காமாக்யா கோவில் – அஸாம்

Kamakhya-temple

என் தோழிகள் நான்கு பேர் காமாக்யா கோவில் சென்று வந்து அந்தக் கோவிலைப் பற்றிய சிறப்புகளை என்னிடம் பகிர்ந்தனர். மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. ஐம்பத்தோரு சக்தி பீடத்தில் ஒன்றானது இக்கோவில். அஸாம் மாநிலம் கௌஹாடி நகரில் உள்ள நீலாந்சல் மலையில் அமைந்துள்ளது இக்கோவில்.

தந்தை தட்சனால் ஏற்பட்ட அவமானத்தால் சதி தன் உயிரை மாய்த்துக் கொண்ட துக்கத்தில் சிவன் தன் காதல் மனைவியின் உடலைத் தாங்கிக் கொண்டு கோபமாகத் தாண்டவம் ஆடுகிறார். அதைத் தணிக்க விஷ்னு தன் சக்கரத்தை அனுப்பி உடலைப் பல துண்டங்களாக்குகிறார். அவை நூற்றியெட்டு இடங்களில் விழுகின்றன. யோனியும் கர்பப்பையும் விழுந்த இடமே இக்கோவில் இருக்கும் இடம். சதி சிவனை முதலில் கண்டு காதலித்த இடமும் இதுவே என்றும் சொல்லப்படுகிறது.

இக்கோவிலில் கர்பக்கிரகத்தில் தெய்வ விக்கிரகம் கிடையாது. பெண்ணின் யோனி மட்டுமே உள்ளது.  அதன் அடியில் கர்பப்பையும் உள்ளதாக நம்பிக்கை. தாய்மை, பெண்ணின் கருவுறும் சக்தி, தாய் மண், இயற்கை அன்னை, இவைகளின் அடையாளமாக இத்தெய்வம் போற்றி வணங்கப்படுகிறாள். சக்தியே காமாக்யாவாக வழிபடப்படுகிறாள்.

இக்கோவிலின் தனிச் சிறப்பு ஜூன் மாதத்தில் தேவிக்கு உதிரப் போக்கு ஏற்படுவதாக நம்பப் படுவது. அம்மாதத்தில் மட்டும் அருகில் ஓடும் பிரம்மபுத்திரா நதி சிவப்பாக மாறுகிறது. தீட்டு என்று மாதவிடாய் காலத்தில் பெண் தள்ளி வைக்கப் படுகின்ற இச்சமூகத்தில் இக்கோவிலில் இதைக் கொடுப்பினையாகவும், இந்தச் சக்தியால் பெண் கருத்தறிக்க முடிகிற பாக்கியத்தையும் போற்றி பெருமைப்படுத்துகிறது. ஜூன் மாதத்தில் அன்னைக்கு மாதவிடாய் ஏற்படும்போது எப்பொழுதும் நீரூற்று வந்துகொண்டிருக்கும் கர்ப்பகிரகத்தில் யோனியில் இருந்து வரும் நீர் சிவப்பு நிறமாக மாறுகிறது. இந்த சமயத்தில் அம்புவாச்சித் திருவிழா வெகு கோலாகலமாக நடை பெறுகிறது. மூன்று நாட்கள் கோவில் நடை சாத்தப்பட்டுப் பின் திறக்கப்படுகிறது. இவ்விழாவில் அகோரிகளும் தாந்த்ரிக வழிமுறையில் நம்பிக்கை உள்ளவர்களும் பெரும் திரளாக வந்து வழிபடுகின்றனர். பில்லி சூன்யத்தில் இருந்து விடுபடபவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். மானச பூஜா, துர்கா பூஜா இங்கு நடக்கும் வேறு சில திருவிழாக்கள் ஆகும்.

இங்கு கர்பக்கிரகம் தரை மட்டத்துக்குக் கீழே சிறிய குகை அறையாக அமைந்திருக்கிறது. ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தரிசனம் உண்டு. மூன்று செங்குத்தான படிகளில் இறங்கி சிறிய கும்மிருட்டான கர்ப்பகிரகத்திற்குள் சென்றால் இரண்டு பெரிய அகல் விளக்குகள் நடுவில் நாம் யோனியை தரிசிக்கலாம். செம்பருத்திப் பூக்களாலும் சிவப்புத் துணியினாலும் யோனி அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கே ஊற்றாக நீர் வந்துகொண்டே இருக்கிறது. குனிந்து வணங்கி அந்தத் தீர்த்தத்தை நம் தலையில் தெளித்துக் கொள்வதே பிரசாதமாகிறது. இந்த நீர் பல நோய்களை தீர்க்கும் அருமருந்து என நம்பப்படுகிறது.

நம் அனைத்து இச்சைகளையும் பூர்த்தி செய்கிறவள் காமாக்யா தேவி. இங்கு குங்குமமாக ஒரு வகைக் கற்களைப் பொடி செய்த செந்தூரப் பொடியைப் பிராசதமாக அளிக்கிறார்கள். இதை இட்டுக் கொண்டால் தேவியின் ஆசி பரிபூரணமாக நமக்கு அமைகிறது என்பது நம்பிக்கை. ஈரமான சிவப்புத் துணி முக்கியமானவர்களுக்குப் பிராசதமாகக் கிடைக்கிறது. இதை அம்புவாச்சி வஸ்திரம் என்று கூறுகிறார்கள். புஷ்பங்களையே காணிக்கையாக அளிப்பது வழக்கமாக இருந்தாலும் வெளியே ஆடு பலியிடுவதும் நடக்கிறது. நாம் எடுத்து செல்லும் பூக்கள்,தேங்காய் சிவப்பு ஜரிகை துணி முதலியவை அங்கு இருக்கும் பாண்டாவால் அன்னையின் மேல் சமர்ப்பிக்கப் பட்டு திரும்ப நம்மிடமே கொடுக்கப்படுகிறது. சமர்ப்பிக்கப்பட்ட தேங்காயை குகைக்கு வெளியே வந்ததும் அங்கிருக்கும் பாண்டா அதை உடைத்து நெற்றியில் திலகம் இட்டு அனுப்புகிறார். சில பக்தர்கள் வளையல்கள், பொட்டு, ஏன் லிப்ஸ்டிக் கூட அன்புடன் அன்னைக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

காமாக்யா பற்றிய முதல் கல்வெட்டு ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது. இக்கோவிலும் இஸ்லாமிய படையெடுப்புகளால் (ஹுசெய்ன் ஷா) 1498 அழிக்கப்பட்டுப் பின் கோச் வம்ச அரசர் விஷ்வசிங்கனாலும் அவருடைய மகன் நாராயணனாலும் திரும்ப 1565ல் கட்டப்பட்டுள்ளது.

kamakhya-templecrowd

திருப்பதி கோவில் மாதிரி இங்கும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சாதரண வரிசையில் நின்று தரிசனத்திற்குச் சென்றால் சராசரியாக ஏழு மணி நெரம் ஆகும். விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்கள், வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் இன்னும் அதிகம். சிறப்பு தரிசனமாக ஐநூறு ரூபாய் கொடுத்துச் செல்லலாம். ஆனால் அந்தக் குறுகிய மூன்று படிகளைக் கடந்து தரிசிக்க செல்லும் அதே படிகளில் தான் தரிசனம் முடித்துத் திரும்புவர்களும் மேலே ஏறி வரவேண்டியுள்ளதால் காக்கும் நேரம் அனைவருக்கும் அதிகரிக்கிறது.

மிகப் புராதனமான கோவில், மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகக் கருதப்படுகிறது. இக்கோவில் பெண்மையைப் போற்றும் கோவிலாக இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. நம் மதத்தில் எதுவும் விலக்கப்பட்டதல்ல. இயற்கை எதுவோ அதை அங்கீகரித்து, நேசிக்கும் பழக்கம் போற்றுதலக்குரியது ஆகும். பெண்ணின் சக்தி ஆக்கும் சக்தியாகும், அழிக்கும் சக்தியல்ல. பெண்மை போற்றுவோம்! பெண்மை போற்றுவோம்!

ஜெய் காமாக்யா மாதா!

Kamakhya Temple Picture 2

 

மாவீரன் பரதன்

sudarshana-krishna

மகாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்கள் சக்கரம், சங்கு, கதை, வாள், வில். இந்த ஐந்து ஆயுதங்களும் மகாவிஷ்ணுவின் பணிகளைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும். இதில் முதன்மையானது வலது கரத்தில் தாங்கியுள்ள சக்கரம் என்று சொல்லப்படும் சுதர்சனப் பெருமாள்தான். திருமாலின் அம்சமாகவே இவர் விளங்குகிறார். எனவே, சுதர்சனரை திருமாலாகவே வணங்குகின்றோம். பஞ்ச ஆயுதங்களின் முதன்மையான சுதர்சனத்திற்கு சக்கரத்தாழ்வார் என்று ஆழ்வார் பட்டம் கொடுக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

  • கஜேந்திர மோட்சத்தில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டான் 2-10-8″
  • மஹாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்த போது கோரைப் பற்களாக அமைந்து தீயவர்களைக் கிழித்து, அந்தக் கோரைப் பற்களால் பூமியை கடலுக்கடியிலிருந்து தூக்கி வருவதற்கு துணையாக இருந்தது சுதர்சன சக்கரமே
  • வாமன அவதாரத்தில், மாவலி சக்கரவர்த்தி வாமனனனுக்கு மூவுலகை தானம் செய்ய தாரை வார்க்க முயலும் போது தண்ணீர் விழும் துவாரத்தை ஒரு வண்டாக மாறி சுக்கிராச்சாரியார், தடை செய்தபோது ஒரு தர்பை கொண்டு அதன் கண்ணினை குத்தியது சக்கரத்தாழ்வார்  – சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கரக் கையனே ! அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே ! அச்சோ அச்சோ 1-8-7“
  • ஸ்ரீநரசிம்ம அவதாரத்தின் போது சுதர்சன ஆழ்வார்  கூர்மையான கை நகங்களாக அமைந்து இரணியன் வயிற்றைக் கிழித்து வதம் செய்தார்.
  • கிருஷ்ணாவதாரத்தின் போது சிசுபாலனை வதம் செய்ய உதவியதும் சுதர்சன் சக்கரமே. ஜெயத்ரதனை வதம் செய்த போது, சூரியனை மறைத்து, உதவியது ஸ்ரீசுதர்ஸன சக்கரம்தான் – தேவகி தன்  சிறுவன் ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப 4-1-8“
  • அம்பரிஷ மகாராஜாவிடம் கோபித்துக்கொண்ட துர்வாச முனிவரை துரத்தித் தாக்கியதும், அவரை திரும்ப அம்பரிஷ  மகாராஜாவிடம் சரண் அடைய செய்ததும் ஸ்ரீ விஷ்ணுவின் சுதர்சன சக்கரமே.

திரேதா யுகத்தில் இராமாவதாரத்தின் போது சக்கரத்தாழ்வாரே பரதனாக அவதாரம் எடுத்தார். அவரையும் பரதாழ்வார் என்றே அழைக்கிறோம். ஸ்ரீராமனின் பாதுகையைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு சென்ற இளவல் பரதாழ்வார், எம்பெருமானிடத்தில் ஆழ்ந்தவர் என்பதால் தான் அப்பெருமை!

வீரத்தின் உறைவிடம், நேர்மையின் இருப்பிடம் சுதர்சன சக்கரம். அதன் அம்சமாகப் பிறந்த பரதன் அவ்வாறு குணத்துடன் இருப்பது இயல்பே.

இறைவன் எதைத் தந்தாலும் அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் பரதனிடம் இருந்தது. ஒரு மாவீரனுக்கான அடையாளம் அது. இராமன் மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தான் பரதன். ஆனால் இராமனே சொன்னால் கூட, அறம் என்று அவன் நினைத்ததை, பரதன் ஒரு போதும் விலக நினைக்கவில்லை. இராம பக்தியையும் விஞ்சி நிற்கிறது அவனின் அறத்தின் மேல் கொண்ட பிடிப்பு.

அரசு வேண்டாம். தாய் கூட வேண்டாம். இந்த இடத்தில் இராமன் ஒன்றே பிராதானம் என்று நினைக்கிறான். உன் தந்தை தயரதன் இறந்து போனான் என்று கைகேயி பரதனிடம் கூறினாள். அதைக் கேட்ட பரதன் துக்கப் படுகிறான். தான் பெற்ற வரங்களினால் தயரதன் இறக்கவும், இராமன் காடு போக நேர்ந்ததையும் கைகேயி சொல்லக் கேட்ட பரதன் அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். அறம் பிறழ தானும் ஒரு காரணம் என்று உலகம் சொல்லுமே என்று வருந்துகிறான்.

அழுது புலம்புவது ஒரு மாவீரனுக்கு அழகா என்கிற கேள்வி எழலாம்? ஆனால் அவன் நொந்து போய் உட்கார்ந்து விடவில்லை. தவறை சரி செய்ய அடுத்தடுத்த முயற்சிகளை எடுத்து கர்ம வீரனாக செயல் படுகிறான். சோகத்துடன் இருந்த கோசலையை அவன் பார்க்கப் போனான். மேலும் இராமனுக்குப் பதில் தனக்கு அரசாளும் உரிமையும், தன் தாயினால் இராமன் காட்டுக்குப் போகும் அவலமும் ஏற்பட்ட அந்த நிலையில் இராமனின் தாயைப் போய் பார்க்கத் தனித் துணிச்சல் வேண்டும். மாவீரன் பரதன் அதைச் செய்தான்.

பாடல் 2197 கம்பராமாயணம்
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே என்பது தேரும் சிந்தையாள்
‘கைகயர் கோமகள் இழைத்த கைதவம்
ஐய! நீ அறிந்திலை போலுமால்?‘ என்றாள்.

பரதா, உன் தாய் செய்த வஞ்சனை உனக்குத் தெரியாதா என்று கேட்கிறாள். அதில் மறைந்து நிற்கும் தொனி, உனக்கு தெரிந்தே இது நடந்திருக்கும் என்பதே. பரதன் குற்றமற்றவன் என்று கோசாலைக்குத் தெரியும். மையறு மனத்தன் என்று அவள் அறிவாள். இருந்தும் “உனக்குத் தெரியாதா” என்று கேட்கிறாள்.

கைகேயி செய்தது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால், இன்னின்ன பாவங்கள் செய்தவர்கள் போகும் நரகத்திற்கு நான் போகக் கடவேன் என்று மிகப் பெரிய பாவங்களின் பட்டியலைத் தருகிறான். ஒரு அநீதி நடக்கிறது என்றால், அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதும் கூட அந்த அநீதிக்கு துணை போவது போலத்தான். ஒன்றும் செய்யாமல் இருப்பதும், அந்த அநீதியை செய்வது போலத்தான் என்பது பரதனின் எண்ணம்.

இதில் தெரிகிறது பரதனின் வீரமும் நேர்மையும்!

கைகேயியை அவனால் தண்டிக்க முடியவில்லை. ஏன் என்றால் கைகேயிக்கு ஏதாவது துன்பம் செய்தால் அது இராமனுக்கு பிடிக்காது என்று பரதனுக்குத் தெரியும். கைகேயியைத்தான் ஒன்றும் செய்யவில்லை, தானும் இந்த அறம் வழுவிய செயலைக் கண்டு இறக்கவில்லை என்றால் தானும் இந்த அநீதியை பங்கு கொண்டது போலத்தான் என்கிறான்.

பாடல் 2172 கம்பராமாயணம்
‘மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்?

இப்படிப் பட்ட வரம் கேட்டது தெரிந்த பின்னும் நானும் இறக்காமல் இருக்கிறேன். இது நான் இந்த அரசை ஆசையோடு ஏற்றுக் கொண்டதற்கு ஒப்பாகும் என்கிறான். ஒரு மாவீரனைப் போல, தாய் செய்த தவறுக்கும் தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான்!

இராமன் காட்டுக்குச் செல்லவும் நாட்டை பரதனிடம் கொடுக்கவும் கைகேயி இராமனிடம் அறிவுருத்திய பிறகு இராமன் நேராக கோசலையின் மாளிகைக்குச் செல்கிறான். இராமன் முடி சூடப் போவதில்லை, பரதனே அரசாளப் போகிறான் என்பதை அறிந்து கொள்கிறாள் கோசலை.

1609. ‘முறைமை அன்று என்பது ஒன்று
உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்;
நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்’ எனக்
கூறினள் – நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்,
வேற்றுமை மாற்றினாள்.

இராம இலக்குமண பரத சத்துருக்கனர்களாகிய நால்வரிடத்தும் குற்றம் அற்ற அன்பு செலுத்துவதில் வேறுபாட்டை நீக்கி ஒரே தன்மையவளாய் உள்ள கோசலை மூத்தவன் இருக்கும் போது இளையவன் அரசாளுவது முறைமை இல்லை என்ற ஒரு குறை உண்டு, ஆயினும் மூன்று மடங்கு எல்லாரினும் மேம்பட்டு நிறைந்த குணத்தினை உடையவன், உன்னையும்விட நல்லவன்,   கல்வி, இளமை, வீரம், குணம் முதலிய யாவற்றாலும்  யாதொரு குறைவும் இல்லாதவன் பரதன் என்று சொன்னாள். அதாவது அவன் ஆட்சி பீடத்துக்கு வருவதில் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்கிறாள்.

கைகேயியின் அன்பு பெரிதும் இராமனுக்கும், கோசலையின் அன்பு
பெரிதும் பரதனுக்கும் அமைந்துள்ளதை இக்காவியத்தில் காணலாம்.
‘நின்னினும் நல்லன்’ என்பதைப் பின் வரும் எண்ணில் கோடி இராமர்கள்
என்னினும், அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ’ என்ற (10181.)
கோசலைக் கூற்றை ஒப்பு நோக்கி நாம் உணர வேண்டும்.  இதில் நாம் கவனிக்க வேண்டியது பரதனைப் பற்றிய கோசலையின் கணிப்பை தான்.

கைகேயி மகனின் பண்பை புரிந்தவளாக இருந்திருந்தால் தயரதனிடம் பரதனுக்காக அரசாளும் வரத்தை கேட்டிருக்க மாட்டாள். தயரதன் இறக்கும் தருவாயில் கைகேயியை தன் மனைவியேயில்லை, பரதனும் தனக்கு இறுதிச் சடங்குகளை செய்யக்கூடாது  என்று வசிட்டரிடம் கூறி விடுகிறார். இந்நிலையில் யாரிடமாவது ஆறுதல் பெற முடியுமா என்று தாயை நோக்கி ஓடும் கன்றினைப் போல பரதன் கோசலையைப் பார்க்கச் செல்கிறான் பரதன். அவளோ உன் அன்னை தீட்டிய திட்டம் உனக்கு முன்பே தெரிந்ததோ என்று கொதிக்கும் சொற்களை அவன் மேல் சொரிகிறாள். அடுத்து பரதனிடம் முடிசூட்டு விழாவை ஏற்பாடு செய்யலாமா என்று வசிட்டர் கேட்கிறார். இராமனைப் போல மரவுரியைத் தரித்துக் கொண்டு கானகம் சென்று இராமனை அழைத்து வர புறப்பட்டுக் கொண்டு இருந்தவனைப் புரிந்து கொள்ளாமல் இவ்வாறு கேட்கிறார் வசிட்டர். கங்கைக் கரையை அடையும் நேரத்தில் பெரும் திரளாக பரதன் வருவதைக் கண்டு குகனும் இராமனை வீழ்த்தத் தான் பரதன் பெரும் படையுடன் வருகிறான் என்று நினைக்கிறான். எப்பொழுதும் கோபத்துடனே இருக்கும் இளவல் இலக்குவன் புழுதி பறக்க பரதன் அயோத்தி மக்களுடன் வருவதை தூரத்தில் இருந்து பார்த்தவன் தன் வில்லை எடுத்து பரதனுடன் போர் புரிய ஆயத்தமாகிறான்.

தன்னை சுற்றியுள்ள அன்பு நெஞ்சங்களே அவனைப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், புண்படுத்தினாலும், வரிசையாக அவன் துயரத்தை அனுபவித்தாலும் தன் அறத்தில் இருந்து அவன் ஒரு போதும் பிறழவில்லை. எவ்வித மனச் சோர்வு வந்தாலும் தளர்ந்து விடாமல் இருப்பதும் ஒரு மாவீரனக்கழகே.

பரதனை மிகச் சரியாக, பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டவர்கள், குகனுடைய படை வீரர்கள்தான். வருகிறவனைப் பார்த்தால் சண்டைக்கு வருகிறவன் மாதிரி தெரியவில்லையே. போருக்கான எந்த ஆயுதமும் இல்லை. இவனும் நமது தலைவன் இராமன் மாதிரி மரவுரி கட்டியல்லவா வந்திருக்கிறான் என்று கேட்கிறார்கள். அப்போதுதான், ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டு அமைதி நிலைக்கு வரும் குகன் ஓடி சென்று பரதனிடம், அண்ணன் இராமனை நேரில் சந்தித்து அவனுக்கு உரிய அரசாங்கத்தை அவனுக்கே திருப்பித் தருவதுதான் முறை என்று முடிவு செய்து இந்த வனத்துக்கு வந்திருக்கிறாய், அந்த நல்ல சிந்தனை உன் முகத்தில் தேங்கியிருக்கிறது என்று கூறுகிறான். ‘பரதா, உன்னுடைய நல்ல குணங்களையெல்லாம் எடை போட்டுப் பார்த்தால், ஆயிரம் இராமர்கள்கூட உனக்கு இணையாகமாட்டார்கள்!’ என்கிறான். பின்  பரதனை  இராமன் இருக்கும் இடத்துக்கு அழைத்து வருகிறான்.

போர் புரிவதில் வருவதில்லை வீரம், போர் புரிய வாய்ப்பிருந்தும் புரியாமல் அற வழி நிற்பதே மாவீரனுக்கழகு!

rama-and-bharatha

பரதன், அண்ணனிடம் நீங்கள் வந்து முடிசூட்டி ஆட்சிபுரிய வேண்டும் என்று மன்றாடி கேட்கிறான். இராமனோ தந்தை சொல்லை தன்னால் மீற முடியாது, பதினாலு ஆண்டு வனவாசம் புரிய வேண்டும் என்ற ஆணையை தான் கைவிடக்கூடாது என்கிறார். பதினாலு ஆண்டுகளை பதினாலு நாட்களாகக் கழித்து விட்டு வந்து அரசாட்சியை எடுத்துக் கொள்கிறேன் நீ அயோத்திக்குப் போய் கடமையைச் செய் என்கிறார். தேவர்கள் அசீரியாக இராமர் வனவாசம் புரிதல் வேண்டும் என்று கூறுகிறார்கள். திரும்பி வர பதினாலு ஆண்டுகளுக்கு மேல் ஒரு நொடி அதிகம் ஆனாலும் உயிர் தியாகம் செய்வேன் என்று பரதன் சொல்கிறான். கொள்கைக்கு முன் உயிரை துச்சமெனக் கருதுகிறான் மாவீரன் பரதன். எம்பிரானுடைய பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு பலமுறை இராமபிரானைத் தொழுது அழுது புறப்படுகிறான் பரதன்.
bharata
அயோத்திக்கே செல்லாமல், அருகில் நந்திக் கிராமத்தில் மணி மண்டபம் அமைத்து, இராமனுடைய பாதுகைகளை வைத்து, அப்பாதுகைகளுக்கு முடிசூட்டி வழிபட ஆரம்பிகிறான் பரதன். தென் திசையையன்றி வேறு திசையை நோக்காமல் பொறி புலன்களை அவித்து உப்பில்லாத கஞ்சியைப் பருகி, இராமனின் பாதுகைகளுக்கு தினந்தினம் ஆயிரம் மந்திரங்களால் அர்ச்சனை புரிந்து இடையறாத இராம பக்தியுடன் தவநெறியில் இருந்தான் பரதன்.

இலங்கை வேந்தன் இராவணனை வதம் செய்த பின்னர் இராமபிரான் சீதாதேவியுடன் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வழியில் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் முன்பே வாக்குக் கொடுத்திருந்தபடியால் அனைவரும் தங்கினார்கள்.

இதற்கிடையில் குறித்த நாளில் இராமபிரான் அயோத்திக்கு வராத காரணத்தால் முன்பு கூறியது போல் பரதன் தீயில் விழுந்து உயிரை விட முற்படுகிறான். இதுவும் மாவீரனுக்குரிய ஒரு செயல்! அப்போது இராமனால் அனுப்பப்பட்ட அனுமன், பரதனை தடுத்து தான் கொண்டு வந்திருந்த மோதிரத்தை காட்டுகிறான். இதைக்கண்டு மகிழ்ந்த பரதன், சத்ருக்கனன் ஆகியோர் இராமனை அழைத்து செல்வதற்காக அனுமனுடனே பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு செல்கின்றனர்.

இராமனை உயர்த்திக் காட்ட வந்த பல பாத்திரங்களுள் பரதன் மிக முக்கிய பங்கை வகிக்கிறான். இலக்குவன் இராமன் கூடவே இருக்கும் பேற்றினைப் பெற்றான். ஆனால் பரதனோ அவப் பெயரையும் சுமந்து, இராமனையும் பிரிந்து பதினாலு ஆண்டுகள் தவ வாழ்க்கையை வாழ்ந்தான். அவனின் ஒவ்வொரு செயலும் இராமனைப் பெருமை படுத்துவதாகவே அமைந்தது. இராமன் பட்டாபிஷேகம் பின்னொருநாளில் தான் வந்தது. ஆனால் அதற்கு முன்பே இராமனின் திருவடிகளைத் தொட்ட பாதுகைக்கு அளப்பறியா பெருமை சேரும்படி பாதுகா பட்டாபிஷேகத்தை நிகழ்த்தியவன் பரதன். சக்கரத்தாழ்வாராகிய பரதாழ்வாரின் புகழ் இராமன் புகழ் இருக்கும் காலம் வரை இதனால் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

padhuka

திருவல்லிக்கேணிக் கண்டேனே

partha

நான் பல முறை திருவல்லிக்கேணி சென்று பார்த்தசாரதி பெருமாளை தரிசித்து இருக்கிறேன். ஆனால் இன்று தான் அவரின் திருமஞ்சனத்தை தரிசிக்கும் பேறினைப் பெற்றேன். எப்பொழுதும் பட்டுப் பீதாம்பரதுடனும், தங்க, வைர நகைகளுடன் தரிசனம் தரும் தேரோட்டி இன்று இடுப்பில் ஒரு வெள்ளை வேட்டியும், முகத்தில் மீசை கூட இல்லாமல் புன்னகையை மட்டுமே அணிந்து காட்சித் தந்தார். மனம் நெகிழ்ந்து மயங்கிப் போனேன்.

“இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்* நல் புவி தனக்கு இறைவன்*
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை* மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை* பஞ்ச பாண்டவர்க்காகி* வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை* எந்தை தந்தை தம்மானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*”

அவன் திருமேனிகண்டு புளகாங்கிதம் அடைந்த திருமங்கை மன்னன் திருவல்லிக்கேணிக் கண்டேனே என்று வியப்புறுகிறார். அந்த பாக்கியமான மன நிலையை நானும் இன்று பெற்றது எம்பெருமான் அருளிய வரம்.
மேலே உள்ள பாடலின் பொருள், இனிய துணையான தாமரை மலரில் பிறந்த மகள் மகாலட்சுமிக்கும் இனிமையானவன், நல்ல பூமிக்கும் இறைவன், தன்னையே துணையாக உடைய ஆயர் குல பெண்ணும் கண்ணனின் மாமன் மகளும் ஆன நப்பின்னைக்கும் இறைவன், மற்றுமுள்ள எல்லாருக்கும் என்றுமே நீங்காத துணையாய், பஞ்சபாண்டவர்களுக்காக தூது சென்று செயல்பட்டவனும், எனக்கு துணையானவனும், என் அப்பாவுக்கு அப்பா (எங்கள் குலமே வழிபட்ட) இறைவனைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. மகிழ்ச்சி மகிழ்ச்சி என்கிறார் திருமங்கை மன்னன்!

வேங்கடகிருஷ்ணன் மிகவும் நெடிந்துயர்ந்த பெருமாள். திருமஞ்சனம் செய்ய அர்ச்சகர்கள் பெரிய ஸ்டூல் மேல் ஏறி நின்று அபிஷேகப் பொருட்களை சமர்ப்பித்து நீராட்டுகிறார்கள். பார்க்கவே கண் கொள்ளா காட்சியாக உள்ளது. முதலில் பாலால் திருமஞ்சனம். வெள்ளிச் சொம்பில் எடுக்க எடுக்க குறையாத அளவு பாலை மொண்டு மொண்டு திருமுடியில் இருந்து திருமஞ்சனம் செய்கிறார்கள். அப்பொழுது திருமுகத்தில் வழியும் பாலின் இடையில் காட்சித் தரும் அவர் செந்தாமரைக் கண்களின் கருணை என்னை ஆட்கொண்டுவிட்டது. கோதையும், எண்ணிலடங்கா கோபியரும் எப்படி மெய் மறந்து அவன் கண்களால் கட்டுண்டார்கள் என்பதை ஒரு துளியினும் துளியாக இன்று அறிந்தேன். என்னால் அவர் திருவடியை கூட சேவிக்கத் தோன்றவில்லை. குனித்து திருவடியைத் தேடினாலும் மீண்டும் கண்களுக்கே வந்து தரிசித்து நின்றேன். தயிரும், தேனும், சந்தனமும், இளநீரும் சேர்த்து திருநீராட்டினார்கள். ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் அவரின் திருக் கண்களின் அழகுக் கூடிக் கொண்டே போயிற்று. மிகவும் அழகான சிலா வடிவம். இக்கோயில் முதலில் 6ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. கிபி எட்டாம் நூற்றாண்டில் கட்டியக் கோவில் என்றால் சிலை எவ்வளவு புராதானமாகியிருக்கணும். ஆனால் அவரோ இன்று வடித்தது போல அவ்வளவு அழகாக உள்ளார்.

திருமஞ்சனத்துக்குப் பிறகு அவருக்குத் தளிகை சமர்ப்பிக்கப் படுகிறது. பின்பு அது நமக்குப் பிரசாதமாக வழங்கப் படுகிறது. இந்த சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது அனைவரும் சுவைக்க வேண்டும். அத்தனை ருசி! பெருமாளின் பிரசாதம் என்பதாலும், அதில் கணக்கில்லா முந்திரி, திராட்சை, படி கணக்கில் நெய், பாகு வெல்லம், பச்சைக் கற்பூரம், ஏலக்காய்,  சேர்க்கையாலும், அவர்கள் செய்யும் பக்குவத்தாலும் பொங்கல் பிரசாதம் கிடைதுண்பதும் நம் கொடுப்பினை தான் எனலாம்.

parthatemple

அலங்காரம் முடிய ஒரு மணி நேரம் ஆகிறது. அது வரை நாம் வெளிப் பிராகார மண்டபத்தில் இருக்கலாம். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இ‌ந்த கோ‌விலை பிருந்தாரண்ய ஸ்தலம் பஞ்ச வீரத்தலம் என்றும் அழைக்கிறார்கள். வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகு‌ம். சென்னை மெரீனா கடற்கரை வெகு அருகில்! இத்திருத்தலத்தில் யோக  நர‌சி‌ம்மர் சந்நிதி பெருமாள் சந்நிதிக்குப் பின்புறம் உள்ளது. வடக்கு நோக்கி நரசிம்மர் சந்நிதிக்கும் கிழக்கு நோக்கி பார்த்தசாரதி சந்நிதிக்கும் த‌னி‌த்‌த‌னி கொடிமர‌ங்க‌ள் அமை‌க்க‌ப்ப‌‌ட்டிருக்கின்றன. பா‌ர்‌த்தசார‌தி சந்நிதி‌க்கு வலது புற‌த்‌தி‌ல் வேதவ‌ல்‌லி‌த் தாயா‌‌ரி‌ன் ச‌ந்ந‌தி அமை‌ந்து‌ள்ளது. வேதவ‌ல்‌லி‌த் தாயா‌ர் ச‌ந்‌நி‌தி‌க்கு ‌பி‌ன்புற‌த்‌தி‌ல் ‌கிழ‌க்கு நோ‌க்‌கியபடி கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிக‌ளி‌ன் ச‌ந்‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. கஜே‌ந்‌திரா எ‌ன்ற யானை ‌நீ‌ர்‌நிலை ஒ‌ன்‌றி‌ல் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க‌ச் செ‌ன்றபோது அ‌ங்‌கிரு‌ந்த முதலை‌யி‌ன் வா‌யி‌ல் ச‌ி‌க்‌கி‌க் கொ‌ண்டது, அப்போது அந்த யானை தனது உ‌யிரை‌க் கா‌ப்பா‌ற்றுமாறு பெருமாளை நினைத்து வே‌ண்டியது. அ‌ப்போது உடனடியாக கருட‌னி‌ல் வ‌ந்த பெருமா‌ள் முத‌லை‌யிட‌ம் சிக்கியிருந்த கஜே‌ந்‌திரனை ‌‌மீ‌ட்டா‌ர், யானை‌க்கு அரு‌ள் பா‌லி‌த்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்த ச‌ந்‌‌நி‌தி‌யி‌ல் கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிகளாக வீற்றிருக்கிறார். பா‌‌ர்‌த்தசார‌தி ச‌ந்‌‌‌நி‌தி‌யி‌ன் இடது புறத்‌தி‌ல் ஆ‌ண்டா‌‌ள் ச‌ந்‌‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. இவர் பூதே‌வி எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர். இந்த கோவில் தீர்த்தத்தின் பெயர் கைரவினி, இ‌தி‌ல் இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆ‌‌கிய தீர்த்தங்கள் அடங்கியுள்ளன. இத்திருக்குளத்தில் அல்லி பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் அல்லிக்கேணி என்ற பெயரும் ஏற்பட்டது.

parthatank

அலங்காரம் முடிந்த பிறகு திருமஞ்சனத்துக்குப் பணம் கட்டியவர்களின் குடும்பத்தைத் தனித்தனியாக அழைத்து பெருமாளுக்கு அர்ச்சனையும் நமக்கு அவரின் சேவையும் செய்து வைக்கிறார்கள். தரிசிக்க உள்ளே நுழையும்போதே கம்பீரமாக நிற்கிறார் பெருமாள். பச்சையும் சிவப்புமான, நிறைய ஜரிகையுடைய பட்டு வஸ்திரத்தில், முறுக்கு மீசையுடன், இராஜாதி இராஜனான அவர் அழகைக் கண்ட எனக்கு பெரியாழ்வார் வந்து இவருக்கும் பல்லாண்டு பாடி கண் திருஷ்டியைக் களைய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவருடைய ஆபரணங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு. அருகில் சென்று தரிசிக்க முடிந்ததால் அங்கு இருந்த அனைவரையும் நிறைவாக சேவிக்க முடிந்தது. மூலவர் பெயர் வேங்கடகிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் வீற்றிருக்கிறார்.

partha1

.உத்சவராக வீற்றிருக்கும் பார்த்தசாரதி பெருமாள் பெயரிலேயே கோவில் அழைக்கப் படுகிறது. அவர் ‌திரு‌முக‌த்‌தி‌ல் தழு‌ம்புக‌ள் உள்ளன, மகாபாரத‌ப் போ‌ரி‌ல் அ‌ர்ஜூனனு‌க்கு தேரோ‌ட்டியாக வ‌ந்து, போ‌ரி‌ல் ஏற்ப‌ட்ட ‌விழு‌ப்பு‌ண்க‌‌ளி‌ன் தழு‌ம்புக‌ள்தான் அவை எ‌ன்று ஐதீகம். மேலு‌ம் ‌மீசையுட‌ன் உள்ள ‌கிருஷ‌்ண அவதாரமாகவும் இங்கு இருக்கிறார். மகாபாரத‌த்‌தி‌ல் தேரோ‌ட்டியாக (சார‌தி) வ‌ந்து அ‌ர்‌ஜூனனு‌க்கு (பா‌ர்‌த்தா) அ‌றிவுரை சொ‌ன்ன ‌கிரு‌ஷ‌்ண‌னே (அவதாரம்) பா‌ர்‌த்தசார‌தி என்று அழைக்கப்பட்டார்.

இ‌‌த்‌திரு‌த்தல‌த்‌தி‌ல் பிருகு முனிவர், மார்க்கண்டேயர், மதுமான் மகரிஷி, சப்தரோம அத்ரி மகரிஷி, ஜாபாலி மகரிஷி, தொண்டைமான் சுமதி மன்னன் என பலருக்கு இறைவன் காட்சியளித்திருக்கிறார். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், ஸ்ரீ இராமானுஜர் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகு‌ம்

திருவல்லிக்கேணியில் வாழும் மக்கள் ரொம்பக் கொடுத்து வைத்தவர்கள். நினைத்தபோது போய் பெருமாளை தரிசிக்கலாம். ஸ்ரீ ரங்கம் போலக் கூட்டம் அவ்வளவு அதிகம் இல்லை. மேலும் பெருமாள் உயரமாக இருப்பதால் தூரத்தில் இருந்தும் தரிசிக்க முடிகிறது. வருடம் முழுக்க எந்நாளும் உத்சவம்! அல்லிக்கேணி மக்களும் பெருமாளைக் கொண்டாடுகிறார்கள்! பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளையே குறித்துப் பாடப்பட்டவை என்று கூறுவர். அவர் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த போது அனுதினமும் கோவிலுக்கு சென்று வழிபடுவார். சென்னையில் இருப்போர் தவறாமல் சென்று வழிபட வேண்டிய தலம். என் அருகில் இருந்த ஒரு பக்தர் என்னிடம் நிறைய பேசிக் கொண்டே இருந்தார். அவர் சொன்னார் கேட்டதை கொடுக்கும் பெருமாள் அம்மா இவர், நான் இவரை சிறுவனாக இருந்தபோதிலிருந்து சேவித்து வருகிறேன். பரம ஏழையாக இருந்த என்னை இன்று நாலு வீட்டுக்கு சொந்தக்காரர் ஆக்கியுள்ளார் என்றார். நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு!

partha2

திருவடி சேவை – பகுதி 5

திருவடி சேவை பகுதி 1 இங்கே

திருவடி சேவை பகுதி 2 இங்கே

திருவடி சேவை பகுதி 3 இங்கே

திருவடி சேவை -பகுதி 4 இங்கே

அனுமனைச் சிறிய திருவடி என்று அழைப்பது தமிழ் மரபு. அப்படியானால் பெரிய திருவடி என்றொருவர் இருக்க வேண்டும் அல்லவா? கருடனே பெரிய திருவடி ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது அதன் மீது திருமாலின் திருவடி படுகின்ற தன்மையால் திருவடி என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. அருணகிரி நாதர் ‘தாவடி ஓட்டும் மயிலிலும்’ என்று முருகன் திருவடி பட்ட இடங்களில் முதன்மை இடமாக வாகனத்தைக் குறிப்பிடுகிறார். எனவே, வாகனமாக இருக்கும் தன்மையால் கருடன் பெரிய திருவடியாகிறான். திருமாலுக்கு கருடன் தான் என்றும் வாகனம். ஆதிமூலமே என்று கஜேந்திரன் கதறிய போது கருட வாகனத்தில் பறந்து வந்து காத்தவர் பெருமான்.

gajendramotcham

அனுமனும் இராமனுக்கு வாகனமாக விளங்கியவன்தான். இராவணனுடன் முதல் போர் நடக்கப் போகிறது. ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்டத் தேரில் இராமனின் எதிர் வந்து நிற்கிறான் இராவணன். இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

நூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்

மாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்

வேறுகாட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்

ஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் என்றான்.

ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா? நாங்களில்லையா உனக்கு? என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ, தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே!

மலையைப் பெயர்த்த தோள்கள், இலங்கிணியை ஒரே குத்தில் வீழ்த்திய தோள்கள், சுந்தர காண்டம் முழுமையிலும் வித விதமான போர் புரிந்து வலிமையை வெளிக்காட்டிய தோள்கைளை ‘மெல்லிய எனினும்’ என்று சொல்லிக் கொள்கிறான் அனுமன். இராமனுக்கு எதிரில் தன் வலிமையைப் பற்றி ஒரு நாளும் ஒரு சமயத்திலும், உண்மையே ஆனாலும் உயர்த்திச் சொல்லக் கூச்சமும் தயக்கமும் கொண்டவன் மாருதி.

கருடன் பெரிய திருவடி. அனுமன் சிறிய திருவடி. அப்படியானால் ஆற்றலிலும் அளவிலும் கருடனுக்கு அனுமன் சிறியவனா? கிடையாது. கருடனுக்கு எந்தவிதத்திலும் குறைவுடையதாகச் சொல்லும் அடைமொழி இல்லை இது. முதல் வாகனம் கருடன். இரண்டாம் வாகனம் அனுமன். காலத்தால் பிற்பட்டு வந்த வாகனம். அதனால் இவர் சின்னவர். திருவடி சுமந்ததிலோ, போர்க்காலத்தில் தகுந்த நேரத்தில் தகுந்தபடி எதிரியைத் தாக்குவதற்கு ஏதுவான எல்லா விதத்திலும் அதி விரைவாகவும், பொருத்தமாகவும், மிகுந்த உறுதியோடும் அனுமன் நின்ற விதத்தை மற்றவர்கள் எல்லாம் பாராட்டியது பெருமை தான் ஆனால் இராவணனே எண்ணி எண்ணி வியக்கிறான்.

hanumanvahanam1

முதல் போர் முடிந்த அன்றே ‘இன்று போய் போருக்கு நாளை வா’ என்று இராமன் இராவணனை திரும்ப அனுப்பினான். ஆயிரம் குதிரைகள் இழுத்த தேரில் ஆரவரமாய் போர்க்களத்துக்குள் நுழைந்தவன் ‘வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டுப் புக்கான்’ என்ற நிலையில் துணைக்கு ஒருவர் இல்லாமல், தன்னுடைய வீரத்தைக் கூட அங்கேயே போட்டுவிட்டு ‘நடந்துபோய் நகரம் புக்கான்’ என்று அந்த நிலையைச் சொல்கிறான் கம்பன்.

ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழ்மைப் பாலது அன்றே

ஆற்றல்சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல்!

காற்றையே மேற்கொண்டானோ காணலையே கடாவினானோ

கூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நன்றான்.

இது வெறும் குரங்கு, பெரிய விஷயம் இல்லை என்று யாராவது சொல்ல நினைத்தால் அவனுக்குப் புத்தியில்லை. கருடனுக்குக் கூட இந்த மாதிரியான போர்த் தந்திரத்தோடு கூடிய இயக்கங்கள் வருமா? அந்த மனுசன், ரெண்டு கை மனுசன், என்ன காற்று மேலதான் ஏறி வருகிறானா, நெருப்பு மேல வருகிறானா, இல்லை எமனையே வாகனமாகக் கொண்டு வருகிறானா! இதென்ன வெறும் குரங்கா! என்று எண்ணுகிறான் இராவணன்.

அப்படி இராவணனாலேயே புகழப்பட்டவன் மாருதி என்கின்ற சிறிய திருவடி. இராம பக்தர்களின் வரிசையில் முதலில் நிற்பவன்.

இந்த நுட்பமான ஆன்மிக உண்மைகளையெல்லாம் நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கரையேற்ற குரு ஒருவர் தேவை. தெய்வத்தை நமக்குக் காட்டிக் கொடுப்பவர் குரு. நம்மைக் கடவுளிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் சக்தி பெற்றவர் குரு. நாம் பரிசுத்தமான ஆன்மாக்களாக ஆனால் மட்டுமே மோட்சம் பெற முடியும். அப்படிப் பரிசுத்தமாகாத நம்மைச் நம்மைச் சுத்தப்படுத்துபவர் ஆன்மிக குரு.

அதனால் தான் குரு மூலமாக ஞானம் பெற்றுப் பரிசுத்தம் அடைந்து, அதன் பிறகு இறைவன் திருவடியை அடைவது என்பது வைணவ மரபு. குருவருள் இல்லாமல் திருவருள் இல்லை என்பது ஆன்மிகத்தின் அரிச்சுவடி பாடம். கடவுளுக்கும் நமக்கும் பாலமாக இருப்பவர் குரு. குருவை விட குருவின் திருவடிக்கே மதிப்பு அதிகம்.

நம் இஷ்ட தெய்வமே குருவடிவாக வந்திருக்கிறது என்ற நம்பிக்கை ஒருவனுக்கு வரவேண்டும். குருவையும் இஷ்ட தெய்வத்தையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்ப்பவனுக்கு எளிதில் முக்தி கிடைக்காது.

நம் கண்களுக்குப் புலப்படாத இறைவனின் திருவடிகளை நம்மால் பற்றிக் கொள்ள முடியாது. அதனால் இவ்வுலகில் தெரிந்த குருவின் திருவடியை பற்றி உய்யுதல் நலம். ஆன்மிகப் பரம்பரையில் வந்தவனுக்குக் குருவின் மகத்துவம் தெரியும்.

வேதங்களின் முடிவாக இருப்பது திருவடி

நாலு மறைகாணா அகப்பேய்

நாதனை யார் அறிவார்?

நாலு மறைமுடியும் அகப்பேய்

நற்குரு பாதமடி!

என்று அகப்பேய்ச் சித்தர் பாடுகிறார். இறைவனை அறிய யாரால் முடியும்? நால் வேத முடிவாக இருப்பது நற்குரு பாதங்களே என்கிறார். ஆண்டவனையும், குருவையும் திருவடிகள் என்னும் பாதுகைகள் மூலம் வழிபடுவது ஒரு ஞான மரபு! இது அருவுருவ பூஜை!
nammazhvar

ஆச்சாரியர் என்பவர் சீடர்களுக்கு எதை வழி நடத்தி செல்கிறாரோ, அதை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். வைணவத்தில் குரு சிஷ்ய உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குருகூரில் நம்மாழ்வார் பிறந்ததும் அது ஆழ்வார்திருநகரி என்ற முக்கியத்துவம் பெற்றது. பெருமாள் கோயில் இருந்தும், ஆழ்வார் முக்கியத்துவம் பெற்றுவிட்டார்.

நம்மாழ்வாருக்கு இன்னொரு ஏற்றமும் உண்டு. அவர் ஆழ்வார்களிலேயே தலைமையானவர் மட்டுன்று. அவர் ஆசார்யர்களிலும் தலைமையானவர். வைணவ குருபரம்பரையில் திருமகள் நாதன் முதல் ஆசார்யன்; திருமகள் இரண்டாவது; விஷ்வக்ஷேனர் மூன்றாவது; நம்மாழ்வார் நான்காவது ஆசார்யர். நாதமுனிகள் ஐந்தாவது. பின்னர் அவரிடமிருந்து யாமுன முனிக்கும் உடையவருக்கும் வேதாந்த தேசிகருக்கும் மணவாள மாமுனிக்கும் என வைணவ ஆசார்ய பரம்பரை செல்கிறது. இப்படி ஆழ்வாராகவும் ஆசார்யராகவும் ஒரே நேரத்தில் இருப்பவர் நம்மாழ்வார் மட்டுமே. வைணவர்களின் குல முதல்வன் என்றும் போற்றப்படுபவர்.

ஒரு முறை ராமானுஜர் காவிரி ஆற்றைக் கடந்து சென்ற போது, பாதுகையை கழற்றி சீடரிடம் கொடுத்தார். மறுகரை வந்ததும் திரும்பிப் பார்த்த ராமானுஜர் அதிர்ச்சியடைந்தார். அவருடைய பாதுகையை சீடர் தான் சுமந்து வந்த பெருமாள் விக்ரக பெட்டியின் மீது வைத்திருந்தார். சீடரிடம் கேட்டபோது, உங்களுக்கு தான் பெருமாள் உயர்ந்தவர், எனக்கு நீங்கள் தான் உயர்ந்தவர் என்றார். ஆச்சாரியர்களை பகவானை காட்டிலும் உயர்வாக சீடர்கள் வைத்திருந்தனர். வைணவ மரபுப்படி உய்வதற்கு வழி ஸ்ரீ ராமானுஜர் திருவடி

இராமானுசர் சொன்ன ஐந்து கடமைகள்

  1. ஸ்ரீபாஷ்யத்தைக் கற்று உணர்ந்து, அதை மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
  2. அவ்வாறு முடியாவிட்டால், நாலாயிரத் திவ்வியபிரபந்தத்தைக் கற்றுத் தெளிந்து, மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
  3. அவ்வாறு முடியாவிட்டால், திருமால் கோயில் கொண்டுள்ள திவ்வியதேசம் சென்று, கோயிலைச் சுத்தம் செய்தல், விளக்கேற்றுதல் போன்ற கைங்கர்யங்களைச் செய்ய வேண்டும்.
  4. அவ்வாறு முடியாவிட்டால், த்வய மந்திரத்தை அநுசந்திக்க வேண்டும்.
  5. அவ்வாறு முடியாவிட்டால், எம்பெருமான் அடியாரைப் பற்றிக்கொண்டு அவருக்குத் தன்னால் முடிந்த தொண்டு புரிய வேண்டும்.

திருவரங்கத்தமுதனார் இராமானுஜர் மேல் நூற்றந்தாதி – நூத்தியெட்டு பாசுரங்கள் பாடியுள்ளார். குருபரம்பரையின் பெருமையையும், ஆழ்வார்களின் பெருமையையும் சொல்லி பின் அவர் வழி வந்த எதிராசன் திருவடிகளை பற்றினால் இறைவனே நமக்கு வசப்படுவான் என்பதை ஈரத் தமிழில் பாடியுள்ளார். அதை படித்துத் தெளிவுறுவது அடியவர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

திருநாமத்தை சொன்னால் நல்ல கதி கிட்டும். ஆனால் யாருடைய திருநாமத்தைச் சொல்லுவது என்ற ஐயம் எழுகிறது. நம் ஐயத்தை, திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி பாசுரத்தால் போக்குகிறார்.

Thirumangai-Mannan

குலந்தருஞ் செல்வந் தந்திடு மடியார்

படுதுய ராயின வெல்லாம்,

நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும்

அருளொடு பெருநில மளிக்கும்,

வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற

தாயின மாயின செய்யும்,

நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்

நாராய ணவென்னும் நாமம்.

[பெரிய திருமொழி 1-1-9]

நாராயண நாமம் அடியாருக்கு குலத்தைத் தரும், செல்வம் தரும், துயரைப் போக்கும், நல்லன எல்லாம் தரும், முக்கியமாக நல்ல கதியைத் தரும்.

அந்த நாராயண நாமத்தை, தான் நரகமே சென்றாலும் உலகத்து மக்கள் எல்லாம் அறிந்து உய்ய வேண்டும் என்று தன் குருவுக்கு செய்த சத்தியத்தையும் மீறி திருகோஷ்டியூர் கோவில் மதிலின் மேல் ஏறி ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரத்தை உரக்க அறிவித்த ஸ்ரீ இராமானுஜரின் திருவடி பெருமையை நம்மால் எடுத்து இயம்பவும் முடியுமோ?

ramanujar4

ஸ்ரீ இராமானுஜர் திருவடிகளே சரணம்

Bhagavat Gita and Krishna4

திருவடி சேவை, சரணாகதி தத்துவத்தின் மேன்மை, இவை இரண்டையும் எடுத்துரைப்பது கண்ணன் அருளிய கீதை. அர்ஜுனன் கண்ணனிடம் அடிபணிந்து உங்கள் சீடனாகிய என்னை, மனத்துயரம் மற்றும் மனக் குழப்பத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று பகவான் கிருஷ்ணனிடம் தன்னை ஒப்படைக்கிறான் (சரணாகதி அடைகிறான்). அதன் பின் கண்ணன் அருச்சுனனுக்கு குருவாகி ஆத்ம உபதேசம் செய்ய முடிவு செய்தார். கண்ணன் பகவானாகவும் ஆச்சாரியனாகவும் நமக்காக இரட்டை வேடம் பூண்டார். அவர் எழுநூறு சுலோகங்களில் நாம் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும், இறுதியில் அவனை வந்தடையும் வழி என்ன என்ற அனைத்தையும் உபதேசிக்கிறார். பலவித வழி முறைகளை சொல்லி இறுதியில் அர்ஜுனனுக்கும் (நமக்கும்) அவர் சொன்னது, உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தர்மம், அதர்மம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்று அறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக் கொண்டு, உன் கடமையைச் செய்.’ (18-66) என்பதே ஆகும். சகலமும் துறந்து நீயே  கதி என்று  என்னை சரணம் அடைபவர்களை காப்பாற்றுவது என் வேலை என்கிறார். இதுவே சரணாகதி தத்துவம், இறைவன் திருவடியே கதி என்று இருந்து விட்டால் அவன் கருவியாக மட்டுமே நாம் இருந்து பாவ புண்ணியங்களில் இருந்து விடுபட்டு மீண்டும் பிறவா நிலையை அடைவோம்.

நாம் செய்த பாவங்களுக்காக பல ஜென்மங்கள் கழிந்தன. புழுவாய் பிறந்து, நாயாய் அலைந்து, பல பிறவிகள் கடந்து மானிட பிறவி பெற்று, மறுபடியும் பிறவியில் விழப்போன நமக்கு ஆச்சாரியன் உதவி செய்கிறார். சரணாகதி மார்க்கத்தை காண்பித்து இனி பிறவியற்ற நித்ய சூரியாக பகவான் முன்னே நிற்கும் பாக்கியத்தைப் பெற வைக்கிறார். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இன்றி, பசு எப்படி கன்றிடம் தாயன்பு காட்டுகிறதோ அப்படி தன்னை அண்டியவனின் மனக்கவலையை போக்கி, எல்லோருக்கும் கருணையுள்ளவனாக இருந்து, தன்னை கொல்ல வருபவருடன் கூட இனியனாக இருந்து, அடியார்களை ஒருபோதும் கைவிடாது, எப்பேற்பட்ட எதிரியையும் வென்று – இப்படி எம்பிரானின் அனந்த கோடி கல்யாண குணங்களை உணர்கிறான் அடியவன். ஒப்புயர்வற்ற அழகுடையதான கொண்டை, மகரவடிவான தோடுகள், திருமார்பில் அணியும் முத்துவடங்கள், தோள்வளைகள், முன் கையில் சாத்தும் வளையள்கள், திருமறு, கௌஸ்துப மாலை, பட்டாடை, திருவடி சிலம்பு, யஜ்ஞோபவீதம், கணையாழி இப்படி அலங்கார மேனியாய், காண ஆயிரம் கோடி கண்கள் வேண்டும், அதையும் அடியவனை காண வைக்கிறார் ஆச்சாரியன். பெருமாள் அருகில் காருண்யம், பொறுமை, சாந்தம், போன்ற எண்ணற்ற குணங்களுக்கு இருப்பிடமாயிருக்கின்ற திருமகள் அற்புதமாக காட்சியளிக்கிறாள். பெரிய பிராட்டிக்கு ஒரு தனி சிறப்பு, எம்பெருமானுக்கு ஏற்ற அழகிய திருமேனியை உடையவள், அவனோடு ஒத்து இருந்து, அடியார்களை பராமரித்துக் காப்பவள் அவள்.

இப்படி பரமபதநாதனை சேவித்துக்கொண்டே பாதுகைகளை தாங்கிக்கொண்டிருக்கும் திருவடி பீடம் வரை செல்கிறான் சரணாகதி செய்து விட்ட அடியவன். அவரிடம் அவர் திருவடிகளை யாசிக்கிறான். பெருமாளும் அளவில்லாத கருணையினால் தன் திருவடியை இவன் தலைமேல் வைக்கிறார். அவரை மேலும் காண வேண்டும் என்று அருகில் செல்கிறான். பெருமாளும் தாயாரும் அவனை தன் குழந்தை போல மடியில் வைத்துக் கொள்ளும் மகிழ்ச்சியோடு தன் திருவடியில் சேர்த்துக்கொள்ளுகிறார்கள். இந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் அவன் எம்பெருமானோடு கலந்து, நித்யசூரிகளிடையே கூடி கலந்து மறுபடியும் பிறவியில்லா ஆனந்தத்தை நிலையாக அனுபவித்துக்கொண்டிருக்கிறான்.

வள்ளுவ நாயனாரின் வாக்குப் படி

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். அவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்கமுடியும். மற்றவர் கடக்க முடியாது.

இதுவே சரணாகதியின் சிறப்பு! இறைவன் நமக்குக் காட்டிய எளிய வழி.

இறைவன்/குருவின் திருவடிகளே சரணம்

thiruvadi

நிறைவுற்றது.

இன்பச் சுற்றுலா – பகுதி 2

முதல் பகுதி படிக்க இங்கே கிளிக்கவும்.

கோவில்பட்டியில் நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கும் திருநெல்வேலியில் நெல்லை பரணி ஹோட்டலுக்கும் ஆறு வித்தியாசங்களுக்கும் மேல்! நெல்லை பரணி ஹோட்டல் சூப்பராக இருந்தது. வைபை கனெக்ஷன் என்ன, குளியல் அறையில் குளிக்கத் தனி கேபின் என்ன, அறையில் ஒலிக்கும் பாடல்கள் குளியல் அறையில் ஸ்பீக்கரில் ஒலிக்கும் வசதி என்ன, சுவையான பலவிதமான உணவு வகைகள் என்ன என்று ஹோட்டல் ஸ்டே ரொம்ப மஜாவாக இருந்தது.

மாலை நெல்லையப்பர் காந்திமதி கோவில் செல்லும் திட்டம் இருந்ததால்  நவதிருப்பதியில் இருந்து வந்து உணவருந்திய பின் இரண்டு மணி நேரத்துக்கு அனைவரும் கட்டையை சாய்த்தோம். பின் எழுந்து குழிப்பணியாரம், பஜ்ஜி, காபி, டீ என்று சுடச்சுட சாப்பிட்டுக் கிளம்பினோம். நேராக இருட்டுக் கடைக்குச் சென்று அல்வா தீருவதற்குள் வாங்க திட்டம். கோவிலுக்குப் போவதில் எங்கள் குழு எவ்வளவு ஆர்வம் காட்டியதோ அதே அளவு சாப்பாட்டு விஷயத்திலும் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். எங்கள் குழுவில் ஒருவர் வாங்கிய சேவு, கடலை மிட்டாய், பால்கோவா, இருட்டுக்கடை அல்வா இவைகள் நிறைந்த பையை சென்னை எக்மோரில் இறக்க இரண்டு பேர் உதவி தேவைப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! கீழே உள்ள படம் இருட்டுக் கடை முன் எடுத்தது.

iruttukadai

நெல்லையப்பர் கோவில் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. நுழைவாயிலில் நிறைய கடைகள், கோவில் சொத்தில் ஆக்கிரமிப்புகள் என்று நன்றாகத் தெரிகிறது. உள்ளே நுழைந்ததும் பெரிய நந்தி. வெள்ளை நிறம் என்று நினைக்கிறேன். அதன் மேல் போகஸ் லைட் போடப்பட்டு இருந்ததால் அந்த வண்ணம் தான் தெரிந்தது. தூண் சிற்பங்கள் எல்லாம் out of the world! இங்கே தான் சப்தஸ்வர தூண்களும் உள்ளன. ஏழெட்டுப் படிகள் ஏறித்தான் நெல்லையப்பரை தரிசிக்கும் இடத்திற்கு செல்ல முடியும். நிறைய கூட்டம். ஒரு அர்ச்சகர் நம்மிடம் இருந்து பூவை பெற்றுக் கொண்டு அனைவரின் பெயர் நட்சத்திரம் வாங்கி அர்ச்சனை செய்ய கர்ப்பக் கிரகத்தினுள் சென்றார். நாங்களும் முண்டியடித்து முன்னேறி சுவாமியை தரிசனம் செய்தோம். சுயம்பு லிங்கம் போலத் தோன்றினார். அது பற்றி விசாரிக்க முடியவில்லை.

nellaiyappar

nandhi

விக்கியில் தேடியதில் இந்தத் தகவல் கிடைத்தது. முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

musicpillars

பிரசாதம் வாங்கிய பின் சற்றே அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் கிடந்த கோலத்தில் ஆறடிக்கு மேல் ஸ்ரீமன் நாராயணன். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அங்கே அர்ச்சகர் யாரும் இல்லை. நன்றாக அருகில் நின்று சேவித்தோம். பின் அந்தக் கூட்டத்தில் ஒரு பிரிவினர் தொலைந்து போனர். போன் அடித்தாலும் எடுக்கவில்லை. சரி நாம் மற்ற தெய்வங்களை வணங்குவோம் என்று பிராகார வலம் வந்தோம். எத்தனை மூர்த்திகள்! எத்தனை பெரிய பிராகாரங்கள்! இன்னும் ஒரு நிலை ஏறினால் சோமாஸ்கந்தன் சந்நிதி வருகிறது. ஒரு நிலை கீழே இறங்கினால் ஆதி சிவன் உள்ளார். ஒரு பக்கம் குபேர லிங்கம், ஒரு பக்கம் தட்சிணாமூர்த்தி என்று திரும்பிய இடம் எங்கும் இறைவன்.

pirakaram

ஷோலே படத்தில் சைட் கார் பிரிந்து பிறகு இணைந்தது போல சிறிது நேரத்தில் பிரிந்த குழு திரும்ப எங்களுடன் தானே வந்து இணைந்தது. காந்திமதிக்குத் தனிக்கோவில்.  பிராகாரங்களை சுற்றி வந்ததில் கால் வலிக்க ஆரம்பித்து விடுகிறது. இந்தக் கோவிலிலும் நிறைய மூர்த்திகள். ஏகப்பட்ட சிற்பங்கள். நின்று ரசிக்க ஆரம்பித்தால் மற்றவர்கள் நம்மை விட்டு சென்றுவிடுவதால் குழுவோடு இணைந்து செல்ல வேண்டியிருந்தது. காந்திமதி அம்மன் கருணையே உருவாக இருந்தார். அவதிருச்செந்தூர் ரை தரிசித்து, பின் வந்த வழியே திரும்பி எங்கள் வாகனம் நின்ற இடத்தை அடைந்தோம். அதுவே ஒரு கிலோமீட்டர் நடை இருக்கும்.

அன்று இரவும் அரட்டைக்குப் பின் உணவு, உறக்கம். அடுத்த நாள் திருச்செந்தூர் பயணம். இதுவரை பயணம் செய்தபோது திரை இசைப் பாடல்கள் எப்பொழுதோ ஒரு முறை தான் வண்டியில் கேட்டோம். ஏனென்றால் ஏறிய ஐந்து நிமிடங்களில் இறங்க வேண்டிய அடுத்தக் கோவில் வந்துவிடும். திருச்செந்தூர் பயணத்தின் போது விநாயகர் பாடலில் ஆரம்பித்து மண்ணானாலும்  திருசெந்தூரில் மண்ணாவேன் என்ற TMSன் புகழ் பெற்ற பாடலைத் தொடர்ந்து பல பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து பயணித்தோம். வழியும் பசுஞ்சோலைகள் நிறைந்தனவாக இருந்தன.

greenfields1

திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்துக்காக ஒருவரிடம் தொலைபேசியில் பேசி வைத்திருந்தோம். அவர் நன்றாக தரிசனம் செய்து வைப்பதாக வாக்குக் கொடுத்திருந்தார். அவரும் எங்களுக்காக சரியான நேரத்தில் காத்துக் கொண்டிருந்தார். உண்மையிலேயே கடலலை கோவில் படிகளை உரசிக் கொண்டு இருப்பது கண்கொள்ளாக் காட்சி.

tiruchendur

கால்களை கடல் அலைகளில் நனைத்து, தலையில் சிறிது நீரை தெளித்துக் கொண்டு அவருடன் கோவில் உள்ளே செல்ல ஆரம்பித்தோம். கேரளக் கோவில்களில் இருப்பது போல் ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் செல்வது இங்கும் கடைபிடிக்கப் படுகிறது. நல்ல கூட்டம். அவர் முன்னே செல்ல ஸ்பெஷல் டிக்கெட் தரிசன வழியில் அவரை பின் தொடர்ந்தோம். பேட்ச் பேட்சாக பத்து பத்துப் பேராக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர். எங்கள் முறை வந்ததும் அவருடன் உள்ளே சென்றோம். திவ்ய தரிசனம், பாலபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. உண்மையில் சிலிர்த்துப் போனோம். அதுவும் என் போன்ற முதன் முறை தரிசிப்பவர்களின் பரவச நிலையை எழுத்தால் வர்ணிக்க முடியாது.

ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு சொம்புப் பாலை முருகன் சிரசில் ஒரு அழகான சல்லடையின் மேல் ஊற்றுகின்றனர், பின் தீபாராதனை. உட்கார வைத்திருக்கும் பேட்சை எழுப்பி அடுத்த பத்து பேரை உட்கார வைக்கின்றனர். பாலபிஷேகம் நடக்கும் பொது முருகனை நன்றாக பார்க்க முடிகிறது. அபிஷேக வேளையில் நாங்கள் சென்றது எங்கள் கொடுப்பினை தான். அதற்குள் எங்களுக்கு உதவி செய்ய வந்தவர் அர்ச்சனை செய்து பிரசாதத்தைக் கொண்டு வந்தார். பின் நாங்கள் முருகன்சி சன்னதிக்குப்ன்ன பின்னிருக்கும் குகைப் போன்ற பாதையில் சென்று ஐந்து லிங்கங்களை தரிசித்துத் திரும்பி வந்தோம். அவர் திரும்பவும் ஒரு முறை எங்களை முருகன் முன் உட்கார வைத்து முருகனின் பாலபிஷேகத்தையும் தீபாராதனையையும் மீண்டும் ஒரு முறை தரிசிக்க வைத்தார். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

நான் இது நாள் வரை மூலவரே வள்ளி தெய்வயானையுடன் இருப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் உத்சவர் தான் அவ்வாறு உள்ளார், மூலவர் தண்டாயுதபாணி ஆக இருக்கிறார். உத்சவரையும் சேவித்தோம். பின் அங்குள்ள இதர சன்னதிகளை உள்ள மூர்த்திகளையும் வழிபட்டோம். இங்கும் ஒரு பெருமாள் சன்னதி உள்ளது. பின் வெளியில் வந்து பிரசாதம் பெற்றுக் கொண்டோம். ரொம்ப அருமையான, நிம்மதியான மன நிலையில் அனைவரும் இருந்தோம்.

tiruchendur1

எங்கள் குழுவில் சிலர் வள்ளி குகைக்கும் சென்று வந்தனர். பின் திருநெல்வேலி திரும்பும் வழியில் சரவண பவன் அண்ணாச்சி கட்டியிருக்கும் வனத்திருப்பதி கோவிலுக்கும் சென்றோம். கோவில் நன்கு கட்டப்பட்டு அழகாக பராமரிக்கப்பட்டுள்ளது. பக்கத்திலேயே சரவணபவன் ஹோட்டல் உள்ளது.

vanathiru

அறைக்குத் திரும்பி உணவு உண்டபின் மதிய நித்திரை. அதற்கு பின் வாங்கிய தின்பண்டங்களின் பங்கு பிரிப்பு. குடும்ப சொத்து பாகப் பிரிவினையை விட பெரியதாக இருந்தது. இதில் நாங்கள் திருநெல்வேலியில் இருக்கோம் என்று தெரிந்து, சேவு வேணும், அல்வா வேணும்ன்னு வாட்சப்பில் ஒரே தொந்தரவு! {பேக்கரி ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன் பன்னு வேணும் ரொட்டி வேணும்ன்னு ஒரே தொல்லை டோனில் படிக்கவும்}. அவர்களுக்காக ரொம்ப கனிவு மனம் கொண்ட எங்கள் குழு உறுப்பினர் ஒருவர் மறுபடியும் சென்று வாங்கி வந்தார்.

டிரெயினுக்குக் கிளம்புவதற்குள் எங்களில் மூவர் அங்கு இருக்கும் சாலைக் குமரன் கோவிலுக்கும் போய் விட்டு வந்துவிட்டனர்.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே எங்களுக்கு டிரெயினுக்கு இரவு உணவு கட்டிக் கொடுத்தனர். சப்பாத்தியும் தயிர் சாதமும் மிகவும் அருமை. எங்கள் வாகன ஓட்டுனரும் மிகவும் நல்லவராக இருந்தார். பொறுமையாக எங்களை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். அவருக்கு நாங்கள் அனைவரும் தனித் தனியாக நன்றி சொன்னோம். டிரெயினில் இந்த முறை அரட்டை டாபிக் புகழ்பெற்ற பல fake சாமியார்கள் பற்றி. மிகவும் சுவாரசியமாக இருந்தது உரையாடல் என்று சொல்லவும் தேவையில்லை. காலையில் எழும்பூர் நிலையத்தை டிரெயின் ரொம்ப தாமதம் இன்றி தொட்டது. அடுத்த சுற்றுலாவுக்கு எங்கு செல்லலாம் என்று யோசித்தபடி அனைவரும் கலைந்தோம்.

இந்தமாதிரி சுற்றுலாக்கள் உறுவுகளை பலப்படுத்துகிறது, மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியுடன் இருக்க பழக்குகிறது. அதனால் அடுத்த சுற்றுலாவுக்காக தற்போது waiting :-}

tiruchendur2

 

இன்பச் சுற்றுலா – திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டக் கோவில்கள்! – பகுதி 1

ட்விட்டர் நண்பர் ஜகன் @Azhvarkadiyann  க்குத் திருமணம் நிச்சயம் ஆன உடனேயே எங்கள் நண்பர் குழாம் கோவில்பட்டிக்கு டிக்கெட் போட்டாச்சு. அந்த வட்டாரத்தில் இருக்கும் சில பல கோவில்களை தரிசிக்கவும் மூன்று நாட்கள் இன்ப சுற்றுலா திட்டமும் வகுக்கப்பட்டது. ஜெகனின் திருமணம் கோவில்பட்டியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசுவந்தனை சிவன் கோவிலில் நடைபெற இருந்ததால் நாங்கள் எட்டு பேர் கோவில்பட்டிக்குப் போய் அங்கே குளித்து முடித்துத் திருமணத்துக்குச் செல்வதாக முடிவு செய்தோம்.

முத்து நகர் எக்ஸ்பிரெஸ்சிலியே கொண்டாட்டம் ரம்பம்பம் ஆரம்பம். சுவை மிகுந்த உணவிற்குப் பிறகு ட்விட்டர், சினிமா, அரசியல் என்று பல்வேறு துறைகளைப் பற்றிய எங்கள் மேலான கருத்துக்களைப் {!!} பகிர்ந்த பிறகு தூக்கம் கண்களை சுழற்ற நல்ல உறக்கம். இப்பொழுது எந்த ஸ்டேஷனில் இறங்க வேண்டுமோ அந்த ஸ்டேஷன் வரும் முன் எழுப்ப போனில் 139 டயல் செய்து அலாரம் வைக்கும் வசதியை ரெயில்வே துறை அமைத்துக் கொடுத்துள்ளது. எங்களுக்கு அது மிகவும் வசதியாக இருந்தது. காலை ஐந்தே காலுக்குக் கோவில்பட்டியை தொட்டது டிரெயின். சூப்பர் டிலக்ஸ் டெம்போ டிராவலரை எங்கள் குழு நண்பர் ஏற்பாடு செய்திருந்தார். சிறு நகர வீதியில் காலை புலரும் நேரத்தில் ஹோட்டல் சென்று அடைந்தோம். மிகவும் ரம்மியமான காலைப் பொழுது.

சின்ன விடுதி தான். ஆனால் சுத்தமாக இருந்தது. குளித்து முடித்து அலங்கரித்துக் கொண்டு கிளம்பி லட்சுமி சங்கர் சைவ ஹோட்டலில் காலை உணவை உண்டோம். காபி சுவை நாவை விட்டு நீங்கவில்லை. சாப்பிட்ட இலையை நாமே எடுத்துப் போடவேண்டும். என்ன அருமையான பழக்கம்! காலை மணி எட்டு எட்டரை ஆனதால் நிறைய பள்ளி பேருந்துகள் செல்லும் சாலையில் ரொம்ப டிராபிக் ஜேம். பசுவந்தனை செல்லும் சாலையில் ஓவர் டேக் எல்லாம் செய்ய முடியவில்லை. கோவிலை அடைந்தபோது மணி ஒன்பதே கால். முகூர்த்தம் ஒன்பதில் இருந்து பத்தரை. மணமக்களும் குடும்பத்தினருமே அப்பொழுது தான் அரக்கப் பறக்க வந்திருந்தனர்.

சாமி சன்னதியில் மணமக்களுக்கு புது உடை கொடுக்கப்பட்டது. மாப்பிள்ளை சீக்கிரம் ரெடியாகி விட்டார். வழக்கம் போல பெண் லேட்டாக்கினார். கோவில் குருக்கள் மணி பத்தாகிவிட்டதே என்று அவசரப் படுத்தினார். ஆனால் மணமக்கள் வீட்டார் ரொம்ப ஜாலியாக இருந்தனர். அதெல்லாம் பத்தரைக்குள் மாப்பிள்ளை தாலியை கட்டிவிடுவார் கவலை வேண்டாம் என்று குருக்களை சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தனர். புது உடையில் வந்த மணமக்களை சாமி சன்னதியில் இருந்து கோவிலில் ஒரு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். எக்கச்சக்கக் கூட்டம். ஊரே வந்துவிடும் போலிருக்குக் கல்யாணத்துக்கு!

jagan

மணமக்களை புகைப்படக்காரர், விடியோக்காரர் நன்றாக மறைத்துக் கொண்டனர். தாலி கட்டும் சமயத்தில் தோராயமாக மணமக்கள் இருக்கும் திசையில் அட்சதையை தூவினோம். வாழ்க மணமக்கள். இருவரும் மனம் கொள்ளா மகிழ்ச்சியில் இருந்தது முகத்தில் தெரிந்தது. இரு வீட்டாரும் சொன்னது போல பத்து இருபத்தைந்துக்கு ஜகன் மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டார்.

மணமக்கள் ரிசெப்ஷன் மண்டபத்துக்கு வந்த பிறகு புகைப்படம் எடுத்துக் கொண்டு திருமணத்தின் முக்கிய நிகழ்வான விருந்துண்ணல்லுக்கு முதல் பந்திக்கே சென்றோம். அறுசுவை உணவு! ஜவ்வரிசி/சேமியா பால் பாயசத்தின் சுவை இன்னும் நாக்கில் உள்ளது!

பிறகு கோவில்பட்டிக்குப் பயணம். வழியெல்லாம் சில ஈச்ச மரங்களும், பனை மரங்களும் வேலிக்காத்தான் முட்செடிகளும் தான் சாலையின் இரு புறமும் இருந்தன. நிழல் தரும் மரங்களோ பசுமையான வயல்களோ இல்லை.

நாலு மணிக்கு கோவில்பட்டியில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் பயணப்பட்டோம். முப்பது கிலோமீட்டர் தான். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தை நிச்சயம் உலக அதிசயங்களுக்கு ஈடாகச் சொல்லலாம். வானளாவ நிற்கும் அந்தக் கோபுரம் தமிழர் பண்பாட்டிற்கும் கலை நயத்துக்கும் ஒரு சான்று. நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

srividay

கோவில் வெளிப்பிராகாரத்தில் இருந்தே பெரிய பெரிய சிற்பங்கள் தூண்களை அலங்கரிக்கின்றன. கையெட்டும் தூரம் வரை எண்ணெய் பிசுக்கை நம்மவர்கள் தூண்களில் துடைத்து வைத்திருக்கின்றனர். அதற்கு மேல் பகுதி கெடாமல் அழகாக உள்ளன. எத்தனையோ வருடப் பழைமையானக் கோவிலாக இருந்தாலும் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றியுள்ள சுவரில் உள்ள சிற்பங்கள் மெருகு குலையாமல் உள்ளன. அவ்விடங்களில் கம்பி வேலி போட்டு பாதுகாப்பதும் ஒரு காரணமாக இருக்கும். உட் பிராகாரத்தில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் ஆண்டாள், பெரியாழ்வாரின் கதைகளை சொல்கின்றன.

yazhi

tanjorepainting

கர்ப்பக்கிரகத்தில் ஆண்டாள் ரங்கமன்னார் மற்றும் கருடன் சேவை சாதிக்கின்றனர். எங்கும் கருடாழ்வார் பெருமாளுக்கு நேரெதிர் சன்னதியில் தான் இருப்பார். ரங்கமன்னாரை ஆண்டாளுடன் இணைக்க விரைந்து கருடன் கொண்டு சேரப்பித்ததால் அவருக்குப் பெருமாளுடன் நிற்கும் ஏற்றம் இங்கே கிடைத்திருக்கிறது.

rangamannar

கோவிலைச் சுற்றியும் கோவிலுக்குப் போகும் அந்த வெளிப் பிராகாரத்திலும் பால்கோவா, வாசனைப் பொடி, தாழம்பூ குங்குமம், மர பொம்மைகள், ஓலைக் கூடைகள் எனக் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இரு புறமும் கடைகள் நிறைந்திருக்கின்றன. வெளியே வந்தவுடன் இடது புறத்தில் ஆண்டாள் அவதரித்த துளசி வனம் உள்ளது. மிகவும் அழகான நந்தவனம். அங்கேயே ஒரு சின்ன சன்னதியில் சிறுமியாக ஆண்டாள் சேவை சாதிக்கிறாள். சின்னக் கோவிலானாலும் மிகவும் சுத்தமாகவும் சுவர்களில் அழகிய சித்திரங்களும் நிறைந்துள்ளன.

thulasi

அதை அடுத்து வடபத்ரசாயி கோவில் உள்ளது. பெரிய கோவில், இரண்டு நிலைகள். கீழ் நிலையில் லட்சுமி நரசிம்மர் சுதையால ஆன பெரிய சிலை. வண்ணப் பூச்சுக்களுடன் கன கம்பீரமாகக் காட்சித் தருகிறார். அழகோ அழகு. மாடியில் வடபத்ர சாயி. அவரும் சுதை வடிவில், நீண்ட சயனத் திருக்கோலம். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை இவ்வளவு அருகிலும் விரட்டப்படாமலும் சேவிக்க முடியாது. இங்கே அருமையான சேவை. தீர்த்தம், துளசிப் பிரசாதம். அந்தக் காலத்தில் எப்படித்தான் இவ்வளவு பிரம்மாண்டமானக் கோவில்களை அரசர்கள் கட்டினார்களோ தெரியவில்லை. கோவில்கள் முழுவதுமே சிற்பங்கள் கண்ணைக் கவர்ந்தன. இந்த மூன்று கோவில்களும், அடுத்து நாங்கள் தரிசித்த நவ திருப்பதியும் வெகு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது ஒரு பெரிய ஆறுதல்.

yazhi1

அடுத்த நாள் திருநெல்வேலிவேலியில் இருந்து பயணத்தைத் தொடங்கினோம். ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ளன. நவ திருப்பதிகள் என அழைக்கப்படும் அந்த தலங்கள். 1.ஸ்ரீவைகுண்டம் 2.நத்தம் 3. திருப்புளியங்குடி, 4.தொலைவில்லி மங்கலம், 5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது) 6.பெருங்குளம், 7. தென்திருப்பேரை, 8. திருக்கோளூர், 9. ஆழ்வார் திருநகரி.

டிபனை முடித்துக் கொண்டு கிளம்பவே ஒன்பது மணி ஆகிவிட்டது. நவ திருப்பதியின் முதல் கோவிலாக திருவைகுண்டத்தை அடைந்தோம். அழகிய பெரிய கோபுரம். வாசல் பகுதியில் இருந்து சன்னதிக்கு செல்வதே நீண்ட நடையாக இருந்தது. ஒரு தனி மண்டபத்தில் நிறைய ஆளுயர சிற்பங்கள் இருந்தன.

Srivaikundam_Temple

வைகுண்டநாதன் நின்ற திருக்கோலம். ரொம்ப உயரம் இல்லை. எந்த நவ திருப்பதி கோவில்களிலும் கர்ப்பகிரகத்தில் மின்சார விளக்கு இல்லை, எண்ணெய் விளக்குகள் தாம். அதனால் வெளி வெளிச்சத்தில் இருந்து நாம் உள்ளே வந்து தரிசிக்கும்போது சிறிது நேரம் ஆகிறது கண்கள் அட்ஜஸ்ட் ஆகி பெருமாளை சரியாக பார்க்க. தீபாராதனை காட்டும்போது தான் நன்றாக தரிசிக்க முடிகிறது. பட்டர் சுருக்கமாக பெருமாளின் பெயர், தாயாரின் பெயர் திவ்ய தேசத்தின் பெயர், எந்த கிரகத்துக்கான ப்ரீத்தி ஆகியவைகளை கூடியிருப்பவர்களுக்குச் சொல்கிறார். இந்தக் கோவில் சூரியன் பரிகார ஸ்தலம்.

ramastatue

ஒரு காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் இருந்து படைப்புத் தொழில் குறித்த ரகசியம் அடங்கிய ஏடுகனை ஒளித்து வைத்துக்கொண்டானாம். அந்த ஏடுகளை மீட்க தாமிரபரணி ஆற்றங்கரையில் விஷ்ணுவை நோக்கி பிரம்மா கடும் தவம் செய்ய, பிரம்மாவுக்கு திருமால் நேரில் காட்சியளித்து படைப்புத் தொழில் குறித்த ரகசியத்தை சோமுகாசுரனிடமிருந்து மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க வேண்டும் என்று பிரம்மா வேண்ட திருமாலும் அப்படியே ஆகட்டும் என வைகுண்டநாதனாக நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிகிறார்.

அடுத்து நாங்கள் சென்றது ஒன்பதாவது திருப்பதி. முதல் ஸ்தலத்துக்குப் பிறகு ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு என்று வந்தால் சுற்று இல்லாமல் விரைவில் தரிசிக்க முடிகிறது. ஆழ்வார் திருநகரி பயணப்பட்டோம். இது நம்மாழ்வார் அவதாரத் தலம். கோவில் வெளியில் இருந்து பார்க்க சிறியதாக இருந்தாலும் உள்ளே பெரியதாக இருந்தது. பெருமாளும் கிடந்த கோலத்தில் வெள்ளிக் கவசத்தில் பிரமாதமாக இருந்தார். நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா, திருவடிகளில் ஸ்ரீதேவி பூதேவி. இங்கும் தீப ஆராதனையின் போது தான் பெருமாளை நன்றாக தரிசிக்க முடிகிறது. எல்லா கோவில்களிலுமே ரொம்ப கூட்டம் இல்லை. நாங்கள் போவதற்கு முன் ஒரு பத்து பேர் இருப்பர், அவர்கள் நகர்ந்ததும் நாம் சற்று அருகில் போய் சேவிக்க முடிகிறது. இந்தக் கோவில் குரு பகவானுக்கான பரிகார ஸ்தலம்.

பெருமாள் ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால் ஆதிநாதன் என்ற திருநாமம் இவருக்கு. திருமாலே பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடமாகியதால் குருகூர் என்றும் அழைக்கப்படுகிறது.

urangapuli1

பிராகாரத்தை வலம் வந்தால் அங்கே ஒரு பகுதியில் நான்கு படிகள் ஏறினால் நம்மாழ்வார் பல வருடங்கள் பிண்டமாக வாழ்ந்த புளியமர பொந்தை தரிசிக்கலாம். நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது. இந்தப் புளியமரம் இரவில் இலைகளை மூடாது. அதனால் இதற்கு உறங்காப் புளி என்று பெயர். பக்கத்திலேயே நம்மாழ்வார் சன்னதி. நம்மாழ்வார் திரு உருவம் மிகவும் அழகாக உள்ளது. அலங்காரமும் அற்புதம்.

அடுத்து நாங்கள் எட்டாவது தலமாகிய திருக்கோளூர் சென்றோம். இது மதுரகவி ஆழ்வார் அவதாரத் தலம்.

nt6

இங்கு மூலவர் வைத்தமாநிதி பெருமாள், உற்சவர் நிக்சோவித்தன், தாயார் குமுத வல்லி, கோளூர் வல்லி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். குபேரன் திருக்கோளூர் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்து, தான் ஒரு சாபத்தால் இழந்த நிதியில் பாதியை பெற்றான். எனவே இழந்த செல்வத்தை பெற திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம். இது செவ்வாய் கிரஹதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

அடுத்து தென் திருப்பேரை சென்றோம். இந்த தலம் திருவைகுண்டத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தான். இங்கு மூலவர் மகர நெடுங்குழைக்காதர் வீற்றிருந்த திருக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். உயரமான பெருமாளாக தரிசிக்க அத்தனை அழகாக உள்ளார். உற்சவர் நிகரில் முகில் வண்ணன், தாயார் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். பெயர்களே உச்சரிக்க அவ்வளவு ரம்மியமாக உள்ளன.

nt5

துர்வாசமுனிவரின் சாப விமோசனம் பெறுவதற்காக பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நராயணாய என்ற மந்திரத்தை ஜெபம் செய்தாராம். பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும்போது இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்க திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்திருக்கிறார். அப்போது தேவர்கள் பூமாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது. இலக்குமியின் உடலுடன் பூமாதேவி தவமிருந்ததால் இவ்வூர் திருப்பேரை என்றழைக்கப்பட்டது. இத்தலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் இன்று வரை பொய்ப்பதில்லை என்கிறார்கள். இது சுக்கிர கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

அடுத்தத் திருத்தலம் பெருங்குளம். மூலவர் வேங்கட வாணனாகவும், உற்சவர் மாயக்கூத்தன் தாயார் அலமேலுமங்கை, குளந்தைவல்லி தாயாருடன் அருள் பாலிக்கிறார்.

nt4

பெருங்குளத்தில் வசித்து வந்த வேதசாரண் குமுதவல்லி தம்பதியினரின் மகள் கமலாவதி, தான் திருமணம் செய்தால் பெருமாளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி, பெருமாளை நோக்கி கடும் தவம்புரிந்தார். பெருமாளும் நேரில் தோன்றி தன்னுடைய மார்பில் கமலாவதியை ஏற்றுக்கொண்டார்.

ஒரு சமயம் வேதாசாரண் மனைவி குமுதவல்லியை அச்மசாரன் என்னும் அரக்கன் கவர்ந்து சென்றான். குமுதவல்லியை அரக்கனிடமிருந்து பெருமாள் மீட்டுவந்தார். பெருமாளுடன் அரக்கன் போரிட்டான். அரக்கனை நர்த்தனம் செய்து அவனை வதம் செய்ததால், மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெருமாளுக்கு ஏற்பட்டது. இது சனி கிரஹ தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

mapofnt

பெருங்குளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இரட்டை திருப்பதி ஸ்தலங்கள். தெற்கு கோவிலில் மூலவர் தேவபிரான் உற்சவர் ஸ்ரீனிவாசன் தாயார் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார். மிகப் பெரிய மூர்த்தி. வீற்றிருந்த திருக்கோலம். வெள்ளிக் கவசத்துடன் மிகவும் அழகாகக் காட்சி அளிக்கிறார்.

nt3

ஆத்ரேயசுப்ரபர் என்ற ரிஷி யாகம் செய்வதற்காக இத்தலத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, பூமியில் புதையுண்டு கிடந்த மிக ஒளிமயமான ஒரு வில்லையும் தராசையும் எடுத்தார். அவர் கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறியது. இருவரும் குபேர சாபத்தால் வில்லாகவும் தராசாகவும் மாறி இத்தல மண்ணில் புதையுண்டு கிடந்ததாக கூறி பரமபத முக்தி அடைந்ததால் இத்தலம் தொலைவில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது. இத்தலம் ராகு தோஷநிவர்த்தி ஸ்தலம்.இரட்டை திருப்பதி என்னும் ராகு கேது பரிகார ஸ்தலம்.

தெற்கு கோவிலில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வடக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அரவிந்த லோசனார் {செந்தாமரைக் கண்ணன்} வீற்றிருந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். உற்சவர் செந்தாமரைக் கண்ணன் தாயார் கருத்தடங்கண்ணியுடன் எழுந்தருளியுள்ளார். பெருமாளையும் தாயாரையும் நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

nt7

தினமும் தேவபிரானுக்கு வடக்கு தடாகத்தில் இருந்து சுப்ரபர் தாமரை மலர்களை எடுத்து வந்து பூஜித்து வந்தார். ஒருமுறை சுப்ரபர் எங்கிருந்து தாமரை மலர்களை கொய்து கொண்டு வருகிறார் என்பதை பார்ப்பதற்காக, பின் தொடர்ந்து சென்றார். இதை அறிந்த சுப்ரபர் தன்னை பின் தொடர்வதற்கான காரணம் கேட்க தேவ பிரானோடு சேர்த்து தனக்கும் அபிஷேகம் செய்ய பெருமாள் கூறியதால், அங்கேயும் ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து சுப்ரபர் பூஜைகள் செய்து வந்தார். அந்த பெருமாளே செந்தாமரைக்கண்ணனாக காட்சி அளிக்கிறார். இது கேது கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

இந்தக் கோவில்கள் இரண்டும் ஒரு மணிக்கு மேலும் திறந்திருப்பது சேவார்த்திகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது.  செந்தாமரைக் கண்ணன் கோவிலில் ரொம்ப அழகான ஒரு யானை லட்சுமி என்ற பெயருடன் எல்லார் மனத்தையும் கொள்ளைக் கொண்டது. அதனுடன் புகைப்படம் எடுக்க நின்றால் தும்பிக்கையை மேலே தூக்கி அழகாக போஸ் கொடுத்தது. நாம் தாங்க் யு என்றால் தலையை ஆட்டி, போயிட்டு வரோம் என்றாலும் புரிந்தா மாதிரி தலையை ஆட்டியது. எங்கள் குழுவினர் சிலருக்கு அதை விட்டு வரவே விருப்பம் இல்லை.

elephant

அடுத்து நாங்கள் சென்றது புதன் பரிகாரத் தலமாகிய திருப்புளியங்குடி. இங்கே மூலவர் காய்சினவேந்தன் தாயார் மலர்மகள், திரு மகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருமால் இலக்குமி தேவியுடன் நதிக் கரையில் தனித்திருந்த போது, தன்னை திருமால் கண்டுகொள்ளாதிருக்கிறாரோ என பூமாதேவி சினங்கொண்டு பாதாள லோகம் செல்ல திருமால் அங்கு சென்று பூமாதேவியை சமாதானம் செய்து அழைத்து வந்து இரு வரும் சமமே என இரு தேவியருடனும் திருமால் இங்கு எழுந்து காட்சியளிக்கிறார். பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால், பூமிபாகர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உள்ளது.

nt2

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவரகுணமங்கை எனப்படும் நத்தத்தில், மூலவர் விஜயாசன பெருமாள் ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலத்தில் தாயார்கள் வரகுண வல்லித் தாயர், வரகுண மங்கைத் தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இது சந்திரகிரஹ தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

nt1

திருவரகுணமங்கையில் வேதவி என்பவர் தன் மாதா, பிதா, குரு ஆகியோருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆஸனம் என்னும் மந்திரத்தை ஜெபித்து கடும் தவம் புரிந்தார். அப்போது திருமால் அங்கு தோன்றி வேதவிக்கு காட்சியளிதார். திருமாலின் அருள் பெற்று வேதவி பரம பதம் அடைந்தார்.

ஆஸன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் விஜயாசனர் என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானது. இத்திருப்பதியில் உயிர் நீத்தால் மோட்சம் கிட்டும் என ரோமேச முனிவர் கூறியுள்ளார். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்கே இறைவனை பிரார்த்திக்கலாம். இங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

வெற்றிகரமாக மதியம் ஒன்னரை மணிக்குள் நாங்கள் நவ திருப்பதியையும் சேவித்து முடித்ததில் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. எங்கள் குழுவில் பலருக்கு இது நெடு நாள் ஆசை. நிறைவேற்றி வைத்த அந்தப் பெருமாளுக்கு மானசீகமாக நன்றி சொல்லிவிட்டு எங்கள் ஹோட்டலுக்குத் திரும்பினோம்.

தொடரும்..இன்னுமொரு பாகம்.

 

 

கீதையில் அஹிம்சை

arjuna-and-krishna

போர்க்களத்தில் கண்ணனால் அர்ஜுனனுக்குக் உபதேசிக்கப் படுவதே கீதை. குருக்ஷேத்திர மைதானத்தில் போர் ஆரம்பிப்பதற்கு சில நொடிகளுக்கு முன் எதிர் அணியில் இருக்கும் தன் உறவினர்களைப் பார்த்து அவர்களை எப்படி கொல்வது என்று மதி மயங்கி, ஆயுதங்களைக் கீழே போட்டு, தடுமாறி நிற்கிறான் அர்ஜுனன். வீரனான உன் கடமை போர் செய்வதே என அவனுக்கு அறிவுறுத்துகிறார் பகவான் கிருஷ்ணன். அப்போரில் பல்லாயிரக் கணக்கானோர் இறக்கின்றனர்.

மனம், வாக்கு, காயங்களினால் உயிரினங்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருப்பதே அஹிம்சை. அப்படியிருக்கையில் பல்லாயிரக் கணக்கானோர் இறக்கும் குருக்ஷேத்திரப் போரின் போது போதிக்கப்படும் கீதையில் அஹிம்சை எங்கிருந்து வருகிறது? அஹிம்சைக்கும் பகவத் கீதைக்கும் உள்ள சரியான தொடர்பை நாம் புரிந்து கொண்டோமானால் கீதையின் சாரத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் ஆகிறோம்.

எதிரே நிற்கும் தாத்தா பீஷ்மர், குரு துரோணர், நண்பர்கள், சுற்றத்தார் என்று இருப்பதைக் கண்டு அர்ஜுனன் குழப்பமடைகிறான். நான் ஏன் போரிடவேண்டும்? போரிட்டால் இவர்களை எல்லாம் நான் இழந்து விடுவேன். இவர்களை எல்லாம் இழந்துவிட்ட வாழ்க்கை எனக்கு ஒரு வாழ்க்கையா?  எனவே போரே வேண்டாம் என வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு போர் வேண்டாம் என்கிற “அஹிம்சை” பேசுகிறான்!

அர்ஜூனனின் இச்செயல் அஹிம்சை அல்ல. தான் என்கிற சுயநலம்! அர்ஜுனன் இருந்த இடத்தில் ஒரு புத்தரோ, மஹாவீரரோ இருந்திருந்தால் பகவத் கீதையின் அவசியம் ஏற்பட்டிருக்காது. புத்தரும் மஹாவீரரும் எதிரிலே எவர் நின்றிருந்தாலும் போரிடமாட்டார்கள். அர்ஜூனன் அவனது வாழ்க்கைக்குச் சுகம் தரும் நபர்கள், தான் மதிப்பவர்கள் இருந்ததால் போரிடத் தயங்கினான். “தான்” “எனது” என்பதிலிருந்து தோன்றிய மமதையினால் விளைந்த சுயநலத்தில் “அஹிம்சை” பேசினான். பீஷ்மர், துரோணர், அவனது நண்பர்கள் இல்லையெனில் அர்ஜூனன் அஹிம்சை பேசியிருக்க மாட்டான்!

போர் என்று வந்த நிலையில் போர்க்களத்தில் தான் பீஷ்மரைக் கொன்றுவிட்டால் தன்னைப் புகழ, தனது வில் வித்தையைப் பாராட்ட தாத்தா இருக்க மாட்டாரே என்கிற எண்ணத்தாலும், தனக்கு வில்வித்தை கற்றுத் தந்த குரு அம்பு மாரி பொழிந்த சாகசத்தைக் கண்டு மகிழ்ந்ததைக் களிப்போடு கூறி தட்டிக் கொடுத்துப் பாராட்ட இருக்கமாட்டார் என்கிற சுயநல் எண்ணத்தாலும், போரை நிறுத்திவிட்டால் அர்ஜுனன் மிக நல்லவன் என்று நண்பர்கள் சுற்றத்தார் பாராட்டுவார்கள் என்கிற சுயநல உந்துதலாலும் குழம்பிக் கடமையை நிறைவேற்ற மறுத்த அர்ஜுனனை பகவான் கிருஷ்ணர் தெளிவுபடுத்திக் கடமையைச் செய்ய உரைத்ததே பகவத் கீதை!
அர்ஜுனன் போரிட மறுத்ததற்குக் காரணம் போலி தார்மீக உணர்வு (hypocrisy) மற்றும் மனச்சோர்வு. “எங்கிருந்து இந்த அழுக்கு (கஷ்மலம்) உன் மனதில் புகுந்தது?” என்ற கேள்வியுடன் தான் கண்ணன் தன் உபதேசத்தையே தொடங்குகிறான் – “குதஸ்த்வா கஷ்மலம் இதம் விஷமே சமுபஸ்திதம்” !

மேலும், கீதை செய்யச் சொல்லும் யுத்தம் அகம், புறம் என்ற இரண்டு தளங்களிலும் நிகழ்வது. மனத்தில் நல்ல, தீய எண்ணங்களுக்கு இடையில் நடக்கும் போர் என்பதாக மட்டுமே பார்த்து காந்திஜி அதில் அகிம்சைத் தத்துவத்தைக் கண்டு தெளிந்தார். ஸ்ரீ அரவிந்தரும், விவேகானந்தரும் “மனத்துக்குள் மட்டுமன்று, சமுதாயத்திலும் அதர்மத்தை எதிர்த்துப் போரிட வேண்டும்” என்ற செய்தியும் கீதையின் மையக் கருத்து என்பதை முன்வைத்தனர். அஹிம்சை என்பது மன வலிமை, பயமின்மை.

கீதையை ஆழ்ந்து பயின்ற கலாமின் பார்வையிலும் இதே கருத்து 1998 பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது வெளிப்பட்டது. “நான் எனது காலடிக்குக் கீழ் மாபெரும் அதிர்வொலியைக் கேட்டேன். அது நமது அச்சத்தை மீறி ஒலித்தது. அந்தத் தருணம் அற்புதமானது. அது இந்திய அறிவியலுக்கும் தொழில் நுட்பத்துக்கும் மகுடம் சூட்டியது’.

எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காத சரித்திரம் கொண்டவர்கள் நாம். ஆனால், நமது உச்சபட்ச சகிப்புத்தன்மையும், இளகிய மனமும் நமக்கு உலக அரங்கில் மரியாதையைப் பெற்றுத் தரவில்லை. அதற்கு மாறானதையே நாம் பெற்றோம்.

பொக்ரான் சோதனைக்குப் பிறகு இந்தியாவின் புவியியல் ரீதியான முக்கியத்துவம் இதுவரை காணாத வகையில் பலமடங்கு உயர்ந்தது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. 2012 டிசம்பரில் அளித்த அறிக்கையில், “2030-இல் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் உலகின் மூன்றாவது வல்லரசாக இந்தியா இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அணு ஆயுத ஆற்றலும், ஏவுகணைகளும் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவை உலக வல்லரசாக ஒருநாளும் மேலைநாடுகள் ஏற்றுக் கொண்டிருக்காது.

சாத்வீகமானவர்கள், போரைத் தவிர்ப்பவர்கள் என்கிற அர்த்தமற்ற பெருமித உணர்ச்சியால், நாம் இதுவரை ஆக்கிரமிப்பாளர்களின் கொடுங்கரங்களில் சிக்கி அதற்காகப் பெருத்த விலைகளைக் கொடுத்திருக்கிறோம். பொக்ரான் அணுகுண்டு சோதனை இந்த அர்த்தமற்ற குழப்பத்தைப் போக்கியதுடன், இந்தியாவை உலக வல்லரசுப் பட்டியலில் சேர்த்துவிட்டது.

கிருஷ்ணன் அர்ஜுனனை போர் செய் என்கிறார். போரில் பலர் கொல்லப்படுவது நிச்சயம். அஹிம்சை என்பது உயிர் கொல்லாமை. ஆனால் நீ கொல்வது உடலைத் தான் ஆத்மாவை அல்ல என்கிறார் கண்ணன்.

ந ஜாயதே ம்ரியதே வா கதா சிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
(2-20) ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. இல்லாமல் இருந்து மறுபடியும் உண்டாவதும் இல்லை. என்றும் உள்ளது, அழியாதது. மேலும் அதை எதாலும் கொல்லவோ வீழ்த்தவோ முடியாது, அதனால் நீ துணிந்து கொல் என்கிறார். ஆத்மாவை ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் உடலை கொல்வது அஹிம்சை இல்லையே என்கிற சந்தேகம் வரும்.

அப்படியானால் இதற்கு பகவான் கூறும் விளக்கம் என்ன?

Sukha-duhkhe same kRtvaa laabhaalaabhau jayaajayau

Tato yuddhaaya yijyasva naivam paapam avaapsyasi

இன்பத்தையும் துன்பத்தையும், இலாபத்தையும் நஷ்டத்தையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாக நினைக்கும் ஒருவன் போர் புரியும்போது அவன் பாவத்தை செய்வதில்லை என்கிறார் பகவான்.

BhG. 2.38

Mayi sarvaaNi karmaaNi sanyasyaadhyaatma-chetasaa

Nir-aasheeer nir-mamo bhootvaa yudhyasva vigata-jvarah

கிருஷ்ணார்ப்பணம் என்று அனைத்து செயல்களையும் எனக்கே அர்ப்பணித்து விட்டு, உடல் மீது பற்றில்லாமல் ஆத்மாவில் மட்டுமே லயித்து, எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி, நான் எனது என்ற மாயையில் இருந்து விடுபட்டு சண்டையிடு என்கிறார் கண்ணன்.
BhG. 3.30

இம் மன நிலையில் போர் புரிய அர்ஜூனன நிறைய ஆன்மிக சாதனைகள் செய்திருக்க வேண்டும். அன்பே உருவான ஆன்மிக குரு தலாய் லாமா கூட தீமையை அழிக்க சில சமயம் படை வலிமையை பயன்படுத்தியே ஆக வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் அந்த படை வல்லமையை பயன்படுத்த கீதையில் கண்ணன் சொன்னபடி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை ஆகின்றன.

இதை விளக்க ஒரு சூபி கதை உள்ளது. ஒரு சூபி போர் வீரன் போர்க்களத்தில் எதிரி நாட்டு வீரனுடன் போர் புரிந்து அவனை கத்தி எடுத்துக் கொல்லும் தருவாயில் எதிரி வீரன் அவன் முகத்தில் காரி உமிழ்கிறான். கத்தியால் அவனை வெட்ட ஓங்கிய கையை அந்தரத்திலேயே நிறுத்தி விடுகிறான் அந்த சூபி வீரன். “நான் உன் காலடியில் கிடக்கிறேன், ஏன் என்னை இன்னும் கொல்லாமல் இருக்கிறாய்?” என்று கீழே வீழ்ந்திருந்த எதிரி கேட்கிறான். அதற்கு அந்த சூபி வீரன் சொல்கிறான், “இதுவரை நான் என் கடமையை செய்து வந்தேன், உன்னை எனக்குத் தெரியாது, என்னை உனக்குத் தெரியாது. ஆனால் என் முகத்தில் எச்சிலை உமிழ்ந்து என்னை கோபப் படுத்தி விட்டாய். நான் உன்மேல் கோபமாக இருக்கிறேன். இப்பொழுது நான் உன்னை கொன்றால் அது எனக்கு உன் மேல் உள்ள கோபத்தினால் மட்டுமே கொன்றது ஆகும், என் நாட்டுக்காக நான் அற்றும் கடமையினால் அல்ல” என்கிறான்.

அதே தான் இங்கும். அர்ஜுனனை அவன் கடமையை செய்யச் சொல்கிறார் கண்ணன், கொலை செய்ய அல்ல. தற்போது தற்காப்பு கலையில் சொல்லிக் கொடுக்கப் படுவதைத் தான் அன்று கண்ணன் அர்ஜுனனிடமும் எதிர்ப்பார்த்தார். எதிராளியை அடிக்க வேண்டும், ஆனால் அச்சமயத்தில் மனம் ஒருமித்த அமைதியோடு இருக்க வேண்டும். இது தான் யுத்த களத்தில் அஹிம்சை. இதை ஜப்பானியர்கள் கோன் koan என்று சொல்வார்கள்.

இந்த யோக முறையை அடைவது எளிதல்ல, சாத்தியமற்றது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் மனம் சஞ்சலப்படும், காற்றை அடக்குவதைவிட கடினமானது. ஆனால் அமைதியற்ற மனதை அடக்குதல் கடினமென்றாலும் பயிற்சியாலும், பற்றின்மையாலும் இந்நிலையை அடைய முடியும். கட்டுப்பாடற்ற மனங்கொண்டவனுக்கு இது கடினம், ஆனால் கட்டுப்பாடான மனத்துடன் முயல்கையில் வெற்றி நிச்சயம்.

அடுத்து, ய்க்ஞபதியான விஷ்ணுவுக்கு சமர்ப்பணமாக ஒருவன் செயல்பட வேண்டும். இல்லையேல் அவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துகின்றன. பகவானது திருப்திக்காக வினையாற்றினால் அவன் விடுபடுவதுடன் பற்றடங்கி வாழலாம். இதற்குப் பெயர் பொறுப்பு துறத்தல். பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால் பொறுப்பு அவருடையதாகிறது. செய்யும் ஒவ்வொரு செயலும் அவருக்கே சமர்ப்பணம் என்கிறபோது செயல்பட்டாலும் அவன் விடுப்பட்டவன் ஆகிறான்.

sarva-dharmān parityajya

mām ekaṁ śaraṇaṁ vraja

ahaṁ tvāṁ sarva-pāpebhyo

mokṣayiṣyāmi mā śucaḥ

(BG 18.66)

“எல்லா தர்மங்களையும் விட்டு என்னையே சரணம் அடைவாயாக நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். துக்கப்படாதே” என்கிறார் பகவான். இதை சரம ஸ்லோகம் என்பர். செய்யும் செயல்கள் அனைத்துக்கும் அவரே காரணம், அவர் கருவியாக நாம் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டால் இம்மையில் உயர்ந்த இடத்தையும் மறுமையில் இறைவன் திருவடியையும் அடைவது திண்ணம். ஆதலால் சரணாகதி அடைந்தவன் அஹிம்சை வழியில் நடக்க இறைவனே துணை புரிகிறார். இன்னும் சுருக்கமாகச் சொன்னாள் ஹிம்சை பிறவி எடுப்பது, அஹிம்சை பிறவா நிலையை அடைவது!

“முக்குணங்களால் ஆன எனது மாயை கடக்க முடியாதது; எனினும் என்னைச் சரணடைந்தோர் எளிதில் கடக்கலாம்.” என்கிறார் பகவான் கிருஷ்ணன்.

கோபம், லோபம், மத மாத்சர்யம், இன்றியும், சத்வ, ரஜோ தமோ குணங்களுக்கு அப்பால் நிற்கும்போது அவன் எண்ணத்தில் கோபமே வராது. கோபமற்ற எந்த செயலும் அஹிம்சை வழியே.

பதினோராம் அத்தியாயத்தில் பகவான், ”உலகை அழிக்கும் காலம் நான். போரிடுபவரில் உங்களைத் தவிர இருதரப்பினரும் அழிக்கப்படுவர். எழுந்து போரிடு. எதிரிகளை வென்று வளத்துடன் ஆட்சி புரிவாயாக. எனது யுக்தியால் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். இடக்கையால் அம்பெய்பவனே, இப்போரில் நீ ஒரு கருவியாகவே இருப்பாயாக. துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் போன்ற வீரர்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனர். வெறும போரிட்டு, வெல்.” என்கிறார். அதாவது அர்ஜுனன் வெறும் கருவியே, இயக்குவது பகவான். இந்தத் தன்மையில் எவன் ஒருவன் இயங்குகிறானோ அவன் செயல்கள் அனைத்தும் அஹிம்சையே. ஆதலால் சரணாகதி அடைந்தவன் அஹிம்சை வழியில் நடக்க இறைவனே துணை புரிகிறான்.

பதிமூனாவது அத்தியாயத்தில் பகவான், “அடக்கம், பெருமை கொள்ளாமை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, சத்குருவை ஏற்றல், தூய்மை, நிலைபிறழாமை, புலனடக்கம், புலனுகர்வில் துறவு, பொய் அகங்காரமின்மை, தீமைகளை கவனித்தல் (பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி போன்றவை), மனைவி, மைந்தர், இல்லம் மற்றும் பிறரிடம் பற்றின்மை, இன்ப துன்பங்களில் நடுநிலை, என்னிடம் மாறாத தூய பக்தி, தனியிடத்தை நாடுதல், கூட்டத்திலிருந்து விலகியிருத்தல், ஆன்மிக விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் தருதல், பூரண உண்மைக்காக ஆன்ம விசாரணைகள் செய்தல் – இவைகளே ஞானம் எனப்படும். இவைகளுக்கு எதிரானவை அஞ்ஞானமாகும்.” என்கிறார். அஞ்ஞானமே அஹிம்சைக்கு எதிரானது. ஞானம் உடையவன் அஹிம்சையில் செயல்படுகிறான்.

கீதை கொலை செய் என்று சொல்வது உயிர்களை அல்ல ஆசையை, மோகத்தை, காமத்தை என்று நினைவில் கொள்ள வேண்டும். சகல் விதத்திலும் சகல நேரங்களிலும் சகல உயிர்களிடத்திலும் அஹிம்சை பாராட்டப்பட வேண்டும் என்று யோக சூத்திரத்தில் வியாசர் கூறுகிறார்.

அகிம்சை, வாய்மை, சினமின்மை, தியாகம், சாந்தி, குயுக்தியாகப் பேசாமை, உயிர் இரக்கம், கடும் பற்றுள்ளம் இல்லாமை (லோபம் இல்லாமை), வள்ளல் குணம், பணிவு, திடமான மனம் ஆகியவை இயமத்தின் தன்மைகளாக கீதையில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிலிருந்து மற்றொன்று வருகிறது. ஒன்றோடுன்று தொடர்புடையது. அஹிம்சை என்னும் தர்மம் தியாகத்தினாலும், பற்றுள்ளம் இல்லாமையாலும், வாய்மையினாலும் பெறப்படும். அல்லது இவை ஏதாவது ஒன்றை கடைபிடித்தாலும் தானே இயல்பாக அஹிம்சை வரும்.

இதைத்தான் திருமழிசை பிரான் நாலே வரிகளில்

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல்

இறைவன் என்பவன் நமக்கு மிக அருகே உள்ளான், அதே சமயத்தில் நம் கைக்கு அகப்படாமல் எட்டவும் உள்ளான். ரொம்ப சின்னவன்னு வெச்சுக்கலாம், ரொம்பப் பெரியவனும் அவனே ஆவான். ஆயனாக பிறந்தான், துவாரகா ஈசனாக இருந்த அவன் அன்று பாரத யுத்தத்தின் நடுவில் திருத் தேர் தட்டில் நின்று அர்ஜுனனுக்கு அருளிச் செய்த சரம ஸ்லோகமாகிய அந்தத் திருவாக்கை தெரிந்து கொள்ளாவிட்டால் ஒருவனுக்கு மெய் ஞானம் ஏற்படவே ஏற்படாது என்று சாதித்து விட்டார்.

இதை ஒருவர் தெரிந்து கொண்டு விட்டால் மற்ற எதைப் பற்றியும் தெரிந்து கொள்வது எளிதாகிவிடும் அல்லது மற்றதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது, அல்லது வேறு விஷயங்களை தெரிந்து கொண்டும் எந்தப் பலனும் இருக்காது.

சகிப்புத் தன்மை குறைந்து வரும் இன்றைய சமூக நிலையில் அஹிம்சையின் முக்கியத்துவம் அனைவராலும் நன்கு உணரப்பட வேண்டும். அஹிம்சையின் பலன்களையும் அதை பின்பற்ற வேண்டிய வழி முறைகளையும் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒருவர் பாவித்து வந்தால் அதன் மேன்மை வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் இன்னும் நன்றாக விளங்கும். இதன் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

ahimsa

 

Reference: http://tamilthamarai.com/2015-08-01-13-48-07/

http://www.ujiladevi.in/2012/07/blog-post_13.html

http://harimakesh.blogspot.in/2006/12/81.html

திருவடி சேவை – பகுதி 4

திருவடி சேவை பகுதி 1 இங்கே.

திருவடி சேவை பகுதி 2 இங்கே

திருவடி சேவை பகுதி 3 இங்கே

ஸ்ரீரங்கத்தில் திருமங்கையாழ்வார், வைகுண்ட ஏகாதசி தொடக்கமாக தொடர்ந்து பத்து நாட்கள், காலையில் வேத பாராயணமும், மாலையில் திருவாய்மொழி கோஷ்டியும் நடந்தேற வழி செய்தார். உத்ஸவத்தின் கடைசி நாளன்று, ஆழ்வார் திருவடி தொழல், அதாவது, நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடியைத் தன் திருமுடியால் தீண்டும் நன்னாளை பக்தியுடன் கொண்டாடும் வழக்கத்தை அன்று ஏற்படுத்தினார். பிறகு, நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அன்று உயர்ந்த சாற்றுமுறையுடன் கொண்டாடப் படும். ஆழ்வார் பெருமாளின் திருவடியை வணங்குதலை நாம் நேராக பார்க்கும் ஒரு பாக்கியம் இது.

Nammazhwar-Moksham-at-Srirangam-Temple-2014-3

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் எதையும் முடியாது என்கிற நிலையில் சரணாகதியை கடைபிடிக்க வேண்டும். இதில் நம்மாழ்வார் தான் கடைபிடித்த சரணாகதியை நமக்குத் திருவாய் மொழியில் சொல்கிறார்.

இறைவன் திருவடிகளைப் பற்றிப் பேசும் முன் அவரின் திருவடிகளை அலங்கரிக்கும் பேறு பெற்ற பாதுகைகளின் பெருமையைத் தெரிந்து கொண்டால் திருவடிப் பெருமையை இன்னும் அதிகமாக உணர முடியும்.

இராமனை காட்டில் இருந்து அழைத்து வந்து அரசாளும் பொறுப்பை அவனிடம் கொடுப்பதற்காக பரதன் இராமனை சித்திரக் கூடத்தில் சந்தித்து இறைஞ்சுகிறான். இராமன் தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீற முடியாது என்று சொல்கிறார். உடனே பரதன் தானும் காட்டிலேயே தங்கிவிடுவதாகச் சொல்கிறான். அயோத்தி நாட்டு மக்களின் நலனுக்காக அவன் திரும்ப சென்று நாடாள வேண்டும் என்று வற்புறுத்துகிறார் இராமன். கடைசியில் பரதன் ஒத்துக் கொள்கிறான். ஆனால் பதினான்கு ஆண்டுகள் முடிந்த அடுத்த கணம் இராமன் அரசாளும் பொறுப்பை ஏற்கவில்லையென்றால் தீப்புகுந்து உயிரை விடுவேன் என்று இராமனிடம்  சொல்கிறான்.

இராமபிரான் கண்டிப்பாக வந்துவிடுவதாகச் சொல்கிறார். அதன் பின் இராமனின் பாதுகைகளை பரதன் பெற்றுக் கொள்கிறான். பாதுகைகளைப் பெற்றுக் கொண்ட பரதன் அவற்றைத் தன் தலையிலே வைத்துக் கொண்டு தரையில் விழுந்து இராமனை வணங்குகிறான்.

padhuka

பின்னர் பரதன் மற்றும் பரிவாரங்கள் புடைசூழ திரும்பப் பயணப்பட்டு அயோத்தி நகருக்குள் செல்லாமல், நந்திக்கிராமம் எனும் இடத்தை அடைகிரான். அங்கே இராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்துத் தன் ஐம்பொறிகளை அடக்கி நீர் சொரியும் கண்களோடு தவம் புரிந்து வாழ்ந்தான். மக்களிடம், இந்தப் பாதுகைகளை நீங்கள் இராமனின் திருவடிகளாகவே எண்ணவேண்டும் என்றான். இதன் மூலம் பாதுகைக்கு இராமனின் திருவடிகளுக்குச் சமமான பெருமை உள்ளது என்று தெரிந்து கொள்கிறோம்.

வேதாந்த தேசிகர் என்ற வைணவப் பெரியவர் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் பாதுகைகளை மட்டும் புகழ்ந்து ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார். பாதுகா சகஸ்ரம் என்பது அந்த நூலின் பெயர். அதில் இருந்து சில ஸ்லோகங்களின் பொருளை பார்த்தால் பாதுகையின் பெருமையை அறியலாம்.

sriranganathaswamy srirangam

sriranganathaswamy srirangam

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து உலகங்களையும் ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகள் தாங்கி நிற்கின்றன. அப்படிப்பட்ட அவனது திருவடிகளையும் நீ தாங்கி நிற்கின்றாய். ஆக, மூன்று உலகங்களுடன் சேர்த்து ஸ்ரீரங்கநாதனையும் தாங்கி நிற்பதால் உனக்குக் களைப்பு காரணமாக வியர்வைத் துளிகள் தோன்றுகின்றன. இவையே உனது முத்துக்கள் போன்று அழகாகத் தோன்றுகின்றன போலும்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! எந்த விதமான உதவியும் இல்லாத ஒருவன் – மிகவும் அழகானதும், அழியாததும், பகவானை அடையும் பாலம் போன்றதும் ஆகிய உன்னைச் சரணம் என்று அடைந்துவிட்டால் போதும். இன்பம், துன்பம் என்று மாறிமாறி எழும் அலைகள் நிறைந்த சம்சாரக் கடலில் இருந்து மீண்டு, திருமகள் வாசனின் திருவடி என்ற அழியாத செல்வத்தைப் பெற்று விடுகிறான்.

ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எப்போதும் தூய்மையாகவும் ஸ்திரமாகவும் உள்ளன. அந்தத் திருவடிகளில் நீ எப்போதும் நிலையாக, எல்லையற்ற பெருமையுடன் விளங்குகிறாய். இப்படியாக உள்ள உன்னை, வேதங்கள் ஆனந்தமயம் என்று கூறுகின்ற மணிமண்டபமாகவே எண்ணுகிறேன். இப்படிப்பட்ட உன்னை அடைந்ததால், குற்றம் ஏதும் இல்லாத முத்துக்கள், தங்கள் ஒளி மூலமாக அனைத்து உலகங்களும் ஒளிரும் விதமாக எரிகின்ற விளக்குகள் போன்று, தோஷங்கள் அற்ற தன்மையை அடைகின்றன.

Satari

இவ்வாறு சுவாமி தேசிகன் வடமொழியில் எழுதியுள்ள ஆயிரம் பாடல்கள் மூலம் இறைவன் திருவடியை அலங்கரிக்கும் பாதுகையின் பெருமையை நாம் அறிகிறோம்.

கிருஷ்ணாவதாரத்தின் காலம் முடியும் நேரம் வந்தது. அப்போது உத்தவர் அவரை மும்முறை வலம் வந்து அவர் பாதங்களில் விழுந்து அவர் திருவடிகளை தன் கண்ணீரால் நனைத்தார். அப்போது பகவான் அவருக்குத் தன்னுடைய பாதுகைகளை அளித்தார். அவற்றை தன் தலையில் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் வணங்கி புறப்பட்டுச் சென்றார். பிறகு பத்திரிகாசரமம் சென்று கிருஷ்ணனை தன் இதய பீடத்தில் நிலை பெறச் செய்து தியானித்து அவருடைய அறிவுரைகளை கடைப்பிடித்து இறுதியில் பரம பதத்தை அடைந்தார்.

இராமனின் வில்லின் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான். இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு – அதுதான் “தனுஷ்கோடி” – இராம தனுசின் இரு கோடிகள்.

கோதண்டத்தின் மேல்முனையில் இராமபிரானின் திருமுகம் விளங்குகிறது. இம்முனையில்

இராமனின் “முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை” (கம்பனின் சொல்லாடல்: 1297) தரிசித்துப் பொங்குகிறாள் காவிரி அன்னை.  திருவரங்கத்தில் இருபுறமும் அரங்கனை அணைத்தவள் காவிரி. அன்றலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமனை யோகியர் தியானத்தினால் தரிசித்து பேரின்பத்தினைப் பெறுகிறார்கள். அவர்கள் அடையும் அந்த ஆனந்தமே இராமன் என்னும் பரமன்.

கோதண்டத்தின் கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இராமனின் பாதங்களின் மகிமையை அகலிகையின் சாப விமோசனத்தில் அறிவோம். அதைக் “கால் வண்ணம்” என்று பாடும் கம்பனின் சொல்நயம் வெளிப்படும்:

கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் முகத்தை கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு பெற்றனர் பேரின்பம். கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு!

இராமன் பெரியோர்களுக்கு மரியாதை அளிப்பதில் சிறந்தவன்.   அவனுடைய கால் பட்டு அகலிகை உயிர்த்தெழுந்தாள் என்று  கம்பரால் சொல்ல இயலவில்லை.  ஏனென்றால் பெற்ற

தாய்க்கும் முன்னதாகவே இவள் இராமனை நெஞ்சில் கருக் கொண்டாள். அதனால் கம்பர்  இங்கே மூலநூலில் இருந்து சற்றே மாறினார்.

V0045094 Ahalya the nymph being released from a curse by Rama and LakCredit: Wellcome Library, London. Wellcome Imagesimages@wellcome.ac.ukhttp://images.wellcome.ac.ukAhalya the nymph being released from a curse by Rama and Lakshman. Chromolithograph by R. Varma.By: Ravi VarmaPublished: [after 1900]Copyrighted work available under Creative Commons by-nc 2.0 UK, see http://images.wellcome.ac.uk/indexplus/page/Prices.html

இராமனின் கால் படவில்லை. ஆனால் அவன் நடந்து வந்த போது அவன் கால் பட்டுத் தெரித்த துகள் கல்லென சமைந்திருந்த அகலிகையின் மீது பட்டது என்கிறார்.  அந்த காலில் இருந்து கழண்ட துகளினாலே அவள் சாப விமோசனம் பெற்றாள் என்று மாற்றுகிறார் கம்பர்.

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்: 14

தாடகை வதத்தில் இராமனின் கை சரம் எடுத்ததையும், அதைத் தொடுத்ததையும் கண்டிலர்.  அத்தனை வேகத்தில்  சரம் எய்தவன் இராமன். இராமனின் கையால் ஒருத்தி சாப விமோசனம் அடைந்தாள்.  இன்னுமொரு பெண்  இவன் கால் துகள் பட்டு  பாப விமோசனம் அடைந்தாள்.

‘இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’ 24

இராமனின் திருவடி பெருமைக்கு இது ஒரு சான்றே. ஜடாயு மோட்சத்தில் அவரின் மலரடி பெருமையை இன்னும் காணலாம்.

jatayu

சீதையை இராவணன் கவர்ந்து செல்லும்போது தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைத்த போது பறவைகளின் அரசனான ஜடாயு இராவணனுடன் சண்டையிட்டு தன்னால் இயன்றவரை சீதையை காப்பாற்ற முயன்றார். பகைவனின் தலையை பெருஞ்சீற்றத்துடன் கொத்தி அவன் தலை கீரிடத்தையும் கீழேத் தள்ளினார். ஆனால் இராவணன் சிவனிடம் பெற்ற வாளினால் அவர் இறக்கைகளை வெட்டியபோது அதற்கு மேல் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. உயிர் பிரியும் முன் இராம இலட்சுமணர்களிடம் இராவணன் சீதையை கவர்ந்து சென்றதை சொல்லிவிட வேண்டும் என்று துடித்தார். நல்லவேளையாக அவர்களும் ஜடாயு அடிபட்டுக் கிடந்த இடத்தை அந்நேரம் வந்தடைந்தனர். அவர்களிடம் சீதையை இராவணன் தூக்கிச் சென்றதையும் அவர் தடுக்க முயன்றதையும் சொல்லி வேதங்களும் காணமாட்டா எம்பெருமானின் திருவடிகளை தரிசிக்கப் பெற்றதால் மீளாவுலகமாகிய வைகுண்டத்தை அடைந்தார். இராமனே அவருக்கு இறுதி காரியங்களை செய்யும் பெரும் பேற்றினையும் பெற்றார் அவர். எம்பிரான் சேவையினாலும் திருவடி தரிசனத்தினால் முக்தி அடைந்தார் ஜடாயு.

 

தொடரும்…

திருவடி சேவை – பகுதி – 3

திருவடி சேவை பகுதி 1 இங்கே.

திருவடி சேவை பகுதி 2 இங்கே

வைணவ சமயத்தில்….

1.வைணவர்கள் நெற்றியில் இடும் நாமம் திருமாலின் பாதம் என்பர்.

2.ஆண்டவன் திருவடியினையே குருவின் திருவடியாகப் போற்றுவது வைணவ மரபில் உள்ள சிறப்பு அம்சம்!

3.திருமாலின் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) நாலாயிர திவ்யபிரபந்தம்/ஆழ்வார் அருளிச் செயல்கள் என்று போற்றப் படுகிறது. ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர்கள். அவர்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும்.

nammazhvar

இதில் நம்மாழ்வார் நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்றே புகழ்ப்படுகிறார். கம்பர் இயற்றிய “சடகோபர் அந்தாதி” எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார். இவர் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் திருகுருகூரில் அவதரித்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மாறன். பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது அழும், காரணம் என்னவென்றால் பூர்வ ஜென்ம கர்மத்தின் வினை, சடம் என்னும் வாயுவாய் சூழ்ந்துக்கொள்ளும். ஆனால் நம்மாழ்வார் சடம் என்ற வாயுவை தன்னை சூழ்ந்து கொள்ள விடாமல் கோபித்துக் கொண்டபடியால் ‘சடகோபன்’ என்று கொண்டாப்படுகிறார்.

Paduka_1

வைணவ கோயில்களில் சேவிக்க வருபவர்களுக்கு தீர்த்ததுடன் சடாரி சாதிப்பது வழக்கம். அவ்வாறு சாதிப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. ஸ்ரீசடாரி என்பது ஒரு உயர்ந்த பீடத்தின் மேல் திருமாலின் திருவடிகள் பொறிக்கப்பட்டிருக்கும். நம்மாழ்வார் திருமாலின் திருவடியாகக் கருதப்படுகிறார். நம்மாழ்வார் பெருமாள் திருவடிகளை அடைந்தவர். அவரே குருவாக இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார். ஸ்ரீசடாரிக்கு மற்றொரு பெயர் ‘ஸ்ரீசடகோபம்’. வரிசை வரிசையாக மலர்கள் மேல் உயரமாக அடுக்கி வைத்தது போன்று தோன்றும். கடைசியாக 12 இதழ்க் கமல அடுக்கு! இது துவாத சாந்தத் தலத்தைக் குறிப்பது. இதன்மேல் சிறிய திருவடி இரண்டு காட்சி தரும். இத் திருவடிகளே ஆசாரியன் திருவடி!

பாதுகையை நம் தலையில் கோயில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாய் பெருமாள் திருவடி தொடர்பு நமக்கு ஏற்பட்டு விடுகிறது. சுவாமி வேதாந்த தேசிகன் அருளிய பாதுகா சகஸ்ரத்தில் இரண்டாவது பத்ததியான ஸமாக்யா பத்ததியில் ஆழ்வாரும், பாதுகையும் ஒன்றேதான் என்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது. பெருமானுடைய பாதுகை ஆழ்வாருடைய திருநாமமான சடாரி எனும் நாமத்தை வகிக்கிறது.

 ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர பெருமாள் பாடிய பாசுரம் மிகவும் உயர்வானது. இவர் தன் திருவடி சேவையே இறைவனின் கோவிலில் படியாய் கிடந்து அவனை அனுதினமும் பார்த்துக் கொண்டு இருப்பது தான் என்கிறார். பக்தர்களின் திருவடி அவர்மேல் படுவதே அவரின் பெரும் பேறாகக் கருதுகிறார். என்னே அவர் பக்தி!

Kulasekara-alwar

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து நின் பவளவாய் காண்பேனே

திருமாலின் திருவடி மன அழுக்கை நீக்கும்; வினையை அகற்றும்; செல்வம் சேர்க்கும். எனவே இத்திருவடியை எப்படி அடையலாம் என்பதை பொய்கையாழ்வாரின் இந்தப் பாசுரம் சொல்கிறது.

Poigai_Alvar_Tamil_Poet

வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ – கூரிய
மெய்ஞ்ஞானத் தால்உணர்வார் காண்பரே மேலொருநாள்
 
கைந்நாகம் காத்தான் கழல்
(3230)

(மதக்களிறு ஐந்து = ஐம்புலன், நிறீஇ = நிறுத்தி, கைந்நாகம் = யானை)

மேலும் கன்மம், மாயை ஆகிய மலங்களை நீக்கி, ஐம்புலன்களையும் மனம்போன போக்கில் திரியவிடாமல் நிறுத்தி ஞானத்தினால் உணரலாம் என்று வழியைக் காட்டுகின்றார் ஆழ்வார்.

அரிய புலன்களை அடக்கி, தொழுது மலர்கொண்டு தூபம் கையில் ஏந்தி வழிபடுவதற்கு எழுவாய் நெஞ்சே (3241) என நெஞ்சினைஅழைக்கின்றார்.

விஷ்ணு சித்தர் என்கிற பெரியாழ்வார் மதுரை சென்று பாண்டியன் அரசவையில் வேதங்கள் பாடி ஸ்ரீமன் நாராயணனே பரன் (முதல்வன்) என்று நிலை நாட்டினார். போட்டியின் விதிப்படி பொற்கிழி தோரணம் தாழ அதனை எடுத்துக்கொண்டார். எல்லோரும் பாராட்டி, பாண்டிய மன்னன் மனம் மகிழ்ந்து ஆழ்வாரை யானை மீது ஏற்றி வீதி வலம் வந்த போது இவ்வழகிய கோலத்தை ரசிக்க பெருமாள், பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து ஆகாயத்தில் தோன்றி ஆழ்வாருக்கு காட்சியளித்தார்.

periyazhvar
ஆழ்வார் பயந்தார். இப்படி காட்சி தருகிறாரே, கண்திருஷ்டி பட்டு விடுமோ என்று பொங்கும் பரிவால் யானை மீதுள்ள மணிகளை ஒலித்து கொண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாசனம் செய்தார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண் ணா!உன்
சேவடி செவ்வி திருக் காப்பு .
(திருப்பல்லாண்டு – 1)

என்று பாடினார். மதுராவில், கம்சனுடைய மல்லரங்கில் முஷ்டிகன், சாணுரன் முதலிய மல்லர்களை அடக்கி ஆண்ட திண்மையான தோள்களை உடைய கிருஷ்ணா! உனது சிவந்த பாதங்களின் அழகுக்கு கால தத்துவம் உள்ள வரையில் ஒரு குறைவும் வராதிருக்க வேண்டும் என்று திருவடிகளுக்கு திருஷ்டி கழிக்கிறார். இங்கே பெரியாழ்வார் பெருமாளுக்கே ஒரு தந்தையாக வாத்சல்யத்துடன் கவலைப்படுகிறார். திருவடி போற்றுதலில் இது இன்னும் பெரிய அங்கம். வையத்தை வாழ்விக்கும் வைகுந்தவாசனாகிய திருமால் தமக்குக் காட்சியளிக்கும்போது அவரிடம் தமக்கு வரம் கேட்காமல், அவரைப் பல்லாண்டு பாடி வாழ்த்துகிறார் பெரியாழ்வார்.

varaha

வராக அவதாரத்தில் முதலில் ஒரு கட்டை விரல் அளவே பிரம்மாவின் மூக்கில் இருந்து வெளிப்பட்ட சிறிய வெள்ளை பன்றி உருவிலான திருமால்,  பிரம்மாண்ட வடிவெடுத்து ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரனால் பதுக்கி வைக்கப்பட்ட பூமா தேவியை பூப்போல மீட்டு எடுக்கிறார். ஹிரண்யாக்ஷனை அட்டகாசமாகப் போரிட்டு வதம் செய்த பரமனது பரந்த ஒரு திருவடியின் உட்பாதத்தில் சூரியசந்திரர்களும், வானவர்களும்,  ஏழு தேவ லோகங்களும், ஏழு கடல்களும், ஏழு மலைகளும் அடங்கி ஒடுங்கின! விஷ்ணு புராணத்தில் வராக அவதாரம் யஜ்யத்துக்கு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவரின் பிரம்மாண்ட திருவுருவமே யாக சாலையாக, உலகத்தைக் காத்து ரட்சிக்கும் தெய்வமாக, கலகத்தின் நடுவில் காக்கும் தெய்வமாகக் கருதப் படுகிறது. இவ்வதாரத்தில் நான்கு வேதங்களுமே அவரின் திருவடிகள் ஆகின்றன. உலகத்தில் அறம் ஒழுங்காக இயங்க வேதங்களின் துணை அவசியம். அவர் திருவடியே அதற்கு துணை நிற்கின்றது.

திருவடி பெருமையை கிருஷ்ணாவதாரத்தில் வேறு வகையில் காணலாம். கண்ணன் பக்தர்களின் திருவடி துளியை எப்படி பெருமையாக தரிக்கிறார் என்பதற்கு ஒரு கதை உள்ளது. இறைவன் திருவடிகளை மனத்தில் தாங்கியவர் திருவடியே இத்தனை பெருமைக்குள்ளாகும் என்பதை தன் விளையாட்டுப் போக்கில் கண்ணன் நமக்கு உணர்த்துகிறார்.

அன்று வைகுண்ட ஏகாதசி.  கிருஷ்ணனை தரிசிக்க மகரிஷிகளும் பக்தர்களும் துவாரகை வந்திருந்தார்கள். அப்பொழுது அவர் ஒரு சின்ன நாடகத்தை அரங்கேற்றினார். தலைவலியால் அவதிப்பட்டார். மருத்துவர்கள் வரிசையாக வந்து மருந்துகள் கொடுத்தாலும் அவர்  தலைவலி போகவில்லை.

நாரதர் (சிலர் உத்தவர் என்றும் சொல்லுவர்) தலைமையில் ருக்மணி, பாமா சென்று இந்தத் தலைவலிக்கு மருந்து என்னவென்று சொல்லுங்கள்,  கொண்டுவந்து தருகிறோம் என்று கேட்டனர். என் மீது உண்மையான பக்தியுள்ள  பக்தனின் பாதத்துளிதான் மருந்து.  அந்தப் பாதத் தூசியை எடுத்துவந்து என் நெற்றியில் தடவினால் என் தலைவலி போய்விடும் என்கிறார் கண்ணன். இதைக்கேட்ட அவர்கள் திகைத்தனர். அவர்களின் பாதத்துளியை பகவான்  மீது தடவி அந்தப் பாவத்தைச் சுமக்க அவர்கள் தயாராக இல்லை.

கிருஷ்ணன் உடனே பிருந்தாவனம் சென்று கோபியர்களிடம் கேள் என்றார். நாரதர் பிருந்தாவனம் சென்று கிருஷ்ணனுக்கு வந்துள்ள பிணியையும் அதற்கான மருந்தையும் கோபியர்களிடம் சொன்னார். உடனே அவர்கள் எங்களில் சிறந்த பக்தை யாரென்று சோதிக்க நேரமில்லை என்று கூறிக் கொண்டே கீழே ஒரு துணியை விரித்து எல்லாப் பெண்களின் பாதத்தின் துளி அந்தத் துணியில் படுமாறு ஒவ்வொருவரும் நடந்து சென்றார்கள்.

gopikas

மேலும் கிருஷ்ணன் குணமானால் போதும். எங்களுக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும், நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று பாதத்துளிகளின் மூட்டையைக் கட்டி நாரதரிடம் கொடுத்தார். நாரதர் உடனே துவாரகை வந்து கிருஷ்ணனிடம் நடந்ததெல்லாம் கூறி பாதத்துளியின் மூட்டையைக் காட்டினார்.

கிருஷ்ணன் மூட்டையைப் பிரித்து பிருந்தாவனப் பெண்களின் கால்தூசியை தனது நெற்றியில் பூசிக் கொண்டார். கிருஷ்ணனுக்குத் தலைவலி பறந்துவிட்டது. இரண்டு விஷயங்கள் முக்கியமாக இதிலிருந்து தெரிகிறது. ஒன்று, பகவான் பக்தர்களை எந்த அளவு நேசிக்கிறான் என்பது, இன்னொன்று அவன் திருவடிகளைத் தாங்கிய பக்தனின் திருவடியின் மகிமை எந்தளவு உயர்ந்தது என்று!

sri-andal-1

ஆண்டாள் திருப்பாவையில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ பாசுரத்தில் ஏழுலகத்தை தன் பொற்பாதங்களால் அளந்த உத்தமனின் புகழை பாடும்போது, மாதத்திற்கு மூன்று முறை மழை தப்பாமல் பெய்து அமோக நெற்விளைச்சலை தரும்; நெற்பயிர்களின் நடுவே தேங்கி இருக்கும் நீரில் மீன்கள் துள்ளி விளையாடும்; குவளை மலர்களின் மேலே உண்ட மயக்கத்தில் பொறிவண்டுகள் கண்ணுறங்கும்; மடியை தொட்ட உடனே பசுக்கள் குடம் நிறைய பால் சுரக்கும். இந்த உலகமே சீரும் செழிப்புமாக உய்யும் என்கிறாள்.

பலி மன்னருக்கு ஏற்பட்ட தன் முனைப்பை அழித்திட நினைத்த விஷ்ணு வாமன (குள்ள) வடிவம் எடுத்தார். வேள்வியில் ஈடுபட்டிருந்த பலி மன்னரிடம் மூன்றடி நிலம் கேட்டார். குறுவடிவிலான வாமனனின் விருப்பத்தை ஏற்று அவரின் கால் அடியிலாகவே எடுத்துக் கொள்ளப்பணித்தார். இந்நிலையில் வாமனன் திருவிக்கிரமன் என்ற பெயருடைய நெடியோனாகத் தோன்றி தமது முதலடியால் மண்ணுலகையும், இரண்டாவது அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடியைப் பலி எனப்படும் மாபலி மன்னரின் தலையின் மீது வைத்து மன்னரின் தன்முனைப்பை  அழித்தார்.

thiruvikiraman

நாராயணன் விண்ணுலகை அளக்கும்போது பிரம்மா அவரின் திருவடிகளை நீரை கொண்டு அலம்பினார். அதுவே கங்கையாக மண்ணுலகத்தில் பிரவாகம் எடுத்தது. நாரணனின் திருவடி தீர்த்தம் மானிடர்களின் பாவங்களை தீர்க்கும் கங்கையாகியது. திருவிக்கிரம் ஆவதாரத்தின் மூலம் எம்பெருமானின் திருவடி பெருமையை அறிகிறோம்.

தொடரும் …

திருவடி சேவை – பகுதி – 2

திருவடி சேவை பகுதி – 1 இங்கே.

காரைக்கால் அம்மையார் ஈசனிடம் கேட்பதும் இதுவே!

karaikalaammaiyar

இறவாத இன்ப அன்பு

வேண்டிப்பின் வேண்டு கின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும்

பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும்

வேண்டும்நான் மகிழ்ந்து பாடி

அறவாநீ ஆடும் போதுன்

அடியின்கீழ் இருக்க என்றார்.

இறவாத அன்பு வேண்டும் என்று முதலில் கேட்கிறார். பிறகு பிறவாமை. அப்படியும் மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை. கடைசியில், இறைவா உன் திருவடிக்கீழ் இருக்கும் முக்தி நிலை வேண்டும் என்று ஈசனிடம் கேட்கிறார்.

kamakshiamman

ஆதி சங்கரர் அம்பாளின் திருவடிகளை செளந்தர்யலகரியில் போற்றிப் பாடுகிறார்.

அம்மா!  உன் திருவடிகள் எம் போன்ற பக்தர்களைக் காக்கின்றன. பயத்தை அகற்றுகின்றன. உன்னைத் தவிர வேறு யார் எங்களைக் காக்க முடியும்?  கேட்பதற்கு அதிகமாகவே வரம் அருளும் தாய் அல்லவா நீ!  உன் திருவடியை வணங்குகின்றோம். எம்மைக் காத்து ஆரோக்கியமாக வாழ ஆசிர்வதிப்பாயாக! என்று வேண்டுகிறார்.

 

அபிராமி பட்டரின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆழ் நிலை தியானத்தில் இருந்த பட்டரிடம் அரசன் அன்று என்ன நாள் என்று கேட்க, அமாவாசையான அன்றைய நாளை பௌர்ணமி என்று கூறிவிடுகிறார் பட்டர். தியானத்தில் இருந்து வெளிவந்த அவர் தவறை உணர்ந்து, நெருப்புக் குழியின் மேல் நூறு கயிறுகளால் கட்டப்பட்ட ஒரு பலகையின் மேல் நின்று, ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறை அறுத்தபடி அபிராமியின் மேல பாடல்களை பாடி வந்தார். இவை தான் அபிராமி அந்தாதி என்னும் பாடல் தொகுப்பு. எழுபத்தியொன்பதாவது கயிற்றை அறுத்தபோது திரிலோக சுந்தரி, அவளின் ஒரு காது தோட்டைக் கழற்றி வானத்தில் எறிந்து பூரண நிலவாய் மாற்றிவிடுகிறாள். அமாவாசை பௌர்ணமி ஆனது! அவர் சொன்ன தவறான பதிலை உண்மையாக்கி விடுகிறாள். எல்லாம் அம்பாளின் திருவடியை சரணடைந்ததின் மகிமை.

மேலும் இருபத்தியிரண்டு பாடல்கள் அவளை போற்றி பாடி நூறு பாடல்களாக அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார் பட்டர். அம்பிகையின் திருவடியைச் சரணமென்று பற்றிக்கொண்டு அவளின் பொற்பாதங்கள்  தன் தலையில் எப்போதும் இருந்து அருள் செய்யட்டும் என நெக்குருகப் பாடினார். முதல் பாட்டில் அபிராமியின் அழகை, “குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே” என்று சொல்லிப் புகழ்ந்தார். பிறகு திருக்கரங்களை, “பனிமலர்ப்பூங் கணையும் கருப்பஞ்சிலையும் மென் பாசாங்குசமும் கையில் அணையும்” என்று பாடி பிறகு சேவடியைப் பற்றினார். திருவடியைத் தொட்ட பிறகு அதனை விட்டு அகல அவருக்கு மனம் வரவில்லை.

abirami-andhaadhi

3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.

5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள், 
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
 
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
 
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.

32: ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் 
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
 
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
 
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.

அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!

73: தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு, 
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
 
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
 
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.

ஏ, அபிராமி! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.

ஒவ்வொரு பாடலும் தேனில் ஊறிய பலாச் சுளை போல் இனிப்பானவை, பொருள் செறிந்தவை.

தொடரும் ..

Previous Older Entries