தேவ் – திரை விமர்சனம்

சில படங்கள் எல்லாம் எதுக்கு எடுக்கறாங்கன்னே புரிவதில்லை. தயாரிப்பாளரிடம் பணம் கொட்டிக் கிடந்தால் தான தர்மமோ அல்லது கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு ஏதாவது உதவித் தொகையோ கொடுத்து மகிழலாம். இப்படி படம் எடுத்து படுத்த வேண்டாம். கார்த்தியும் தன் பட பட்டியலில் இன்னொரு படம் சேர்த்தாகிவிட்டது என்று எண்ணிக்கைக்காக இந்தப் படத்தை செய்தாரா என்றும் புரியவில்லை. காதலர் தினத்துக்கு ஒரு காதல் கதை வைத்தத் திரைப்படத்தை வெளியிடனும்னு முயற்சி செஞ்சிருக்காங்க. முயற்சி மட்டும் தான். கார்த்தியின் மற்றைய கமர்ஷியல் படங்களைவிட கொஞ்சம் கம்மி தான் இந்தப் படம். புதுமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் 2 மணி நாற்பது நிமிடங்களுக்கு நல்லா இழுத்து வெச்சு அறுக்கிறார்.

கார்த்தி, ஆர்.ஜெ. விக்னேஷ், அமுதா ஸ்ரீநிவாசன் மூன்று நண்பர்களும் பணத்துக்குக் கவலை இல்லாத இருபத்தி எட்டு வயது இளைஞர்கள். யுக்ரேயினில் போய் மேல் படிப்புப் படித்து திரும்பி வருகின்றனர். இதில் கார்த்தியின் அப்பா பிரகாஷ் ராஜ் பெரும் பணக்காரர் என்று தெரிகிறது. பணத்தைப் பற்றி கவலை இல்லாததால் கார்த்திக்கு அட்வென்சரில் மோகம் அதிகம், அதனை செய்வதே வாழ்க்கை என்று இருக்கிறார். ஆனால் அதை வசனத்தில் மட்டும் சொன்னால் சாகசம் புரிவதில் ஆர்வம் உள்ளவர் என்று எப்படி புரிந்து கொள்வது? இது நாவல் அல்லவே, திரைப்படம்!முதல் பாதி முழுக்க சவசவ என்று போகிறது. நாயகி ரகுல் பரீத் சிங் 25 வயதில் பெரிய பிசினஸ் மேக்னெட், அமேரிக்கா வாழ் பெண்மணி. அட்வெஞ்சருக்காக அவரை லவ் பண்ண தூண்டுகின்றனர் நண்பர்கள் இருவரும். அதனால் கார்த்தியும் அவருக்கு பேஸ்புக்கில் ப்ரென்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து ஒப்புதலுக்குக் காத்து நிற்கிறார். ஆனால் ஒப்புதல் வரவில்லை. அதற்குப் பதில் ரகுல் ப்ரீத்தே பிசினஸ் விஷயமாக சென்னை வந்துவிடுகிறார். பின் இவர் அவரை பாலோ செய்து இத்யாதி இத்யாதி. அவர் அம்மா ரம்யா கிருஷ்ணன். பாவம் பிரகாஷ் ராஜும் சரி ரம்யா கிருஷ்ணனும் சரி ரொம்ப சாதாரண பாத்திரங்களில் வந்து போகின்றனர் . அனால் அவர்கள் அனுபவம் அந்த உப்பு சப்பில்லாத பாத்திரங்களையும் நன்றாக செய்ய வைத்திருக்கிறது.

எல்லாருமே நம் அனுபவத்தினால் ஏற்பட்ட விருப்பு வெறுப்புக்களுடன் தான் வளைய வருகிறோம். ரகுல் ப்ரீத்திற்கு தன் அப்பா தன் அம்மாவை கைவிட்ட கோபத்தினால் ஆண்கள் மேல் நம்பிக்கையின்மையும் வெறுப்பும் உள் மனத்தில் ஆழ பதிந்து விடுகிறது. கார்த்திக்கு அம்மா இறந்துவிட்டதால் நிபந்தையற்ற அன்பைப் பொழியும் அப்பாவால் வளர்க்கப்பட்டு சூப்பர் ஆணாக உள்ளார். இருவருக்கும் காதல் உண்டான பிறகு கார்த்தி எப்பொழுதும் ரகுலை கைவிட மாட்டேன் என்று அழுத்தி நம்பும்படி தெளிவாக சொன்ன பிறகு ரகுல் முழுதாக கார்த்தியை நம்பத் தொடங்குகிறார். ஆனாலும் அவர்கள் காதலில் பிரிவு ஏற்படுகிறது. ரகுலுக்கு கார்த்தி தன்னோடு மட்டுமே ஜாலியா வேலையில்லா பட்டதாரியாக  இருக்க வேண்டும், அப்பா தொழிலை எல்லாம் பார்க்கக்கூடாது, அப்படி பார்த்தால் தன் மேல் அவர் செலுத்தும் கவனம் போய்விடும் என்று கோபப்பட்டு பிரிந்து விடுகிறார். இறுதியில் உன்னதமான காதலின் ஆழத்தால் இருவரும் ஒன்றாக இணைகிறார்கள்.

இதில் முதல் காட்சியும் கடைசி காட்சிகளும் கார்த்தி எவரெஸ்ட் சிகரத்தைத் தொட இமய மலை ஏறுவதாக காட்டப்படுகிறது. எவரெஸ்ட் மலை, இமய மலை எல்லாமே CG தான். நாம் நம் பிள்ளைகளுக்குப் பள்ளி ப்ராஜெக்டுக்குப் பனி மலை செய்து கொடுப்போம். பல இடங்களில் மலை சிகரமும் பனி வெளியும் கிட்டத் தட்ட அந்த மாதிரி காட்சிகளாக உள்ளன. சூப்பர் இயக்குநர் சார்!

பொதுவாக காதல் கதைகளுக்குப் பாடல்கள் பலமாக இருக்க வேண்டும். ஹேரிஸ் ஜெயராஜ் அருமையாக சொதப்பியிருக்கிறார். ஒரு பாடல் கூட நினைவில் இல்லை. இந்தக் கதையில் லாஜிக் தவறுகள் எல்லாம் குறிப்பிட வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனாலும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.சென்னையில் இருந்து மும்பய்க்கு காதலியை பார்க்க கார்த்தி பைக்கில் ஓர் இரவில் போய் சேருகிறார். அப்பொழுது ஒரு வசனத்தில் 22மணி நேரத்தில் வந்துவிட்டேன் என்பார். ஓர் இரவு 12 மணி நேரம் தானே? அவர்கல் இருவரும் திரும்ப சென்னை போகும் போது 36 மணி நேரமாகும். ஆன்வேர்ட் பயணத்தில் பயணித்து இருக்கவேண்டிய அந்த 10 மணி நேரத்தை ரிடர்ன் பயணத்தில் சேர்த்து விடுகிறார் போலிருக்கிறது.

படத்தின் கடைசி அரை மணி நேரம் தான் ரொம்ப சோதிக்கிறது. கார்த்திக்கு நல்ல டேலன்ட் இருக்கிறது, அழகு, உடலமைப்பு அனைத்தும் நன்றாக உள்ளன. நன்றாகவும் நடிக்கிறார். ஏன் இந்த மாதிரி பாத்திரங்களை தேர்வு செய்கிறார் என்று புரியவில்லை. சரி நகைச்சுவையாவது இருக்கா என்றால் அதுவும் சுத்தம்! இதில் இவர் நண்பர் பாத்திரமே ஸ்டேன்ட் அப் காமெடியன்! ஸ்டன்ட் காட்சிகள் எல்லாம் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்கின்றன, இவர் மாஸ் ஹீரோ அல்லவா?

வெளிநாட்டு படப்பிடிப்பில் இயற்கைக் காட்சிகள் அருமைபடத்தில் கார்த்தி ரொம்ப ட்ரிம்மாக உள்ளார். அவரின் உடைகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் நன்றாக நடித்துள்ளார். அவருக்கு இயல்பாகவே செயற்கைத் தனம் இல்லாத நடிப்புத் தன்மை உண்டு. அது தான் அவரின் பலம். நாம் அதை நம்பி தான் அவர் படத்துக்குப் போகிறோம். இப்படி படத்தில் கதையே இல்லாமல் ஏமாற்றினால் எப்படி நம்பி அடுத்து வரும் அவர் பாடத்துக்குப் போவது?

 

 

 

பேரன்பு – திரை விமர்சனம்

தங்க மீன்கள் படத்துக்குப் பிறகு அடுத்த லெவலில் படம் தந்துள்ளார் ராம். தங்க மீன்கள் சாதனா தான் இதிலும் மாற்றுத் திறனாளியாக ஸ்பாஸ்டிக் குழந்தையாக நடித்துள்ளார். அந்தக் குழந்தையை பதின்ம பருவத்தில் தன் பொறுப்பில் தனியாக வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் அப்பாவான மம்முட்டி. இந்த மாதிரி கதையை படமாக்க நிறைய நிறைய ஹோம்வர்க் செய்ய வேண்டும். அதை செவ்வனே செய்திருக்கிறார் ராம். ஒரு நல்ல சமூக கருத்தை திரைக்கதை வடிவாக நம் முன் வைக்க சினிமா எனும் ஊடகத்தின் மேல் passion இருக்க வேண்டும். அதுவே ராமின் வெற்றி.

நிறைய சம்பவங்கள் நிறைந்த திரைக்கதை. பத்து அத்தியாயங்கலில் விவரிக்கிறார், விவரிப்பது மம்முட்டி. படத்தின் பெரும்பகுதி திக் திக்கென்றே இருந்தது. ஏனென்றால் பதின்ம வயதுப் பெண்ணை (பாப்பா) தனியாக பாதுகாக்கிறார் (அமுதவன்) மம்முட்டி. பாப்பா தனியாக பல சமயங்களில் இருக்க வேண்டிய சூழல், நம் ஆண்களின் போக்கும் நமக்கு தெரிந்ததே. ஒவ்வொரு சூழலிலும் அவள் பேராபத்தில் விழாமல் இருக்க வேண்டுமே என்று பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் படம் பேரன்பு.

படத்துவக்கம் மகள் அப்பாவிடம் திணிக்கப் படுவதுடன் ஆரம்பிக்கிறது. அம்மா குடும்ப அழுத்தம் தாளாமல் வேறொருவருடன் போய்விடுகிறார். அதற்கு மம்முட்டியும் ஒரு காரணம். 12 வயது வரை பெண்ணைப் பற்றிய பொறுப்பில்லாமல் இருந்ததற்கு தனி ஒரு ஆளாக திடீரென்று மகளை பேணி காக்க வேண்டிய நிர்பந்தம். ஆனாலும் மகள் தந்தை பாசம் மெதுவாக ஆரம்பித்து அழுத்தமாக வளர்ந்து எவ்வளவோ சிரமத்திலும் மகளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள அவர் செய்யும் செயல்கள் ஒன்பது அத்தியாயங்களில் விரிகிறது. அவை புது யுகத்தவையும் கூட.

படத்தில் மிகவும் பிடித்தது அமைதியாக செல்லும் திரைக் கதை தான். அதுவும் முதல் பாதி எதோ ஒரு மலைப் பிரதேசத்தில் யாரும் இல்லாத அத்துவான காட்டில் அமைந்த அழகிய வீடும், நதியும், பரிசலும் கவிதையாக உள்ளது. ஆனால் கவிதை சோகம் இழையோடியது, மிகவும் சிக்கலான ஒரு செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணை சுற்றிய கதை என்பதால். அவள் வயதுக்கு வருவதும், திகைத்துத் தடுமாறிய தந்தை, ஆனால் அடுத்து செய்ய வேண்டியவற்றுக்கு உதவி தேடி அழைத்து வந்து, இன்னொரு சமயத்தில் அவளே தான் ஒரு பெண் என்பதை உணர்ந்து அப்பாவிடம் சேனிடரி பேட் மாற்றிக் கொள்ள தயங்கி தன்னாலும் செய்து கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு, ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி பெற வைத்து என்று இதுவரை சினிமாவில் கையாளப்படாத சென்சிடிவ் ஆன விஷயங்களை நாகரீகமாக சொல்லி இயக்கியுள்ளார் ராம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் மம்முட்டி. பல சமயங்களில் ஒரு நடிகரை அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டார் என்று சொல்லுவோம். இதில் நான் மம்முட்டியை பார்க்கவே இல்லை. பாப்பாவின் அப்பா மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தார்.

அமைதியான மலைப் பிரதேசத்தில் இருந்து ஏமாற்றப்பட்டு கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த நிலையில் இருந்த மகளுடன் மம்முட்டி வேலைத் தேடி நகரத்துக்கு வந்து அங்கு சீப்பான விடுதிகளில் தங்கும் நிலைமையிலும், அடுத்தடுத்து காப்பகம், நண்பர் என்று உதவி கேட்டு தடுமாறி, ஓடிப்போன மனைவியின் வீட்டுக்கே சென்று மகளை அவர் பார்த்துக் கொள்ள மாட்டாரா என்று பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகி கடைசியில் என்ன மாதிரி முடிகிறது கதை என்பதை கண்டிப்பாக வெள்ளித் திரையில் காணவேண்டும். அற்புதமாக கோர்வையாக கதையை நகர்த்தி செல்கிறார் இயக்குநர். அருமையான வசனங்கள்.

அஞ்சலியின் பத்திரம் சிறிதே எனினும் மனத்தில் நிற்கிறார். அஞ்சலி அமீர் என்னும் திருநங்கையும் கதைக்கு நல்ல திருப்பம், நல்ல மெஸ்சேஜ். யுவன் சங்கர் ராஜாவின் இசை மிக நன்று. முக்கியமாக பின்னணி இசை தான். பாடல்கள் மனத்தில் நிற்கவில்லை. அனால் இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தால் இப்படம் ஓர் உன்னத காவியமாகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீகர் பிராசாத்தின் படத்தொகுப்பு அற்புதம். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு அதைவிட அருமை.

மிகவும் கடினமான கதை. இந்த மாதிரி மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஓர் அப்பாவாக மம்முட்டி படும் வேதனை பல இடங்களில் நம்மை அழ வைக்கிறது. செரிபரல் பால்சி வந்த பெண்ணாக சாதனா எப்படி தான் நடித்தாரோ தெரியவில்லை. மிக மிக கடினமான உழைப்பு. ராம், மம்முட்டி, சாதனா அனைவருக்குமே விருது கிடைக்கவேண்டிய அளவு உழைப்பு உள்ளது.

பல சமயங்களில் மிக மெதுவாக செல்லும் திரைக்கதை படத்தின் பலவீனம். அவ்விடங்களில் தான் இது ஒரு ஆர்ட் பில்ம் என்று எண்ண வைக்கிறது. கதையே இல்லாமல் வரும் படங்களின் நடுவே நெகிழவைக்கும் கதையுடன் ஒரு நல்ல படம் இது.