குமாராகிய நான்…… சிறுகதை

“நாளைக்கு அமாவாசை. நாளைக்குத் தாண்டாது.”

“ரெண்டு நாளா தண்ணி கூட இறங்கலை, வயிறும் உப்பி இருக்கே.”

“ஒண்ணுக்கு வெளிக்கு எதுவுமே போகலை.”

“கர் கர்னு இப்படித் தொண்டக் குழியில கடையுதேடீ”

சுத்தி இருக்கறவங்க பேசறதெல்லாம் என் காதில் விழுது. பாழும் வாய் தான் பேசவும், கண்ணு திறக்கவும் மாட்டேங்கிது. கண்ணுல நிக்கிற அம்முவைக் கட்டி முத்தம் கொடுக்க ரொம்ப ஆசையா இருக்கு ஆனா அதை சொல்லக் கூட முடியலையே.

indianchild

“உசிரு போவேனான்னு இழுத்துக்கிட்டு இருக்கே, அடியே, அம்முக்கு மொட்டை அடிச்சு காது குத்தணும்னு குமாரு சொல்லிக்கிட்டே இருந்தானே, அதை வேணா நாளைக்கு நாகாத்தம்மன் கோவில்ல போய் பண்ணிட்டு வந்திடு. அப்பவாவது நிம்மதியா போறானான்னுப் பார்க்கலாம்” பக்கத்து வீட்டு பாட்டி குரல் தான் இது. இன்னும் ஒரு மாசம் முடிஞ்சா தான் முப்பது வயசை தொடுவேன். முப்பது வயசு இளைஞனை அந்தக் கிழவி வழியனுப்ப அவசரப்படுது.

“அதையும் செஞ்சிடலாமே, ஏண்டா சுரேஷு நீ போய் அவன் பெண்டாட்டிட்ட கேட்டுட்டு வரியா?” பெத்த தாயே என்னை மேலே சீக்கிரம் அனுப்பத் துடிக்குது.

“என்னம்மா, என்னை போய் அந்த நாய் வீட்டு வாசல்ல நிக்க சொல்றியா?” இது அண்ணன்.

“என்னடா பண்றது, புள்ள அவ கிட்ட தானே இருக்கு. ஒரு எட்டு போய் கேட்டுடுடா. நாளைக்கு அம்முவை ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்னு சொல்லிடு. காலையில போய் மொட்டை அடிச்சு, காது குத்திடலாம். நம்ம தெருல இருக்கிறவங்களுக்கு மட்டும் கறி சோறு ஆக்கி போட்டுடலாம்.”

என் வீட்டுலேந்து நாலாவது வீடு தான் ஜென்னி வீடு. அப்படி தெருல பார்த்து பார்த்து தான் லவ் ஸ்டார்ட் ஆச்சு. ஞாயிறு ஆனா அவங்க வீட்டுல எல்லாரும் நல்லா டிரெஸ் பண்ணி மாதா கோவிலுக்குப் போவாங்க. அதுல ஜென்னி பளிச்சுன்னுத் தனியா தெரிவா. டேன்சர் ஆச்சே. எல்லா க்ரூப் டேன்சிலும் அவளைத் தான் முதல் வரிசைல நிக்க வெப்பாங்க. தெலுங்கு படத்திலும் தமிழ்ப் படத்திலும் அவளுக்கு நிறைய சான்ஸ் வரும். என் மெக்கானிக் கடைல இருக்கிற டிவில அவ டேன்ஸ் ஆடுன பாட்டு வந்தா ஸ்பேனர கீழ போட்டுட்டு பாட்டு முடியுற வரைக்கும் டிவி பொட்டியை விட்டு நகர மாட்டேன்.

groupdance

நானும் நல்லாத் தான் இருப்பேன் பார்க்க. அதான் அவளுக்கும் என்னை பிடிச்சிடுச்சு. நான் சொந்தமா கடை வெச்சிருக்கேன்னு மயக்கிடிச்சுன்னு அம்மா தான் பேசிக்கிட்டே திரிஞ்சிது. நான் நாலாம் கிளாஸ் தான் படிச்சிருக்கேன். ஜென்னி ப்ளஸ் டூ. ஒரு நாள் கால் ஷீட்டுக்கு அது மூவாயிரம் ரூபாய் வாங்கும். அது ஏன் என் கடையைப் பார்த்து மயங்கனும்? சினிமால டேன்ஸ் ஆடுற பொண்ணுன்னு அம்மாக்குப் பிடிக்கலை. அதுக்கும் மேல அது கிறிஸ்டியன் வேற!

நான் பத்து வயசிலேயே படிப்பும் வராம, வழிகாட்ட அப்பாவும் இல்லாம ஒரு மெக்கானிக் கடைல போய் வேலைக்குச் சேர்ந்தேன். அது என்னவோ நான் கை வெச்சா எந்த டூ வீலருக்கும் உடனே உசிர் வந்திடும். முதலாளி எல்லா பைக்கையும் என்னைத் தான் முதல்ல பார்க்க சொல்லுவாரு. அவர் ஒரு நாள் பஸ் ஏக்சிடன்ட்ல திடீர்னு செத்துப் போனதும் அவரு கஸ்டமருங்க எல்லாம் என்கிட்டே வர ஆரம்பிச்சிட்டாங்க. மரத்தடில வேலை பார்க்க ஆரம்பிச்ச நான் சீக்கிரமே பக்கத்துல ஒரு கடையை தொறந்துட்டேன்.

இருபது வயசுல கடை ஓனர் நான். நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சேன். குடி, சிகரெட்டு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது.ஜென்னி என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னப்ப எதுனால என்னைப் பிடிச்சிருக்குன்னு கேட்டேன். இதத் தான் சொல்லிச்சு. சினிமால நடிக்கிறவங்க, ஏன் நம்ம ஏரியால இருக்கிறவங்க எல்லாருமே சிகரெட்டு, தண்ணின்னு இருக்காங்க. நீ நல்லா சம்பாதிச்சாக் கூட அப்படி இல்லைன்னிச்சு.

கொஞ்ச நாள்லயே ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் ரொம்பப் பிடிச்சுப் போயி ரெண்டு குடும்ப எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். ஜென்னி தான் வேற வீடு பார்க்க வேணாம் இங்கேயே இருக்கலாம்னு சொல்லிச்சு. அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஜென்னி சினிமால டேன்சர்னு எப்பப் பார்த்தாலும் கேலி பேச்சு. என்னோட ஆத்தா அது கிரிஸ்டியனுன்னு நின்னா குத்தம் உக்காந்தா குத்தம்னு திட்டிக்கிட்டே இருந்தாங்க.

மூணே மாசத்துல தனிக் குடித்தனம் போயிட்டோம். அப்போ அம்மு அவ வயத்துல ரெண்டு மாசம். ஆறு மாசம் வரைக்கும் டேன்சுக்குப் போனா, அப்புறம் முடியலை. எனக்கு அவ்வளவு சந்தோசம். கடையிலேயே என்னோடயே உக்காந்திருக்கும். கடைக்கு வர கஸ்டமர்ட்ட நல்லா பேசும். அம்மு பிறந்த அன்னிக்கு தெரு முழுக்க எல்லாருக்கும் ஜிலேபி வாங்கிக் கொடுத்தேன். எங்க ஆத்தாவும் அண்ணனும் அண்ணியும் கூட சந்தோஷமா இருந்தாங்க.

மூணு மாசத்துலேயே திரும்ப டான்ஸ் ஆட சான்ஸ் வர ஆரம்பிச்சுது. நான் போக வேணாம்னு சொன்னேன். அதுல ஆரம்பிச்சுது சின்ன சின்னத் தகராறு. சரி வா அம்மா வீட்டோட போயிடலாம், அம்மா குழந்தையைப் பார்த்துக்கும், நீ ஷூட்டிங் போலாம்னு சொன்னேன். அதெல்லாம் வேணாம், எங்கம்மாட்ட விட்டுட்டுப் போறேன். என் தங்கச்சி ஸ்கூலேர்ந்து வந்த பார்த்துப்பான்னா. பாலு கொடுக்கறதையும் நிப்பாட்டிட்டு புட்டி பால் கொடுக்க ஆரம்பிச்சா. பாப்பாக்கு வயிறே ஆங்கலை. எப்பப் பார்த்தாலும் அழுக. அதுவும் நடு ராத்திரில வீல்னு கத்தும். ஜென்னி டேன்ஸ் ஆடிட்டு வந்த அசதில எந்திரிக்கக் கூட மாட்டா. நான் தான் பாலைக் கரைச்சுக் கொடுப்பேன். வேக வேகமா குடிக்கும். கொஞ்ச நாள் பார்த்தேன் பொறுக்கலை. ஒரு வருஷம் கழிச்சு தான் வேலைக்குப் போயேன். கொழந்த தவிக்குது பாரேன்னேன். எங்கேர்ந்து தான் இத்தனை கோபமோ, சான்ஸ் கிடைக்கறப்பப் போகணும். ஒரு வருஷம் போகாம இருந்துட்டா அப்புறம் யாரு சான்ஸ் தருவாங்கன்னு சத்தமா கத்த ஆரம்பிச்சிட்டா. இவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்ல.

சோறு ஆக்கறதும் நினைச்சப்பத் தான். நான் ஓட்டல்ல வாங்கி துன்னறது பார்த்துட்டு அம்மா தினம் வீட்டாண்ட வந்து சாப்பிட சொல்லிச்சு. மத்தியானம் தினம் சாப்பிடப் போனேன். அண்ணனுக்கு ஈபில லைன் மேன் வேலை. அது இருக்காது. ஆனா அண்ணி இருக்கும். ஜாடை மாடையா பேசிச்சு. அதனால அம்மாவை எங்க வீட்டுக்கு வரச் சொல்லி சாப்பாடு செய்யச் சொன்னேன். அப்படியே ஜென்னி அம்மா வீட்டிலேந்து பாப்பாவை இங்கக் கொண்டாந்து கொஞ்ச நேரம் பார்த்துக்க சொன்னேன்.

ஜென்னி வீட்டுல புள்ளை அழுதுகிட்டு இருக்கும். ஆனா ஜென்னியோட அம்மா அதும் பாட்டுக்கு டிவி பார்த்துக் கிட்டு இருக்கும். காது தான் கேக்காதோன்னு தோணும். அடிக்கடி ஜலுப்பு ஜுரம்ன்னு பாப்பாக்கு வர ஆரம்பிச்சுது. ஆசுபத்திரிக்கும் பாப்பாவை தூக்கிக்கிட்டு அம்மா தான் ஓடும்.

ஷூட்டிங்ல ஓவர் டைம்னு சில நாளைக்கு லேட்டா வர ஆரம்பிச்சா ஜென்னி. ஒரு நா எவனோ ஒருத்தன் பைக்ல கொண்டாந்து விட்டான். கேட்டா அவனும் டேன்சர் தான், ஆட்டோவே கிடைக்கலை அதான் கொண்டாந்து விட்டான்னு சொல்லிச்சு. எனக்கு தான் இப்போ நல்லா பணம் வருதே பாப்பாவை எதிர் வீட்டு ஆயாக்கிட்ட காசு கொடுத்துப் பார்த்துக்கச் சொல்லலாம். உங்கம்மா என்னை எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க. அவங்க ஒன்னும் இனிமே பார்த்துக்க வேணாம்னு சொல்ல ஆரம்பிச்சா.

இதக் கேட்டு ஆத்தாக்கு ரொம்பக் கோபம். அடிச் சிறுக்கி, உன் கொழந்தைய உன்னால பார்த்துக்க முடியாதுன்னு ஆயாவ காசுக் கொடுத்து வேலைக்கு வெப்பியான்னு அடிக்கவே போயிடிச்சி. அப்புறம் தினத்துக்கும் சண்டை தான். திடீர்னு ஒரு நாள் வந்து ஒரு வாரம் அவுட் டோர் ஷூட்டிங் போகணும்னு சொல்லுச்சு. பெரிய ஹீரோ படம். கண்டிப்பாப் போகணும்னு ஒரே அழிச்சாட்டியம். கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய அவுட் டோர் போகும். கல்யாணத்துக்கு அப்புறம் அதான் மொத தடவ. போகாதன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேக்கலை. சூட்கேஸ்ல துணிய எடுத்து வெச்சுட்டு கிளம்பிடுச்சு.

அம்மா தான் ஒரு வாரம் முழுக்க பாப்பாவை பார்த்துக்கிச்சு. அண்ணியும் தான். ஜென்னி அம்மா வீட்டுக்கே குழந்தைய அனுப்பலை. ரெண்டு நாளுக்கு ஒருக்கா போன் பண்ணி விசாரிச்சிக்கிடிச்சி ஜென்னி. எவனோ ஒருத்தனோட பைக்ல வந்து இறங்கினதுலேந்தே என் மனசே சரியாயில்லை. ஓரு வாரம் ஜென்னி ஊர்ல இல்லாத போது ஏதேதோ எண்ணம் மனசுல. அவனும் கூட அவுட்டோர் வரானான்னு கேட்டதுக்கு என்னை முறைச்சிட்டு ஆமாம் அதுக்கென்னன்னு கேட்டுட்டுப் போனா. அதுவரைக்கும் டாஸ்மாக் பக்கமே போகாத நான் அந்த வாரத்துல ரெண்டு மூணு நாள் போயிட்டு வந்தேன். அங்கே போய் ரெண்டு கட்டிங் போட்டா மனசு லேசான மாதிரி இருந்துது.

ஒரு வாரத்துல ஷூட்டிங் முடியாம இன்னும் ரெண்டு நாள் கூட இருந்துட்டு வந்தா. அவ திரும்பி வந்தன்னிக்கு நான் டாஸ்மாக் போயிட்டு லேட்டா தான் வீட்டுக்கு வந்தேன். கிட்ட வந்து குடிச்சிருக்கியான்னு கேட்டா. அமா, அதைப் பத்தி உனக்கென்னன்னு நானும் திமிரா பதில் சொன்னேன். அப்புறம் என் கூட சரியாவே பேசலை. ரெண்டு நாள் வீட்டிலேயே இருந்தா. ரெண்டு நாளும் வேணும்னுட்டு குடிச்சிட்டே வந்தேன். திரும்ப ஷூட்டிங்கிற்கு போயிட்டு சாயந்திரமா அதே ஆளோட பைக்ல வந்தா. ஆனா நாலு மணிக்கே வந்துட்டா. நான் எப்பவும் அந்த சமயத்துல கடைல தான் இருப்பேன். ஆனா அன்னிக்கு வீட்டுல இருந்தேன். வண்டியை விட்டு இறங்கும்போது அவனை உரசிகிட்டே வண்டிய விட்டு இறங்கினா. என் நெஞ்சில் யாரோ எசிட் பாட்டிலை கவுத்தா மாதிரி இருந்தது.

நான் ஜன்னல் வழியா பார்த்தது அவளுக்குத் தெரியலை. என்ன சீக்கிரம் வந்துட்டன்னு கேட்டேன். உடம்பு சரியாயில்லைன்னு சொன்னா. நேரா படுக்கப் போயிட்டா. அவ செல் போன் எடுத்துப் பார்த்தேன். ஆனந்துன்னு ஒரு நம்பருக்கு நிறைய கால் போயிருந்தது. அதை நான் தனியா என் போனில் சேவ் பண்ணிகிட்டேன். அவ உரசிக்கிட்டு இறங்கினது என்னை ரொம்ப உறுத்த ஆரம்பிச்சுது. நேரா டாஸ்மாக் போயிட்டு என்னிக்கும் இல்லாத அளவு குடிச்சிட்டு வந்தேன். என்னை பார்த்துட்டு உனக்கு இந்த கருமாந்திர பழக்கம் இல்லேன்னு தானே உன்ன கட்டிக்கிட்டேன், இப்படி குடிக்க ஆரம்பிச்சிட்டியேன்னு திட்டினா.

ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்கு வரும்போது ஆத்தாவும் ஜென்னியும் பயங்கரமா சண்டை போட்டுக் கிட்டு இருந்தாங்க. ஆத்தா ஜென்னி வீட்டை விட்டு வெளிய துரத்திக் கிட்டு இருந்துச்சு. சண்டையை விலக்கி என்னன்னு கேட்டா அம்மா வாயிலையும் வயித்திலேயும் அடிச்சிக்கிட்டு நான் தலை தலையா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா? இந்தச் சிறுக்கி வேணாம்னு சொன்னேனே கேட்டியான்னு அழுவுது. அவ ஒண்ணும் சொல்லாம முறைச்சுக்கிட்டு நின்னா. திடீர்னு புள்ளையை தூக்கிக்கிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினா ஜென்னி. என்னடின்னு கேட்டா, இப்படி சந்தேகப் படற உன்னோட இனிமே வாழ விருப்பம் இல்லை, உன்ன பிடிக்கலை. நான் போறேன்னு போயிட்டா.

எனக்கு அவ பின்னாடி போறதான்னு தெரியலை. அம்மா பக்கத்துல வந்து போகட்டும்டா அவ எவனோடயோ ஊர் மேயறா. அன்னிக்கே பக்கத்துத் தெருல இருக்கிற போட்டோ கடைக்காரன் என்கிட்டே சொன்னான். அவன் ஏதோ ஷூடிங்கல போட்டோ எடுக்கப் போயிருந்தானாம். ஜென்னியும் இன்னொருத்தனும் கொஞ்சிக் குலாவிக்கிட்டு இருந்தாங்க, பாவம் குமாருன்னு சொன்னான். இன்னிக்கு எவன் கூடவோ ஒட்டிக் கிட்டு பைக்ல வந்து இறங்கினா. யாருடி அவன்னு கேட்டா நீ யாரு அதை கேக்கன்னு கத்தரான்னுச்சு.

எனக்கு ஜென்னி மேல உசுரு. அது தப்புப் பண்ணும்னு நெனைக்க முடியல. அவங்க வீட்டுக்குப் போயி அவ ஜடையை புடிச்சு ஏண்டி வீட்டை விட்டுக் கிளம்பி வந்தேன்னு கத்தினேன். குடிச்சிட்டுப் போயிருக்கக் கூடாது. நான் போட்ட சத்தத்துல அம்மு அழ ஆரம்பிச்சிடுச்சு. இதப் பாரு, நீயும் உங்கம்மாவும் என் மேல சந்தேகப் படறீங்க. நான் உன்னை நம்பி இல்லை. என் சொந்தக் கால்ல நிக்க முடியும். முதல்ல நீ குடிக்கறதை நிறுத்திட்டு வந்து பேசுன்னிச்சு. இப்படியே ஒரு மாசம் போச்சு. நானும் அவ அம்மா வீட்டு வாசப் படிய அதுக்கப்புறம் மிதிக்கலை. வைன் ஷாப் போறதையும் நிறுத்தலை. குடிச்சிட்டு அந்த ஆனந்த் நம்பருக்கு அப்பப்ப போன் பண்ணுவேன். அவன் எடுத்ததும் கட் பண்ணிடுவேன்.

என்னால குடிக்கறதை நிறுத்த முடியலை. ஜென்னி என்னை விட்டுட்டுப் பாப்பாவையும் தூக்கிட்டுப் போனதைத் தாங்கவும் முடியலை. ஒரு நாள் ஜென்னி கடைக்கு வந்திச்சு. நீ குடிக்கறதை நிறுத்தப் போறியா இல்லையான்னு என் கடை பசங்க முன்னாடி கோபமா கேட்டுது. நீ முதல்ல வீட்டுக்கு வா அப்புறம் நிறுத்தறேன்னு நானும் கோபமா சொன்னேன். பதில் கூடப் பேசலை அப்படியே போயிடுச்சு. அடுத்த மாசம் அந்தப் பொறுக்கி அவங்க வீட்டுக்கே குடி வந்துட்டான். ஜென்னி மேல நான் வெச்சிருந்த நம்பிக்கை தவிடு பொடியாகிடிச்சி. அவன் அவங்க வீட்டுக்குக் குடி வந்ததும் புத்தி பேதலிச்சா மாதிரி ஆயிடிச்சி எனக்கு. கடையை ஒரு வாரம் தொறக்கலை. கஸ்டமருங்க போன் பண்ணா எடுக்கலை. கடை ஹெல்பர் பசங்க வீட்டுக்கு தினம் வந்து வாங்கண்ணே கடையை தொறங்கன்னு கெஞ்சினாங்க. நான் போகலை.

அம்மா போய் அம்முவை தூக்கிக்கிட்டு வரப் பார்த்தாங்க. அவ கொடுக்க மாட்டேன்னு பஜாரி மாதிரி கத்தியிருக்கா. எங்கண்ணன் ஏரியா கவுன்சிலர் கிட்ட போய் சொல்லி பஞ்சாயத்துக்கு ஏற்பாடு பண்ணினாரு. அவ குழந்தையை கொடுக்க முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டா. எங்கம்மா அவ குழந்தையப் பார்த்துக்காம தானே ஷூட்டிங் போனா, நான் தானே பார்த்துக்கிட்டேன், இப்ப மட்டும் ஏன் குழந்தை வேணும்னு அவங்கம்மாட்ட கேட்டாங்க. எதுவும் வேலைக்கு ஆவலை. நாளைக்கு அதையும் நடிக்க விட்டு சம்பாதிப்பா அதான் கொடுக்க மாட்டேங்கறான்னு ஏரியால எல்லாரும் பேசினாங்க. நாறிப் போச்சு. கவுரதையா இருந்தா எங்க வீட்டு மானம் கப்பலேறிடிச்சு. ஆளாளுக்கு தோணுனத எல்லாம் பேசினாங்க.

எனக்கு தான் அன்னிலேர்ந்து உயிர் போகிற வலி. ஆனா எங்க வலின்னு தெரியலை. எழுந்து நிக்கவே முடியல. அண்ணன் டாக்டருகிட்ட கூட்டிப் போச்சு. எதோ மருந்து கொடுத்தாங்க தூக்கம் தூக்கமா வந்துது. தூங்கி முழிப்பேன் வலிக்கும். வலுக்கட்டாயமா என் ஷாப் ஆளுங்க கடையை தொறந்து என்னை அங்கே ஒக்கார வெச்சாங்க. சில சமயம் மூச்சு விட முடியாத மாதிரி அடைக்கும்.

திரும்பவும் வலிக்கு மருந்து பாட்டில் தானுன்னு ஆச்சு. குடிச்ச உடனே வலி காணாம போயிடும். தினமும் டாஸ்மாக் தொறக்கும் போதே போய் குடிச்சிட்டு வந்து தான் என் மெக்கானிக் ஷாப்பை தொறக்க ஆரம்பிச்சேன். எப்பவும் போல நல்லா வேலை செஞ்சேன். நான் இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டு அம்மா வீட்டோட வந்துட்டேன்.

தினம் என் கடையத் தாண்டி தான் அவனோட பைக்ல போகும் ஜென்னி. உடனே எனக்கு உடம்பு முழுக்க வலிக்கும். கையோட இருக்கிற பாட்டிலை எடுத்து ஒரு மடக்கு ராவா குடிப்பேன். நெஞ்சு எரிச்சல்ல உடனே வலி மரத்துப் போகும். ஜென்னி வீட்டுல இல்லாத சமயமா அம்மா அவங்க வீட்டுல போயி அவ தங்கச்சிட்ட கேட்டு அம்முவை தூக்கியாரும். அதுஞ் சிரிப்புல தான் உசிரோட இருந்தேன்னு நினைக்கிறேன்.

முதல்ல நான் தினம் குடிக்கறதை பத்தி அண்ணன் ஒன்னும் சொல்லலை. ஒரு நாள் சோறு துன்றச்சே என் கை நடுக்கத்தைப் பார்த்து ஏண்டா குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்கறேன்னுச்சு. ஏன் நான் உசிரோடு இருந்து என்ன ஆகணும்னு கேட்டேன். உடனே அம்மாவும் அண்ணனும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. என்னால அவளை நினைக்காம இருக்க முடியலை. அவ ஏன் என்னை விட்டுட்டுப் போனான்னு புரியலை. அந்த வலி மறக்க எனக்கு குடி தேவையா இருந்தது.

ஒரு நாளைக்கு ரெண்டு தடவை டாஸ்மாக் போக ஆரம்பிச்சேன். லீவ் விடுவாங்கன்னு தெரிஞ்சா முதல்லியே ரெண்டு பாட்டில் வாங்கி வெச்சிப்பேன். ஆத்திர அவசரத்துக்கு எப்பவும் கடைல ஸ்டாக் இருக்கும். கொஞ்ச நாளா காச்சல் வந்து முடங்கி படுக்க ஆரம்பிச்சேன். குடியை நிப்பாட்டுற டாக்டர் கிட்ட என்னை கூடிப் போச்சு அண்ணன். அவரு எல்லா டெஸ்டும் எடுத்தபோது தான் எனக்குக் காச நோய் இருப்பது தெரிய வந்துச்சு.

drunk

தாம்பரம் சேனடோரியம் ஆசுபத்திரில போய் சேர்த்து வுட்டாங்க. ரெண்டே நாள்ல ஒடி வந்துட்டேன். தாம்பரத்துலேயே ஒரு டாஸ்மாக்குல கட்டிங் போட்டப்புறம் தான் ஒரு நிதானத்துக்கே வந்தேன். அது வரைக்கும் உடம்பு ஒரே உதறல். வீட்டுக்கு வந்தப்புறம் அம்மா கெஞ்சிச்சு, நான் முடியவே முடியாதுன்னுட்டேன். தினம் அம்முவை பார்த்துக் கிட்டு இங்கேயே இருக்கேன். ஆசுபத்திரிக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டேன்.

அம்மு ஸ்கூல் போக ஆரம்பிச்சதுலேந்து ஸ்கூல் விட்டதும் நேரா என் கடைக்கு தான் ஒடி வரும். நான் வாங்கி வெச்சிருக்கிற பிஸ்கட்டை துன்னுட்டு என்னக் கட்டி முத்தம் கொடுத்துட்டு அவங்க வீட்டுக்கு ஓடிடும்.

எனக்கு டிபின்னு யாரோ ஜென்னி கிட்ட போய் சொல்லிட்டாங்க. சின்னக் குழந்தைக்கும் டிபி வந்துடும்னு அது உடனே அம்மு என்னைப் பார்க்க போகக் கூடாதுன்னு சொல்லிடிச்சு. அதுலேந்து இன்னும் அதிகமா குடிக்க ஆரம்பிச்சேன். கடைய பசங்க தான் பார்த்துக் கிட்டாங்க. எழுந்து நிக்கக் கூட முடியலை. பசி எடுக்கறதும் நின்னுப் போச்சு. எங்கண்ணன்ட டாக்டர் லிவர் அழுகிப் போச்சுன்னு சொன்னாராம். ஒரு நாள் மயக்கமாயிட்டேன். ஜிஹெச்சுக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க. அங்க என்னல்லாமோ செஞ்சிப் பார்த்திருக்காங்க. முத்திப் போச்சு, இன்னும் நாள் கணக்கோ நேரக் கணக்கோ தான், வீட்டுக்குக் கொண்டு போயிடுங்கன்னு சொல்லிட்டாங்களாம். பாதி நினைவும் பாதி மயக்கமுமா இருந்தேன். ஒண்ணுமே புரியல. ஆனா மனசு சந்தோஷமா இருந்திச்சி. இன்னும் கொஞ்ச நாள்ல வலி போயிடும். நிம்மதியா ஜென்னிய நினைக்காத வேற உலகத்துக்குப் போயிடலாம்னு தோணுச்சு.

இதோ அம்மு பக்கத்துல வந்து நிக்குது, ஆனா பார்க்க முடியலை.  அதை எனக்கு வாயில பால் ஊத்தச் சொல்றாங்க. அம்முக் கொடுத்தப் பாலை கஷ்டப்பட்டு முழுங்கறேன். “அடே சுரேஷு, குமாரு பால முழுங்கறாண்டான்னு” அம்மா அண்ணனைக் கூப்பிட்டுது. அண்ணன், அண்ணி, அம்மா எல்லாரும் பாலை வாயில ஊத்தறாங்க. பாதி உள்ளப் போகுது பாதி வெளியே வழியுது.

அம்மு இன்னும் அங்கேயே நிக்குது போல. அண்ணன் அதுங்கிட்ட “அழாதடா கண்ணு”ன்னு சொல்றது காதுல விழுது. பாவம் அம்மு. என்னமோ சத்தம். ஜென்னி போடும் சென்ட் மணம் வருது. “அம்முவை கூட்டிப் போக வந்தேன்” அப்படின்னு சொல்லுது ஜென்னி. இவங்கல்லாம் பால் கொடுக்கறதை பார்த்துட்டு அதுக்கும் கொடுக்கணும்னு மனசுல தோண வெச்சிருக்கான் அந்த நல்ல ஆண்டவன். கிட்ட வந்து வாயில பாலை விடுது. அது பாலை விட்டதும் அப்படியே கண்ணை தொறக்கறேன், கண்ணிலேந்து தண்ணி வழியுது, ஜென்னியப் பார்க்கிறேன், பக்கத்துல மொட்டை அடிச்சு காது குத்தியிருக்கற அம்முவை பார்க்கறேன், கீழே இருக்கற என் உடம்பையும் பார்க்கறேன். குமாராகிய நான் இனி இங்கில்லை.

innerpeace

 

எனக்கு இன்னொரு வீடு இருக்கு! – சிறுகதை

“ஆண்டி, அங்கிள் காபி ரெடி” காப்பாளர் சுதா சிரித்த முகத்துடன் ஜன்னல் வழியா சொல்லிவிட்டு சென்றாள். அறைக்கதவை மூடிவிட்டு காமன் கிட்செனுக்குப் போனார்கள் சுவாமிநாதனும் சகுந்தலாவும். பலர் அப்போ தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர். அங்கே வைத்திருந்த டப்பாவில் இருந்து ரெண்டு பிஸ்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு காபி கோப்பையுடன் தோட்டத்தில் உட்கார்ந்தனர். பல பறவைகளின் காலை கீச்சுக்கள் மரக்கிளைகளின் இடையே இருந்து ஒலித்தன. பக்கத்தில் வந்து உட்கார்ந்த பாலுவிடம் சுவாமிநாதன், “சாந்தா மேடம்க்கு எப்படி இருக்கு? நீங்க நேத்து போய் பார்த்தீங்களே” என்று கேட்டார். “இப்போ நல்ல improvement சார். நல்லா தெளிவா பேசறாங்க. Electrolyte imbalanceஆம். உப்பு சத்து குறைந்து விட்டதாம். ட்ரிப் ஏத்தறாங்க, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்ன்னு சொன்னாங்க.”

oldage2

அந்த இல்லத்தில் இருந்த சக வசிப்பாளர் சாந்தா. திடீரென்று முன்னுக்குப் பின் முரணாகப் பேச ஆரம்பித்தார். அங்கே இருந்த பராமரிப்பாளர் உடனே ஏம்புலன்சை கூப்பிட்டு மருத்துவமனையில் சரியான நேரத்தில் சேர்த்து மருத்துவ உதவி கொடுத்ததில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம். சுவாமிநாதனுக்கும் சகுந்தலாவுக்கும் இந்த இல்லத்தில் பிடித்தது இரண்டு விஷயங்கள், ஒன்று இன்முகத்துடனான சேவை, இரண்டாவது சிறந்த மருத்துவ வசதி. உணவு ருசி முன்ன பின்ன இருந்தாலும் மற்ற வசதிகள் நன்றாக இருந்தன.

இதை ஒரு உயர்தரமான ஹோட்டல் என்று கூட சொல்லலாம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அறநூறு சதுரடி இருக்கும். ஒரு வரவேற்பறை, படுக்கை அறை, குளியல் அறை. அலங்கார விளக்குகளும், ஒரு மூலையில் இருக்கும் குட்டி ப்ரிட்ஜும், மின்சார அடுப்பும், மைக்ரோவேவும், சன்னமாக ஒலிக்கும் ஸ்ப்ளிட் ஏசியும், சுவரில் பதிந்திருக்கும் டிவியும், மெத்தென அமுங்கும் சோபா செட்டும் அவர்கள் இருந்த பழைய வீட்டின் நிலையை எண்ணிப் பார்க்கையில் சொர்க்கம் தான்.

oldagehome

அவர்கள் முன்பு இருந்து வளசரவாக்கத்தில், ஒரு கிரவுண்டில் சிறிய வீடு, சுற்றி மரம் செடி கொடிகள். ஆனால் வீடு ரொம்ப பழையது. அவர்கள் வீட்டை வாங்கும் போதே அது பத்து வருட பழைய வீடு. ஓர் அறை கொண்ட வீட்டை இரண்டு அறைகள் கொண்ட வீடாக மாற்றினார் சுவாமிநாதன். வீட்டுக் கடன் அடையவே பத்து வருடங்களுக்கு மேல் ஆகியது. அதுவும் அப்போ விலை ரொம்ப கம்மி. அவர்கள் சக்திக்கு இயன்றதை வாங்கினார்கள். வாங்கியபோது சுற்றி வயல் வெளி தான். பின்னாளில் இப்படி ஒரு பெரிய குடியிருப்பாகும் என்று அன்று அவர்கள் கொஞ்சமும் நினைக்கவில்லை. சுவாமிநாதன் போஸ்ட் ஆபிசில் கிளார்க். சாந்தா அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர். ரொம்ப சிரமப்பட்டு தான் இரு பிள்ளைகளையும் வளர்த்தனர். மகன் மேல் படிப்புக்கு அமேரிக்கா போன போது சுவாமிநாதனுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. படிப்புக்குக் கடன் வாங்க அந்த வீட்டை தான் இணையாகக் கொடுத்தார். அதன் பின் மகளுக்கு அமேரிக்கா மாப்பிள்ளை வரன் வந்தது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண்ணுக்கு ஒன்றும் சீர் செய்ய வேண்டாம் அனால் கல்யாணத்தை சிறப்பாக செய்து விடுங்கள் என்றனர். அந்த “சிறப்பாக” பல லட்சங்களை தொட்டது. அதற்கும் அந்த வீடு தான் கை கொடுத்தது.

oldhouse

இருவரும் ஒய்வு பெற்ற பிறகு கடனெல்லாம் அடைத்து பென்ஷன் பணத்தில் வாழும்போது தான் தனிமையின் துயரத்தையும் பணப் பற்றாக்குறையையும் உணர்ந்தனர். பழைய வீடானதால் நிறைய மராமத்து வேலைகள் வந்து கொண்டே இருந்தன. மின்சாரக் கசிவை சீர் செய்யக் கை வைத்தால் சீலிங்கில் உள்ள ஒழுகல் தெரிய வந்தது. டாய்லெட் அடைப்பை சரி செய்ய வந்த பிளம்பர் மெயின் டிரெயினேஜ் கனேக்ஷனே கட் ஆகியிருக்கு. தெரு வரை புது பைப் போடனும் என்று பெரிய லிஸ்டை நீட்டினார். பிளம்பரோ எலேக்டிரிஷியனோ சொன்ன நேரத்துக்கு வராமலும், வேலை முடித்த பிறகு சொன்ன எஸ்டிமேட்டை விட இரண்டு மடங்கு அதிகம் வாங்கிச் செல்வதுமே வழக்கமாக இருந்தது. எதோ சின்ன சின்ன ரிபேர்களை செய்து ஒப்பேத்தி வந்தவர்களை டிசம்பர் மழை புரட்டிப் போட்டுவிட்டது. உச்சக்கட்ட மழையின் போது அவர்கள் வீட்டில் எட்டடி தண்ணீர் நின்றது.

பிள்ளைகளிடம் தான் உதவி கேட்டாகவேண்டும் என்ற நிலை. ஆனால் மகளும் மகனும் உள்ளத்தாலும் அமெரிக்கர்களாகிவிட்டனர் என்பது தான் இவர்களின் மிகப் பெரிய இழப்பு. மகளும் மகனும் கடைசியாக இந்தியா வந்து ஐந்து வருடங்கள் ஆயிற்று. மருமகள் அவள் வீட்டு விசேஷம் எதற்காவது ஒரு வார லீவில் வந்து அட்டென்ட் பண்ணிவிட்டு போய்விடுவாள். அந்த பங்க்ஷனுக்கு இவர்களையும் அழைத்து இருப்பார்கள். அங்கேயே மாமியார் மாமனாரை பார்த்தாயிற்றே என்று வீட்டுக்குக் கூட வராமல் “அத்தை நிறைய பர்சேஸ் இருக்கு. ஸௌமியாவை டேன்ஸ் கிளாசில் சேர்த்திருப்பதால் மைலாப்பூரில் அவ டேன்சுக்குத் தேவையான நிறைய சாமான்கள் வாங்க வேண்டியிருக்கு. நீங்க இருக்கிறது வளசரவாக்கத்தில். இங்கே அம்மா வீடு ராயப்பேட்டை. அதனால் அம்மா வீட்டில் இருந்து கொண்டு சாமான் எல்லாம் வாங்கி சேகரித்துக் கொண்டு போக எனக்கு வசதியாக இருக்கும்” என்று இவர்கள் எதுவும் கேட்பதற்கு முன் அவளே தன் திட்டத்தைச் சொல்லிவிடுவாள். சகுந்தலாவும் மனசு கேட்காமல் செய்து கொண்டு போயிருந்த பலகாரங்களையும், பேத்திக்கு வாங்கி வைத்திருந்த காதணி, கழுத்தணிகளைக் கொடுத்து விட்டு வீட்டிற்குக் கணவனுடன் திரும்பி வருவாள்.

சுவாமிநாதனும் சகுந்தலாவும் இது வரை ஒரே ஒரு முறை தான் அமேரிக்கா போயிருக்கிறார்கள், அதுவும் மகளின் முதல் பிரசவத்துக்கு. அவள் இருந்தது பிலடெல்பியாவில், குழந்தை பிறந்தது டிசம்பர் மாதத்தில். ஸ்வெட்டரையும் கம்பளியையும் சுற்றிக் கொண்டு நாலு மாசம் சேவை செய்து விட்டு வந்து விட்டார்கள். அங்கிருந்த மளிகைக் கடையையும், பக்கத்தில் இருந்த சிவா விஷ்ணு கோவிலையும் தவிர வேறு ஒன்றையும் பார்க்கவில்லை. நடுவில் எண்ணி ஏழே நாட்கள் பீனிக்சில் இருந்த மகனையும் மருமகளையும் போய் பார்த்துவிட்டு வந்தார்கள். மகனும் மருமகளும் அப்பா அம்மா வந்திருக்கிறார்களே என்று ஓவரா கொண்டாடவும் இல்லை அதே சமயம் வெறுப்பாகவும் நடந்து கொள்ளவில்லை. வெளிநாடு போனாலே இந்த விட்டேத்திக் குணம் வந்துவிடுமோ என்று பல முறை நினைத்திருக்கிறாள் சகுந்தலா. அவர்கள் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்தால் அவளும் சுவாமிநாதனும் விழுந்து விழுந்து கவனிப்பார்கள். ஆனால் பெண்ணும் பிள்ளையும் யாருக்கு வந்த விருந்தோ என்று நடந்து கொள்வது அவளுக்கு வியப்பைத் தந்தது. “நம்ம இரத்தம் தானேங்க ஓடுது, ஏன் இப்படி இருக்காங்க” என்று பல முறை கணவனிடம் அங்கலாய்த்திருக்கிறாள் சகுந்தலா. அவரோ மௌன சாமியாக பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருப்பார்.

மகள் இரண்டாவது பிரசவத்துக்குக் கூப்பிடுவாள் என்று நினைத்திருந்தாள் சகுந்தலா. ஆனால் அவளோ “உன்னைக் கூப்பிட்டால் என் மாமியாரையும் ஒரு தடவை கூப்பிட வேண்டும், எல்லாம் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று வேறு யார் தயவும் இல்லாமல் இரண்டாவது பிரசவத்தைக் கணவன் துணையுடன் முடித்துக் கொண்டாள். அவ்வளவு சாமர்த்தியம்! “ஒரு தடவை வந்துட்டுப் போடி, உன் குழந்தைகளோடு இருக்கணும்னு அப்பாக்கும் எனக்கும் ஆசையா இருக்கு” என்று ஒரு முறை சகுந்தலா சொன்னாள். “அதான் ஸ்கைப்பிலேயே அடிக்கடி பேசறோமே மா எதுக்கு அங்க பணம் செலவழிச்சிக்கிட்டு வரணும்? கார்த்திக் பாட்டிக்கு இங்க வந்து நீ புதுசா கத்துக்கிட்ட பாட்ட பாடிக் காட்டு” என்று அவள் மகனைக் கூப்பிட்டு அதோடு அந்தப் பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டாள். அவள் மாமனார் இறந்த போது கூட அவள் கணவன் மட்டும் வந்து காரியம் செய்து விட்டுப் போனான்.

“அப்பா வேலைக்குப் போன உடனே கடனை உடனை வாங்கிக் கட்டின வீடு டா, அம்பது வருஷத்துக்கு மேல் ஆச்சு. போன டிசம்பர் மழைல ரொம்ப மோசமாயிடிச்சு. உனக்குத் தெரியாததா? அமபத்தூர்ல மாமா வீட்டில தானே ஒரு மாசம் இருந்து இந்த வீட்டை சரி பண்ணினோம். டாய்லெட் எல்லாம் பழசா பள்ளத்துல இருக்கு. அதனால அடிக்கடி வெளிய சாக்கடை தண்ணி வழியுது. வாசக் கதவெல்லாம் ரொம்ப பாழாயிருக்கு. ஒரு உதை விட்டா கதவு உடஞ்சிடும், அவ்வளவு இத்துப் போயிருக்கு.”

“அதுக்கு என்ன செய்ய சொல்ற மா?” என்றான் வேணு. “எங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பே இல்லடா. வயசானவங்க தனியா இருக்கோம்னு இங்க எல்லாருக்கும் தெரியும். இடிச்சு பிளாட்டா கட்டிடலாம். எங்களுக்கும் துணைக்கு பில்டிங்கில் மத்த குடித்தனங்கள் இருப்பாங்க. உனக்கு ஒரு பிளாட், காவ்யாக்கு ஒரு பிளாட் கொடுக்கணும்னு அப்பாக்கு ஆசை. ஒரு தடவை வந்துட்டுப் போடா. நல்ல பில்டரா பார்த்துப் பேசி, இந்த வீட்டு சாமானை ஒழுங்கு படுத்தி எங்களை வேற வீடு பார்த்து வெச்சிட்டு போனினா ரொம்ப சௌகரியமா இருக்கும். அப்பாக்கு எழுபத்தஞ்சு வயசு ஆகுது. எனக்கும் முடியலை, அப்பாக்கும் முடியலை” என்றாள் சகுந்தலா மகனிடம். ஸ்கைப்பில் அந்தப் பக்கம் அவள் மகன் வேணு எதையும் காதில் போட்டுக் கொண்டா மாதிரியே தெரியவில்லை. சகுந்தலாவிற்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இவனெல்லாம் என்ன பிள்ளை! பாரின் போறான்னு நினச்சு எவ்வளவு சந்தோஷப் பட்டோம் ரெண்டு பேரும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஒரு நாள் மகளிடம் இதே வீட்டு மேட்டரை பேச ஆரம்பித்தாள் சகுந்தலா. “ எல்லாம் அண்ணா சொன்னான் மா. இப்படியே அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருங்கம்மா. இப்போ எதுக்கு வீட்டை இடிக்கணும்? நானோ அண்ணனோ இந்தியா திரும்பி வரப் போறதில்லை. கட்டடத்துக்கு ஒன்னும் விலை கிடையாது எப்பவும் நிலத்துக்கு தான் மதிப்பு. இப்போ எதுக்கு அனாவசியமா இடிச்சு கட்டறீங்க. பின்னாடி நிலத்தை வித்து நானும் அவனும் பணத்தை அமெரிக்காவுக்குக் கொண்டு போயிக்கிறோம்” என்றாள் சர்வ சாதரணமாக.

மனம் நொந்துவிட்டது சகுந்தலாவிற்கு. வயதான பெற்றோரை கவனிக்க வேண்டும் என்கிற எண்ணமும் இல்லாமல், அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை வாய் விட்டுச் சொல்லியும் கவலைப்படாமல் சொத்தை மட்டும் கனகச்சிதமாகப் பங்கு போட்டுக் கொள்ள அவர்கள் தயாராக இருப்பது உண்மையிலேயே அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்பொழுதுமே தலைமுறை இடைவெளி இருப்பது சகஜம் தான். ஆனால் இவ்வளவு பெரிய இடைவெளியா என்று மனம் வேதனை பட்டது. அவள் மாமியாருக்குப் புற்று நோய் வந்து, கடைசி காலத்தில் இரண்டு வருடம் குளிப்பாட்டி, சோறூட்டி மற்ற உதவிகள் செய்து மாமியார் மனம் கோணாமல் பார்த்துக் கொண்டவள் சகுந்தலா. தனக்கும் தன் கணவருக்கும் உடல் நலமில்லாமல் போனால் ஸ்கைப்பில் விசாரிப்பதுடன் நின்று விடும் என்று புரிந்து கொண்டாள்.

இவர்களே தெரிந்தவர்கள் மூலம் ஜாயின்ட் வென்சருக்காக சில பில்டர்களை பார்க்க ஆரம்பித்தனர். சுவாமிநாதனின் மாமா பையன் சமீபத்தில் அவன் வீட்டை இடித்துக் கட்டியிருந்தான். அவனை சென்று சந்தித்ததில் அவன் தன் பில்டரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் சொல்லி அவர்களை அவனே பில்டர் ஆபிசுக்கும் கூட்டிச் சென்றான். பேசிக் கொண்டிருக்கையில் சகுந்தலா அங்கிருந்த சில மாடல்களை வியந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை கவனித்த இஞ்சினியர் கோபால்சாமி வாருங்கள் நாங்கள் கட்டிய சில கட்டங்களின் மாடல்களை உங்களுக்குக் காட்டுகிறேன் என்று ஒரு பெரிய ஹாலுக்கு அழைத்துச் சென்றார். ஆசிரியர் ஆனதால் சகுந்தலாவுக்குக் குழந்தைகளுக்கு மாடல்கள் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கிறாள். பார்த்துக் கொண்டே வந்தவள் ஒரு மாடலைப் பார்த்து இது என்ன ஹாஸ்பிடலா இல்லை ஹோட்டலா என்று கேட்டாள். அதற்கு அவர், “இல்லைமா இது ஒரு முதியோர் இல்லம். ரொம்பப் பிரமாதமா கட்டியிருக்கோம். ஒரு பெரும் பணக்காரர் அவர் மனைவி ருக்மணி பெயரில் இதை காட்டியுள்ளார். மாச வாடகை அதிகம் தான். ஆனால் உயர்தர சேவை என்றார்.

பொறி தட்டியது சகுந்தலாவுக்கு. ஏன் இந்த வீட்டை இடித்துக் கட்டி கஷ்டப்படனும்? பேசாம இந்த மாதிரி ஒரு முதியோர் இல்லத்தில் போய் இருந்தால் இருவரில் ஒருவர் போன பின்பும் பழகிய இடத்தில் மற்றவர் தொடர்ந்து இருக்கலாமே! வீட்டிற்குத் திரும்பி வந்தவுடன் கணவரிடம் பேசினாள். அவருக்கும் அந்த யோசனை மிகவும் நல்ல யோசனையாகப் பட்டது. நாலு பில்டர்களை போய் காத்திருந்து பார்த்து, அவர்கள் சொல்லும் கணக்கு வழக்குகளை மனத்தில் ஏற்றிக் கொள்வதே அவருக்கு பெரும் சிரமாமாக இருந்தது. இதற்கு மேல் ஒரு பில்டரை முடிவு செய்து அக்ரீமென்ட் போட்டு ஏமாறாமல் பிளாட்களை கட்டி முடிக்க வேண்டுமே என்னும் கவலை அவர் மனத்தில் அரித்துக் கொண்டிருந்தது.

அடுத்த நாளே எஞ்சினியர் கோபால்சாமியிடம் தங்கள் முடிவை சொன்னார்கள். அவரும் உங்க வீடு நல்ல லொகேஷனில் உள்ளது அதனால் நானே நிலமாகவே வாங்கிக் கொள்கிறேன் என்று டோக்கன் அட்வான்சும் அன்றே கொடுத்து விட்டார். டாகுமென்ட்சை வக்கீலிடம் காட்ட அவர்களிடம் இருந்து எடுத்து சென்றார். அவரிடமே அந்த புதிய முதியோர் இல்லத்தில் தங்களுக்கு இடம் கிடைக்குமா என்று பார்க்க சொன்னார்கள். அவரும் விசாரிப்பதாக சொன்னார். அந்த வாரத்தில் மகளுடனும் மகனுடனும் பேசும் போது ஒரு முதியோர் இல்லத்தில் போய் தங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். இருவருமே பேசி வைத்துக் கொண்டு சொன்னா மாதிரி, ஓ நல்ல முடிவும்மா, வீடு ரிப்பேர் பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றனர். மகனும் மகளும் மறக்காமல் வீட்டை என்ன பண்ணப் போகிறீர்கள் என்று கேட்டனர். எளிதா வாடகைக்கு விட்டுடலாம். அந்த வாடகையும் எங்கள் செலவுக்கு சரியாகும் என்று சகுந்தலா கூறியதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டனர் இருவரும். ஒரு ஆறுதலுக்குக் கூட ஏம்மா அங்க போறீங்க, இல்லை மாதச் செலவுக்குப் பணம் அனுப்பறோம் என்று இருவரும் சொல்லவில்லை.

oldagehome1

 

 

விரைவில் வீட்டை விற்று ஒரு நல்ல நாளில் ருக்மணி முதியோர் இல்லத்துக்குக் குடி வந்தனர். மகிழ்ச்சியாக செல்கிறது வாழ்க்கை. அவர்கள் வயதுக்கு ஏற்ற ஏக்டிவிடீஸ் அவர்களை சுறுசுறுப்புடன் வைத்திருக்கிறது. தங்கள் காலத்துக்குப் பிறகு அவர்கள் வீட்டை விற்ற பணத்தை அந்த முதியோர் இல்லத்துக்குப் போய் சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்தனர். அந்தப் பணத்தில் எத்தனை குடியிருப்புகள் கட்ட முடியுமோ அந்த எண்ணிக்கையில் கட்டி மாத வாடகை கொடுக்க முடியாதவர்கள் பயன் பெறும்படி இலவச விடுதியாகப் பயன் படுத்தப் பட வேண்டும் என்று தெளிவாக எழுதி வைத்தனர். எப்பவும் போல ஸ்கைப் கால்கள் தொடர்ந்தன, விசாரிப்புகள் தொடர்ந்தன. எப்போதாவது அவர்கள் சென்னை வந்து வீட்டைப் பார்க்க சென்றார்களானால் அது ஒரு 3 மாடி குடியிருப்பாக மாறி இருப்பதைப் பார்ப்பார்கள்.

houseandmoney

மனைவி அமைவதெல்லாம்……. சிறுகதை

 

horoscope

“சுசீலா மைலாப்பூர்ல ஒரு ஜோசியர் இருக்காராம். ரொம்ப நல்லா ஜாதகம் பார்த்து சொல்றாராம். என் ப்ரெண்டு ஜானு சொன்னா. கார்த்திக்குக்கு இப்போ செய்யிற வேலை பிடிக்கலையாம். தினம் வீட்டுக்கு வந்ததும் வேலையை விட்டுடறேன்னு பயமுறுத்தறான். அவன் ஜாதகத்தைக் காட்டலாம்னு இருக்கேன். உன் பையன் ஜகன் ஜாதகத்தையும் எடுத்துக்கிட்டு வாயேன். என்ன சொல்றாருன்னு பார்ப்போம். பீஸ் கூட ஒரு ஜாதகத்துக்கு நூறு ரூபாய் தானாம்.”

“ப்ச் எனக்கு ஜாதகம் ஜோசியத்துல எல்லாம் நம்பிக்கையே போச்சு சவிதா. ஒவ்வொருத்தனும் இப்ப ஆயிடும் அப்ப ஆயிடும்னு சொல்றான். எங்க ஆச்சு?” சலித்துக் கொண்டாள் சுசிலா.

“இல்ல, இவரு சொன்ன மாதிரியே ஜானு புருஷனுக்கு ஒரே மாசத்துல வெளிநாட்டுல வேலை கிடைச்சுதாம். அவ நாத்தனார் புருஷனுக்கு வேலை போகாதுன்னு அடிச்சு சொன்னாராம். அவரு கம்பெனில நிறைய பேரை வேலையை விட்டு எடுத்துட்டாங்களாம், ஆனா இவரை வேலையை விட்டு அனுப்பலையாம். சும்மா தான் வாயேன்” கையைப் பிடிச்சு இழுக்காத குறையாகக் கூப்பிட்டாள் சவிதா.

சரி ஒரு நூறு ரூபாய் தானே. போய் பார்ப்போம் என்று சவிதாவுடன் டூ வீலரில் கிளம்பினாள் சுசிலா. ஜோசியர் இருந்த அறை ரொம்ப சின்ன அறை. வாசல் கதவில் ஜோசியர் குஞ்சிதபாதம் என்ற பலகை கோணலாகத் தொங்கிக் கொண்டிருந்தது. வெராண்டாவில் டாக்டர் கிளினிக்கில் இருப்பது போல கூட்டம் வழிந்தது. ஒரு பெரிய வெங்கடாஜலபதி படம் சீரியல் விளக்குகளுடன் மின்னியது. யாருக்குப் பின் யாரென்று அவர்களே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு முடிவு செய்து கொண்டிருந்தனர். வியாதியை விட பிரச்சினைகள் தான் அதிகம் போலிருக்கு என்று எண்ணினாள் சுசிலா. ஜோசியர், ஒருவருக்கு சொல்லும் ஜாதகப் பலன்கள், பரிகாரங்கள் எல்லாம் அங்கு இருந்த எல்லார் காதிலும் விழுந்தது. ப்ரைவசி என்பதெல்லாம் கிடையாது. ஆனால் ஒன்று, நேரம் கடத்தாமல் விறு விறுவென்று எல்லாரையும் பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தார். அரை மணி நேர காத்திருப்பில் இவர்கள் முறை வந்தது. முதலில் சவிதா கேட்க வேண்டியவற்றைக் கேட்டுக் கொண்டாள். பின் சுசிலா ஜகன் ஜாதகத்தைக் காட்டினாள். “ஆயிடும் மா இன்னும் மூணு மாசத்துல ஆயிடும்” என்றார் ஜோசியர். “இந்த மாதிரி தாங்க ஒவ்வொரு ஜோசியரும் சொல்றாங்க. மூணு மாசம் மூணு மாசம்னு நிறைய ஜோசியக்காரங்க சொல்லியே இப்போ அவனுக்கு முப்பத்தஞ்சு வயசாச்சு” என்றால் சுசீலா. “சோழி உருட்டிப் பார்த்து கரெக்டா பொண்ணு பேரு என்ன, எங்க இருக்கான்னு கூட சொல்ல முடியும். செய்யவா? ஆனா அதுக்கு ஆயிரம் ரூபாய் ஆகும்” என்றார்.

சரி நூறு ரூபாய் தண்டம். இதோடு கிளம்பலாம் என்று சவிதாவைப் பார்த்தாள் சுசிலா. அதற்குள் சவிதா “நீங்க போட்டுப் பார்த்து சொல்லுங்க சார்” என்றாள். அவர் உடனே கண்ணை மூடிக் கொண்டு எதோ மந்திரங்களைச் சொல்லி சோழியை உருட்டிப் போட்டார். பின் கூட்டல் கழித்தல் எல்லாம் செய்து, “உங்கம்மா பேர் என்ன சொல்லுங்க?” என்றார்.

“அம்மா பேர் ரமணியம்மா”

“உங்க பிள்ளையை கட்டிக்கப் போறவ பேரும் அது தான். ஊரு பெங்களூரு மைசூரு பக்கம். அவங்க வீட்டுக்கு கிழக்கால ஒரு அம்மன் கோவில் இருக்கும். நல்ல சக்தி வாய்ந்த அம்மன். மேற்கு பக்கத்துல ஒரு அரசாங்க அலுவலகம் இருக்கும். உங்க பிள்ளைக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கும்” என்றார்.

“பொண்ணு எங்க ஜாதி பொண்ணா இருக்குமா?”

“கண்டிப்பா உங்க ஜாதிப் பொண்ணு தாம்மா. வேற ஜாதிப் பொண்ணு வரா மாதிரி ஜாதகத்துல இல்லவே இல்லை. அதான் பொண்ணு பேரு கூட உங்கம்மா பேரு தானுன்னு சொல்றேனே” என்றார்.

சுசீலா பர்சில் ஐநூறு ரூபாய் தான் இருந்தது. சவிதா மீதி அறநூறு ரூபாயைக் கொடுத்தாள். “ஏய் ஒன்னும் கவலைப்படாதே. இவரு சொல்றது அப்படியே பலிக்குதாம். வெயிட் பண்ணிப் பார்ப்போமே” என்றாள் சவிதா.

அடுத்த மாதத்திலேயே ரெண்டு ஜாதகங்கள் வந்தன, ஒன்று ஹோசூர் இன்னொன்று பெங்களூர். சுசீலா ரொம்ப ஆர்வம் ஆனாள். “ஜகன் ரெண்டு ஜாதகம் வந்திருக்கு. நல்ல குடும்பம். ரெண்டு பேருக்குமே சென்னைல தான் வேலை. என்ன சொல்ற?”

“நானே பார்த்துக்கறேன், நீ தேடாதேன்னு எவ்வளவு தடவை சொல்றதுமா? சீக்கிரமே உனக்கு ஒரு நல்ல சேதியை சொல்லப் போறேன். பொறுமையா இரு.” என்று சொல்லிவிட்டு அகன்றான்.

சுசீலாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இது வரை அவன் பிடி கொடுத்தே பேசியது இல்லை. கணவரிடம் சென்று, “அவன் யாரையோ லவ் பண்றான் போலிருக்குங்க. யாரா இருந்தாலும் நாம சரின்னு சொல்லிடலாம். அவன் சந்தோஷம் தான் நம்ம சந்தோஷமும்.” என்றாள்.

wedding4

ஒரு வாரம் கழித்து ஒரு நாள் அவர்கள் டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது, டிவியை மியுட் பண்ணிவிட்டுப் பேச ஆரம்பித்தான், “அம்மா அப்பா நான் சொல்றதைக் கேட்டு நீங்க அதிர்ச்சி அடையக் கூடாது. என் ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒருத்தரை நான் விரும்பறேன். பெங்களூரில் இருந்து மாத்தலாகி சென்னை வந்து ஒரு வருஷம் இருக்கும். பழகினதில் ரொம்பப் பிடிச்சிருக்கும்மா.”

“அடேய் பேரு என்னடா?” என்றாள் சுசீலா.

“பேரு கொஞ்ச பழங்காலப் பேரு தான்மா. ரமணி.”

ஜிவ்வென்று மகிழ்ச்சி தலைக்கு ஏறியது சுசிலாவுக்கு. “பெங்களூர்ல அவங்க வீட்டுப் பக்கத்துல ஏதாவது அம்மன் கோவில் இருக்காடா? தெரியுமா?”

“நான் போன வாரம் அபிஷியலா பெங்களூர் போயிருந்த போது அவங்க வீட்டுக்குப் போய் அவங்க அம்மா அப்பாவை சந்திச்சிட்டு வந்தேன் மா. வாராஹி அம்மன் கோவில் இருக்கு. அவங்க தெரு பேரே வாராஹி அம்மன் டெம்பிள் ஸ்ட்ரீட் தான். BSNL ஆபிஸ் பக்கத்து கட்டடத்தில் தான் இவங்க பிளாட் இருக்கு.”

திக்கு முக்காடிப் போனாள் சுசீலா. ஒரு மூச்சு விட மறந்து அடுத்த மூச்சை இழுத்தாள். “கோச்சுக்காதடா, நம்ம ஜாதி தானே?”

“ஆமாம்மா”

“அப்புறம் ஏண்டா அதிர்ச்சி அடையக் கூடாதுன்னு சொன்ன. எவ்வளவு சந்தோஷமான விஷயம். உனக்குப் பிடிச்சா மாதிரி பொண்ணு கிடச்சுதேன்னு சந்தோஷம் தானேடா படப் போறோம்.”

“பொண்ணு இல்லம்மா பையன்.”

LGBTflag

 

 

காசு பணம் துட்டு மணி மணி – சிறுகதை

wheelchair

வெறித்தப் பார்வையுடன் வீல் சேரில் உட்கார்ந்து இருக்கும் கணவனைப் பார்த்தாள் விமலா. சுற்றிலும் மனித நடமாட்டம் நின்று போய் ஒரு சுழல் காற்றில் அவளும் சுரேந்தரும் மட்டும் சிக்கிக் கொண்டது போல் செயலற்று நின்றாள். சுரேந்தரைக் கொண்டு வந்து விட்டவன் இவளிடம் அவசர அவசரமாக சில காகிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டான். எதற்குப் போடுகிறோம் ஏன் போடுகிறோம் என்று தெரியாமல் கையெழுத்துப் போட்ட அவளிடம் அவன், “நான் ரிடர்ன் பிளைட்டிலேயே மலேசியா போறேன் மேடம், பார்த்துக்கங்க” என்று சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினான்.

“சார் என்னாச்சு இவருக்கு? ஏன் இப்படி இருக்கிறார், சொல்லிட்டுப் போங்க” என்று அவன் சட்டையைப் பிடித்தாள் விமலா.

சட்டையிலிருந்து அவள் கைகளை விலக்கி, “தெரியாது மேடம், காலையில வேலைக்கு வரலையேன்னு என்னை அவர் ரூமுக்குப் போய் பார்க்க சொன்னாங்க, இப்ப இருக்கிறா மாதிரியே இருந்தாரு. அதுக்கப்புறம் அங்கப் பக்கத்துல இருக்கிற டாக்டர் வந்து பார்த்துட்டு, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணனும்னு சொன்னாரு. ஹைதிராபாத் ஆபீசுக்குத் தகவல் சொன்னோம். அவங்க அங்கெல்லாம் அட்மிட் பண்ண வேண்டாம், அவர் பழைய கேஸ் ஹிச்டரி எல்லாம் நமக்குத் தெரியாது. அதனால உடனே சென்னைக்குக் கூட்டிப் போய் உங்க கிட்ட ஒப்படைக்கச் சொல்லிட்டாங்க. உங்களையும் ஏர்போர்ட்டுக்கு வரச் சொல்லிடறோம்னு சொன்னாங்க. எனக்கு வேற எதுவும் தெரியாதுங்க” என்றான்.

“ஏங்க, எந்த மருத்துவ உதவியும் கொடுக்காமையா கூட்டிக்கிட்டு வந்தீங்க?” கசங்கிய சட்டையும் சாய்ந்தத் தலையுமாக உட்கார்ந்திருந்த கணவனைப் பார்த்து அடக்க முடியாமல் கோபமும் அழுகையும் ஒருசேர வந்தது விமலாவுக்கு. அவனோ பதில் சொல்லக் கூட நிற்காமல் அந்த இடத்தைவிட்டுக் காணாமல் போயிருந்தான். சுற்றி இருந்த மனிதர்களும் விமான நிலைய இரைச்சலும் திடீரென்று இவள் முகத்தில் ஓங்கி அறைவது போலத் தோன்றியது. முதலுதவிக்கு விமான நிலையத்தில் இருந்தவர்களை அணுகினாள். அவர்கள் ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்தார்கள். உடனே பாரதி ராஜா மருத்துவமனைக்கு விரைந்தாள். ஆம்புலன்ஸ் பயணத்தின் போது அவன் கண்களை மூடி உறங்கிக் கொண்டு வருவது போலத் தோன்றியது. ஒரு பேச்சுமில்லை அவனிடம் இருந்து. மருத்துவமனையில் நேராக அவனை ICUவுக்குக் கொண்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த ஒரு மருத்துவர், “அவருக்கு எதோ பெரிய ஷாக் ஏற்பட்டிருக்கணும். அல்லது நினைவுகளை பாதிக்கிற அளவு ஏதாவது சாப்பிட்டிருக்க வேண்டும். மெண்டல் பிரேக் டவுன் ஆகியிருக்கு. என்ன காரணம்னு செக் பண்ணா தான் தெரியும். உயிருக்கு ஆபத்தில்லைம்மா கவலைப் படாதீங்க. இப்போ நான் கேக்கிற கேள்விக்கெல்லாம் விளக்கமா பதில் சொல்லுங்க” என்று விரைவாக பல கேள்விகள் கேட்டு அவருக்குத் தேவையானவற்றைத் தெரிந்து கொண்டார்.

நடு இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஹாஸ்பிடல் நெடியும் பயமும் சேர்ந்து குமட்டிக் கொண்டு வந்தது விமலாவுக்கு. மலேசியாவுக்குப் போகவே விருப்பம் இல்லாத சுரேந்தரைப் பிடித்துத் தள்ளியது இவள் தானே? எத்தனை முறை அவனை நச்சரித்திருப்பாள்! அவனை வாட்டும் சொற்களைக் கொட்டிய வாய் இன்று கேவலை அடக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது..

“எவ்வளவு நாளு தான் எடுத்துக்கப் போறீங்க முடிவு பண்ண? இங்க வாங்கினதை விட மூணு மடங்கு அதிக சம்பளம் கொடுக்கறாங்க. உங்களுக்கு வேலை போய் நாலு மாசம் ஆகுது, இன்னிக்கு வரைக்கும் இன்டர்வியு போறீங்களே தவிர வேலை ஒண்ணும் கிடைக்கலை. மலேசியா போய் வேலை செய்ய என்ன கஷ்டம் உங்களுக்கு?”

“இல்லை விமலா, உன்னையும் குழந்தைகளையும் விட்டுட்டுப் போகணுமா? நீயோ பேங்க்ல வேலை செய்யற, அதையும் விட மாட்ட. நீ இங்கேயும் நான் அங்கேயும்னு எவ்வளவு நாள் இருக்க முடியும்? நான் போற இடம் மலேசியாவில் பெரிய நகரத்துல கூட இல்ல. சின்ன ஊர். ஹெட் ஆபிஸ் ஹைதிராபாத்தில் இருக்கு. இந்தக் கம்பெனியை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. எனக்குத் தெரிஞ்சவங்க யாரும் அங்க வேலை பார்க்கலை.”

“நீங்க என்ன கல்யாணம் கட்ட பொண்ணு பாக்கறீங்களா இல்லை வேலைக்குப் போக கம்பெனி தேடறீங்களா? எதுக்கு யாரையும் தெரிஞ்சிருக்கணும். ஒரொரு வேலைக்கும் உங்களை புடிச்சுத் தள்ள வேண்டியிருக்கு. சிவில் இஞ்ஜிநீயரிங் படிச்சிருக்கீங்கன்னு எங்கப்பா கட்டிக் கொடுத்தாரே, அவரை சொல்லணும்.” தேளாகக் கொட்டினாள்.

அடிபட்டவனாக அவன் அவளைப் பார்த்து, “கொஞ்சம் பொறுமையா இரு விமலா, நிச்சயமா சென்னையிலேயே வேலை கிடச்சிடும்.”

“இப்படியே தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இதோ அதோன்னு நாலு மாசம் ஆச்சு. பழைய கம்பெனியிலேயே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்துருந்தீங்கன்னா வேலையே போயிருக்காது. அவங்க பண்ற கலப்படத்துக்கு நான் எப்படி உடந்தையா இருக்க முடியும், நேர்மை நியாயம்னு GM கிட்ட சண்டை போட்டீங்க, அவங்க போயிட்டு வான்னு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.” வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சினாள்.

அவள் தொணதொணப்புக்குப் பலன் கிடைத்திருந்தது. ரெண்டு நாள் கழித்து மாலை அவள் ஆபிசில் இருந்து வந்தவுடன், “அவங்கள்ட்ட பேசிட்டேன் விமலா. ஒரு வாரத்துல வீசாக்கு ஏற்பாடு பண்ணிடறதா சொன்னாங்க. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை சென்னை வந்து போக அவங்களே டிக்கெட் தருவாங்களாம். ரெண்டு வார லீவில் வந்து போகலாமாம்” என்றான்.

மகிழ்ச்சியுடன் அவனை ஆணைத்துக் கொண்டாள். எல்லாம் விரைவில் நடந்தது. கிளம்பும் போது இவனுக்கு தான் கண்களில் நீர் தளும்பியது. விமலாவோ அவன் ஆறு மாதத்தில் வரும்போது என்னல்லாம் வாங்கி வரச் சொல்லவேண்டும் என்று மனத்தில் ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொண்டிருந்தாள். விமான நிலையத்தில் குழந்தைகளை கட்டியணைத்து ரெண்டு கன்னத்திலேயும் மாறி மாறி முத்தமிட்டுக் கிளம்பினான்.

fatherchild

கோலாலம்பூர் போய் அங்கிருந்து பஸ்ஸில் கோலா கங்சர் போகவேண்டும். நாலு மணி நேர பேருந்து பயணத்தின் பின் அவன் சென்றடைய வேண்டிய ஊர் போய் சேர்ந்தான்.

அங்கு வரவேற்க கம்பெனியை சேர்ந்த அகௌன்ட்ஸ் மேனேஜர்  ஜெயகிருஷ்ணா வந்திருந்தார். அவர் முன்பே தொலைபேசியில் பேசியிருந்ததால் அவரை சந்தித்து அவருடன் காரில் அவர்களுக்கான இருப்பிடத்திற்குப் போனார்கள். அவர் தெலங்கானாவை சேர்ந்தவர், அந்த ப்ராஜெக்டில் ஆரம்பித்த நாள் முதல் இருப்பவர், என்று பேசியதில் தெரிந்து கொண்டான். அவர் அவனுக்காகவும் சமைத்து வைத்திருந்தார். அவர் ரூமிலேயே அவன் உணவருந்திய பின் அவனுக்கான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் ரூமில் இருந்து இரண்டு அறைகள் தள்ளி சுரேந்தருக்கான ரூம்.

house2

ஒரு பெரிய ஹாலிடே ரிசார்ட் கட்டும் பணி இவர்கள் கம்பெனிக்குக் கிடைத்திருந்தது. அழகிய கங்ஸர் நதிக்கு எதிரில் மிக நவீனமான அடுக்கு மாடி கட்டடம், ஒரு படுக்கை அறை அல்லது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சிறு பயண விடுதிகள் கட்டும் பணி. அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பழைய ப்ராஜெக்ட் இஞ்சினீயர் வேலையை விட்டதால் சுரேந்தர் அந்த இடத்திற்கு நியமிக்கப் பட்டிருந்தான். ஊரில் இருந்து சிறிது தொலைவில் தான் இந்த கட்டடம் எழும்புவதால் அவர்கள் தங்கும் இடமும் சைட்டுக்கு அருகிலேயே அமைக்கப் பட்டிருந்தது.

house1

இரவு விமலாவிடம் மகிழ்ச்சியாகப் பேசினான். அவளுக்கோ இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கே இவன் போய் இடம் பிடிக்கவில்லை என்று சொல்வானோ என்று பயந்து கொண்டிருந்தாள்.

ரெண்டு வாரம் போயிருக்கும் நடு இரவில் போன் வந்தது. படபடப்புடன் போனை எடுத்தாள். “விமலா நான் திரும்பி வந்துடறேன். இங்கே நிலைமை ரொம்ப மோசமா இருக்கு” சுரேந்தர் நடுங்கியக் குரலில் சொன்னான்.

“ஐயோ என்ன விஷயம்? இப்படி நடு ராத்திரியில் போன் பண்றீங்க?”

“இப்போ தான் பண்ண முடிஞ்சிது. இங்கே கன்ஸ்டிரக்ஷனில் பயங்கர தில்லு முல்லு நடக்குது. அக்கவுண்ட்ஸ் மேனேஜர் கட்டுமான வேலைக்கு வாங்காத சாமானுக்கெல்லாம் வாங்கியதாக என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கிறான். நான் ஹைதிராபாத்தில் மேலதிகாரிக்குத் தகவல் சொல்வேன் என்றால், எல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சு தான் நடக்குது. ஒழுங்கா கையெழுத்துப் போடு இல்லேனா முந்தின ப்ராஜெக்ட் மேனேஜருக்கு ஆன கதி தான் உனக்குன்னு மிரட்டுறான். முந்தின ப்ராஜெக்ட் மேனேஜருக்கு என்ன நடந்ததுன்னு யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க. நாலஞ்சு பேர் தான் இந்தியாவில் இருந்து வந்து வேலை பார்க்கிறாங்க. அவங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்காங்க. மத்தவங்க எல்லாம் மலாய்காரங்க, சைனீஸ். அவங்கள்ட்ட என்னால எதுவும் கேக்க முடியலை.”

“என்னங்க, போய் ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ளே இப்படி குண்டை தூக்கிப் போடறீங்களே.”

“இங்க இருக்கிற நிலைமை புரிஞ்சிக்காம இப்படி பேசறியே விமலா, நான் இப்போ அங்கே திரும்பி வரணும்னா கூட வரமுடியாதபடி அவங்க என் பாஸ்போர்ட்டை எல்லாம் வாங்கி வெச்சிருக்காங்க. நானே என்ன பண்றதுன்னு தெரியாம உன்கிட்ட யோசனை கேக்க போன் பண்ணா நீயும் இப்படி சொல்றியே” எரிச்சலுடன் போனை வைத்து விட்டான்.

விமலாக்குப் பிறகுத் தூக்கமே வரவில்லை. கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது. ஏதாவது பிரச்சினை என்றால் அவனுக்கு உதவியாக இருக்க அங்கு தெரிந்தவர்கள் கூட யாருமே இல்லையே என்று அப்பொழுது அவளுக்குத் தோன்றியது. அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு அவனுக்குப் போன் போட்டு பேசினாள்.

“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருங்க. ஒரு ஆறு மாசம் கழிச்சு வருவீங்க இல்ல அப்போ திரும்பி போகாம இருந்திடுங்க. எல்லா இடத்திலேயும் தான் கணக்கு வழக்குல மோசடி பண்றாங்க.”

“விமலா உனக்குப் புரியலை. இவங்க பெரிய மோசடியா பண்றாங்க. எதுக்கும் இருக்கட்டும்னு நான் கட்டுமானத்துக்கு எடுத்துக் கொள்ளும் இரும்பு ராடுகள், செங்கல், சிமெண்டு மூட்டைகள் கணக்கை என் கம்பியுட்டரில் தனியா நோட் பண்ணிக்கிட்டு வரேன். ஆனா அவங்களுக்கு நான் இது மாதிரி பண்றது தெரிஞ்சாக் கூட எனக்கு ஆபத்து தான்.”

இதை கேட்டதில் இருந்து விமலாவுக்கு உண்மையிலேயே குலை நடுங்க ஆரம்பித்து விட்டது. அடுத்து வந்த நாட்களில் அவன் பக்கத்தில் வேறு யாரோ இருந்தால் அவளுடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்தான். அதனால் அவன் கூப்பிடும் போது மட்டுமே அவளால் பேச முடிந்தது.

கடைசியா அவனுடன் பேசி ரெண்டு நாள் ஆகியிருக்கும். அன்று மத்தியானம் ஹைதிராபாதிலிருந்து “சுரேந்தருக்கு உடல் நிலை சரியில்லை, அதனால் சென்னைக்கு ஒருவர் துணையுடன் அனுப்பி வைக்கிறோம்” என்று போன் வந்தபோது கூட இந்த நிலைமையில் கணவனைப் பார்ப்போம் என்று அவள் நினைக்கவில்லை.

விடிகாலையில் அவளிடம் வந்து டாக்டர், “நாங்க செடடிவ் கொடுத்துத் தூங்க வச்சிருக்கோம் மா. அது தான் இப்போதைய நிலைமைக்கு சிறந்த நிவாரணி. நீங்க வீட்டுக்குப் போயிட்டு குளிச்சு சாப்பிட்டுட்டு வாங்க, காலையில் ஒரு EEG எடுப்போம். வேற டெஸ்டுகள் பண்ணுவோம். இன்னிக்கு முழுக்க அவரை செடெஷனில் தான் வைத்திருப்போம். கவலைப் படாம வீட்டுக்குப் போயிட்டு வாங்க” என்றார்.

வீட்டுக்குப் போய் திரும்பி வந்த பின் டாக்டரைப் சந்தித்தாள். “அவரை அட்மிட் பண்ணவுடனே பிளட் சாம்பிள் எடுத்து டெஸ்டுக்குக் கொடுத்து ரிசல்டும் வந்திட்டுது மா. அவர் இரத்தத்தில் ஒரு வித விஷத் தன்மை கலந்திருக்கு. அவர் இப்போ உயிருடன் இருப்பதே நீங்க செய்த அதிர்ஷ்டம் தான். அவர் மூளைக்கும் பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்கு. விஷத்தன்மையைப் போக்க மருந்து ட்ரிப்சில் கொடுக்க ஆரம்பித்து விட்டோம். கொஞ்ச கொஞ்சமாகத் தான் ரிகவரி இருக்கும். மெதுவாக அவர் நிலை சீரடைந்து நினைவும் திரும்பும். நீங்க பொறுமையா இருக்கணும். அவர் நல்ல முறையில் பேச ஆரம்பித்த பிறகு தான் என்ன நடந்ததுன்னு கேட்டுத் தெரிஞ்சிக்க முடியும்.” என்றார்.

ஒரு வாரம் ஒரு யுகமாகக் கழிந்தது. கண் விழிப்பதும் உறங்குவதுமாக இருந்தான். அவளைப் பார்த்தும் ஏதும் பேசவில்லை, சிரிக்கவில்லை. டாக்டர் குழந்தைகளை அழைத்து வரச் சொன்னார். குழந்தைகளைப் பார்த்ததும் முதல் முறையாக லேசாக மலர்ந்தது முகம். கைகளை நகர்த்தி குழந்தைகள் கைகளைப் பிடித்துக் கொண்டான். கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது விமலாவுக்கு.

fatherdaughter

போஸ்டில் ஒரு செக்கும் வேலையை விட்டு சுரேந்தரை நீக்கியதற்கானக் கடிதமும் வந்து சேர்ந்தது. அவன் உடல் நலமின்மையையைக் காரணம் காட்டி வேலை நீக்கம் செய்திருந்தார்கள். இதை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை விமலா. அவர்களின் ஆபிசுக்குப் போன் பண்ணி பேசினாள். HRல் ஒருவர் “நீங்க இது மாதிரி உடல் நலக் கோளாறு முன்னமே இருந்ததுன்னு எழுதி கொடுத்திருக்கீங்களே மேடம். எப்படி அவரை கன்ஸ்டிரக்ஷன் சைட்டில் வேலைக்கு வெச்சுக்க முடியும்? அவர் திடீர்னு மயங்கி விழுந்தா நாங்க பொறுப்பேத்துக்க முடியுமா சொல்லுங்க?” நறுக்குத் தெரித்தாற் போலக் கேட்டார்.

“சார், இதுக்கு முன்னாடி அவருக்கு இந்த மாதிரி வந்ததே இல்லை. நானே பயங்கர ஷாக்கில் இருக்கேன். மலேசியாவில் தான் ஏதோ நடந்திருக்கணும். நீங்க தான் மருத்துவ செலவை எல்லாம் ஏத்துப்பீங்கன்னு நினச்சேன், இப்படி வேலையை விட்டே அனுப்பிட்டீங்களே சார். காண்டிரேக்ட் எல்லாம் போட்டு தானே வேலைக்கு எடுத்தீங்க?”

“மேடம், நீங்களே ஏர்போர்டில் எங்க ஆபிசரிடம் இவருக்கு இது மாதிரி உடல் கோளாறு முன்பே இருந்ததுன்னு எழுதி கொடுத்திருக்கீங்க, இப்ப இப்படி சொல்றீங்களே?” தெளிவாகப் பேசினார் எதிர் முனையில் இருப்பவர்!

சகலமும் புரிந்தது விமலாவுக்கு. சூழ்ச்சியுடன் நடந்து கொள்வது அந்த கம்பெனிக்குப் புதுசு இல்லை என்று தெரிந்து கொண்டாள். இனிப் பேசி பிரயோஜனமில்லை.

மெல்ல மெல்ல சகஜ நிலைமைக்குத் திரும்பி வந்தான் சுரேந்தர். பழைய நினைவுகள் கூடிய விரைவில் திரும்பி விடும் என்று டாக்டர் நம்பிக்கை அளித்ததில் இரண்டு வாரத்தில் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டாள்.

திடீரென்று ஒரு நாள் “விமலா நான் கூல்ட்ரிங்க் குடிச்சப் பிறகு எனக்கு என்ன நடந்துதுன்னே தெரியலை” என்றான். மலேசியாவில் நடந்தது அவனுக்கு நினைவுக்கு வருவது கண்டு மனம் நெகிழ்ந்து, “எதை பத்திச் சொல்றீங்க?” என்று அருகில் அமர்ந்து கேட்டாள்.

“அந்த ஜெய கிருஷ்ணா அவன் ரூமுக்கு வான்னு என்னைக் கூப்பிட்டான். எனக்குப் போகவே பயமா இருந்தது. முந்தின நாள் தான் என் லேப் டாப்பை என் அறைக்கு வந்து யாரோ பயன்படுத்தின மாதிரி எனக்கு ஒரு சந்தேகம், ஏன்னா டேபிள் மேல பேப்பர்ஸ் கலஞ்சு இருந்தது. அதனால் நான் கம்பியுட்டரில் கணக்கு வச்சிருப்பதைக் கண்டுபிடிச்சிருப்பானோன்னு நினச்சு, உடம்பு சரியாயில்லை அப்புறம் வரேன்னு சொன்னேன். ஆனா அவனோ ஒரு அஞ்சு நிமிஷம் தான் வந்துட்டுப் போன்னுச் சொன்னான். போனவுடன் ஒரு கிளாஸ்ல ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தான், நானும் தாகமா இருந்துதுன்னு உடனே குடிச்சிட்டேன். அதுக்கு அப்புறம் எனக்கு இங்கே ஆசுபத்திரியில் தான் கொஞ்சம் கொஞ்சமா நினைவு வந்தது. எப்படி சென்னை வந்தேன்னு ஒண்ணுமே ஞாபகமில்லை.”

அவனை ஏர்போர்டில் பார்த்தபோதே அவன் பெட்டியோ லேப்டாப்போ ஒண்ணுமே கொண்டு வரவில்லையே என்று விமலா நினைத்தாள். ஆனால் அவன் உடல் நிலை சரியாகித் திரும்பிப் போவான் என்று நினைத்ததால் அதைப் பற்றி வந்தவனிடம் கேட்கவும் இல்லை, அதை கேட்கும் நிலையிலும் அவள் இல்லை.

சுரேந்தர் மெல்ல மீண்டு பெரிய வேலை இல்லையெனினும் ஒரு சின்ன கம்பெனியில் பிடித்த வேலையில் சேர்ந்தான். ஏமாற்றப் பட்டதால் மனத்தில் ஏற்பட்ட வடு மட்டும் காயம் ஆறாமலே தான் இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தமிழ் தினசரியில் நாலாவது பக்கத்தில் “மலேசியாவில் ஹாலிடே ரிசார்ட் கட்ட காண்டிரேக்ட் கிடைத்த ஹைதிராபாத் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். மலேசிய போலீஸ் கம்பெனி தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை” என்று வந்த செய்தியை சுரேந்தர் பார்த்திருந்தால் அவன் மனம் சிறிது ஆறுதல் அடைந்திருக்கலாம்.

Images taken from these sites with thanks.

http://www.cliparthut.com/wheelchair-sports-clipart.html

http://seattle.urbansketchers.org/2014/07/portland-for-2nd-annual-west-coast.html

http://pencil-bender.deviantart.com/art/Father-Daughter-Time-422404333

http://www.dreamstime.com/stock-illustration-father-child-pencil-sketch-hand-drawn-man-gently-holding-toddler-image49286492

விடியலைத் தேடி – சிறு கதை

birds

அக்காக் குருவி கத்தலும் கிளிகளின் கூட்டுக் கிக்கிக்களும் மஞ்சுவை எழுப்பின. ஒரு நிமிடம் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு. கார், பஸ்களின் வேக ஓட்டத்தின் ஒலிகளின் நடுவில் வாழ்ந்த அவளுக்கு இந்தக் கிராம சூழ்நிலை நினைத்தே பாராமல் கிடைத்த ஒரு வரம்.

சுற்றிப் பார்த்தாள். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் போடாமல் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி வருவதற்குள் சில குழந்தைகள் சிணுங்க ஆரம்பித்து இருந்தன. சிலவை அழகாகக் குப்புறப் படுத்துத் தலையைத் தூக்கித் தொட்டிலில் இருந்து கருவண்டு கண்களுடன் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தன.

வேகமாக ஒவ்வொன்றிற்கும் டயப்பர் மாற்ற ஆரம்பித்தாள். அதற்குள் அவள் சக காப்பாளர் மாலா புட்டிகளில் பாலை நிரப்பி வந்து குழந்தைகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தாள். சில குழந்தைகள் தானே பாட்டிலைப் பிடித்துக் கொண்டு சப்ப ஆரம்பித்தன. சில இன்னும் சிறுசு, அதனால் அவைகளில் ஒன்றை தொட்டிலில் இருந்து எடுத்து மடியில் போட்டுக் கொண்டு பால் கொடுத்தாள் மஞ்சு. வயிறு முட்டக் குடித்தப பின் வாயில் இருந்து பால் வழிய அவளை பார்த்து ஒரு பூஞ்சிரிப்பை உதிர்த்தது.

motherandchild

கண்களில் பொங்கி வந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அடுத்தக் குழந்தையிடம் சென்றாள். ஒரு குழந்தைக்காக ஏங்கிய அவளுக்கு பத்துக் குழந்தைகளைக் கொடுத்துவிட்டார் இறைவன். இங்கு வந்து சேர்ந்தது நேற்று தான். அதுவும் கனவு போல இருந்தது. இன்னும் உறக்கம் கலையாமல் கனவில் இருக்கிறோமோ என்று கூட அவளுக்குத் தோன்றியது.

ஜேகப்பை விட்டுத் தொடர்ந்து இந்த ஹோமில் வாழமுடியுமா என்று ஒரு சிறு பயமும் வந்தது. இருபது வருட வாழ்க்கை எளிதாக மறக்கக் கூடியதா? இந்த முடிவை எடுக்க அவள் எவ்வளவு மன உளைச்சல் பட்டாள்! இன்னும் உள் மனம் பயத்தில் இருந்து மீளவில்லை.

உண்மையில் திருமணம் அவளுக்கு மிகவும் இனிமையான ஒரு வாழ்வின் ஆரம்பம். அவளுடையது காதல் திருமணம். அதற்கு முன் கசந்த அவள் கன்னி வாழ்க்கையை இனிய காதல் திருமணம் தித்திக்க வைத்தது. அவள் அலுவலகத் தோழி வேதா பிரசவ விடுப்பு முடிந்து வேலைக்குச் சேரும் முன் தன் மூணு மாதக் குழந்தையை ஆபிசுக்கு எடுத்து வந்தபோது தான் சக ஆபிஸ் கொலீக் ஜேகப்பை முதலில் கவனித்தாள். வேதா மெடிகல் இன்சியுரன்ஸ் கிளைமுக்காக சில பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டியிருந்த சமயத்தில் அழும் குழந்தையை அவ்வளவு லாகவமாக அவன் கையாண்டான். இவளும் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு “பப்புக்குட்டி சின்னிக் குட்டி” என்று கொஞ்ச இருவருக்கும் இடையே சிநேகமான நட்பு தோன்றியது. “எனக்குக் குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும்” என்று அவன் சொன்னபோது அவன் மேல் சின்ன ஈர்ப்பு ஏற்பட்டது.

வாழ்வில் பிடிப்பின்றி இருந்த மஞ்சுவிற்கு ஜேகப்பின் கண்ணியமான பேச்சு மெதுவாகக் கவரத் தொடங்கியது. பெற்றோர் இல்லாமல் அண்ணன் அண்ணியுடன் வாழ்ந்த அவளுக்கு முப்பது வயதாகியும் அவர்கள் திருமண ஏற்பாடு எதுவும் செய்வதாக இல்லை. அதற்குக் காரணம் அவள் சம்பளம் தான் என்றும் அவளுக்குத் தெரியும். ஜேகப்புக்கும் அவளுக்கும் இடையே ஆரம்பித்த சிநேகமான நட்பு சில மாதங்களில் இயல்பாகக் காதலாக மாறியது. ஒரு நாள் அவனே, “எனக்கும் வயசாகிட்டு வருது. நான் உன்னை நல்லா வெச்சுப்பேன். என்னைக் கல்யாணம் செஞ்சுப்பியா” என்று நேரடியாக கேட்டதும் அவள் மனம் துள்ளி குதித்தது. அவனின் அன்பும் பரிவும் அவள் அது வரை எவர் மூலமும் அனுபவித்ததில்லை. முதலில் ரொம்ப யோசித்தாள். வேற்று மதம் பயமுறுத்தியது. ஜாதி விட்டு மணமுடித்தாலே கஷ்டம், இதில் மதம் மாறி ……

ஆனால் உறவுகள் யாரும் எந்த விதத்திலும் உதவாத போது இக்கலப்புத் திருமணத்தால் புதிதாக என்ன நஷ்டம் வரப் போகிறது என்று எண்ணித் துணிந்தாள். இவள் மதம் மாறி மஞ்சு கேதரின் ஆகத் திருமணம் புரிந்ததால் ஜேகப் வீட்டில் பெரிதாக எதிர்ப்பு ஏதும் இல்லை.

வீட்டில் மாமியார் மட்டும் தான். ஜேகப் தந்தை இறந்து சில வருடங்கள் ஆகிஇருந்தது. மாமியாருடன் நல்ல உறவு, தினமும் ஜெகபும் அவளும் ஒன்றாக வேலைக்குப் போய் வந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவள் கேட்கும் முன் புடைவையும் அவன் சக்திக்கு ஏற்ப நகையும் வாங்கிக் கொடுத்தான். அவள் சமையல் கைப் பக்குவம் மாமியாருக்கும் கணவனுக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டதால் ஆசையாக விதம் விதமாக தினம் சமைத்துப் பரிமாறினாள். முதல் முறை நாள் தள்ளிப் போன போது இருவரும் வானத்தில் மிதந்தார்கள். ஆனால் சில வாரங்களிலே அது பொய் என்றாகிவிட்டது. அது தான் அவர்களின் மண வாழ்க்கையின் முதல் பெரிய ஏமாற்றம்!

கொஞ்ச நாளிலே வேலையை விட்டுவிட்டு பிசினெஸ் ஆரம்பித்தான் ஜேகப். மஞ்சு ரொம்ப கெஞ்சினாள் வேலையை விட வேண்டாம் என்று. அவனோ பிடிவாதமாக “இப்படியே எத்தனை நாள் வாழறது, காரு வீடெல்லாம் நம்ம சம்பளத்தில் வெறும் கனவு தான். துணிஞ்சு இறங்கனும்”. என்றான்.

கார்மென்ட் பிசினெஸ். ஆர்டர் பிடிக்க அடிக்கடி வெளியூர் செல்ல  வேண்டியிருந்ததால் மஞ்சுவையும் வேலையை விடச் சொன்னான். “நீ தான் கணக்கு வழக்கெல்லாம் பார்த்துக்கணும். எவனுக்கோ போய் உழைப்பதுக்கு பதிலா நம்ம கம்பெனியில் உழைச்சா இலாபம் நமக்கு தானே” என்றான். அவன் இல்லாத போது கம்பெனியில் சின்ன சின்ன திருட்டுகள் நடக்க ஆரம்பித்தன. அதனால் அவள் அங்கு இருப்பது அவசியமாயிற்று. பிசினசும் சூடு பிடித்ததால் வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் கம்பெனியில் அமர்ந்தாள்.

பிசினஸ் நன்றாக வளர்ந்தது. ஆசைப்பட்ட மாதிரி ஜேகப் கார் வாங்கினான். ஆனால் யார் வைத்தக் கண்ணோ திடீரென்று ஒரு பெரிய ஆர்டர் கேன்சல் ஆனது. ஆர்டரை எதிர்பார்த்து தைத்து வைத்திருந்த சரக்கெல்லாம் விற்க முடியாமல் தேங்கிப் போனது. அதே சமயம் இருந்த ஒரே உறவான மாமியாரும் இறந்து போனார். முடிந்த அளவு ஜேகப்புக்கு ஆறுதலாக இருந்தாள் மஞ்சு. முதல் குறை பிரசவத்துக்குப் பிறகு மேலும் இரண்டு குறைப் பிரசவங்கள் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு இடைவெளியை கொஞ்ச நாளாகவே ஏற்படுத்தியிருந்தது. குழந்தைக்காக ஏங்கிய இருவருக்கும் இறைவன் அந்த பாக்கியத்தை கொடுக்கவில்லை. இந்த சமயத்தில் இது வரை இல்லாத புதுப் பழக்கத்தை மதுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான் ஜேகப். தினமும் அளவுக்கு அதிகமாக குடிக்க ஆரம்பித்தான். எப்படி இந்தப் பழக்கம் ஆரம்பித்தது என்று அவள் யோசிப்பதற்குள் அவன் ஆபிசுக்கு வராமல் அதிகமாக பார் பக்கம் ஒதுங்க ஆரம்பித்திருந்ததை கவனித்துப் பெரும் குழப்பத்துக்கு ஆளானால் மஞ்சு.

பிசினஸ் என்று ஒன்று ஆரம்பித்தப் பின் நஷ்டம் வந்தால் சோம்பி உட்கார முடியுமா? மஞ்சுவே தன் சாமர்த்தியத்தால் பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடங்களுக்குச் சென்று சீருடை ஆர்டர் வாங்கி பொறுப்புடன் கம்பெனியை நடத்த ஆரம்பித்தாள். தொய்வு ஏற்பட்ட பிசினஸ் நன்றாகப் பிக் அப் ஆனது.அது ஜெகபை எரிச்சல் படுத்தியது. “பொட்டச்சி நீ, என் உதவி இல்லாம ஆர்டர் வாங்கி கம்பெனியை நடத்துறியா? எவ்வளவு நாளைக்கு ஓடுது பாக்கலாம்” என்று எல்லார் முன்னிலையிலும் கம்பெனியில் கத்தி அவமானப் படுத்தித் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். அவளால் நம்ப முடியவில்லை. இந்த மாதிரி கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தி அவள் கேட்டதே இல்லை. குடியின் பாதிப்பால் மாறிவிட்டானா அல்லது உண்மையிலேயே பொறாமைப் படுகிறானா என்றும் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் குடிக்காத போது அன்பாகத் தான் இருந்தான்.

ஜேகபை சர்ச் பாதிரியாரிடம் கவுன்சலிங்கிற்கு அழைத்துச் சென்றாள். அவர் பேசும்போது நல்ல பிள்ளையாக எல்லாவற்றிற்கும் தலை ஆட்டிவிட்டு வீட்டுக்கு வந்ததும் இவளை முதல் முறை கை நீட்டி அடித்தான். அவன் விட்ட அறையில் நிலைகுலைந்து போனாள். “நீ யாருடி என்னைப் பத்தி பாதரிடம் போய் கம்ப்ளெயின் பண்ண? முதல்ல நீ கிருஸ்துவச்சியே இல்லை. உன்னைக் கல்யாணம் கட்னதே தப்பு” வாய்க்கு வந்தபடி பேசினான். அதன் பின் அடிப்பதும் உதைப்பதும் தினப்படி வாடிக்கை ஆனது.

அவள் நொந்து போனால். எவ்வளவு மென்மையானவன், குழந்தைகளிடம் எவ்வளவு அன்புடன் பழகுபவன், எப்படி இப்படி மாறினான் என்றே அவளுக்குப் புரியவில்லை. அவன் அடித்தாலும் அவளுக்கு அவன் மேல் உள்ள அன்புக் குறையவில்லை. இரவு ஒரு மணிக்கு தள்ளாடி வீடு திரும்பும் அவனுக்கு சூடாக உணவு பரிமாறி அவனை நல்ல முறையில் படுக்க வைத்தப் பின் தான் அவளுக்கு உறக்கமே வரும்.

waitingwife

கம்பெனிக்கு வந்து, அங்கு இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு குடிக்கப் போவதால் பணம் அதிகம் petty cash பாக்ஸில் வைக்காமல் இருந்தாள். அதனால் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துச் சென்று விற்றோ அடமானம் வைத்தோ குடிக்க ஆரம்பித்தான். இதற்காகவே அவன் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்க ஆரம்பித்தாள் மஞ்சு.

அவன் குடிக்காத நேரத்தில் அவனிடம் நல்லவிதமாகப் பேசி அவனை மருத்துவமனையில் சேர்த்து அடிக்ஷனில் இருந்து விடுபட வைக்க எவ்வளவு முயன்றும் அவளின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஜேகப், தான் குடிப்பதால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே சாதித்தான். “எங்கப்பாவும் தான் குடிப்பார். எங்கம்மா அவருடன் சந்தோஷமா வாழலையா? உனக்கு என்ன கொழுப்பு என்னை குடிக்காதே என்று சொல்ல?” பேச்சில் ஆரம்பித்து அடி உதையில் முடிவது சகஜமாயிற்று. அவன் அப்பா இறந்ததே அதிகம் குடித்து அதனால் வந்த லிவர் பிரச்சினையால் என்று ஒரு நாள் வேறு ஒரு உறவினர் மூலம் தெரிந்து கொண்டாள் மஞ்சு. இந்தக் குடி நோய் அடுத்த சந்ததிக்கும் தொடரும் என்பதை அவள் உதவித் தேடிச் சென்ற மருத்துவர் மூலம் அறிந்து கொண்டாள். என்ன செய்வது? அவனின் சொந்தங்கள் அவன் அம்மா இறந்த பிறகு இவர்களுடன் தொடர்பில் இல்லை. அவர்கள் யாரிடமும் இவளால் உதவி கேட்கப் போக முடியவில்லை.

இந்த நேரத்தில் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்த பாண்டியன், தான் ஜேகபிடம் பேசிப் புரிய வைப்பதாக அவளிடம் வந்து சொன்ன போது ஒரு பாரம் இறங்கியது போல இருந்தது அவளுக்கு. பாண்டியனை வேலைக்குச் சேர்த்ததே ஜேகப் தான். பிசினஸ் ஆரம்பித்த நாள் முதலாக அவன் கம்பெனியில் இருந்தான்.

“தினம் சாயங்காலம் நான் அவர் கூடவே இருக்கேன் மேடம். ரொம்ப குடிக்காம பார்த்துக்கறேன். அப்படியே நல்லவிதமா பேசி சரி பண்ணிடலாம், கவலைப் படாதீங்க” என்று தைரியம் சொன்னான்.

இரவு பாண்டியனே அவனை வீட்டில் வந்து விட்டுவிட்டுப் போக ஆரம்பித்தான். குடித்துவிட்டு வண்டி ஒட்டாமல் வருகிறானே என்று ஒரு சிறு நிம்மதி மஞ்சுவுக்கு. அதுவும் சொற்ப காலமே. அவர்கள் கம்பெனி வங்கிக் கணக்கு ஜாயின்ட் அக்கௌன்ட். அதனால் அவள் மிகவும் ஜாக்கிரதையாக செக் புக்கை ஜேகப் கண்ணில் படாமல் வைத்திருந்தாள். வங்கி மேலாளர் ஒரு நாள் கணக்கில் overdraft இருப்பதால் ஒரு செக்கைத் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கு என்று போன் பண்ணியபோது அவள் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது.

“சார், சான்சே இல்லை. கரென்ட் அக்கௌண்டில் மட்டுமே 5லட்சம் இருக்கணமே” என்றாள். “இல்லையே மா, ரெண்டு வாரமா நிறைய வித்ட்ராயல்ஸ் இருந்ததே. எல்லாமே cash வித்ட்ராயல்ஸ். நீங்க சரியா செக் பண்ணிப் பாருங்க” என்று சொல்லி போனை கட் பண்ணினார்.

செக் புக்கை எடுத்துப் பார்த்தாள். வரிசையாக எண்களைப் பார்த்துக் கொண்டே வந்தவள் கடைசி 5 செக்குகள் கிழிக்கப் பட்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

ரேஸ்கல் பாண்டியன் பண்ணின வேலை இது என்று புரிந்து கொள்ள நிமிஷ நேரம் போதுமானதாக இருந்தது அவளுக்கு. அவளின் ஆபிஸ் ரூமுக்குள் வந்தபோது எப்போதோ ஒரு சமயம் அவள் கவனிக்காத சமயத்தில் அவன் செக்குகளைக் கிழித்து வைத்திருக்க வேண்டும். பின் ஜேகபிடம் கையெழுத்து வாங்கி வங்கியில் இருந்து பணத்தை எடுத்திருக்க வேண்டும். ஜேகப்புக்கு ஏதாவது பணம் கொடுத்தானோ அல்லது எதுவுமே கொடுக்கவில்லையோ தெரியவில்லை, மனம் கொதித்தது மஞ்சுவுக்கு.

“பாண்டியனை கூப்பிடுங்க” என்று இவள் ஆள் அனுப்பிய போது அவன் அதற்குள் தலைமறைவாகி இருந்தான். ஜேகபிடம் வங்கியில் இருந்து பணம் எடுத்ததைப் பற்றி கேட்க, அவன் உடனே “நீ பணத்தை எடுத்து எவனுக்கோ கொடுத்துட்டு என்னை கேக்கறியா” என்று இவளை ஏச, அதன் பின் பேச்சு முற்றிலும் வேறு திசைக்கு மாறியது. “யாரோட டீ நீ தொடர்பு வெச்சிருக்க, என் கம்பெனி பணத்தை எல்லாம் எடுத்து தானம் பண்ற?” என்று ஆரம்பித்து காது கூசும்படி அர்ச்சனை செய்ய ஆரம்பித்தான். குடி போதையில் செக்கில் கையெழுத்துப் போட்டதே தெரியவில்லை அவனுக்கு. நான் உன்னைக் கண் கலங்காம பார்த்துக்கறேன் என்று சொன்ன ஜேகப் எங்கே போனான் என்று நினைத்துக் கலங்கி நின்றாள் மஞ்சு.

ஒரு நாள் ஆபிசில் மும்முரமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது டெய்லரிங் செக்ஷன் வாசுகி தயங்கி தயங்கி எதோ சொல்ல வந்து எச்சில் கூட்டி முழுங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்து சற்றே எரிச்சலுடன், “என்ன வாசுகி, என்ன விஷயம் ஏதாவது அட்வான்ஸ் வேணுமா? ஏன் தயங்கி தயங்கி நிக்கற?” என்றாள் மஞ்சு.

“எப்படி சொல்றதுன்னு தெரியலை மேடம், சாரை ரெண்டு மூணு தடவை ஒரு பொண்ணோட பார்த்தேன். நல்ல பொம்பளை மாதிரி தெரியலை.” மென்று முழுங்கினாள் வாசுகி. “சில பேர் கொஞ்ச நாளாவே சேர்ந்து வாழறாங்கன்னு ஆபிசுல பேசிக்கறாங்க” விதிர்விதிர்த்துப் போய்விட்டாள் மஞ்சு.

அன்று இரவு குடித்து விட்டு வந்தபோது அமைதியாக இருந்தாள் மஞ்சு. காலையில் எழுந்தவுடன் அவனிடம், “உங்களை யாரோ ஒரு பொண்ணோட பார்த்ததா சிலர் வந்து எங்கிட்ட சொன்னாங்க. யாருங்க அந்தப் பொண்ணு?” என்றாள். “யாரோட வேணா நான் போவேன், அதை கேக்க நீ யாரு?” கோபத்தில் அவளைப் பிடித்து வெறியுடன் தள்ளியவன் அவள் தலை ஜன்னல் கம்பியில் மோதி இரத்தம் வழிவதைக் கூடக் கண்டுகொள்ளாமல் வாசக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்.

மனோ தத்துவ மருத்துவரை அணுகினாள். அவனாக வந்து அடிக்ஷன் சென்டரில் அனுமதித்துக் கொண்டால் அன்றி அவன் நோய் குணமாக வாய்ப்பில்லை என்றார் டாக்டர். தினம் அடி உதை வாங்குவதால் இரவில் அவன் வரும் நேரத்தில் பயம் வயிற்றைக் கவ்வி இம்சை பண்ணுவதை மருத்துவரிடம் தெரிவித்தாள். அவளை சாந்தமான மன நிலையில் இருக்க உதவும் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். அதைத் தவிர அவரிடம் இருந்து அவளுடைய பிரச்சினைக்கு வேறு பதில் கிடைக்கவில்லை.

ஆபிசில் ஒரு நாள் வந்து இறங்கிய சரக்கைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த போது, துணியைச் சுற்றி வந்த பேப்பரில் உள்ள வரி விளம்பரம் ஒன்று அவள் கண்ணில் பட்டது. முதியோர் இல்லமும் அநாதை ஆசிரமமும் சேர்ந்தே இருந்த ஒரு இடத்துக்குக் குழந்தைகளை பராமரிக்கத் தாயுள்ளம் கொண்ட பெண் தேவை என்று விளம்பரத்தைப் பார்த்தாள். உணவும் இருப்பிடமும் கொடுத்து மாதச் சம்பளம் ரூ10,00௦ என்று போட்டு முகவரியும் தொலைபேசி எண்ணும் இருந்தது. தினசரியின் தேதியைப் பார்த்தாள். ஒரு வாரப் பழைய பேப்பர்.

திருமணம் செய்ய முடிவெடுக்கும் முன் யோசித்ததை விட இப்பொழுது எடுக்கப் போகும் முடிவுக்காக இரவும் பகலும் மன வேதனையில் உழன்றாள் மஞ்சு. அன்று அவள் வீட்டை விட்டுக் கிளம்பி ஜேகப்புடன் வாழ முடிவு செய்தபோது அர்த்தமற்ற வாழ்க்கை பொருள் பொதிந்ததாயிற்று. ஆனால் இன்று எடுக்கப் போகும் முடிவோ ஒரு உறவின் நிரந்தரப் பிரிவை ஏற்படுத்தப் போகும் முடிவு, உண்மையில் ஓரு மரணத்துக்கு நேர்.

மிகுந்த யோசனைக்குப் பின் தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டு நேர்காணலுக்குச் சென்றாள். “நான் ஒரு அநாதை, பயமில்லாமல் வாழ ஓர் இடம் தேடி வருகிறேன் மேடம். இப்போ ஒரு கார்மென்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். ஆனால் தங்குமிடம் சரியா இல்லை” என்று நிர்வாக இயக்குநரிடம் உண்மையும் பொய்யும் கலந்து உருக்கத்துடன் சொன்னாள்.

அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்தவுடன் அவள் மனம் பல வருடங்களுக்குப் பின் லேசானது போலத் தோன்றியது. சில குழந்தைகள் தொட்டிலில் இருந்தன. சில தவழ்ந்து கொண்டிருந்தன. குழந்தைகளை பராமரிக்க இவளை விட சிறந்தவர் அவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை இவளுடன் பேசி, இவள் செய்கைகளை கவனித்த சிறிது நேரத்திலேயே நிர்வாக இயக்குநர் புரிந்து கொண்டார். அவர்களுக்கும் குழந்தைகளைப் பராமரிக்க ஒருவர் உடனடித் தேவையாக இருந்ததால் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அடித்து அப்பொழுதே அவள் கையில் கொடுத்து விட்டார்.

முதல் முறை சூழ்நிலைக் கைதியாக இருந்து விடுதலை வேண்டி வீட்டை விட்டுக் கிளம்பினாள். இம்முறையும் வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் அதே சூழ்நிலைக் கைதி தான். ஆனால் முதல் முறை வீட்டை விட்டுக் கிளம்பும்போது இருந்தத் துணிச்சலை விட இம்முறை அதிகம் தேவையாக இருந்தது. இருட்டின் அடர்த்தியைப் பொறுத்தே உள்ளது அதில் இருந்து விடுபட தேவையான துணிச்சல்!

sunrise

images taken with thanks from the following websites:

https://www.etsy.com/listing/78235918/birds-in-a-garden-graphite-pencil

http://vaishnavinair.blogspot.in/

http://wallkeeper.com/

http://scribbles-n-sketches.deviantart.com/art/sunrise-283194928