வெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்

இரண்டு நகைச்சுவை நடிகர்களை வைத்து ஒரு தொடர் கடத்தல் கொலை மர்ம படத்தை தந்துள்ளார் அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன். நடிகர்கள் விவேக், சார்லி இருவருமே கே.பியின் மாணவர்கள். அவர் பட்டறையில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வகை நடிப்பும் எளிதாக வரும். திரைக்கதை ஆசிரியர்களும்(விவேக் இளங்கோவன், ஷண்முக பாரதி) இயக்குநர் விவேக் இளங்கோவனும் அவர்கள் இருவரையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒரு தரமான அதே சமயம் வித்தியாசமான படத்தை தந்திருக்கிறார்கள்.

99% கதை நடப்பது சியாட்டில், அமெரிக்காவில். மிக சமீபத்தில் ஓய்வுபெற்ற கொலை வழக்குகளை துல்லியமாக துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிக்கும் திறன் உள்ள போலிஸ் அதிகாரியாக விவேக் வருகிறார். மிகைபடாத நடிப்பு. நகைச்சுவை நடிகராக நடிக்கும்போது வரும் உடல்மொழிகள் இன்றி நல்ல ஒரு குணச்சித்திர பாத்திரத்தின் தன்மை புரிந்து நடித்துள்ளார். சுறுசுறுப்பாக வேலை செய்து வந்த அவர் மகன் வீட்டில் போரடித்துக் கொண்டு நடமாடுவது முதல் கடத்தப்பட்ட மகனின் நிலை பற்றி அனுமானித்து உடைந்து அழும் வரை எல்லா உணர்ச்சிகளும் கச்சிதமான வெளிப்பாடு. அவருக்குத் துணை பாத்திரமாக சார்லி. பிள்ளைகளுக்காக அமேரிக்கா செல்லும் பெற்றோர்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே யதார்த்தமாக இருக்கிறது சார்லி, அவர் மனைவி மற்றும் விவேக்கின் பாத்திரப்படைப்புகள்.

அதேபோல சார்லி மகள் (பூஜா தேவரியா) மற்றும் விவேக் மகன் மற்றும் மருமகள் பாத்திரங்களும் இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் உள்ளன. இந்தக்கதையில் ஓர் இழை குழந்தைகளின் பாலியல் வன்முறை தொடர்பாக அமெரிக்க பாத்திரங்களின் வாயிலாக தொடர்ந்து வருகிறது. அதில் சிறு பெண்ணாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு மிக அருமை. மனத்தைப் பிழியும் இழை. அந்த இழை கடைசியில் எப்படி மெயின் கதையோடு ஒட்டுகிறது என்பது நல்ல சஸ்பென்ஸ்.

விவேக் தன் மகன் வீட்டிற்கு வந்த இடத்தில் பக்கத்து வீட்டு பெண் கடத்தப் படுவதும் அந்தப் பகுதி சிறுவனும் கடத்தப் படுவதும் நடக்கிறது. அதைப் பார்த்து துப்பறியும் தன்மை உடலோடு கலந்திருப்பதால் விவேக்கும் அமெரிக்க போலிசுக்கு இணையாக துப்பறிய தொடங்குகிறார். அவர் தனியாக ஒவ்வொரு இடத்துக்கும் செல்லாமல் துணைக்கு தன் மகனின் அலுவலக தோழி பூஜா தேவரியாவின் அப்பாவான சார்லியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ளவும் குற்றவாளியை கண்டுபிடிக்கவும் முயற்சிகள் எடுக்கிறார். இவ்விரு பாத்திரங்களே படம் முழுவதும் தொடர்ந்து வருவதாலும் வசனங்கள் நிறைய இருப்பதாலும் கொஞ்சம் அலுப்புத் தட்டுகிறது. படம் ஓடும் நேரம் இரண்டு மணி தான் என்றாலும் மிக நீண்ட நேரம் போலத் தோன்றுகிறது.

இந்தக் கதை அமெரிக்க படங்களில் அதிகம் காணப்படும் மனோதத்துவ ரீதியான த்ரில்லர் படம். படம் எடுத்திருப்பது அமேரிக்கா வாழ் தமிழர்கள் திகா சேகரன், வருண் குமார், அஜய் சம்பத். அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு இந்தக் கதைக் களம் எளிதாக புரியவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். நமக்கும் ஒன்றும் கஷ்டமில்லை. ஆனால் இந்த மாதிரி ஒரு பாத்திரத்துக்கு இள வயதில் உண்டாகும் கொடுமையான நிகழ்வுகளால் வளர்ந்த பிறகு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி ஆவதும் பழி வாங்க பலரை கொல்வதும் நம்மூர்களில் அவ்வளவாக நடப்பதில்லை.

விவேக்கின் அமெரிக்க மருமகளாக வரும் பெய்ஜ் ஹென்டர்சன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். விவேக்கின் அன்பை பெற அவர் ஆசைப்படுவதும் முதலில் விவேக் அவரை உதாசீனப் படுத்துவதும் பின்பு சார்லியின் அறிவுரையின் பேரில் விவேக் மாறி அன்பை செலுத்த ஆரம்பிக்கத் தொடங்கும் போது வேறு பல நிகழ்வுகளால் உண்டாகும் உணர்ச்சிகளை அவர் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க வாழ் இந்தியர்களே இந்தப் படத்தை எடுத்திருப்பதால் அமெரிக்க வாழ்க்கை பற்றிய தவறான சித்தரிப்பு இல்லாமலும் செயற்கைத் தனம் இல்லாமலும் உள்ளது. ஒளிப்பதிவாளர் ஜெரால்ட் பீட்டர் கண்ணுக்கு விருந்தாக சியாட்டில் நகரத்தை படமாக்கியிருக்கிறார். பாடல்கள் பின்னணியில் ஒலிக்கின்றன. அதில் பொற்றாமரை பாடலில் எஸ்பிபி குரல் தேவ கானமாக ஒலிக்கிறது. பின்னணி இசை த்ரில்லர் படத்துக்கு சரியானதாக உள்ளது. இசை அமைத்திருப்பவர் ராம்கோபால் க்ரிஷ்ணராஜூ.

நல்ல முயற்சி. த்ரில்லர் படம். மெஸ்சேஜ் என்று தனியாக எதுவும் எந்தப் பாத்திரமும் உரைப்பதில்லை. ஆனால் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை பற்றி ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படும் இப்படத்தைப் பார்க்கையில். பெற்றோராக படம் பார்ப்பவர் இருப்பின் குழந்தைகள் வளர்ப்பில் கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உறைக்கும்.

சூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்

 

திரைக்கதையில் 100/100 பெறுகிறது சூப்பர் டீலக்ஸ் திரைப்படம். திரைக்கதை நன்கு அமைந்தாலே பாதி கிணறு தாண்டிய நிலை தான். அதில் மேலும் தியாகராஜன் குமாரராஜா மாதிரி ஓர் இயக்குநர் அக்கதையை இயக்கும்போது நல்ல ஒரு வெற்றி படமாக அமைய வாய்ப்புகள் அதிகமாகிறது. ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு எட்டு வருடங்கள் கழித்து இப்படம் அவர் எழுதி இயக்கி வெளிவந்துள்ளது. நிச்சயமாக ஆரண்ய காண்டத்தைவிட பல அதிக பரிமாணங்களைக் கொண்டு எழுத்திலும் இயக்கத்திலும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது இப்படம். எழுத்தில் மிஷ்கின், நலன் குமாரசாமி. நீலன் கெ.சேகர் ஆகியோர் தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். வசனங்கள் அருமை!

நான்கு முக்கிய கதைகள, நிறைய கதாப்பாத்திரங்கள், சமூகத்திலுள்ளமிகவும் சங்கடமான பாலியல் சார்ந்த பிரச்சினைகள் இவை அனைத்தையும் சுவைபட நகைச்சுவை இழையோட திரைப்படமாக அமைத்துக் கொடுத்திருப்பது தியாகராஜா குமாரவேல் குழுமத்தின் வெற்றி. இந்தப் படம் அடல்ட்ஸ் ஒன்லி படம். ஆனாலும் எப்பவும் போல நம் மக்கள் குழந்தைகளுடன் தான் திரை அரங்கத்திற்கு வந்திருந்தனர். அதில் ஒரு குழந்தை படத்தின் நடுவில் சமந்தா திரையில் வரும்போது அம்மா இந்த அக்கா குட் கிர்லா பேட் கிர்லா என்று உரக்க கேட்டு திரையரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. நாயகன் படத்தின் நீங்க நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு இணையானது தான் இந்தக் கேள்வியும். ஏனெனில் இயக்குநர் கதாப்பாத்திரங்களை வெள்ளையும் கருப்பும் கலந்து நாம் வாழ்க்கையில் சந்திக்கும் உண்மை மனிதர்களை பிரதிபலிக்கும் வகையிலேயே படைத்திருப்பது தான்.

ஃபஹத் ஃபாசல் சமந்தா நடிப்பு மிகப் பிரமாதம். வஞ்சிக்கப்பட்ட கணவனாக அவர் புலம்பும் காட்சிகள் அருமை. அவர் பாத்திரத்துக்கான அவருடைய வசனங்கள் குறிப்பாக அரசியல் மற்றும் சமூகம் சார்ந்தவை அற்புதம். இயல்பாக நகைச்சுவை ததும்பியதாக உள்ளது. அதை அவர் வெளிப்படுத்தும் விதமும் அருமை. அவர்கள் கதையில் வரும் இதர துணைப்பத்திரங்கள் யதார்த்தமான சிரிப்பை வரவழைப்பவர்களாக  உள்ளனர். பாராட்டு வசனங்களுக்கு. முதல் பாதியில் திடுக் நிகழ்வுடன் தொடங்கும் இக்கதை பின் பாதியில் இழுவையாக மாறி விடுவதை குமாரராஜா தடுக்காதது அவரின் தோல்வி. முக்கியமாக சமந்தா பகத் பாசல் கதையில் சப் இன்ஸ்பெக்டர் பெர்லின் (பகவதி பெருமாள் பக்ஷ்) நுழைந்தவுடன் நடக்கும் மெலோடிராமா (வன்புணர்வு முயற்சி) நிறைய பழைய படங்களில் பார்த்தது. கோடி காண்பித்தாலே பார்ப்பவர்கள் புரிந்து கொள்வர். ஆனால் அதை மிகவும் கொடூரமாக காட்டிக் கொண்டே இருந்தது பார்வையாளர் பொறுமையை சோதிக்கிறது. அதுவும் அதற்கு முன் பெர்லின் விஜய் சேதுபதியை வேண்டிய அளவு படுத்தியதை பார்த்த பின் இதையும் அதிகமாக பார்க்க வைத்திருக்க வேண்டியதில்லை. மூன்று மணி நேரத்தை இந்தக் காட்சிகளை கத்திரித்தாலே நேரம் குறைந்திருக்கும்.

பொருளாதாரத்தில் கீழ் நிலையிலுள்ள விடலைப் பையன்கள் பகுதி அவர்கள் வயது பொறுப்பின்மை, ஆசை, கோபம், அவமானம், நம்பிக்கை தகர்தல் ஆகியவைகளை அவர்கள் எதிர்கொள்ளும்போது அவர்கள் நிலை என்ன என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டியுள்ளார். நான்கு பையன்களும் மிக மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். இக்கதையில் வரும் ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் பகுதியும் தினப்படி வாழ்வில் நாம்பார்க்காத ஒன்று ஆனால் ஆங்காங்கே நடந்துகொண்டிருப்பது தான். கணவன் சரியாக அமையாவிட்டால் மனைவி போகும் பாதை எப்படியாக இருக்கும் அதனால் பாதிப்படையும் பிள்ளைகள் நிலை அனைத்தும் நம் சமூகம் கண்டும் காணாமல் கடந்து செல்கிறது. பாதிப்படைபவர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் புரியும். இதில் ரம்யா கிருஷ்ணன் தன் மகனை காப்பாற்ற மருத்துவமனையில் பணத்துக்காக போராடும் காட்சியில் ஒரு தாயை மட்டுமே பார்க்க முடிகிறது, அவர் வாழ்க்கையை நடத்த அவர் தேர்ந்தெடுத்த வழியை அங்கே நாம் காண்பதில்லை.

விஜய் சேதுபதியின் மகனாக வரும் அஸ்வந்த் அசோக் குமார் எப்படி ஒரு இயக்குநர் சொல்லிக் கொடுத்தால் கூட இந்த மாதிரி நடித்திருக்க முடியும் என்று தெரியவில்லை! விஜய் சேதுபதிக்கு இந்தப் பையனின் முகபாவங்களை பார்த்தே நெகிழ்ந்திருப்பார் மகிழ்ந்திருப்பார் அவர் செய்ய வேண்டிய முகபாவங்கள் தானாக வந்திருக்கும், நடிக்கத் தேவையே இருந்திருக்காது. அந்த அளவு நிபந்தனையற்ற அன்பை வெளிக்காட்டும் ஒரு கதாப்பாத்திரமாக அவன் வருகிறான். அற்புதமான பாத்திரப் படைப்பு+நடிப்பு. அதே மாதிரி விஜய் சேதுபதி மனைவியாக வரும் காயத்திரியும் பாத்திரத்தை உணர்ந்து மிக அழகாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் கண்கள் உணர்சிகளை கொட்டுகின்றன. அவரின் நிலையை உணர்த்துகிறது அவர் பேசும் வசனங்கள். அந்தப் பகுதியை எழுதியவருக்கு பாராட்டுகள்.

யுவனின் பின்னணி இசை மிக நன்றாக உள்ளது. அவர் அப்பா பாதி படத்துக்கு இசை அமைத்திருந்தாலும் எங்கெங்கு எந்தெந்த பாடல்களை சேர்த்தால் படத்துக்கு சரியாக வரும் என்ற முடிவை சரியாக எடுத்திருக்கிறார் யுவன். இசை இருப்பதே தெரியாமல் இருக்கும் படம் இது. மிக மிக நல்ல இசையமைப்பு! பல வருடங்களுக்குப் பிறகு யுவன் ஜொலிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை பாத்திரத்தை எடுத்து நடித்ததற்கும் சமந்தா “நல்ல பெண்” என்று நாம் முத்திரை குத்தும் பாத்திரமல்லாத பாத்திரத்தைத் துணிந்து எடுத்து நடித்ததற்கும் பாராட்டுகள். முன்பெல்லாம் திருமணம் முடிந்த பிறகு கதாநாயகிகளுக்கு சினிமா கெரியர் முடிந்துவிடும். பிறகு தான் நாயகியாக நடித்த ஹீரோவுக்கே அம்மாவாக நடிப்பார். சமந்தா அந்த நிலையை உடைத்தெறிந்து பாலிவுட், ஹாலிவுட்டில் இருப்பது போல் திருமணத்திற்கு பிறகும் சர்ச்சைக்குரிய பாத்திரத்தைத் துணிந்து ஏற்று நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்குத் திருநங்கை பாத்திரம் anti hero பாத்திரம், கொஞ்சம் கூட கோபத்தை வீராவேசமாக கட்டமுடியாது. எல்லாராலும் ஏளனப்படுத்தப்படும் அருவருப்பாக பார்க்க வைக்கும் பாத்திரம். அதை துணிந்து செய்ததற்கு பாராட்டுகள். கோபத்தை காட்ட முடியாத தன் அவல நிலையிலும் சாபம் விட்டு தன் கோபத்தை வெளிக்காட்டும் இடம் அற்புதம். (இறுதியில் அந்த சாபம் பலிப்பது நல்ல directorial touch 🙂 )

இந்தப் படத்தில் பாத்திரத்தில் சரியாக ஒட்டாத நடிகர் என்றால் அது பக்ஷ் தான். ரொம்பக் கொடூரமாக சித்தரிக்கப்பட்டிருக்கார் ஆனால் அவர் நடிப்பு அவ்வளவாக நம்மை ஈர்க்கவில்லை, வெறுக்கப்பட வேண்டிய பாத்திரம் எரிச்சல் பட வைக்கிறது. தவறு கண்டிப்பாக இயக்குனருடையது தான். சவமாக கதை முழுதும் பயணிக்கும் பாத்திரம் பற்றி சொல்லாமல் இருக்கக் கூடாது. அவரின் நடிப்பு மகளிர் மட்டும் நாகேஷின் நடிப்புக்கு இணையானது அல்ல என்றாலும் கதையின் திருப்பத்திற்கு, சைலன்ட் கவுன்சலராக சமந்தா பகத் பாசல் மணவாழ்க்கை பிரச்சினைகளுக்கு அந்த டெட் பாடியை பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

ஒரு பெரிய குழப்பம் கதை நடக்கும் கால கட்டம்! எந்தக் காலகட்டத்தில் கதை நடக்கிறது என்று சரியாக புரியவில்லை. செல்போனில் ஒரு பாத்திரம் படம் பிடிக்கிறது. அதனால் இப்பொழுது நடக்கும் கதை என்று எடுத்துக் கொள்ளலாம். சுனாமி ரெபரன்ஸ் நிறைய வருகிறது. சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது சுனாமி நடந்து பத்து வருடத்திற்குள் நடக்கும் கதை போல் உள்ளது. ஆனால் டிமாநிடைசேஷனும் வருகிறது. அப்போ சமீபத்திய காலகட்டம் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் ஒருகதையில் விடலைப் பையன்கள் பலான படம் பார்க்க ஒரு ஷேடி சிடி கடைக்குப் போய் பெற்றோர்கள் இல்லாத போது டெக்கில் படம் பார்ப்பதாக வருகிறது. இந்தக் காலத்தில் ஏன் இந்த வழி? செல்போனில் எல்லாமே பார்க்க முடியும். இணையத்தில் எல்லாமே கொட்டிக் கிடக்கிறது. அடுத்து ஒரு பழைய திரையரகத்திற்கும் இந்த மாதிரி படம் பார்க்க செல்கிறார்கள். அவ்வளவு மெனக்கெடனுமா இப்போ என்று தோன்றுகிறது. டிக் டோக்கிலேயே இப்போ ஆல்மோஸ்ட் எல்லாம் வந்துவிடுகிறதே. கொஞ்சம் சொதப்பல் தான் அந்தப் பகுதியில்! பின்னணி இசையில் இளையராஜா பாடல்கள் நிறைய சேர்க்கப்பட்டு படத்தைப் பார்க்கும்போதே ஒரு போதை ஏற்படுகிறது. ஆனால் அதிலும் காலக்கட்ட கணிப்பில் ஒரு சிக்கல், பொதுவாக எண்பதுகள் தொன்னூறுகள் காலக் கட்டத்தை  காட்ட தான் ராஜா பாடல்கள் பின்னணியில் ஒலிக்கும்.

எந்த ஊரில் நடக்கிறது என்றும் புரியவில்லை. சென்னையா புறநகர் பகுதியா? விஜய் சேதுபதி மகனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்லும் வழி எதோ மும்பையின் கச்சடா பகுதி மாதிரி உள்ளது, அவர் வீடோ செட்டிநாட்டு வீடு மாதிரி இருக்கு. நகர சாயலே இல்லை பல இடங்களில் அதாவது மருத்துவமனை, காவல் நிலையம் முதலிய இடங்களில். இப்பொழுது நடக்கும் கதை என்றால் காவல் நிலையம் மருத்துவமனை கட்டடங்கள் மிகவும் நன்றாக இருக்கவேண்டும். எல்லாம் பாடாவதியாக உள்ளன.

உணர்ச்சிகளைப் பற்றிய படம் தான் என்றாலும் உணர்ச்சி வசப்பட்டு நாம் படத்துடன் ரொம்ப ஒன்ற முடிவதில்லை. ஏனென்றால் நேரியலாக கதை சொல்லப்படவில்லை. நான்கு காதைகள் கத்திரித்து கத்திரித்து நம் முன் வைக்கப்படுவது காரணமாகிறது. நேரக்கோடும் ஒரு பிரச்சினை. அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் காலையில் தொடங்கி இரவில் முடிகிறது. அதில் சில சந்திப்புகள் உதாரணத்துக்கு ஒரு கதையில் இருக்கும் மிஷ்கின்னும் இன்னொரு கதையில் இருக்கும் விஜய் சேதுபதியும் சந்திப்பது எந்த நேரத்தில் என்று புரியவில்லை. ஆனாலும் படத்தை நேர்த்தியாக படத் தொகுப்பாளர் சத்தியராஜ் நடராஜன் தொகுத்தளித்திருக்கிறார். இந்தப் படத்தை தொகுப்பது எளிதன்று. ஒளிப்பதிவாளர்கள் நிரவ் ஷா, பி.எஸ்.வினோத் கதாப்பாத்திரங்களுடன் பயணித்திருக்கிறார்கள். படத்தின் வண்ணம் மூலம் படத்தின் மனநிலையை பிரதிபலிக்க வைத்திருக்கிறார்கள். குறுகலான தெருக்களில், சின்ன சின்ன வீடுகள் குடியிருப்புகளில் தான் கதைகள் நடக்கின்றன. அந்த இறுக்கமான இடச் சூழலை பார்ப்பவரும் உணரும் வண்ணம் ஒளிப்பதவு செய்திருப்பது அவர்களின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒளிப்பதிவாளர்களும் ஜாம்பவான்கள் தானே!

பாலியல் சார்ந்த காட்சிகள், வசனங்கள் வெளிப்படையாக உள்ளன. பொதுவாக நாம் எதெல்லாம் சமூகத்தில் தவறு என்று சொல்லுவோமோ அதை செய்பவர்கள் தான் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரங்கள். அதை செய்பவர்களும் சமந்தாவாகட்டும் ரம்யா கிருஷ்ணன் ஆகட்டும் விஜய் சேதுபதி ஆகட்டும் அதை தவறாக நினைக்காமல் இயல்பு அல்லது செய்ய வண்டிய நிர்பந்தம் அதனால் தவறில்லை அல்லது வேறு வழியில்லை என்கிற தொனியில் குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்கிறார்கள். சப் இன்ஸ்பெக்டர் பக்ஷ் செய்யும் அட்டுழியங்களும் காவல் துறையில் நடப்பவை என்பதாக உள்ளது.

குழப்பத்தில் அமைதி மாதிரியான நிலையை இந்தப் படத்தில் உணரலாம். இந்தப் படத்தை காட்சிக்குக் காட்சி ஆராய்ந்து பல பொழிப்புரைகள் கண்டிப்பாக வரும். எனக்கே மறுமுறை பார்த்து விரிவாக எழுத ஆர்வம் உள்ளது. அந்த அளவு இந்தப் படம் பன்முகங்களை கொண்டுள்ளது. மிக மிக விரிவாக திட்டமிட்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. பல நுணுக்கமான விஷயங்களை கொண்டுள்ளது. இறுதியில் sci-fi எல்லாம் வருவது வேற லெவல்! சொல்லப்படும் விஷயம் நல்லதா கெட்டதா என்று விவாதிக்கலாம். ஆனால் அந்த விவாதத்தை ஏற்படுத்த முனைந்திருப்பது தான் இயக்குநரின் குறிக்கோளுமாக இருக்கும் என்று நினைக்கிறேன். வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம்.

 

 

தேவ் – திரை விமர்சனம்

சில படங்கள் எல்லாம் எதுக்கு எடுக்கறாங்கன்னே புரிவதில்லை. தயாரிப்பாளரிடம் பணம் கொட்டிக் கிடந்தால் தான தர்மமோ அல்லது கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு ஏதாவது உதவித் தொகையோ கொடுத்து மகிழலாம். இப்படி படம் எடுத்து படுத்த வேண்டாம். கார்த்தியும் தன் பட பட்டியலில் இன்னொரு படம் சேர்த்தாகிவிட்டது என்று எண்ணிக்கைக்காக இந்தப் படத்தை செய்தாரா என்றும் புரியவில்லை. காதலர் தினத்துக்கு ஒரு காதல் கதை வைத்தத் திரைப்படத்தை வெளியிடனும்னு முயற்சி செஞ்சிருக்காங்க. முயற்சி மட்டும் தான். கார்த்தியின் மற்றைய கமர்ஷியல் படங்களைவிட கொஞ்சம் கம்மி தான் இந்தப் படம். புதுமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் 2 மணி நாற்பது நிமிடங்களுக்கு நல்லா இழுத்து வெச்சு அறுக்கிறார்.

கார்த்தி, ஆர்.ஜெ. விக்னேஷ், அமுதா ஸ்ரீநிவாசன் மூன்று நண்பர்களும் பணத்துக்குக் கவலை இல்லாத இருபத்தி எட்டு வயது இளைஞர்கள். யுக்ரேயினில் போய் மேல் படிப்புப் படித்து திரும்பி வருகின்றனர். இதில் கார்த்தியின் அப்பா பிரகாஷ் ராஜ் பெரும் பணக்காரர் என்று தெரிகிறது. பணத்தைப் பற்றி கவலை இல்லாததால் கார்த்திக்கு அட்வென்சரில் மோகம் அதிகம், அதனை செய்வதே வாழ்க்கை என்று இருக்கிறார். ஆனால் அதை வசனத்தில் மட்டும் சொன்னால் சாகசம் புரிவதில் ஆர்வம் உள்ளவர் என்று எப்படி புரிந்து கொள்வது? இது நாவல் அல்லவே, திரைப்படம்!முதல் பாதி முழுக்க சவசவ என்று போகிறது. நாயகி ரகுல் பரீத் சிங் 25 வயதில் பெரிய பிசினஸ் மேக்னெட், அமேரிக்கா வாழ் பெண்மணி. அட்வெஞ்சருக்காக அவரை லவ் பண்ண தூண்டுகின்றனர் நண்பர்கள் இருவரும். அதனால் கார்த்தியும் அவருக்கு பேஸ்புக்கில் ப்ரென்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து ஒப்புதலுக்குக் காத்து நிற்கிறார். ஆனால் ஒப்புதல் வரவில்லை. அதற்குப் பதில் ரகுல் ப்ரீத்தே பிசினஸ் விஷயமாக சென்னை வந்துவிடுகிறார். பின் இவர் அவரை பாலோ செய்து இத்யாதி இத்யாதி. அவர் அம்மா ரம்யா கிருஷ்ணன். பாவம் பிரகாஷ் ராஜும் சரி ரம்யா கிருஷ்ணனும் சரி ரொம்ப சாதாரண பாத்திரங்களில் வந்து போகின்றனர் . அனால் அவர்கள் அனுபவம் அந்த உப்பு சப்பில்லாத பாத்திரங்களையும் நன்றாக செய்ய வைத்திருக்கிறது.

எல்லாருமே நம் அனுபவத்தினால் ஏற்பட்ட விருப்பு வெறுப்புக்களுடன் தான் வளைய வருகிறோம். ரகுல் ப்ரீத்திற்கு தன் அப்பா தன் அம்மாவை கைவிட்ட கோபத்தினால் ஆண்கள் மேல் நம்பிக்கையின்மையும் வெறுப்பும் உள் மனத்தில் ஆழ பதிந்து விடுகிறது. கார்த்திக்கு அம்மா இறந்துவிட்டதால் நிபந்தையற்ற அன்பைப் பொழியும் அப்பாவால் வளர்க்கப்பட்டு சூப்பர் ஆணாக உள்ளார். இருவருக்கும் காதல் உண்டான பிறகு கார்த்தி எப்பொழுதும் ரகுலை கைவிட மாட்டேன் என்று அழுத்தி நம்பும்படி தெளிவாக சொன்ன பிறகு ரகுல் முழுதாக கார்த்தியை நம்பத் தொடங்குகிறார். ஆனாலும் அவர்கள் காதலில் பிரிவு ஏற்படுகிறது. ரகுலுக்கு கார்த்தி தன்னோடு மட்டுமே ஜாலியா வேலையில்லா பட்டதாரியாக  இருக்க வேண்டும், அப்பா தொழிலை எல்லாம் பார்க்கக்கூடாது, அப்படி பார்த்தால் தன் மேல் அவர் செலுத்தும் கவனம் போய்விடும் என்று கோபப்பட்டு பிரிந்து விடுகிறார். இறுதியில் உன்னதமான காதலின் ஆழத்தால் இருவரும் ஒன்றாக இணைகிறார்கள்.

இதில் முதல் காட்சியும் கடைசி காட்சிகளும் கார்த்தி எவரெஸ்ட் சிகரத்தைத் தொட இமய மலை ஏறுவதாக காட்டப்படுகிறது. எவரெஸ்ட் மலை, இமய மலை எல்லாமே CG தான். நாம் நம் பிள்ளைகளுக்குப் பள்ளி ப்ராஜெக்டுக்குப் பனி மலை செய்து கொடுப்போம். பல இடங்களில் மலை சிகரமும் பனி வெளியும் கிட்டத் தட்ட அந்த மாதிரி காட்சிகளாக உள்ளன. சூப்பர் இயக்குநர் சார்!

பொதுவாக காதல் கதைகளுக்குப் பாடல்கள் பலமாக இருக்க வேண்டும். ஹேரிஸ் ஜெயராஜ் அருமையாக சொதப்பியிருக்கிறார். ஒரு பாடல் கூட நினைவில் இல்லை. இந்தக் கதையில் லாஜிக் தவறுகள் எல்லாம் குறிப்பிட வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனாலும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.சென்னையில் இருந்து மும்பய்க்கு காதலியை பார்க்க கார்த்தி பைக்கில் ஓர் இரவில் போய் சேருகிறார். அப்பொழுது ஒரு வசனத்தில் 22மணி நேரத்தில் வந்துவிட்டேன் என்பார். ஓர் இரவு 12 மணி நேரம் தானே? அவர்கல் இருவரும் திரும்ப சென்னை போகும் போது 36 மணி நேரமாகும். ஆன்வேர்ட் பயணத்தில் பயணித்து இருக்கவேண்டிய அந்த 10 மணி நேரத்தை ரிடர்ன் பயணத்தில் சேர்த்து விடுகிறார் போலிருக்கிறது.

படத்தின் கடைசி அரை மணி நேரம் தான் ரொம்ப சோதிக்கிறது. கார்த்திக்கு நல்ல டேலன்ட் இருக்கிறது, அழகு, உடலமைப்பு அனைத்தும் நன்றாக உள்ளன. நன்றாகவும் நடிக்கிறார். ஏன் இந்த மாதிரி பாத்திரங்களை தேர்வு செய்கிறார் என்று புரியவில்லை. சரி நகைச்சுவையாவது இருக்கா என்றால் அதுவும் சுத்தம்! இதில் இவர் நண்பர் பாத்திரமே ஸ்டேன்ட் அப் காமெடியன்! ஸ்டன்ட் காட்சிகள் எல்லாம் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்கின்றன, இவர் மாஸ் ஹீரோ அல்லவா?

வெளிநாட்டு படப்பிடிப்பில் இயற்கைக் காட்சிகள் அருமைபடத்தில் கார்த்தி ரொம்ப ட்ரிம்மாக உள்ளார். அவரின் உடைகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் நன்றாக நடித்துள்ளார். அவருக்கு இயல்பாகவே செயற்கைத் தனம் இல்லாத நடிப்புத் தன்மை உண்டு. அது தான் அவரின் பலம். நாம் அதை நம்பி தான் அவர் படத்துக்குப் போகிறோம். இப்படி படத்தில் கதையே இல்லாமல் ஏமாற்றினால் எப்படி நம்பி அடுத்து வரும் அவர் பாடத்துக்குப் போவது?

 

 

 

பேரன்பு – திரை விமர்சனம்

தங்க மீன்கள் படத்துக்குப் பிறகு அடுத்த லெவலில் படம் தந்துள்ளார் ராம். தங்க மீன்கள் சாதனா தான் இதிலும் மாற்றுத் திறனாளியாக ஸ்பாஸ்டிக் குழந்தையாக நடித்துள்ளார். அந்தக் குழந்தையை பதின்ம பருவத்தில் தன் பொறுப்பில் தனியாக வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் அப்பாவான மம்முட்டி. இந்த மாதிரி கதையை படமாக்க நிறைய நிறைய ஹோம்வர்க் செய்ய வேண்டும். அதை செவ்வனே செய்திருக்கிறார் ராம். ஒரு நல்ல சமூக கருத்தை திரைக்கதை வடிவாக நம் முன் வைக்க சினிமா எனும் ஊடகத்தின் மேல் passion இருக்க வேண்டும். அதுவே ராமின் வெற்றி.

நிறைய சம்பவங்கள் நிறைந்த திரைக்கதை. பத்து அத்தியாயங்கலில் விவரிக்கிறார், விவரிப்பது மம்முட்டி. படத்தின் பெரும்பகுதி திக் திக்கென்றே இருந்தது. ஏனென்றால் பதின்ம வயதுப் பெண்ணை (பாப்பா) தனியாக பாதுகாக்கிறார் (அமுதவன்) மம்முட்டி. பாப்பா தனியாக பல சமயங்களில் இருக்க வேண்டிய சூழல், நம் ஆண்களின் போக்கும் நமக்கு தெரிந்ததே. ஒவ்வொரு சூழலிலும் அவள் பேராபத்தில் விழாமல் இருக்க வேண்டுமே என்று பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் படம் பேரன்பு.

படத்துவக்கம் மகள் அப்பாவிடம் திணிக்கப் படுவதுடன் ஆரம்பிக்கிறது. அம்மா குடும்ப அழுத்தம் தாளாமல் வேறொருவருடன் போய்விடுகிறார். அதற்கு மம்முட்டியும் ஒரு காரணம். 12 வயது வரை பெண்ணைப் பற்றிய பொறுப்பில்லாமல் இருந்ததற்கு தனி ஒரு ஆளாக திடீரென்று மகளை பேணி காக்க வேண்டிய நிர்பந்தம். ஆனாலும் மகள் தந்தை பாசம் மெதுவாக ஆரம்பித்து அழுத்தமாக வளர்ந்து எவ்வளவோ சிரமத்திலும் மகளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள அவர் செய்யும் செயல்கள் ஒன்பது அத்தியாயங்களில் விரிகிறது. அவை புது யுகத்தவையும் கூட.

படத்தில் மிகவும் பிடித்தது அமைதியாக செல்லும் திரைக் கதை தான். அதுவும் முதல் பாதி எதோ ஒரு மலைப் பிரதேசத்தில் யாரும் இல்லாத அத்துவான காட்டில் அமைந்த அழகிய வீடும், நதியும், பரிசலும் கவிதையாக உள்ளது. ஆனால் கவிதை சோகம் இழையோடியது, மிகவும் சிக்கலான ஒரு செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணை சுற்றிய கதை என்பதால். அவள் வயதுக்கு வருவதும், திகைத்துத் தடுமாறிய தந்தை, ஆனால் அடுத்து செய்ய வேண்டியவற்றுக்கு உதவி தேடி அழைத்து வந்து, இன்னொரு சமயத்தில் அவளே தான் ஒரு பெண் என்பதை உணர்ந்து அப்பாவிடம் சேனிடரி பேட் மாற்றிக் கொள்ள தயங்கி தன்னாலும் செய்து கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு, ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி பெற வைத்து என்று இதுவரை சினிமாவில் கையாளப்படாத சென்சிடிவ் ஆன விஷயங்களை நாகரீகமாக சொல்லி இயக்கியுள்ளார் ராம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் மம்முட்டி. பல சமயங்களில் ஒரு நடிகரை அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டார் என்று சொல்லுவோம். இதில் நான் மம்முட்டியை பார்க்கவே இல்லை. பாப்பாவின் அப்பா மட்டுமே என் கண்ணுக்குத் தெரிந்தார்.

அமைதியான மலைப் பிரதேசத்தில் இருந்து ஏமாற்றப்பட்டு கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த நிலையில் இருந்த மகளுடன் மம்முட்டி வேலைத் தேடி நகரத்துக்கு வந்து அங்கு சீப்பான விடுதிகளில் தங்கும் நிலைமையிலும், அடுத்தடுத்து காப்பகம், நண்பர் என்று உதவி கேட்டு தடுமாறி, ஓடிப்போன மனைவியின் வீட்டுக்கே சென்று மகளை அவர் பார்த்துக் கொள்ள மாட்டாரா என்று பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகி கடைசியில் என்ன மாதிரி முடிகிறது கதை என்பதை கண்டிப்பாக வெள்ளித் திரையில் காணவேண்டும். அற்புதமாக கோர்வையாக கதையை நகர்த்தி செல்கிறார் இயக்குநர். அருமையான வசனங்கள்.

அஞ்சலியின் பத்திரம் சிறிதே எனினும் மனத்தில் நிற்கிறார். அஞ்சலி அமீர் என்னும் திருநங்கையும் கதைக்கு நல்ல திருப்பம், நல்ல மெஸ்சேஜ். யுவன் சங்கர் ராஜாவின் இசை மிக நன்று. முக்கியமாக பின்னணி இசை தான். பாடல்கள் மனத்தில் நிற்கவில்லை. அனால் இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தால் இப்படம் ஓர் உன்னத காவியமாகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீகர் பிராசாத்தின் படத்தொகுப்பு அற்புதம். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு அதைவிட அருமை.

மிகவும் கடினமான கதை. இந்த மாதிரி மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஓர் அப்பாவாக மம்முட்டி படும் வேதனை பல இடங்களில் நம்மை அழ வைக்கிறது. செரிபரல் பால்சி வந்த பெண்ணாக சாதனா எப்படி தான் நடித்தாரோ தெரியவில்லை. மிக மிக கடினமான உழைப்பு. ராம், மம்முட்டி, சாதனா அனைவருக்குமே விருது கிடைக்கவேண்டிய அளவு உழைப்பு உள்ளது.

பல சமயங்களில் மிக மெதுவாக செல்லும் திரைக்கதை படத்தின் பலவீனம். அவ்விடங்களில் தான் இது ஒரு ஆர்ட் பில்ம் என்று எண்ண வைக்கிறது. கதையே இல்லாமல் வரும் படங்களின் நடுவே நெகிழவைக்கும் கதையுடன் ஒரு நல்ல படம் இது.

பேட்ட – திரை விமர்சனம்

முழுக்க முழுக்க ரஜினி படம். அவருடைய கலக்கல் ஸ்டைல், வசன டெலிவரி, அசால்டா சண்டை காட்சிகளில் எதிரிகளை பந்தாடுவது, சின்ன நடன அசைவிலேயே ரசிகர்களின் மனத்தைக் கொள்ளைக் கொள்வது என்று அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கிறது. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் படம் என்று பெரிய எதிர்ப்பார்ப்போடு போனால் கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சும். சில வருடங்களாக ரஜினி படங்களின் தன்மையை ஒப்பிட்டுப் பார்த்தால் கே.எஸ்.ரவிகுமாரின் லிங்கா ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். அதன் பின் கபாலி, காலா என்று இரண்டு படங்கள் சமூக கருத்துகளை முன் வைத்து சாதி பாகுபாடு பற்றிய கதைகளாக அவரை வேற லெவலுக்கு அழைத்துச் சென்றது. 2.0 எந்திரனின் தொடர், பிரம்மாணடம் அதிகம் என்பதைத் தவிர வேறு வித்தியாசம் இல்லை. அதனால் கார்த்திக் சுப்புராஜ் கதை அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு என்னும்போது அவரின் பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி மாதிரி நல்ல திரைக் கதை, ஒரு ஜனரஞ்சகமான படம் என்கிற எதிர்ப்பார்ப்பு சினிமா ரசிகனுக்கு இருப்பது இயல்பே. ஆனால் மாஸ் காட்ட முனைந்ததில் கதைக்கு அவ்வளவு அழுத்தம் தராமல் அதில் கோட்டை விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.

திரும்பத் திரும்ப காதலுக்காக தோழன் உதவி செய்வது அதில் ஏற்படும் பகை, வெட்டுப் பழி, குத்துப் பழி, கொலை, இதே தான் இன்னும் கதைக்களமாக இன்றைய இளைய இயக்குநர்களும் எடுத்துக் கொள்வது கதைக்குப் பஞ்சமா அல்லது அவர்களின் மனோ நிலை தான் வளரவில்லையா என்று எண்ணத் தோன்றுகிறது.

எளிதாக போய் படம் பிடிக்க வேண்டும் என்று வட இந்தியாவை தேர்ந்தெடுத்து அங்குள்ள கல்லூரி வளாகத்தில் படம் பிடித்திருக்கிறார்கள். அந்தக் கல்லூரி எங்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்று குத்துமதிப்பாக சொல்லியிருக்கலாம், சொல்லவில்லை. குன்னூர், ஊட்டி, கொடைக்கானல் மாதிரி நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை. மணி ரத்னம் இரண்டு மொழியில் படங்கள் எடுக்கும் போது இப்படி தான் ஒரு வட இந்திய நிலத்தில் படம் எடுத்து தமிழ் படத்துக்குப் பொருந்தாமல் நேடிவிடி இல்லாமல் தனியா நிற்கும். அதே தவறை தமிழில் மட்டும் எடுத்தப் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் ஏன் செய்தார் என்று தெரியவில்லை. (இல்லை இது இந்தியிலும் வெளிவந்துள்ளதா?)அந்தக் கல்லூரி வார்டன் காளியாக வருகிறார் ரஜினி. கெட்டப் பய சார் இந்தக் காளி என்று வசனம் சொல்லாமல் செயலில் காட்டுகிறார்!

சிம்ரன் அறிமுகம் எல்லாம் நன்றாக இருக்கிறது. அவர் பிரானிக் ஹீலர். இப்போ தான் சமீபத்தில் ஆரா பற்றிய சர்ச்சை 2.0 படத்திற்காக சமூக வலைத்தளத்தில் ஓடியது. இந்தப் படத்திலும் ஒரு காட்சியில் ரஜினியின் ஆராவை பரிசோதித்து சிம்ரன் அவர் மனத்தில் கோபம், பகை, சோகம் வன்மம் எல்லாம் உள்ளதாகத் தெரிவிக்கிறார். சிம்ரன் த்ரிஷா இருவருக்கும் மிக சிறிய பாத்திரம். உண்மையில் ரஜினி தவிர அனைத்து முக்கிய பாத்திரங்களுமே சிறிய பாத்திரங்கள் தான். பாபி சிம்ஹா, சசிகுமார், விஜய்சேதுபதி எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக நவாசுதின் சித்திக் ஸ்பெஷல் மென்ஷன் பெறுகிறார், அருமையான நடிப்பு! ஆனால் இது ரஜினி படம் தான், மற்றவர்கள் துணை நடிகர்களே.

ஹாஸ்டல் வார்டனாக ரஜினியுடன் முதல் பாதி வெகு நீளமாகப் போகிறது. கதை என்ன என்று பின் பாதியில் ப்ளாஷ் பேக்கில் தெரிய வந்து எஞ்சி இருக்கும் ஒரு வில்லனையும் ஒழித்துக் கட்டுவது தான் மீதிக் கதை. மணல் கொள்ளைக்கு எதிராக ஒரு கிராமத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினை. அதில் மணல் கொள்ளைக்கு எதிராக இருப்பவர்களில் ஒருவராக முஸ்லிம் இளைஞராக சசிகுமார் (மாலிக்). மணல் கொள்ளை செய்யும் குடும்பப் பெண்ணுடன் (பூங்கொடி) அவருக்குக் காதல், வரம்பு மீறி அந்தப் பெண்ணும் கர்பம். அவர்கள் இந்துகள். பேட்டயின் (பேட்ட வேலு அவரே தான் காளியும்) வளர்ப்புத் தந்தையின் மகன் தான் சசிகுமார். பேட்ட அந்த கிராமத்தில் பெரிய தாதா. அவர் தான் மணல் கொள்ளையர்களை வீடியோ ஆதாரத்துடன் பிடித்து போலிசில் ஒப்படைக்கும் அளவு நல்ல வலிமை வாய்ந்தவர். அவர் முனைப்பால் சசிகுமாருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் எப்படி அந்தக் குடும்பப் பகை பலரை காவு வாங்குகிறது, ரஜினியின் வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகள் அப்படி இருந்தும் அவர் சசிகுமாரின் மனைவிக்கு உதவி அவர் மகனை ஆளாக்க உதவியும் செய்து பாதுகாக்கவும் முனைகிறார். மிச்சத்தை வெள்ளித் திரையில் காண்க. நிறைய திருப்பங்கள் கடைசியில் இருக்கு ஆனா படத்தின் நீளமும் ஆயாசத்தைத் தருகிறது.

ஒரு கிராமத்தில் இந்துப் பெண் இஸ்லாமிய பையனை காதலித்துத் திருமணத்திற்கு முன் கர்பமாவது பெரிய சண்டைக்கான விஷயமாக தான் பார்க்கப்படும். அதை ரொம்ப சகஜமாக எடுத்துக் கொண்டு ரஜினி பாத்திரமும் சம்பந்தப்பட்ட மாலிக்கும் பூங்கொடியும் மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பார்ப்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம். முறைகேடான உறவுகளை முடிந்தவரை நியாயப் படுத்தாமலும் மாற்று மத காதல்களை கதைக்காக எடுத்துக் கொண்டு அதை சேர்த்து வைப்பதும் பின்னால் விழும் இழவுகளை வைத்து பகையை வளர வீட்டு கதையை நகர்த்துவதும் என்ன மாதிரி மெஸ்சேஜை கார்த்திக் சுப்புராஜ் சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. அதே போல படத்துக்குத் திருப்புமுனையாக அமையும் காதலர் தின சம்பவமும் தமிழ்நாட்டில் நடப்பது கிடையாது. கர்நாடகாவில் கேள்விப்பட்டிருக்கோம் மகாராஷ்ட்ராவில் உண்டு. தமிழுக்கு அந்நியமான சம்பவங்களைத் திணித்துக் கதையை முன்னேற செய்யும் அளவு கற்பனை வறட்சி பஞ்சம். பா.ரஞ்சித்தின் படங்களில் அவர் கொள்கைப் பிடிப்பை சொல்ல ரஜினி போன்ற பெரிய ஹீரோவைப் பயன்படுத்திக் கொண்டது நல்ல புத்திசாலித்தனம், பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால் இந்தப் படத்தில் புதுமையாக எதுவும் இல்லை. அதே சமயம் கேங்க்ஸ்டர் கதை என்று எடுத்துக் கொண்டாலும் பாஷா போன்ற விறுவிறுப்பும் இல்லை.

அனிருத் இசை, திருவின் ஒளிப்பதிவு, விவேக் ஹர்ஷனின் படத் தொகுப்பு அனைத்தும் படத்துக்குப் ப்ளஸ். எப்பவுமே ரஜினி கொஞ்சம் வில்லத்தனத்துடன் நடிக்கும் பாத்திரங்கள் செமையாக இருக்கும். இதிலும் அதனால் தான் அவர் நடிப்பு நன்றாக எடுபடுகிறது. அதற்காக கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். இது ரஜினி படம். அவர் ரசிகர்கள் பெரிதும் பார்த்து மகிழ்வார்கள். அது நிச்சயம் 🙂

விஸ்வாசம் – திரை விமர்சனம்

ஒன்றரை வருடத்துக்குப் பிறகு வரும் அஜித் படம். ஏக எதிர்ப்பார்ப்பு அவரின் ரசிகர்களுக்கு! ரசிகர்களை கட்டிப் போடும் மாஸ் ஹீரோக்கள் நல்ல அறிவுரையை தரும் படங்களை தருவது அந்த ரசிகர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். அந்த முறையில் இந்தப் படம் பாராட்டுக்குரியது. மற்றபடி முன் பாதி கதையமைப்பில் புதுமை இல்லை. பின்பாதி படத்தை காப்பாற்றுகிறது.

அஜித்துக்கு எப்பவுமே ஸ்டேஜ் ப்ரெசென்ஸ் அதிகம். அது இந்தப் படத்திலும் அவருக்கு அருமையாக கை கொடுக்கிறது. வந்து நின்றாலே களை கட்டுகிறது. நயன்தாரா அவரின் ஜோடி நல்ல பொருத்தம். பெரிய ரோல் அவருக்கும். பொருந்தி நடித்துள்ளார்.

சின்ன கிராமத்தில் பெரிய ஆளாக இருப்பவர் அஜித் குமார். அடிதடி காட்டி அசத்தல் மன்னனாக வருகிறார். மருத்துவ முகாமுக்கு வரும் மும்பைவாசி மருத்துவர் நயன்தாரா எப்படியோ அந்த வெள்ளந்தி உள்ளத்தால் கவரப்பட்டு அவர் மூன்றாம் கிளாஸ் பெயில், சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது, சண்டை போடுவது அவருக்கு ஹாபி என்று தெரிந்தும் காதலில் விழுந்து, அஜித் தான் அவருக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று சொல்லியும் அவரை முழு மனதோடு திருமணம் புரிகிறார். அதன் பின் ஒரு சின்ன விஷயத்துக்காக பிஞ்சு மகளோடு பிரிந்து மும்பைக்கே போய்விடுகிறார். அது பாத்திரத் தன்மையில் நெருடுகிறது. எப்பொழுதுமே ஒருவரின் நடிப்பு கதையமைப்பின் அம்சத்தை ஒட்டியே நன்றாகவோ சுமாராகவோ இருக்கும். இதில் நயன்தாராவின் பின் பாதியில் வரும் அவர் நடிப்பு சற்றே ஒட்டாத தன்மையுடன் இருப்பதற்குக் கதையில் உள்ள குறையே காரணம்.

அஜித்துக்கு முதலில் இருந்து கடைசி வரை ஒரே பாத்திரத் தன்மையோடு பிறழ்வு ஏதும் ஏற்படாத வகையில் கதையமைப்பு இருப்பதாலும் குடும்பப் பாத்திரங்களில் குடும்பத் தலைவராகவோ அல்லது ஒரு பெண்ணுக்குத் தந்தையாக வருவதோ அவருக்கு இயல்பாகவே சிறப்பாக வருவதாலும் படம் முழுவதுமே அவர் பங்களிப்பு மிகவும் அருமையாக உள்ளது. வேட்டியில் அம்சமாக இருப்பவர்கள் பொதுவில் மலையாள நடிகர்கள் தான். தமிழ் சினிமாவில் அஜித் என்று சொல்லலாம்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா இந்தப் படத்திலும் அவர் மகளாக நடிக்கிறார். பாத்திர வயதுக்குக் கொஞ்சம் அதிக வளர்ச்சியாக இருந்தாலும் சிறப்பான நடிப்பு. மகள் தந்தை உறவின் பாசம் இருவரிடமும் வெகு அழகாக வெளிப்படுகிறது. அந்தப் பகுதி மட்டும் அப்ழைய படத்தின் தொடர்ச்சிப் போல தோன்றுகிறது. பலவித உணர்சிகளை அனிகா காட்ட அவர் பாத்திரம் உதவுகிறது. குறைவின்றி செய்திருக்கிறார்.

இந்தப் படத்தை இரண்டு மணி நேரத்தில் முடித்திருக்கலாம். படம் இன்னும் நன்றாக வந்திருக்கும். இப்படத்தில் தேவையில்லாதவைகள – அட்லீஸ்ட் இரண்டு பாடல்கள், விவேக், கோவை சரளா பாத்திரங்கள, தம்பி ராமையாவும் அஜித்தும் காமெடி என்று நினைத்து செய்யும் சேட்டைகள்! அஜித்தும் நயன்தாராவும் காதலிக்கக் காட்டப்படும் திரைக் கதையும் பிரிய சொல்லப்படும் காரணங்களும் கொஞ்சம் புதுமையாகவும் நம்பத் தகுந்தபடியும் மாற்றியமைத்திருந்தால் படத்தின் பலம் கூடியிருக்கும். முதல் பாதி ரொம்ப அலுப்புத் தட்டுகிறது. ஆனால் பின் பாதியில் பிரிந்தவர்கள் சேரும் இடம் வெகு இயற்கையாக அமைவது ஆறுதல்.

ஸ்டன்ட் காட்சிகள் மிகவும் நன்றாக அமைக்கப்பட்டிருக்கு. அஜித் செய்யும் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாகவும் போரடிக்காமலும் உள்ளன. கிராமப்புறங்களை காட்டும்போது ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கிறது. படத்தின் பலம் ஒளிப்பதிவாளர் வெற்றி. திருவிழா காட்சிகளில் வண்ணங்கள் கூட்டி கண்களுக்கு விருந்து படைக்கிறார். அதேபோல ரூபனின் எடிட்டிங்க் பாடல்களிலும் சண்டைக்காட்சிகளிலும் அருமையாக தொகுத்துள்ளார். D.இமானின் இசையில் கண்ணான கண்ணே அருமை, பின்னணி இசை நன்று.

இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ் இது ஒரு குடும்பப் படம். குடும்ப வேல்யு சிஸ்டம் பற்றி நன்றாக சொல்கிறது. பெற்றோர் பிரிவதால் அவஸ்தைப் படுவது பிள்ளைகள் தாம். இப்பொழுது பல குடும்பங்களில் இதை நிறைய பார்க்க முடிகிறது. அதனை சரியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா. அம்மா தரும் அன்பும் அப்பா தரும் பாதுகாப்பும் ஒரு குழந்தைக்கு எல்லா வயதிலும் தேவை. அதே போல் அம்மாவிடம் சண்டைப் போட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேறியதே இல்லை என்பது போன்ற கருத்துகளை அஜித் சொல்வது அவர் படத்தை விரும்பிப் பார்க்கும் இளம் வயதினருக்கு ஒரு நல்ல படிப்பினையாக அமையும். வசனங்களில் நல்ல கவனம் செலுத்தியிருக்கிறார் சிவா. கண்களை ஈரமாக்கும் காட்சிகள் படத்தில் உள்ளன.

அஜித்துக்கு இது ஒரு நல்ல படம். ஆனால் அடுத்த முறை இன்னும் சிறப்பான கதையம்சத்தைத் தேர்ந்தெடுத்து இன்னும் சிறப்பான விருந்தை அவர் ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் அளிக்க வாழ்த்துவோம்!

2.0 – திரை விமர்சனம்

படம் ரிலீசுக்கும் முன் ரொம்ப ஹைப் இல்லாதது நல்லதே. நிறைய பேட்டிகள் வந்திருந்தால் கஜ கஜன்னு ஆகியிருக்கும். இப்போ கொஞ்சம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போக முடிந்தது. எந்திரனை விட மிக நல்ல தயாரிப்பு. 3D அசத்தலாக வந்துள்ளது. ஒலி தரம் அற்புதம். ஒளிப்பதிவு உலகத்தரத்துக்கும் மேல். ஷங்கர் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒரு படைப்பு இது.

ரஜனிகாந்த் முதல் பாகத்தில் வசீகரனாகவே வருகிறார். என்திரனிலியே வசீகரன் அவ்வளவாக ஈர்க்கவில்லை. சிட்டி தான் அனைவரையும் கவர்ந்தான். அதே மாதிரி வசீகரன் இந்தப் படத்திலும் முதல் பாகத்தில் பெரிய அழுத்தத்தைத் தரவில்லை. அதுவும் நமக்கு டீசரில் டிரெயிலரில் செல் போன் பறந்து போவதை பார்த்திருந்ததால் ஓரளவு கதை எப்படி தொடங்கும் என்றும் தெரிந்திருந்து அதில் பெரிய சஸ்பென்சும் இல்லை. இடைவேளைக்குப் பிறகு சிட்டி உயிர்பெற்றதோடு சிட்டியின் வில்லத்தனமும் உயிர்பெற்றதால் சுவாரசியம் கூடுகிறது. அதோடு எதிர்பாராத இன்னொரு ரோபோவும் திரைக்கு வருவதால் படம் சிறப்பாக முடிகிறது.

ரஜினி ஹீரோவை விட வில்லனாக ரொம்ப அருமையாக செய்கிறார். அது மிக இயல்பாகவும் ஒரு தனி ஸ்டைலோடும் அவருக்கு செய்ய வருகிறது. படத்தில் அக்ஷய் குமாரை வில்லனாக காட்டியிருந்தாலும் அவர் உண்மையிலேயே நல்லவராக இருந்து கெட்டவராக மாறுவதால் அவரை ரொம்ப வெறுக்க முடிவதில்லை. பரிதாபப்படவே முடிகிறது. இடைவேளைக்குப் பிறகு அவருக்கு ரஜினி உதவுவதாக கதையை அமைத்திருந்தால் கதை வலுப்பெற்றிருக்கும். ஆனால் ரஜினியின் வில்லத்தனமான சிரிப்பும், உடல் மொழியும் தியேட்டரில் அப்ளாஸ் பெறுகிறது. கடுமையாக உழைத்திருக்கிறார் ரஜினி. இந்தப் படம் நிச்சயமாக அவரை நடிகராக, ஒரு படத்தின் வெற்றிக்குப் பெரும் பங்களித்தவராக பேசப்படும்.  முதலில் இருந்து கடைசி வரை ரஜினி இயக்குநரின் நடிகராக வருகிறார். அந்தப் பாராட்டு ஷங்கருக்குப் போக வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் தான் அனைத்து நடிகர்களையும் திறம்பட நிர்வகித்து அவர்களின் சிறப்பான நடிப்பைப் பெற்றிருக்கிறார்.

எமி ஜேக்சன் அலட்டல் இல்லாமலும் ஆபாசம் இல்லாமலும் செய்திருக்கிறார். நன்றி சங்கர். அவரின் பாத்திரத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதும், அவருக்கும் சிட்டிக்கும் உடனான நட்பு/காதலும் நன்றாக உள்ளது. அக்ஷய் குமார் ரோபோவாக இல்லாத சாதாரண பாத்திரத்தில் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். வில்லனாக அவரின் அந்த பயங்கர தோற்றமும் அதற்கான மெனக்கெடலும்  நிச்சயமாக ஆஹா ஓஹோ ரகம் தான்!

அனைவரின் உடைகளும் மிக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருகின்றன. ஒவ்வொருவரின் தோற்றத்தை முடிவு பண்ண எவ்வளவு ஆய்வுகள், எவ்வளவு நேரம், உழைப்பு, பணச் செலவு தேவைப்பட்டதோ ஆனால் திரை வடிவம் அந்த உழைப்பும் செலவும் வீணாகப் போகவில்லை என்பதை பறைசாற்றுகிறது. ஒவ்வொரு பிரேமும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் சங்கர். மிக நல்ல கற்பனை வளமும் திட்டமிடலும் இல்லாவிட்டால் இந்த மாதிரி ஒரு படம் திரைக்கே வர முடியாது.

இந்தப் படத்தை கண்டிப்பாக நல்ல திரை அரங்கில் பார்க்க வேண்டியது அவசியம். ஒளி, ஒலி இரண்டும் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசூல் பூக்குட்டி ஒலி தரத்தை 3D படத்துக்கான அளவில் வேற லெவலில் மிக்ஸ் பண்ணி தந்திருக்கிறார். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும் அவுட் ஆப் தி வேர்ல்ட். ரஹ்மான் பாடல்களுக்கான இசையும் அவர் துணை இசை அமைப்பாளர் குதாப் ஈ கிருபாவுடன் ஒரு சைன்ஸ் பிக்ஷன் படத்துக்கான பின்னணி இசையையும் அருமையாக தந்திருக்கிறார்கள். பல இடங்களில் வெறும் இசைக்கு தான் வேலை. கிராபிக்ஸ் மிரட்டும் போது கூடவே இசையும் சேர்ந்து மிரட்டுகிறது. படத்தொகுப்பு என்டனி. மிகவும் சவாலாக இருந்திருக்கும் இந்த மாதிரி படத்தைத் தொகுக்க. 2மணி 20நிமிடத்துக்கு கத்தரித்து தந்ததற்கு அவருக்கு பாராட்டுகள்!

இவ்வளவு சிறப்புகள் இருந்தும் முக்கியமாக ஒரு திரைப் படத்துக்குத் தேவையான கதையில் பெரிய புதுமை இல்லை, ஏன் கதையில் நம்மால் ஒன்றகூட முடியவில்லை என்றே சொல்லலாம். வசனங்கள் கருத்து செறிவுடனோ கூர்மையாகவோ இல்லை. சில இடங்களில் நகைச்சுவை வசனங்கள் உள்ளன. ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் இல்லாதது பெருங்குறையே. நகைச்சுவை டிராக் என்று தனியாக இல்லை. ஆனால் ஆங்கில படங்கள் பல இம்மாதிரி கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆஷனுக்கும், சாகசத்துக்கும், சிஜிக்கும் முக்கியத்துவம் கொடுத்து சூப்பர் ஹீரோ படங்களும் சை ஃபை படங்களும் வருகின்றன. அவை ரசிகர்களால் பாராட்டு மழையில் நனைக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸ் ஹிட்களாகவும் இருக்கின்றன. அந்த மாதிரி ஒரு படம் தான் 2.0வும்.

மிக மிக அற்புதமான CG. அதுவும் அக்ஷய் குமாரும் சிட்டியும் ஒரு விளையாட்டு மைதானத்தில் சண்டை போடும் போது பிராமாதமாகவும் மிக மிக பிரம்மாண்டமாகவும் உள்ளது. சங்கர் நம் முன் வைக்கும் விஞ்ஞான கருத்துகளும், கதைக்களத்துக்கு ஏற்ற செட்களும் மிக மிக உண்மைத்தனத்துடன் இருப்பது படத்துக்கு மிகப் பெரிய ப்ளஸ். எதை செய்தாலும் நிறைய ஆராய்ச்சி செய்து ரசிகர்களுக்கு நேர்மையான படைப்பைத் தர விரும்பும் அவர் பண்பு பாராட்டுக்குரியது.

அவரின் எல்லா படத்திலேயும் ஒரு சமூக கருத்து இருக்கும். மக்கள் குற்றம் செய்து தண்டனை இல்லாமல் தப்பித்துக் கொள்வதை அவரால் ஒத்துக் கொள்ள முடிவதில்லை. இந்தியன், அந்நியன், என்று எல்லா படங்களிலும் தப்பு செய்தவன் தண்டனை அடையணும் என்பதை வலியுறுத்துவதாகவும், சுய ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இருக்கும். அதே போல சமூக அக்கறை மனிதனுக்குத் தேவை என்பதையும் வலியுறுத்தி அறிவியல்/தொழில்நுட்பம் நல்லதுக்கும் பயன்படுத்தலாம் வில்லங்கமாகவும் பயன்படுத்தலாம், எனவே அதை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டிய கடமையை சொல்கிறார்.

கதை இன்னும் சுவாரசியமாக இருந்திருந்தால் இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்துக்கு இன்னும் கிளாசாக அமைந்திருக்கும். அது ஒரு குறை தான். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும்போது படத்துக்கு ஆணிவேராக இருக்கும் கதைக்கு ஏன் முக்கியத்துவம் தர மறக்கிறார்கள்? அதுவும் இவ்வளவு அனுபவம் மிக்க இயக்குநர்!மற்றபடி கண்டிப்பாக திரையில் பார்த்து ரசிக்கவேண்டிய ஒரு படம். தமிழ் திரைத் துறையில் மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும் இத்திரைப்படம் பட வசூலில் வெற்றியைக் காண வாழ்த்துகிறேன்.

சர்கார் – திரை விமர்சனம்

என் உறவினர் ஒருவருக்கு அந்தக் காலத்தில் திருமண நிச்சயதார்த்தத்துக்குப் பிள்ளை வீட்டில் கட்டம் கட்டமா போட்ட பட்டுப் புடைவை வாங்கியிருந்தாங்க. ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு நிறம். என் அக்கா முறை உறவினருக்கு அந்தப் புடைவையைப் பார்த்து அழுகையே வந்துவிட்டது. அவ்வளவு மோசமாக இருந்தது புடைவை. என் பெரியம்மா ஏண்டி அழற உங்க மாமனார் மாமியாருக்கு எல்லா நிறத்திலேயும் உனக்குப் புடைவை எடுக்கனும்னு ஆசையா இருந்திருக்கும் அவ்வளவு புடைவை வாங்க முடியுமா அதான் எல்லா நிறத்தயையும் ஒரே புடைவைல போட்டு வாங்கியிருக்காங்க. போய் கட்டிக்கிட்டு வான்னு சிம்பிளா சொல்லிட்டாங்க. அந்த மாதிர் ஏ.ஆர்.முருகதாசுக்கு எல்லா பிரச்சினைகளுக்கும் படங்கள் எடுக்கனும்னு ஆசை போலிருக்கு ஆனா அவ்வளவு படம் எடுக்க முடியுமான்னு சந்தேகம் வந்திருக்கும். அதான் எல்லா பிரச்சினையையும் ஒரே படத்துல வெச்சு ரசிகர்களை காவு வாங்கிட்டாரு.

ஆனா சும்மா சொல்லக் கூடாது இந்தப் படத்திலேயும் ஒரு கதை இருக்குன்னு கண்டுபிடிச்சு அது வருண் ராஜெந்திரனோட கருன்னு தீர்மானிச்சு அவருக்கு முப்பது லட்ச ரூபாய் இழப்பீடும் வாங்கிக் கொடுத்த பாக்கியராஜ் சிம்ப்ளி கிரேட்! ஆனா பாக்கியராஜ் கில்லாடி. முருகதாஸ் படத்தைப் போட்டு காட்டறேன் போட்டு காட்டறேன்னு பல தடவை சொன்ன போது கூட பார்க்க மறுத்துட்டார் பாருங்க, நீ எப்படி எடுத்திருப்பேன்னு தெரியும்னு சொல்லிட்டாரு. அங்க நிற்கிறார் ஜாம்பவான்!

இந்தப் படத்துல முக்கியமான ஒரு விஷயம் நாம தெரிஞ்சுக்கறது சட்ட நுணுக்கமான 49P. அதாவது நம் பெயரில் யாராவது கள்ள வோட்டு போட்டுட்டா அதை நாம் நிரூபிச்சா வாக்குச் சாவடியிலேயே நமக்கு அவர்கள் மறுபடியும் வாக்களிக்கும் உரிமையை தர வேண்டும். நமக்கு நோட்டா பத்தித் தெரியும், அதாவது எந்த வேட்பாளரும் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் 49 O விதிப்படி None of the above என்று வாக்களிக்கலாம். 49P பற்றி இந்தப் படத்தின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

சுந்தர் பிச்சை Google நிறுவனத்தின் CEO. அவருக்கும் விஜய் பாத்திரத்துக்கும் துளி சம்பந்தம் இல்லை. சுந்தர் பிச்சை அமெரிக்காவில் மிகப் பெரிய கம்ப்யுடர் நிறுவனத் தலைவர், அந்த அளவு அந்தத் துறையில் பெரிய ஆள். இந்தப் படத்தில் விஜய் வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியர் பெரிய பணக்காரர், அவர் பாத்திரத்துக்கு வித்தியாசத்தைக் காட்ட முனைந்து கம்பியுடர் நிறுவனத்தின் தலைவர் என்கிறார் இயக்குநர், அவ்வளவு தான். கம்பியுடர் தொடர்பா அவர் இந்தப் படத்தில் வேறு எதுவும் செய்யவில்லை. அவர் வெளிநாட்டில் ஒரு பெரிய ஹோட்டல் நடத்தியிருக்கலாம், விமான நிறுவனம் நடத்தியிருக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். அவர் சென்னையில் வாக்களிக்கத் தனி விமானத்தில் பறந்து வரும் அளவுக்கு, சுத்தி வெள்ளைக்காரர்களை எடுபிடி வேலைக்கு வைத்துக் கொள்ளும் அளவுக்குப் பணக்காரர். அவ்வளவு தான். Techie விஷயம் ஒன்றுமே இல்லை. சாதா ட்விட்டர் பேஸ்புக் பயன்படுத்திக் கதையில் கூட்டத்தைச் சேர்க்கிறார். பெரும் பணக்காராரக இருந்தும் ஏழைகள் குடியிருப்பில் வெள்ளையடித்து அட்மின் ஆபிஸ் போடுகிறார்.

எப்பவுமே படத்தின் ஹீரோவின் பலம் வில்லனின் பலத்தைப் பொறுத்தது. அரிச்சுவடி பாடம் இது. மகா சொத்தையான வில்லன் பழ. கருப்பையா, ஒரு கட்சித் தலைவர் முதலமைச்சர் வேட்பாளர். காமெடி டிராக் இல்லாததால் காமெடி பீசாக ராதா ரவி, பழ கருப்பையாவின் அல்லக்கை, பெயர் இரண்டு. (அவ்வளவு imaginative, அவர் தான் கட்சியில் நெ2வாம். மாறன் சகோதரர்களே ஸ்டாலினை கேலி பண்ண அனுமதித்து இருக்கிறார்களே. மேக்கப், லேசா கோண வாய் எல்லாம் ஸ்டாலினை குறிக்கின்றன. அவ்வளவு கோபமா ஸ்டாலின் மேல் அவர்களுக்கு,). இவர்களை ரிமோட்டில் இருந்து வழி நடத்துபவர் வரலட்சுமி என்னும் பாப்பா என்னும் கோமளவல்லி. கேனடாவில் வாழ்ந்து கொண்டு இங்கே அப்பாவுக்கு கட்சி நடத்துவதற்கும் ஆட்சி செய்வதற்கும் நயவஞ்சக திட்டம் தீட்டுவதற்கும் யோசனைகளை சொல்லுபவர். கதைப் பஞ்சம் கதைப் பஞ்சம் என்று கேள்விப்பட்டிருக்கேன், இந்தப் படத்தில் காட்சி அமைப்பதில் கூட கற்பனை வறட்சி 😦

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தேவையில்லை. விஜயின் நடிப்பு, அவர் நேரம், அவர் உழைப்பு அனைத்தும் அனாவசியமாக வீணடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு அல்லது கதையை (?) கேட்டுவிட்டோ ரஹ்மான் ஸ்டூடியோவை விட்டே ஓடிவிட்டார் போலிருக்கிறது. ஒரு பாடலும் நன்றாக இல்லை. ரீ ரிகார்டிங், அது எங்கோ ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கும் என்கிற அளவில் உள்ளது. சண்டைக் காட்சிகள் நன்றாக இருக்குன்னு சொல்லலாம் ஆனால் கொஞ்சமாவது நம்பும்படியா இருக்க வேண்டாமா? 27 பேரை ஒத்தை ஆளா நின்று அடிக்கிறார் விஜய். அவனவன் கொடாலியோட வரான் இவர் ஸ்வைங் ஸ்வைங்குன்னு மயிரிழையில் தப்பித்து எல்லாரையும் சகட்டு மேனிக்குப் போட்டுத் தள்ளிவிடுகிறார். அவருடைய நடனம் கூட இந்தப் படத்தில் எடுபடவில்லை. அழுகையா வருது.

ஹீரோயின் பத்தியும் சொல்லணும் இல்ல? திருவிழாவில் தொலைஞ்ச பிள்ளையாட்டம் திரு திருன்னு முழித்துக் கொண்டு விஜய் பின்னாடியே சுத்துகிறார். நடிகையர் திலகமாக வாழ்ந்த கீர்த்திக்கு இந்த நிலைமை வர வேண்டாம்.

கூடங்குளம் பிரச்சினையிலிருந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் இருந்து, மீனவர் பிரச்சினை, X Y Z என்று ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு பிரச்சினை என்று சொல்லி அனைத்துக்கும் நடக்கும் ஆட்சி தீர்வு கொடுக்காது என்று விஜயே களத்தில் இறங்கி தீர்வு காண முயலும்போது ஏற்படும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவதாக காட்டியுள்ளார் முருகதாஸ்.

திரைக் கதை சரியில்லாததால் அவர் உருக்கமாக நடிப்பதும் எடுபடவில்லை ஆக்ரோஷமாக நடிப்பதும் எடுபடவில்லை. கடைசி மூணு மணி நேரத்துல அவர் பேஸ்புக்ல போடற விடியோனால எல்லாரும் போய் வாக்களிக்கறது எல்லாம் ஷ்ஷ்ப்பா! அதைவிட ஆயாசம் இவர் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவது தான். அதில் என்ன தப்புன்னு கேக்கறீங்களா? இதெல்லாம் நடப்பது பதினைந்தே நாட்களில்.

Better luck next time. நான் எனக்கு சொல்லிக்கிட்டேன்.

வட சென்னை – திரை விமர்சனம்

சென்னையின் ஒரு பகுதி தான் வட சென்னை. ஆனால் வட சென்னை மக்களின் ஏழ்மையான வாழ்க்கைத் தரமும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளும், கடற்கரையோரப் பகுதியின் ஆபத்தான, அசுத்தமான புவியியலும் இதர சென்னை மக்களின் வாழ்க்கையோடும், அவர்கள் வசிக்கும் இடங்களோடும், அவர்களின் பிரச்சினைகளோடும் ஒப்பு நோக்கும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. அரசியல்வாதிகளும், தன்னார்வ குழுக்களும், அங்கேயே பிறந்து வளர்ந்து நல்ல நிலையில் இன்று இருக்கும் பல வெற்றியாளர்களும், அவர்களின் தரத்தை உயர்த்தவோ, அவர்களுக்கு உதவி செய்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டுவரவோ முயல்பவர்களும் குறைவு, அப்படி செய்த்பவர்களை அதில் வெற்றிக் காண்பவர்கள் அதைவிட குறைவு. அப்பகுதியின் மக்களைப் பற்றிய கதை முப்பாகங்களாக வெளிவருவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்து அதன் முதல் பாகமாக வட சென்னை வெளிவந்துள்ளது. அசாத்திய உழைப்பின் பலனாக அருமையான ஒரு படத்தை நாம் காணும் வாய்ப்பைத் தந்திருக்கிறார் வெற்றிமாறன்.

படம் தொடங்கிய பின் கொஞ்ச நேரம் ஆகிறது யார் யார் எந்த பாத்திரம், என்ன தொடர்பு என்று புரிவதற்கு. படத்தின் ஆரம்பத்திலேயே நிறைய பாத்திரங்களை அறிமுகப் படுத்திவிடுவதால் சற்று நேரம் ஆகிறது படத்தின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள. மேலும் கதையின் கால அளவும் 1987ல் தொடங்கி 2005 வரை வருகிறது. அதுவும் கொஞ்சம் முன்னும் பின்னும் கதை சொல்லி நகர்த்துவதால் சற்றே குழப்பம் உள்ளது. ஆனால் விரைவில் கதைக்குள் நம்மை நுழைத்து விடுகிறார் இயக்குநர்.

வட சென்னைப் பகுதியில் வாழாதவர்களுக்கும், அங்கு நடப்பதைச் செய்தியாக – கொண்டித் தோப்பு ரங்கன் இரண்டு ரவுடி கும்பலின் மோதலில் கொல்லப்பட்டான், வெள்ளை மாரியை காக்கா பாலாஜி வெட்டி சாய்த்தான், தாடி சுரேஷை போலிஸ்  என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது என்று நாம் செய்தியில் படித்தோ, தொலைக்காட்சியில் பார்த்தோ கடந்து போவோம். ஆனால் அதை இப்படத்தில் எப்படி இவை எல்லாம் நடக்கின்றன எனக் காண்பித்து நம்மை அவர்களோடு இரத்தமும் சதையுமாக (உண்மையாகவே) வாழவிட்டிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். ஆடுகளம் படத்தில் சிறந்த இயக்குநர் &சிறந்த காதாசிரியருக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். விசாரணை திரைப்படம் உலக அளவில் விருதுகளை அவருக்கு வாங்கித் தந்துள்ளது. வட சென்னை திரைப்படத்துக்கு விசாரணைக்கும் ஆடுகளத்துக்கும் உழைத்ததை விட அதிகம் உழைத்திருப்பார். வெகு ஆழமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதால் மட்டுமே இவ்வளவு விரிவான, சிறப்பான ஒரு கதைக் களத்தை நம் முன்னால் நிறுத்தயிருக்க முடியும். அங்கு வாழும் மக்களின் மொழி, வேலை, இடம், உடை, குணக்கூறுகளான வஞ்சகம், விசுவாசம், நம்பிக்கை துரோகம், அன்பு, பழிக்குப்பழி, உயிர் தப்பிக்க எதையும் செய்யத் துணிதல் ஆகிய அனைத்தும் அந்தக் களத்தின் பாணியில் சொல்லியிருப்பதில் இவரின் இந்த படைப்புக்கும் இந்திய அளவிலும் உலக அளவிலும் அங்கீகாரம் கிடைக்கும் என்பது நிச்சயம்.

முதல் காட்சியே இரத்தம் தோய்ந்த கத்திகள், ப்ளர் செய்யப்பட்ட கொல்லப்பட்ட சடலம், அந்த சடலத்துக்கு அருகிலேயே அமர்ந்து வெற்றிப்பாதையை நோக்கி நால்வர் செல்ல வாய்ப்பை ஒருவனைக் கொலை செய்ததனால் ஏற்படுத்திக் கொண்ட மகிழ்ச்சியுடன் உரையாடுவதுடன் படம் தொடங்கி இப்படத்தின் இயல்பை சொல்லிவிடுகிறது. இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் அமீர் (ராஜன்), சமுத்திரக்கனி (குணா), டேனியல் பாலாஜி (தம்பி), கிஷோர் (செந்தில்), வட சென்னை gang தலைவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுடன் சுயநல அரசியல்வாதியாக (வேறு வகை உண்டா என்ன?) ராதா ரவி (முத்து) நடிக்கவே தேவையில்லாமல் இயல்பாகவே மிரட்டலாக வருகிறார்.

வட சென்னையில் முக்கிய பிரச்சினையே கேங் வார் தான். சமூக விரோதச் செயல்கள் மூலம் பணம் சம்பாதித்து பணத்தாலும் பவராலும் அந்தப் பகுதியை தன் வசப்படுத்தி கோலோச்ச போட்டியிடுவது தான் அங்குள்ள கேங் தலைவர்களின் தினசரி போராட்டமாக அமைகிறது. அங்கு இருக்கும் இளைஞர்களை நல் வழிகாட்ட கள்ளக் கடத்தல் செய்து வந்து பின் மனம் மாறிய ஒருவர் (ராஜன்) முயல்கிறார். சமூகக் கூடம் அமைத்து அந்த மக்களின் பாதுகாவலராக, பணக்கார முதலாளிகள், காவல் துறையினரிடம் இருந்து அம்மக்களை காப்பவராக வருகிறார். அமீரின் நடிப்பும் அந்தப் பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. அன்பு, தலைமைக் குணம், போர்க் குணம், போலீசையே புரட்டிப் போட்டு அடித்து மிரட்டும் துணிச்சல், தன் பகுதி மக்களின் நலனில் காட்டும் அக்கறை, நம்பிக்கை துரோகத்தில் வீழ்வது என்று உணர்சிகளைக் காட்ட நல்ல வாய்ப்பு. அனைத்தையும் நன்கு பயன்படுத்தியுள்ளார்.

அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கேரம்போர்ட் விளையாட்டு வீரராக இருக்கும் தனுஷ் (அன்பு) நல்லபடியாக முன்னேறி விளையாட்டு கோட்டாவில் அரசாங்க வேலைக்குப் போகும் கனவில் இருப்பவர். அந்தச் சமுதாய குற்ற சூழ்நிலையாலே எப்படி வேண்டாத செயலை செய்து அதனால் அவர் வாழ்க்கையின் திசையே ஆசைப்பட்டது போல் இல்லாமல் மாறி வட சென்னை டானாக உருவாகுவது தான் கதை. அவர் விடலைப் பருவத்தில் இருந்து முப்பது/முப்பத்தைந்து வயது வரையிலான வாழ்க்கையைப் பார்க்கிறோம். எல்லா வயதுக்கும் பொருந்துகிறது அவர் முகம். அவர் நன்றாக உணர்ந்து நடித்துள்ளார். வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் நல்ல அலைவரிசைப் பொருத்தம். தனுஷுக்கு ஏத்த கதையை இவர் கொடுக்கிறார்.  பாத்திரத் தன்மையை உணர்ந்த நடிப்பை வெற்றிமாறனுக்கு அவர் தருகிறார். Win Win situation.

ஆண்ட்ரியாவிற்கு அருமையான பாத்திரம். ஒரு பகுதிக்கு மேல் அவர் தான் கதையின் சூத்திரதாரி. பிராமதமாக நடித்திருக்கிறார். அடுத்து வரும் இரண்டு பகுதிகளில் கதையில் வெற்றிமாறன் அவரை எவ்வகையில் பயன்படுத்தியிருக்கிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் தனுஷின் ஜோடியாக நல்ல வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.

இசை சந்தோஷ் நாராயணன். 25வது படம். மிகப் பெரிய பங்களிப்பை அவரின் இசை இந்தப் படத்துக்கு அளித்துள்ளது. படம் ஒரு கடுமையான சூழலையே சுற்றி வருகிறது. அதனால் இசையின் பங்கு மிக முக்கியமாகிறது. மேலும் நார்த் மெட்ராஸ்சுக்கான இசை இப்படத்தின் தேவை. அதை உணர்ந்து கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அதே மாதிரி ஒளிப்பதிவும் தனிப் பாராட்டைப் பெறுகிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அந்த அழுக்கும் அசுத்தமும் நிறைந்த தெருக்களிலும் குறுகிய சந்துகளிலும் இருட்டிலும் பாத்திரங்களுடன் ஒடி விறுவிறுப்பாக படத்தைத் தந்திருக்கார். ஸ்ரீகரின் படத்தொகுப்பும் நன்றாக உள்ளது. பெரிய கதை, நிறைய பாத்திரங்கள், தொகுப்பது எளிதன்று!

வட சென்னையில் மேல் தட்டு நாகரீகத்தையே அறிந்திராத ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்குத் தெரிந்த உலகம் எல்லாம் ஏதாவது சரிபட்டு வரவில்லை என்றால் பழி தீர்த்துக் கொள்ளுதலும், வெட்டும் குத்தும், உடனடி பலனை எதிர்பார்த்து செய்யும் செயல்களும் தான். இந்தப் படம் ஒரு வட சென்னை – நார்த் மெட்ராஸ் வாழ்வியலை சொல்லும் படம் தான் என்றாலும் அதை சுவாரசியமான கதையாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். திரைக்கதையும் படமாக்கமும் முதலில் பெரிய அப்ளாசைப் பெறுகிறது. மற்றவை அடுத்தே.  நிறைய கெட்ட கெட்ட வசைச் சொற்களும் மிகவும் கொடூரமான கொலைகளும் படத்தில் இடம் பெறுகின்றன. இவ்வளவு தேவையா என்று தெரியவில்லை. அதில் இந்த வசை சொற்கள் பேசப்படும்போது அரங்கம் அதிர்வது இளைஞர்களின் இன்றைய நாகரீகத்தைக் காட்டுகிறது. கமலா திரை அரங்கில் 25 பெண்களுக்கு மேல் இல்லை. குழந்தைகளுக்கு ஏற்றப் படம் அல்ல. A சான்றிதழுடன் தான் படம் வெளிவந்துள்ளது. சினிமாவை ரசிப்பவர்களுக்கு நல்ல ஒரு படம், பாராட்டுகள் வெற்றி மாறன் அணியினருக்கு

#MeToo

பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டவர்கள் அந்தக் கொடுமையை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ சொல்லக் கூட கூச்சமும், பயமும், தயக்கமும் இருக்கும். இது தான் நிதர்சனம். இது ஏன் என்று உளவியல் மருத்துவர்கள் தான் விளக்க வேண்டும். ஏதோ சிலர் துணிந்து உறவினர்களிடம் சொல்லி சில சமயம் உதவி கிடைக்கும் பல சமயம் கிடைக்கா சூழ்நிலை தான் உலக நடைமுறை. அதனால் இந்த அவமானத்தை பல வருடங்கள் மனத்தில் பூட்டி பலர் அதை தங்களுடனே இருத்தி வைத்து மரணிக்கின்றனர். வெளியே வரும் உண்மைகள் வெகு வெகு குறைந்த சதவிகிதமே! இது ஜாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து நிற்கும் ஒரு கேவலமான நியதி.

இப்போ அமெரிக்காவில் நடந்ததையே உதாரணமாக சொல்கிறேன். நீதிபது Bret Kavanaugh என்பவரை சுப்ரீம் கோர்டுக்கு நீதிபதியாக அமர்த்த அந்நாட்டுப் பாராளுமன்றம் முடிவெடுக்கும் தருவாயில் Dr. Christine Blasey Ford (உளவியல் துறை பேராசிரியர், பாலோ ஆல்டோ பலகலைக் கழகம், கேலிபோர்னியா) என்பவர் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை வைத்து சுப்ரீம் கோர்டுக்கு அவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று கூறினார். அவர் நீண்ட testimony அளித்தும் FBIஐ வெள்ளை மாளிகை சரியான புலன் விசாரணை மேற்கொள்ள விடாமல் முக்கியமான Ford, மற்றும் Kavanaugh இருவரையும் விசாரிக்க விடாமல் தடுத்தது. அந்நாட்டுப் பாராளுமன்றம் Kavanaughஐ சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அவர் நியமனத்தை உறுதி செய்துள்ளது. போர்டை 15 வயதில் கற்பழிக்க Kavanaugh முயற்சி செய்தார். Ford வாயில் கையை வைத்து அவரை கத்தவிடாமல் வன்கொடுமை நடந்துள்ளது. அப்பொழுது கவானாகிற்கு 17 வயது. இது நடந்தது ஒரு மேல் நிலைப் பள்ளி விழாவில். போர்ட் senateல் testimony கொடுத்த போது அவரை குறுக்கு விசாரணை செய்தவர்கள் அவரிடம் நீ உன்னைக் கற்பழிக்க முயன்றது Kavanaugh என்று மறதியில் சொல்கிறாயா? எப்படி இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறாய்? வேறொருவரை இவர் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாயா, எப்படி இவர் தான் என்பது உன் நினைவில் உள்ளது என்று தான் கேள்விகள் கேட்டுத் துளைத்தார்களே தவிர அவள் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நினைத்து விசாரணை நடத்தவில்லை. இறுதியில் Kavanaugh சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிவிட்டார். அவர் வாழ்நாள் முழுவதற்குமான பதவி இது. இந்தக் குற்றச்சாட்டை போர்ட் பொது வெளியில் வைத்தபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் இவரை கேலியும் கிண்டலும் செய்து அவமானப் படுத்தினார். இது தான் வாழ்க்கையின் நிதர்சனம். இத்தனைக்கும் குற்றம் சாட்டுபவர் ஒரு முனைவர், ஒரு பெரிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்! இதை வெளியில் சொன்னதால் அவருக்கு கொலை மிரட்டல்கள் பல வந்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழவேண்டிய சூழ்நிலையில் தற்போது உள்ளார்.

இவ்வாறு பொது வெளியில் வந்து இப்படி தனக்கு நேர்ந்தது என்று பல வருடங்கள் கழித்து ஒருவர் சொல்லக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இதனால் என்ன தனிப்பட்ட பயன் அவர்களுக்கு? இப்படி தான் அவர்கள் பிரபலம் ஆகவேண்டுமா? இல்லை இதற்குப் பெயர் பிரபலம் ஆகுதல் என்பதா? இல்லை ஒருவர் மேல் தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சியினால் அபாண்டமாகப் பழிப் போட்டு தன் நிம்மதியான் வாழ்க்கை/எதிர்காலத்தை இழக்க ஒருவர் துணிவாரா?

பாலியல் வன்முறைக்குப் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள்/இளைஞர்களாக இருப்பினும் இதில் மட்டும் ஆண் பெண் இருவருமே சமம். இருவரையும் சரிசமமாகவே கேவலமாக சமுதாயம் பார்க்கும், உதவி செய்யாது. இந்த #MeToo இயக்கம் அமெரிக்காவில் தான் தொடங்கியது. அதன் பின் பாலிவுட்டில் நானா படேகர் மேல் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நம் நாட்டிலும் இது வலுப் பெற ஆரம்பித்தது.

இங்கே குற்றம் சாற்றப்பட்டவர்களை விட குற்றம் சாட்டுபவர்களை தான் சமுதாயம் தண்டிக்கிறது. அவரின் நிலை என்ன, ஓ சினிமாவில் இருக்கிறாரா அப்போ வேசி தான் (ஸ்ரீ ரெட்டி இதைத் தான் எதிர்கொண்டார்) இவள் என்ன இயக்குநரை, நடிகரைப் பற்றி குற்றம் சொல்வது? நடிக்க வாய்ய்புத் தருவார் என்று தானே படுக்கப் போனாள் இப்போ என்ன திடீர் ஞானோதயம்? இதே தான் கேரளா கன்னியாஸ்திரீக்கும் நடந்தது. ஏன் இத்தனை முறை பாலியல் தொடர்பு நடந்த பிறகு வெளியே வந்து சொல்கிறார்? அப்போ அது வரை அந்த ருசி தேவையாக இருந்ததோ போன்ற கேள்விகள் உண்மையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தான். இந்தக் கேள்விகளால் தப்பிப்பது யார் என்று யோசித்தீர்களா?

எப்பொழுதும் harass செய்கிறவர்கள் பவரில் இருப்பவர்கள். அதாவது மேலதிகாரியாகவோ, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களாகவோ, அவரை பகைத்துக் கொண்டால் வேலை வாய்ப்பில் முன்னேற்றத்துக்குத் தடை விதிக்க சக்தியுள்ளவராகவோ, நம்முடைய உறவினர்கள் எனில் தந்தை ஸ்தானத்தில் அல்லது தந்தையேவோ, மாமா, அக்கா புருஷன், கணவனின் சகோதரன், மாமனார் என்கிற நெருங்கிய உறவினர்களாகவோ தான் இருப்பார்கள். அவர்களை எதிர்க்க துணிச்சல் தேவை, குடும்ப ஆதரவு தேவை. குடும்ப உறுப்பினர்கள் செய்யும் பாலியல் வன்முறைகள் மற்ற உறவினர்களுக்குத் தெரியாமல் நடக்காது. ஆனாலும் உதவிக்கு வரவேண்டியவர்களே குடும்பம் உடைந்து விடும் என்று உதவ வரமாட்டார்கள். பின் எப்படி பாதிக்கப்பட்டவள் வெளியே வந்து தனக்கு நேர்ந்தக் கொடுமையை சொல்ல முடியும்? மேலதிகாரி எனில் அவனை எதிர்த்தால் வேலை போகும் அல்லது மேலதிக கொடுமைகள் நடக்கும். மாதச் சம்பளத்தை நம்பி குடும்பம் நடத்தும் பெண் எப்படி எதிர்ப்பது? இந்த தொழில் துறையிலேயே வேலை கிடைக்காதபடி செய்துவிடுவேன் என்று மிரட்டுபவரை எப்படி எதிர்ப்பது?

பின்னர் ஒரு நாள் எப்போதாவது நல்ல ஆதரவு கிடைத்த பிறகு வெளியே வந்து சொன்னால் ஏன் இவ்வளவு தாமதம்? நீ அந்த ஆபிசரோடு தானே எல்லா மீட்டிங்கிலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாய்? அப்போதே செருப்பை கழட்டி அடித்திருக்க வேண்டாமா என்கிற கேள்விகளைக் கேட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டவரை இன்னும் நோகடிக்கிறீர்களே தவிர உதவி செய்யவில்லை. இந்த எதிர்வினைகளுக்குப் பயந்து தான் இத்தனை நாள் அவர் வாய் மூடி இருந்தார். இதையே ஒரு ஆண் கேட்டால் கூட புரிந்து கொள்ளலாம் ஏனென்றால் அவனுக்கு பெண்ணின் நிலை புரியாது. ஆனால் கேள்வி கேட்பது பெண்களாக இருப்பின் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பாலியல் வன்கொடுமையை அனுபவித்து இருக்க மாட்டீர்கள் என்று கடந்து போவதா இல்லை அப்பெண்ணின் நிலையை உணரும் தன்மை இல்லாமல் போனதே என்று உங்கள் அறிவைக் குற்றம் சொல்வதா என்று புரியவில்லை.

பொது வெளியில் ஒரு பெண் நான் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று சொல்வதனால் வரும் பாதிப்புகளை முதலில் பட்டியலிடுகிறேன். இப்படி ஒரு பெண் சொன்னால் சராசரி ஆண்களும் பெண்களும் நினைப்பதை இங்கே பதிவிடுகிறேன்.

  1. எல்லாம் போய் படுத்திருப்பா, இப்போ என்னமோ பத்தினியாட்டம் வெளியே வந்து சொல்றா.
  2. ஏன் இத்தனை நாள் சொல்லலை, 5 வருஷம் முன்னாடி நடந்தது, 10 வருஷம் முன்னாடி நடந்தது இப்போ தான் சொல்ல நேரம் வந்ததா?
  3. பணம் கேட்டிருப்பா, படிஞ்சிருக்காது அதான் ஓபனா சொல்ல வந்துட்டா.
  4. அவனை எதுக்குத் தன்னோட திருமணத்துக்கு அழைப்பு கொடுத்தா? அப்போ மதிச்சு கூப்டுட்டு இப்போ மட்டும் ஏன் குத்தம் சொல்றா?
  5. அம்மாகாரி அப்பன்காரன் எல்லாம் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாங்க? நாலு அப்பு அப்பி பொண்ணை காப்பாத்தியிருக்க வேண்டாமா?
  6. எல்லார்கிட்டேயும் சிரிச்சு சிரிச்சுப் பேசுவா அப்படி இருந்தா எந்த ஆம்பளை தான் இப்படி கூப்பிட மாட்டான்?
  7. அவ உடையும் அவளும்! ஆபிசுக்கே ஸ்லீவ்லெஸ் தான் போட்டுக்கிட்டுப் போவா அதான் அவளுக்குப் பாலியல் தொந்தரவு வந்திருக்கு!
  8. எவ்வளவு விவரமா தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை விவரிச்சு எழுதியிருக்கா, படிக்கவே பிட்டுப் படம் பார்த்த பீலிங் வருது. அப்ப அனுபவிச்சிட்டு இப்போ வந்து குறை சொல்றா பாரேன்.

இவை தான் மக்கள் மனத்தில் ஓடும் என்று தெரிந்தும் அப்பெண் ஏன் துணிந்து வெளியே வந்து அவளுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்கிறாள்? பாதிக்கப்பட்டவள் மணமானவள் என்றால் கணவனும் அவன் குடும்பத்தாரும் அவள் வெளிப்படையாக பேசிய பின் மரியாதையோடு பார்ப்பார்களா என்பது மிகப் பெரிய கேள்வி. சாட்சிகள் வைத்து இக்குற்றங்கள் நடப்பதில்லை. அதனால் தான் இவை நிரூபிக்க இயலா குற்றங்கள் ஆகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணோ ஆணோ வாய் மூடி மௌனித்திருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். அப்படி இருந்தும் இவை அனைத்தும் தாண்டி ஒருவர் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார் என்றால் அது எதனால்?

  1. முதலில் சொன்ன அமெரிக்க நீதிபதி விவகாரத்தின் உதாரணம் மாதிரி ஒரு கெட்டவன் பலரையும் பாதிக்கும் ஒரு பதவியை அடைந்து மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்கிற நல்லெண்ணம்.
  2. குடும்ப ஆதரவு கிடைத்து அவர்கள் இதை வெளியே சொல் மற்றவர்களுக்கும் அவன் உண்மை முகம் தெரியட்டும் என்று ஆதரவு கரம் நீட்டுவதால்.
  3. சில சமயம் மனச்சிதைவு அதிகம் ஏற்பட்டு அவர்களே தாங்க முடியாமல் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் இதை வெளியே சொல்லியே தீருவேன் என்று முடிவெடுப்பதால்.
  4. சமூகத்தில் ஒரு நம்பகத் தன்மையான இடத்திற்கு வந்த பிறகு நான் சொல்வதை மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கும்போது உண்மையை பலரும் அறியட்டும் என்று சொல்வது.
  5. மிரட்டல் பயம் நீங்கும்போது. பலரும் blackmail செய்யப்படும் சூழ்நிலையில் தான் இருப்பார்கள். புகைப்படம் வீடியோ harass செய்பவன் வசம் இருக்கும். பெரும் பதவியில் இருப்பவர்களை தனியாக எதிர்கொள்ள முடியும் சூழல் வரும்போது.
  6. ஒரு குருட்டு தைரியம்.

ஒரே ஒரு நிமிஷம் பாலியல் குற்றச்சாட்டை முன் வைப்பவர் உண்மையாகத் தான் பேசியிருக்கிறார் என்று நம்பி அவர் பக்கத்து நியாயத்தைப் பாருங்களேன். அப்பொழுது குற்றம் சாட்டப்பட்ட மகானுபாவர் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு சமூகத்தில் பெரிய மனுஷன் என்கிற போர்வையோடு வளைய வருகிறார் என்கிற உண்மை பகீர் என்று உரைக்கிறது அல்லவா? இதேக் கொடுமை நம் வீட்டில் யாருக்காவது நிகழ்ந்து அப்பெண் பொது வெளியில் இப்படி மனச்சிதைவின் காரணமாக  போட்டு உடைத்திருந்தால் நீங்கள் சின்மையிக்கும் #MeToo வில் மற்ற பெண்களின் கதைகளுக்கும் ஆதரவு தராமல் கொடுத்த எதிர்வினையைத் தான் கொடுத்திருப்பீர்களா? உங்கள் வீட்டுப் பெண்ணை தள்ளி வைத்துவிடுவீர்களா? வேசி என்று அழைப்பீர்களா?

ஏதோ ஒரு சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தைரியம் வரும். இப்படி எல்லாம் எனக்கும் நிகழ்ந்திருக்குன்னு ஒருவர் வெளிப்படையா சொல்லும்பொழுது அவளே சொல்றா சின்னப் பெண், அவளுக்கு இருக்கும் துணிச்சல் கூட நமக்கு இல்லையே என்று தோன்றி சிலர் தங்களுக்கு நேரந்ததை பகிரலாம். அது தாமதமாகத் தான் நடக்கும். அத்தனை நாள் குற்றம் சாற்றப்பட்டவர்களுடன் தொழில் சார்ந்த தொடர்பு இருந்து கொண்டு இருக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு தான் கொடுமை இழைத்தவர்களை விட்டு வெட்டிக் கொண்டு விலகியிருக்கும் பேரு கிடைக்கும். பலருக்கும் அந்தக் கயவனோடே தொடர்பில் இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை இருந்தால் அது பாதிக்கப்பட்ட பெண்ணின் தவறல்ல. சமூக சூழ்நிலையின் நிர்பந்தம்.

பாதிக்கப்படவ்வர்களை குற்றம் சாட்டி பார்க்கும் நிலையிருக்கும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் குஷியாக பாலியல் வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டு பெரிய மனிதர்கள் என்று தான் வலம் வந்து கொண்டிருப்பார்கள். ஒரு பெண் தன் அனைத்தையும் தியாகம் செய்து ஒருவர் மேல் வன்கொடுமை குற்றம் சாட்டும்போது செவி கொடுத்துக் கேளுங்கள். நீதிமன்றத்தால் சாட்சியம் இல்லா குற்றங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. சமூகத்தில் நாமாவது அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். கெட்டவர்களின் தோலுரித்த அவர்களின் துணிச்சலுக்கு நன்றி சொல்வோம். குற்றம் சாட்டுபவரின் ஜாதி, செய்யும் தொழில், அன்னார மேல் நமக்கிருக்கும் பழைய பகை இவற்றை வைத்து பாதிக்கப்பட்டவரை இகழாதீர்கள். நேர்மையோடு அணுகுங்கள். அது மட்டுமே நம்மால் இயன்றது. அவர்கள் பட்ட துன்பத்தை நாம் வாங்கிக் கொள்ள முடியாது, இனி வருங்காலங்களில் அவர்கள் இதனை வெளிப்படையாக சொன்னதால் படப் போகும் துனப்த்துக்கும் நாம் பொறுப்பேற்கப் போவதில்லை. ஆறுதல் கூற மனம் இல்லாவிட்டாலும் இகழாமல் இருப்போம்.

பெண்மையை போற்றுவோம் என்று பேச்சளவில் நில்லாமல் மனத்தளவில் நினையுங்கள். உலகம் சற்றே மாற்றம் பெறும்.

Previous Older Entries