுதே அவள் கையில் கொடுத்து விட்டார்.

முதல் முறை சூழ்நிலைக் கைதியாக இருந்து விடுதலை வேண்டி வீட்டை விட்டுக் கிளம்பினாள். இம்முறையும் வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் அதே சூழ்நிலைக் கைதி தான். ஆனால் முதல் முறை வீட்டை விட்டுக் கிளம்பும்போது இருந்தத் துணிச்சலை விட இம்முறை அதிகம் தேவையாக இருந்தது. இருட்டின் அடர்த்தியைப் பொறுத்தே உள்ளது அதில் இருந்து விடுபட தேவையான துணிச்சல்!

sunrise

images taken with thanks from the following websites:

https://www.etsy.com/listing/78235918/birds-in-a-garden-graphite-pencil

http://vaishnavinair.blogspot.in/

http://wallkeeper.com/

http://scribbles-n-sketches.deviantart.com/art/sunrise-283194928

Court – திரை விமர்சனம்

01-court

இந்த வருடம் பிற மொழி படங்கள் வரிசையில் நம் நாட்டில் இருந்து ஆஸ்கர் நாமினேஷனுக்காகனப் படம் கோர்ட். காக்கா முட்டை, குற்றம் கடிதல், பாகுபலி, பஜ்ரங்கி பாய்ஜான், மாசான் ஆகிய படங்களும் போட்டியில் இருந்தன. அவைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு மராத்திப் படமான கோர்ட் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்வில் எத்தனையோ அரசியல் குறுக்கீடு இருந்திருக்கும். ஆயினும் அவைகளைத் தாண்டி இவ்வளவு நல்ல படத்தைப் புறக்கணிக்காமல் துணிந்து தேர்ந்தெடுத்ததற்கு தேர்வுக் குழுவிற்கு பாராட்டும் நன்றியும்.

ஒரு வயது முதிர்ந்த நாட்டுப் பாடல்களைப் பாடும் தலித் போராளி நாராயண் காம்ப்ளே (வீரா சாத்திதர்). அவர் ஒரு குப்பத்துப் பகுதியில் மேடையில் பாடிக் கொண்டிருக்கும்போது கைது செய்யப் படுகிறார். அப்பகுதியில் வசித்த வாசுதேவ் பவார் என்னும் ஒரு சாக்கடை அள்ளும் தொழிலாளியை தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மேல் பிராது. அதற்காகக் கைது செய்யப் படுகிறார். அவர் பாடிய பாடல் வாசுதேவ் பவாரை சாக்கடை ஓட்டையில் (manhole) விழுந்து தற்கொலை செய்யத் தூண்டியுள்ளது என்று போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை புழல் மாதிரி ஒரு சிறையில் அடைத்து விடுகின்றனர். இக்கட்டத்திலும் சரி படம் முழுக்கவும் சரி ஒரு மெலோடிராமாவும் இல்லை. யதார்த்தமாக அனைத்தும் காட்டப் படுகிறது. அதானாலேயே ஒவ்வொரு காட்சியில் காட்டப்படும் உண்மை நிலை முகத்தில் அறைகிறது.

இப்படத்தை எழுதி இயக்கியவர் சைத்தன்ய தம்ஹானே. இயக்குநராக இது இவருக்கு முதல் படம். இப்படத்தைத் தயாரித்து முக்கிய வேடத்தில் காம்ப்ளேவின் வக்கீல் வினய் வோராவாக வருகிறவர் விவேக் கோம்பர். அவரும் சரி, அரசு தரப்பு வக்கீல் நூதனாக வரும் கீதாஞ்சலி குல்கர்னியும் சரி மிகையில்லாமல் பாத்திரத்தில் பொருந்தி வாழ்ந்துள்ளார்கள். அதே போலப் போராளி நாராயண் காம்ப்ளேவாக நடிக்கும் வீரா சத்திதாரும் மிகச் சரியான தேர்வு. அவர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு human rights activist.

நம் கோர்ட் கேஸ்கள் நடைமுறையில் மிக மெதுவாக நகருவதைக் காட்ட மிகவும் நிதானமாகவே நகர்கிறது கதை. அது தான் நம்மை உலுக்கும் factor. ஒரு மடத்தனமானக் குற்றச்சாட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டு ஒரு முதிய, உடல் நலம் குன்றியவரின் மேல் போடப்பட்டுள்ளது. ஆனால் சொல்லப்பட்டக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை நிருபித்து ஒரு பெயில் வாங்க மட்டுமே பல மாதங்கள் ஆகின்றன. அரசு தரப்பு வக்கீல் ஒவ்வொரு ஹியரிங்கிலும் சட்ட நுணுக்கங்களை மேற்கோள் காட்டி பெயில் கிடைக்காமல் செய்கிறார். அவர் தன் வேலையை 9 to 5 ஜாப் மாதிரி பார்க்கிறாரே தவிர ஒரு மனிதனின் வாழ்க்கையே தன் கையில் உள்ளது என்ற பொறுப்புணர்ச்சி அவரிடம் சிறிதும் இல்லை. அது தான் எங்கும் நடப்பதும் கூட. காம்ப்ளேயின் வக்கீல் பொறுமையாகப் போராடுகிறார். கோபப்பட்டோ அவசரப்பட்டோ ஒன்றும் ஆகப் போவதில்லை என்று அனுபவம் அவருக்குப் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. செஷன்ஸ் கோர்ட் நீதிபதி பிரதீப் ஜோஷி ஒரு தனி பிரகுரிதி. அம்மாதிரி நீதிபதிகள் தாம் இந்தியா முழுவதும் உள்ளனர். ஒரு நீதிபதி பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால் அவர்களும் மனிதர்களே. பிரிட்டிஷ் காலத்து சட்ட திட்டங்களை இன்னும் பாவித்துக் கொண்டு ரூல்ஸ் என்ன அனுமதிக்கிறதோ அதை மட்டுமே தீர்ப்பாக எழுதி…. அப்படியே வாழ்கிறார்! ஒரு காட்சியில் வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் ஸ்லீவ்லெஸ் உடையில் வருவதால் அதை கோர்ட் விதிப்படி அனுமதிக்க முடியாது என்று வழக்கை எடுத்துக் கொள்ளாமல் இன்னொரு தேதிக்கு மாற்றி வைக்கிறார் 🙂

கதைப்படி நாராயண் காம்ப்ளே எழுதும் சில பாடல்களில் தற்கொலையைத் தூண்டும் விதமாக இருப்பதற்குக் காரணம் தலித்களின் நிலைமை அவ்வளவு கேவலமாக இருப்பதால், அவ்வாறு வாழ்வதற்குப் பதில் இறந்தே போகலாம் என்று நினைத்து அவர் எழுதுவதாகக் காட்டப்பட்டுள்ளது. அவர் அம்மாதிரி பாடல்கள் எழுதுவதால் தலித்களிடையே எழுச்சி ஏற்படும் என்று பயந்து போலிஸ் அவரை பொய் வழக்குகளில் கைது செய்கிறது. மேலும் இது மராத்திக் கதை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அங்கு நடப்பவைகளே இப்படத்தின் அடிநாதமாக உள்ளது. அரசு தரப்பு வக்கீல் குடும்பத்துடன் ஒரு நாடகத்துக்குச் செல்கிறார். அதில் பிற மாநிலத்தவர் மகாராஷ்டிரத்தில் வேலை செய்வதை எதிர்த்து வரும் காட்சிகளில் நாடகத்தில் பலத்த கைத்தட்டல் வரும். வக்கீலும் அவர் குடும்பத்தினருமே அக்காட்சியைக் கொண்டாடுவர்.

சாக்கடை அள்ளும் தொழிலாளியாகப் பணி செய்யும் ஒருவருக்குத் தற்காப்புக் கவசங்களோ, தேவையான கருவிகளோ கூட அரசாங்கம் தருவதில்லை என்று இந்த வழக்கு விசாரணையில் தெரியவரும். ஆயினும் அதைப் பற்றி நீதிபதியோ மற்ற எவருமே கவலைப்படமாட்டார்கள். நம் நாட்டில் எல்லாம் இப்படித்தான் என்று எடுத்துக் கொள்ளும் மனநிலையை நன்றாகக் காட்டுகிறார் இயக்குநர். இறந்தவரின் மனைவியை விசாரிக்கும்பொழுது அவர் தன் கணவர் துர்நாற்றத்தை சகித்துக் கொள்ள தினமும் குடித்துவிட்டு தான் சாக்கடை குழாய்க்குள் இறங்குவார் என்று சர்வ சாதாரணமாகச் சொல்வார். முகத்தில் துயரத்தின் சாயலே இல்லாமல் இயந்திரத் தன்மையுடன் அவர் கணவருடனான வாழ்க்கையையும், விபத்தையும் விவரிக்கும்பொழுது அவரின் துக்கத்தின் தாக்கத்தை இன்னும் ஆழமாக நம்மால் உணரமுடிகிறது.

இக்கதையின் சுவாரசியமே கோர்ட்டில் இருக்கும் முக்கியப் பாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இயக்குநர் காட்டும் விதம் தான். ஒவ்வொருவரின் கேரக்டரும் அதில் வெளிப்படுகிறது. அவரவர் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அரசு தரப்பு வக்கீல் ஒரு நடுத்தரவர்கத்தின் குடும்பத் தலைவி. அவளின் செயல்பாடுகளும் அப்படியே. நாராயண் காம்ப்ளேயின் வக்கீல் பணக்காரர் ஆனால் மனிதாபிமானம் மிக்கவர்.

கோர்ட் அறை, வளாகம், முக்கிய பாத்திரங்களின் வீடுகள், போலிஸ் ஸ்டேஷன், ஆகியவை துல்லியமாக வடிவமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு சின்ன விஷயமும் நுட்பமாக கவனித்து சேர்க்கப்பட்டுள்ளன. செட் டிசைனர் நிலேஷ் வாகுக்குப் பாராட்டுகள்.

நம்முடைய லீகல் சிஸ்டம் எப்படிப்பட்டது, அதன் அவலங்கள் என்ன என்பதை முழுமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது கோர்ட். இப்படத்தின் ஒரே குறை, படம் டாகுமெண்டரி போல இருப்பது தான். பின்னணி இசைத் தவிர வேறு இசை கிடையாது. படத்தின் குணத்தினால் நிசப்தமே பல இடங்களில் தேவையாக இருப்பதால் இசை அமைப்பாளரும் அதை உணர்ந்து அமைதி காத்துள்ளார்.

இப்படம் ஆஸ்கர் வெல்லுமா என்பது மற்ற நாடுகளில் இருந்து வந்திருக்கும் படங்களின் தரத்தைப் பொறுத்தே அமையும். வெற்றி பெற வாழ்த்துவோம் 🙂 சப் டைட்டிலுடுன் படம் உள்ளது. பார்க்கவும் 🙂

o-COURT-MARATHI-FILM-CHAITANYA-TAMHANE-facebook

கிரேசி மோகனுடன் ஒரு இனிய சந்திப்பு

crazy1

கிரேசி மோகன் பேச ஆரம்பித்தாலே ஒரு வரிக்கு ஒரு நகைச்சுவை துணுக்கு வரும்படி பேசுகிறார். அது அவர் இயல்பு. கூட இருக்கிறவர்கள் கொடுத்து வைத்தவர்கள். எப்பவும் சிரிப்பு மழை தான். அவருடைய தாரக மந்திரமே, “Take it easy. Life is crazy”! பேசும்போதே இதை நிறைய தடவை பயன்படுத்துகிறார்.

வெகு வேகமாகப் பேசுகிறார். அதாவது அவர் எண்ணங்கள் சொற்களாக மாறும் முன் அடுத்த எண்ணம் வந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. பழக மிகவும் எளிமையாக உள்ளார். காலையில் எழுந்தவுடன் சாப்பிட ரசம் சாதம் இருந்தால் அதைவிட என்ன வேண்டும் ஒருவனுக்கு என்று கேட்கிறார்.

 

crazy2

அவர் வரவேற்பு அறையில் நிறைய வெற்றி விழா கேடயங்கள் அலங்கரிக்கின்றன. மந்தைவெளியில் உள்ள அவர் வீடு தான் அவருக்கு சொர்க்கம். வெளிநாட்டில் நாடகம் நடத்தச் சென்றால் கூட எப்போ மந்தைவெளி திரும்ப வருவோம் என்று சென்னையை விட்டுக் கிளம்பியவுடனே நாட்களை எண்ண ஆரம்பிப்பது அவர் வழக்கம் என்று அவர் தம்பி கிரேசி பாலாஜி கூறுகிறார்.

அதற்கு கிரேசி மோகன் சொல்கிறார்: எனக்குக் கோடம்பாக்கம் போனால் கூட home சிக்னெஸ் வந்துவிடும். எல்லாமே எனக்கு மைலாப்பூர் மந்தவெளி தான். நான் படித்தது P.S. ஹை ஸ்கூல், விவேகானந்தா காலேஜ், கிண்டி இஞ்சினியரிங் காலேஜ். எங்க பாட்டி நான் கிண்டி இஞ்சினியரிங் காலேஜ் சேர்ந்த போது, விவேகானந்தா காலேஜிலேயே இஞ்சினியரிங் படிச்சிடு டா கிண்டி வரைக்கும் போக வேண்டாம்னு சொல்லியிருக்காங்கன்னா பார்த்துக்கங்களேன். நான் கலைத் துறையில் வளரக் காரணமா இருந்த K.பாலச்சந்தர் சாரும் கமல் சாரும் கூட மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை தான். மைலாப்பூரை  My love பூர் என்று தான் சொல்வேன்.

நீங்கள் எழுதுவதற்கு யார் அல்லது என்ன உங்கள் inspiration?

நான் நிறைய படிப்பேன். வியாசரை மறந்து போவோம். ஆனா மகாபாரதத்தை மறக்க மாட்டோம். சின்ன வயசில் இருந்தே நிறைய படிப்பேன். ல.ச.ரா, கி.வா.ஜ, நா.பார்த்தசாரதி, கல்கி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் எல்லார் எழுத்தும் படிப்பேன். என் மனைவி இரவில் படுக்க வரும்போது என்னை சுத்தி படுக்கைல இருக்கிற புஸ்தகங்களை எல்லாம் நகர்த்தி வெச்சுட்டு அவங்க இடம் பண்ணி தான் படுத்துப்பாங்க. என் நண்பன் சு.இரவி தான் எனக்கு கம்பன், காளிதாசன், காளமேகம் இவர்களை அறிமுகம் செஞ்சு வெச்சான். இவங்க தான் எனக்கு inspiration.

நல்ல ரசனையுள்ளவன் அனைத்து எழுத்தாளர்களையும் படிப்பான். என் எழுத்து தான் வேதம்னு என்னிக்குத் திமிர் வந்துச்சோ போச்சு! உடம்புல தொப்பை விழுந்தா ஜிம்முக்குப் போய் தொப்பையை குறைச்சுக்கலாம். மனசுக்கு தொப்பை விழுந்தா ரொம்ப ஆபத்து. அது வராம இருக்க நிறைய படிக்கணும்.

நீங்க படிக்கிற புத்தகங்கள் எல்லாம் சீரியஸ் ரகமா இருக்கே. எப்படி நகைச்சுவையா எழுதறீங்க?

இப்போ நான் நிறைய ஆன்மிகப் புஸ்தகங்கள் தான் படிக்கிறேன். ரமண மகரிஷி பற்றி, விட்டோபா, அரபிந்தோ, சேஷாத்திரி சுவாமிகள், இந்த மாதிரி books தான். நாம சாப்பிடற உணவு எப்படி ஒரு இரசாயன மாற்றத்தினால் நமக்கு பலத்தைத் தருதோ அது மாதிரி தான் நான் படிக்கிற ஆன்மிக புத்தகங்கள் எனக்கு நகைச்சுவையா எழுத ஆற்றலைத் தருது.

நான் ஆஸ்திகனோ நாஸ்திகனோ இல்லை. ஹாஸ்திகன். நான் தினம் கும்பிடற தெய்வம் பாக்கியம் இராமசாமி தான். அவர் எழுத்தை தினம் படிக்காம வெளிய கிளம்பமாட்டேன். ஜாலியா இருக்கிறது தான் வாழ்க்கைல முக்கியம்.

நிறைய பேர் கேட்டிருப்பாங்க அனா நானும் கேட்கிறேன். உங்கள் இந்த take it easy மனப்பான்மைக்கும், வெற்றிக்கும் காரணம் என்ன?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லுவார்கள். எனக்குப் பல பெண்கள். தப்பா நினைச்சுக்காதீங்க, முதல்ல என் பாட்டி, அப்புறம் என் அம்மா, என் மனைவி, கூட்டுக் குடும்பம் என்கிறதனால என் தங்கைகள்னு இவங்க எல்லாரும் தான் என் வெற்றிக்குக் காரணம். இதுல முக்கியமா நான் ஜானகி டீச்சரைப் பத்தி சொல்லியாகனும். அவங்க இப்போ பெங்களூர்ல இருக்காங்க, 85 வயசாறது. அவங்க தான் என்னை ஒண்ணாங் கிளாஸ் படிக்கிறப்போ அட்டை கத்தி கிரிடம் எல்லாம் போட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் டயலாக்கை மனப்பாடம் செய்ய வெச்சு ஸ்கூலா ஸ்கூலா காம்படீஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போவாங்க. எனக்கு டிராமாவை அறிமுகப் படுத்தி வெச்சவங்க அவங்க தான். அதனால தான் நான் ரஜினி படமா இருந்தாலும் சரி கமல் படமா இருந்தாலும் சரி என் சம்பளத்தைப் பத்திக் கூட பேச மாட்டேன், ஹீரோயின் பேர் ஜானகி, அதுக்கு மறுப்பு சொல்லக் கூடாதுன்னு உத்தரவாதம் வாங்கிப்பேன். என் நாடகங்கள்ல ஹீரோயின் பேர் எப்பவும் ஜானகி தான். நான் அவங்களுக்கு செய்யிற நன்றிக் கடன் இது.

crazy4

நீங்க டிவி சீரியல்கள் எதுக்கும் கதை எழுதுவதில்லையா?

டிவி சீரியல்கள் தயவு செய்து பார்க்காதீங்க. ஜவ்வு மாதிரி இழுக்கறாங்க. சாதாரணமா இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால். ஆனா டிவி சீரியல்ல இன்னிக்கு செத்தா நானூறாவது எபிசோடில் தான் பால், அதுக்குள்ளே பாடி வேற மாறி போயிருக்கும். டிவி சீரியல்ல எல்லா கெட்ட கேரக்டர்ஸும் வந்தாச்சு. கெட்ட மாமியார், துஷ்ட நாத்தனார், கெட்டுப் போன பத்தினி. உறவு முறைகளைக் கேவலப் படுத்த இதை விட முடியாது. நானும் டிவி சீரியல்கள் பண்ணியிருக்கேன். ஆனா அதெல்லாம் நகைச்சுவை வகை.

நீங்க இப்போ நிறைய வெண்பாக்கள் எழுதறீங்கன்னு கேள்விப்பட்டேன். அதில் எப்படி ஆர்வம் வந்தது? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் வர முக்கியக் காரணம் என் தாத்தா வேங்கட கிருஷ்ணன். நான் சாதாரணமா ஒரு கவிதை எழுதினாக் கூட காளிதாசன் மாதிரி எழுதற டா என்பார். அல்பத் தனமா ஒரு படம் வரைஞ்சாக் கூட ரவி வர்மா மாதிரி வரையரேன்னு சொல்லுவார். அவர் சொன்னதை நம்பிண்டு தான் நான் பின்னாடி எழுத்தையும் ஓவியத்தையும் develop பண்ணிண்டேன்.

ஒரு பதினேழு பதினெட்டு வயசுல பரணிதரனின் அருணாச்சல மகிமை படிச்சு எனக்கு ரமண மகரிஷியிடம் ஈர்ப்பு வந்தது. ரமண மகரிஷிக்கும் வெண்பா எழுதறது ரொம்பப் பிடிக்கும். அவர் தெலுங்கில், சமஸ்கிரதத்தில் எல்லாம் வெண்பா எழுதியிருக்கார். எனக்குக் கற்றுக் கொள்ள ஆர்வம் வர அதுவும் ஒரு காரணம். என் நண்பன் சு.இரவி தான் எனக்கு வெண்பா இயற்றவும் கற்றுக் கொடுத்தான். கிட்டத்தட்ட 450 வெண்பாக்கள் ரமண மகரிஷியின் மேல் இயற்றி இருக்கேன். அவர் முக்தியடையறதை வெண்பாவா எழுதும்போது விக்கி விக்கி அழ ஆரம்பிச்சுட்டேன். என்னாலேயே control பண்ண முடியலை. அப்போ உள்ளே வந்த மனைவி, “இதோப் பாருங்கோ வெண்பா எழுத வரலைன்னா இப்படி அழக் கூடாது. யாருக் கிட்டயாவது கேட்டா கத்துத் தரப்போறா”  அப்படீன்னா. எங்க வீட்டில எல்லாமே நகைச் சுவை தான்.

இரா.முருகனும் நானும் ஒரு சமயத்தில் வெண்பாவிலேயே பேசிக் கொள்வோம். அவ்வளவு பைத்தியம் ஆயிடுத்து. அவர் காலயில் ஒரு வெண்பா அனுப்புவார். அதற்குப் பதிலாக நான் அவருக்கு இன்னொரு வெண்பா அனுப்புவேன். நான் சாக்லேட் கிருஷ்ணாக்குப் பிறகு இன்னொரு டிராமா எழுதாம இருக்க இந்த வெண்பா மேல உள்ள அதிக ஈடுபாடு தான் காரணம். என் தம்பி பாலாஜி திட்டி திட்டி இப்போ தான் நான் கூகிள் கடோத்கஜன்னு அடுத்த டிராமா எழுத ஆரம்பிச்சிருக்கேன்.

சாக்லேட் கிருஷ்ணாவின் ஒவ்வொரு ஷோக்கு முன்னாடியும் ஒரு வெண்பா எழுதுவேன். தினம் ஹிந்து கேஷவ் கிருஷ்ணர் படத்தை வரஞ்சு எனக்கு அனுப்புவார். உடனே அதற்கு ஒரு வெண்பா எழுதி நான் பதில் அனுப்புவேன், அது தினம் நடக்கிறது.

keshav4

அழகவன் கோலம், அழகவன் ஜாலம்,

 அழகவன் லீலா அபங்கம் -பழக,

 அழகனவன் நட்போ, அலுக்காத கற்பு,
பொழுதுமவன் பொற்பைப் புணர்

….கிரேசி மோகன்….

 

 

keshav1

காய்ச்சிய பாலுரை குத்தத் தயிராகும்,

 ஆய்ச்சியர் பாடி அவனுறையூர், –மேய்ச்சல்

 மனன்யன்  முகுந்தன் மடியேந்தி தாளால்,

 அனன்யபக்தி ஆவுக்(கு) அளிப்பு’’

கிரேசி மோகன்….

 

 
keshav2

சோவர்த்த மானமழை தேவர னர்த்தமாய்,

ஆவர்த்த மானம் அதில்நனைய , –கோவர்த்

தனத்தையன்று சுண்டுவிரலால் தாங்கி,   தலையின்(இந்திரன்)

கனத்தையன்று கர்வபங் கம்”

….கிரேசி மோகன்….

 

keshav5

விளக்கீசல் போலே, வியனுலகில் ஈசா,
உளத்தாசை கொண்டிங்(கு) உதிர்ந்தேன், –அளப்பரிய,
ஆதியே உந்தனனு பூதியில் மூழ்கிடும்,
தேதியைச் சொல்லியெனைத் தேற்று

….கிரேசி மோகன்….

 

சில சமயம் ஏதாவது புஸ்தகம் படிக்கும் போது சில வெண்பாக்கள் தோன்றும்.

கீதா விளக்கம் ‘’ஞானேஸ்வரி’’ படிக்கையில், கண்ணன் அர்ஜுனனுக்கு சொல்வது….

‘’மரண(ம்)அமு  துக்குண்டோ !மேகம்கண்(டு)  அஞ்சி,

 கரணம்  அடிக்குமோ  காற்று!, –தருணம்

 இருளென்று  பானு  இயங்காது  போமோ!,

 உறவென்(று)  உருகா(து)  உழை’’

….கிரேசி மோகன்….

’’தூங்கும் முன் தோன்றியது’’….

பாட்டுக்கு  நாச்சியார், பரவசம்  மீராவால்,

 கூட்டுக்கு  ராதை, குவலயப் -பாட்டுக்கு(பாடு),

 பாரதம்வீட்டுக்கு(வீடு) பாகவதம்மாட்டுக்கு

 பேரிதம்  சேர்க்கப் பிறப்பு’’

….கிரேசி மோகன்….


‘’நோகா  வரம்பெற நோய்நொடி  நாடாதே,

  சாகா  வரம்கூட  சாத்தியமே, –யோகா

  நிலையாமை  நீக்கி நிரந்தரம்  சேர்க்கும்,

  கலையாம் அதுபாது காப்பு’’

….கிரேசி மோகன்….

 

என் பேத்தியோடு போகோ பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போ தோன்றியது இது.

 ‘’ஈகோவை விட்டு இரைந்து சிரித்திடப்

  போகோவைப் பார்பேரன் பேத்தியொடு, –ஆகாகா!

  சாகா வரம்பெற்ற சோட்டாபீம் கார்டூனால்,

  தேகாபி மானம் தொலைப்பு’’

….கிரேசி மோகன்….

 

இன்றைய தமிழகத்தில் எழுத்தாளர்களின் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?

நான் சினிமா இன்டஸ்ட்ரிக்கு வந்தது கமலஹாசனோட விசிடிங் கார்ட் வைத்து. என்னை முதலில் சினிமாவில் அறிமுகப் படுத்தியதே கேபி சார் தான். அதனால் நான் ஒரு blue eyed boy. இங்கே நான் ஒரு கஷ்டமும் பட்டதில்லை. என் டயலாக்கை எந்த இயக்குநரும் கட் பண்ணியதில்லை, மாத்தச் சொன்னதில்லை. ஆனா எல்லாருக்கும் இந்த நிலைமை இல்லை. ஆனானப்பட்ட சுஜாதாவே சரியான முறையில் போற்றப் படவில்லை என்பது என் கருத்து. நான் ஒரு நாள் சாயங்காலம் ரெக்ஸ் கடைப் பக்கம் நடந்துண்டு இருக்கேன், சுஜாதா வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ். மாடிக்குப் போனா அவர் மூச்சு விட சிரமப்பட்டுண்டு இருக்கார். அப்பவும் எதுக்கு வந்திருக்க, என்னன்னு விசாரிக்கிறார். அதற்குள் அபோல்லோ ஆம்புலன்ஸ் ஆளு ஸ்டெரச்சரை தூக்கிண்டு மேலே வரான். ஆனா ஒருத்தன் தான் ரெண்டு பேர் கூட அந்த அம்புலன்சில் இல்லை. அந்த பில்டிங்கில் லிப்ட் work பண்ணலை. நான், அவர் பிள்ளை, அந்த ஆம்புலன்ஸ் ஆளு மூணு பேருமா அவரை சேரில் வைத்துத் தூக்கிக் கொண்டு வந்து ஆம்புலேன்சில் ஏத்தினோம். நீல் சைமன்னு ஒருத்தன், சுஜாதாவின் கால் தூசுக்கு வரமாட்டான். வெளிநாட்டு எழுத்தாளர்  . அவன் வீட்டில் ஹெலிபேட் இருந்தது. வெளிநாட்டில் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு மதிப்பு. ஆனா இங்கே எழுத்தாளர்களின் நிலை அப்படி இல்லை. பல பழைய எழுத்தாளர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமை நிலையில் இருக்கின்றன. அவர்களுக்கு என்னால் ஆன சிறு உதவிகளை செய்து வருகிறேன்.

 

கிரேசி மோகனுக்கு “நமது திண்ணை” சார்பாக கூகிள் கடோத்கஜன் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்தி விடை பெற்றேன் J

நன்றி @keshav61 அவரின் கண்ணனின் வண்ண ஓவியங்களை இங்கே போட அனுமதித்ததற்கு.

 

 

ஜூன் மாத ‘நமது திண்ணை’ இணைய இதழில் வந்த நேர்காணல்.

தனி ஒருவன் – திரை விமர்சனம்

thani oruvan

நல்ல படம்! கதை – மோகன் ராஜா & சுபா, இயக்கம் – மோகன் ராஜா, கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் கடைசி நொடி வரை விறுவிறுப்புக் குறையாத ஒரு நல்ல படைப்பு “தனி ஒருவன்.” ஜெயம் ரவிக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும் ஒரு பாத்திரம். தூள் கிளப்பியிருக்கார். வில்லனும் ஹீரோவும் ஒருவருக்கொருவர் ஈடு கொடுத்து ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்திருப்பது ராஜாவின் வெற்றி. வாழ்த்துகள்! ‘தனி ஒருவன்’ வெற்றி என்றாலும் கதை, திரைக் கதை, வசனம், நடிப்பு, எடிடிங், பின்னணி இசை, ஒளிப்பதிவு, எல்லாமே சேர்ந்து தான் மொத்த பேர்களின் பங்களிப்போடு வெற்றியாக அமைந்துள்ளது 🙂

அரவிந்த் ஸ்வாமிக்குள் இப்படி ஒரு உன்னத நடிகர் இத்தனைக் காலம் ஒளிந்து கொண்டு இருந்தாரா? அவர் அழகுக்காக அந்தக் காலத்தில் ஒரு பெண்கள் கூட்டம் அப்படி அவரை வழிபடும். இப்போ இந்தப் படத்துக்குப் பிறகு திரும்ப விட்ட இடத்தில் இருந்து அது தொடர எக்கச்சக்க வாய்ப்புள்ளது 🙂

ஜெயம் ரவி & அரவிந்த் சுவாமி இருவருமே கம்பீரம்! அலட்டல் இல்லாமல் நடித்திருப்பது மிகச் சிறப்பு. மிக மிக நேர்த்தியாக பாத்திரங்களின் படைப்பு. உளவியல் காரணங்களை நன்கு அலசி ஒவ்வொரு பாத்திரமும் கவனத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. நிறைய ஓட்டைகள் உள்ள திரைக் கதைகளை பார்த்துப் பார்த்து சலித்த நமக்கு உருப்படியான ஒரு கதையம்சம் உள்ள ஒரு படத்தைப் பார்த்தத் திருப்தி இதில் கிடைக்கிறது. (அதாவது ஓட்டைகள் குறைவு). ஷாட்டுக்கு ஷாட் சுவாரசியங்கள் கூடிக் கொண்டே போகிறது.

எப்படி திரைக் கதை ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்டோ அதே மாதிரி வசனங்களும். கூர்மையாக, கருத்துச் செறிவுடன் அமைந்து படத்துக்கு வலு சேர்க்கின்றன. ஹீரோயினை அச்சு பிச்சு என்று காட்டாமல் அவரையும் கதைக்குத் தேவையான ஒரு பாத்திரமாகப் படைத்ததற்கு இயக்குநருக்கு ஒரு மிகப் பெரிய நன்றி. நயன்தாரா சிறப்பாக செய்திருக்கிறார்.

படத்தில் அரவிந்த் சுவாமி மிக suave வில்லனாக வருகிறார். மிக focussed ஆன கர்ம வீரனாக ஜெயம் ரவி வருகிறார். பேராண்மையில் பார்த்த ரவியின் நடிப்புச் சாயல் இதிலும் வருவதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

தேவை இல்லாமல் ஒரு டூயட். அதுக்குக் கத்திரி போட்டிருக்க வேண்டும். அதுவும் தவிர முதல் பாதி கொஞ்சம் நீளமாக உள்ளது. அதிலும் எடிட்டர் கருணை பார்க்காமல் சில சீன்களை வெட்டி இருக்கலாம். அதைத் தவிர குறை என்று சொல்ல வேறு ஒன்றும் இல்லை. ஹிப் ஹாப் தமிழா பின்னணி இசை ஒகே.

தம்பி ராமையா, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், வம்சி கிருஷ்ணா, ஹரிஷ் உத்தமன், முக்தா கோட்சே ஆகிய அனைவருமிடம் இருந்தும் சோடை போகாத நடிப்பு! ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறு மில்லிமீட்டர் சிப்பே சொந்தமடா என்று பாடுமளவுக்கு படத்தில் டெக்னாலஜி நிறைய பயன்படுத்தப் பட்டிருக்கிறது. குழப்பமில்லாத ஒரு நல்ல த்ரில்லர்.

Jayam Ravi, Nayanthara in Thani Oruvan Movie Stills

Jayam Ravi, Nayanthara in Thani Oruvan Movie Stills

நீ தானே என் பொன் வசந்தம் – திரை விமர்சனம்

J

ரொம்ப லோ எக்ஸ்பெக்டேஷனோடு தான் சென்றேன். ஆனாலும் டிசப்பாயின்ட்மென்ட்  என்றால் என்னத்த சொல்ல! இளையராஜாவிடம் அழகான பாடல்களை எப்படியோ கறந்து விட்டார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்புறம் அந்தப் பாடல்களை பயன்படுத்த ஏதோ கதை பண்ணியுள்ளார். பாவம் இளையராஜா. ரீ ரிகார்டிங் போது நொந்து போய் பல இடங்களில் அமைதி காக்கிறார்.

கதை & திரைக்கதை, இயக்குனரைத் தவிர வேறொருவர் செய்ய வேண்டிய கட்டாயத்தைப் புரிய வைத்திருக்கிறது நீ தா எ பொ வ. கௌதமுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது. அரைத்த மாவையே அரைப்பதால் என்ன பயன்? விண்ணை தாண்டி வருவாயாவில் தோன்றிய சில மீந்துபோன எண்ணங்களை இந்தப் படத்தின் முழுக் கதையாக மாற்ற முயற்சி செய்து பெரும் தோல்வியை தழுவியிருக்கிறார் இயக்குனர்.

சமந்தா ரொம்ப நன்றாக நடித்துள்ளார். மிகவும் அழகாகவும் உள்ளார். பதின் பருவத்தில் இருந்து நடு இருபதுவயது வரை கனகச்சிதமாக அவர் முகமும் உடல் அமைப்பும் பொருந்துகிறது. அவரே பேசி நடித்திருப்பது அவர் பாத்திரத்துக்கு மேலும் உயிர் கொடுக்கிறது. ஜீவா நடிப்பிலும் குறை இல்லை. குறை எல்லாம் கௌதம் மேல் தான் (இதில் ஒரு பாடல் வேறு பாடியுள்ளார்)  ஒரே டயலாக் திரும்ப திரும்ப. என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. பெண்களைக் சித்தரித்திருக்கும் விதமும் வரவேற்கும்படியாக இல்லை. காதலைச் சொல்வதில் இவர் ஒரு அதாரிட்டி மாதிரி தன்னைக் காட்டிக் கொள்வதில் அவர் ஈகோ தான் முன் நிற்கிறது.

சந்தானத்தை வைத்து செண்டிமெண்டுக்காக வி தா வ வீட்டையும் கனேஷையும் வேற கதையின் நடிவில் புகுத்தியுள்ளார். எந்த செண்டிமென்ட்டினாலும் இந்தப் படத்தைக் காப்பாற்ற முடியாது. நடிகர் மோகன் ராமின் மகள் வித்யுலேகா ராமன் நன்றாக நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு விமர்சனம் என்று சொல்லி மேலும் எழுதி என் நேரத்தை விரயமாக எனக்கு விருப்பம் இல்லை.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – திரை விமர்சனம்

natuvula

விழுந்து விழுந்து சிரித்து நல்ல வேளை வயிறு புண்ணாகவில்லை எனக்கு ஆனால் தொண்டை தான் கொஞ்சம் வலிக்கிறது 🙂 ஒரு சின்ன அசம்பாவிதம், பெரிய அதிர்ச்சி! அந்த சம்பவத்தை மட்டுமே வைத்து மூன்று நாட்கள் போராடும் நண்பர்களின் திண்டாட்டத்தை ரசிகர்களாகிய நமக்குக் கொண்டாட்டமாக தந்திருப்பது பாலாஜி தரணீதரனின் இயக்கத்தின் அசாத்திய திறமையைக் காட்டுகிறது.

சின்ன பட்ஜெட் படம். நோ குத்துப்பாட்டு, நோ பைட் சீக்வன்ஸ், நோ வெளிநாட்டு டூயட், நோ பெரிய நடிகர்கள், நோ செட் – ஆனால் அற்புத படைப்பு! டயலாக் கூட நிறைய எழுதும் சிரமம் வைக்கவில்லை. ஒரே டயலாக் பலப் பல முறை ரிப்பீட்டு. படம் பார்த்தவர்களுக்கு புரியும் நான் என்ன சொல்கிறேன் என்று 🙂 இத்தனை நகைச்சுவையாக படம் எடுத்த அந்த குழுவிற்கு ஒரு பெரிய பாராட்டு பொக்கே!

பீட்சா பேம் விஜய் சேதுபதி, அவரின் மூன்று நண்பர்கள் பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஸ்வரன் அனைவரும் மிக இயல்பான நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். நட்பின் ஆழத்தைக் காட்டும் இப்படம் நண்பர்களுடன் சென்று பார்த்து அனுபவிக்க ஒரு சிறந்த  கேளிக்கை விருந்து. திரை அரங்கில் சிரிப்பலைகள் கடலலைகள் போல தொடர்ந்து எழும்பி அடங்குகின்றன.

இந்த படத்திற்கு இசை வேத் ஷங்கர் சுகவனம். இவர்  ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை கல்லூரி மாணவர். பின்னணி இசையும் ஆண்ட்ரியா பாடியுள்ள ஒரு பாடலும் நன்றாக உள்ளது.

இது ஒரு உண்மை சம்பவம். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் வாழ்க்கையில் நடந்ததை அப்போது அவர் கூட இருந்த பாலாஜி திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார். கடைசியில் உண்மை பாத்திரங்களும் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள். நிச்சயமாக மிஸ் பண்ணாதீர்கள், இரண்டு காரணங்களுக்காக. ஒன்று, ஒரு இரண்டரை மணி நேரம் நம் கவலைகளை மறந்து சிரிக்கலாம். இரண்டு, இந்த மாதிரி முயற்சிகளை ஊக்குவித்தால் தான் மேலும் நல்ல படங்கள் வர வாய்ப்பிருக்கிறது.