தாய் மண்ணே வணக்கம்! A.R.Rahman concert

ARR1

What an amazing experience! It was both unbelievable and awesome. Today I realised why Rahman is God 🙂 He is so vibrant, energetic, full of love and a perfectionist!

The start was not great. It was raining the whole day making us wonder if we will even attend the concert. But with some relief from the rain in the evening, we went to the concert with great hopes that it will not rain. We stood in slushy mud for an hour before a commotion started by the restless ticket holders and eventually we were allowed to get in. There were not enough chairs. To add to all this woe it started raining, initially lightly and then quite heavily. But I saw how undaunted Rahman fans are. Not one budged. Then Rahman arrived on the stage as to the recital of the poem உடல் மண்ணுக்கு  உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகுக்கு!  and the audience burst into a frenzy and all was well 🙂

He had picked such lovely numbers that made the show a grand success. All songs were in Tamil. He started with the patriotic song from Swadesh. The second number itself was from Kadal, Elay keechaan! All songs from Kadal were sung, every one of them beautifully rendered by the original singers. Mr and Mrs Mani Ratnam were present as also Rajeev Menon and director Shankar. Hariharan and Mano sang a medley of his hit songs. Unfortunately Hariharan made a faux pas. He forgot his Tamil lines for the Roja song and switched to the Hindi words 😦 Through out Rahman was present on the stage either singing or playing a musical instrument which was such a joy to behold. Every instrument that he handled, he handled with ease and poise. His wardrobe was exceptionally good. Who ever designed them did a good job and he did a costume change five times I think.

There was an unplugged session with a new instrument which sounded like the Veena but was like a synthesiser. He played beautifully, though he said he was just learning to play it  and Chitra was awesome with him. There were a host of singers including Karthik, chinmayi , Benny, Neeti Mohan and others. Rahman belted out each song with so much enthusiasm and joy that the whole one lakh audience were just enthralled. The dancers in the background were very good, quality of production to be really applauded. People just sang along with the singers for Mustafa Mustafa , Adiye, Jai Ho and Vande Maataram.

The ads in between were quite annoying and the concert seemed a little short but I felt it was worth the money spent! I haven’t enjoyed this much in any event in recent times 🙂

நீ தானே என் பொன் வசந்தம் – திரை விமர்சனம்

J

ரொம்ப லோ எக்ஸ்பெக்டேஷனோடு தான் சென்றேன். ஆனாலும் டிசப்பாயின்ட்மென்ட்  என்றால் என்னத்த சொல்ல! இளையராஜாவிடம் அழகான பாடல்களை எப்படியோ கறந்து விட்டார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்புறம் அந்தப் பாடல்களை பயன்படுத்த ஏதோ கதை பண்ணியுள்ளார். பாவம் இளையராஜா. ரீ ரிகார்டிங் போது நொந்து போய் பல இடங்களில் அமைதி காக்கிறார்.

கதை & திரைக்கதை, இயக்குனரைத் தவிர வேறொருவர் செய்ய வேண்டிய கட்டாயத்தைப் புரிய வைத்திருக்கிறது நீ தா எ பொ வ. கௌதமுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது. அரைத்த மாவையே அரைப்பதால் என்ன பயன்? விண்ணை தாண்டி வருவாயாவில் தோன்றிய சில மீந்துபோன எண்ணங்களை இந்தப் படத்தின் முழுக் கதையாக மாற்ற முயற்சி செய்து பெரும் தோல்வியை தழுவியிருக்கிறார் இயக்குனர்.

சமந்தா ரொம்ப நன்றாக நடித்துள்ளார். மிகவும் அழகாகவும் உள்ளார். பதின் பருவத்தில் இருந்து நடு இருபதுவயது வரை கனகச்சிதமாக அவர் முகமும் உடல் அமைப்பும் பொருந்துகிறது. அவரே பேசி நடித்திருப்பது அவர் பாத்திரத்துக்கு மேலும் உயிர் கொடுக்கிறது. ஜீவா நடிப்பிலும் குறை இல்லை. குறை எல்லாம் கௌதம் மேல் தான் (இதில் ஒரு பாடல் வேறு பாடியுள்ளார்)  ஒரே டயலாக் திரும்ப திரும்ப. என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. பெண்களைக் சித்தரித்திருக்கும் விதமும் வரவேற்கும்படியாக இல்லை. காதலைச் சொல்வதில் இவர் ஒரு அதாரிட்டி மாதிரி தன்னைக் காட்டிக் கொள்வதில் அவர் ஈகோ தான் முன் நிற்கிறது.

சந்தானத்தை வைத்து செண்டிமெண்டுக்காக வி தா வ வீட்டையும் கனேஷையும் வேற கதையின் நடிவில் புகுத்தியுள்ளார். எந்த செண்டிமென்ட்டினாலும் இந்தப் படத்தைக் காப்பாற்ற முடியாது. நடிகர் மோகன் ராமின் மகள் வித்யுலேகா ராமன் நன்றாக நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு விமர்சனம் என்று சொல்லி மேலும் எழுதி என் நேரத்தை விரயமாக எனக்கு விருப்பம் இல்லை.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன!

Photo courtesy David Pearson

திருமணங்கள் உண்மையிலேயே சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன. பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணமோ அல்லது நாமே பார்த்து தீர்மானித்துக் கொள்ளும் காதல் திருமணமோ நமக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைவது ஒரு ஆச்சர்யம் கலந்த அதிசயம் தான்.

என் தாய்க்கு என் தந்தை தூரத்து உறவினர். அவர் கல்கத்தாவில் இருந்து சென்னை வந்த புகைவண்டி பெருமழையின் காரணமாக இருபத்தி நாலு மணிநேரம் தாமதமாக வந்திருக்கிறது. அவருக்காகக் காத்திருந்த அவர் நண்பர் காலவரையறை இன்றி காத்திருக்க முடியாமல் திரும்பிப் போய் விட்டார். எதேச்சையாக என் மாமா வேறு ஒரு நண்பரை அழைக்க அந்த நேரம் ஸ்டேஷன் சென்றுள்ளார். அவர் நண்பரின் வண்டியும் தாமதம். ஆனால் அங்கே நின்றுகொண்டிருந்த என் தந்தையைப் பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். என் தந்தை புது வேலையில் சேர சென்னை வந்து இறங்கியிருந்தார். தூரத்து சொந்தம் ஆதலால் தங்கும் இடம் பார்த்துக் கொண்டு செல்லும் வரை இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியுள்ளார். அந்த சமயத்தில் இவரின் நடத்தை என் தாத்தாவிற்கு மிகவும் பிடித்துப் போய் தன் மகளை அவருக்கு மனம் முடிக்கும் முடிவை எடுத்திருக்கிறார். என் தந்தைக்கும் என் தாயைப் பார்த்ததுமே பிடித்துப் போய் உள்ளது. என் தாயை பார்த்த மாத்திரத்தில் அவரை மிகவும் வசீகரித்துவிட்டதாக என் தந்தை என்னிடம் சொல்லியுள்ளார் 🙂

என் ஒரு மாமாவின் திருமணம் இன்னொரு அழகான கதை. என் மாமா மிகப் பெரிய பொருளாதார நிபுணர், ஆனால் வலது கையில் போலியோ வந்து கையை சரியாக உபயோகப் படுத்தமுடியாது. அதனால் அவருக்கு திருமணம் புரிந்துகொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது. ஆனாலும் என் தாத்தா அவர் கடமையை நிறைவேற்ற நிறைய இடங்களில் பெண் தேடிக் கொண்டிருந்தார். என் மாமியின் வீட்டிற்கு என் மாமாவின் ஜாதகம் வந்துள்ளது. அவர்களும் பொருத்தம் பார்த்து நன்றாக உள்ளது என்று மாமியிடம் சொல்லியிருக்கின்றனர். ஆனால் என் மாமிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் அவர்கள் வீட்டிலும் மேற்கொண்டு எங்கள் தாத்தாவை தொடர்பு கொள்ளவில்லை. ஆறு மாதங்கள் கழித்து என் மாமியின் நெருங்கிய உறவினர் அவர்கள் இருவரின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டு ரொம்பவும் உயர்வாகச் சொல்லியிருக்கிறார். என் மாமியிடம் நீ இந்த வரனை மணம் முடித்தால் ராணி போல வாழ்வாய் என்று சொல்லியிருக்கிறார். 🙂 பின் என் மாமியும் அவரின் அண்ணாவும் அப்பொழுது என் மாமா இருந்த டில்லிக்கே அவரைப் பார்க்க சென்றுள்ளனர். இதுவும் அந்த காலத்தில் நடைமுறையில் இல்லாத விஷயம். பிள்ளை தான் பெண்ணை பார்க்க வரவேண்டும். என் மாமியும் அவர் அண்ணனும் மாமாவை சந்திக்க சென்ற போது என் மாமா தன் சட்டையை அவிழ்த்து என் கை இப்படித் தான் இருக்கும் பார்த்துக் கொள், உனக்கு முழு சம்மதம் என்றால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அவரின் அந்த ஓரு செயல் என் மாமியின் நெஞ்சத்தைத் தொட்டுவிட்டது. நான் என் வாழ்நாள் முழுவதும் உங்கள் வலது கையாக இருப்பேன் என்று அங்கேயே சொல்லியுள்ளார். அதன் பின் கெட்டி மேளம தான் 🙂

Indian_marriage

நானும் என் கணவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததும் மிகக் குறுகிய கால சந்திப்பில் தான். திருமணமும் சந்தித்த ஒரே வாரத்தில் நடைபெற்றது. பின் அவரைத் தொடர்ந்து அமேரிக்கா பயணம். மிகவும் துணிச்சலான முடிவு தான். அதை மேற்கொள்ள அவரின் மேல் எனக்கு விழுந்த ஒரு நம்பிக்கை தான் காரணம்!

என் தோழிகள் இருவர் காதல் மனம் புரிந்தனர். அதில் பக்கத்து வீட்டு பையனையே மனந்தவள் ஒருத்தி. இன்னொரு தோழி பயங்கர எதிர்ப்பை தாங்கி வீட்டை விட்டு ஓடிப் போய் கலப்பு மணம் புரிந்தாள்.

என் அத்தை பையன் அவனுடைய பள்ளித் தோழியை மனந்தான். வேறு ஜாதி தான். அதனால் அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் (அவளே ஒரு மருத்துவர்) என் அத்தையின் கணவரே முன் நின்று திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் வீட்டாரிடம் சொல்லிவிட்டார். திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் வந்து சிறப்பித்தது ஒரு நிம்மதி!

என் ஒரு மாமாவின் மகனும் காதலித்து தான் மணம் புரிந்தான். கல்லூரி தோழி. ஆனால், ஒரே ஜாதி. அதனால் திருமணம் கோலாகலமாக நடந்தது 🙂 இன்னொரு மாமாவின் மகனை அவனின் பெற்றோர்கள் அவனையே பெண் பார்த்துக் கொள்ள சொன்னார்கள். ஆனால் பிடிவாதமாக பெற்றோர் தான் தனக்கு பெண் பார்த்து மணம் முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டான். ஆனால் அவர்களும் பார்த்தபாடில்லை. ஆனால் பாருங்கள், பெண்ணே அவனை பார்த்து விட்டாள். அவன் மணம் முடித்த பெண் அமெரிக்க சென்ற போது அவனை சந்தித்து அவன் மேல் பிரியப்பட்டு விட்டாள். தன் ஆசையையும் அவனிடம் தெரிவித்து இருக்கிறாள். இந்த அம்மான் மகன் என் அப்பா அம்மா சம்மதத்துடன் தான் நான் எந்த முடிவும் எடுப்பேன் என்று சொல்லி ஒரு வருடம் கழித்து இந்தியா வந்து பின் அவளை பெற்றோர்களுடன் சென்று பெண் பார்த்து பின் மணம் முடித்துக் கொண்டான்!

அடுத்து என் மாமா மகள். அவள் தன்னுடன் படித்த பெங்காலி பையனை விரும்பினால். அதனால் என் மாமாவும் மாமியும் கல்கத்தாவில் உள்ள பிள்ளை வீட்டிற்கு சம்மந்தம் பேச சென்றனர். பிள்ளையின் அப்பாவோ, உங்கள் மொழி வேறு எங்கள் மொழி வேறு, பழக்க வழக்கங்களும் வித்தியாசப் படும். அதனால் இதெல்லாம் சரிப்பட்டு வராது, கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டார். என் மாமாவிற்கு பெரிய ஷாக். பெண்ணும் பிள்ளையும் அமெரிக்காவில் உள்ளனர். அவர்களுக்குப் பிடித்துப் போய் விட்டது இது என்ன புது குழப்பம் என்று பயந்து விட்டார். ஆனால் பையன் விடவில்லை. அப்பாவிடம் போராடியிருக்கிறான். அதன் விளைவாக அவர், ஆறு மாதம் இருவரும் பேசக் கூடாது, பார்த்துக் கொள்ளக் கூடாது, அதன் பின்னும் விருப்பப் பட்டால், தான் திருமணத்திற்கு சம்மதம் அளிப்பதாகச் சொல்லியுள்ளார். (இருவரும் இருப்பது ஒரே ஊரில், வெளிநாட்டில். ஆனால் பாவம் இவர் மகன் மேல் அவ்வளவு நம்பிக்கையோடு இந்த கண்டிஷனைப் போட்டிருக்கிறார் 🙂 ) ஆறு மாதம் கழிந்தது. பையன் அப்பாவிடம் தான் இன்னும் அதே எண்ணத்துடன் இருப்பதாக சொன்னவுடன், கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் தந்தை. இன்னொரு திருமணம் இனிதே நடந்தேறியது!

south-india-honeymoon

என் இன்னொரு அத்தையின் மகன் எதிர் வீட்டு பெண்ணை காதலித்தான். ஒரே ஜாதி. ஆயினும் அவன் பெற்றோர்கள் அவன் திருமணத்திற்கு சென்று ஆசி வழங்கவில்லை. ஏனென்றால் அவனாக எடுத்த முடிவில் அவர்களை உதாசீனப் படுத்தியதாக நினைத்துவிட்டார்கள்.

இப்பொழுது என் ஒரு அத்தையின் கடைக் குட்டி தன் காதலை உறவினர்களுக்குத் தெரிவித்து உள்ளான். வேறு மொழி, வேறு ஜாதி, ஒரு பெரிய அரசியல்வாதியின் மகள்! இது எங்கள் குடும்பத்திற்கு முதல் முறை 🙂

இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்பது உண்மையான கூற்று. என் குழந்தைகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மிகவும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சுப நிகழ்ச்சிகள் 🙂 எனக்கு வரப்போகும் மருமகன், மருமகள் யார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில் இருக்கிறது வாழ்க்கையின் சுவாரசியம் 🙂

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – திரை விமர்சனம்

natuvula

விழுந்து விழுந்து சிரித்து நல்ல வேளை வயிறு புண்ணாகவில்லை எனக்கு ஆனால் தொண்டை தான் கொஞ்சம் வலிக்கிறது 🙂 ஒரு சின்ன அசம்பாவிதம், பெரிய அதிர்ச்சி! அந்த சம்பவத்தை மட்டுமே வைத்து மூன்று நாட்கள் போராடும் நண்பர்களின் திண்டாட்டத்தை ரசிகர்களாகிய நமக்குக் கொண்டாட்டமாக தந்திருப்பது பாலாஜி தரணீதரனின் இயக்கத்தின் அசாத்திய திறமையைக் காட்டுகிறது.

சின்ன பட்ஜெட் படம். நோ குத்துப்பாட்டு, நோ பைட் சீக்வன்ஸ், நோ வெளிநாட்டு டூயட், நோ பெரிய நடிகர்கள், நோ செட் – ஆனால் அற்புத படைப்பு! டயலாக் கூட நிறைய எழுதும் சிரமம் வைக்கவில்லை. ஒரே டயலாக் பலப் பல முறை ரிப்பீட்டு. படம் பார்த்தவர்களுக்கு புரியும் நான் என்ன சொல்கிறேன் என்று 🙂 இத்தனை நகைச்சுவையாக படம் எடுத்த அந்த குழுவிற்கு ஒரு பெரிய பாராட்டு பொக்கே!

பீட்சா பேம் விஜய் சேதுபதி, அவரின் மூன்று நண்பர்கள் பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஸ்வரன் அனைவரும் மிக இயல்பான நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். நட்பின் ஆழத்தைக் காட்டும் இப்படம் நண்பர்களுடன் சென்று பார்த்து அனுபவிக்க ஒரு சிறந்த  கேளிக்கை விருந்து. திரை அரங்கில் சிரிப்பலைகள் கடலலைகள் போல தொடர்ந்து எழும்பி அடங்குகின்றன.

இந்த படத்திற்கு இசை வேத் ஷங்கர் சுகவனம். இவர்  ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை கல்லூரி மாணவர். பின்னணி இசையும் ஆண்ட்ரியா பாடியுள்ள ஒரு பாடலும் நன்றாக உள்ளது.

இது ஒரு உண்மை சம்பவம். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் வாழ்க்கையில் நடந்ததை அப்போது அவர் கூட இருந்த பாலாஜி திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார். கடைசியில் உண்மை பாத்திரங்களும் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள். நிச்சயமாக மிஸ் பண்ணாதீர்கள், இரண்டு காரணங்களுக்காக. ஒன்று, ஒரு இரண்டரை மணி நேரம் நம் கவலைகளை மறந்து சிரிக்கலாம். இரண்டு, இந்த மாதிரி முயற்சிகளை ஊக்குவித்தால் தான் மேலும் நல்ல படங்கள் வர வாய்ப்பிருக்கிறது.

நீர் பறவை – திரை விமர்சனம்!

neerparavai

பொதுவாக திரைக்கதையில் பல பிரச்சினைகளை கையாளும் பொழுது ஏதாவது ஒன்றை கோட்டை விட்டுவிடுவார்கள் அல்லது முக்கியத்துவம் குறைந்து நீர்த்துப் போகும். நீர் பறவையில் அது தவிர்க்கப் பட்டிருக்கிறது. சீனு இராமசாமியின் மிகச் சிறந்த முயற்சி! இது வெற்றி படைப்பாக மாறுவது தமிழ் மக்களின் ரசனையை பொறுத்தது. ஒரு டாகுமெண்டரியில் சொல்லவேண்டிய கருத்துக்களை அழகிய திரைப்படமாக வடிவமைத்ததற்கு அவருக்கு பாராட்டுக்கள். ஜெயமோகனின் வசனங்கள் அளவோடும் தெளிவாகவும் இருப்பது படத்துக்கு பலம். பாத்திரத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார் இயக்குனர். விஷ்ணு கதாநாயகனாக, சுனைனா மற்றும் நந்தித்தா தாஸ் கதாநாயகிகளாக கனகச்சிதம். சரண்யாவுக்கு இந்த மாதிரி அம்மா பாத்திரம் அல்வா சாபிடுவது போல.

இப்பொழுது இளைஞர்கள் இடையே தலை விரித்தாடும் குடி போதைக்கு அடிமையாகும் பிரச்சினை, அதற்கான தீர்வு, மீனவர்களின் வாழ்க்கை, அதில் மிக முக்கியமாக இலங்கை அரசால் சுடப்பட்டு இறக்கும் மீனவர்களை அரசாங்கம் கண்டுகொள்ளா நிலைமை அனைத்தும் அருமையாகக் கையாளப் பட்டுள்ளது. முழுக்க முழுக்க கிரித்துவக் கதை. எல்லா முக்கிய பாத்திரங்களும் கிரித்துவர்கள். அவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான நல்லிக்கணக்கத்தை கதையோடு கோர்வையாக சொல்லியிருப்பது இயக்குனரின் திறமை. இந்துக்களையும் விட்டு விடக்கூடாது என்பதற்காக இந்தக் கதையில் ஒரு நல்ல இந்து பாத்திரப் படைப்பும் உள்ளது. உண்மையில் இனி சுதந்திர தினம் அல்லது குடியரசு தினங்களில் மத நல்லிக்கணத்தைச் சித்தரிக்கும் வகையில் சின்னத் திரையில் காண்பிக்க இது ஒரு சிறந்த படம் 🙂

டைடானிக் படம் போல படம் முழுவதும் இழையோடும் காதல் படத்தைக் காப்பாற்றுகிறது. இளவயது பாத்திரத்துக்கு சுனயனாவும், வயதான பின் நந்தித்தா தாசும் நல்ல தேர்வு. இயக்குனர் அனைவரையும் நன்றாக நடிக்க வைத்துள்ளார். இதில் அனாயாசமாக ஸ்கோர் பண்ணுவது இஸ்லாமிய பாத்திரத்தில் வரும் சமுத்திரக்கனி தான். அவர் உயரமும் கம்பீரமும் அவருக்கு நல்ல ப்ளஸ் பாயின்ட்.

பின்னணி இசை நன்றாக உள்ளது. ஒரு பாடலைத் தவிர மற்ற பாடல்கள் என்னை கவரவில்லை. ஒளிப்பதிவு பிரமாதம். திரை அரங்கை விட்டு வெளியேறும் போது காலில் உள்ள  ராமேஸ்வரம் மணளைத் தட்டி விட்டு எழுந்து வர வேண்டும் போலத் தோன்றுகிறது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no peace of mind என்ற நடிகர் திலகத்தின் ஒரு வசனம் போல எல்லாம் இருந்தும் படம் முடியும் போது ஏதோ இல்லாத மாதிரி ஒரு வெறுமை. அது எடுத்துக் கொண்ட சப்ஜெக்டினால் அப்படி நமக்கு தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.

Laudable effort, must appreciate the whole team for a job well done! 🙂